இன்று நாம் நமக்காக சிலுவையை தூக்கிக் கொண்டு நடந்த இயேசுவின் பாடுகளின் பாதையில்
பாதத்தை எடுத்து வைக்கிறோம். பரிசுத்த வாரத்தில் நுழையும் நாம் இயேசுவைப் போல
பரிசுத்தமாக வாழ அழைக்கப்படுகிறோம்.
இறைமகன் இயேசு வாழ்வு கொடுக்கும் பணியை செய்ய வந்தவர். நீதி, அன்பு, நேர்மை,
சமத்துவம், சகோதரத்துவம் பாதையில் பயணம் செய்தவர். ஆயுதமின்றி அதிகார வர்க்கத்தை
எதிர்க்கும் பேரணி நடத்துகின்றார். அதே பாதையில் பயணிக்க நம்மையும் இன்று
அழைக்கின்றார்.
மனிதவாழ்வு ஒரு போராட்டம் நிறைந்த வாழ்வுதான் நீதியைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம்
அநீதிக்கு ஆளாக வேண்டிய நிலை. அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் குரல்
ஒடுக்கப்படுகின்ற நிலை. மனிதவடிவில் வாழ்ந்த இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலை. இயேசு
அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றார். ஏழையர் வாழ்க்கையை
உயர்த்துகிறார். போலிகளை விரட்டுகின்றார். சமூகம் ஒதுக்கியவர்களை சகோதர உணர்வுடன்
நேசிக்கிறார். உண்மையை உரத்து பேசுகிறார். பலர் உண்ணவும், உறங்கவும், வழியின்றி
தன்னலவாதிகளின் பிடிக்குள் கிடப்பதைக் கண்டு மனம் குமுறுகிறார். தச்சன் மகனாய்
அவதாரமெடுத்தவர், ஜெகத்தை மீட்க கோவேறு கழுதையை வாகனமாக்கி புறப்படுகிறார். இவரின்
பயணத்தால் பலரின் வாழ்க்கை தடம் புரட்டிப் போடப்படுகிறது. சாலை மறியல் செய்யாதவர்
பயணத்தால் பலரின் பயணம் நின்றுபோய் தடுமாறுகிறது. இருப்பவர், இல்லாதவர் என்ற
நிலைமாறி, சமதள பூமியாய் சங்கீதம் பாடச் செய்ய புறப்பட்டவரை விட்டுவைக்க விரும்பாத
உயர்மட்ட சமூகம், வாழ்த்துபாடி வரவேற்று, சதிசெய்து சாவுக்கு கையளித்து, கைதட்டி
நிற்கின்றது. இயேசுவின் சாவு, பலருடைய வாழ்வுக்கு சான்றாக வெளிச்சம் சிந்துகிறது.
இதுதான் இன்றும் நாம் பயணிக்க வேண்டிய பாதை. இயேசுவின் வாழ்வு கொடுக்கும் மனநிலைப்
பாதையில் தொடர் பயணம் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும். இயேசுவிடம் விளங்கிய
பணிவேட்கையை நமதாக்க, குருத்து ஓலை மூலம் விளக்கும் திருப்பலி தரும் கருத்துகளை
இதயத்தில் பொருத்தி செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை அளிக்கின்ற
ஆண்டவரே!
திருச்சபையை வழிநடத்திட நீர் தேர்வு செய்து தந்த
திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்களையும் அவரோடு இணைந்து
பணியாற்றும் திருச்சபை பணியாளர்களையும் ஆசிர்வதியும்.
நலிந்த நிலையில இருக்கும் திருச்சபை மக்களை நல்வாக்கால்
ஊக்குவிக்கும் அறிவை, திருச்சபை பணியாளர்களுக்கு தந்து
வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. காலைதோறும் எங்களைத் தட்டி எழுப்புகின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் நாட்டுமக்களுக்கு நற்பணியாற்ற
வேண்டும் என்ற எண்ணத்தில் தட்டி எழுப்பிட இறைவா உம்மை
மன்றாடுகிறோம்
3. கற்றோரின் நாவை எங்களுக்கு அளிக்கின்ற எம் இறைவா!
இந்த புனித வாரத்திலே எங்கள் குருக்களின் நாவால் நல்ல
மறை போதகத்தை உச்சரிக்கவும் அவர்களின் மறையுரையை கேட்க
எங்கள் செவிகளை திறக்கவும் அதனால் மனமாற்றம் பெற்று
புனித வாரத்தின் பலன்களை அனுபவிக்கவும் அருள் தர இறைவாஉம்மை
மன்றாடுகிறோம்.
4. எங்களுக்கு துணையாக எம் அருகில் இருக்கின்ற இறைவா!
எங்கள் அருகில் நீர் இருந்தால் நாங்கள் அவமானம் அடையமாட்டோம்.
இழிவான நிலையை காண மாட்டோம். இந்த புனித வாரத்திலே நல்ல
பாவசங்கீர்த்தனம் செய்து எங்கள் துன்பதுயரங்களில் இருந்து
விடுதலை பெற்று ஆண்டவருக்கு "தேவையானவர்களாக" நாங்கள்
வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. அடிப்போர்க்கு முதுகையும் தாடியை பிடுங்குவோருக்கு
தாடையையும் ஒப்புவித்த இறைவா!
வருத்தத்தில், நோயில், வறுமையில், இயலாத நிலையில்
வாழும் எம் உறவினர்களுக்கு எங்களையே அர்ப்பணித்து உறவு
முறிந்த இடத்தில உறவை முளைக்கச் செய்து புனித வாரத்தில்
புனித சூழலை உருவாக்க இறைமக்கள் அனைவருக்கும ஆற்றல் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
மறையுரை சிந்தனைகள்
நாம் அவருக்குத்
தேவை
தளபதி ஆலன்பீ எருசலேமைப் பிடித்தபோது தனது படைகளுடன்
குதிரையிலேறி அணிவகுத்து எருசலேமில் நுழைய ஆயத்தமானார்.
அந்த அணிவகுப்பு எருசலேம் பட்டணத்தில் உள்ள யோப்பா வாசல்
வழியாகவே செல்ல வேண்டியிருந்தது. இந்த வாசல் வரை
குதிரையில் வந்த ஆலன்பீ வாசலை நெருங்கியதும்
குதிரையிலிருந்து இறங்கி தன் வாசல்வரை குதிரையில் வந்த
ஆலன்பீ வாசலை நெருங்கியது குதிரையிலிருந்து இறங்கி தன்
தலையிலிருந்து தொப்பியை எடுத்துவிட்டு முழங்காலிட்டு
தலைவணங்கினார் பின் எழுந்து அந்த பாதையில் நடந்தே
சென்றார். இவர் பின் வந்த படைகளும் காரணம் தெரியாமல
தாமும் அவ்வாறே செய்தனர். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு
அங்கிருந்த ஒருநபர் காரணம் கேட்க ஆலன்பீ மறு மொழியாக
"ராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்து "இதே வாசல் வழியாக ஒரு
சாதாரண கழுதையில் ஏறி பவனியாகப்போயிருக்கிறார். ஒரு
சாதாரண தளபதியான நான் இதன் வழியாக குதிரையில் போகலாமா?
என்று கேட்டார். ஆலன்பீPயின் இந்த வைராக்கியம் பிறரைப்
பரவசப்படுத்தியது.
"இயேசு கிறிஸ்து கடவுளுடைய சாயலாயிருந்தும் கடவுளுக்குச்
சமமாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் தன்மையெடுத்து
மனித வடிவானார்.". அவர் மரணபரியந்தம் அதாவது
சிலுவையின் மரணத்தை தழுவும் வரை கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே
தாழ்த்தினார். அவர் ராஜாதிராஜா. அவர் பவனி செல்ல
வேண்டுமானால் அந்த நாட்களில் ஒட்டகம் அல்லது
குதிரையில் வந்திருக்கலாம். அவரோ எல்லாராலும் அற்பமாய்
எண்ணப்படுகிற கழுதையை தன் வாகனமாக பயன்படுத்தினார்.
நாம் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் நம்மையும் அவர் பயன்படுத்துவார்
என நம்புவோம்.
கடவுள் தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து பராமரித்து
உயர்த்துகிறார்"மனிதர்கள் நம்மை அற்பமாய்
பார்க்கலாம். ஆனால் தெய்வம் நம்மை அவ்வாறு பார்ப்பதில்லை.
தெய்வத்தின் பார்வை எல்லார் மேலும் சமமாகத்தான் இருக்கிறது.
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியமானவைகளை இறைவன்
இந்த உலகத்தில் தெரிந்துக் கொண்டார். பலமுள்ளவற்றை
வெட்கப்படுத்தும்படி இறைவன் இந்த உலகத்தில் பலவீனமானவற்றைத்
தெரிந்துக் கொண்டார்.
பு.ம. செஸ்ட்ர்ட்டென் எழுதிய
'கழுதை' கவிதை ஒன்றின் கடைசி
வரி இப்படி இருக்கிறது. என்னைப் பட்டினி போடுங்கள், அடியுங்கள்,
திட்டுங்கள்... எனக்கு கவலையில்லை. முட்டாள்களே!
எனக்கும் ஒரு நேரம் வந்தது. அது உன்னதமான நேரம். ஆப்போது
என்னைச்சுற்றி கோஷம் எழுப்பினார்கள். என் கால்களுக்கு
முன் தழைகளைப் பரப்பினார்கள்.
ஒரு காலத்தில் போர்வீரன் ஒருவன் குதிரை ஒன்று
வைத்திருந்தான். அந்தக் குதிரை பலம் வாய்ந்ததாகவும்
உயரமாகவும் கட்டான உடலமைப்போடும் இருந்தது. அதனால் அது
மிகுந்த கர்வம்கொண்டிருந்தது. ஒருநாள் அந்தப் போர்வீரன்
குதிரை மீது ஏறிப் போர்களத்திற்குச் சென்றான். வீரனைப்போருக்கு
அழைத்துப்போகிறோம் என்ற நினைப்பில் குதிரை மேலும் கர்வம்கொண்டது.
வுழியில் பெரும் சுமையைத் தூக்கிவந்த கழுதையைப்
பார்த்து. கழுதையிடம் குதிரை திமிராகத் தலையை ஆட்டி அசிங்கமான
கழுதையே! ஒதுங்கிப்போ நாங்கள் போர்முனைக்குச்
செல்கிறோம் என்று கூறியது. கழுதை ஒரு பக்கமாக ஒதுங்கியது.
குதிரை கடந்துசென்றது. சில நாட்களுக்குப் பிறகு கழுதை
அதே குதிரையைக் கடந்துசெல்ல நேர்தது அதனால் இந்த முறை
அந்தக் குதிரையின் மீது காயமடைந்திருந்த போர்வீரன் தன்னுடைய
எல்லாச் சுமைகளையும் ஏற்றிக்கொண்டு தானும் உட்கார்ந்து
வந்தான்.
கழுதை குதிரையின் அருகில் சென்று சில நாட்களுக்கு
முன்பு நீ என்னைப் பெருஞ் சுமைகளைத் தூக்கும் அசிங்கமானவன்
என்று இழித்துரைத்தாய் இப்போது நீ என்ன
செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எந்தப் பதிலும்
சொல்ல முடியாமல் குதிரை அவமானப்பட்டுத் தலைகுனிந்தது.
தாழ்ந்தோரைத்தேடி அவர்களுக்காகவே இப்படி கழுதையின்
மீது நம் தலைவர் இயேசுவிரான் பவனி வருகின்றார்.
அவர் வரும் பாதையில் நிற்கும் நாம் நம்மையே
தாழ்த்துவோம். அப்போது அவர் நம்மை உயர்த்துவார்.அவருக்கு
நாம் தேவை.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
திருப்பாடுகளின் புனித வாரம் குருத்து
ஞாயிறு
I. எசாயா 50:4-7
II. பிலிப்பியர் 2:6-11
III. லூக்கா 22:14 - 23:56
வெற்றியா ? தோல்வியா?
ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் புனித வாரத்தில் அடியெடுத்து
வைத்திருக்கும் உங்களை அவரன்பின் சுவையை உணர்ந்து வாழ அன்புடன்
அழைக்கின்றேன். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பாடுகள்
அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவரது எருசலேம் பவனி
தொடங்கி, இரவல் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டது முதல்
அனைத்தையும் வாசிக்கக் கேட்டோம். இன்றைய நாளும் அவரது பாடுகளும்
நமக்கு விடுக்கும் செய்தி என்ன? நம்முடைய பயணங்களும் பாதைகளும்
ஒரு இலக்கை நிர்ணயித்தே நடந்தேறுகின்றன. பயணத்தைத் தொடங்கும்
போதே எங்கு செல்கிறோம்? எப்படி செல்கிறோம் எதற்காக
செல்கிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலினை தயார்
செய்தே நாம் பயணத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நாளில் பலவிதமான
பயணங்களை மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக்
கொண்டிருக்கொண்டிருக்கின்றோம். ஆகாய மார்க்கமாகவும், கடல்,
தரை மார்க்கமாகவும் பயணம் செய்து வாக்குகளை சேகரிக்கும் மனிதர்கள்
பலரை நாம் பார்க்கும் காலம் இது. இவர்களது பயணம் ஒரு இலக்கைக்
கொண்டது. அது " வெற்றி "..... யாரும் தோல்வி அடைய வேண்டும்
என்னும் எண்ணத்துடன் பவனி வருவது கிடையாது. அமோக வெற்றி
பெற வேண்டும் . எல்லோரும் பாராட்டும் வண்ணம் பதவியைப் பெற
வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் இங்கு பவனிகளும் பயணங்களும்
நடைபெறுகின்றன.
இயேசுவின் பவனியோ மிகவும் வித்தியாசமானது அவர் ஆடம்பரமான
வாகனத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலிபெருக்கிகளின்
சப்தத்தில் வரவில்லை மாறாக வித்தியாசமாக வருகின்றார். ஏழைகளின்
சொத்தாம் கழுதை வாகனமாகின்றது. மக்கள் வெள்ளம் அவருக்கு
வெளிச்சமாகின்றது. ஓசான்னா கீதமே ஒலிப்பெருக்கியாகிறது. ஒலிவ
இலைகளின் அசைவு ஓராயிரம் மகிழ்வு செய்தியை ஏற்படுத்துகின்றது.
இப்படி மகிழ்ந்து பவனி சென்றவர் இறுதியில் கொடூரமாக இறந்து
போகின்றார். வெற்றிப் பவனி வந்தவர் தோல்வியை தழுவி
விட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு சாவை அடைகின்றார். இயேசு
பெயரளவில் வெற்றி பெற விரும்பவில்லை. மாறாக நிலையான
வெற்றியை விரும்புகின்றார். அதை வெளிப்படையாக பார்ப்பவர்க்கு
இவர் என்ன இப்படி அநியாயமாக இறந்துவிட்டாரே என்று எண்ணத்தோன்றும்.
அதை முழுமையாக உணர்ந்து கொள்பவரால் மட்டுமே இது இவரின்
வீழ்ச்சி அல்ல அது அவரின் எழுச்சி என்று தெரியும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் . கடமையைச்
செய்தால் வெற்றி. கடமைக்குச் செய்தால் தோல்வி. இங்கு பலர்
கடமைக்கு பல செயல்களை செய்து விட்டு வெற்றி கண்டு விடுகின்றனர்.
ஆனால் இத்தகைய வெற்றி ஒரு போதும் நிலைப்பதில்லை என்பதை அவர்கள்
உணர்வதில்லை. இயேசுவோ கடமையைச் செய்தார் . நிலையான
வெற்றியைப் பெற்றார்.
இன்றைய நாளில் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்
நீடித்த நிலையான வெற்றியை உனதாக்கிக் கொள். இயேசு தனது துயரமான
நேரங்களில் கூட செபத்தினை தகுந்த ஆயுதமாகக்
கொண்டிருந்தார். தான் செபித்ததோடு மட்டுமல்லாமல் பிறரையும்
விழித்திருந்து செபிக்க அழைக்கின்றார். நாமும் செபிப்போம்
செபத்தின் வல்லமையால் வெற்றி பெறுவோம். மீண்டும் இருள் அதிகாரம்
செலுத்தும் தருணங்களிலும் துணிவோடு இருக்க அழைக்கின்றார்.
தோல்வி என்பது உறுதி அல்ல வெற்றி என்பது இறுதியும் அல்ல இதை
உணர்ந்தாலே நம் வாழ்வு சிறப்புறும். இன்று நாம் கைகளிலேந்தி
ஓசன்னா கீதம் பாடி ஆர்ப்பரித்து மகிழ்ந்த (ஒலிவ கிளைகள்)
தென்னங்குறுத்தோலைகள், புதிதாக தோன்றும் போது வெற்றி பெற்றதாக
நினைத்திருக்கலாம். ஆனால் இன்று மரத்திலிருந்து வெட்டப்பட்டு
நம் கைகளில் மகிழ்வின் பொருளாக இடம் பிடித்திருக்கின்றது.
வெளிப்புறமாக பார்க்கும் போது, மரத்திலிருந்து தளைத்து பலன்
தருவதை விடுத்து இன்று நம் கைகளில் வந்து வாழ்வினை
தொலைத்து விட்டதே என்று கவலைப்படலாம். ஆனால் உண்மையில் இன்று
இந்த குருத்தோலைகள் நம் வீட்டின் மற்றொரு சிலுவைச்சின்னமாக
மாறி நமக்கு வலிமையைத் தரும் ஒரு மீட்பாக மாறி இருக்கின்றது.
என்பதே உண்மை.
இன்று நாம் கடந்து வந்த பாதைகளும் தெருக்களும் நம்மால்
புனிதம் அடைந்திருக்கின்றன. நமது பயணத்தால் நாம் புனிதமடைந்திருக்கின்றோம்.
நமது பயணம் வெற்றியை நோக்கிய பயணம். இந்த புனித வாரம் முழுவதும்
நம்மை புனிதப்படுத்துவதற்கான வெற்றியின் பயணம். எனவே அன்பு
உள்ளங்களே நம் ஆண்டவர் இயேசுவின் இந்த புனித பயணத்தில்
வெற்றியின் பயணத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும்
வெற்றியின் மக்களாக வாழ அருள் வேண்டுவோம். விழிப்பதற்கே
உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி, வாழ்வதற்கே
வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்வோம், இறையாசீர் என்றும் நம்மோடும்
நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
திருப்பாடுகளின் புனித வாரம்
குருத்து ஞாயிறு
வெற்றியின் பயணம் :
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை
விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை"
இது வெற்றியாளர்களின் கோட்பாட்டு வரிகள்.
வெற்றிபெற நினைப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும்
அத்தனை போராட்டங்களையும் சந்திக்க தயாராக இருப்பார்கள்.
துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளியாது,
துணிந்து நின்று போராடுவார்கள். துரத்தி வருகின்ற
அத்தனை போராட்டங்களையும் கடந்து, கடைசியில் வெற்றி
என்ற மகுடத்தைப் பெறுவார்கள். அவர்களே வெற்றியாளர்கள்,
சாதனையாளர்கள். அப்படியென்றால் இந்த உலகத்தின் முதல்
சாதனையாளர், வெற்றியாளர், புரட்சியாளர் இயேசுதான்.
இயேசு எருசலேமுக்குள் நுழைகின்ற அந்த பயணம் தான்
புனித வாரத்தின் தொடக்கமாகவும் நுழைவு வாயிலாகவும்
அமைகிறது. குருத்து ஞாயிற்றை கொண்டாடும் நாம் இயேசுவின்
வெற்றிப் பயணத்தில் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம்.
இதுதான் இயேசுவின் கடைசி எருசலேம் பயணம், அவர் பல
துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து அங்கேயே
இறக்கப்போகிறார். அப்படியிக்க இது எப்படி வெற்றிப்
பயணமாகும் ? இயேசு மனிதனாக பிறப்பெடுத்து முப்பத்து
மூன்று ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தது இந்த
நாளுக்காகத் தானே...! எருசலேமுக்குள் நுழையாமல்
வெற்றியைப் பெற முடியாது என்பது இயேசுவுக்குத்
தெரியும் அதனால்தான் துன்பத்தை சந்திக்க
துணிகிறார்.
திருவிழாவிற்கு சமையலுக்காய் கொல்லப்பட போகும் ஆடு,
எவ்வாறு மாலை மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு, அழைத்துச்
செல்லப்படுமோ, அப்படி மேள தாளத்துடன் ஓசன்னா பாடி
அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு. என்னே இயேசுவின்
துணிச்சல்...!! அவரின் பாடுகள் நம்மீது கொண்ட பாசத்தின்
வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கப்பட்டது
அல்ல, அவராக விரும்பி ஏற்றுக் கொண்டது. கட்டாயப்படுத்தப்பட்டது
அல்ல, நம் மீது கொண்ட கருணையினால் விரும்பி ஏற்றது.
" நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக்
கொடுப்பான்"என்று சொல்லி மனமுவந்து சாவை ஏற்கத்
தயாரானார்.
எருசலேம் மக்களின் மகிழ்ச்சி
ஆர்ப்பரிப்பு
உரோமையர்களை நம்பினோம், ஆளுநர்களை நம்பினோம், தலைமைக்
குருக்களை நம்பினோம், ஒன்றும் நடக்க வில்லை என்று
புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு, கழுதைக்குட்டியின்
மேல் ஏறி வந்த இயேசுவின் மீது நம்பிக்கை வந்தது.
ஏனெனில் அக்காலத்தில் மெசியாவின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில்
இருந்தது. யாராவது நம்மை காப்பாற்ற மாட்டாரா.."?
நம் நாடும், நகரமும் நலம் பெறாதா என்ற கவலையும், ஏக்கமும் நிறைய இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில்
இயேசு கழுதையின் மேல் ஏறி வந்தது, இவரே அரசர் என்ற
நம்பிக்கையை தந்தது. இயேசு எருசலேமுக்குள் நுழைந்த
நிகழ்வை நாம் நற்செய்தில் பார்க்கும் போது, மகிழ்ச்சி
என்ற உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. அந்த மகிழ்ச்சிதான்
மக்களை குருத்தோலைகள் ஏந்தவும், துணிகளை விரிக்கவும்
தூண்டியது. உரத்த குரல் எழுப்பி ஓசன்னா பாடுகின்றனர்.
ஆண்டவர் பெயரால் அரசராய் வருபவர் போற்றப்பெறுக,
விண்ணகத்தில் மாட்சியும், அமைதியும் உண்டாகுக என
ஆர்ப்பரிக்கின்ற இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் முதல்
செய்தி மகிழ்ச்சி. இயேசுவோடு உடன் வந்த மக்கள் மட்டும்
அல்ல, இயேசுவும் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்.
இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியின் பிறப்பாக அறிவிக்கப்பட்டது
போல, அவரது எருசலேம் பயணமும் மகிழ்ச்சியின் பயணமாக
இருக்கிறது. இத்தனைநாளும் மக்களிடம்
குருத்தோலையும், கழுதையும், போர்வையும் இருந்தன.
ஆனால் இன்று மட்டும் தான் ஆர்ப்பரிக்கின்றன. காரணம்
இயேசு அவர்களோடு இருந்ததால். ஆக இயேசுவை நீக்க
விட்டால் மகிழ்ச்சிக்கு இடம் இல்லை. அவரோடு இருக்கும்
போது நாம் தனியாக இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானதாக
இருந்தாலும், நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளும், தடைகளும் தாண்டமுடியாதவைகளாக இருந்தாலும், கவலைவேண்டாம்.
ஏனெனில் இயேசு நம் நடுவில் இருக்கிறார். நாம் அவரோடு
நடப்போம், அவர் நம்மோடு நடக்கிறார். நம்மையும் தன்
கழுதைக் குட்டியின் மேல் ஏற்றிக்கொள்கிறார். ஏனெனில்
அவரது மகிழ்ச்சியில் நமக்கும் பங்கு உண்டு, அவரது
மகிழ்ச்சியில் பங்குகொள்ள விரும்பும் நாம், அவரது
துன்பத்திலும் பங்குகொள்வோம். அப்போதுதான்
வெற்றியிலும் பங்குகொள்ள முடியும்.
முரண்பட்ட வாழ்வு :
இயேசு மூன்று முறை எருசலேமுக்குள் நுழைகிறார்,
1. இயேசுவை காணிக்கையாக்க பெற்றோர் தூக்கிச் சென்றனர்.
2. பன்னிரெண்டு வயதில் பாஸ்கா கொண்டாட பெற்றோருடன்
செல்கிறார் இயேசு.
3. வெற்றி ஆர்ப்பரிப்போடு இன்று எருசலேம்
நுழைகிறார்.
இயேசுவின் முதல் இரண்டு வருகைக்கும், மூன்றாம் வருகைக்கும்
நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அப்போது ஆர்ப்பரிப்பு
இல்லை, இப்போது ஆர்ப்பரிப்பு. அப்போது அவருக்கு எந்த
பட்டமும் இல்லை, இப்போது தாவீதின் மகன் என்ற பட்டம்.
அப்போது எந்த ஆதரவாளர்களும் இல்லை, இப்போது சீடர்களும்,
மக்கள் கூட்டமும். அப்போது எந்த தயாரிப்பும் இல்லை,
இப்போது கழுதை, குருத்தோலை, போர்வை. அப்போது இயேசு
தன் சொந்த ஊருக்குத் திரும்பினார், இப்போது
திரும்பிபோக மாட்டார். இப்படி அவரது எருசலேம் பயணம், முரண்பட்ட பயணமாக இருந்தது. இருப்பினும் அவர் மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொண்டார்.
தன் பயணத்தில் குருத்தோலை ஏந்திவருபவர்கள் தன்
காலை வாரிவிடுவார்கள் என்றும், ஒசன்னா பாடுபவர்கள்
ஒழிக என கத்துவார்கள் என்றும், தங்கள் ஆடைகளை முன்
விரித்தவர்கள், தன் ஆடையை களைவார்கள் என்றும், போதகரே
என்பர்கள், சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள்
என்றும், உடன் வந்த சீடர்கள் ஒடிப்போவார்கள் என்றும்,
கட்டி அணைத்தவர்கள் காட்டிக் கொடுப்பார்கள் என்றும்
இயேசுவுக்கு தெரிந்திருந்தது. அத்தனையும்
தெரிந்திருந்தும் அமைதியுடன் பயணம் தொடர்கிறார்.
இயேசுவுக்கே இத்தனை முரண்பாடுகள் என்றால் நம்
வாழ்க்கையில் எத்தனை, எத்தனை முரண்பாடுகள்?
போராட்டங்களும், முரண்பாடுகளும், பிளவுகளும், மனவருத்தங்களும்,
கசப்பு நிறைந்த அனுபவங்களும் நித்தம் நித்தம் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. இவற்றை சந்திக்காமல் வாழ்க்கைப் பயணத்தை
தொடரமுடியாது. வெற்றிக்கனியை பறிக்க முடியாது.
புனித வாரத்தில் இருக்கின்ற நாம், நம்முடைய
வாழ்கையில் வரும் போராட்டங்களையும், துன்பங்களையும், இயேசுவின் துணையோடு கடக்க முற்படுவோம். துன்பக்
கிண்ணத்தை அனுபவித்து உயிர்பெற்ற இயேசுவைப் போல,
நம் வாழ்வும் உயிர் பெற்று, ஒளிபெற உறுதி கொண்டு
அவரோடு பயணிப்போம். இறைமகன் இயேசு நம்மையும்,நம்மை
சுற்றியிருப்பவர்களையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை
செல்டிக் மரபில் ஒரு பறவையைப் பற்றிய புனைகதை ஒன்று உண்டு.
அந்தப் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பாடும். அது
அந்த ஒற்றைப் பாடலைப் பாடும்போது அப்பாடல் உலகில் மற்ற எந்த
உயிர்கள் பாடும் பறவையைவிட மிக இனிமையாக இருக்கும். தன்னுடைய
கூட்டை விட்டுப் புறப்படும் நாளிலிருந்து இது முள் மரத்தைத்
தேடும். தேடிக் கண்டுபிடிக்கும் வரை அது ஓயாது. அப்படிக்
கண்டுபிடித்த அந்த மரத்தின் முட்கள் நிறைந்த கிளைகளுக்குள்
தன்னையே நுழைத்துக்கொண்டு, அம்முட்களிலேயே மிகக் கூர்மையான
முள்ளின்மேல் மிகவும் வேகமாக மோதும். இரத்தம் பீறிட்டு அதன்
துன்பம் எல்லை மீறிப் போகும் போது கத்தி ஓலமிடும். அந்த
ஓலம் வானம்பாடியின் குரலைவிட இனிமையாக இருக்கும். ஒரு நொடி
உலகமே அந்தப் பாடல் முன் உறைந்து நிற்கும். கடவுள் வானத்திலிருந்து
புன்னகை பூப்பார். மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப்
பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - இப்படி முடிகிறது அந்தப்
புனைகதை.
நாசரேத்து என்ற கூட்டிலிருந்து வெளியேறிய இயேசு என்னும்
பறவை தன் சிலுவை மரத்தையும், ஆணிகளையும், முள்முடியையும்
தேடி எருசலேமுக்குள் நுழைகிறது. எவ்வளவோ முறை எருசலேமுக்குள்
நுழைந்தவர் மீண்டும் நாசரேத்து திரும்பினார். ஆனால், இந்த
முறை அப்படி அல்ல. இதுவே இறுதி முறை. அவர் சிலுவையில்
மோதிக் கொண்டு, ஆணிகளில் தொங்கியபோது அவர் எழுப்பிய ஓலத்தால்,
சிலுவையில் அவர் விட்ட இன்னுயிரால் நாம் மிகப் பெரிய
மீட்பைப் பெற்றோம்.
மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை அனுபவிக்க
வேண்டும்.
மிகவும் அழகானதைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய
விலையைக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை - இதுதான் ஆண்டவரின் திருப்பாடுகளின்
குருத்து ஞாயிறு நமக்குத் தரும் செய்தியாக இருக்கிறது.
எப்படி?
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசா 50:4-7) தொடங்குவோம்.
எசாயா நூலில் உள்ள ஊழியன் பாடல்களில் இது மூன்றாவது.
நான்காவது பாடல்தான் துன்புறும் ஊழியன் பாடல் என அழைக்கப்படுகிறது.
அதை நாம் பெரிய வெள்ளியன்று வாசிப்போம். மூன்றாவது பாடல்
இறைவனின் ஊழியனை நிராகரிக்கப்பட்ட இறைவாக்கினராகச் சித்தரிக்கிறது.
இவர் தினமும் ஆண்டவருடைய குரலுக்குச் செவிசாய்க்கிறார். ஆகையால்தான்
இவர் 'கற்றோனின் நாக்கை' அல்லது 'பண்பட்ட நாக்கைப்'
பெற்றிருக்கின்றார். இவர் தினமும் 'நலிந்தோனை நல்வாக்கால்
ஊக்குவிக்க வேண்டும்.' இதனால்தான் எசாயா அடிக்கடி நலிந்த
இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதலின் செய்தியைத் தருபவராக இருக்கின்றார்
(காண். எசா 40:1). இறுதியாக, மற்ற இறைவாக்கினர்களைப் போல
இவர் ஆண்டவருக்குத் தன் காதுகளைத் திறந்து
வைத்திருக்கின்றார். அவரின் குரலைக் கேட்டு அதை மக்களுக்கு
எடுத்துரைக்கின்றார்.
இருந்தாலும், இந்தப் பணியாளர்-இறைவாக்கினர் நிரகாரிப்பையும்
வன்முறையையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யாருக்குக் கடவுளின்
செய்தியை இவர் சொன்னாரோ அவர்களால் இவர் அடிக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாகின்றார்.
இதே மாதிரியான நிராகரிப்பை, வன்முறையை, அவமானத்தையே இஸ்ரயேலின்
மற்ற இறைவாக்கினர்களும் எதிர்கொண்டார்கள்: எரேமியா (காண்.
எரே 11:18-22, 15:10-18, 20:1-10), எலியா (காண். 1 அர
19:1-2), ஆமோஸ் (காண். ஆமோ 7:10-13), மற்றும் மீக்கா
(காண். மீக் 2:6-11). எசாயாவும் மற்ற இறைவாக்கினர்களும் தங்களுக்குத்
துன்பம் நேர்ந்தாலும் தாங்கள் மேற்கொண்ட இறைவாக்கினர் பணியைத்
திறம்படச் செய்தனர். தங்கள் பணிக்கான விலை தாங்கள் அனுபவித்த
நிந்தையும் அவமானமும் இறப்புமாக இருந்தாலும் அவற்றுக்கான
விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர். இவர்கள் இப்படித் தயாராக
இருந்ததால்தான் கடவுளின் செய்தியை மக்கள் கேட்க முடிந்தது.
இவர்களின் இந்த வலியிலும் இவர்களைத் தாங்கியது இவர்கள் கடவுளின்
மேல் வைத்திருந்த நம்பிக்கையே. ஆகையால்தான், 'ஆண்டவராகிய
என் தலைவர் துணை நிற்கின்றார். நான் அவமானம் அடையேன். என்
முகத்தைக் கற்பாறையாக்கிக் கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை'
என்கிறார் எசாயா.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:6-11) தொடக்ககாலத்
திருஅவையின் மிக அழகான கிறிஸ்தியல் பாடல் ஒன்றை
வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் மனுவுருவாதல் நிகழ்வு தொடங்கி,
பிறப்பு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம்,
மாட்சி வரையிலான அனைத்து மறைபொருள்களையும் மிக அழகாக ஏறக்குறைய
பன்னிரெண்டு வரிகளில் பாடலாக வடிக்கின்றார் பவுல். மேலும்,
இந்தப் பாடல் வெறும் கிறிஸ்தியல் பாடலாக இல்லாமல், இதன்
வழியாக 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்
இருக்கட்டும்' என்று பிலிப்பி நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார்.
இந்தப் பாடலைப் பொறுத்த வரையில் இயேசு அவரின் வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவருடைய
மனுவுருவாதலின்போது அவர் 'கடவுளுக்கு இணையாயிருக்கும்
நிலையை' இழக்கின்றார். மனித உரு ஏற்றபோது அவர் 'இறைத்தன்மையை'
வெறுமையாக்குகின்றார். சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்க
கீழ்ப்படிதில் என்ற பெரிய விலையைக் கொடுக்கின்றார். அதற்கு
அடுத்த நிகழ்பவை எல்லாம் - விண்ணேற்றம், மாட்சி, பெயர், மற்றவர்கள்
மண்டியிடதல் - இவர் தான் கொடுத்த விலையினால் பெற்றுக்கொண்டவை.
இறப்பை அழிப்பதற்கு இறப்பு என்ற நுகத்திற்குக் கீழ் தன் தலையைக்
கொடுக்கின்றார் இயேசு.
இப்பாடல் இயேசுவைக் கடவுளின் உண்மையான ஊழியராகவும், இறுதிவரை
இறைத்திருவுளத்திற்கு கீழ்ப்படிந்திருந்தவராகவும், தான்
கொடுத்த இறப்பு என்ற விலையின் வழியாக இறப்பைத் தோற்கடித்தார்
எனவும் நமக்குச் சொல்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் லூக்காவின் பதிவின்படி உள்ள
இயேசுவின் பாடுகளின் வரலாற்றைக் கேட்டோம் (காண். லூக்
22:14 - 23:56). இங்கே நாம் வாசித்த கதை மாந்தர்களை ஆறு
குழுக்களாகப் பிரித்துக்கொள்வோம்: (அ) இயேசுவின் சீடர்கள்,
(ஆ) இயேசுவின் எதிரிகள், (இ) இயேசுவுக்குத் தண்டனைத்
தீர்ப்பு வழங்கியவர்கள், (ஈ) இயேசுவுக்கு உதவியவர்கள், (உ)
பார்வையாளர்கள், மற்றும் (ஊ) இயேசு.
(அ) இயேசுவின் சீடர்கள் கொடுத்த விலை மிகக் குறைவு. ஏனெனில்
யூதாசு பணம் பெற்றுக்கொண்டு இயேசுவைக்
காட்டிக்கொடுக்கின்றார். பேதுரு மறுதலிக்கின்றார். சீடர்கள்
இயேசுவைவிட்டு ஓடுகின்றனர். சீடத்துவம் என்னும் விலை
கொடுக்க முடிந்தவர்களால் இறுதியில் இயேசுவுக்காக எந்த
விலையும் கொடுக்க முடியவில்லை. ஆக, நிகழ்விலிருந்து தப்பி
ஓடுகிறார்கள். (ஆ) இயேசுவின் எதிரிகளைப் பொறுத்தவரையில் இயேசு
அவர்களின் கண்களில் விழுந்த தூசி, அவர்களின்
செருப்புக்குள் நுழைந்த ஒரு கூழாங்கல். தூசியையும் கூழாங்கல்லும்
அகற்றும் முயற்சியில் கண்களையும், காலையும் இழக்கத் தயாராகிறார்கள்.
இவர்கள் கொடுக்கின்ற விலை பொய். (இ) இயேசுவுக்குத் தண்டனைத்
தீர்ப்பளிப்பவர் நேரிடையாக பிலாத்தும் மறைமுகமாக ஏரோதும்.
பிலாத்து உரோமை ஆளுநர். இவர் நினைத்தால் இயேசுவை விடுவிக்கவும்,
தீர்ப்பிடவும் முடியும். சட்டத்தின் படி இயேசு குற்றமற்றவர்
(காண். 23:15-16). ஆனால், சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைவிட
யூதத் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொள்கிறார்.
ஏனெனில், இயேசுவால் பிலாத்துக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால்,
தலைவர்களால் இவருக்குப் பயன் உண்டு. ஏனெனில், அவர்களை
வைத்து இன்னும் பதவியில் உயர்ந்துகொள்ளலாம். பிலாத்தும்
கீழ்ப்படிதலை விலையாகக் கொடுத்தார். ஆனால், அது சட்டத்திற்கான
கீழ்ப்படிதல் அல்ல. மாறாக, யூதத் தலைவர்களுக்கான கீழ்ப்படிதல்.
(ஈ) சிலுவைப் பயணத்தில் இயேசுவுக்கு உதவிய சிரேன் ஊரானாகிய
சீமோன், ஒப்பாரி வைத்த பெண்கள், நல்ல கள்வன், அரிமத்தியா
நகர் யோசேப்பு, கலிலேயப் பெண்கள் ஆகியோர் இயேசுவுக்காக
வீதிக்கு வருகின்றனர், மற்றவரைக் கடிந்துகொள்கின்றனர், தங்கள்
பொருளையும், ஆற்றலையும், நற்பெயரையும் இழக்க முன் வருகின்றனர்.
(உ) பார்வையாளர்கள். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம்
வேடிக்கை' என்ற நிலையில் நடக்கின்ற எல்லாவற்றையும் இவர்கள்
வேடிக்கை பார்க்கிறார்கள். அதிகபட்சம் இவர்களின் இழப்பு
நேர இழப்பு மட்டுமே. மற்றும் (ஊ) இயேசு - இவர் தன்னுடைய சீடர்கள்,
தன் எதிரிகள், தனக்குத் தீர்ப்பிட்டோர் என்ற மூன்று
குழுவிற்கு எதிர்மாறாக இருக்கிறார். மற்றவர்கள் தங்கள்
கீழ்ப்படிதல் வழியாகத் தர முடியாத விலையை இயேசு தருகின்றார்.
இவருடைய இந்த விலை, 'இன்றே பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.'
இயேசுவின் சீடர்களும், எதிரிகளும், அவருக்குத் தண்டனைத்
தீர்ப்பளித்தவர்களும், பார்வையாளர்களும் அளித்த விலை
குறைவு. மனம் மாறிய பேதுரு, இயேசுவுக்கு உதவியவர்கள்
போன்றோர் கொஞ்சம் கூடுதலாக விலை கொடுத்தனர். ஆனால், இயேசு
ஒருவரே மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது -
அவருடைய உயிரை இழக்கின்றார். அந்த உயிரை இழக்க அவர்
கொடுக்கும் விலை தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிதல்.
இவர் இந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்: 'தந்தையே,
உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும், உன் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே
நிகழட்டும்' (காண். லூக் 22:42).
ஆக, இயேசுவின் பாடுகள் நிகழ்வில் மிக உயர்ந்த விலையைக்
கொடுத்த இயேசுவே மிக உயர்ந்ததைப் பெறுகின்றார். இயேசுவின்
இறப்பைக் காண்கின்ற நூற்றுவர் தலைவர், 'இவர் உண்மையாகவே
நேர்மையாளர்' (காண். 23:47) என்று சான்று பகர்கிறார்.
இறுதியாக,
தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறோம். இயேசு எருசலேம்
நுழைந்த இந்நிகழ்வோடு இணைந்து நாமும் புனித வாரத்திற்குள்
நுழைகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்க, நான் மலிவானவற்றிற்கு
என்னையே விற்கிறேனா? அல்லது மிகச் சிறந்தவற்றுக்காக இழக்கிறேனா?
என்ற கேள்வியைக் கேட்போம்.
நம் ஒறுத்தல் முயற்சிகள் வழியாக, இறைவேண்டல் வழியாக, பிறரன்புச்
செயல்கள் வழியாக நாம் நம் வாழ்வின் பக்குவத்திற்கான, பண்படுத்துதலுக்கான
விலையைக் கொடுத்துவந்திருக்கிறோம். இவற்றையும் தாண்டி நாம்
பெற வேண்டியது எது? அதற்கு நான் தரும் விலை என்ன?
இயேசுவின் எருசலேம் பயணத்திற்குக் கழுதை கொடுத்தவர்கள்
சிறிய நிலையில் தங்களையே இழக்க முன்வருகிறார்கள்.
அவரை வெற்றி ஆர்ப்பரிப்புடன் வரவேற்று 'ஓசன்னா' பாடியவர்கள்,
வாடகைக் கழுதையில் வந்த தங்கள் இறுதி நம்பிக்கையை வரவேற்கின்றனர்.
தங்கள் ஆற்றலை, நேரத்தை இழக்க முன்வருகிறார்கள்.
நாம் வாழ்கின்ற எந்த அழைப்பு என்றாலும் சரி - அருட்சாதனம்
,
ஞானஸ்நானம், துறவறம் - எல்லா இடத்திலும் சிலுவை உண்டு. இந்தச்
சிலுவையை கொல்கொதா வரை சுமக்க வேண்டும். நாம் வழியில்
விழுவோம். பின் எழுவோம். வலியின் வழியாக வாழ்வு பெறுவோம்.
மிகச் சிறந்ததைப் பெற மிகப் பெரிய வலியை அனுபவிக்க
வேண்டும் - எசாயா அவமானத்தையும், இயேசு இறப்பையும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. மிகச் சிறந்தவற்றின் விலை
மிகப் பெரியதே.
இதை எசாயாவும், இயேசுவும் உணர்ந்தனர் - நீங்களும் நானும்?
தாழ்த்திக்கொண்டதால் பிழைத்துக்கொண்டனர்: ஏறக்குறைய இரண்டாயிரம்
அடி ஆழமுள்ள அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஐம்பதுக்கும்
மேற்பட்டோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென அந்த
நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்ததால்,
உள்ளே வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தப்பிக்க
வழியில்லாமலும், சுவாசிக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டார்கள்.
அப்போது அவர்களோடு இருந்த, வயதில் மூத்த ஒரு தொழிலாளர்,
"நாம் இருக்கும் இந்தச் சுரங்கத்திற்கும், சில ஆண்டுகளுக்கு
முன்பு நான் வேலை செய்த இதற்குப் பக்கத்தில் உள்ள சுரங்கத்திற்கும்
இடையே ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்தச் சுரங்கத்தை நாம்
அடைந்துவிட்டால், எளிதாக மேலே சென்றுவிடலாம்; ஆனால், அச்சுரங்கத்தை
அடைவதற்கு நாம் (நம்மையே தாழ்த்திக்கொண்டு) தரையோடு தரையாக
ஊர்ந்து செல்ல வேண்டும்" என்றார். அவர் சொன்ன யோசனை எல்லாருக்கும்
சரியெனப் படவே, அவர்கள் அனைவரும் தங்களைத்
தாழ்த்திக்கொண்டு, தரையோடு தரையாக ஊர்ந்து சென்று, பக்கத்தில்
இருந்த சுரங்கத்தை அடைந்து, மேலே வந்தார்கள்.
ஆம், தங்களையே தாழ்த்திக் கொண்டு தரையோடு தரையாக ஊர்ந்து
சென்ற அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஆபத்திலிருந்து தங்களையே
காத்துக் கொண்டார்கள். ஆண்டவராகிய இயேசு நாம் அனைவரும்
வாழ்வு பெறுவதற்காகத் தன்னையே தாழ்த்திக்கொண்டார். அதைத்தான்
இன்று நாம் பாடுகளின் குருத்து ஞாயிறாகக்
கொண்டாடுகின்றோம்.
கடவுள் வடிவில் விளங்கிய இயேசு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சிப்
பீடத்தில் அமர்த்தப்படும் அரசியல் தலைவர்களே, அதிகாரம் தரும்
போதையில் அதை விடாமல் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இது
அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதிகாரத்தில் இருக்கும்
எல்லாருக்கும் பொருந்தும். (ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்)
ஆனால், இயேசு கிறிஸ்து இதற்கு முற்றிலும் மாறாக, கடவுள் வடிவில்
விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து
பற்றிக்கொண்டிருக்காமல், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின்
வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பாகின்றார்.
இவ்வாறு கடவுளோடு கடவுளாக இருந்த வார்த்தையாம் இயேசு, தம்மையே
வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்குக் ஒப்பானதன்
மூலம், நம்மீது கொண்ட தமது பேரன்பை வெளிப்படுத்துகின்றார்.
அத்தோடு அவர் நம்மோடு தம்மை ஒன்றித்துக் கொள்கின்றார்.
இத்தாலியைச் சேர்ந்த மெய்யியலாளரான அந்தோனியோ கிராம்சி,
"ஒருவர் துன்புறுகின்ற மற்றவரோடு தன்னை ஒன்றிணைத்துக்
கொள்ளாதவரை அவரது துன்பத்தைப் போக்க முடியாது" என்று
கூறுவார். கடவுள் வடிவில் விளங்கிய தம்மையே வெறுமையாக்கி,
அடிமையின் வடிவை ஏற்றி, மனிதருக்கும் ஒப்பானதன் மூலம் இயேசு
தன்னை மனிதரோடு ஒன்றிணைத்துக் கொள்கிறார்.
தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு:
இன்றைய காலக்கட்டத்தில் தாழ்ச்சி என்பது ஒரு காரியத்தை அல்லது
ஒரு செயலைச் சாதிப்பதற்காக கூழைக் குப்பிடு போடுவது என்ற
அளவில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. உண்மையான
தாழ்ச்சி என்பது கூழை கும்பிடு போடுவது அல்ல, மாறாக, மற்றவருடைய
உயர்வுக்கு ஒருவர் எந்தளவுக்கும் கீழே இறங்கி வருவது ஆகும்.
இத்தகைய தாழ்ச்சிக்கு இயேசுவே மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கின்றார்.
ஏற்கெனவே, கடவுள் வடிவில் விளங்கிய அவர் தம்மையே
வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்
என்று பார்ப்போம். அவர் அத்தோடு நின்றுவிடாமல், சாவை ஏற்கும்
அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டார். சிலுவைச்
சாவு என்பது அக்காலத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட மிகவும்
கொடிய தண்டனை. அத்தகைய தண்டனயை இயேசு கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம் துன்புறும் ஊழியனைப் பற்றி, அதே நூலில் இடம்பெறும்
நான்கு பாடல்களில் ஒன்று. மற்றவை எசாயா 42: 1-9, 49:1-3,
52: 13-53: 12 ஆகிய பகுதிகளில் இடம்பெறுகின்றன. இன்றைய முதல்
வாசகமாகத் தரப்பட்ட இறைவாக்குப் பகுதியில், துன்புறும் ஊழியன்
சிறிதும் கிளர்ந்தெழாமல், அடிப்போர்க்கு முதுகையும்,
தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் ஒப்புவிக்கின்றார்
என்று வாசிக்கின்றோம். இவ்வார்த்தைகளை இயேசுவோடு அப்படியே
பொருத்திப் பார்க்கலாம். இயேசு அடித்து நொறுக்கப்பட்டார்.
அவமானப்படுத்தப்பட்டார். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டுக்
கொல்லப்பட்டார். இவையெல்லாவற்றையும் அவர் கீழ்ப்படிதலோடும்
தாழ்ச்சியோடும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு நாமெல்லாம்
வாழ்வு பெறுவதற்காகச் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு இயேசு
தம்மையே தாழ்த்திக் கொண்டார்.
கடவுளால் உயர்த்தப்பட்ட இயேசு:
யூதர்களின் தால்முத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இவை:
"தங்களைத் தாழ்த்துவோரைக் கடவுள் உயர்த்துவார்; தங்களை உயர்த்துவோரைக்
கடவுள் தாழ்த்துவார்" (Er, 13a). இச்சொற்றடரின் முதல் பகுதி
இயேசுவுக்கு அப்படியே பொருந்திப் போகுகின்றது. இயேசு
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குத் தம்மை தாழ்த்தியதால்,
கடவுள் அவரை மிகவும் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை
அவருக்கு அருளினார். மேலும்,
'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என
எல்லா நாவுமே அறிக்கையிடும் என்கிறார் பவுல்.
இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டதும், அதனால் அவர் கடவுளால்
உயர்த்தப்பட்டதும், நாம் ஒவ்வொருவரும் பிறர் வாழ்வு பெறுவதற்காக
நம்மையே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.
இன்றைக்குப் பலர் தான் என்ற ஆவணத்தில் ஆடுவதைக் காணமுடிகின்றது.
இவர்கள் வயலில் உள்ள களைகளைப் போன்று ஒருநாள் பறித்து எறியப்
படுவார்கள். ஆனால், தாழ்ச்சியோடு இருப்பவர்கள் முற்றிய கதிரைப்
போன்று இருப்பார்கள். இவர்கள் நிறைந்த ஆசியைப் பெற்றிருந்தபோதும்
அதை மற்றவர் வாழ்வுபெறும் பொருட்டுக் கொடுத்துத்
தாழ்ச்சியோடு இருப்பர். இத்தகையோர் கடவுளால் உயர்த்தப்படுவர்.
ஆகவே, நாம் இயேசுவைப் போன்று வாழ்ந்தோமெனில் கடவுளால் மிகவும்
உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.
பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு
வாசிக்கின்றோம்: "கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின் கீழ் உங்களைத்
தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்"
(1 பேது 5:6). எனவே, நாம் கடவுளுக்கு முன்பாக நம்மையே
தாழ்த்துவோம், கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.
சிந்தனைக்கு:
ஒன்றுமில்லாமையிலிருந்தே கடவுள் மனிதர்களைப் படைத்தார்.
அவர்கள் கடவுளுக்கு முன்பாகத் தாங்கள் ஒன்றுமே இல்லை என
உணராத வரையில், கடவுளால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
எனவே, நாம் கடவுளுக்கு முன்பு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,
தாழ்ச்சியோடு வாழ்வோம். அந்தத் தாழ்ச்சி மற்றவருடைய வளர்ச்சிக்குப்
பெரிதும் உதவுமாறு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் அனைவராலும்
கைவிடப்பட்ட ஒரு சிறுவனை அழைத்து வந்து தன் சீடனாக்கினார்.
தனக்குக் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் அவனுக்குக்
கொடுத்து மகிழ்ந்தார் முனிவர். ஒருநாள் காட்டுப் பகுதியில்
கிடைத்த பழத்தின் பாதியைத் தன் சீடனுக்குக் கொடுத்தார்.
சுவை எப்படியுள்ளது என்றும் கேட்டார். அருமையாக உள்ளது என்றான்
சீடன். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிச்
சாப்பிட்டான். இருந்த மீதியை வாயில் சுவைத்த முனிவர் கசப்பால்
கீழே துப்பினார். இவ்வளவு கசப்பான பழத்தை உன்னால் எப்படி
சாப்பிட முடிந்தது என்று சீடனைப் பார்த்து முனிவர்
கேட்டார். அப்போது சீடன், பழம் கசப்புதான். ஆனால் இதற்கு
முன்பாக நீங்கள் இனிப்பான பழங்களைத் தந்தீர்கள். எனவே இப்பழத்தைக்
கொடுத்த உங்களின் அன்பு பெரியது. இதயம் விசாலமானது என்றான்.
அன்புள்ள தந்தையை நினைத்து, அவரது திட்டத்தை நிறைவேற்ற, இறையாட்சியை
மலரச் செய்ய கசப்பான பாடுகளையும், களிப்புடன் ஏற்றுக்கொண்டு
நமக்காக எருசலேம் நோக்கிப் பயணமானார் இயேசு. தந்தையின்
விருப்பத்தை நிறைவேற்றத் தன்னையே வழங்க முன் வருகிறார்.
ஆம்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் மாநகர வீதிகளில்
ஒரு மாபெரும் ஊர்வலம் அரங்கேறியது. இது அரசியல் ஊர்வலம் அல்ல.
ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட
ஊர்வலமும் அல்ல. சாமானிய மக்கள் பயணத்திற்காகப் பயன்படுத்தும்
கழுதைக் குட்டியில் அமர்ந்து அமைதியாகச் சென்றார். சமாதானத்தையும்,
சாந்தத்தையும் குறிக்கும் கழுதையின் மீது வருவது மிகப்
பொருத்தமன்றோ! தம்மையே முற்றிலும் வெறுமையாக்கி, மனிதருக்கு
ஒப்பாகி, அடிமையின் தன்மை பூண்டு, மக்களோடு கொண்டுள்ள அன்பையும்,
தோழமையையும் வெளிப்படுத்தும் பவனியாக அமைந்தது இயேசுவின்
பவனி. இது பாவத்தை வென்று பாசத்தை உருவாக்கும் ஊர்வலம். இயேசுவின்
இலட்சியப் பயணம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே
(லூக். 2:49), என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே
எனக்கு உணவாக உள்ளது (யோவா. 4:34) என்றார் இயேசு.
இயேசுவின் பவனியில் சோகம் உண்டு, அது சுகமாக மாறும். துன்பம்
உண்டு. அது இன்பமாக மாறப் போகிறது. வீழ்ச்சி உண்டு, ஆனால்
வீழ்ச்சிக்குப்பின் எழுச்சி காத்திருக்கிறது. பாடுகளுக்குப்
பின்னால் புதிய பாதை உண்டு என்பதை இயேசுவின் எருசலேம் பயணம்
நம்மைச் சிந்திக்க அழைக்கின்றது. இயேசு, தன் தந்தையின் பலத்தையே
ஆதாயமாகக் கொண்டார். பணிவிடை பெறுவதற்கு அல்ல. பணிவிடை
புரியவே வந்தேன் என்பதை வெளிப்படுத்துகிறார் இயேசு (மத்.
20:28).
இயேசுவின் இலட்சியப் பயணத்தில் அவருக்குக் கொள்கை மாற்றமோ,
தடுமாற்றமோ இல்லை. அவர் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும்
தயாராக இருந்தார்.
நாமும் இயேசுவின் பாதையில் நமது பயணத்தைத் தொடருவோம். ஓசான்னா!
என்று மட்டும் வாயாரப் பாடிவிடாது, அவரது இலட்சியக் கனவுகளை,
கொள்கைகளை நனவாக்க உறுதி கொண்டு நாமும் அவரோடு இணைந்து
பாடுகளின் பாதையில் பயணம் ஆவோம்.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனம்
வருந்துவோம்! மனம் திரும்புவோம்!
தாம் எதிர்கொள்ளப்போகும் பாடுகளைப்பற்றி இயேசுவுக்குத்
தெரியும். தெரிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு புகுந்தார்.
தாவீதின் மகனுக்கு சொன்னா என்று பாடி எருசலேம் நகருக்குள்
அழைத்துச் செல்லும் இதே மக்கள் சில தினங்களில் ஒழிக, ஒழிக,
இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சொல்லப்போகின்றார்கள்
என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் பிடிபடப்போவது, அவரை
விட்டு சீடர்கள் ஓடிப்போக இருப்பது, அவர் மீது சிலுவை சுமத்தப்படப்போவது,
தாம் சிலுவையிலே இறக்கப்போவது எல்லாமே இயேசுவுக்குத்
தெரியும்.
துன்பம் என்னும் வாள் அவர் தலைக்கு மேலே
தொங்கிக்கொண்டிருப்பதை அவர் அறிந்துமா எருசலேம் நகருக்குள்
நுழைந்தார்?
ஆம். அவருக்கு எல்லாம் தெரியும். இதற்குக் காரணம் என்ன? என்ற
கேள்விக்கு, துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை என்பதே பதிலாகும்.
இதோ துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை; பாடுகள் இல்லாமல்
பாஸ்கா இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட இரண்டு கல்வாரி நிகழ்வுகள்:
இதோ முதல் நிகழ்வு!
ஒரு நாள் மாலை ஒருவரைச் சந்தித்தேன். பச்சைக் குத்துதல் என்றால்
என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்றேன். ஆம். இதோ நானே
பச்சைக் குத்தியிருக்கின்றேன் என்று சொல்லி ஒரு சிலுவையை
அவர் வலது கையில் காட்டினார்.
பச்சைக் குத்தும்போது வலிக்குமா? என்று கேட்டேன். நிச்சயமாக
வலிக்கும். ஒரு நாள் முழுவதும் வலிக்கும் என்றார். இது அழிந்து
போகுமா? என்றேன். அதற்கு பச்சைச் குத்தியவர், உங்கள்
சொத்து, சுகம், நகை எல்லாம் அழிந்து போகலாம். ஆனால், இது
அழிவே அழியாது என்று சொன்னதாகச் சொன்னார். பச்சைக் குத்தி
5 ஆண்டுகள் ஆகின்றன; அப்படியே இருக்கின்றது; அழியவே இல்லை
என்றார்.
பச்சைக் குத்தப்படுவதால் ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள
அந்த நண்பர் தயாராக இருந்ததால் அவருக்கு அழியாத சின்னம் ஒன்று
கிடைத்தது.
இதோ இரண்டாவது நிகழ்வு! ஒரு மனிதருக்கு அவர் முதுகிலே சிங்கத்தின்
உருவத்தைப் பொறித்துக்கொள்ள, பச்சைக் குத்திக்கொள்ள ஆசை.
பச்சைக் குத்துபவரிடம் சென்றார். பச்சைக் குத்துபவர் பச்சைக்
குத்திக்கொள்ள விரும்பியவரைக் கீழே குனியச் சொல்லி மையைத்
தடவி ஊசியால் குத்தினார். சுரீர் என்றது. பச்சைக்
குத்திக்கொள்ளச் சென்றவர், இப்போ சிங்கத்தின் எந்தப் பாகத்தை
பச்சைக் குத்தப்போகின்றீர்கள்? அப்படின்னாரு ! அதற்குப் பச்சைக்
குத்துபவர், சிங்கத்தின் தலையை என்றார். பச்சைக் குத்துபவர்
குனிந்திருப்பவர் முதுகிலே சிங்கத்தின் தலையை வரைய ஊசியால்
குத்தினாரு! வலி தாங்க முடியல. வந்தவரு, தலை வேண்டாம்.
சிங்கத்தின் காலை மட்டும் பச்சைக் குத்துன்னாரு. அதற்குப்
பச்சைக் குத்துகின்றவர், தலை இல்லாத சிங்கத்தை பச்சைக்
குத்த முடியாது. வலியைச் சுமக்க நீங்கத் தயாராக இல்லை!
நீங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்கண்ணு சொல்லி அந்த ஆளை
வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாரு.
வாழ்க்கையிலே பரிசு பெற விரும்பினால் துன்பப்பட, வலியைத்
தாங்கிக்கொள்ள முன்வர வேண்டும்.
இயேசு பட்ட பாடுகள் எதுவும் வீண் போகவில்லை!
இவன் ஒரு பைத்தியக்காரன் என்றார்கள்!
இவன் ஒரு குடிகாரன் என்றார்கள்!
இவன் ஒரு தேசத்துரோகி என்றார்கள்!
இல்லாதது பொல்லாதது எல்லாம் அவர் மீது சுமத்தினார்கள். இயேசு
அவரைத் துன்புறுத்தியவர் யாரையும் எதிர்க்கவில்லை (முதல்
வாசகம்).
அவர்பட்ட வேதனை வீண் போகவில்லை. உயிர்ப்பு என்னும்
மாபெரும் பரிசை விண்ணகத் தந்தை அவருக்குக் கொடுத்தார்.
விண்ணகத் தந்தை அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலானப்
பெயரை அவருக்கு அருளினார் (இரண்டாம் வாசகம்).
குருத்து ஞாயிறாகிய இன்று இயேசு நமக்கு அருளும் அருள்வாக்கு
என்ன? எனதருமைச் செல்வங்களே ! என்னைப் போல நீங்களும் அனைத்துச்
சூழல்களிலும் நம்பிக்கை என்னும் கடலில் குதிக்கத் தயாராக
இருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு முத்து கிடைக்கும். அனைத்துத்
துன்பச் சுரங்கங்களுக்குள்ளும் நுழையுங்கள். அப்பொழுதுதான்
உங்களுக்குத் தங்கம் கிடைக்கும்.
பத்து மாதம் குழந்தையைச் சுமக்கத் தயாராக இல்லாத
பெண்ணினால் எப்படி குழந்தைக்குத் தாயாக முடியும்?
சுமைக்குப் பின்னால்தான் சுகம் ஒளிந்திருக்கின்றது. துன்பத்திற்குப்
பின்னால்தான் இன்பம் ஒளிந்திருக்கின்றது. வேதனைக்குப்
பின்னால்தான் சாதனை ஒளிந்திருக்கின்றது.
இதை உணர்ந்து செயல்படுங்கள். அப்போது உங்கள் இல்லமும், உள்ளமும்,
பணமும், பதவியும், படிப்பும், பட்டமும், பாசமும், அழகும்,
நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் உயிர்பெற்று எழுந்து
உங்களுக்கு 30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்கு பலன் தரும்.
மேலும் அறிவோம்:
துன்பம் உறவரினும் செய்க துணி(வு)ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் : 669).
பொருள் : துன்பம் பெரிதாகத் தோன்றும் என்றாலும் இறுதியில்
மகிழ்ச்சியை உண்டாக்கும் செயலைச் செயல் உறுதி பாட்டுடன்
நிறைவேற்ற வேண்டும்.
மதுரையிலிருந்து திருச்சிக்கு வந்த ஒரு பேருந்து துவரங்குறிச்சியில்
10 நிமிடங்கள் நின்றது. பேருந்து ஓட்டுநர். நடத்துனர் மற்றும்
பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி, காபி, டீ அருந்திவிட்டு
மீண்டும் பேருந்தில் ஏறினர். பேருந்து ஓட்டுனர் தமது இருக்கையில்
அமர்ந்தபோது, 'கியர்' கம்பி பிடுங்கப்பட்டு கீழே கிடப்பதைக்
கண்டு அதிர்ச்சி அடைந்து பயணிகளிடம், "கியர் கம்பியைப்
பிடுங்கியது யார்?" என்று கேட்டார். அப்போது ஒரு கிராமவாசி,
"நான்தான் பிடுங்கினேன். நான் மதுரையிலிருந்தே உங்களைக்
கவனித்தேன். நீங்கள் அந்தக் கம்பியைப் பிடுங்க அதை
முன்னும் பின்னும் இழுத்தீர்கள். உங்களால் முடியலை. நான்
ஒரே பிடுங்கிலே பிடுங்கிவிட்டேன்" என்று சொல்லிச்
சிரித்தார்.
அந்தக் கிராமவாசிக்குக் 'கியர்' கம்பியின் பயன்பாடு தெரியவில்லை.
எனவே அதைப் பிடுங்கி எறிந்தார். அவ்வாறே நாமும் சிலுவையின்
பயன்பாட்டை அறியாமல் அதைப் பிடுங்கி எறிய முயலுகிறோம்.
குருத்து ஞாயிறு, "ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து
ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், குருத்து ஞாயிறு
அன்று கிறிஸ்து எருசலேம் திருநகரில் நுழைந்தது தமது பாடுகளைச்
சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும்
கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை
கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக
மாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்து தமது வாழ்வின் இறுதி இலக்கைத் தெளிவாக அறிந்திருந்தார்.
எனவேதான், "இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே
எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்தார்" (லூக் 9:5) என்று
லூக்கா தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில், இறைவாக்கினர்
எவரும் எருசலேமுக்கு வெளியே மடிவதில்லை என்பதை அவர் நன்கு
அறிந்திருந்தார் (லூக் 13:33).
கிறிஸ்து தமது பாடுகளை நெஞ்சுறுதியுடன் எதிர் கொண்டார். முதல்
வாசகத்தில் எசாயா கூறுகிறார்: "அவர் தம்மைத் துன்புறுத்தியவர்களை
எதிர்க்கவில்லை. அவர்மேல் காறி உமிழ்ந்தவர்களுக்கு அவர் தம்
முகத்தை மறைக்கவில்லை. தமது முகத்தைக் கற்பாறையாக ஆக்கிக்
கொண்டார்" (எசா 50:6-7).
நமக்கும் வாழ்வில் இலக்குத் தெளிவு வேண்டும். துன்பங்களைத்
தாங்க நெஞ்சுறுதி வேண்டும். துன்பமின்றி இன்பமில்லை.
தோல்வியின்றி வெற்றியில்லை; சாவின்றி உயிர்ப்பில்லை; காயமின்றிப்
போர்க்கள மில்லை; தீயின்றி வேள்வி இல்லை; அலையின்றிக் கடலில்லை;
இரவின்றிப் பகலில்லை.
துன்பத்தைக் கண்டு பயந்து ஓடக் கூடாது. சுவாமி விவேகானந்தர்
சிறுவனாக இருந்தபோது அவரைத் துரத்திய நாயைக் கண்டு பயந்து
ஓடினார். அப்போது ஒரு பெரியவர் அவரிடம், "தம்பி! நாயை எதிர்த்து
நில்" என்றார். அவ்வாறே அவர் நாயை எதிர்த்தபோது, நாய் பயந்து
கொண்டு ஓடிவிட்டது. அன்றிலிருந்து துன்பத்தைக் கண்டு ஓடாமல்
அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை அவர் கற்றுக்
கொண்டார். அடுக்கடுக்காக வரும் துன்பத்தைக் கண்டு துவண்டு
போகாதவரைக் கண்டு, துன்பமே அவரை விட்டு ஓடிவிடும் என்கிறார்
வள்ளுவர்.
கிறிஸ்துவைப் பின்பற்றும் நாமும் நம்மையே வெறுமையாக்க
வேண்டும். நம்முடைய ஆணவத்தை அழிக்க வேண்டும். ஆணவத்தால் தரைமட்டமாகக்
கிட மனிதகுலத்தைக் கிறிஸ்து தமது சிலுவையால் அழித்து அதை
உயர்த்தி நிறுத்தினார். கிறிஸ்து நமக்கு வழங்கும் அடிப்படையான
போதனை: தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்
தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 18:14) என்பதுதான்.
கிறிஸ்துவை மக்கள் புகழ்ந்தபோது அவர் அவர்களுடைய புகழ்ச்சியால்
மதிமயங்கவில்லை. மனிதரை அவர் எளிதில் நம்பவில்லை. ஏனெனில்
மனிதரைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார் (யோவா
2:24-25). குருத்து ஞாயிறு அன்று 'ஓசான்னா' பாடிய அதே மக்கள்
(மத் 21:9), பெரிய வெள்ளி அன்று, "இவன் ஒழிக; அவனைச்
சிலுவையில் அறையும்" (லூக் 23:18-21) என்று கூறினர். இயேசுவோ
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சரி சமமாகக் கருதினார்.
நாமும் 'போற்றுவார் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவார்
தூற்றட்டும்" என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு
பொருட்டல்ல, புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப்
பாதிப்பதில்லை" (2 கொரி 6:8). பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவர்
ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. மனிதருக்கு உகந்தவராக
இருக்க முயலுபவர் எவரும் கிறிஸ்துவின் பணியாளராக இருக்க
இயலாது (கலா 1:10), கடவுளுடையவும் நமது மனச்சாட்சியினுடையவும்
அங்கீகாரம் நமக்குப் போதுமானது.
கிறிஸ்துவின் பாடுகளின்போது அவருடைய சீடர் ஓடி விட்டனர்;
தலைமைச் சங்கத்தினரும் மக்களும் அவரைப் புறக்கணித்தனர். ஆளுநர்
பிலாத்து கை கழுவிக் கிறிஸ்துவுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, முற்றிலும்
தனிமைப்படுத்தப்பட்டார். இத்தகைய நிலை தமக்கு வரும் என்பதை
முன்னறிவித்த கிறிஸ்து தம் சீடரிடம் கூறினார்: "நீங்கள் என்னைத்
தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாக இருப்பதில்லை.
தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16:32). பல வேளைகளில்
நமது உற்றார் உறவினர், நண்பர்கள் கூட நம்மைக் கைநெகிழ்ந்து
நமக்கு எதிராக நிற்கலாம். அவ்வேளைகளில் கடவுள் நம்மோடு இருக்கிறார்
என்பது நமக்குத் துணிவைக் கொடுக்கவேண்டும்.
"அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்" (எசா 43:5),
நம் கடவுள் நம்மைக் கைவிடுவதுமில்லை; நம்மை விட்டு விலகுவதுமில்லை.
இத்தகைய புனித எண்ணங்களுடன் இப்புனித வாரத்தைப் புனிதமாகக்
கடைப்பிடித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
அரசன் குதிரையின் மேல் வருகிறானா? போரிட வருகிறான் என்று
பொருள். கோவேறு கழுதையின் மீது வருகிறானா? சமாதானம் செய்ய
வருகிறான் என்பது சரித்திரம்.
இயேசு கழுதையின் மேல் அமர்ந்து பவனியாக வந்து சமாதானத்தின்
அரசர் (மத்.21;4-5) என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். அறிக்கையிடுகிறார்.
(செக்.9:10)
புதிதாக மனந்திரும்பிய கிறிஸ்தவன் அவன். பழைய சமயத்தைச்
சார்ந்த நண்பர்கள் பலருண்டு அவனுக்கு. அவர்கள் புதிதாகக்
கிறிஸ்தவனாக மாறிய அவனைக் கிண்டலடிக்க நினைத்தார்கள். "நீ
புதிதாக ஏற்றுக் கொண்டிருக்கும் கடவுள் எருசலேமுக்குப் பவனி
சென்றாரே, எதன் மேல் ஏறிச் சென்றார்?" என்று கேட்டார்கள்.
தன்னைக் கழுதையாக்குவதற்காகவே அவர்கள் இக்கேள்வியை எழுப்புகிறார்கள்
என்பதைப் புரிந்து கொண்டான். புதுக்கிறிஸ்தவன். எனவே அவன்
எதிர்க்கேள்வி கேட்கத் தொடங்கினான். "நீங்கள் புறப்பட்டு
வரும்போது குறுக்கே எது வந்தால் கெட்ட சகுணம்?" என்றான்.
"பூனை, எருமை முதலானவை எதிர் வந்தால்...." என்று பதில் உரைத்தனர்.
"சரி எது எதிர்ப்பட்டால் நல்ல சகுனம்?" என்று கேட்டதும்
"கழுதை வந்தாலோ, கனைத்தாலோ நல்ல சகுணம்?" என்று நண்பர்கள்
சொல்ல, "ஆம், உலகிற்கு நல்ல சகுனமாக, சமாதானத்தின் நற்செய்தியாக
வந்தவர் இயேசு என்பதை உணர்த்தவே இயேசு கழுதை மீது ஏறிச்
சென்றார்" என்று புதிதாக மனந்திரும்பியவன் உரைத்தான். வாயடைத்து
நின்றார்கள் வம்பளந்தவர்கள்.
கழுதை மீது அமைதியின் அரசராகச் சென்ற இயேசு சிலுவைச் சாவை
ஏற்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். எளிமையின் கோலத்தில்
மகிமையோடு மரணத்துக்குள் நுழைகிறார். "இயேசு ஒரு கழுதைக்
குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறி அமர்ந்தார். 'மகனே சீயோன்,
அஞ்சாதே! இதோ உன் அரசர் வருகிறார். கழுதைக் குட்டியின்
மேல் எறி வருகிறார்' என்று மறை நூலில் எழுதியுள்ளதற்கேற்ப
(செக்.9:9) அவர் இவ்வாறு செய்தார்" (யோ.12:14-15), விண்ணுலகைத்
தன் அரியணையாகவும் மண்ணுலகைத் தன் கால்மனையாகவும் கொண்ட
கடவுளின் மகன் (மத்.5:34,35) எளியவராய், அமைதியின் அரசராய்
(எசா.9:6) வருகிறார்.
கழுதை அமைதியின் சின்னம். உலகம் அனைத்திற்குரிய அமைதியைக்
கொண்டு வருபவர் இயேசு.
யாரும் ஏறாத கழுதைக் குட்டியின் மேல் பவனி. விண்ணரசு
தூய்மையானது, உலக மாசுகளால் கறைபடியாதது.
கழுதையை இலவசமாகப் பெறுகின்றார். இறைவன் தரும் மீட்பு
மீட்பால் வரும் அமைதி இலவசமானது. இயேசுவின் பெயரைச் சொல்லி
வேண்டும்போது நமக்குக் கிடைப்பது.
ஆனால் இயேசு கொண்டு வந்த அமைதியை, மீட்பை, ஒப்புரவை இந்த
உலகம் ஏற்குமா? இயேசுவுக்கு எப்போதும் இருந்த மனவலியின்
சித்திரிப்பை லூக்.13:34இல் பார்க்கிறோம். "எருசலேமே, எருசலேமே,
இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக்
கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறைக்கைக்குள்
கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்
கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு
விருப்பிமில்லையே!".
மக்கள் வெள்ளம் வானதிர 'ஓசன்னா என்று முழங்க, மெசியாவை அடையாளப்படுத்தும்
"தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர்
போற்றப்பெறுக" என வாழ்த்தி வரவேற்க, அதைப் பொறுக்காத பரிசேயர்களைப்
பார்த்து "இவர்கள் பேசாதிருந்தால் கற்கள் கத்தும்" என்கிறார்
இயேசு. இப்படி ஓர் உற்சாகச் சூழலில் "இயேசு எருசலேம் நகரை
நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்" (லூக். 19:41),
மனத்தை உறுத்தும் சோக வரிகள்!
இயேசு அழுகிறார். மனிதன் எப்போது கண்ணீர் வடிக்கிறான், கலங்கி
நிற்கிறான்? வாழ்க்கையில் தோல்வியுறும் போது, நினைத்தது
நடக்காத போது, எண்ணியது ஈடேறாத போது, இலட்சியங்கள்
நிறைவேறாதபோது... இயேசு அழுகிறார் என்றால் அவர் எண்ணியது
நிறைவேறவில்லையா? ஆம் உலகில் எங்கோ ஒரு மனிதன் இயேசு
சிந்திய இரத்தத்தால் மீட்பு அடையவில்லை எனில் அந்த ஒரு மனிதனைப்
பொருத்தவரை இயேசுவின் இலட்சியம் ஈடேறவில்லை. இயேசுவின்
வாழ்க்கையே படுதோல்வி, இயேசுவின் பாடுகள் மரணம் அத்தனையும்
வீண். "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்
கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது"
(லூக்.19:42) போற்றிப் புகழப்பட்டவர் போற்றிப் புகழப்பட்ட
ஒன்றால் அடைந்த ஏமாற்றம் அது! ஓசன்னா வாழ்த்துக்குப்
பின்னே ஒவ்வொருவர் மனத்தையும் ஊடுருவிப் பார்ப்பவர் அவர்.
நாம் அவரை எப்படிப் போற்றிப் புகழுகிறோம், அவருக்காக என்ன
செய்கிறோம் என்பதை விட அவர் நம்மைப் பற்றி என்ன
நினைக்கிறார், நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதன்றோ
முக்கியம்!
குருத்தோலைகளைச் சிலுவை வடிவில் செய்து பார்ப்பதில் ஆனந்தமடைகிறோமே,
நமது வாழ்வும் சிலுவையாக மாற வேண்டும், மீட்பினைத் தருகின்ற,
பிறருக்கு நன்மை செய்கின்ற, அதனால் பிறருக்குத் தன்னையே கையளிக்கின்ற
சிலுவையாக மாற வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை?
தூய அகுஸ்தினார் சொல்வது போல "ஒலிவ மரக்கிளைகளை அல்லது
மேலுடைகளை விரிப்பதற்குப் பதிலாக இயேசுவுக்கு முன் நம் உள்ளங்களை
விரிப்போம்".
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
******************************************************************************
ஆண்டவர் பெயரால் சென்று பேறுபெற்றவராவோமா!
ஒரு மறைமாவட்டத்திலே புதிய ஆயருக்கான திருவருட்பொழிவு
திருப்பலி நடைபெற இருந்தது. அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும்
பல்வேறு பங்குத் தளங்களிலிருந்து இறைமக்கள் திரண்டு இருக்க
ஆயராக திருநிலைப்படுத்தப்பட இருந்த குருவை தேரிலே அமரவைத்து
அழைத்து வந்தனர். அவரைப்பற்றி புகழ்ந்து முன்னுரை எல்லாம்
கொடுத்த பின் திருப்பலி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது.மறையுரை
வழங்க வந்த ஆயர் புதிய ஆயரை வரவேற்றவிதத்தை மேற்கோள்
காட்டி " வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட ஆடு " என அவ்வரவேற்பை
ஒப்புமைப் படுத்தினார். அனைவரும் சிரித்தனர் அதைக் கேட்டு.
ஆனால் அதில் எவ்வளவு பெரிய அர்த்தம் நிறைந்துள்ளது என்பதை
உணர முடிந்தது. ஆயர் என்பவர் எப்போதும் கொண்டாடப்படுவதில்லை
. அவர் எவ்வளவு சவால்க ளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்ற
உண்மையை அவ்வார்த்தைகள் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றன.
அன்புக்குரியவர்களே இன்று நாம் ஆண்டவர் இயேசுவின்
திருப்பாடுகளின் ஞாயிறை கொண்டாடுகிறோம். குருத்துக்களை ஏந்தி
ஓசன்னா பாடி இயேசுவை அரசரை போல வரவேற்று " ஆண்டவர் பெயரால்
வருகிறவர் ஆசி பெற்றவர் " என மக்கள் கோஷம் எழுப்பிய நிகழ்வை
நாமும் இன்று நினைவு கூறுகிறோம். அந்த வரவேற்புகளும் கோஷங்களும்
எதற்காக என்பதை அடுத்த சிலதினங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
அதுதான் ஆண்டவரின் பாடுகள்.
பின் ஏன் ஆண்டவரின் பெயரால் வருகிறவர் பேறுபெற்றவர் என்ற
முழக்கம் என நாம் யோசிக்கலாம். நிச்சயமாக ஆண்டவர் பெயரால்
நாம் செல்கின்ற போது நாம் பேறுபெற்றவர்களே. ஆனால் அந்த
பேறுபெற்ற நிலை நமக்கு இம்மையிலோ அல்லது உடனேயோ
கிடைப்பதில்லை. ஏனெனில் ஆண்டவரின் பெயரால் செல்வது சற்று
சவாலான காரியமே. மத்தேயுவின் மலைப்பொழிவில் ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார் "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து,
துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம்
சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!" என்று.
மேலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைத் தொடர்ந்த
எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்ட சீடருக்கு "
இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும்
சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட
இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."
மாற்கு 10:30 கூறுகிறார். ஆகவே ஆண்டவர் பெயரால் செல்லும்
போது நாம் அடையப்போகின்ற பேறுபெற்ற நிலைக்கு முன்னோடி
நமக்கு கிடைக்கும் துன்ப துயரங்களே.
பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து கடவுளால் அனுப்பட்ட
அத்தனைபேறும் பற்பல இன்னல்களுக்கு ஆளாயினர்.
நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் என எவரும் வாழ்கின்ற
காலத்தில் நற்சுகத்தை அனுபவித்ததில்லை. காரணம் அவர்கள்
ஆண்டவரின் பெயரால் நீதியையும் நேர்மையையும் அன்பையும்
அமைதியையும் எடுத்துச்சென்றனர். இவற்றை எப்போதுமே மக்கள்
வரவேற்றதில்லை. சுயநலமும் பாவமும் பலரின் கண்களை மறைத்தன.
அதேவரிசையில் இயேசுவும் சென்றார் ஆண்டவர் பெயரால். அவர்
கொண்டுவந்த அமைதி மகிழ்ச்சி அன்பு சமாதானம் சமத்துவம்
பலருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் சிலருக்கு நடுக்கத்தைத்
தந்தது. எனவே அவருக்கு கிடைத்ததெல்லாம் பாடுகளே.
அப்பாடுகள் தான் அவரை பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச்
சென்றது.
அதேபோல நாமும் ஆண்டவர் பெயரால் அன்பையும் அமைதியையும்
சமத்துவத்தையும் விதைக்கப் புறப்பட்டால் நமக்கும்
கிடைப்பது இன்னல்களே. ஆனால் இந்த இன்னல்களும்
துயர்களும்தான் நம்மை பேறுபெற்ற நிலைக்கு
அழைத்துச்செல்லும்.எனவே இயேசுவின் பாடுகளை நினைவு கூறும்
நாம் ஆண்டவரின் பெயராலேயே அவர் அத்தனை துன்பங்களையும்
ஏற்றுக்கொண்டார் என்பதையும் அதே ஆண்டவரின் பெயரால் அவர்
பேறுபெற்றவரானார் என்பதையும் நினைவு கூர்வோம். நாமும்
ஆண்டவர் பெயரால் செல்லும் போது நமக்கு இன்னல்களோடு கூட
ஆசியும் உண்டு என்ற மனநிலையோடு, துணிந்து ஆண்டவரின்
பெயரால் அன்பையும் நீதியையும் சமத்துவத்தையும்
எடுத்துச்செல்லும் கருவிகளாக மாற முயற்சிப்போம். அத்தோடு
கூட ஆண்டவரின் பெயரால் நம்மிடம் வருபவர்களை நல்ல
மனநிலையோடு ஏற்று அவர்களுக்கு எவ்வித இன்னல்களையும்
கொடுக்காத மக்களாய் நாம் வாழவும் முயற்சி செய்வோம்.
*இறைவேண்டல்*
அன்பு இறைவா! உமது பெயரால் உலகெங்கும் செல்ல ஆசிக்கும்
எமக்கு இன்னல்களை இயேசுவைப் போல ஏற்க வரம் தாரும். அதன்
மூலம் நாங்கள் ஆசி பெறுவோமாக ஆமென்.
அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ