இன்று தவக்காலத்தில் 4 ஆம் ஞாயிற்றில் நுழைகிறோம். இன்றைய அருள்
வாக்குகள் பலவிதமான போதனைகளை நமக்கு வழங்குகின்றது. நம் பார்வை
இறைவனின் பார்வையைப் போல பரந்துவிட்டு இருக்கவும், முற்சார்பு
எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது முதல்
வாசகம். தூக்கம், இருள் விடுத்து, விழிப்பு, ஒளியைப் பற்றிக்
கொள்ள நம்மைத் தூண்டுகிறது இரண்டாம் வாசகம். "பார்வையற்ற மனிதர்
ஒருவருக்கு பார்வை தருகிறார் இயேசு. வெறும் கண்களால் பார்ப்பது
மட்டும் பார்வையல்ல எனவும், இயேசு மெசியாவாக ஏற்றுக்கொள்வதே
பார்வை எனவும் சொல்லுகிறார் தூய யோவான் நற்செய்தியாளர். என்னைத்
தொட்டவர் ஓர் இறைவாக்கினராகத்தான் இருக்க வேண்டுமென்று
ஆணித்தரமாக பயமின்றி உண்மையை உரைக்கின்றார். குருடராய் இருந்து
பார்வை பெற்றவர் உடலின் பார்வை மட்டுமல்ல ஒழுக்கம், ஞானம்,
உள்ளம், சார்ந்த அனைத்துக் குருட்டுத் தன்மைகளில் இருந்தும்
மீட்கப்படுகிறார். ஞானக் குருடராக இருந்த தூய பவுலடிகளை,
தொட்டு குணமாக்கி பார்வை கொடுத்துத் தன்னுடைய ஒப்பற்ற
பாத்திரமாக்கிக் கொண்டார் இறைவன்.
இன்றைய நாளில் இறைவனின் பார்வை நமதாகி விசாலமான
பார்வையாகட்டும், முன்சார்பு எண்ணங்களை விலக்கி, நேர்மறை
எண்ணங்களை வளரவிடுவோம். அக இருளை நீக்கி, உண்மை ஒளியைப்
பற்றிக் கொள்வோம். திருமுழுக்கின் போது நம்முள் ஏற்றப்பட்ட
கிறிஸ்து என்ற ஒளியை அணையவிடாது, நமது வாழ்வின் எல்லா
நிலைகளிலும், அனைவர் இதயத்திலும் ஏற்றி சுடர்வீசச் செய்வோம்.
தீமையை நீக்கி, நன்மை புரிந்து நல்லவர்களாக வாழ உறுதிபூணுவோம்.
வெற்றுப் பார்வையை மட்டும் கொண்டிராது, அகப்பார்வையை நம்முள்
உருவாக்குவோம். பிறரைக் குறை கூறுவதைவிட நமது குறையைக்
களைவதில் கவனம் செலுத்துவோம். உறவுகளைப் புதுப்பித்து அன்பில்
இணைந்த திருக்கூட்டமாக வாழ முயல்வோம். கிறிஸ்துவை அறிந்து
கிறிஸ்துவாக வாழ முயலும்போது நமக்குத் தொடர்ந்து பல பிரச்சினை.
அதனை எதிர்த்துப் போராடுவதே கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணார்ந்து
அருள் வேண்டி பலியில் இணைவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. எம்மவர் வாழ்வே இறைவா!
எங்கள் வாழ்வின் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பிரச்சினைகளைக்
குறித்த எங்களின் பார்வைதான். நாங்கள் குறுகிய எண்ணம்,
மனப்பான்மை பார்வையை விடுத்தவர்களாய், பரந்த மனமும்
திறந்த இதயம் விசாலப்பார்வையும் கொண்டவார்களாக,
நாங்கள் அனைவரையும், அனைத்தையும் பார்க்க ஆற்றல் தந்து
வழிநடந்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகின் ஒளியே எம் இறைவா!
திருமுழுக்கின்போது எங்கள் கைகளில் தரப்பட்ட ஒளியை பல
நேரங்களில் நாங்கள் அணையச் செய்துள்ளோம். இன்று
மீண்டும் அதை நாங்கள் புதுப்பித்து ஒளியின் செயல்களான
அன்பு, நீதி, உண்மை ஆகியவற்றை நாடித்தேடிட வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அப்பா! தந்தையே இறைவா!
உம்மை அப்பா என அழைப்பதும், ஒருவர் மற்றவரை "சகோதரன்"
"சகோதரி" என அழைப்பதுவுமே உண்மையான பார்வை என்பதை
நாங்கள் உணரவும், அதை என்றும் செயல்படுத்தவும் ஆற்றல்
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கையின் நாயகனே! இறைவா!
நம்பிக்கை என்ற ஒளி அணைந்து, அவநம்பிக்கை
அதீதநம்பிக்கை மூட நம்பிக்கை என வளரும் இக்காலத்தில்,
திருச்சபை மக்களுக்கு வழிகாட்டும் நம்பிக்கையின்
கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும் என்று உம்மை
மன்றாடுகிறோம்.
5. உண்மையின் அதிபதியே இறைவா!
நீர் புறத்தோற்றத்தைப் பார்க்காமல் அகத்தோற்றத்தையே
பார்த்துத் தீர்ப்பிடுவது போன்று உண்மையை நேசித்து,
நன்மையைச் செய்யும் மக்களாக வாழவும், இறக்கும்வரை
உண்மைக்காக போராடும் சக்தியையும், வல்லமையும் தந்தருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
யோவான் நற்செய்தியிலேயே நாடக நடையும், அதே நேரத்தில்
இறையியல் கோட்பாடுகளும் நிரம்பி இருக்கும் ஒரே பகுதி
இன்றைய நற்செய்திப் பகுதிதான். மற்ற நற்செய்தியாளர்களும்
இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளிப்பதைப் பற்றி
எழுதியுள்ளனர். ஆனால் யோவான் நற்செய்தியாளர் இந்நிகழ்வில்
பார்வை பெறுதல் என்பது இயேசு இறைமகன் என்பதை அறிந்து
கொள்ளுதல் என்ற புதிய இறையியலை முன்வைக்கிறார். இந்த
நற்செய்தி இயேசுவுக்கும், பார்வையற்ற மனிதருக்கும்:
பார்வையற்ற மனிதருக்கும், பரிசேயருக்கும்: பார்வையற்ற
மனிதருக்கும் இயேசுவுக்கும்: பரிசேயருக்கும்,
பெற்றோருக்கும்: பரிசேயருக்கும் இயேசுவுக்கும் என 5 உரையாடல்கள்
உள்ளன.
பார்யைற்ற மனிதர் பார்வை பெறுகின்றார். பரிசேயர்கள்
பார்வை கொண்டவர்களாக இருந்தாலும், பார்வையற்றவர்களாக
இருக்கின்றனார். பெற்றோர்கள் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனார்.
இயேசு, இறைமகன் என்ற நம்பிக்கை வருவதே பார்வை பெறுதலின்
நிறைவு. இறை நம்பிக்கைதான் நாம் பெறவேண்டிய பார்வை. நம்
மனம் அனைத்துக்கும் விடைகள் கண்டுபிடிக்க நினைக்கிறது,
விடைகள் கிடைக்காவிட்டால் அது பொய்யானது எனவும் எண்ணிவிடுகிறது.
ஆனால் எல்லா வினாக்களுக்கும் விடைகள் கிடைப்பதில்லை.
கிடைக்கின்ற விடைகளும் நமக்குத் திருப்தியளிப்பதில்லை.
ஐம்புலன்களையும் தூண்டிய அறிவே நம்பிக்கை. நம்பிக்கை
பல நேரங்களில் மேலோட்டமானது எனவும் தேவையற்ற எனவும்
நாம் நினைக்கிறோம். நம்பிக்கை ஒரு பயணம் இந்த நம்பிக்கைப்
பயணத்தில் இன்று இந்த நற்செய்திப் பகுதியில் வரும் ஐந்து
கேள்விகள் எவ்வாறு உதவுகின்றன என்று பார்ப்போமா?
1. இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?
பார்வையற்றவர் பார்வையற்று இருப்பதற்குப் பாவம்தான் காரணம்
என்று நினைக்கின்றனர் இயேசுவின் சீடர்கள். ஆனால் கடவுளின்
செயல் வெளிப்படவே இப்படி இருக்கிறார் என்று புதிய
பொருளைக் கொடுக்கின்றார் இயேசு. நாமும் பல நேரங்களில்
நமக்கு வரும் துன்பங்கள்: நாம் செய்த பாவத்தினாலும்,
நமக்கு வரும் இன்பங்கள்: நாம் செய்யும் புண்ணியங்களாலும்
வருகின்றன என நினைக்கிறோம். ஆனால் இன்பமோ, துன்பமோ நம்
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும், இறைவன் மாட்சிமை
வெளிப்படவே என்பதுதான் உண்மை. எந்த ஒரு நிகழ்விலும் இறைப்பிரசன்னத்தைக்
காணும் ஒருவருக்கு மட்டுமே இறை நம்பிக்கை வரும். "கல்லை
மட்டும் பார்த்தால்" கடவுள் தெரியாது.
2. அவர் எங்கே? இது பரிசேயர்களின் கேள்வி. இயேசுதான்
பார்வை அளித்தார் என்று பார்வை பெற்றவர் சொன்னவுடன் "அவர்
எங்கே? என்று கேட்கின்றனர். ஆனால் அவரால் இயேசுவை அடையாளம்
காட்ட முடியவில்லை. பரிசேயர்கள் எதற்காக இயேசுவைத்
தேடுகிறார்கள்? அவரை ஏற்றுக்கொள்ளவா? இல்லை, அவர்மேல்
ஓய்வுநாளை மீறிய சட்டத்திற்காகத் தீர்ப்பளிக்க. இன்று
இயேசுவை எங்கு தேடுகிறோம்? எதற்காகத் தேடுகிறோம்? பல
நேரங்களில் நாம் தேடும் கடவுள் உணவில் கரைந்திருக்கும்
உப்பாகத்தான் இருக்கின்றார். உணவில் உப்பு தேடும்படியாக
இருந்தால் அந்த உணவுப்பகுதி உவார்ப்பாகவே இருக்கும்.
உப்பு தன்னையே மறைந்தால்தான் உணவு சுவை பெற முடியும்.
இறைவனின் பிரசன்னமும் நம் வாழ்வில் காணக்கூடியதாக இருப்பதில்லை.
இறைவனின் பிரசன்னத்தை உணரமட்டுமே முடியும்.
3. இவளுக்கு எப்படி கண் தெரிகிறது. கண் தெரிந்ததை ஏற்றுக்
கொள்ள முடியாத பரிசேயர், அவரின் பெற்றோர்களிடம்
கேட்கும் கேள்வி இது. இந்தக் கேள்வியை நம் மூளையும்,
பல நேரங்களில் கேட்கும். கேள்வி கேட்பதால் நம் அமைதிதான்
கெடுகிறது. அன்னை தெரசா சொல்வார்: "வாழ்வில் நாம் மற்றவரை
அன்பு செய்வதற்குப்பதில் அவரைக் குறித்துக் கேள்வியா
கேட்டே பழகிவிட்டோம். கேள்விகள் குறையும்போது நம்பிக்கை
பெருகும், அன்பும் பெருகும".
இங்கு பரிசேயர்களின் கண்ணோட்டம் "ஓய்வுநாள் சட்டத்தைக்
கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க
முடியாது" (யோவான் 9) ஆனால், இயேசுவின் எதிர்பார்ப்போ
நன்மை புரிய வேண்டும் என்பதே.
பெருசிய நாட்டை ப்ரெடொரிக் மன்னன் ஆண்டபொழுது, ஒருநாள்
இரவு தூக்கமின்றி உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது
காவலன் ஒருவன் இரவுப்பணி நேரத்தில் தூங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டு கோபம் கொண்டவனாய், அவனருகில்
பாதி எழுதப்பட்ட நிலையில் திறந்த பேனாவுடன் இருந்த கடிதத்தைப்
பார்த்தான். அதில் "அன்புள்ள அம்மா, நான் உன்னை மிகவும்
அன்பு செய்கிறேன். உனது மருத்துவ செலவுக்காக அதிக பணம்
தேவைப்படுவதால், அதற்காக இரவுப்பணியையும்
செய்கின்றேன். உள்ளம் விரும்பினாலும் உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.
என்னால் முயன்றதை சேமித்து அவ்வப்போது தங்களுக்கு அனுப்பி
வருகின்றேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இதைப்படித்த
அரசர் சட்டம் பெரிதென எண்ணாமல் தனது அறையிலிருந்த சில
தங்கக்காசுகளை எடுத்து அந்த கடிதத்துள் வைத்து
விட்டுச் சென்றான். என்னே மனிதநேயம்.
4. "மானிட மகனிடம் "நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" இயேசு
பார்வையற்ற மனிதரிடம் கேட்கிறார். "தி ஏஞ்சல்ஸ் அண்ட்
டீமன்ஸ்" என்ற நாவலில் வரும் கதாநாயகனிடம் (விஞ்ஞானி)
திருத்தந்தையின் பதில் குரு ஒரு கேள்வி கேட்பார். "கடவுள்மேல்
உமக்கு நம்பிக்கை உண்டா?" அதற்கு கதாநாயகன் சொல்வார்:
"நம்பிக்கை என்பது ஒரு கொடை. அதைக் கடவுள் மட்டுமே தரமுடியும்.
அவராக யாரைத் தேர்ந்து கொள்கிறாரோ அவருக்கே அது
கிடைக்கும்." ஆம், நம்பிக்கை என்பது கீழிருந்து மேலே
செல்வது அல்ல. மேலிருந்து நம்மை நோக்கி வருவது. அதைக்
கடவுளே நமக்குத் தரமுடியும்.
5. நாங்களும் பார்வையற்றோர்? "பரிசேயர்கள் இயேசுவைப்
பார்த்துக் கேட்கும் கேள்வி இது. இயேசுவின் பதிலில் நம்பிக்கைக்கான
தேடல் நிறைவு பெறுகிறது. நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால்
உங்களிடம் பாவம் இராது. நம்பிக்கை என்ற பார்வை இல்லாத
அனைவருமே பாவிகள் என்கிறார் இயேசு. "இருட்டறையில் கறுப்புப்
பூனையைத் தேடுவதுதான் நம்பிக்கை" என்பார் தாமஸ் அக்வினாஸ்
குருடனுக்கு மனமிரங்கிய இயேசுவை சட்டத்தால் தருகின்ற
பரிசேயர்கள், அரசனாக தோற்றத்தை மட்டுமே பார்க்கும்
சாமுவேல், இருளை விரும்பும் ஒளியின் மக்கள் இவார்களிலிருந்து
தனது எண்ணத்தால் வேறுபட்டு நிற்கின்றார் நம் இறைவன்.
இன்று நம்மை ஒளியின் மக்களாக அழைக்கிறார் இறைவன். ஒளிபெற்ற
வாழ்வு நன்மை, நீதிஇ உண்மையை விளைவிக்கின்றது. இயேசுவே
உலகின் ஒளி. அந்த ஜோதியோடு இணைந்தால் நாமும் ஒளிர்ந்து,
உலகையும் ஒளிர்விக்கும் ஜோதியாகலாம். பரிசேயர்கள் ஆன்மீக
ஆணவத்தால் இருளில் இருந்தனர். இயேசுவை இறைமகனாக ஏற்க
மறுத்தனர். ஆனால் பிறவியிலேயே பார்வையற்ற குருடனோ, அவர்
சொல்லுக்குக் கீழ்ப்படிந்து சீலோவாம் குளத்தில் போய்க்
கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். இவ்வாறு கண்
தெரியாத நிலையிலிருந்து, பார்வை பெற்ற நிலைக்கும்,
பார்வை பெற்ற நிலையிலிருந்து உள்ளுணார்வு பெற்ற
நிலைக்கும் முன்னேறி, இயேசுவை உலகின் ஒளியை "ஆண்டவரே
நம்பிக்கை கொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினர்.
நாமும் இயேசுவை உலகின் ஒளியாக ஏற்று அவரது எதிர்பார்ப்புக்கேற்ற
வாழ்வு வாழ்வோம். ஒளிர்வோம்.
சாலையிலே அதிக மக்கள் நடமாடுகின்ற ஓரிடத்தில் நாய் ஒன்று
செத்துக்கிடந்தது. இறந்து சில நாட்களானதால் அதிலிருந்து
துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அதனைக் கடந்து செல்பவர்கள்
அதைக் கண்டு முகம் சுழித்து சென்றார்கள். ஒவ்வொருவரும்
செத்துக் கிடந்த நாயை தங்கள் கோணங்களில் ஒப்பிடத் துவங்கினார்கள்.
இவ்வாறாக பற்பல எதிர்மறை விமர்சனம் தொடர்ந்து
கொண்டிருந்த சமயத்தில் திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர்
அந்த நாயின் பற்கள் பவளத்தைப் போல வெள்ளையாய் இருக்கு
என்று சொல்லியவுடன் அதுவரை இருந்த எதிர்மறை மனநிலை அனைத்தும்
மறந்து, நேர்மறை வர்ணனை வரத் தொடங்கியது... ஆம் பார்வைகள்
பலவிதம்...
இன்றைய இறைவார்த்தை வழிபாடு இறைவனின் பார்வையை எடுத்துரைப்பதாக
இருக்கிறது. முதல் வாசகத்தில் இறைவன் தாவீதை
தேர்ந்தெடுப்பதைப் பார்க்கிறோம். இந்த உலகத்தில் தேர்தல்
பணத்தின் அடிப்படையில் அமைகின்றது. ஒருவரின் தன்மையை
விட அவரிடம் உள்ள செல்வம்தான் அவரின் நிலையைத்
தீர்மானிக்கின்றது. கடவுள் தோற்றத்தில் மயங்காமல், உள்ளத்தை
உடுருவிப் பார்த்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்.
பெற்ற தந்தையே தன் மகன் தாவீதை ஆடு மேய்ப்பவன் என்று
இழிவாக நினைத்துக் கொண்டிருக்கையில், கடவுள் தாவீதைத்
தேர்ந்தெடுத்து அவனை உயர்த்துகிறார். மனிதர்கள்
பார்க்கும் விதம் வேறு... கடவுள் பார்க்கும் விதம்
வேறு.
நற்செய்தி வாசகத்தில் இறைவன் பிறவியில் இருந்தே பார்வையற்றிருந்த
மனிதனுக்கு பார்வை அளிக்கின்றார். அந்த மனிதன் இயேசுவோடு
ஒத்துழைக்கின்றான். அதேபோல நாமும் இறைவனோடு ஒத்துழைக்கும்
போது இறைவன் நமக்கு பார்வையைத் தருகின்றார். பல சமயங்களில்
குருடர்கள் மனக்கண்களில் பார்க்கும் பார்வையை, இரண்டு
கண்களில் பார்க்கும் திறன் கொண்ட நாம் பார்க்க தவறி
விடுகின்றோம். நாமும் நல்ல எண்ணங்களோடு அனைவரையும்
பார்க்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.
ஆமேன்.
அருட்தந்தை ஜஸ்டின் சேவியர்
உடுமலைப்பேட்டை
இதழ்: ஞான ஒலி
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
நாங்களுமா பார்வையற்றோர்?
ஐந்து வருடங்களுக்கு முன் மதுரைப் பேராயரின் செயலராக இருந்தபோது,
ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, 'ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர்
வந்திருக்கிறார். உடனே வாருங்கள்' என்று வாட்ச்மேன் அழைத்தார்.
'யாராயிருக்கும்?' என்ற எண்ணத்தில் கீழே இறங்கினேன். வந்திருந்தவர்
பார்வையற்றவர். 'இந்த நேரத்தில் என்ன அவசரம்?' என்ற கேட்டபோது,
'பேராயரைச் சந்திக்க வேண்டும்' என்று மட்டும் பதிலளித்தார். அன்றைய
நாளில் பேராயர் இல்லாததால், 'நாளை காலை வாருங்கள். சந்திக்கலாம்'
என்று சொல்லிவிட்டு, அவரை மெதுவாக மெயின் கேட் வரை அழைத்துச்
சென்றேன். கேட்டைச் சாத்தும்போது, 'ஏன் இப்படி இரவில் வெளியில் நடமாடி
கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'எனக்கு பகலும் இரவுதான்.
வெளிச்சமும் இருள்தான்' என்றார். நிற்க.
'பார்வையற்றோரின் உலகம் நிறைய ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கிறது' என்கிறார்
ஹெலன் கெல்லர். பார்வையற்றோரின் ஆச்சர்யங்களைக் காண
வேண்டுமென்றால், அந்த உலகத்திற்குள் நாம் நுழைய வேண்டும்.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் பார்வை பெறுதலை மையமாக
வைத்துச் சுழல்கின்றன.
இவ்வாசகங்களில் நான்கு வகையான பார்வையற்ற நிலையைப் பார்க்கிறோம்:
அ. பிறவியிலேயே கண்பார்வையற்ற நிலை - பார்வையற்ற நபர் - இவரை இயேசு
குணமாக்குகின்றார்.
ஆ. கடவுள் பார்ப்பது போல பார்க்க இயலாத பார்வையற்ற நிலை - சாமுவேல்
- ஆண்டவராகிய கடவுள் இவருக்கு அறிவுறுத்துகிறார்.
இ. இருளில் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலை - எபேசு நகரத் திருஅவை
- விழிப்போடிருக்குமாறு பவுல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
ஈ. இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ளாத நிலை அல்லது பாவ நிலை - யூதர்கள்
அல்லது பரிசேயர்கள்
இவர்களை இயேசு நற்செய்தியின் இறுதியில் எச்சரிக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 சாமுவேல் 16:1,6-7,10-13)
நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். முதல் வாசகத்தின் தொடக்கத்தில்
ஆண்டவர் சாமுவேலைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், ஆண்டவர் சவுலை
வெறுக்கிறார் என்று தெரிந்தும் சாமுவேல் அவருக்காகத் தொடர்ந்து
துக்கம் கொண்டாடுகின்றார். 'பால் கொட்டிடுச்சு' என்று கவலைப்பட்டு,
கொட்டிய பாலையும் துடைக்காமல், காய்ந்த பாத்திரத்தையும் கழுவாமல்
அமர்ந்திருந்த சாமுவேலை எழுப்பிவிடும் ஆண்டவர், 'புதிய பாத்திரமும்,
புதிய பாலும் வாங்கிக் காய்ச்சு! கொட்டியதைப் பற்றிக் கவலைப்படாதே!
கொட்டியது கொட்டியதுதான்' என்று பெத்லகேமில் உள்ள ஈசாயின் இல்லத்திற்கு
அனுப்புகின்றார்.
இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் ஆண்டவரால் நியமிக்கப்படுகின்றார்.
ஆனால், தொடக்கமுதல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றார் சவுல்.
மனிதப் பார்வையில் சவுல் மிகவும் சிறந்த ஆளுமையாகத் தெரிந்தார்: 'அக்காலத்தில்
சவுலை விட அழகும் பொலிவும் உடையவர் இஸ்ரயேலில் எவரும் இல்லை. மற்ற
எல்லாரோடும் அவர் நின்றபோது மற்றெல்லாரையும் விட அவரே உயரமாக இருந்தார்.
மற்றவர்கள் அவருடைய தோள் உயரமே இருந்தனர்' (காண். 1 சாமு 9:2). மனித
பார்வையில் அழகானவராகவும், பொலிவானவராகவும், உயரமானவராகவும்
தெரிந்தாலும், அவருடைய கீழ்ப்படியாமையால் கடவுளின் பார்வையில் அழகற்றவராகவும்,
பொலிவற்றவராகவும், சிறியவராகவும் தெரிகின்றார் சவுல். அவரை அரசாட்சியிலிருந்து
நீக்கிவிடுகின்ற கடவுள் அவருடைய இடத்தில் தான் நியமிக்க இருந்தவரைத்
திருப்பொழிவு செய்யுமாறு இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகிறார்.
எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு ஆண்டவரின் கட்டளைப்படி வருகின்றார்
சாமுவேல். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக
இருக்கக் கண்டு, 'இவனே அவன்!' என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு
ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, 'தம்பி! பொறு! இவனல்ல அவன்!
அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை
நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை.
அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப்
பார்க்கின்றார்' என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக
கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும்
மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள். சாமுவேல்
சவுலுக்காக அழுத கண்ணீரின் ஈரம் அவருடைய பார்வையை மங்கலாக்கிற்றோ
என்னவோ? ஆண்டவர் பார்ப்பதுபோல அவர் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய
பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத்
தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித
இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள்
தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர்
நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும்
நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.
ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை
மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது 'சிவந்த
மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்' என்று சொல்கிறது விவிலியம்.
தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது.
ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக்
குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை
மாற்றுகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 5:8-14) இரண்டு பகுதிகளைக்
கொண்டிருக்கின்றது. முதல் பகுதியில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த
நீங்கள் ... ஒளிபெற்ற மக்களாய் வாழுங்கள்' என அறிவுறுத்துகின்றார்
பவுல். இரண்டாம் பகுதியில், 'தூங்குகிறவனே விழித்தெழு! கிறிஸ்து உன்மேல்
ஒளிர்கின்றார்' என்ற தொடக்கத்திருஅவையின் திருமுழுக்கு வழிபாட்டில்
பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். காணுதல்
என்பதை ஒளி, ஒளிர்தல், இருள் போன்ற உருவகங்களாகப் பதிவு செய்கிறது
இவ்வாசகம். 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவருக்குள்
ஒளியாய் இருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற பவுல், அவர்களுடைய கடந்தகால
வாழ்வையும், இப்போது பெற்றிருக்கின்ற புதிய வாழ்வையும் நினைவுபடுத்துகின்றார்.
இருள் என்பது இங்கே எபேசு நகர மக்களின் அறநெறிபிறழ் வாழ்வையும்,
பாவ வாழ்வையும் குறிக்கிறது. குறிப்பாக, சிலைவழிபாடு (காண். எபே
5:5) அவர்களுடைய பெரிய பாவமாக இருந்தது. இச்செயல்களால் எந்தவொரு
பயனும் இல்லை என்கிறார் பவுல். 'ஒளி பெற்ற மக்களாக இருப்பது' என்பது
நன்மையான, நேரிய, மற்றும் உண்மையான கனிகளைக் கொடுப்பதில் இருக்கிறது.
ஒளி பெற்ற மக்களாக வாழ்தல் நம்பிக்கையாளருக்கு மிகப்பெரிய சவால்.
ஏனெனில், அவர் 'ஆண்டவருக்கு உகந்தது எது?' என்று கண்டு அதன்படி வாழ
வேண்டும். ஆண்டவருக்கு உகந்ததைக் கண்டறிய கூரிய பார்வையும், அவருடைய
வார்த்தையால் உந்தப்பட்ட இறைவேண்டலும், ஒருவர் மற்றவரை நேர்மையாக
நடத்துதலும் அவசியம். இவற்றின் வழியாகவே ஒருவர் ஒளிக்குள் வரவும்,
இருளோடு போராடவும் முடியும்.
ஆக, இருள் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் தான்
செய்கின்ற தவற்றை மீண்டும் செய்கிறார் அல்லது பயனற்ற செயல்களைச்
செய்கின்றார். ஆண்டவருக்கு உகந்ததை நாடும், செய்யும் ஒருவர் பார்வை
பெற்றவர் ஆகிறார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே
பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம்
வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய
சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார்
இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக
இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும்,
தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற
அந்த நபர். இன்றைய நற்செய்தி வாசகம் 'இயேசு - பார்வைற்ற நபர் - பரிசேயர்கள்'
என்று மூன்று முதன்மையான கதைமாந்தர்களை மையமாகக் கொண்டும், 'பார்வையற்ற
நபரின் பெற்றோர் - யூதர்கள்' என்னும் இரண்டு சிறுகதைமாந்தர்களைக்
கொண்டும் நகர்கிறது. மேலும், இயேசு-பார்வையற்ற நபர், பார்வையற்ற
நபர்-பரிசேயர்கள், பரிசேயர்கள்-பெற்றோர்கள், பார்வையற்ற நபர்-இயேசு,
இயேசு-பரிசேயர் என்று கதைமாந்தர்கள் நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக
அறிமுகம் செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, 'நம்பிக்கை-நம்பிக்கையின்மை,
ஏற்றுக்கொள்ளுதல்-ஏற்றுக்கொள்ளாமை, அறிக்கையிடுதல்-நிராகரித்தல்'
என்ற முரண்புள்ளிகளாவும் நகர்கிறது நிகழ்வு.
உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும்,
நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று
நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும்
பார்வை பெற்றவராக இருக்கின்றார். பரிசேயரோ உடலளவில் பார்வை
பெற்றிருந்தும், உள்ளத்தளவில் பார்வையற்றவர்களாக, பாவிகளாக இருக்கின்றனர்.
இயேசுவைப் பற்றிய இந்த மனிதரின் பார்வை ஐந்து நிலைகளில் வளர்கிறது:
முதலில், 'இயேசு எனப்படும் மனிதர்' என்றும், இரண்டாவதாக, 'இயேசு'
என்றும், மூன்றாவதாக, 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றும், நான்காவதாக,
'இவர் கடவுளிடமிருந்து வந்தவர்' என்றும், இறுதியாக, 'ஆண்டவர்' என்றும்
அறிக்கையிடுகின்றார் அவர். இன்னொரு பக்கம், இந்த மனிதரின் உடனடி
கீழ்ப்படிதல் (இயேசு சொன்னபடி உடனே செய்வது), எதார்த்தமான வாழ்வியல்
நிலை (தன்னுடைய பழைய வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்),
வெகுளித்தனம் (அறியாமை பற்றி வருந்தாத நிலை), மற்றும் துணிச்சல் (பரிசேயர்களை
எதிர்த்துக் கேள்வி கேட்டல்) நமக்கு ஆச்சர்யம் தருகிறது.
ஆக, நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால்
பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில்
பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை
பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது.
அல்லது
கடவுள் பார்ப்பதுபோல பார்ப்பதே பார்வைபெற்ற நிலை என்று முதல் வாசகமும்,
ஆண்டவருக்கு உகந்ததைச் செய்வதே பார்வைபெற்ற நிலை என்று இரண்டாம் வாசகமும்,
இயேசுவை மெசியா என்று நம்புதலே பார்வைபெற்ற நிலை என்று நற்செய்தி
வாசகமும் நமக்குச் சொல்கிறது.
தன்நிலை அறியாத பரிசேயர்கள், 'நாங்களுமா பார்வையற்றோர்?' எனக்
கேட்கின்றனர். இம்மூன்று பார்வையும் இல்லாவிடில் ஒருவர் பார்வையற்றவரே
என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன?
இன்று நான் என்னையும் மற்றவர்களையும் எப்படிப் பார்க்கிறேன்? இன்றைய
உலகம் கடவுள் பார்ப்பது போல யாரையும் பார்ப்பது இல்லை. நான் மற்றவர்களை
அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர்
பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று
தோற்றத்திற்கு நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: 'நான் எப்படி இருக்கிறேன்?'
'ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?' 'நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில்
இருக்கின்றனவா?' 'சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த
ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?' 'என்னுடைய வீட்டின் அழகையும்
பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?' 'நான் பயன்படுத்தும்
காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற
வேண்டுமா?' - இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான்
சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப்
பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை
அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின்
நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகாக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை,
பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார்.
நான் என்னையே மூன்று நிலைகளில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது: ஒன்று,
எதிர்மறை பார்வை. 'நான் கெட்டவன். நான் பாவி. கடவுளுக்கு என்னைப்
பிடிக்காது' என்று பார்க்கும் இந்த நிலையில் என்னுடைய பார்வை என்னுடைய
நிழல்களை மையப்படுத்தியதாக இருக்கும். இரண்டு, ஏமாற்றுப் பார்வை.
'நான் மற்றவர்களை விட சிறந்தவன். கடவுளின் பார்வையில் சிறந்தவன்.
அவனிடம் இல்லாத பல என்னிடம் இருக்கின்றன' என்று மேட்டிமை உணர்வோடு
பார்ப்பது. மூன்று, எதார்த்தப் பார்வை. 'மேன்மைக்கும்
தாழ்மைக்கும், குறைவுக்கும் நிறைவுக்கும் இடைப்பட்டவன் நான்' என்று
சொல்லி என்னுடைய வரையறைகளையும் வடுக்களையும் வலிந்து ஏற்றுக்கொள்ளும்
நிலை இது. என்னைப் பற்றிய பார்வையே நான் மற்றவர்களையும், கடவுளையும்
பார்ப்பதை நிர்ணயிக்கிறது.
இறுதியாக,
இன்று புறக்கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நாம்,
இவ்வாய்ப்பைப் பெறாத, அல்லது இவ்வாய்ப்பை நோயினாலும்,
முதுமையினாலும் இழந்து கொண்டிருக்கும் இனியவர்களை எண்ணிப்பார்ப்போம்.
'ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!' என்றழைத்த பாரதியின் வார்த்தைகள் நம்
காதுகளில் ஒலிக்கின்றன. கடவுள் பார்ப்பதை போல நானும் பார்க்க
முடிந்தால், தூக்கத்திலிருந்து இருளிலிருந்து நான் எழுந்து
நின்றால், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்டால்,
நான் ஒளிபெறுவேன். ஒளிபெற்ற நான், திருப்பாடல் ஆசிரியரோடு நின்று,
'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா
23) என்று சொல்ல முடியும்.
இல்லையெனில், நாமும் கேட்க நேரிடும் - 'நாங்களுமா பார்வையற்றோர்?'
பாரம்பரமாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
கள்வர்கள் நடுவில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் உடலில்
உயிர் இருக்கின்றதா? என்பதை அறிய விரும்பிய படைவீரன் அவரது
விலாவில் ஈட்டியால் குத்தினான். இந்தப் படைவீரனின் வலக்கண் பார்வையற்றிருந்தது.
இவன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியதும், அதிலிருந்து
வழிந்த செந்நீர் இவனது பார்வையற்ற வலக்கண்ணில் பட்டதும், அது
பார்வை பெற்றது.
உடனே படைவீரன், "இயேசுவே என் மீட்பராகிய கடவுள்" என நம்பி அவரை ஏற்றுக்கொண்டான்.
ஆம், வலக் கண்ணில் பார்வையின்றி இருந்த படைவீரன் பார்வை பெற்றது இயேசு
பார்வையளிக்கின்றார் என்பதையும், அவன் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டது,
நாம் ஒவ்வொருவரும் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றது. தவக் காலத்தின் நான்காம்
ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவர் இயேசு நமக்குப்
பார்வை அளிக்கின்றார் என்பதையும், அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை
கொண்டு வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றது. அது குறித்து
நாம் சிந்திப்போம்.
இயேசுவை நம்ப வேண்டும்
ஒருவர் உடல் நலக் குறைபாட்டுடன் பிறந்துவிட்டாலோ; அல்லது ஆபத்திலோ,
விபத்திலோ சிக்கி இறந்துவிட்டாலோ, மக்கள், "அவன் பாவம் செய்திருக்க
வேண்டும்; அதனால்தான் அவனுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கின்றது"
என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய வழக்கம் நேற்று, இன்று இல்லை;
இயேசுவின் காலத்திலும்; ஏன் அதற்கு முன்பும் இருந்தது.
நற்செய்தியில், பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவரைப் பார்த்து, இயேசுவின்
சீடர்கள், "இரபி, இவர் பார்வைற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர்
செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று கேட்கிறார்கள். அப்போது
இயேசு அவர்களிடம், "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த
பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப்
பிறந்தார்" என்று சொல்லி, இயேசு அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.
இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த மனிதருக்குப் பார்வையளித்ததோ ஓர்
ஓய்வுநாள். இதனால் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும், ஓய்வுநாளில்
பார்வையளிக்கும் ஒருவர் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்று
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுகின்றார்கள். மட்டுமல்லாமல், பார்வையற்ற
மனிதரைத் துன்புறுத்தவும் தொடங்குகின்றார்கள். பரிசேயர்கள் இவ்வாறு
நடந்துகொண்டாலும், பார்வை பெற்ற மனிதர் இயேசு கடவுளிடமிருந்துதான்
வந்திருக்க வேண்டும் என்று அவரை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்.
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசு செய்யும் ஒவ்வோர் அருஞ்செயலும்
ஓர் உண்மையை நமக்கு வெளிப்படுத்தும், இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த
மனிதருக்குப் பார்வையளித்த நிகழ்வு, இயேசுவே உலகின் ஒளி (யோவா
8:12) என்கிற ஆழமான உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு உலகின்
ஒளி; அவர் நமக்கு புறப்பார்வையை மட்டுமல்லாமல், அகப் பார்வையையும்
தருகின்றார் என்பதால், அவர்மீது, பார்வை பெற்ற மனிதரைப் போன்று நம்பிக்கை
கொள்ள வேண்டும்.
அகப் பார்வை பெற வேண்டும்
கடவுள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு புறப் பார்வையை மட்டுமல்லாமல்,
அகப் பார்வையும் தந்திருக்கின்றார் எனில், அதைக் கொண்டு நாம் என்ன
செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய
முதல் வாசகம் தாங்கி வருகின்றது.
இஸ்ரயேலின் முதல் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட சவுல், கடவுளின்
கட்டளையைக் கடைப்பிடியாமல் தன் விருப்பம் போன்று செயல்பட்டான். இதனால்
அவனை அரியணையிலிருந்து தூக்கி எறிந்த கடவுள், அவனுடைய இடத்தில்
பெத்லகேமைச் சார்ந்த ஈசாவின் புதல்வர்களில் ஒருவனைத் திருப்பொழிவு
செய்யுமாறு சாமுவேலிடம் சொல்கின்றார். சாமுவேலும் கடவுள் சொன்னவாறு,
கொம்பினை எண்ணெயால் நிரம்பிக் கொண்டு, பெத்லகேமில் உள்ள ஈசாவிடம்
வருகின்றார். அவர்களுடைய மகன்களுள் எலியாவைவைப் பார்த்ததும்,
"ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்" என்று
சாமுவேல் எண்ணும்போது, கடவுள் அவரிடம், "அவன் தோற்றத்தையும் உயரத்தையும்
பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் முகத்தைப்
பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்கிறார். இதன்பிறகு
சாமுவேல் ஈசாவின் ஏழு புதல்வர்களையும் தவிர்த்து, எட்டாவது புதல்வனான
தாவீதைத் திருப்பொழிவு செய்கின்றார்.
ஆண்டவர் சாமுவேலிடம், தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே எனச்
சொல்கின்ற வார்த்தைகள், எவரையும் வெளித்தோற்றத்தைப் பார்த்துத்
தீர்ப்பிடாதே என்ற கருத்தினை ஆழமாக வலியுறுத்திக் கூறுகின்றது. ஒருவரின்
வெளித் தோற்றத்தைப் பார்த்து அவரைத் தீர்ப்பிடக் கூடாது எனில்,
அவரது உட்புறத்தைப் பார்த்துத் தீர்ப்பிட வேண்டும் என்று அர்த்தமில்லை.
ஏனெனில், உட்புறத்தைக் கடவுளால் மட்டுமே பார்க்க முடியும் (திபா
139). அதனால் கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பிடும் அதிகாரம் உண்டு.
நாம் யாரையும் எக்காரணத்தையும் கொண்டு தீர்ப்பிடத் தகுதியில்லாதவர்கள்
என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
இருளின் செயல்களைக் களையவேண்டும்
ஒளியாம் இயேசு நமக்கு புற ஒளியை மட்டுமல்லாது, அக ஒளியையும் தந்திருக்கின்றபோது
ஒளியாய் இருக்கவேண்டும் அல்லது புதியதொரு வாழ்க்கை வாழ வேண்டும் இதுவே
கடவுளின் திருவுளமாகும். ஆனால், நாம் ஒளியாய் இதற்குப் பதில் இருளாய்
இருக்கின்றோம். இப்படி இருளாய் இல்லாமல், ஒளி பெற்ற மக்களாய் வாழ
வேண்டும் என்ற அழைப்பினை இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் பவுல்
தருகின்றார்.
ஒளியாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருத்து வாழ்வதன் முக்கியத்துவத்தைப்
பற்றிப் பேசும் பவுல், "ஒளியே எல்லா நன்மைகளையும் நீதியையும் உண்மையையும்
விளைவிக்கின்றது" என்பதால், ஒளியாம் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழச்
சொல்கின்றார். இன்று பலரும், இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர்களைப்
போன்று இயேசுவிடம் வருவதற்கும், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கும்
தயங்குகின்றார்கள். காரணம், தங்கள் தீச்செயல் வெளியாகிவிடும் என்பதால்தான்
(யோவா 3: 20). இருளில் இருப்பது அலகையோடு இருப்பதற்கு இணையானது; ஒளியில்
இருப்பது ஆண்டவரோடு இருப்பதற்கு இணையானது.
ஆகையால், நாம் ஒளி பெற்ற மக்களாய், அடுத்தவரைத் தீர்ப்பிடுவதைத் தவிர்த்து,
இயேசுவைப் போன்று நன்மை செய்பவர்களாய் (திப 10:28), நீதியை
நிலைநாட்டுபவர்களாய் (மத் 12: 19), உண்மையின் உரைகல்லாய் (யோவா 18:
37) வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு
"உள்ளுக்குள் ஒளியைக் கொண்டிருக்கும்போது, வெளியே யாவும் ஒளியாய்
இருக்கும்" என்பார் அனஸ் நின் என்ற அறிஞர். நாம் ஒளியாம் ஆண்டவரை
நமக்குள் கொண்டு, ஒளியின் மக்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெருவோம்.
இன்றைய நற்செய்தியானது குருடராகப் பிறந்தவரைப் பற்றியும்,
இயேசு அவரைக் குணமாக்கியதைப் பற்றியும் அழகாக விவரிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1) அவன்
குருடராக இருந்த நிலை 2) பார்வை பெற்ற பின் இருந்த நிலை
குருடராக இருந்த நிலையில் அவர் பிறவிலேயே குருடர் என்பதால்
உலகம், பொருட்கள் அனைத்தையும் அறியாது இருந்தார். எல்லாமே
அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்தது. சுய மதிப்பும் பிறரை
மதிக்கும் தன்மையும் இழந்த நிலையில் இருந்தார். சுருங்கச்
சொல்ல வேண்டுமென்றால் குருட்டுத் தன்மையால் மனித மாண்பு
இழந்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக இருந்தார். அவருடைய தனித்தன்மையை
அவனால் உணர முடியவில்லை.
அதோ! ஒரு மகிழ்ச்சியான நாள் அவரது வாழ்வில். இயேசுவைச் சந்திக்கின்றார்.
இல்லை! இல்லை! இயேசு அவனைச் சந்திக்கின்றார். உமிழ்நீரைச்
சேற்றில் கலந்து அவன் கண்களைத் தொட்டுப் பூசி சிலோவாம் குளத்தில்
கழுவ வைக்கின்றார். அதனால் அவர் பார்வை அடைகின்றார். புதிய
மனிதராகின்றார். சுய மதிப்பு அவருக்குக் கிடைக்கிறது. மகிழ்ச்சி
அவரது உள்ளத்தில் நிறைந்துவிட்டது. இதைக் கண்ட சிலருக்கு
வியப்பாகவும், சிலருக்குக் குழப்பமாகவும், சிலருக்கு எரிச்சலாகவும்,
சிலருக்குப் பொறாமையாகவும் ஆகிவிடுகிறது. எனவே அவரிடத்தில்
பலவிதமான கேள்விகள் கேட்டு தொல்லை கொடுக்கின்றார்கள். இந்த
யூத மக்கள் அவரது பெற்றோரிடம் வினவிய போது அவரையே கேட்டுக்
கொள்ளுங்கள். எங்களுக்குத் தெரியாது என்று பயந்து
சொல்லிவிடுகிறார்கள் அவரது பெற்றோர்.
அவரது அக்கம் பக்கத்தார் அந்த உண்மையைப் பற்றிக் கவலைப்படாது
அலட்சியப்படுத்தித் தள்ளி விடுகிறார்கள். ஆனால் பரிசேயர்களும்,
யூத குருக்களும் உண்மையை மறுக்கவும், மூடி மறைக்கவும் தொடங்குகிறார்கள்.
ஆனால் பார்வை பெற்றவரோ நான் குருடராக இருந்தேன். இப்போது
பார்வை பெற்றேன். என்னைத் தொட்டவர் இறைவாக்கினராகத்தான் இருக்க
வேண்டுமென்று ஆணித்தரமாகப் பயமின்றி உண்மையை எடுத்துரைக்கின்றார்.
ஏனெனில் ஆண்டவர் சொன்ன வார்த்தை நானே உலகின் ஒளி, என்னைப்
பின் செல்பவர் இருளில் நடவார், உயிரின் ஒளியைக்
கொண்டிருப்பார் (யோவா. 8:12) என்பது நிறைவேறுகிறது இவரின்
வாழ்க்கையில், இதுவரையிலும் குருடராக இருந்த இவருக்கு உடலின்
பார்வை மட்டுமல்ல அவருடைய ஒழுக்க சம்பந்தமான, ஞான சம்பந்தமான,
உள்ளம் சம்பந்தமான குருட்டுத் தன்மைகளினின்றும் அவர் மீட்கப்படுகிறார்.
இதனால் இவர் இயேசுவைக் கண்டுகொண்டது மட்டுமல்லாது இயேசுவை
மெசியாவாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுல்
அடிகளார் எபேசிய மக்களுக்கு எழுதும்போது நீங்கள் ஒளியின்
மக்களாக வாழுங்கள் என எழுதுகிறார். ஏனெனில் ஒரு காலத்தில்
பவுல் அடிகளாரே ஞானக் குருடராக திருச்சபையை எதிர்க்கின்ற
தீவிரவாதியாக கிறிஸ்தவர்களையே கொலை செய்யும் ஒரு
கொலையாளியாக இருந்தவர். ஆனால் இயேசு அவரைத் தொட்டு குணமாக்கிப்
பார்வை கொடுத்துத் தன்னுடைய ஒப்பற்றப் பாத்திரமாக மாற்றிக்
கொண்டார்.
ஐந்து இளைஞர்கள் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த ஒரு குருவிடம்
சென்றனர். அவரை நோக்கி, நாடு கெட்டுவிட்டது. லஞ்சம்
பெருகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது. எனவே இந்த ஊழல்
பெரிச்சாளிகளையெல்லாம் நாங்கள் தொலைத்துக்கட்ட
விரும்புகிறோர் எங்களுக்கு அனுமதி கொடும் என்று கேட்டார்கள்.
குரு பேசாது இருள் நிறைந்த ஒரு சுரங்கத்திற்கு அழைத்துச்
சென்றார். உள்ளே நுழைந்தவுடன் இருளை நீக்குங்கள் என்று ஆளுக்கு
ஒரு வாரியல் கொடுத்தார். அவர்களால் இருளை நீக்க முடியவில்லை.
அடுத்து உரத்த குரலில் சத்தமிட்டு இருளே ஓடுங்கள் என்று
சொல்லச் சொன்னார். அதற்கும் இருள் மறையவில்லை. கையில் ஒரு
கோலைக் கொடுத்து இருளை அடித்து விரட்டுங்கள் என்றும்
சொன்னார். அப்படியும் முடியவில்லை. எனவே இளைஞர்கள் சலிப்பு
அடைந்தார்கள். குரு மீது கோபமும் பட்டார்கள். ஆனால் குரு
அமைதியாகப் பார்த்தீர்களா! இந்த நிலையில் உங்களா ஒன்றும்
செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது பாருங்கள் இருள் மறையப்
போகிறது என்றார். ஓர் இளைஞனிடம் நெருப்புப் பெட்டியைக்
கொடுத்து பற்ற வைத்தார். ஒரு நொடியில் இருளானது மறைந்துவிட்டது.
இதேபோல பிறரைக் குறை கூறுவதை விட நமது குறையை நீக்குவோம்.
ஒளியாகத் திகழுவோம் என்றார்.
பிறவி குருடர், குருடராக இருக்கின்றவரையிலும் அவருக்கு எந்தப்
பிரச்சனையும் வரவே இல்லை. ஆனால் என்று பார்வை பெற்றாரோ அன்று
தொடங்கியது அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அதேபோல கிறிஸ்து
என்ற ஒளியை நாம் அறியாது, இந்த ஒளியை பெறாத நிலையில் இருந்தால்
ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் என்று கிறிஸ்துவை அறிகிறோமோ,
கிறிஸ்துவாக மாறுகிறோமோ அன்று நமக்குப் பல பிரச்சனைகள் வரும்.
அதை எதிர்த்துப் போராடுவதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வு.
மனத் தூய்மையுள்ளவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து
அவர்ளை ஆசிர்வதிப்பார். எப்போதும் நாம்
மனத்தூய்மையுடையவர்களாய் வாழ நாம் என்ன செய்யவேண்டும்
என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!
அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒருநாள் தான் ஒரு புனிதனாக
வேண்டும். அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம்
படைத்தவனாக மாற வேண்டும் என்ற ஆசை வந்தது.
எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர்
காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத்
தேடி காட்டுக்குள் சென்றான்.
அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய
பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன்.
எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான்.
அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு
வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும்
கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக்
கொண்டுபோய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை
எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன்
எத்தனைமுறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும்
அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக்
கொண்டுவந்து சேர்ந்தன அந்தக் கடலலைகள்.
பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான்.
அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத்
தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும்! அது
வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும்.
அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடல்,
கடலலைகளால் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றது.
உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறுபாவம்
போதும்! ஆகவே ஒரு சிறுபாவம் கூட உனக்குள் நுழையாமல்
பார்த்துக் கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது
அதைத்தூக்கி எறிந்துவிடு என்றார்.
அவனும் அவ்வாறே செய்தான், புனிதனானான்; கடவுளுக்கு
ஏற்புடையவனானான்.
மேலும் அறிவோம் :
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள் : 34).
பொருள் :
அறச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது
உள்ளம் தூய்மையாக விளங்குதல் ஆகும். பிற செயல்கள்
எல்லாம் வெளி ஆடம்பரப் பகட்டுகள் எனலாம்.
இரு விழிகளையும் இழந்த ஒருவர் தன்
கையில் எரிகின்ற விளக்கைப் பிடித்துக் கொண்டு வீதியில் நடத்ததைக்
கண்டவர்கள் அவரிடம், "விழி இழந்த உமக்கு விளக்கு எதற்கு?"
என்று கேட்டனர். அதற்கு அவர், "விழி உள்ளவர்கள் என்மீது
மோதாதபடி நான் இவ்விளக்கை கையில் பிடித்துச் செல்கிறேன்"
என்றார். இக்காலத்தில் பார்வை அற்றவர்களைவிடப் பார்வை உள்ளவர்கள்தான்
வீதியில் அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றனர் என்பது ஒரு கசப்பான
உண்மை.
இன்றைய நற்செய்தியில் இரு விழிகளையும் இழந்த ஒருவர்
கிறிஸ்துவால் பார்வை பெறுகின்றார். ஆனால் இரு விழிகளையும்
கொண்ட பரிசேயர்களோ பார்வையை இழக்கின்றனர்.
கிறிஸ்துவின்மேல் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை, எனவே
கிறிஸ்து கூறுகின்றார்: "பார்வையற்றோர் பார்வை பெறவும்.
பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" (யோவா 9:
39). பயங்கரமான கூற்று!
யோவான் தமது நற்செய்தியின் முன்னுரையில், கிறிஸ்து மனிதர்க்கு
ஒளியாக வந்தார்; அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதனைப்
புரிந்து கொள்ளவில்லை என்றும் (யோவா 1:5), "அவர் தமக்குரியவர்களிடம்
வந்தார்; அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை"
(யோவா 1:11) என்றும் கூறியுள்ளார். பரிசேயர் கிறிஸ்துவை ஏன்
ஏற்றுக்கொள்ளவில்லை? ஏனெனில் அவர்கள் அவரை மனித முறையில்
ஒரு தச்சனுடைய மகனாகவே பார்த்தனர். மாறாக அவரை மெசியாவாகப்
பார்க்கவில்லை. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள்
கூறுகிறார்: "மனிதர் பார்ப்பதுபோல நான் பார்ப்பதில்லை; மனிதர்
முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவர் அகத்தைப் பார்க்கிறார்"
(1 சாமு 16:7-9).
முகத்தின் கண்கொண்டு காணும் மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -திருமூவர்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355)
பொருளின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் அதற்குள் இருக்கும்
மெய்ப்பொருளைக் காண்பது அறிவுடைமையாகும்.
திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் எவரையும் மனித
முறையில் மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும்
மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்; ஆனால் இப்போது அவ்வாறு
செய்வதில்லை" (2 கொரி 5:16),
வெளித் தோற்றத்தைக் கண்டு எத்தனை பேர் ஏமாறுகின்றனர்? ஒரு
மாமியார் கூறுகின்றார்: "மணப்பெண், நடிகை ஜோதிகாவைப் போல
இருக்கிறாள் என்று அவளை என் மகனுக்குத் அருட்சாதனம்
செய்து
வைத்தேன். ஆனால் அவள் "சந்திரமுகி" திரைப்படத்தில் வருகின்ற
பேய்பிடித்த ஜோதிகாவாய் இருக்கிறாள்." நடிகைகளைக் கண்டு ஏமாற
வேண்டாம்!
சமாரியப் பெண் எவ்வாறு கிறிஸ்துவைப் படிப்படியாக அறிந்தாரோ,
அவ்வாறே பார்வை இழந்தவர் கிறிஸ்துவை அறிவதில் படிப்படியாக
முன்னேறி, இறுதியில் அவரிடம் சரணாடைகின்றார். முதல்
நிலையில் கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் (யோவா
9:1), இரண்டாம் நிலையில் அவரை ஓர் இறைவாக்கினராகக் கண்டு
(யோவா 9:17), இறுதி நிலையில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு
அவரிடம் சரண் அடைகிறார். "ஆண்டவரே நம்பிகை கொள்கிறேன் என்று
கூறி அவரை வணங்கினார்" (யோவா 9:38). கிறிஸ்து வெறும் மனிதரோ
அல்லது ஓர் இறைவாக்கினரோ மட்டுமல்ல, அவர் கடவுளிடமிருந்து
வந்தவர், அருள் பொழிவு பெற்றவர், மீட்பர் என்பதைப் படிப்படியாக
உணரச் செய்வதே மறைக்கல்வியின், மறையுரையின் இறுதிக்
குறிக்கோள். இயேசு கிறிஸ்து இந்த அரும் அடையாளத்தின் மூலம்,
"நானே உலகிள் ஒளி" (யோவா 9:5) என்னும் மாபெரும் உண்மையை
உணர்த்துகிறார்.
கிறிஸ்துவால் ஒளிபெற்று பார்வை அடைந்தவர் கிறிஸ்துவுக்குச்
சாட்சியம் பகர்கின்றார். பரிசேயர்கள் அவரை மிரட்டுகின்றனர்;
பழித்துரைக்கின்றனர்; தங்களுடைய இனத்தினின்று அவரைத் தள்ளி
வைக்கின்றனர். ஆனால், அவரோ கிறிஸ்துவின் தனித்தன்மையை எடுத்துரைக்கின்றார்.
கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பல்வேறு இன்னல் இடையூறு களுக்கு
இலக்காகி வருகின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் பார்வையற்றவரின்
நெஞ்சுறுதியைப் பின்பற்றி "இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்" என்று
அறிக்கையிடத் தயங்கக்கூடாது.
"நான் போனேன்: கழுவினேன்; பார்வை பெற்றேன்" (யோவா 9:11) என்று
பார்வையிழந்தவர் தான் பார்வை பெற்ற விதத்தை எடுத்துரைப்பது
நமது சிந்தனையைத் தூண்டி, நமது நம்பிக்கையை வளர்க்க
வேண்டும். நாம் திருமுழுக்கால் கழுவப்பட்டு, புதிய பார்வை
பெற்று, புதுப்படைப்பாக மாறியுள்ளோம். நமது பார்வை எவ்வாறு
உள்ளது?
ஓர் இளைஞர் கண் டாக்டரிடம் சென்று, "எனக்குப் பெண்கள் மட்டும்.
அதுவும் இளம் பெண்கள் மட்டும் தெரிகின்றனர். என் பார்வை,
கிட்டப்பார்வையா? அல்லது எட்டப்பார்வையா?" என்று கேட்டார்.
டாக்டர் அவரிடம், "உம் பார்வை கெட்டப்பார்வை" என்றார்.
பெரும்பாலும் நமது பார்வை கெட்டப் பார்வையாகவே உள்ளது. ஏனெனில்
நாம் விரும்பியவர்களை மட்டும், விரும்புகின்ற விதத்தில்
பார்க்கிறோம். நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? பிறரை
அன்பு செய்தால் நாம் ஒளியின் மக்கள்: பிறரை வெறுத்தால் இருளின்
மக்கள் என்கிறார் யோவான் (1 யோவா 2:9-11). நமது பார்வை
உலகளாவிய சகோதரப் பார்வையாக மாறவேண்டும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ஒளியின்
சுனிகளைப் பட்டியலிடுகிறார். அவை: நன்மை, உண்மை, நீதி.
நாம் உண்மையைப் பேசி, நீதியைக் கடைப்பிடித்து, நன்மை செய்ய
வேண்டும். பொய் பேசுகின்றவர்கள் அலகையைச் சார்ந்தவர்கள்.
ஏனெனில் கிறிஸ்து கூறுவதுபோல, அலகை பொய்யன், பொய்மையின் பிறப்பிடம்
( யோவா 8:44).
ஓர் அம்மா தன் மகனுடன் பேருந்தில் ஏறி, தன் மகனுக்கு 7 வயது
என்றார். அச்சிறுவன் அம்மாவிடம், "அம்மா! என் வயது 12" என்றான்.
அதற்கு அம்மா அவனிடம், "கவலைப்படாதே! பேருந்தில் இருந்து
கீழே இறங்கியவுடன் உனக்கு 12 வயது வந்துவிடும்" என்றார்!
பெற்றோர்களே. பொய்மையின் பிறப்பிடமாக இருப்பது கவலைக்குரியது.
உலகில் எத்தனையோ விளக்குகள் இருப்பினும் பொய்யா விளக்கிற்கு
இணையான விளக்கு ஏதுமில்லை!
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு(குறள் 299)
கிறிஸ்துவை நம் வாழ்வின் ஒளியாக ஏற்று. உலகளாவிய சகோதரப்
பார்வை பெற்று, உண்மையை விளக்காகக் கையில் ஏந்தி, நன்மை
செய்து நிறைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.
கண் பார்வை இல்லாதவர் யார்?
பாதையின் நடுவே ஒரு பாறாங்கல். இளைஞன் ஒருவன் சைக்கிளில்
வேகமாக வருகிறான். அவன் பார்வையில் அந்தக்கல் படுகிறது.
சைக்கிளைச் சுற்றி வளைத்து ஏதோ வித்தை காட்டுபவனைப் போல்
ஒரு U டர்ன் போட்டுத் திரும்பி விரைகிறான். இன்னொருவர்
நாளிதழைப் படித்துக் கொண்டே வருகிறார். கல்லில் அவரது வலது
கால் இடிக்கிறது. வேதனையில் முகச்சுளிப்புடன் கால் விரலைத்
தேய்த்துக் கொள்கிறார். 'பொறுப்பற்ற மனிதர்கள்' என்று
முணுமுணுத்துக் கொண்டே போய் விடுகிறார். பலர் அந்த
இடத்தைக் கடந்தும் பார்த்தும் பார்க்காதவர்கள் போலச்
சென்று கொண்டிருக்கிறார்கள். டக் டக் என்ற ஒலியுடன் ஒரு
கைத்தடி. தடி கல்லில் படுகிறது. உடனே தடியை கக்கத்தில்
வைத்துக் கொண்டு மெதுவாகக் கல்லைத் தூக்கி எடுத்து ஓரமாக
வைக்கிறார் கண்பார்வையற்ற அந்த மனிதர். பின் தடியால்
தட்டிக் கொண்டே பயணத்தைத் தொடர்கிறார் டக் டக் ஒலியுடன்.
"யார் பார்வையாளன்?" என்ற தலைப்புடன் அந்தத் துண்டுப் படம்
முடிகிறது.
பார்வையற்றராக மட்டுமல்ல, யார் அக்கல்லில் தட்டி
விழுவார்கள், தடுமாறித் துடிப்பார்கள், பார்த்து
ரசிக்கலாம் என்று சாலையோரத்தில் காத்துக் கிடக்கும்
கொடுமனம் கொண்டவர்கள் கூட உண்டு.
காண முடியாதவர்கள் அல்ல, காண விரும்பாதவர்களே உண்மையான
குருடர்கள். பார்வை இழப்பு என்பது கொடியது. ஆனால்
பார்க்கக் கண்ணிருந்தும் பார்க்காமல் இருப்பது, பார்க்க
மறுப்பது மிகமிகக் கொடியது.
'பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வை
யற்றோர் ஆகவுமே நான் வந்தேன் என்றார் (யோ.9:39) இயேசு. இரு
விழிகளையும் இழந்த ஒரு மனிதர் கிறிஸ்து இயேசுவால் பார்வை
பெறுகிறார்; ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர் களோ
பார்வை இழக்கின்றனர்!
பிறவிக் குருடனுடைய புறக்கண்கள் மட்டுமல்ல, அவனது அகக்
கண்களும் திறக்கப்படுகின்றன. சமாரியப் பெண்ணைப் போலத்
தனக்குப் பார்வை அளித்தவர் யார் என்பதைப் படிப்படியாக
அறிந்து உணர்ந்து அவரிடம் சரணடைகிறார். முதலில்
கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் அடுத்து
இறைவாக்கினராகவும் முடிவில் ஆண்டவராகவும் ஏற்றுப் பின்
இயேசுவின் சாட்சியாக மாறுகிறார்.
பிறவி முதல் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இறுதிவரை
குருடர்களாகவே இருக்கின்றனர். புறக் கண்களைத் திறந்துவிட்ட
இறைமகனால் அந்தக் குருடர்களின் மனக்கண்களைத் திறக்க
முடியவில்லையே, எப்படி? அங்கேதான் "இறைவனின் பலவீனம்"
தெரிகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனைக்கூட
ஓங்கித் தட்டி எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவதாகப்
பாசாங்கு செய்பவனை, விழித்தெழ விரும்பாதவனை நம்மால்
மட்டுமல்ல, இறைவனாலும் எழுப்ப முடியாது. கண்களற்ற
குருடனுக்கு மாற்றுக் கண்கள் பொருத்தித் தீர்வு காணலாம்.
கண்ணிருந்தும் பார்க்க விரும்பதவனை என்ன செய்வது? "நீங்கள்
பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது.
ஆனால் நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" (யோ.9:41) என்ற
பரிசேயர் பற்றிய இயேசுவின் தெளிந்த பார்வை
சிந்திக்கத்தக்கது.
விசுவாசப் பாதுகாப்பு, விசுவாச மறுமலர்ச்சி என்ற பெயரில்
விசுவாசம் என்ன ஆடா மாடா, பயிரா பச்சையா வளர்ப்பதற்கு?
பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்பட வேண்டியது
என்ற கோணத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைக் கூட
எதிர்ப்பது, புரிந்து கொள்ள மறுப்பது, மரபுகளா அவை
மடையர்களின் சட்டங்கள் என்று திருச்சபையின் அற்புதமான
மரபுகளைப் பழிப்பது, இழித்துரைப்பது - இப்படித்
திருச்சபையில் எத்தனை பரிசேயக் குருடர்கள்!
தன்னைச் சுற்றியுள்ள மக்களின் பசியைத் துன்பத்தைக் காண
விரும்பாது. ஏழை மக்களின் நலத் திட்டங்களில் கூட எதைச்
சுரண்டலாம், பஞ்ச காலத்தில் எதைப் பதுக்கலாம் என்ற
எண்ணத்திலேயே உழலும் பேர் வழிகள்... இப்படிச் சமுதாயக்
குருடர்கள்.
தான், தனது பெயர், தனது பதவி, தனது இனம்.இவைகள் தாம்
சிலர் கண்ணில் எப்போதும் படும். தனக்கு விருப்பமா
பிடிக்குமா என்றுதான் பார்ப்பார்களே தவிர, திருச்சபைக்கு,
சமுதாயத்துக்கு எது நலம் என்று பார்க்கமாட்டார்கள்...
"இவர்கள் கிட்டப் பார்வை யுடையோர்" (2 பேதுரு 19)
கடவுள் மனிதனைப் படைத்தபோது அவன் கழுத்தில் இரண்டு
பைகளைப் பாட்டி விட்டார். ஒன்று முதுகிலும் மற்றது
மார்பிலும் தொங்கின. "ஒரு பையில் உன் குற்றங்களையும்
மற்றதில் பிறர் குற்றங்களையும் பொறுக்கி போட்டு வை
என்றார் கடவுள். மனிதனோ மார்புப் பையில் பிறர்
குற்றங்களையும் முதுகுப் பையில் தன் குற்றங்களையும்
பொறுக்கிப் போட்டுக் கொண்டான் எதற்காக? தன் குற்றங்கள்
ஒருபோதும் தன் கண்ணில் படலாகாது. பிறர் குற்றங்கள்
எப்போதும் தன் கண்ணில் பட வேண்டும் என்பதற்காகத்தான்...
இவர்கள் தூரப் பார்வையுடையோர்.
காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள். அவனுக்குப்
பார்ப்பதெல்லாம் குறையாக, கேட்பதெல்லாம் தவறாகவே தெரியும்.
எப்போதுமே எதிர்மறைப் பார்வை கொண்ட காமாலைக் கண்ணன்கள்.
பிறவியிலேயே பார்வைத் திறனோ கேள்வித் திறனோயின்றி
வரலாற்றில் சாதனைத் தடம் பதித்த ஹெலன் கெல்லார்
சொல்வார்:"மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பேராபத்து
பெரும் சோகம், பேரிழப்பு பார்வையற்றவனாகப் பிறப்பது அல்ல,
கண்ணிருந்தும் காணத் தவறுவது".
"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்த
தால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான்
அவர் களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது".
(யோ.3:19) வெளிச்சம் இல்லையென்றால் பார்வையால் கூடப்
பயனில்லை.
ஆதவனைக் கண்டு எல்லா மலர்களுமா மலர்கின்றன? தாமரை மலர்ந்து
சிரிக்கிறது. அல்லி வாடிக் கூம்புகிறது. இயேசு என்னும்
தெய்வீகப் பேரொளி நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
பார்வையை வளர்ப்பதும், இழப்பதும்
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, Laetare
Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று
கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பு விழாவை நோக்கிச் செல்லும்
நம் தவக்காலப் பயணத்தில், உண்மையான மகிழ்வைக்
கண்டுகொள்ளவும், அதை உலகில் வளர்க்கவும், தாய் திருஅவை
இந்த ஞாயிறை நமக்கு வழங்கியுள்ளார்.
நம் வாழ்வில் மகிழ்வைக் கொணரும் தருணங்கள் பல உள்ளன.
அவற்றில், மிக முக்கியமான தருணங்கள் - நாம் மன்னிப்பு
பெற்ற, மற்றும், மன்னிப்பு வழங்கிய தருணங்கள்.
தவக்காலத்தின் மகிழும் ஞாயிறுக்கு முந்தைய இருநாள்களை
மன்னிப்பு விழாவாகக் கொண்டாடுவதற்கு, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார். 2014ம் ஆண்டுமுதல்,
சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பு விழாவின்போது,
உலகெங்கும், பல கோவில்கள், 24 மணி நேரங்கள்
திறக்கப்பட்டிருப்பதும், அங்கு, ஒப்புரவு அருளடையாளம்
வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும், இவ்விழாவின்
முக்கிய அம்சங்களாக இருந்துவந்துள்ளன.
இவ்வாண்டு, மார்ச் 17,18 ஆகிய இரு நாள்கள் நாம் கொண்டாடிய
இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும்
ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும்
நிகழ்வு, நற்செய்தியாக (யோவான் 9: 1-41) நமக்குத்
தரப்பட்டுள்ளது. மகிழும் ஞாயிறன்று பார்வை பெறுவதை'
சிந்திக்கும்போது, நம் மகிழ்வைக் குறைக்கும், அல்லது,
குலைக்கும் பார்வையைப் பற்றிச் சிந்திப்பது, பயனுள்ள ஒரு
முயற்சியாக இருக்கும். இந்தக் கருத்தை விளக்கும் ஒரு
நிகழ்வு இதோ...
திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உலகின் பல நாடுகளில்
நடைபெற்றுவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம்
பார்த்திருக்கிறோம். அத்தகைய நிகழ்ச்சியொன்றில், ஓர்
இளைஞன், மற்றோர் இளம்பெண்ணை மேடைக்கு நடுவே
அழைத்துவந்தார். அந்த இளம்பெண், கறுப்புக்கண்ணாடி
அணிந்திருந்தார்; பார்வைத் திறனற்றோர் பயன்படுத்தும்
குச்சியுடன் நடந்துவந்தார். போட்டியின் நடுவர்கள்
அவர்களிடம், "மன்னிக்கவும். இந்தப் போட்டியில், திறமை
குறைவானவர்கள் கலந்துகொள்ள இயலாது" என்று கூறினர். உடனே
அவ்விளம்பெண், நடுவர்களிடம், "கவலைப்படாதீர்கள். நான்
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வரவில்லை. போட்டியில்
நடனமாட வந்திருக்கும் என் தம்பியை உற்சாகப்படுத்தவே
வந்துள்ளேன்" என்று கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த
கோலின் உதவியுடன் மேடையைவிட்டு இறங்கி, பார்வையாளர்களின்
முதல் வரிசையில் அமர்ந்தார்.
மேடையில் நின்ற இளைஞர், இசையைத் துவக்கும்படி கூறவே, இசை
ஆரம்பமானது. அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த இளைஞர்
அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினார். அவர் நடனமாடி
முடித்ததும், பார்வையாளர்களும், நடுவர்கள் மூவரும் ஒருசேர
எழுந்துநின்று கரவொலி எழுப்பினர். அதுவரை முன்வரிசையில்
அமர்ந்திருந்த அவ்விளம்பெண், மேடையை நோக்கி ஓடினார். தான்
பயன்படுத்திய குச்சியின் உதவியின்றி, அவர் மேடையை நோக்கி,
விரைவாக ஓடியது, நடுவர்களையும், பார்வையாளர்களையும்
அதிர்ச்சியடையச் செய்தது. மேடையேறிச் சென்ற இளம்பெண், தன்
தம்பியை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டார். பின்னர்,
தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைத் தம்பிக்கு
அணிவித்து, அவர் கையில் அந்தத் தடியையும் கொடுத்தார்.
அப்போது, அவ்விளைஞர், நடுவர்களிடம், "திறமை குறைவானவர்கள்
என்று யாரும் கிடையாது. திறமை மாறுபட்டவர்களே இவ்வுலகில்
இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, தன் அக்காவின் கரத்தைப்
பற்றியவாறு மேடையிலிருந்து வெளியேறினார்.
திறமை குறைவானவர்கள் என்பதை யார் தீர்மானம் செய்வது?
அனைத்துப் புலன்களும் குறையின்றி இருப்பவர்களை, திறமை
உடையவர்கள் என்றும், புலன் குறையுள்ளவர்களை,
திறமையற்றவர்கள் என்றும் எளிதில் தீர்மானம்
செய்துவிடுகிறோம். பார்வைத்திறன் உள்ளோர், பார்வைத்திறன்
அற்றோர், பார்வைத்திறன் குறைவுடையோர் என்று, நம்மை நாமே பல
வழிகளில் முத்திரை குத்திக்கொள்ளும் நமக்கு, இன்றைய
நற்செய்தி (யோவான் 9:1-41) ஒரு சில அழகிய பாடங்களைச்
சொல்லித்தருகிறது. உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன்
கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாம், பலமுறை
அகத்தில் குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது
அகக்கண்களை இழந்திருக்கிறோம். நம் அகக்கண்களைப் பற்றி,
நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப் பற்றி அதிகம்
சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.
பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று
யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான்
நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவாக்கியங்களில்
முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34
இறைவாக்கியங்கள் வழியாக, யோவான், ஓர் இறையியல் பாடமே
நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை
பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள் இவை.
பார்வை இழந்த மனிதர், உடல் அளவில் மட்டுமல்லாமல்,
உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால்
இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல்
அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத்
தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார்.
இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின்
பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும்,
யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.
இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர்
கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக்
கழுவச்சொன்னார். அவரும் போய்க் கழுவினார். பார்வை பெற்றார்
என்று, இப்புதுமையை ஒருசில இறைவாக்கியங்களில் யோவான்
பதிவுசெய்துள்ளார். பார்வை பெற்றவர் தன் வழியே
போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம்
போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது
மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது
வேறு. "அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி
வந்தார்" (யோவான் 9:7) என்று இன்றைய நற்செய்தியில்
வாசிக்கிறோம். அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள்
ஆரம்பமாயின.
அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? பார்வை பெற்றவர்,
கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். தனக்கு இந்தப்
புதுமையை, இந்த மாபெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத்
தெரிந்து கொள்ள, அவருக்குத் தன் நன்றியைக் கூற, அவர்
திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால்
பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள்
மத்தியில், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப்
பகிர்ந்துகொள்ள அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான்
எதுவும் கேட்காதபோது, தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த
மகானிடம் தன் நண்பர்களையும் அழைத்துச் செல்லும்
நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும்.
அதுவரை, அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்துவந்த பலர்,
அவர் குணமாகி திரும்பி வந்தபின், அவரை அடையாளம்
கண்டுகொள்ளமுடியாமல் சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும்
மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும்
மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி.
பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக்
கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு
மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம்
"நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார்.
'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து
இறைவனின் கருணைக்கு, புதுமைக்குத் தான் ஒரு சாட்சி என்று
புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த
முதல் பிரச்சனை பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத
இடங்களிலும் பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள்
பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தப் புதுமை, ஒய்வு
நாளில் நடந்தது என்று தெரிந்தபின் சும்மா இருப்பார்களா?
புதுமையொன்று நிகழ்ந்தது என்பதில் மகிழ்வடைவதற்குப் பதில்,
அது ஓர் ஒய்வு நாளில் நடந்தது என்பதை பரிசேயர்கள்
பிரச்சனையாக மாற்றினர். வாழ்க்கையில் மலைபோல்
குவிந்திருந்த பல பிரச்சனைகளுடன் தினமும் வாழ்ந்தவர்கள்
அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய
நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை.
எனவே, கண் பார்வை பெற்றவருக்கு, அது ஒய்வு நாள் என்பதே
தெரிந்திருக்க நியாயமில்லை.
பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார்.
அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார்.
பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர்.
அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர்.
பார்வையற்றவரை, கடவுளின் சாபம் பெற்றவர் என்று ஊர்
மக்கள் ஒதுக்கியபோது, இது கடவுளின் சித்தம் என்று தங்கள்
மகனைப் பரிவோடு ஏற்றுக்கொண்ட அந்தப் பெற்றோர், பார்வை
பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள்
மகனிடம் உருவான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர்.
பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப்
பயமுறுத்தி, அவர்கள் பார்வையைக் குறுகச் செய்திருந்தது.
அந்தப் பார்வையற்றவர், பிறந்தது முதல் தன் பெற்றோரையோ,
பரிசேயர்களையோ பார்த்ததில்லை. அன்றுதான் முதல் முறையாகத்
தன் பெற்றோரையும், பரிசேயர்களையும் பார்க்கிறார். தன்
பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார்.
அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள்
அந்தப் பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக
நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய்
இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.
பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும்
பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க
ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள்
அவரைப் பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக
ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத
சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை
ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்தச்
சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது.
முழுமை அடைந்தது. படிப்படியாக அக ஒளி பெற்ற அவர்,
இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, "ஆண்டவரே, நம்பிக்கை
கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைகிறார்.
படிப்படியாகப் பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக,
பரிசேயர்கள் படிப்படியாகப் பார்வை இழக்கின்றனர். அவர்கள்
பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை
ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது
அவர்கள் வளர்த்துவந்த பொறாமையும், வெறுப்பும், ஏற்கனவே
அவர்கள் பார்வையை வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள்
சட்டத்தைக் கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து
வந்திருக்க முடியாது." (யோவான் 9:16) என்று ஆரம்பிக்கும்
அவர்களது எண்ண ஓட்டத்தை, யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக்
கொணர்கிறார். ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி
வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு
இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற
அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர். இருளுக்கு
பழகிவிட்ட கண்களுக்குப் பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி
எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக
மாறவே, அவர்கள், பார்வை பெற்று, இயேசுவின் சாட்சியாக மாறிய
மனிதரை, யூத சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.
உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும்
மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப்
பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே
ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக்
குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம்.
'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல்
வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விடயங்கள் கண்களில்
படுவதில்லை. "தலை கால் தெரியாமல்" ஒருவர்
மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு
உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு
தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.
ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன
நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு
பார்க்காதே... இப்படி பலவிதமான வாக்கியங்கள் நம் பேச்சு
வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும்
நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில்
அழகாய் கூறியுள்ளார். "கண்தான் உடலுக்கு விளக்கு. கண்
நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய்
இருக்கும்." (மத்தேயு 6:22-23)
உடலளவில் பார்வைத்திறன் இருந்தால் மட்டும் போதாது,
அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம்
அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அழுக்கில்லாத,
களங்கமில்லாத பார்வை பெற வேண்டும். தெளிவான, சரியான பார்வை
பெற வேண்டும். மனதையும், அறிவையும் குறுக்கும் முற்சார்பு
எண்ணங்களை அகற்றி, பரந்து விரிந்த பார்வை பெற வேண்டும். அக
ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில்
பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி
பெருக்கவேண்டுமெனச் செபிப்போம்.
இறுதியாக ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... 2013ம் ஆண்டு,
மார்ச் 19ம் நாள், புனித யோசேப்பு பெருவிழாவன்று,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின்
தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். மார்ச் 19, இஞ்ஞாயிறன்று
தன் தலைமைப் பணியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உடல், உள்ள நலனையும்,
தெளிவான பார்வை, தீர்க்கமான சிந்தனை ஆகிய கொடைகளையும்
இறைவன் வழங்கவேண்டுமென்று செபிப்போம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பார்வையை வளர்ப்பதும், இழப்பதும்
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, Laetare
Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது.
உயிர்ப்பு விழாவை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில்,
உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், அதை உலகில் வளர்க்கவும்,
தாய் திருஅவை இந்த ஞாயிறை நமக்கு வழங்கியுள்ளார்.
நம் வாழ்வில் மகிழ்வைக் கொணரும் தருணங்கள் பல உள்ளன. அவற்றில்,
மிக முக்கியமான தருணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மற்றும்,
மன்னிப்பு வழங்கிய தருணங்கள். தவக்காலத்தின் மகிழும்
ஞாயிறுக்கு முந்தைய இருநாள்களை மன்னிப்பு விழாவாகக்
கொண்டாடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.
2014ம் ஆண்டுமுதல், சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பு
விழாவின்போது, உலகெங்கும், பல கோவில்கள், 24 மணி நேரங்கள்
திறக்கப்பட்டிருப்பதும், அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க
அருள்பணியாளர்கள் காத்திருப்பதும், இவ்விழாவின் முக்கிய அம்சங்களாக
இருந்துவந்துள்ளன.
இவ்வாண்டு, மார்ச் 17,18 ஆகிய இரு நாள்கள் நாம் கொண்டாடிய
இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று,
பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக
(யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. மகிழும் ஞாயிறன்று
பார்வை பெறுவதை' சிந்திக்கும்போது, நம் மகிழ்வைக்
குறைக்கும், அல்லது, குலைக்கும் பார்வையைப்பற்றி சிந்திப்பது,
பயனுள்ள ஒரு முயற்சியாக இருக்கும். இந்தக் கருத்தை விளக்கும்
ஒரு நிகழ்வு இதோ...
திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய
நிகழ்ச்சியொன்றில், ஓர் இளைஞன், மற்றோர் இளம்பெண்ணை
மேடைக்கு நடுவே அழைத்துவந்தார். அந்த இளம்பெண், கறுப்புக்கண்ணாடி
அணிந்திருந்தார்; பார்வைத் திறனற்றோர் பயன்படுத்தும்
குச்சியுடன் நடந்துவந்தார். போட்டியின் நடுவர்கள் அவர்களிடம்,
"மன்னிக்கவும். இந்தப் போட்டியில், திறமை குறைவானவர்கள்
கலந்துகொள்ள இயலாது" என்று கூறினர். உடனே அவ்விளம்பெண், நடுவர்களிடம்,
"கவலைப்படாதீர்கள். நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள
வரவில்லை. போட்டியில் நடனமாட வந்திருக்கும் என் தம்பியை உற்சாகப்படுத்தவே
வந்துள்ளேன்" என்று கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த
கோலின் உதவியுடன் மேடையைவிட்டு இறங்கி, பார்வையாளர்களின்
முதல் வரிசையில் அமர்ந்தார்.
மேடையில் நின்ற இளைஞர், இசையைத் துவக்கும்படி கூறவே, இசை
ஆரம்பமானது. அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த இளைஞர் அற்புதமான
ஒரு நடனத்தை வழங்கினார். அவர் நடனமாடி முடித்ததும்,
பார்வையாளர்களும், நடுவர்கள் மூவரும் ஒருசேர எழுந்துநின்று
கரவொலி எழுப்பினர். அதுவரை முன்வரிசையில் அமர்ந்திருந்த அவ்விளம்பெண்,
மேடையை நோக்கி ஓடினார். தான் பயன்படுத்திய குச்சியின் உதவியின்றி,
அவர் மேடையை நோக்கி, விரைவாக ஓடியது, நடுவர்களையும்,
பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேடையேறிச்
சென்ற இளம்பெண், தன் தம்பியை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டார்.
பின்னர், தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை தம்பிக்கு
அணிவித்து, அவர் கையில் அந்தத் தடியையும் கொடுத்தார். அப்போது,
அவ்விளைஞர், நடுவர்களிடம், "திறமை குறைவானவர்கள் என்று
யாரும் கிடையாது. திறமை மாறுபட்டவர்களே இவ்வுலகில் இருக்கிறோம்"
என்று சொல்லிவிட்டு, தன் அக்காவின் கரத்தைப் பற்றியவாறு
மேடையிலிருந்து வெளியேறினார்.
திறமை குறைவானவர்கள் என்பதை யார் தீர்மானம் செய்வது? அனைத்துப்
புலன்களும் குறையின்றி இருப்பவர்களை, திறமை உடையவர்கள் என்றும்,
புலன் குறையுள்ளவர்களை, திறமையற்றவர்கள் என்றும் எளிதில்
தீர்மானம் செய்துவிடுகிறோம். பார்வைத்திறன் உள்ளோர்,
பார்வைத்திறன் அற்றோர், பார்வைத்திறன் குறைவுடையோர் என்று,
நம்மை நாமே பல வழிகளில் முத்திரை குத்திக்கொள்ளும் நமக்கு,
இன்றைய நற்செய்தி (யோவான் 9:1-41) ஒரு சில அழகிய பாடங்களைச்
சொல்லித்தருகிறது. உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன்
கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாம், பலமுறை அகத்தில்
குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது அகக்கண்களை இழந்திருக்கிறோம்.
நம் அகக்கண்களைப் பற்றி, நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப்
பற்றி அதிகம் சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.
பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று
யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான்
நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவாக்கியங்களில் முடிவடைகிறது.
ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள் வழியாக,
யோவான், ஓர் இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும்
அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன
குறித்த பாடங்கள் இவை.
பார்வை இழந்த மனிதர், உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும்
பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார்.
இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள்,
படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான்
கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை
பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக்
குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.
இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில்
பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச்சொன்னார்.
அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார் என்று, இப்புதுமையை
ஒருசில இறைவாக்கியங்களில் யோவான் பதிவுசெய்துள்ளார்.
பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை
முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை
விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும்.
ஆனால், நடந்தது வேறு. "அவரும் போய்க் கழுவிப் பார்வை
பெற்றுத் திரும்பி வந்தார்" (யோவான் 9:7) என்று இன்றைய நற்செய்தியில்
வாசிக்கிறோம். அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.
அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? பார்வை பெற்றவர்,
கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். தனக்கு இந்தப்
புதுமையை, இந்த மாபெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத்
தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற, அவர்
திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால்
பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள்
மத்தியில், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள
அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான் எதுவும் கேட்காதபோது,
தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த மகானிடம் தன் நண்பர்களையும்
அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க
வேண்டும்.
அதுவரை, அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்துவந்த பலர்,
அவர் குணமாகி திரும்பி வந்தபின், அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல்
சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில்,
முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம்
பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம்
தெரியாத அளவு மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம்
"நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார்.
'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின்
கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை
ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த முதல் பிரச்சனை
பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களிலும் பிரச்சனையை
உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள்,
இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்தது என்று தெரிந்தபின்
சும்மா இருப்பார்களா?
புதுமையொன்று நிகழ்ந்தது என்பதில் மகிழ்வடைவதற்குப் பதில்,
அது ஓர் ஒய்வு நாளில் நடந்தது என்பதை பரிசேயர்கள் பிரச்சனையாக
மாற்றினர். வாழ்க்கையில் மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகளுடன்
தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு,
நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள்
இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு, அது ஒய்வு
நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.
பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார்.
அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். பரிசேயர்கள்,
அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து
நழுவப் பார்த்தனர். பார்வையற்றவரை, கடவுளின் சாபம் பெற்றவர்
என்று ஊர் மக்கள் ஒதுக்கியபோது, இது கடவுளின் சித்தம் என்று
தங்கள் மகனை பரிவோடு ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை
பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள்
மகனிடம் உருவான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர்.
பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி,
அவர்கள் பார்வையைக் குறுகச் செய்திருந்தது.
அந்த பார்வையற்றவர், பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ
பார்த்ததில்லை. அன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரையும்,
பரிசேயர்களையும் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு
அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை
அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும்
மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய்
இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.
பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை,
ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே,
பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது
சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக்
கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள்.
அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது.
முழுமை அடைந்தது. படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில்
இயேசுவைச் சந்தித்த போது, "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்"
(யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைகிறார்.
படிப்படியாக பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள்
படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத்
திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று
நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது அவர்கள் வளர்த்துவந்த
பொறாமையும், வெறுப்பும், ஏற்கனவே அவர்கள் பார்வையை
வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத
இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." (யோவான்
9:16) என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை, யோவான்
கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார். ஒய்வு நாள் என்ற
பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி
நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு
கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர்.
இருளுக்கு பழகிவிட்ட கண்களுக்கு பார்வையற்றவர் கொண்டு வந்த
ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக
மாறவே, அவர்கள், பார்வை பெற்று, இயேசுவின் சாட்சியாக மாறிய
மனிதரை, யூத சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.
உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும்
மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக
நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத்
தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான்
அடிக்கடி கூறுகிறோம்.
'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு
பல்வேறு விடயங்கள் கண்களில் படுவதில்லை. "தலை கால் தெரியாமல்"
ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு
உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு
தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.
ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன
நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு
பார்க்காதே... இப்படி பலவிதமான வாக்கியங்கள் நம் பேச்சு
வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும்
நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய்
கூறியுள்ளார். "கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால்
உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்
போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்." (மத்தேயு
6:22-23)
உடலளவில் பார்வைத்திறன் இருந்தால் மட்டும் போதாது, அகத்திலும்
பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும்
சொல்லித்தருகிறார். அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெறவேண்டும்.
தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும். மனதையும், அறிவையும்
குறுக்கும் முற்சார்பு எண்ணங்களை அகற்றி, பரந்து விரிந்த
பார்வை பெறவேண்டும். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம்.
உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி
பெருக்கவேண்டுமென செபிப்போம்.
இறுதியாக ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... 2013ம் ஆண்டு,
மார்ச் 19ம் நாள், புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை
ஏற்றுக்கொண்டார். மார்ச் 19, இஞ்ஞாயிறன்று தன் தலைமைப் பணியில்
10 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு,
உடல், உள்ள நலனையும், தெளிவான பார்வை, தீர்க்கமான சிந்தனை
ஆகிய கொடைகளையும் இறைவன் வழங்கவேண்டுமென்று செபிப்போம்.
கண் பார்வை இல்லாதவர் யார்?
பாதையின் நடுவே ஒரு பாறாங்கல். இளைஞன் ஒருவன் சைக்கிளில்
வேகமாக வருகிறான். அவன் பார்வையில் அந்தக்கல் படுகிறது.
சைக்கிளைச் சுற்றி வளைத்து ஏதோ வித்தை காட்டுபவனைப் போல்
ஒரு U டர்ன் போட்டுத் திரும்பி விரைகிறான். இன்னொருவர்
நாளிதழைப் படித்துக் கொண்டே வருகிறார். கல்லில் அவரது வலது
கால் இடிக்கிறது. வேதனையில் முகச்சுளிப்புடன் கால் விரலைத்
தேய்த்துக் கொள்கிறார். 'பொறுப்பற்ற மனிதர்கள்' என்று
முணுமுணுத்துக் கொண்டே போய் விடுகிறார். பலர் அந்த இடத்தைக்
கடந்தும் பார்த்தும் பார்க்காதவர்கள் போலச் சென்று
கொண்டிருக்கிறார்கள். டக் டக் என்ற ஒலியுடன் ஒரு கைத்தடி.
தடி கல்லில் படுகிறது. உடனே தடியை கக்கத்தில் வைத்துக்
கொண்டு மெதுவாகக் கல்லைத் தூக்கி எடுத்து ஓரமாக வைக்கிறார்
கண்பார்வையற்ற அந்த மனிதர். பின் தடியால் தட்டிக் கொண்டே
பயணத்தைத் தொடர்கிறார் டக் டக் ஒலியுடன். "யார் பார்வையாளன்?"
என்ற தலைப்புடன் அந்தத் துண்டுப் படம் முடிகிறது.
பார்வையற்றராக மட்டுமல்ல, யார் அக்கல்லில் தட்டி
விழுவார்கள், தடுமாறித் துடிப்பார்கள், பார்த்து
ரசிக்கலாம் என்று சாலையோரத்தில் காத்துக் கிடக்கும்
கொடுமனம் கொண்டவர்கள் கூட உண்டு.
காண முடியாதவர்கள் அல்ல, காண விரும்பாதவர்களே உண்மையான
குருடர்கள். பார்வை இழப்பு என்பது கொடியது. ஆனால்
பார்க்கக் கண்ணிருந்தும் பார்க்காமல் இருப்பது, பார்க்க
மறுப்பது மிகமிகக் கொடியது.
'பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வை
யற்றோர் ஆகவுமே நான் வந்தேன் என்றார் (யோ.9:39) இயேசு. இரு
விழிகளையும் இழந்த ஒரு மனிதர் கிறிஸ்து இயேசுவால் பார்வை
பெறுகிறார்; ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர் களோ
பார்வை இழக்கின்றனர்!
பிறவிக் குருடனுடைய புறக்கண்கள் மட்டுமல்ல, அவனது அகக்
கண்களும் திறக்கப்படுகின்றன. சமாரியப் பெண்ணைப் போல
தனக்குப் பார்வை அளித்தவர் யார் என்பதைப் படிப்படியாக
அறிந்து உணர்ந்து அவரிடம் சரணடைகிறார். முதலில்
கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் அடுத்து
இறைவாக்கினராகவும் முடிவில் ஆண்டவராகவும் ஏற்றுப் பின்
இயேசுவின் சாட்சியாக மாறுகிறார்.
பிறவி முதல் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இறுதிவரை
குருடர்களாகவே இருக்கின்றனர். புறக் கண்களைத் திறந்துவிட்ட
இறைமகனால் அந்தக் குருடர்களின் மனக்கண்களைத் திறக்க
முடியவில்லையே, எப்படி? அங்கேதான் "இறைவனின் பலவீனம்"
தெரிகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனைக்கூட
ஓங்கித் தட்டி எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவதாகப்
பாசாங்கு செய்பவனை, விழித்தெழ விரும்பாதவனை நம்மால்
மட்டுமல்ல, இறைவனாலும் எழுப்ப முடியாது. கண்களற்ற
குருடனுக்கு மாற்றுக் கண்கள் பொருத்தித் தீர்வு காணலாம்.
கண்ணிருந்தும் பார்க்க விரும்பதவனை என்ன செய்வது? "நீங்கள்
பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது.
ஆனால் நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" (யோ.9:41) என்ற
பரிசேயர் பற்றிய இயேசுவின் தெளிந்த பார்வை
சிந்திக்கத்தக்கது.
விசுவாசப் பாதுகாப்பு, விசுவாச மறுமலர்ச்சி என்ற பெயரில்
விசுவாசம் என்ன ஆடா மாடா, பயிரா பச்சையா வளர்ப்பதற்கு?
பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்பட வேண்டியது
என்ற கோணத்தில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கூட
எதிர்ப்பது, புரிந்து கொள்ள மறுப்பது, மரபுகளா அவை
மடையர்களின் சட்டங்கள் என்று திருச்சபையின் அற்புதமான
மரபுகளைப் பழிப்பது, இழித்துரைப்பது - இப்படித்
திருச்சபையில் எத்தனை பரிசேயக் குருடர்கள்!
தன்னைச் சுற்றியுள்ள மக்களின் பசியைத் துன்பத்தைக் காண
விரும்பாது. ஏழை மக்களின் நலத் திட்டங்களில் கூட எதைச்
சுரண்டலாம், பஞ்ச காலத்தில் எதைப் பதுக்கலாம் என்ற
எண்ணத்திலேயே உழலும் பேர் வழிகள்... இப்படிச் சமுதாயக்
குருடர்கள்.
தான், தனது பெயர், தனது பதவி, தனது இனம்.இவைகள் தாம்
சிலர் கண்ணில் எப்போதும் படும். தனக்கு விருப்பமா
பிடிக்குமா என்றுதான் பார்ப்பார்களே தவிர, திருச்சபைக்கு,
சமுதாயத்துக்கு எது நலம் என்று பார்க்க மாட்டார்கள்...
"இவர்கள் கிட்டப் பார்வை யுடையோர்" (2 பேதுரு 19)
கடவுள் மனிதனைப் படைத்த போது அவன் கழுத்தில் இரண்டு
பைகளை பாட்டி விட்டார். ஒன்று முதுகிலும் மற்றது
மார்பிலும் தொங்கின. "ஒரு பையில் உன் குற்றங்களையும்
மற்றதில் பிறர் குற்றங்களையும் பொறுக்கி போட்டு வை
என்றார் கடவுள். மனிதனோ மார்புப் பையில் பிறர்
குற்றங்களையும் முதுகுப் பையில் தன் குற்றங்களையும்
பொறுக்கிப் போட்டுக் கொண்டான் எதற்காக? தன் குற்றங்கள்
ஒருபோதும் தன் கண்ணில் படலாகாது. பிறர் குற்றங்கள்
எப்போதும் தன் கண்ணில் படவேண்டும் என்பதற்காகத்தான்...
இவர்கள் தூரப் பார்வையுடையோர்.
காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள். அவனுக்கு
பார்ப்பதெல்லாம் குறையாக, கேட்பதெல்லாம் தவறாகவே தெரியும்.
எப்போதுமே எதிர்மறைப் பார்வை கொண்ட காமாலைக் கண்ணன்கள்.
பிறவியிலேயே பார்வைத் திறனோ கேள்வித் திறனோ இன்றி
வரலாற்றில் சாதனைத் தடம் பதித்த ஹெலன் கெல்லார்
சொல்வார்:"மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பேராபத்து
பெரும் சோகம், பேரிழப்பு பார்வையற்றவனாகப் பிறப்பது அல்ல,
கண்ணிருந்தும் காணத் தவறுவது".
"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்த
தால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான்
அவர் களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது".
(யோ.3:19) வெளிச்சம் இல்லையென்றால் பார்வையால் கூடப்
பயனில்லை.
ஆதவனைக் கண்டு எல்லா மலர்களுமா மலர்கின்றன? தாமரை மலர்ந்து
சிரிக்கிறது. அல்லி வாடிக் கூம்புகிறது. இயேசு என்னும்
தெய்வீகப் பேரொளி நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
மறையுரைகள்:
அருள்பணி கிங்ஸிலி MMI
"இருளிலிருந்து ஒளிக்கு ஒரு பயணம்"
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இன்று தவக்காலத்தின்
நான்காம் ஞாயிறு. இந்த ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு'
என்று அழைக்கப்படுகிறது. 'உயிர்ப்புப் பெருவிழா
நெருங்கிவிட்டது, மகிழ்ச்சியாயிருங்கள்' என்று திருச்சபை
நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இன்றைய நற்செய்தி, பிறவியிலேயே பார்வையற்ற ஒரு மனிதன்
எப்படிப் பார்வை பெற்றான் என்பதை மட்டும் சொல்லவில்லை;
மாறாக, அவன் எப்படிப் படிப்படியாக இயேசுவை அடையாளம்
கண்டுகொண்டான் என்பதையும், மற்றவர்கள் பார்வை இருந்தும்
எப்படிப் பார்வையற்றவர்களாக இருந்தார்கள் என்பதையும் அழகாக
விளக்குகிறது.
1. துன்பம் யாருடைய பாவம்?
சீடர்கள் இயேசுவிடம், "இவன் பார்வையற்றவனாகப் பிறக்க இவன்
செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று
கேட்டார்கள். இன்றும் நாம் ஒரு துன்பம் வரும்போது "யார்
செய்த பாவமோ?" என்றுதான் கேட்கிறோம்.
இயேசு சொன்ன பதில் ஆச்சரியமானது: "இது பாவம் செய்ததினால்
அல்ல, கடவுளின் செயல்கள் இவன் வழியாக வெளிப்படும் பொருட்டே
இப்படி நடந்தது."
பாடம்: நம் வாழ்வில் வரும் சோதனைகளைச் சாபமாகப்
பார்க்காமல், கடவுளின் மாட்சியை வெளிப்படுத்தும் களமாகப்
பார்க்க இயேசு அழைக்கிறார்.
2. சிலோவாம் குளத்தில் கழுவுதல்
இயேசு தரையில் உமிழ்ந்து, மணலால் சேறு உண்டாக்கி, அவன்
கண்ணில் பூசி "சிலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு"
என்றார். அந்தப் பார்வையற்றவன் கீழ்ப்படிந்து சென்றான்,
பார்வை பெற்றான்.
பாடம்: மீட்பு என்பது ஒரு செயல்முறை. இயேசுவின்
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம் ஆன்மாவின் அழுக்குகளை
(பாவங்களை) நாம் கழுவும்போதுதான் உண்மையான 'பார்வை'
நமக்குக் கிடைக்கிறது. இந்தத் தவக்காலம் நம் ஆன்மக்
கண்களைக் கழுவும் 'சிலோவாம் குளம்'.
3. விசுவாசத்தின் வளர்ச்சி
அந்தப் பார்வையற்ற மனிதன் இயேசுவை எப்படிப் பார்க்கிறான்
என்பதை கவனித்துப் பாருங்கள்:
முதலில்: "இயேசு எனும் ஒரு மனிதர்" (வசனம் 11)
பிறகு: "அவர் ஒரு இறைவாக்கினர்" (வசனம் 17)
இறுதியில்: "ஆண்டவரே, நம்புகிறேன்" என்று கூறி அவரை
வணங்கினான் (வசனம் 38).
சிந்தனை: நம்முடைய விசுவாசம் எப்படி இருக்கிறது? இயேசுவை
வெறும் ஒரு வரலாற்று மனிதராகப் பார்க்கிறோமா? அல்லது நம்
வாழ்வின் ஆண்டவராக ஏற்று வணங்குகிறோமா?
4. பார்வை உள்ளவர்களின் குருட்டுத்தன்மை
பார்வையற்றவனுக்குப் பார்வை கிடைத்தது. ஆனால்,
சட்டங்களையும் வேதத்தையும் கரைத்துக் குடித்த பரிசேயர்கள்
இயேசுவை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்குப் பார்வை
இருந்தது, ஆனால் இதயம் இருட்டாக இருந்தது.
நடைமுறைச் சிந்தனை: நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம்,
ஆனால் அடுத்திருப்பவரின் துன்பத்தைப் பார்க்க மறுத்தால்
நாமும் பார்வையற்றவர்களே. பிறரின் குறைகளை மட்டும்
பார்க்கும் நாம், நம்மிடம் இருக்கும் பாவங்களைப் பார்க்கத்
தவறினால் நாமும் குருடர்களே.
பங்கு மக்களுக்கான நடைமுறைச் செயல்பாடுகள் (Practical
Points):
இதயத்தைப் பார்த்தல்: முதல் வாசகத்தில் சொன்னது போல,
"மனிதர் முகத்தைப் பார்க்கிறார், இறைவனோ இதயத்தைப்
பார்க்கிறார்." இந்த வாரம் நாம் யாரையும் வெளித்தோற்றத்தை
வைத்து எடை போடாமல், அன்போடு நடத்துவோம்.
ஒளியின் மக்களாக: நாம் ஒரு காலத்தில் இருளாக இருந்தோம்,
இப்போது ஒளியாக இருக்கிறோம் (இரண்டாம் வாசகம்). பொய்,
பொறாமை போன்ற இருளின் செயல்களை விட்டுவிட்டு, உண்மை எனும்
ஒளியில் நடப்போம்.
சாட்சி பகிர்தல்: அந்தப் பார்வையற்றவன், "எனக்கு ஒன்று
தெரியும், நான் பார்வையற்றவனாய் இருந்தேன், இப்போது
பார்க்கிறேன்" என்று துணிவுடன் சொன்னான். நாமும் நம்
வாழ்வில் கடவுள் செய்த நன்மைகளை மற்றவர்களுக்குச்
சான்றாகச் சொல்லுவோம்.
முடிவுரை:
அன்பு மக்களே! "உலகின் ஒளி நானே" என்று சொன்ன இயேசு, இன்று
நம்மிடம் வருகிறார். நம்முடைய அகக்கண்களை மறைத்திருக்கும்
பாவம் எனும் திரையை விலக்கச் சொல்லுவோம்.
"ஆண்டவரே, நானும் பார்க்க வேண்டும்" என்று அந்தப்
பார்வையற்றவனோடு சேர்ந்து நாமும் மன்றாடுவோம். உயிர்த்த
ஆண்டவரின் ஒளியைக் காண நம்மைத் தகுதிப்படுத்துவோம். ஆமென்.
மறையுரை மொட்டுக்கள் நன்றி வழிகாட்டும்
தோழன்
அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக்
குறைய வேண்டும்" என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை
மையப்படுத்தி, "அவர் வளர்க" என்ற கொள்கை முழுக்கத்தோடு
தமிழக மறைக்கல்விப் பணிக்குழுவின் பாடநூல் கழகம்
செயல்படுவது நாம் அறிந்ததே. தமிழகம் முழுவதும்
பயன்படுத்தப்படும் பள்ளி, ஞாயிறு மறைக்கல்விப்
பாடநூல்களில் இவ்வார்த்தைகளை நாம் பார்க்கலாம். கொஞ்சம்
ஆழமாக யோசித்தால், அவர் வளர்வது மட்டுமல்ல, அவரில் நாம்
வளர்வதும் முக்கியம். இறைவனை, இறையாட்சியை வளரச் செய்வது
எவ்வளவு அவசியமானதோ, அதே அளவு அவசியமானது நாம் இறைவனில்
வளர்வதும். தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு படிப்படியாக
இயேசுவில் வளர்ந்திட நம்மை அழைக்கின்றது.
பார்வையற்ற நிலை மிகவும் கொடுமையானது. 'நிழலின் அருமை
வெயிலில்தான் தெரியும்' என்று சொல்வதைப் போலப்
பார்வையற்றவர்களுக்குத்தான் பார்வையின் அருமை தெரியும்.
நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டிலேயே பார்வையற்ற
மனிதர்கள் படும் துன்பங்கள் கொடுமை என்றால் 2000
ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவின் காலத்தில்
பார்வையற்றவர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்?
இத்தகைய இழிநிலையிலிருந்து ஒருவரை விடுவிக்கும் இறைமகனின்
இரக்கத்தை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது.
பார்வையற்றவராகத் தன் பயணத்தைத் தொடங்கும் இம்மனிதரின்
வாழ்வில் இயேசு மூன்று வகையான வளர்ச்சிகளை உருவாக்குவதை
நற்செய்தி விளக்குகின்றது.
பார்வையற்ற பாவி: பார்வைக்கும் பாவத்துக்கும் தொடர்பு
உண்டு என்பது யூதர்களின் நம்பிக்கை. ஒருவர் பிறவியிலேயே
பார்வையற்றவராய் இருக்கின்றார் என்றால் அவரோ, அவரது
பெற்றோரோ பாவிகளாக இருந்திருக்க வேண்டும் என்றே அவர்கள்
நம்பினாார்கள்."இவன் செய்தபாவமா? இவன் பெற்றோர்
செய்தபாவமா?" என்ற சீடர்களது கேள்வியும், "பிறப்பிலிருந்தே
பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீ" என்ற பரிசேயர்களின்
முத்திரையும் இதற்குச் சான்றுகள். இந்த மனிதனின் முதல்
அடையாளம் இதுதான்.
அனுப்பப்படும் சீடர்: பார்வையற்ற பாவியெனச் சமூகத்தால்
அடையாளப்படுத்தப் பட்ட மனிதருக்கு அனுப்பப்படும் சீடர்
என்ற புதிய அடையாளத்தை இயேசு தருகின்றார். அனுப்பப்பட்டவர்
என்ற பொருளுடைய "சீலோவாம்" என்ற குளத்திற்குச் செல்லுமாறு
இயேசு அவரிடம் சொல்வது, அவரது அடையாளத்தை மாற்றுவதற்கான
செயல்பாடு. பார்வையற்ற பாவி, அனுப்பப்படும் சீடராக
வளர்கின்றார்.
சான்று பகரும் திருத்தூதர்: "அவர் ஓர் இறைவாக்கினர்,
இறைப்பற்று உடையவர் களுக்கே கடவுள் செவிசாய்க்கிறார்"
என்றெல்லாம் அந்த அப்பாவி மனிதர் பரிசேய அதிகார
வர்க்கத்தின் முன்னால் பேசுவது சான்று பகர்தலின்
வெளிப்பாடு. "ஆளுநர் முன்னும் அதிகாரிகள் முன்னும் என்
சாட்சிகளாய் இருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு
வாழ்வு வடிவம் தருகின்றார் அம்மனிதர்.
மொத்தத்தில், ஒரு பார்வையற்றவராக, சமூகப் பார்வையில்
பாவியாக இருந்த மனிதர் அனுப்பப்படும் சீடராக, சான்றுபகரும்
திருத்தூதராக இயேசுவில் வளர்வதையே குறிப்பிடுகிறது. இன்றைய
நற்செய்தி. இன்று நாமும் அவரில் வளர வேண்டும். நாம்
பங்கேற்கின்ற ஒவ்வொரு வழிபாடும், நாம் பெறுகின்ற ஒவ்வோர்
அருளடையாளமும் இத்தகைய வளர்ச்சியை நாம் அடைவதற்கு உதவ
வேண்டும். அவரில் வளர நாம் எடுக்கும் முயற்சிகள் எவை ?
அவரில் வளராதவரை நாம் கண்ணிருந்தும் பார்வையற்ற மனிதர்கள்
தான். பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் பரிசேயர்கள்தான்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
தவக்காலம் நான்காவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (1சாமு. 16:1,6,7,10-13)
சவுல் இறைவனுடைய வார்த்தையை மீறியதால் இறைவன் அவரைப்
புறக்கணித்து விட்டு, தாவீதைத் தம் மக்களுக்கு அரசராகத்
தேர்ந்தெடுக்கிறார். தாவீதை ஆண்டவர் தேர்ந்- தெடுத்து,
இஸ்ராயேல் மக்களுக்கு அவரை அரசராக அபிஷேகம் செய்தார்.
தாவீது யூத குலத்தின் அரசராகவும், இஸ்ராயேல் குலத் தாரின்
அரசராகவும் அபிஷேகம் செய்யப்பட்டார் என்று கூறுவதில்
இருந்த அவர் இஸ்ராயேல் இனத்தார் அனைவருக்கும் அரசர் என்பது
தெளிவாகப் புலப்படுகிறது. ஆண்டவரின் அளவு கடந்த
அதிகாரமும், சுதந்திரமும் இவ்வாசகத்தில் காணப்படுகின்றது.
இறை வனுடைய எண்ணங்கள் நம் எண்ணங்களன்று, அவரது வழிகள்
நம்மடைய வழிகளன்று. "அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு
உகந்தவர்கள், அவரது நன்மைத்தனத்தை நம்புவோரே அவருக்கு
உகந்தவர்களாவர்". திருமுழுக்கோ, துறவறமோ, குருத்துவமோ தமது
தகுதியைப் பொறுத்து அமைவதில்லை, மாறாக இவை முழுக்க முழுக்க
இறைவனின் கொடை. "தாம் விரும்பியவர் களையே இறைவன்
அழைக்கின்றார்" (மாற்கு 3:13) எனவேதான் இயேசு "நீங்கள்
என்னைத்தேர்ந்து கொள்ள வில்லை, மாறாக நான்தான் உங்களைத்
தேர்ந்து கொண்டேன்" (யோவான் 15:16) என்பார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 5:8-14)
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளே புதுவாழ்வு வாழ
அழைக்கப்பட்டவர்கள். இப்புது வாழ்வு என்பது ஒளிமயமான
வாழ்வு, ஆண்டவருக்கு உகந்த வாழ்வு (5:10). பாவத்திற்கு
அடிமை களாயிருந்தபோது நாம் இருளின் மக்களாக இருந்தோம்.
திருமுழுக் கினாலும், பாவ மன்னிப்பு அருட்சாதனத்தாலும்
இறைவன் நம்மை ஒளியின் மக்களாக மாற்றினார். அவர் காட்டிய
வழியில் நடத்தல் என்பது ஒளிக்குறிய செயல்களைச்
செய்வதாகும். ஒளியின் கனி களான நன்மை, நீதி, உண்மை
முதலியவற்றை நாம் கடைபிடிக்க முயல வேண்டும். அப்போதுதான்
ஒளியான கடவுளைப் போன்று வாழ முடியும். "கடவுளோ உங்கள்மேல்
அன்பு கூர்ந்தார், நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்"
(5:12). எனவே ஒளியின் மக்களாக இருப்பதும் அன்பு வாழ்வு
வாழ்வதும் ஒன்றே. ஆகவே ஒளியின் கனிகளைக் கடைபிடித்து
ஆண்டவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ்வோம்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 9:1-41)
தூய யோவான் "ஒளி", "இருள்" என்ற இரண்டு எதிர் மறையான
உருவகங்களைப் பயன்படுத்தி உண்மைக்கும் பொய் மைக்கும்,
நீதிக்கும் அநீதிக்கும், நன்மைக்கும் தீமைக்கும், வெற்றிக்
கும் தோல்விக்கும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே
நடக்கும் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, உலக முடிவில்
ஒளியாம் இறைவன் இயேசு இருளை அழித்து வெற்றியின் வீரராய்
தோன்றுவார் என்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் பிறவி
குருடனுக்கு பார்வை அளிப்பதை கீழ்காணும் பரிமாணங்களில்
காணலாம்.
1. இயேசு பிறவி குருடனை சந்திக்கிறார்.
2. பிறவி குருடன் தனது இயலாமையை உணர்ந்து இயேசுவின் மீது
நம்பிக்கை கொள்கிறான்.
3. குருடன் பார்வை பெற்றது இயேசுவில் விசுவாச பார்வை
பெறவே.
4. குருடன் இயேசுவுக்காய் துன்பப்படுவதன் வழியாக இயேசுவின்
மீதுள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறான்.
மறையுரை
"நம்புகிறவர்களை சந்தேகப்பட வேண்டாம்,
சந்தேகிக்கின்றவர்களை நம்ப வேண்டாம்" என்று கிரேக்கத்
தத்துவ ஞானி கோலோன் கூறினார். ஒரு நாள் கையில் ஒரு அழுகிய
ஆப்பிள் பழத்தோடு ஏதென்ஸ் நகர மைதானத்தில் நின்றார்.
அவரைச் சுற்றி மக்கள் கூடி நின்றபோது சத்தமாய் கேட்டார்.
"இந்த அழுகிப் போன ஆப்பிளைக் கடித்தால் ஏதாவது பயன்
உண்டா?" என்றாராம். கூடி இருந்தவர்கள் "பயனி- ல்லை...
குப்பையில் தூக்கிப்போட வேண்டியது தான்!" என்றார்கள்.
இல்லை, இல்லை அழுகிப் போன இந்தப் பழம் பயனற்றது என்று யார்
சொன்னது? இதை ஏன் குப்பையில் போட வேண்டும்? என்றார் அவர்.
இந்த அழுகிப்போன பழத்திற்குள்தான் செறிவான விதைகள்
இருக்கின்றன. அவை வளர்ந்து மரமாகாதா, அதேபோல் தான் ஒரு
சமூகம் அழுகிப்போய் நாற்றமடிக்கலாம். ஆனால் அதே சமு-
தாயத்திலிருந்து நல்ல விதைகளாகக் குழந்தைகள், இளம்
சமூகத்தினர் வளர வாய்ப்புண்டு, சமூகத்தை அவர்கள் மாற்றிய-
மைக்கவும் வாய்ப்புண்டு! என்று முடித்தாராம். இன்றைய
நற்செய்தி வாசகத்திலே எந்தவொரு அழுகிய ஆப்பிள் பழத்தை
ஓரங்கட்டி பயனற்றது என்று வைத்தனரோ அதேபோல் தான் அன்றைய
சூழலில் பார்வையற்றவர்களை ஓரங்கட்டி வைத்தனர். ஆனால்
இறைமகன் இயேசு கிறிஸ்து அவர்மீது பரிவு கொண்டு அவருடைய
விசுவாசத்தினால் அவரைக் குணப்படுத்துகிறார்.
ஒரு மனிதனுடைய உடல் உறுப்புகளுள் கண்கள் மிக முக்கியமானவை.
ஏனென்றால் கண்களை இழந்துவிட்டோம் என்றால் நம்முடைய வாழ்வு
இருளாக மாறிவிடுகிறது. எனவே இந்தக் கண்கள் நமக்கு ஒளிமயமான
பார்வையைத் தருகிறது. அந்தப்பார்வை நமக்கு அறிவைத்
தருகிறது. கண்கள் நன்றாக இருந்தால் மட்டும் போதாது,
படிக்காத மனிதருக்குக் கல்வியில் பார்வை இல்லை. பிறர் சேவை
இல்லாத மனிதருக்கு அரசியலில் பார்வை இல்லை. இரக்க குணம்
இல்லாதவருக்குச் சமுதாயத்தில் பார்வை இல்லை. பக்தி இல்லாத
வருக்கு ஆன்மீகத்தில் பார்வை இல்லை. கண்கள் மட்டும்
இருந்தால் போதாது, மாறாகக் கண்களோடு கூடிய பார்வை
வேண்டும். அதிலும் குறிப்பாக விசுவாசப் பார்வையும்,
அறிவுப் பார்வையும் அதிகமாக இருக்க வேண்டும். உடல்
அமைப்போடு ஆழ்நிலைத் தெளிவை எந்த மனிதர் பெறுகிறாரோ அவரே
உண்மையான பார்வை பெற்றவர் ஆவார். ஆகவே தான் தி.பா.
146:8-இல் "ஆண்டவர் பார்வையற்றோ ரின் கண்களைத்
திறக்கின்றார்" என்று வாசிக்கின்றோம்.
நற்செய்தியிலே இயேசு பிறவிக்குருடனை பார்வை பெறச்
செய்கின்றார். இயேசுவின் இந்த அருள் அடையாளம் அவரை
உலகிற்கு வந்த ஒளியாகக் காட்டுகின்றது. கடவுளுடைய பார்வை
அந்தப் பிறவிக் குருடரின் மேல் விழுந்தது. எவர் செய்த
பாவமும் அல்ல, மாறாகக் கடவுளின் செயல்பாடுகளும்,
திட்டங்களும் இவர் வழியாகத் தெரிய வருகின்றது. இவருடைய
பேச்சில் ஒருபுறம் அப்பாவிக் குணம் தென்பட்டாலும் மறுபுறம்
இவன் கேட்டதோ ஒரு புதுபார்வை. தான் இந்த உலகத்தைப் பார்க்க
வேண்டும் எனக் கேட்கிறான். ஆனால் இயேசுவோ இவனுக்குப்
புறப்பார்வை அளிப்பதன் வழியாக அவனுக்குள் விசுவாசப்
பார்வையையும் அதிக ரிக்கின்றார். இயேசு, "மானிட மகன்மீது
நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டவுடன், "ஆண்டவரே!
நம்பிக்கைக் கொள்கிறேன்" என்று கூறி, இயேசுவின் காலில்
விழுந்ததாக வாசிக்கக் கேட்டோம். எனவே பார்வை பெறுவதற்கு
முன் உடளலவில் மட்டும்தான் குருட ராயிருந்தார். ஆனால் அந்த
மக்களும், பரிசேயர்களும், யூதர்களும் பார்வை
பெற்றிருந்தாலும் குருடராகத்தான் இருந்தார்கள். எனவே தான்
"பார்வையற்றோர் பார்வை பெறவும், சிறைப்பட்டோர் விடுதலை
யடையவுமே வந்தேன்" என்பது உண்மையாகிறது.
மனிதனின் பார்வையைப் பொறுத்தே, அவனுடைய எண்ணங்- களும்,
செயல்களும், முடிவெடுக்கும் தன்மையும் அமைந்துள்ளன.
மனிதனின் பார்வையும், தீர்மானமும் ஒரு விதம், ஆனால்
இறைவனின் பார்வையும், தீர்மானமும் முற்றிலும்
வேறுபட்டதாகவே காணப்படும். மனிதன் எப்பொழுதும் வெளிப்புறத்
தோற்றத்தையே பார்க்கிறான், ஆனால் இறைவன் இதயத்தைப்
பார்க்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் தாவீதை
அழைக்கின்றார். அழைத்த ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை வழிநடத்த
வேண்டும் என்று முழு நம்பிக்கையோடு தாவீதின் கையில்
ஒப்படைத்தார். உன் பார்வைத் தெளிவாக இல்லையென்றால், நீ
ஒளிதரும் கண்களைப் பெற்றிருக்கும் குருடனாகவே
கருதப்படுவாய். பிறவிக்குருடன் பார்வை பெற்ற பிறகு இயேசு
யார்? என்ற உண்மையைக் கண்டு கொண்- டான். ஆனால் பார்வையோடு
இருந்த பரிசேயர்கள் அதனைக் கண்டுணராமல் சபிக்கவும்,
சட்டத்தை மீறுபவர் எனவும் இயேசுவை சாடி துன்புறுத்தவும்
முயன்றனர்.
தூய பவுல் கூறுவது போல யூதர்களைப் போல, ஒளிதரும் மெசியாவை
ஏற்றுக்கொள்ள, தயக்கம் காட்டக் கூடாது. அவர்- களைப் போல
வெளித்தோற்றத்ததை மட்டுமே பார்க்காமல், இதயத்- தைப்
பார்க்க வேண்டும். ஆண்டவருக்கு ஏற்றப் பிள்ளைகளாக வாழ
வேண்டும். இன்று நம்முடைய பார்வை எவ்வாறு உள்ளது? அன்றைய
யூதர்களைப் போலத்தான் விசுவாசப்பார்வை இழந்து இருட்டில்
இருக்கின்றோம். ஏழை, பணக்காரன் என்ற நிலை, தாழ்ந்- தவன்,
உயர்ந்தவன் என்ற நிலை, அடுத்தவரின் துன்பங்களை
கண்டுகொள்ளாமல், அடுத்தவர்களைக் குறைக் கூறிக்கொண்டே
வாழுகின்ற நிலை, இன்றைய நிலைகள். எனவே இன்று, இந்த
தவக்காலத்தில் இயேசுவைப் பார்த்துக் கேட்க வேண்டும்
'இறைவா, அந்தக் குருடனுக்கு எவ்வாறு விசுவாசப் பார்வையை
அளித்தீரோ, அதேபோல எங்களுக்கு அகப் பார்வையை தாரும்,
பாதையை காட்டும்' என்று மன்றாடுவோம். பார்வையிருந்தும்
குருடர்களாக வாழ்ந்த தருணங்களை எண்ணி மனம் வருந்துவோம்,
மன்னிப்பு கேட்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் என்றால் கிறிஸ்துவின் பார்வையை
பெற்றுள்ளேன் என்பதாகும். அப்படி என்றால்
கடவுள் அவனது தந்தை. கடவுள் அவனை எல்லா நிலையிலும் அன்பு
செய்கிறார்.
அவன் கடவுளின் பிள்ளை. கடவுளின் விருப்பத்தை
நிறைவேற்றுவதில் எப்போதும் அக்கறையாய் உள்ளான்.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் அவனது சகோதரர்கள்,
சகோதரிகள். அவர்களை அவன் அன்பு செய்வதோடு அவர்களை அவர்
கடவுளிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பணம் மற்றும் செல்வம் எல்லாம் கடவுள் அவனுக்குக் கொடுத்த
கொடைகள், அவைகளை அவன் கடவுளின் சித்தத்திற்கேற்ப நன்றி
உள்ளத்தோடு பயன்படுத்த வேண்டும்.
எவன் ஒருவன் இருளை சார்ந்தவனோ அவன் செயல்பாடுகள் இவ்வாறாக
அமையும்:
குருடனின் பெற்றோர்களைப் போல் உண்மையை மறைப்பார்கள்.
பரிசேயர்கள் இயேசு செய்த புதுமையை ஏற்க மனமில்லாது, அவர்
ஓய்வு நாளில் செய்ததால் அது தீமை என்றார்கள்.
ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, இருளை தங்கள்
உடமையாகக் கொள்வார்கள்.
தூய்மையாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பாவ பாதையில் பயணம்
செய்வார்கள்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
தவக்காலம் நான்காம் ஞாயிறு
இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் 'ஒளி
பெறுவது' ஒளியாய் இருப்பதுபற்றி வாசிக்கக் கேட்டோம்.
நற்செய்தியில், பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் ஒளி
(பார்வை) பெற்றதையும், அதைவிட இயேசு யார் எனும் அக ஒளி
பெற்றதையும் காண்கிறோம். இந்த நற்செய்தி தரும் கிறிஸ்தியல்
கருத்தை யோவான் நற்செய்தியாளருக்கேயுரிய இலக்கிய நயத்தோடு
புரிந்துகொள்ள முயல்வோம். இதற்குத் தொடக்கமாக இப்பகுதி
பற்றிய சில பின்னணித் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
பின்னணி
காட்சி அமைப்பில் கடைபிடிக்கப்படும் ஒரு பழமையான விதி
உண்டு. அதன்படி ஒரே நேரத்தில் இரண்டு கதாபாத்திரங்கள்
மட்டும் ஒரு காட்சியில் தோற்றுவர். இந்த விதி இந்த
விவரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி யோவா
9:1-10:21 எனும் நீண்ட பகுதியைப் பின்வரும் காட்சிகளாகப்
பிரிக்கலாம்.
இந்தக் காட்சி அமைப்பைப் பயன்படுத்தி நற்செய்தியாளர்
ஒருபுறம் எப்படிப் பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெறு
கின்றார், அத்தோடு இறைமகன் மீது நம்பிக்கைக் கொள்கிறார்
என்றும், மறுபுறம், யூதத் தலைவர்கள் நம்பிக்கையிழந்து
குருட்டுத் தன்மைக்குள் செல்கின்றனர் என்றும்
விவரிக்கின்றார். இந்தக் கருத்தை இவண் விளக்க முயல்வோம்.
குறிப்பாகக் கிறிஸ்தியல் கருத்துக்களை விளக்கப்
பார்ப்போம்.
1. உலகின் ஒளி
மானிடருக்கு ஏற்படும் தீங்குக்கு இறைவன் பொறுப்பாக
முடியாது எனும் விவிலியப் பின்னணியில் (காண். விப 20:5;
எண் 14:18; இச 5:9; தோபி 3:3-4) சீடர்கள் பார்வையற்றவர்
அங்ஙனம் பிறக்க யார் காரணம் எனும் கேள்வியை
எழுப்புகின்றனர். இயேசு அதற்குப் பதில் கூறும் முகத்தான்
'இவர் வழியாகக் கடவுளின் செயல் வெளிப்படும்' எனக்
கூறுகின்றார் (வச. 3). அதையும் இந்த நிகழ்ச்சிப் பகுதி
விவரிக்கின்றது. அதோடு இயேசு "நானே உலகின் ஒளி" (வச. 5)
என்றும் அறிவிக்கின்றார். அந்த ஒளியை நோக்கிப்
பார்வையற்றவர் எவ்வாறு வருகின்றார் என்றும், இந்த
ஒளியைவிட்டுப் பரிசேயர் எப்படி விலகிச் செல்கின்றார்
என்றும் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிப் பகுதிகள்
விவரிக்கின்றன.
2. அனுப்பப்பட்டவர்
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் 'சிலோவாம்' என்பதன்
பொருள் 'அனுப்பப்பட்டவர்' என விளக்கம் தருவதன் மூலம் இயேசு
அனுப்பப்பட்டவர் என்பதை மறைமுகமாகச் கூட்டிக்
காட்டுகின்றார் (யோவா 9:7; காண். யோவா 3:17, 34; 5:36).
3. இயேசு எனப்படும் மனிதர்
பார்வையற்றவர் பார்வை பெற்றதும் அவரைக் குறித்து அக்கம்
பக்கத்தவர் இருவேறு கருத்துக் கொள்கின்றார். அதன் விளடே
அது எப்படி நிகழ்ந்தது என்பதற்கு "இயேசு எனப்படும் மனிதர்
சேறு உண்டாக்கி, பூசி, கழுவச் சொன்னார். கழுவினேன் பார்வை
பெற்றேன்" (வச. 11) என்பது பதிலாய் கிடைத்தது. அவர் எங்கே
என்பதற்கு 'தெரியாது' (வச. 12) என்பதே பதிலாய் அமைந்தது.
எனவே அவர் பார்வை பெற்றாலும் இன்னும் முழுவதுமாய் அக
ஒளிபெறவில்லை; ஒளியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றார்.
4. கடவுளிடமிருந்து வந்தவர் (வச.16
அடுத்த காட்சியில் பார்வை பெற்றவரும் பரிசேயரும்
தோன்றுகின்றனர். அங்கே பரிசேயர் இயேசுவின் புதுமையைக்
கண்டு அவரைப் பாராட்டுவதற்கு பதில் அவர்மீது ஓய்வு நாள்
சட்டத்தைக் கடைபிடிக்கவில்லை எனும் குற்றத்தைக்
கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருளை நோக்கிப் போய்க்
கொண்டிருக்கின்றனர். இவற்றினூடே இயேசு கடவுளிடமிருந்து
வந்தவரா இல்லையா எனும் விவாதமும் தொடர்கிறது (வச. 16).
மறுபுறம் அருளடையாளம் செய்யும் இவர் பாவியாகவும் இருக்க
முடியாது என (வச. 16) ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
5.அவர் ஓர் இறைவாக்கினர் (வச.17)
பார்வையற்றவரிடம் "உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக்
குறித்து நீ என்ன சொல்கிறாய்?" (வச. 17) எனக் கேட்ட போது
"அவர் ஓர் இறைவாக்கினர்" (வச. 17) என அறிக்கை
யிடுகின்றார்.
பார்வையற்றவர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளொளி பெற்று இயேசுவை
நோக்கி வர (வச. 7, 11, 17) பரிசேயர் இயேசுவை நம்பாமல்
அவருக்கெதிராகச் சாட்சியங்களைத் தயாரிக்க பார்வை
பெற்றவரின் பெற்றோரை அழைத்து விசாரிக்கின்றனர். இந்த இயேசு
பற்றிய விவாதத்தில் பங்கெடுக்க விரும்பாமல், பெற்றோர்
குணம் பெற்றவரிடமே கேட்டுக்கொள்ளும்படி
விட்டுவிடுகின்றனர். எனவே, மீண்டும் அவரை (பார்வை
பெற்றவரை) அழைத்து விசாரிக்கும்போது அவர் இயேசுவை
கடவுளிடமிருந்து வந்தவர்' (வச. 33) என
அறிக்கையிடுகின்றார்.
7. மானிட மகன் (வச. 35, 37), ஆண்டவர் வச. (38)
இந்த நிகழ்வின் உச்சக் கட்டமாய் இயேசு அவரைப் பார்த்து
"மானிட மகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" (வச.35) எனத்
தம்மை வெளிப்படுத்துகின்றார். அவர் அவரைப் பற்றி அதிகம்
கேட்க (வச. 36) இயேசுவும் தன்னைப் பற்றிக்கூற (வச. 37),
பார்வை பெற்றவர் "ஆண்டவரே நம்பிக்கை கொள்கிறேன்" என்று
கூறி அவரை வணங்குகின்றார் (வச. 38). இவ்வாறு இயேசு எனும்
ஒளிக்குள் வருகின்றார்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
தவக்காலம் நான்காம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : 1 சாமு 16 : 1. 6-7, 10-13
தாவீதை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, இஸ்ரயேல் மக்களுக்கு அவரை
அரசராக அருள்பொழிவு செய்தது இன்றைய வாசகமாயமைகிறது. தாவீது
யூதா குலத்தின் அரசராகவும் (2 சாமு 2 : 4), இஸ்ரயேல்
குலத்தாரின் அரசராகவும் (2 சாமு 5 : 3) அருள்பொழிவு
செய்யப்பட்டார் என்று கூறுவதிலிருந்து அவர் இஸ்ரயேல்
இனத்தார் அனைவருக்கும் அரசர் ஆனார் என்பது புலப்படுகிறது.
ஆண்டவரின் அளவு கடந்த அதிகாரமும் சுதந்திரமும் இவ்வாசகம்
வழி வெளிப்படுகின்றது.
தேர்ந்தெடுப்பவர் ஆண்டவரே
திருமுழுக்கோ துறவறமோ, குருத்துவமோ நமது தகுதியைப்
பொருத்து - படிப்பு, பணம் பதவியைப் பொருத்து நாம்
பெறுவதன்று, இவை முழுக்க முழுக்க இறைவனின் கொடை. "தாம்
விரும்பியவர்களை இறைவன் அழைக்கிறார்" (மாற் 3:13).
எனவேதான் இயேசுவே, "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை;
நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" (யோவா 15:16)
என்பார். சவுல் இறைவனுடைய வாக்கை மீறியதால் இறைவன் அவரைப்
புறக்கணித்துவிட்டு, தாவீதைத் தம் மக்களுக்கு அரசராகத்
தேர்ந்தெடுக்கிறார் (1 சாமு 15: 26). ஆம், இறைவனுடைய
எண்ணங்கள் நம் எண்ணங்களன்று; அவரது வழிகள் நம்முடைய
வழிகளன்று (எசா 55:8-9). "தமக்கு அஞ்சி நடந்து தம்
பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர்
மகிழ்ச்சிகொள்கின்றார்" (திபா 147:11).
இறைவன் நம்மை ஒரு குறிப்பிட்ட நிலையிலே அவருக்குப் பணி
புரிய அழைத்தற்காக நன்றி கூறுவோம். அதே வேளையிலே
அந்நிலையிலே நிலைத்திருந்து அவருக்கு என்றும் ஊழியம் புரிய
அவரிடமே அருள் வளம் வேண்டுவோம்.
அவர் தேர்ந்தெடுப்பது சிறியோரையே
பெரியோரை, வலியோரை உதவிக்குத் தேர்ந்துகொள்வது நமது மரபு.
இது நம்முடைய வலிமையின்மையையே காட்டுகிறது. இறைவனோ அனைத்து
வல்லமையும் மிக்கவர். எனவே அவர் தேர்ந்து எடுப்பது அவரது
வல்லமையையும், பலத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
வலிமையற்றோரையே என்பது குறிப்பிடத் தக்கது. "கடவுள்
ஞானிகளை வெட்கப்படுத்த, மடமையென உலகம் கருதுபவற்றைத்
தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த
வலுவற்றவையென உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்..." (1
கொரி 1: 27 - 28). இவ் அடிப்படையிலேயே தாவீதின் தேர்தல்
நடைபெறுகிறது. அவர் தந்தை ஈசாயி ஒன்று நினைக்கிறார்;
இறைவனோ வேறொன்று நினைக்கிறார். முதியவர்கள், பலமிக்கவர்கள்
என்ற முறையிலே ஈசாயி தன் ஏழு மக்களையும் சாமுவேலிடம்
அனுப்புகிறார். சாமுவேலோ "மனிதன் பார்க்கிறது ஒரு விதம்,
நாம் தீர்ப்பிடுவது வேறு விதம்" என்று கூறி அவ் அனைவரையும்
தள்ளிவிடுகிறார் (1 சாமு 16 610). சிறுவன் ஆடு மேய்ப்பவன்,
எனவே தகுதியற்றவன் என்று ஈசாயி தன் கடைசி மகன் தாவீது
பற்றிக் கணிக்கிறார். இறைவனோ, "தேர்ந்துகொள்ளப் பட்டவன்
இவனே! எழுந்து இவனை அருள்பொழிவு செய்" (16 : 11 -12) என்று
சாமுவேலுக்குக் கட்டளையிடுகிறார். என்னே இறைவனின்
திருவிளையாடல்?
ஆம், நாமும் இறைவனுக்கு உகந்தவர்களாக, இறைவனின் நண்பர்களாக
வாழ வேண்டுமாயின் தற்பெருமையை அகற்றி, "நான்", "நான்தான்
எல்லாம்" என்னும் அகந்தையைத் தூர விலக்கிக் குழந்தையுள்ளம்
கொண்டவர்களாக வாழ்வோமா?"குழந்தைகளை என்னிடம்
வரவிடுங்கள்... ஏனெனில் கடவுளின் அரசு இத்தகையோரதே" (மாற்
10: 14). "நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்"
(திருவா. குழைத்த பத்து) என்று நம் இறைவனை ஏத்தி நன்றி
கூறுவோம்.
மனிதர் வெளித்தோற்றத்தைப் பார்க்கின்றனர்: இறைவனோ
இதயத்தைப் பார்க்கிறார்.
இரண்டாம் வாசகம் : எபே 5:8-14
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளே புதுவாழ்வு வாழ அழைக்கப்
பட்டவர்கள் (எபே 5: 11 -33). இப்புது வாழ்வு என்பது ஒளி
வாழ்வு. ஆண்டவருக்கு உகந்த வாழ்வு (5 10) என்பதை இன்றைய
வாசகம் சுட்டுகிறது.
கிறிஸ்தவராகிய நாம் ஒளியாயிருக்கிறோம்
பாவத்திற்கு அடிமைகளாயிருந்தபோது நாம் இருளின் மக்களாக
இருந்தோம். திருமுழுக்கினாலும் பாவ மன்னிப்பு அருட்
சாதனத்தாலும் இறைவன் நம்மை ஒளியின் மக்களாக மாற்றி
உள்ளார். "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில்
நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார்" (யோவா 8: 12) என்றார் இயேசு. "உங்களை
இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்தார் இறைவன்"
என்பார் பேதுரு (1பேது 2 : 9). "இறை மக்களுக்கான ஒளிமயமான
உரிமைப் பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ள
வர்களாக்கினார்" என்பார் பவுலடியார் (கொலோ 1: 12).
இதற்குப் பொருள் "முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய்
இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக
இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய்
இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்"
என்பதாகும் (1 பேது 2: 10). ஆம், கிறிஸ்துவின் பிள்ளைகளாக,
கிறிஸ்துவின் ஒளியில் பங்கு பெறும் நாம் "உலகிற்கு ஒளி"
(மத் 5:14; எபே 6:8). ஒளி வாழ்வுக்கு நம்மை அழைத்துள்ள
இறைவனுக்கு நன்றி கூறக் கற்றுக்கொள்வோமா?
கிறிஸ்தவராகிய நாம் ஒளியாய் நடக்க வேண்டும்
ஒளியாக, ஒளியின் மக்களாக நடத்தல் என்பது ஒளிக்குரிய
செயல்களைச் செய்வதாகும்; ஒளியின் கனிகளை நன்மை, நீதி,
உண்மை முதலியவற்றைக் கொண்டிருப்பதாகும் (5 : 9). அதாவது
ஒளியான கடவுளைப் போன்று ஒழுக முயல்வதாகும் (51). "கடவுளோ
உங்கள் மேல் அன்பு கூர்ந்தார். நீங்களும் அன்பு கொண்டு
ஒழுகுங்கள்" (5:2). எனவே ஒளியின் மக்களாக இருப்பதும் அன்பு
வாழ்வு வாழ்வதும் ஒன்றே. "அன்பினில் பிறந்த இறைக் குலம்
நாமே."
இவ்வன்பு வாழ்வைப் பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் காட்ட
வேண்டும். இல்லையென்று வந்தோருக்கு இரங்குதல், அண்டி
வந்தோருக்கு அடைக்கலம் அளித்தல், துன்புற்று
வருந்துவோருக்குத் துணையாயிருத்தல், உதவி தேடி வந்தோருக்கு
உறுதுணையளித்தல், இவையன்னவற்றை நினைவுச் சொல் செயல்கள் வழி
பிறரிடம் காட்டுவது அன்பின் வெளிப்பாடாகும். அடுத்து, நீதி
வழியாக நம் அன்பு வாழ்வு வெளிப்பட வேண்டும். தனி நபர்கள்
வழியும் நிறுவனங்கள், அமைப்புகள் வழியும் நீதி கொலை
செய்யப்படுகிறது. அநீதி, அக்கிரமம், கொடுமை, கையூட்டு
முதலியன எங்கும் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றன.
இச்சூழல்களிலே நீதிக்குக் குரல் கொடுப்பது, நியாயத்தை
நிலைநாட்டத் தோள்தட்டி நிற்பது முதலியன அன்பின்
வெளிப்பாடுகளே என்பதை மறுக்க முடியாது. இறுதியாக, "உண்மை"
என்பது இறைவன் தரும் மீட்பின் மறைவான திட்டம் (Mystery of
God's plan of salvation) என்று பொருள்படும் (கொலோ 1:27;
எபே 3:4). கிறிஸ்தவன் உண்மை வாழ்வு வாழ வேண்டும் என்றால்
அவன் மக்களின் மறுவுலக மீட்பில் மட்டுமன்று, இவ்வுலக
நல்வாழ்விலும் இறைவனோடு ஒத்துழைக்க வேண்டும். மக்கள்
அனைவரையும் இறைவனின் சாயல்களாகக் கண்டு (தொநூ 1: 27)
அவர்களுடைய நல்வாழ்விற்காக ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மை
வாழ்வு; அதை அன்பு வழி தான் வெளிக்காட்ட முடியும்.
இவ்வாறு, ஒளியின் கனிகளான நன்மை, நீதி, உண்மையை நாம்
கடைப்பிடித்து வாழ்ந்தோமாயின் ஆண்டவருக்கு உகந்தவர்கள்
ஆவோம் (எபே 5:10). "அன்பினால் அடியேன் ஆவியோடாக்கை
ஆனந்தமாய்க் கசிந்துருக" இன்னருள் தாராய் (திருவா.
கோயிற்றிருப்பதிகம்) என்று அன்பிறைவனிடம் வேண்டுவோம்.
ஒளியாய் இருக்கிறீர்கள்: ஒளியின் மக்களாக
நடந்துகொள்ளுங்கள்.
நற்செய்தி: யோவா 9:1-41 (6-9-13-17. 34-38)
"நானே உலகின் ஒளி" (யோவா 8: 12) என்று முன்பு ஒரு முறை
கூறிய இயேசு மறுபடியும் "நான் உலகிற்கு ஒளி" (9:5) என்று
சொல்லி, தாம் ஒளி மட்டுமன்று, ஒளியை மக்களுக்கு அளிக்கும்
தெய்வம் என்பதை எண்பிக்கிறார். இன்றைய வாசகம் வழியாக இயேசு
ஊனக் கண்களை மட்டும் திறந்து அவற்றிற்கு ஒளி அளிப்பவரன்று
(9:7); உளக் கண்களையும் திறந்து, விசுவாசமாகிய ஒளியை,
மக்களுக்கு அளிப்பவர் (9:38) என்பதைப் புலப்படுத்துகிறார்.
ஒளியளிக்கும் இயேசு
"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில்
நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார்" (8 : 12) என்று கூறிய இயேசு,
"பார்வையற்றோருக்குக் கண்களைத் திறக்க வந்தவர்" தாமே (எசா
42: 7); "பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிவிக்க
வந்தவர்" தாமே (எசா 61 :1-2) என்பதை நிரூபிக்கிறார்.
பெத்சாயிதா பார்வையற்றோருக்கும் குணமளிக்கிறார் (மாற்
10:46-52; மத் 20 : 29-34). இன்றைய நற்செய்தியில்
காணப்படுவது வேறொரு பார்வையற்றவர் போலும்! தான் சென்ற
இடமெல்லாம் ஏழைகளுக்கும் எளியோருக்கும் உதவிய இறைவன்,
சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட பார்வையற்றோர்பால் தம் இரக்கக்
கண்களைத் திருப்பியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயேசு
புறக்கண்களுக்கு ஒளி அளிப்பவர் மட்டுமன்று; அகக்கண்களையும்
திறப்பவர் என்பதை இன்றைய வாசகம் காட்டுகிறது.
பார்வையற்றவரின் புறக் கண்கள் திறந்தன; அவருடைய
அகக்கண்ணும் திறக்கிறது. "ஆண்டவரே விசுவசிக்கிறேன்" (9:38)
"இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு" (1 பேது 2: 9) நம்மை
அழைத்துவர இயேசுவிடம் வேண்டுகிறோமா? "ஒளியாம் இறையே
வாராய்; எளியோர் நெஞ்சம்தனிலே." களையிழந்த உளத்திலே
முன்போல, களை சிறக்க வந்தனை, வா வா வா! (பாரதி).
ஒளி பெற்ற பார்வையற்றவர்
"சீலோவாமில் போய்க் கழுவினார்; பார்வையோடு திரும்பி
வந்தார்" (9 : 7) என்பார் யோவான். சீலோவாம் என்பதற்கு
"அனுப்பப்பட்டவர்" என்பது பொருள். இப்பெயர் கொண்ட குளம்
இயேசுவையே சுட்டுகிறது. ஏனெனில் அவர் தந்தையினால்
அனுப்பப்பட்டவர் தானே (3:17; 5:24). அவரே மீட்பளிக்கும்
நீரைக் கொண்ட ஒரு தெய்வீகக் குளம் அல்லது நீரூற்றாகிறார்.
எனவே, அவரால் புனிதமாகிறவன் மீட்பைப் பெறுகிறான் எனலாம்.
இங்கும் பார்வையற்றவரின் ஊனக் கண்களோடு உளக் கண்களையும்
திறக்கிறார். முதலில் "இயேசு எனப்படும் மனிதர்" (9:11)
என்னைக் குணப்படுத்தினார் என்றார். அவரது விசுவாசம்
வளர்கிறது. சிறிது நேரத்தில் "அவர் ஓர் இறைவாக்கினர்"
(9:17) என்கிறார். இன்னும் சற்று நேரம் கழித்து "இவர்
கடவுளிடமிருந்து வராதிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது"
(9:33) என்று அவரைக் கடவுளிடமிருந்து வந்தவராக ஏற்கிறார்.
இறுதியாக அவர் விசுவாசம் முழுமையடைகிறது. "மானிட மகனிடம்
நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" (9: 35) என்று கேட்ட
இயேசுவிடம் "ஆண்டவரே நம்பிக்கை கொள்கிறேன்" (9: 38) என்று
பதிலிறுக்கிறார். இயேசுவை "ஆண்டவர், "கடவுள்" என்று
நம்பும் அளவுக்கு அவரது விசுவாசம் உயர்ந்துவிட்டது. நமது
வாழ்விலும் இத்தகைய விசுவாச வளர்ச்சி வேண்டும். அன்றாடம்
நாம் இறைவனிடமிருந்து பெறும் நன்மைகளும், நல்வாழ்வும்
இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை
வளர்க்கின்றனவா? அல்லது இந்த வாசகத்தில் வரும் பரிசேயர்
போன்று, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கூறிக் கொண்டு
நம் பாவங்களிலேயே நிலைத்து நிற்கிறோமா? (9 : 41).
"ஒளியிழந்த உள்ளத்திலே நின்றேறும் உதய ஞாயிறொப்பவே, வா வா
வா" (பாரதி) என்று வேண்டுவோம்.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே