ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

          புனித வெள்ளிழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
புனித வெள்ளியின் பலனை பெற்றுக் கொள்ள வந்திருக்கின்ற அன்புள்ளங்களே!    
B தவக்காலம்1  
இன்றைய திருப்பலிக்கு திருச்சிலுவை நம்மை வரவேற்கிறது! அது சிலுவையின்றி வெற்றி இல்லை என்ற விதியை விளக்குகிறது. சிலுவையை உற்று நோக்கி நமது அதில் படுத்துக் கிடக்கும் இயேசுவின் மீது நமது சிந்தனையை ஈடுபடுத்துவோம். நமது எண்ணங்களை ஈடேற்ற மண்ணகம் வந்த மாபரன் சிலுவையில் மரித்து தொங்குகின்றார்.

சிலுவை மரம் பதறுகிறது.... இயேசு சிலுவையை சுமந்த போது...
ஆணிகள் அலறுகின்றன.... இயேசுவின் கரங்களை துளைத்த போது....
சுத்தியல் கத்தி அழுகின்றது.... இயேசுவின் கால்களில் அடித்தபோது....
கல்வாரி மலை கதறுகிறது....இயேசுவை சிலுவையில் அறைந்த போது....
முள்ளுக்கு வலிக்கிறது. .... இயேசுவின் தலையில் இறங்கியபோது....
கல்லுக்கு வலிக்கிறது.... இயேசுவின் பாதங்களில் குத்தியபோது....
நம் மனம் வலிக்கிறதா?....நாம் பாவங்கள் செய்த போது....
நமது மனத்தை உலுக்கிப் பார்ப்போம்.

நமது பாவங்களால் தானே இந்த அவல நிலை.... இதை சிந்திப்போம்
மனம் மாற சிலுவையை உற்று பார்ப்போம். மனம் வருந்தி குலுங்கி அழுவோம். உலகத்தின் இரட்சணியம் இதிலே தான் தொங்கியது என்பதை நம்பிக்கையுடன் இதயத்தில் பதித்து உச்சரிப்போம். மறுவாழ்வு பெற நமது வாழ்வை நாமே உலுக்கிப் பார்ப்போம்.

சிலுவையினால் தான் மீட்பு என்பதை நமது சுவாசமாக்குவோம்....
சிலுவையை நேசித்தால் நமது வாழ்க்கை சிகரத்தில் இடம் பெறும்.....
சிலுவையை நேசித்தால் நமது சிந்தனை வலுப்பெறும்.....
சிலுவையை நேசித்தால் நமது துன்பங்கள் தீரும்.....
சிலுவையை நேசித்தால் நமது இன்பங்கள் பெருகும்.....
சிலுவையை நேசித்தால் நமது சங்கடங்கள் ஓடி விடும்.....
சுரிலவையை நேசித்தால் நமது சந்தோஷங்கள் பொங்கும்.....
சிலுவையினால் தான் மீட்பு என்பதை நமது சுவாசமாக்குவோம்.....

"நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை" என்பதே சிலுவையில் மரித்தவர் விரிவுரை....   நம் நண்பர்களை நேசிப்போம். 
வாழ்வில் வரும் சிலுவையை ஏற்றுக் கொண்டு இயேசுவின் பின்னால் செல்வோம்.. கல்வாரி உச்சியில் நிகழ்ந்த உச்சகட்ட கொடுமை நம் மாசு நிறைந்த உள்ளத்தை தூசு தட்டிவிடுகிறது.... சிலுவையை நேசிக்கவும்? நமது நண்பர்களை நேசிக்கவும்? நமது வாழ்வின் சுமைகளை எல்லாம் நேசிக்கவும் அருள் தரும் இந்த திருப்பலியில் மனமுருகி மன்றாடுவோம்.

இன்றைய வழிபாடானது
1. இறைவாக்குவழிபாடு
2. திருச்சிலுவை ஆராதனை
3. திருவிருந்து
என்ற மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்போது அருள் பணியாளார் இயேசுவின் மரணத்திற்கு வணக்கம் செலுத்தும் வகையில் தரையில் முகங்குப்புற விழுந்துசெபிக்கிறார். நாமும் அவரோடு இணைந்து செபிப்போம்.

(குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும் போது)

தற்போது குருவானவர் இயேசுவின் பாடுகளையும் இரத்தக்களங்களையும் நினைவுப்படுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும் அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் வெறுமையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மண்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.
எழுந்தவுடன் இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்குக்கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.

                                               
இறைவாக்கு வழிபாடு
முதல்வாசக முன்னுரை (எசா 52: 13 - 53: 12)

இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் வரும்போது எவ்வாறு பாடுபடப் போகிறார், துன்பங்களை ஏறகப்போகிறார், இவ்வுலகத்தை மீட்க கையளிக்கப் போகிறார் என்பதை இறைஏவுதலால் முன்னறிவிக்கிறார் எசாயா இறைவாக்கினர். எனவே வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (எபிரே 4: 14-16, 5: 7-9)

இயேசு கிறிஸ்து குருக்களிலெல்லாம் சிறந்த நித்திய தலைமைக்குரு. இயேசு கிறிஸ்து மற்ற குருக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அதோடு பழைய ஏற்பாட்டின் பலிப்பொருளுக்கும், புதிய ஏற்பாட்டின் செம்மறி பலியாகிய கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை இப்போது வாசிக்க கேட்போம்.

நற்செய்தி வாசகம் (யோவான் 18: 1-19, 42)
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1) நம் அனைவரின் மீட்புக்காகவும் உயிர் நீத்த எம் பெருமானே!
எம் திருச்சபைத் தலைவர்கள், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் துன்பத்தை ஏற்று இறை இன்பத்தை சுவைத்து, இறையரசுக்கு சான்று பகர உண்மைக்கு ஊன்று கோலாய் நின்று இறைபணி ஆற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) திருச்சிலுவையை மீட்பின் சின்னம் விடுதலையின் சின்னம் என மாற்றிய எம் இயேசுவே!
எம் நாட்டுத் தலைவர்கள் உருவாக்கும் புதிய திட்டங்கள் செயல் முறைகள் ஏழை எளிய மக்களுக்கு பாரமாக இராமல் மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியுடன் வாழ்ச் செய்வதாய் மக்களுக்கு பல்வேறு சூழல்களில் விடுதலை அளிப்பதாய் அமைந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 
3) நம்பிக்கையின் நாயகனே எம் இயேசுவே!
எங்களைத் தேடி வரும் அனைவருக்கும் நாங்கள் நம்பிக்கை நங்கூரமாய், வழிகாட்டும் ஒளி விளக்காய், கைத்தூக்கி விடும் உதவிக் கரமாய், பிறர் கண்ணீரைத் துடைக்கும் துணிவுமிகு உறவாய் இருந்து செயல்பட இறைவா! உம்மை மன்றாடுகிறோம்

4) அனைவரையும் மீட்க அவமானத்தை ஏற்றுக் கொண்ட அன்பு இயேசுவே !
எங்கள் அர்த்தமற்ற வார்த்தைகளால் பிறரை குறைகூறாமல், ஆதரவற்ற வார்த்தைகளால் பிறரை அவமானப்படுத்தாமல், எங்கள் சிந்தனையால், செயல்களால் அனைவரையும் ஈர்க்கும் அறச் செயல்களையே நாங்கள் செய்ய அருள்தர, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

5) மாண்புடன் மரித்த மாபரனே மக்களின் பாவக்கறையைப் போக்கிய கல்வாரி சிகரமே!
நாங்கள் செய்த சிறுசிறு தவறுகளை மன்னித்து எங்கள் குற்றங்களைப் போக்கி நாங்கள் எந்நாளும் மனித நேயம் மிக்கவர்களாய் வாழ்ந்திட, மனிதத்தை வளர்த்திட, பாதுகாப்பான உலகம் செய்திட, வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6) 33ஆண்டுகளில் தன் சமுதாயப் பணியை முடித்து சாவுக்கு சவுக்கடி கொடுத்து சாதனை படைத்த இயேசுவே!
எம் இளைஞர்கள் வாழ்க்கையில் எதிர் வரும் சிறுசிறு பிரச்சினைகளைக் கண்டு கலங்கி இள வயதில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் தடைக்கற்களை முன்னேறும் படிக்கற்களாய் மாற்றி, நாட்டிற்கு சமுதாயத்திற்கு நல்லது படைக்கும் படைப்பாளிகளாய் அவர்களை அமைத்திட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



                                            திருச்சிலுவை வழிபாடு:

இயேசுவின் வாழ்வில் சிலுவை தியாகம் செய்யத் தூண்டும் சின்னமாகி இன்று திருச்சிலுவை மரமாகி புனித வெள்ளி வழிபாட்டின் மையமாகி நிற்கிறது. இன்றைய கலாச்சாரம் தியாகம் என்ற சொல்லுக்கே கொள்ளி வைத்துவிட்டது. புனித வெள்ளியோ சிலுவையைக் கொண்டு தியாக வெள்ளியாக மாறி ஏழையரின் வாழ்வில் விடிவெள்ளியாக முளைத்துவிட்டது. கிரேக்கருக்கு மடமையானதும் யூதருக்கு இடறலானதும் பிற இனத்தாருக்குப் பொருளற்றதுமான சிலுவை இயேசுவின் மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுதலின் உரையாகிவிட்டது. இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டதால் வாழ்விழந்தோர் வாழ்வு பெற்றனர். வாழ்வு தந்த மரத்தை ஆராதிப்பது அர்த்தமுள்ளது. வரம் தந்த மரத்தை நோக்கி கரம் குவிப்பதும் சிரம் தாழ்த்துவதும் அருள் வேண்டுவதன் அடையாளமே! அருள் தரும் சிலுவையை ஆராதித்து வாழ்வின் தரம் உயர்த்துவோம்.


                                               
மறையுரை சிந்தனைகள்

மேல் முச்சு கீழ் முச்சு வாங்கி கல்வாரி மலையை நோக்கி இயேசு சிலுலையை சுமந்து செல்கிறார். அவரை ஒரு கூட்டம் பின் தொடர்கிறது. "ஏன் இங்கே கூட்டம் என்ன நடக்கிறது?" என்று அறியும் ஆவலுடன் அந்தக் கூட்டத்தை தாழ்ந்து பறந்தவாறு நோக்குகிறது. "அடடா என்ன கொடுமை! ஏன் இந்த மனிதனைப் பாடாய் படுத்துகிறார்கள். இவர் ஏன் இந்த சிலுவையை சுமக்க வேண்டும்." என்று சிந்தித்தபடியே அந்தச் சிறிய பறவை அந்த மனிதனின் ஒளி மிகுந்த முகத்தைப் பார்க்கிறது. தலையில் பொருத்தப்பட்ட முள் முடியால் முகமெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. "இந்த மனிதனை எங்கே இழுத்துச் செல்கிறார்கள்?" என்று ஆர்வம் மேலிட கூட்டத்தை பின் தொடர்ந்து செல்கின்றது இந்த ராபின் என்ற சிறிய பறவை.

கடைசியில் அந்தக் கூட்டம் கல்வாரி மலையின் மேல் கொல்கத்தா என்ற இடத்தில் நிற்கிறது. அந்த மனிதரை இழுத்து வந்த மனிதர்கள் கையில் சாட்டை, சுத்தியல், மற்றும் நீண்ட ஆணிகள். அந்த மனிதரிடமிருந்து சிலுவையை இறக்கி வைத்து அவருடைய ஆடையை உரிக்கிறார்கள். பின்பு அவரை சிலுவையின் சிலுவையின் மேல் படுக்க வைத்து.... அப்பப்பா..... கொடுமையிலும் கொடுமை....  அவருடைய கைகளிலும் கால்களிலும் நீண்ட ஆணிகளை வைத்து அறைகிறார்கள்.


அந்தச் சிறிய பறவையின் மனசு பதறுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் பறந்து கடைசியில் அவர்கள் வைத்திருந்த ஆணிகளை தன் சிறிய அலகால் கொத்தி தூக்கிச் செல்ல முயல்கிறது. அந்தோ பரிதாபம் அந்தச் சிறிய பறவையால் ஒரு ஆணியைக் கூட தூக்க முடியவில்லை.

சிலுவை உயர்த்தப்பட்டது. இந்த மனிதனின் துயரம் முடிந்தபாடில்லை. தலையைக் கொஞ்சமாய் உயர்த்தி விண்ணைப் பார்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை மங்கலாக சற்று நேரத்தில் மூச்சும் அடங்குகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பறவையின் மனம் வேதனையால் துடிக்கிறது. அவருடைய தலையை கூர்ந்து கவனிக்கிறது. தலையில் சூட்டப்படடிருந்த முள் முடியின் ஒரு முள் அவருடைய நெற்றிப் பொட்டில் தைத்து முகத்தில் இரத்தம் வழிந்து கண்களை மறைப்பதை பார்க்கிறது. அவருடைய தலையின் அருகில் பறந்து சென்று நெற்றிப் பொட்டில் தைத்துக் கொடிருக்கும் அந்த முள்ளை பிடுங்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறது. பின்னர் அந்த மனிதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.

கூட்டுக்குத் திரும்பிய ராபின் தன் மார்பு ரத்தத்தால் கறையாகி இருப்பதைக் கவனிக்கிறது. உடனே அருகில் இருந்த குளத்தில் சென்று கறையைக் கழுவுகிறது. கறை போகவில்லை. மாறாக இன்னும் அதிக சிவப்பாகிறது. சிலுவையில் உயிர் நீத்த அந்த மன்னனும் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

ஒருநாள் உயிர்த்தெழுந்த அந்த மனிதர், எதிர்காலம் குறித்த பயத்தில் கட்டுண்ட தன் சீடர்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி செல்கிறார். அப்பொழுது தன் தலை மேல் ஒரு சிறிய பறவை பறந்து கொண்டிருப்பதைக் கவனிக்கிறார். "அடடே..அன்று என் தலையில் அழுத்திக் கொண்டிருந்த முள்ளைப் பிடுங்கி அந்தப் பறவை தானே இது!" என்று அதன் மார்பில் படிந்திருந்த ரத்தக் கறையை வைத்து அடையாளம் கண்டு கொள்கிறார். எனக்கு உதவி செய்ததால் ஏற்பட்ட இரத்தக்கறை இனி எப்பொழுதும் உனக்கும் உன் சந்ததிக்கும் இருக்க வேண்டும் என ஆசீர்வதிக்கிறார்.

சின்னஞ் சிறு பறவையின் உதவியைப் போல நாமும் சின்னஞ் சிறு உதவியை நம் அன்பர் யேசுவுக்கு செய்ய முன்வருவோமா!
தலைமுறை தாண்டி நாம் பேசப்பட ஆசையா? சிலுவையை நேசிப்போம்.
அவமானச் சிலுவை இயேசுவை சுமந்ததால் அபிமானச் சிலுவையாக
    மாறிவிட்டது....
சிலுவையின்றி வெற்றி இல்லை.....
வெற்றி பெற ஆசையா? சிலுவையை ஆசையோடு சுமப்போம்.
சிலுவை மரத்தை தான் சுமந்து சிறந்த வாழ்வை அளிக்கும் நம் இறைவன்
     நம்மைக் கேட்கிறார். சிலுவையின் சலுகையை உணர்வாயா? பாவத்தில் விழாமல்
   அன்பின்    பாதையில் நீ பயணிக்கவே எனது இந்த நிலை.... இந்த வார்த்தை நமது
   செவியில் விழுகிறதா?
சிலுவையின் செம்மறியை நேசிப்போம்.....  செம்மறியும் நம்மை நேசிப்பார்.
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
 

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

மரம் என்னும் வரலாறு

நம்மைச் சுற்றி நாம் காண்கின்ற ஒவ்வொரு மரமும் ஒரு வரலாறு. எங்கோ கிடந்த விதையை காற்று சுமந்து வந்து நம் வீட்டருகில் விட்டிருக்கலாம். ஏதோ ஒரு பறவை அதை எச்சமாக நம் தோட்டத்தில் விதைத்திருக்கலாம். அல்லது நாமே அதை ஒரு விதையாகவோ, கன்றாகவோ நட்டிருக்கலாம். பு+மிக்குள் புதைக்கப்படுகின்ற எந்த விதையும் போராடித்தான் வளர வேண்டும். பூமித்தாய் தன் வாயைத் திறந்து எளிதாக ஏற்பதில்லை. விதை போராடி நிலத்தின் உள்ளே செல்ல வேண்டும். போராட்டம் அத்துடன் முடிவதில்லை. முன்பைவிட அதிகம் போராடி நிலத்ததைக் கிழித்து வெளியே வர வேண்டும். முளைவிட்டு வெளியுலகைப் பார்த்தாலும் அதன் போராட்டம் தொடரும். யாராவது தெரியாமல் மிதித்து விடலாம். களையென்று கருதி பிடுங்கி விடலாம். ஆடு, மாடுகள், கோழிகள் தங்களுக்கு உணவாக்கி விடலாம். சிறு குழந்தைகள் அதை வைத்து விளையாடி அழித்து விடலாம்.

எல்லாவற்றையும் தாண்டி வளர்ந்தாலும், மழை, வெயில், காற்று, குளிர் அனைத்தையும் எதிர்கொண்டு ஒரு மரமாக உருவெடுக்கிறது. இந்த மௌனமான போராட்டத்தில் ஒவ்வொரு மரமும் பெருமிதத்தோடு தழுவிக்கொள்வது வரலாற்றில் வெற்றி. ஒவ்வொரு மரமும் ஒரு வரலாறு. சிலுவை என்ற மரமும் ஒரு வரலாறு. தொடக்கத்தில் மரத்தால் தோல்வி கண்ட மனுக்குலத்தை சிலுவை மரம் வெற்றிபெற வைக்கின்றது. சிலுவை மரமும் ஒரு வெற்றியின் வரலாறுதான். முதற்பெற்றோரிடம் வாக்குறுதியாக இடப்பட்ட விதை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, நீதித்தலைவர்கள், தாவீது, சாலமோன் என வளர்ந்து எசாயா, எரேமியா என நீருற்றப்பட்டு இயேசு கிறிஸ்துவில் கனிகிறது இந்த மீட்பின் மரம். சிலுவை என்றால் அவமானம், வலி, அவலம், இறப்பு என்ற நிலை கிறிஸ்துவில் பெருமை, மகிழ்ச்சி, உயர்வு, வாழ்வு என மலர்கிறது. இந்தச் சிலுவை என்பதை வெறும் மரம் என்று நாம் எடுத்துக்கொண்டாலே அத நமக்கு சவால்விடும் மரமாக, வரலாறு படைக்கத் தூண்டும் மரமாக இருக்கின்றது. சிலுவை மரத்தின் முப்பரிமாணச் சவால்கள்:
சிலுவை நம் பார்வையை அகலமாக்குகின்றது
சிலுவை நமக்கு பெருமை உணர்வைத் தருகின்றது
சிலுவை நம் வாழ்விற்கு சமநிலையைத் தருகின்றது

சிலுவை நம் பார்வையை அகலமாக்குகின்றது
நாம் சாதாரணமாக ஒரு மரத்தில் ஏறிப் பார்க்கும்போது தரையிலிருந்து பார்க்கும் பார்வையைவிட நம் பார்வை அகலமாகின்றது. ஒரு சிலரை மட்டுமே பார்க்கின்றோம் என்ற நிலை மாறி நம்மால் பலரைப் பார்க்க முடிகின்றது. கீழிருக்கும்போது நம் பார்வைக்கு மறைவாய் இருந்தது தெளிவாகின்றது. இயேசு சிலுவையில் நின்றபோதுதான் வாழ்க்கைப்பாடமும் அவரது வாழ்வில் வெளிப்படுகின்றது. ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டுங்கள் உங்கள் பகைவர்களை மன்னியுங்கள் என்று பாடம் சொன்ன இயேசு சிலுவையில் நின்றபோது தந்தையே இவர்களை மன்னியும் என்று வாழ்ந்து காட்டுகின்றார். நாம் நம் வாழ்க்கைச் சூழலில் உறவுகளில் விரிசல்கள் விழும்போது நமது குறுகிய பார்வையினால் விரிசல்களைப் பெரிதாக்கிவிடுகின்றோம். சாதாரண நிலையிலிருந்து கொஞ்சம் மேலே எழுந்து சிந்தித்தோமென்றால் நம் பார்வை பெரிதாகும். நாம் ஒருவர் மற்றவரை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்.

சிலுவை நமக்கு பெருமை உணர்வைத் தருகிறது

நாம் அனைவருமே வீட்டின், பணியிடங்களின் மொட்டை மாடிக்கு எப்போதாவது ஏறியிருப்போம். துணிகளை உலர்த்த, வடாகம் காயப்போட, துப்புரவுப் பணிக்கு, மராமத்துப் பணிகளுக்கு என்ற மாடி ஏறுகின்ற நாம் மாடியிலிருந்து கீழே குனிந்து பார்த்தபோது நம்மையறியாமலேயே தொற்றிக்கொண்ட ஒரு உணர்வு பயம். ஆனால் பயம் உடனடியாக மறைந்த ஒரு வித பெருமித உணர்வு நம்மில் பிறக்கின்றது. கீழே நிற்கின்ற மனிதர்கள், சாலைகளில் செல்லும் வாகங்கள், செடி, கொடிகள், என்று இந்த உலகமே நம் காலடிகளுக்குள் வந்து விட்டதாக அந்த நேரத்தில் நாம் உணர்கிறோம். நானே ராஜா, நானே ராணி என்ற வெற்றியுணர்வு நம்மில் வருகின்றது. சிலுவை மரமும் இயேசுவுக்குப் பெருமித உணர்வு தந்ததால்தான் தான் துன்புற்ற நிலையிலும் நல்ல கள்வனைப் பார்த்து நீ இன்றே என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என்ற அரசாட்சியில் அவனுக்கிருந்த பங்கை ஆணித்தரமாக வாக்களிக்கின்றார். நாமும் இந்த மரத்தில் இயேசுவோடு ஏறினோம் என்றால் நமது தாழ்வு மனப்பான்மைகளுமம், இயலாது என்கிற மனமும் மாறி என்னால் முடியும் என்கிற பெருமிதம் நம்மில் பிறக்கும்.

சிலுவை நம் வாழ்விற்கு சமநிலையைத் தருகின்றது

சிலுவை இரண்டு கோடுகளின் சங்கமம். நெடுக்கும், குறுக்கும் சந்திக்கும் ஒரு அடையாளம். இது நம் வாழ்வின் சமநிலையைத் தூண்டுகிறது. ஒவ்வொரு மனிதரும் வேரூன்ற வேண்டும், விழுதுகளைப் பரப்ப வேண்டும் என்ற நிலையை அடையாளப்படுத்துவது இந்த சிலுவை மரம். சிலுவையின் நீளமான பகுதி இறையன்பில் வேரூன்ற நம்மை அழைக்கின்றது. இந்த வேரூன்றும் நிலையே நம்மை ஒளியின் மக்களாக மாறச் செய்கிறது. சிலுவையின் குறுக்காக வைக்கப்படும் பகுதி மானிடர் நடுவில் நாம் உப்பாக மாறி பிறரன்பில் விழுதுகளைப் பரப்ப நம்மை அழைக்கின்றது. வேரூன்றுதல் மட்டும் இருந்த விழுதுகள் பரப்பவில்லையெனில் நாம் ஆன்மீக அடிப்படைவாதிகளாக மாறி ஒருவர் மற்றவரை சபிக்கவும், குற்றப்படுத்தவும் தொடங்கி விடுவோம். வேர்கள் வேண்டாம் விழுதுகள் மட்டும் போதும் என்று மனுக்குலத்தின் விடுதலையை மட்டும் முன்னிறுத்தினால் அது நுனிப்புல் மேய்கின்ற நிலையாக மாறிவிடும். வேரூன்றுதலையும், விழுதுகள் பரப்புவதையும் சமநிலைப்படுத்துவதுதான் சிலுவை.

நாமும் அவரோடு சிலுவை மரம் ஏறுவோம். அவரோடு நம்மை அறைந்து கொள்வோம். நம் பார்வை அகலமாகட்டும். நம் உணர்வுகள் உயரட்டும். நம் வாழ்வு சமநிலை அடையட்டும். ஆமென்.

 
இதோ மனிதன்!

'இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.

பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்!' என்றான்.' (யோவான் 19:5)

இன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாற்றில் மையமாக இருப்பவை 'இதோ! மனிதன்' என்னும் இரண்டு வார்த்தைகள்தாம். கிரேக்கத்தில் 'இட்து ஹோ ஆன்த்ரபோஸ்' என இருக்கின்றது. 'மனிதன்' என்ற வார்த்தை தமிழில் 'ஆண்' என்று பாலினத்தை வேறுபடுத்துகிறது. ஆனால், கிரேக்கத்தில் இது பொதுவான பாலினம். ஆக, 'மனிதன்' என்ற இந்த வார்த்தை பெண் பாலினத்தையும் தன்னகத்தை வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.

யோவான் நற்செய்தி நூலில் யாரெல்லாம் இயேசுவைச் சந்திக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே இயேசுவைப் பற்றிய அறிக்கையையும் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக,

'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி!' என்கிறார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:36)
'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (1:49)
'ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர்' என்கிறார் நிக்கதேம் (3:2)
'இவர் மெசியாவாக இருப்பாரோ' என்கிறார் சமாரியப் பெண் (4:29)
'ஆம் அண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர்' என்கிறார் மார்த்தா (11:27)

இந்த வரிசையில் பிலாத்து செய்யும் அறிக்கைதான், 'இதோ! மனிதன்!'
இந்த இரண்டு வார்த்தைகளை நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

பிலாத்துவின் இந்த அறிக்கை இயேசுவின் பாடுகள் வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், பிலாத்து இப்படி சொல்லி முடித்தவுடன், 'சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!' என மக்கள் குரல் எழுப்புகின்றனர். அதன் பின் நிகழ்வுகள் வேகமாக ஓடுகின்றன.

பிலாத்துவின் இந்த வார்த்தைகளை நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம்:

அ. படைப்பு மற்றும் மீட்பின் துவக்கம்

படைப்பின் தொடக்கத்தில் விண், மண், கதிரவன், நிலவு, கடல், தாவரம், உயிரினம் என உலகைப் படைத்து அணி செய்த கடவுள் இறுதியாக ஆதாமைப் படைத்து இவ்வுலகில் வைத்தபோது, 'இதோ! மனிதன்!' என்கிறார். படைப்பு அப்போதுதான் அழகும் நிறைவும் பெறுகிறது. இவ்வாறாக, படைப்பின் சிகரமாக, மாண்பாக மனிதன் படைக்கப்படுகின்றார். அங்கே கடவுள், 'இதோ! ஆண்!' என்று சொல்லவில்லை. மாறாக, 'இதோ! மனிதன்!' என்று ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்தையும் ஒற்றைச்சொல்லில் சொல்லிவிடுகின்றார்.

'இதோ! மனிதன்!' - இனி இவன் இந்த உலகைப் பார்த்துக்கொள்வான் என்று கடவுள் முன்மொழிகின்றார். மனிதன் படைக்கப்பட்டவுன் படைப்பு உயிர்கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.

அன்று கடவுள் செய்ததுபோலவே, இன்று பிலாத்து மீட்பு என்ற இரண்டாம் படைப்பைத் தொடங்கி வைக்கின்றார். அங்கே முதல் ஆதாம் 'இதோ மனிதன்' என்று காட்டப்பட்டார். இங்கே இரண்டாம் ஆதாம் அப்படியே காட்டப்படுகின்றார். 'இதோ மனிதன்' என்று இயேசு முன்வைக்கப்பட்டவுடன் மீட்பின் இயக்கம் உயிர்பெறுகிறது.

ஆ. நிர்வாணம்-வெறுமை-தனிமை-கையறுநிலை
'இதோ மனிதன்' - என்னும் வார்த்தைகள் மிகவும் சோகமான வார்த்தைகள். இந்த வார்த்தை நம் எல்லாருக்கும் பொருந்தும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக யாரும் உடனில்லாமல் படுத்திருக்கும்போது, கையில் காசு இல்லாமல் வயிற்றில் பசியோடு ஓட்டலைக் கடந்து செல்லும்போது, நீண்டதூர பயணத்தை தனியாக மேற்கொள்ளும்போது, திருமணம் நடக்கும்போது, அருள்பணி மற்றும் துறவற வாழ்விற்குள் அடியெடித்து வைக்கும்போது என வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும், இந்த உலகமே நம்மை பார்த்து 'இதோ மனிதன்' என்று சொல்வதாக நாம் உணர்ந்திருப்போம்.

'இதோ மனிதன்' என்பது பிலாத்து பயன்படுத்தும் உச்சகட்ட கேலிச்சொல். எப்படி? யோவா 18:28-40ல் இயேசுவை, 'இதோ அரசன்' என்று சொல்லி மக்கள் பிலாத்துவிடம் கையளிக்கிறார்கள். யோவா 19:7ல் இயேசுவை, 'இதோ இறைமகன்' என்று மக்கள் சொல்கிறார்கள். ஆக, மக்களின் இந்த இரண்டு சொற்களையும் கேலி செய்து, 'இதோ மனிதன்' என்கிறார் பிலாத்து.

'அரசன் என்றால் இயேசு தனக்காக போரிட்டிருக்கலாம்!' 'இறைமகன் என்றால் பிலாத்து உட்பட அங்கே கூடியிருக்கிற எல்லா மக்களையும் அழித்திருக்கலாம்!' என்ற நினைப்பில் பிலாத்து இயேசுவை வெறும் 'மனிதன்' என்று சொல்கின்றார். இது இயேசுவைச் சீண்டிப் பார்க்கும் வார்த்தையாகவும் இருக்கிறது. பாலைநிலத்தில் 'நீ இறைமகனாய் இருந்தால்' என அலகை இயேசுவைச் சோதிக்கின்றான். இங்கே பிலாத்து, 'நீ மனிதன்தான்! நீ வேறொன்றுமில்லை! ரொம்ப ஆடாத!' என்று இயேசுவிற்கு கோபமூட்டி அவரைச் சோதிக்க நினைக்கின்றார் பிலாத்து.

'இதோ மனிதன்' என்ற பிலாத்துவின் வார்த்தை ஒரே நேரத்தில் இயேசுவின் நிர்வாணம், வெறுமை, தனிமை, மற்றும் கையறுநிலையைக் காட்டுகின்றது. 'இதோ மனிதன் - இவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று இயேசுவை மக்கள் கூட்டத்திடம் கையளிக்கின்றார் பிலாத்து. தான் மனுவுரு எடுத்த வலியைவிட இயேசுவுக்கு இந்த வலிதான் அதிகமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறாக, 'இதோ மனிதன்' என்ற சொல்லாடல் ஒரே நேரத்தில் நம் மாண்பையும், நம் கையறுநிலையையும், நம் அழகையும், நம் அழுகையையும், நம் மதிப்பையும், நம் அவமானத்தையும் சொல்லிவிடுகிறது.

இதுவே வாழ்வின் மறைபொருளும்கூட.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்ப்பார் என்று வேகமாக நம்பிக்கை செய்தியைச் சொல்லிவிட வேண்டாம். ஏனெனில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் நம் நம்பிக்கையே. உயிர்ப்பின் நம்பிக்கையைவிட சிலுவைதரும் நம்பிக்கை ஆழமானது.

'இதோ மனிதன்' என்று நாம் உணர்ந்த நேரங்களையும், நம்முன் நம் சக மனிதர்கள் உணரும் நிகழ்வுகளையும் எண்ணிப்பார்ப்போம். இந்த நிலையில் நாம் மௌனம் மட்டுமே காட்ட முடியும்.
அந்த மௌனத்தில் நாம் மெய்ஞ்ஞானம் பெறுவோம்.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

சாவுக்குக் கையளித்த இயேசு!

தன்னையே தந்த மாணவன்:

2001, ஜனவரி மாதத்தில் நடந்த நிகழ்வு இது.

டோக்கியோவில் உள்ள இரயில் நிலையத்தில், கொரியாவிலிருந்து ஜப்பானில் தங்கி, கல்லூரிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த லீ சு ஹியூன் (Lee Su Hyun) என்ற கல்லூரி மாணவன் இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அப்போது இரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த செய்கோ சகமோட்டோ (Seiko Sakamoto என்ற பெரியவர் தவறித் தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். எதிரில் இரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.

அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் தண்டவாளத்தில் தவறிவிழுந்த பெரியவரைக் காப்பாற்றும் பொருட்டுக் கீழே இறங்கினான். ஆனால், வேகமாக வந்த இரயில் இருவர்மீதும் மோத, அவர்கள் இருவரும் உடல் சிதறி, அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள்.

இரண்டாம் உலகப் போரிலிருந்தே ஜப்பானுக்கும் கொரியாவிற்கும் நல்லதோர் உறவு கிடையாது. காரணம், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கொரியாவின்மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையில் கொரியா நாட்டு மாணவன் தன்னுடைய நாட்டின்மீது தாக்குதல் நடத்தியிருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெரியவரைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னுயிரையே தந்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படக் காரணமாக அமைந்தது.

இயேசுவும் சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்கினார். ஆம், இன்று நாம் ஆண்டவருடைய திருப்பாடுகளை நினைவுகூர்கின்றோம். சிலுவையில் இயேசு தன்னையே பலியாகத் தந்தது நமக்கு என்ன செய்தியை உணர்த்துகின்றது என்று சிந்திப்போம்.

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்:


இவ்வுலகில் பிறந்த மனிதர் அனைவரும் பொய்யர், பாவிகள் (உரோ 3:4), பாவிகள் தண்டிக்கப்படுவதும் தண்டனை பெறுவதும் முறை. ஆனால், இயேசு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பதுபோல், பாவம் செய்யாதவர். பாவம் செய்யாத இயேசு துரோகிகளுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் மிகக் கொடிய தண்டனையான சிலுவைச் சாவைப் பெற்றார் எனில், அது நமக்காகவும், நம்மீது கொண்ட பேரன்பிற்காகவும்தான்.

இயேசு அடைந்த துன்பத்தைப் போல் வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. அவர் காறி உமிழப்பட்டார்; கன்னத்தில் அறையப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்; ஆடையில்லாமல் விடப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், பார்ப்பதற்கேற்ற அமைப்போ, விரும்பத்தக்க தோற்றமோ இயேசுவுக்கு இல்லை. இவ்வாறு பாவமே செய்யாத இயேசு, நமது தீச்செயல்களைத் தாமே சுமந்து கொண்டார். ஆகவே, சிலுவையை நாம் உற்றுப் பார்க்கின்றபோதெல்லாம் இயேசுவின் பேரன்பு நமது நினைவுக்கு வந்து போகவேண்டும்.

துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்:


இயேசு நினைத்திருந்தால், கெத்சமனித் தோட்டத்தில் அவர் வேண்டிக் கொண்டதுபோல், சிலுவைச் சாவு என்ற துன்பக் கிண்ணம் வேண்டாம் என்று விலகி இருந்திருக்கலாம்; ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவர் சிலுவைச் சாவு என்ற துன்பக் கிண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

இயேசு துன்பக் கிண்ணத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டதன் மூலம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுத் தருகின்றார். அதுதான் கீழ்ப்படிதல் ஆகும். இயேசு இறைமகன்; அவர் கடவுள் வடிவில் விளங்கியவர். அப்படியிருந்தும் பாவத்திற்கு அடிமையாய் இருந்த இவ்வுலகை மீட்க வேண்டும் என்ற தந்தையின் திருவுலத்திற்கு அவர் கீழ்ப்படிந்தார். இதன்மூலம் கடவுளின் திருவுளம் அவர் கையில் சிறப்புற்றது.

திருப்பாடல் 40:8 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "என் கடவுளே உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்." இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் அடைந்தார். இதன்மூலம் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனில், அவர் வழியில் நடக்கின்ற நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்படி நாம் கடவுளுக்கும் இயேசுவுக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றபோது மீட்படைவோம். இதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறுதியில் மிக அழகாக வாசிக்கின்றோம். ஆகவே, இயேசு தந்தைக் கடவுளின் திருவுலத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தது போன்று நாம் ஒவ்வொருவரும் கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.

நமக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வோம்:

இவ்வுலகில் தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவுகள் என்று தன்னலச் சேற்றில் சிக்கித் தவிப்போர் பலர் உண்டு. இவர்களால் இந்த மானுடத்திற்கு எந்தவொரு பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கவிக்கோ அப்துல் இரகுமான் சொல்வது போல் பிச்சைக்காரர்கள்! ஏனெனில், பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு, பதிலுக்கு எதையும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். கடவுளிடமிருந்து அவரது ஒரே மகன் இயேசுவின் பாடுகளின் வழியாக எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொண்டு, அதை நாம் மற்றவர்களுக்குத் திருப்பித் தராவிட்டால் ஒவ்வொருவரும் பிச்சைக்காரர்கள்தான்.

அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இது குறிப்புப் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில், "வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்" (2 கொரி 5:15) என்று கூறுகின்றார். ஆதலால், கிறிஸ்துவின் பாடுகளினாலும், அவரது உயிர்ப்பினாலும் ஆசிகளைப் பெற்றுக்கொண்ட நாம் அவற்றை மற்றவருக்கு வழங்கவேண்டும்.

தன்னலத்தோடு வாழாமல், இயேசுவைப் போன்று பிறர் நலத்தோடு வாழும்போது நமக்குத் துன்பங்கள் வருமே! அப்போது நாம் என்ன செய்வது என நாம் நினைக்கலாம். பிறர் நலத்தோடு நாம் வாழும்போது துன்பங்கள் வரலாம்; அவை நிரந்தரமல்ல. இதையே பவுல், "இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை" (உரோ 8:31) என்று கூறுகின்றார்.

எனவே, இயேசுவின் பாடுகளையும், அவரது சிலுவைச் சாவையும் நினைவுகூரும் நாம் அவரது பேரன்பை எண்ணிப் பார்த்து, அவரது அன்பிற்குச் சாட்சிகளாக வாழ, கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து நடப்போம். கடவுளின் திருவுளம் என்பது தன்னலத்தைத் துறந்து, பிறர் நலத்தை நாடுவது. இத்தகையதொரு வாழ்க்கை வாழ்ந்து, கடவுளின் திருவுளம் நம் கையில் சிறப்புறச் செய்வோம்.

சிந்தனைக்கு:

'நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை' (எபி 13:16) என்பார் எபிரேயர் திருமுகத்த்தின் ஆசிரியர். எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்வால் பிறருக்கு நன்மைகள் செய்து, இறையன்புக்குச் சாட்சிகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


 
அவர் நமக்காக மரித்தார்

அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டபோது, அந்நாட்டு அரசாங்கமானது, தன்னுடைய நாட்டிலிருந்த பெரும்பாலான ஆண்களை இராணுவத்தில் சேர்ந்து போர்புரிய வேண்டுமென்று கட்டாயப்படுத்தியது. தன்னுடைய மனைவியை இழந்து, ஒரே ஒரு மகனோடு வாழ்ந்து வந்த விவசாயி ஒருவரையும் அமெரிக்க அரசாங்கமானது விட்டுவைக்கவில்லை. அவரும் இராணுவத்தில் சேர்ந்து, போர்புரியுமாறு அவரைக் கட்டாயப்படுத்தியது.

அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனைவி இல்லாமல், தன்னுடைய மகனை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்ட அந்த விவசாயி, ஒருவேளை தானும் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் போர்புரியும் பட்சத்தில், தன்னுடைய மகனை யார் பராமரிப்பார் என்ற குழப்பத்தில் இருந்தார்.

அந்த நேரத்தில் தனக்கென்று எந்த ஒரு சொந்தமும் இல்லாது இருந்த இளைஞன் ஒருவன், அந்த விவசாயிக்காக தான் இராணுவத்தில் சேர்ந்து, போர்புரிய முன்வந்தான். இராணுவமும் அதற்குச் சரி என்று ஏற்றுக்கொண்டது.

போர்க்களத்திற்குச் சென்ற அந்த இளைஞன், முதல்கட்டமாக நடந்த போரில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தான். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட விவசாயி கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் போர்களத்திற்குச் சென்று, இறந்த அந்த இளைஞனின் உடலை எடுத்து வந்து, தன்னுடைய வீட்டுக்குப் பின்புறம் இருந்த கல்லறைத் தோட்டத்தில் அவனைப் புதைத்தான். அந்தக் கல்லறையின் மேலே இப்படியாக எழுதி வைத்தார் "இவன் எனக்காக மரித்தான்" என்று. (He Died For Me).

யாரோ ஒரு விவசாயிக்காக அந்த இளைஞன் தன்னுடைய உயிரையே தந்தது போன்று, பாவிகளாகிய நமக்காக ஆண்டவர் இயேசு தன்னுடைய இன்னுயிரையே தந்தார். அதைதான் இன்றைக்கு பாடுகளின் பெரிய வெள்ளியாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

ஜான் பேஜ் என்ற அறிஞர் இவ்வாறு எழுதுவார், "கிறிஸ்தவ மதம் என்பது மீட்பின் மதம். இம்மதத்தின் வேதநூலாகிய விவிலியத்தின் நடுநாயகமாக இருப்பவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. மேலும் அவருடைய வாழ்வின் நடுநாயகமாக இருப்பது அவருடைய பாடுகளே " என்று குறிப்பிடுவார். ஆம், இயேசுவின் சிலுவை மரணமும், அவருடைய பாடுகளும்தான் அவருடைய வாழ்வின்/ கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கின்றது. அவர் தனக்காக அல்ல, நமக்காக தன்னுடைய இன்னுயிரையே தந்தார்.

இந்த நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் ஒருசில கருத்துகளை சிந்தித்துப் பார்ப்போம்.

எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன்/ இயேசு என்னும் மெசியா எப்படியெல்லாம் துன்பத்தை அனுபவிப்பார் என்று பற்றிச் சொல்லப்படுகின்றது. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; காறி உமிழப்பட்டார்; சாட்டையால் அடிக்கப்பட்டார்; மனித சாயலே இல்லாத அளவுக்குத் துன்புறுத்தப்பட்டார். இவையெல்லாம் யாருக்காக? பாவிகளாகிய நமக்காக. அதனால்தான் எசாயா இறைவாக்கினர் தொடர்ந்து சொல்வார், "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுகாக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்கத் தண்டிக்கப்பட்டார்" என்று.

ஆம், இயேசு நமக்காகவும், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காகவுவே இப்படிப்பட்ட ஒரு கொடிய சிலுவை மரணத்தை சந்தித்தார். இப்படிப்பட்ட ஒரு சாவை இயேசுவைத் தவிர வேறு எந்த மனிதரும் சந்தித்ததில்லை. இயேசுவைப் போன்று யாரும் இப்படி பிறருக்காகத் தன்னுயிரைத் தந்ததில்லை. இதை நாம் மனதில் இருத்தி சிந்திக்கவேண்டும்.

ரஷ்யாவை ஸ்டாலின் ஆட்சி செய்துகொண்டிருந்த தருணம். அப்போது இராணுவ ஆட்சி ரஷ்யாவில் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில், ஒரு வயதான பெண்மணி, தேவாலயத்திற்குச் சென்று, அங்கிருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தையும், குறிப்பாக, அவருடைய கால்களில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தையும் முத்தி செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் அவர் அருகே வந்து, "உங்களால் இதுபோன்று ஸ்டாலினுடைய பாதங்களை முத்தி செய்யமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "என்னால் முடியும். எப்போது என்றால், ஸ்டாலின் எனக்காக சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தி, உயிர் துறக்கின்றபோது, என்னால் அவருடைய பாதங்களை முத்திசெய்ய முடியும்" என்றார். இதைக் கேட்ட அந்த இராணுவ வீரன் வாயடைத்து நின்றான்.

ஆம், இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரும் நமது மீட்புக்காக, நமது பாவத்திற்குக் கழுவாயாக, சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தியதில்லை. அவர் ஒருவரே நம்முடைய பாவத்திற்காக சிலுவை மரத்தில் கழுவாயானர். ஆதாலால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் அளவு கடந்த அன்பை உணர்ந்து அவருக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் அதிகாரம் 3 இறைவாத்தை 18 ல் கூறுவார், "இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவின் அன்பின், அகலம், ஆழம், நீளம், உயரம் என்னவென்று உணர்ந்து, அறிவுகெட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக" என்று. ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசு நம்மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை உணர்ந்துகொண்டு, நாமும் நம்மோடு வாழும் மக்களை அன்பு செய்யவேண்டும்.

ஜான் நியூட்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். "நான் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பார்க்கின்றபோது அவர் என்னிடம் "உன்மீது கொண்ட அன்பினால்தான் இப்படிச் சிலுவையில் அறையப்பட்டுக் கிடக்கிறேன் என்று சொல்வதுபோன்று இருக்கும்" என்பார். தொடர்ந்து அவர் சொல்வார், "நான் ஒவ்வொருமுறையும் சிலுவையைப் பார்க்கின்றபோது அதிலிருந்து நான் திடம் பெறுகின்றேன், இயேசுவைப் போன்று எல்லாரையும் நிபந்தனையின்றி அன்புசெய்யவும் அழைக்கப்படுகின்றேன்" என்பார்.

ஆதலால், இயேசுவின் சிலுவை மரணத்தை, அவரது பாடுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் இந்த தருணத்தில் நாமும் ஒருவர் மற்றவரை நிபந்தனையற்ற விதத்தில் அன்பு செய்ய அழைக்கப்படுகின்றோம்.

அதே வேளையில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்பதுபோன்று, இயேசு இறைமகனாக இருந்தும் துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோல, நாம் ஆண்டவர் ஒருவருக்கே கீழ்படிந்து, அவர் அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆண்டவராகிய இயேசு கெத்சமணித் தோட்டத்தில் தந்தையை நோக்கி, "தந்தையே, இந்தத் துன்பக் கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும், ஆனாலும் என்னுடைய விரும்ப அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நிகழட்டும்" என்று சொல்லி தந்தைக்குக் கீழ்படிந்து நடந்தார். கடவுளும் எல்லாருக்கும் மேலாக அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுக்கின்றார் (பிலி 2:9). நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து, அவர்காட்டும் வழியில் நடக்கும்போது கடவுள் நம்மையும் உயர்த்துவார்.

ஆகவே, இயேசுவின் பாடுகளை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்ற இந்த வேளையில் நாமும் இயேசுவைப் போன்று எல்லா மக்களையும் அளவுகடந்த விதமாய் அன்புசெய்வோம். இறைவனுக்குக் கீழ்படிந்து அவரது திருவுளத்தின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை


இன்று ஏதோ ஒரு சோகம், கவலை நம் உள்ளத்திலே, நம் முகங்களிலே. யாரையோ நம் குடும்பத்தில் இழந்துவிட்டது போன்ற துக்கம், மனதிலே கலக்கம், சென்ற இடம் எல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்த நன்மை(தி.ப. 10:38)யின் நாயகன், இரக்கத்தின் ஊற்று, ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின் தோழன், ஏய்த்துப் பிழைப்போரின் எதிராளி, பாவமே செய்யாதவர், வாழவேண்டிய வயதில் கொல்லப்பட்டதால் நம் உள்ளங்கள் இன்று கரைந்து கொண்டிருக்கின்றன.

இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல, நம் குற்றங்களுக்காக அவர் காயப்பட்டார். நம் தீய செயலுக்காக அவர் நொறுக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணம் அடைகின்றோம் (எசா, 53:5). தலைமகனை இழந்து துயரத்தில் தாயாகிய திருச்சபை அலங்கோலமாக, ஆடம்பரமின்றி, வெறுமையாக இன்று காட்சி தருகின்றாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த நம் அன்பரின் அகோர மரணம் இன்று நம்மை எவ்வாறு பாதிக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பெரிய வெள்ளியை நாம் கொண்டாடுவதின் நோக்கம் என்ன? இப்படி பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழலாம்! இத்தகைய கேள்விகளுக்கு விடை காண நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு கெத்செமனி தோட்டத்திற்கு வந்தார். ஏன்? துன்பத்தைத் தானாக முன் வந்து ஏற்க! ஏனெனில் அன்று சிங்காரத் தோட்டத்தில் ஆதாம் பாவத்தை ஆரம்பித்து வைத்தான். கெத்செமனி தோட்டத்தில் அந்தப் பாவத்தை வெற்றி கொள்ளும் பணி இரத்த வியர்வையில் ஆரம்பமாகிறது.

தொடக்க நூலில் சிறுவன் ஈசாக் பலிக்குத் தேவையான விறகுக் கட்டையைத் தானே சுமந்து சென்றான் (ஆதி. 22:6) அவனே பலிப் பொருளாக அமைய. அவ்வாறே இயேசுவும் தான் பலியாகப் போகும் கழுமரத்தைத் தானே சுமந்து செல்கிறார். பாலைவனத்தில் கொள்ளி வாய்ப் பாம்புகளினால் கடியுண்ட இஸ்ரயேல் மக்கள் மோயீசன் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கினர் நலம் பெற (எண். 21:9). அவ்வாறே நாம் மீட்படைய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டார். இவரது பாடுகளும், மரணமும் வரலாற்றில் நடந்து முடிந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, இன்று நம் வாழ்வைப் பாதிக்கும் ஒரு நிகழ்ச்சி.

சாவு என்பது நம் அன்றாட வாழ்வில் காணும் நிகழ்ச்சி, இன்றைய செய்திதாள்கள், ரேடியோ, தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமாகக் கேள்விப்படுகிறோம். ஆபத்துகளால், கொடுமைகளால், போராட்டத்தால் நடக்கும் கொலைகள், மரணங்கள் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன. சில நேரங்களில் இவைகளை வாசிக்கும் போதும் சரி, கேட்கும்போதும் சரி, பாக்கும்போதும் சரி உணர்வற்றவர்களாக மாறிவிடுகின்றோம். ஆனால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு திடீர் மரணம், ஆபத்து, படுகொலை, விபத்தில் உயிர் இழப்பு என்றால் நம் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் அல்லவா? நம் இரத்தம் கொதித்து எழுமே!

ஆம். நம் மூத்த சகோதரர், நமக்குச் சொந்தமானவர், நமக்கு உரிய நண்பர் என்றெல்லாம் அழைக்கும் நம் வாழ்வின் நாயகன் இயேசு இறந்த நாள் அல்லவா இன்று. இவரது துன்பம், இவரது சாவு நம்மைப் பாதிக்கிறது. ஏனெனில் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டே சென்றார் (திப 10:38). கடவுளின் உயிருள்ள வார்த்தையைப் போதித்துக் கொண்டே சென்றார். எசாயா கூறுவதுபோல, நம் குற்றங்களுக்காக அவர் காயப்பட்டார். நம் தீயச் செயலுக்காக அவர் நொறுக்கப்பட்டார் (எசா. 53:5). அன்பு செய்யுங்கள். அன்பைப் பெறுவீர்கள் (யோவா. 15:11-17). மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள் (லூக். 6:37) என்று போதித்தார். இந்த உன்னத ஒப்பற்ற நல்ல மனிதரைத்தான் இந்த உலகம் அநியாயமாகத் தீர்ப்பிட்டுக் கொன்றது. இவரது இரத்தத்தில் நாம் பங்காளியாக உள்ளோம்.

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! நான் மட்டும் அன்று வாழ்ந்திருந்தால் இத்தகைய குற்றமற்ற புனிதரை இத்தகைய கொலைக்கு ஆளாக்கிய கூட்டத்தில் இருந்திருக்க மாட்டேன் என்று சொல்ல உங்கள் உள்ளம் துடிக்கிறதா?

இந்த இயேசுவின் பாடுகள், மரணம் போன்றவை, இன்று ஏழைகள், ஓடுக்கப்பட்டோர், பாவிகள், நலிந்தோர், குழந்தைகள், பெண்ணினம் இவர்களின் சாயலில் நடைபெறுவதை அறியாதவனாக நீ இருக்கின்றாயா? எத்தனை ஆயிரம் பெண்களின் கற்பு இன்று சூறையாடப்படுகின்றது என்பது உனக்குத் தெரியுமா? நமது பாராமுகத்தால், நமது சுய சுகபோக வாழ்க்கையால், நாம் வீணாக்கும் செல்வத்தால் நாம் இவர்களைச் சிலுவையில் அறைவதில்லையா (மத். 25:45)? ஆண்டவர் கூறுவதுபோல நீ இந்தச் சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்யாத போதெல்லாம் அவருக்கே செய்யவில்லை.

சடங்கு முறையால் சஞ்சலம் அடையாமல் நமது பாவத்தால் நாம் ஏற்படுத்திய காயங்களை நினைத்து அழ வேண்டிய நாள் இது. புனித பேதுரு சொல்வதுபோல அவரது காயங்களால் நாம் குணமாக்கப் பெற்றோம் (1 பேதுரு 2:24).

 
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
புனிதம் மலரட்டும்

அன்று மோசேயால் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார்கள் (எண் 21:4-9). இன்று சிலுவை மரத்தில் தொங்குகின்ற இயேசுவை நம்பிக்கையோடு உற்றுப்பார்ப்பவர்கள் பாவத்திலிருந்து தப்பிப்பார்கள். பாம்பைவிட கொடியது பாவம்! ஆனால் பாவத்தின் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு.

இதோ நற்செய்தியிலிருந்து சில உதாரணங்கள் !

யோவா 4:1-44 முடிய உள்ள பகுதி. சிக்கார் என்னும் ஊரிலிருந்த ஒரு கிணற்றருகே இயேசு அமர்ந்திருந்தார். அந்தக் கிணற்றுக்குத் தண்ணீர் மொள்ள பெண்ணொருத்தி வந்தார். அவர் ஒரு சமாரியப் பெண். அவரைப் பார்த்து இயேசு, தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அவரோ, நீரோ யூதர். நானோ சமாரியப் பெண்! நீர் உயர்ந்தவர். நீர் எப்படி என்னிடம் தண்ணீர் கொடு என்று கேட்கலாம்? என்று கேட்கின்றார். இயேசுவோ, ஆணென்ன பெண்ணென்ன? நீயென்ன? நானென்ன? எல்லாரும் கடவுளின் குழந்தைகள்தான் பெண்ணே! ஆகவே தண்ணீர் கொடு என்கின்றார். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே இயேசு பெண்ணைப் பார்த்து, குடித்த பிறகு தாகமே எடுக்காத தண்ணீரை என்னால் உனக்குக் கொடுக்க முடியும் என்கின்றார். தொடர்ந்து அவர், நீ போய் உன் கணவரை அழைத்து வா என்கின்றார். அந்தப் பெண்ணோ, எனக்குக் கணவர் இல்லையே என்கின்றார். இயேசுவோ, உண்மையைச் சொன்னாய். நீ இதற்கு முன் ஐந்து பேரோடு வாழ்ந்திருக்கின்றாய். அந்த ஐந்து பேரும் உன் கணவர்கள் இல்லை! இப்போது ஒருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்! அவரும் உன் கணவர் இல்லை என்கின்றார்.

இதைக் கேட்டதும் அந்தப்பெண் அதிர்ந்து போனார். அந்தப் பூவுக்குள்ளே ஒரு பூகம்பம்; மனம் மாறுகின்றார். அவர், நீர் உண்மையிலேயே ஓர் இறைவாக்கினர்தான் என்பதைக் கண்டுகொண்டேன் என்று சொல்லி, அவர் கண்டதையும் கேட்டதையும் போய் அவருடைய ஊர்மக்களுக்குச் சொல்லி ஒரு பெரிய நற்செய்தியாளராக மாறுகின்றார்.

ஒரு மாபெரும் பாவியை இயேசு மன்னித்து, அவரைப் பாவத்திலிருந்து விடுவித்ததை நாமிங்கே பார்க்கின்றோம்.

இதோ அன்று அந்தப் பாவியை மன்னித்த இயேசு இன்று நம் நடுவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

இதோ மற்றோர் எடுத்துக்காட்டும்

லூக் 19:1-10: அவர் பெயர் சக்கேயு! அவர் பெரிய திருடர்! மற்றவர்களின் பணத்தைத் திருடி பணக்காரராக மாறியவர். எல்லாருக்கும் ஆசை வரும். அவருக்கும் ஓர் ஆசை. அது என்ன ஆசை? இயேசுவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை.

இயேசு நோயாளிகளுக்கு உடல்நலம் அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

இயேசு பாவிகளுக்குப் பாவமன்னிப்பு அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

இயேசு இறந்தவர்களுக்கு உயிரை அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

ஆசை! ஆசை! ஆசை மேல் ஆசை! ஆசைப்பட்ட அவரால் கூட்டத்தின் நடுவே நடந்து வந்த இயேசுவைப் பூமியில் நின்று பார்க்க முடியவில்லை. ஆகவே மரத்திற்குச் சென்றார்; அதில் ஏறினார்; அதன் மீது அமர்ந்திருந்தார்!

சரியாக இயேசு சக்கேயு அமர்ந்திருக்கின்ற மரத்தடியிலே வந்து நின்று, சக்கேயுவே கீழே இறங்கி வா! உன் வீட்டில் நான் மிருந்தாட வேண்டும் என்றார். அந்தப் பாவியோ, இந்தப் பாவிக்கு இப்படியொரு பாக்கியமா எனச் சொல்லி மரத்தை விட்டு, பாவத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தார். இயேசுவைப் பார்த்து, என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; நான் யாரையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், திருடியிருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். உடனே இயேசு அவர் பாவங்களை மன்னித்து, இவரும் ஆபிரகாமின் மகன்தானே! இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்றார்.

இப்படி அன்று பெரிய பாவியான சக்கேயுவிற்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்த இயேசு இன்று சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

எந்தக் குற்றத்திற்காக இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்?

நான்கு நாள்கள் கல்லறையிலிருந்த இலாசரை உயிர்ப்பித்தவர் இயேசு. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் உணவாகக் கொடுத்தவர் இயேசு. ஆறு கல்தொட்டிகளிலிருந்த தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியவர் இயேசு. முப்பத்தெட்டு ஆண்டுகளாய் படுத்தப்படுக்கையிலிருந்தவரை எழுந்து நடக்கச்செய்தவர் இயேசு. ஏழு பேய்களை மகதலா நகர் மரியாவிடமிருந்து ஓட்டியவர் இயேசு.

திப 10:38 கூறுவது போல இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார்.

தீய சூழ்நிலைகளையெல்லாம் அடியோடு மாற்றி இயேசு பாலைவனங்களைச் சோலைவனங்களாக்கினார். மனிதர்களைப் புனிதர்களாக்கினார். அப்படிப்பட்ட நல்லவரை சில யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களை மன்னித்தார் (லூக் 23 : 34).

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்றார். பாவிகளுக்குப் பாவமன்னிப்புப் பெற்றுத் தந்தார்.

அன்று கல்வாரியில் சிலுவையில் தொங்கிய இயேசு இன்று நம் நடுவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

பாவத்திலிருந்து விடுதலை அளிக்கக்கூடிய இயேசு இன்று இதோ நம் நடுவே சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடமிருந்து பாவமன்னிப்புப் பெற்று புனிதர்களாவோம். புனித வெள்ளி நம் அனைவரையும் புனிதர்களாக்க வேண்டும்.

புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியிருக்கும் திருமடலில் 3:9-18-இல் நாமெல்லாருமே பாவிகள்தான் என்கின்றார்.

நாம் பார்க்கக் கூடாததைப் பார்த்திருக்கின்றோம்.
மறு கேட்கக் கூடாததைக் கேட்டிருக்கின்றோம்.
குடிக்கக் கூடாததைக் குடித்திருக்கின்றோம்.
எண்ணக் கூடாததை எண்ணியிருக்கின்றோம்.
பேசக் கூடாததை பேசியிருக்கின்றோம்.
எப்படி எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படி அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றவர்கள் நாம். நாம் அத்தனை பேரும் பாம்மைவிட மோசமான பாவத்தால் தீண்டப்பட்டவர்கள்! நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் நஞ்சு உண்டு.

இந்த நஞ்சு, பாவம் நமக்குள்ளிருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலை, மனத்தை, உள்ளத்தைக் கொன்றுவிடும்.

நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல, மாறாக நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி வாழப் பிறந்தவர்கள். ஆகவே மன்னிப்பின் மறு உருவமான இயேசுவை உற்றுப் பார்ப்போம்.

காலிலே முள் குத்திவிட்டால் அதை நமது கையால் எடுத்துவிடலாம். நம் உள்ளத்திலே பாவ முள் குத்திவிட்டால் அதை இயேசுவால் மட்டும்தான் எடுக்க முடியும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் புற்றீசல்களைப் போல, சோதோம் கொமோரா, நினிவே நகர்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் சிலுவையிலே தொங்கும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போம். இயேசு இதோ சிலுவையிலிருந்து நம்மோடு பேசுகின்றார்:

பாவத்திற்கு உன் உடலுக்குள்ளோ, உள்ளத்திற்குள்ளோ, மனத்திற்குள்ளோ இடம் கொடுக்காதே! பாம்மைப் பாலூட்டி வளர்க்காதே! அது ஒரு நாள் உன்னைக் கொத்திக் கொன்றுவிடும். பாவம் பாம்பு போன்றது.

தீய எண்ணங்களிலிருந்தும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. உன் நம்பிக்கை நிறைந்த கண்களை என் பக்கம் திருப்பு. அப்போது உன் வாழ்வில் எல்லாம் வசந்தமாகும்.

நமக்காகத் தம்மையே சாவுக்குக் கையளித்தவர் இயேசு (முதல் வாசகம்). இரக்கமே உருவானவர் இயேசு (இரண்டாம் வாசகம்). ஆகவே இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து மன்னிப்புப் பெறுவோம். நமது மனிதம் என்னும் தோட்டத்திலே புனிதம் என்னும் மலர் மலரட்டும்.

மேலும் அறிவோம்:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை (குறள் : 434).

பொருள் : குற்றம் செய்வது பேரழிவைத் தரும் பகையாகும். எனவே குற்றம் எதுவும் தோன்றாமல், பொருளைப் பேணிக்காப்பது போன்று, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

 

 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருப்பாடுகளின் பெரிய வெள்ளி

இன்று பெரிய வெள்ளி. மன்னுயிரை மீட்கத் தம் இன்னுயிரை ஈந்த கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் நாள், "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள் " (யோவா 19:37) என்ற மறைநூல் வாக்கிற்கேற்ப, இன்று சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவை உற்று நோக்குவோம். விண்ணையும் மண்ணையும் படைத்தவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே தொங்குகிறார். ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு ஆதரவளித்த ஆண்டவர் அனாதையாகத் தொங்குகிறார். தலையிலே முள்முடி; உடலிலே கசை அடி; அங்கமெல்லாம் - காயங்கள்: குருதி படிந்த நெற்றி; குளமாய் நிற்கும் கண்கள்; குத்தித் திறக்கப்பட்ட விலா.

கல்வாரிக் காட்சியைக் கண்டால் கல்லும் கரைந்திடுமே;
கண்ணும் கலங்கிடுமே;
உள்ளம் உருகிடுமே;
இதயம் இளகிடுமே:
நெஞ்சம் நெகிழ்ந்திடுமே!

பெரிய வெள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை: ஒன்று, கிறிஸ்து நமக்காக, நமது பதில் - ஆளாகச் சிலுவைச் சாவை ஏற்றார். இரண்டு, கிறிஸ்து தமது சாவின் மூலம் கடவுள் மனிதருடைய துன்பத்தில் நேரடியாக, முழுமையாக, உள்ளிருந்து பங்கேற்கிறார்.

கிறிஸ்துவின் சாவு ஒரு பதில் - ஆளின் சாவு, நாம் சாகாமல் இருக்க அவர் நமக்காக, நமது இடத்தில் சாவை ஏற்றார். பாவத்திற்குக் கூலி சாவு (உரோ 6:23). தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன் (இச 21:23), கிறிஸ்து பாவமே அறியாதவர், பாவத்தின் விளைவை ஏற்று, சபிக்கப்பட்டவராக, நகர வாயிலுக்கு வெளியே (எபி 13:12) இறந்தார். அனைவருக்காகவும் ஒருவர் இறந்தார் எனபதை எண்ணும் போது, கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொள்கிறது (1 கொரி 5:14).

ஒரு சிறுவன் தன் அம்மாவின் முகத்தில் இருந்த பெரிய தழும்பைப் பார்த்து அவரை வெறுத்தான், ஆனால் அந்தத் தழும்பு எப்படி வந்தது? அவன் சிறு குழந்தையாகத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் அம்மா துணிச்சலுடன் தீ நடுவில் சென்று தூங்கிக்கொண்டிருந்த அவனை வெளியில் தூக்கிக்கொண்டு ஓடிய போது, அவரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது; காயம் ஆறியபின்னும், முகத்தில் தழும்பு மாறவில்லை. இதை அம்மா அவனிடம் எடுத்துச் சொன்னபோது, அவன் அம்மாவை அதிகமாக அன்பு செய்ய ஆரம்பித்தான்.

துன்புறும் இறை ஊழியனாகிய கிறிஸ்துவைப்பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "நாம் பார்ப்பதற்கேற்ப அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்கத் தோற்றமும் அவருக்கில்லை" (எசா 53:2), ஏன்? ஏனென்றால், "அவர் நம் குற்றங்களுக்காக காயப்பட்டார் ... அவர்தம் காயங்களால் குணமடைந்தோம்" (எசா 53:5).

மேலே கூறப்பட்ட நிகழ்வில், எவ்வாறு தன் குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்ற அந்த அம்மா தீக்காயங்களுக்கு இரையாகி, தம் முகத்தில் மாறாத் தழும்பைச் சுமந்தாரோ, அவ்வாறே கிறிஸ்துவும் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கக் காயப்பட்டார்; அழகை இழந்தார்; அருவருப்பான தோற்றத்தை அடைந்தார். அவர் உயிர்த்த பின்பும் அவருடைய கைகளிலும் கால்களிலும் விலாவிலும் தழும்புகள் இருந்ததை நாம் மறக்க முடியாது. எனவே நமக்காக காயப்பட்ட கிறிஸ்துவை நாம் எவ்வளவோ அதிகமாக அன்பு செய்ய வேண்டும்.

திருத்தூதர் பவுலுடன் இணைந்து நாமும், "கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மை ஒப்புவித்தார்" (கலா 2:20) என்று நன்றிப் பெருக்குடன் கூறுவேண்டும். "கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணரவேண்டும்" (எபே 3:18-19) "கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?" (உரோ 8:35) என்று சூளுரைக்க வேண்டும்.

இரண்டாவது, கிறிஸ்துவின் சாவு கடவுளின் சாவு, கடவுள் கிறிஸ்துவில் இறந்ததன் மூலம், அவர் மனிதருடைய துன்பத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கெண்டார்; கடவுள் மனிதருடைய துன்பத்தில் உள்ளிருந்து பங்கேற்கிறார் என்பதையும் பெரிய வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது ஒரு சித்திரவதை முகாமில் மூன்று யூதர்களைத் தூக்கிலிட்டனர். அவர்களில் இருவர் வயதானவர்கள் : உடனே இறந்துவிட்டனர். ஆனால் மூன்றாவது நபர் ஓர் இளைஞர்; அவர் அரைமணி நேரத்திற்கு மேல் வேதனையால் புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பரிதாபமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் தம் அருகில் இருந்தவரைப் பார்த்து, "எங்கே கடவுள்? கடவுள் எங்கே?" என்று கேட்டார். அதற்கு மற்றவர், "அவர் தான் அந்தத் தூக்குக் கயிற்றில் தொங்குகிறார்" என்றார். துன்பம் என்ற புரியாத புதிருக்கு இப்பதில் ஒன்றுதான் சரியான பதில், வேறு எந்தப் பதிலும் கடவுளை இரக்கமற்ற கொடுங்கோலனாகவே காட்டும்.

கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, "தொலைவிலிருந்து" பார்த்துக் கொண்டிருந்தார்கள் (லூக் 23:49). கடவுள் மனிதருடைய துன்பத்தை விண்ணிலிருந்து வேடிக்கை பார்ப்பவர் அல்ல. மாறாக, அவரே மனிதருடைய துன்பத்தில் தன்னை ஒரு சிலர் பெரிய வெள்ளி இணைத்துக் கொண்டு துன்புறுகிறார். மனிதர் சிந்தும் கண்ணீர் கடவுளுடைய கண்ணீர் மனிதரின் சாவு கடவுளின் சாவு, கிறிஸ்துவே வறியவர்களில், பிணியாளர்களில், நசுக்கப் பட்டவர்களில் துன்புறுகிறார். இது உண்மை. இல்லையென்றால், "நான் பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன். என் தாகத்தைத் தணித்தீர்கள் (மத் 25:35-36) என்று கிறிஸ்து கூறியதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

எனவே மனிதரின் துன்பங்கள் அனைத்தும் கடவுளின் துன்பங்களே. ஏழைகளை நிந்திப்பது மனித நேயமற்ற செயல் மட்டுமல்ல, அது தெய்வ நிந்தனையாகும். கிறிஸ்துவே நம்முடன் துன்புறுகிறார். நமது சிலுவையை நம்மோடு இணைந்து சுமக்கிறார் என்பதை அறிந்து மன உறுதி கொள்வோம். அதே நேரத்தில் துன்புறுவோரிடம் கிறிஸ்துவை இனம் கண்டு அவர் துயர் துடைக்க ஆவன செய்வோம். இவ்வுலகில் ஒரே ஒரு மனிதர் உயிரோடு இருக்கும்வரை, அவர் வழியாகவே கிறிஸ்துவின் சிலுவைப்பாதை தொடரும்!

கீழ்ப்படியாமையால் நாம் இழந்ததைவிட, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் நாம் பெற்றுக்கொண்டது அதிகம். "பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது" (உரோ 5:20). எனவே நாம் மனமுடைந்து போகாமல் மனமகிழ்வோம்.

"ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக் கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது. இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறு பெற்றதால் பாக்கியமான குற்றமே" - பாஸ்கா புகழுரை.

 

 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
பாவத்துக்கான கூலி மரணம்

மனித சமத்துவத்தை நிலைநாட்டத் துடித்தவர் ஆபிரகாம் லிங்கன். அடிமை வணிகத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் அவர். இனவெறியன் ஒருவனின் துப்பாக்கிக் குண்டு அவரது உடலைத் துளைத்தது, குருதி கொட்டத் தரையில் சரித்தது.

1865 ஏப்ரலில் ஒருநாள். ஆபிரகாம் லிங்கனின் அந்தச் சிதைந்த சடலம் மக்கள் அஞ்சலிக்காக ஓஹையோ மாநிலத்தில் கிளிவ்லாந்து என்ற நகரில் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் மக்கள் திரள். அவர்களுக்கிடையில் இடுப்பில் தன் மகனோடு எழைக் கருப்பினப் பெண் ஒருத்தியும் நின்று கொண்டிருந்தாள். சடலத்துக்கு அருகில் வந்ததும், அவள் தன் மகனைத் தோளுக்குமேல் தூக்கிப்பிடித்து "மகனே, பார், நன்றாக உற்றுப்பார். இந்த மனிதர் உனக்காகவும் எனக்காகவும் இறந்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார்".

சிலுவையில் தொங்கும் இயேசுவைச் சுட்டிக்காட்டி இதே வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடியும். இன்று
- நம் குற்றங்களுக்காக இயேசு காயப்பட்ட நாள்.
- நம் தீச்செயல்களுக்காக அவர் நொறுக்கப்பட்ட நாள்.
- அவர்தம் காயங்களால் நாம் குணமடைந்த நாள்.

ஒருவகையில் மனித வரலாற்றில் பெரிய வெள்ளி ஒரு கருப்பு நாள்தான். ஆனால் இயேசுவின் தியாகப்பலி சிலுவையை பெருமைக்கு உரிய சின்னமாக்கிவிட்டது. எனவே இன்றைய விழா வீழ்ச்சிக்கு அல்ல, வெற்றிக்கு! சாவுக்கு அல்ல வாழ்வுக்கு! துயரத்துக்கல்ல, மகிமைக்கு! இயேசு சிலுவையில் இறக்கவில்லை உயர்த்தப்பட்டார் என்பதுதானே யோவானின் பார்வை! அதனால்தான் "நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன்" (கலா.6:14) என்றார் திருத்தூதர் பவுல்.

ஒரு தாய் தன் மகனைப் புற்றுநோயிலிருந்து குணமாக்க இலட்சக் கணக்கில் செலவழித்தும் மகன் இறந்துவிட்டான். அந்தத்தாய் "கடவுளே என் மகன் இறந்தபோது நீர் எங்கே இருந்தீர்?" என்று முறையிட்டாள். அதற்குக் கடவுள் "என் மகன் சிலுவையில் இறக்கும் போது எங்கே இருந்தேனோ, அங்கேதான் உன் மகன் இறக்கும் போதும் இருந்தேன்" என்றார்.

தன் மகனையே துன்பத்துக்குக் கையளித்த கடவுள் நம்மையும் துன்புற அனுமதிப்பார்; ஆனால் தன் மகனை மாட்சிப்படுத்தியது போல் நம்மையும் மாட்சிப்புடுத்துவார்!

இயேசுவின் சிலுவை மரணம், தந்தையான கடவுளின் நித்திய திட்டத்தால் நிகழ்ந்தது. தந்தையே அந்தச் சிலுவையைத் தன் மகனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். எப்பொழுதாவது இயேசு தனக்காக, தன் நலனுக்காகத் தந்தையைப் பார்த்து மன்றாடியிருப்பாரா? ஒருமுறை - ஒரேயொருமுறைதான் தனக்காக வேண்டினார். "தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்" (மார்க்.14;36), அந்த ஒரே மன்றாட்டும் மறுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலையில் இயேசு வலுப்படுத்தப்பட்டார். (லூக்.22:43)

"பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு" (ரோமை 6:23) அப்படி யென்றால் மரணத்தை விலையாகக் கொடுத்துத்தான் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். "எதிலிருந்து சாவு தோன்றியதோ அதிலிருந்தே புத்துயிர் எழவும், மரத்தினால் வெற்றி கண்டவன் மரத்தினாலேயே தோல்வி காணவும் வேண்டுமென்று இருந்தது". விலக்கப்பட்ட மரத்தின் மூலம் சாவு இவ்வுலகில் நுழைந்தது. அச்சாவினைக் கடவுள் சிலுவை மரத்தின் மூலமே அழித்தார். எனவே நன்றியோடும் மகிழ்ச்சியோடும் பாடுகிறோம்: "திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கினார் உலகின் மீட்பர். வாருங்கள் ஆராதிப்போம்"

இயேசுவைக் கொன்றது யார்? இந்தக் கேள்விக்கு வயது இரண்டாயிரத்துக்கும் மேலே. சூழ்ச்சியால் பரிசேயரா? துரோகத்தால் யூதாசா? கோழைத்தனத்தால் பிலாத்துவா? செயல்பட்டால் படை வீரரா? நாம் அனைவருமே கிறிஸ்துவின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். வேறு வார்த்தைகளில் உலகில் வாழ்ந்த, வாழுகின்ற, வாழப் போகின்ற ஒவ்வொரு மனிதனின் பாவத்திற்காகவும் இயேசு பலியாக இறந்தார். அவனது மீட்புக்காக இரத்தத்தை, உயிரை விலையாகக் கொடுத்தார்.

அதனால்தான் எனக்காக இரக்கப்படவோ, வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அழுதுபுலம்பவோ வேண்டாம் என்கிறார் இயேசு.

இயேசுவின் பாடுகளும் மரணமும் பரிதாபப்படுவதற்கல்ல, மாறாக நம்மைப் பக்குவப்படுத்துவதற்கே. எத்தனை பேரை அப்படிப் பக்குவப்படுத்திப் புனிதர்களாக்கி இருக்கிறது! எடுத்துக்காட்டு : புனித மாக்சிமில்லியன் மரிய கோல்பே, நெல்சன் மன்டேலா. இயேசுவின் பாடுகளில் வெளிப்படும் பண்புகள் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு மன்னிப்பு, "தந்தையே இவர்களை மன்னியும்...' (லூக்.23:34)

இன்றைய வழிபாட்டின் மையம் திருச்சிலுவை ஆராதனை. இன்று நாம் கடவுளுக்கு அளிக்க வேண்டிய காணிக்கை மனத்துயருடன் கூடிய கண்ணீர். நொறுங்கிய உள்ளம். (தி.பா.51:17)

ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன். பாவத்தால் உம்மைக் கொன்றேனே, ஆயனே என்னை மன்னியும். திருச்சிலுவையை நோக்கி தூய அகுசுதீனோடு சேர்ந்து செபிப்போம். "ஆண்டவரே, உம் திருக்காயங்களை என் நெஞ்சில் பதியச் செய்யும். துன்பம் நம்மைப் பாதிக்கிறது. அன்பும் நம்மைப் பாதிக்கிறது, இரண்டையும் இயேசுவிடம் கற்றுக் கொள்ளும் போது வாழ்வு அர்த்தம் பெறுகிறது."

இயேசு இறந்தார் என்று ஏற்றுக் கொள்வது வரலாறு இயேசு எனக்காக இறந்தார் என்று உணர்ந்து ஏற்பது மீட்பு அந்த மீட்பும் விடுதலையும் புனித வெள்ளி தரும் பரிசு.
 
சிலுவையடிக்கு வரட்டும்
இரவாகட்டும் பகலாகட்டும் எப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிலும் அமைதி தவழ்கிறதோ, நிம்மதி நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் எங்கிருந்தோ வரும் ஒரு சோகக்குரல் - துயரக் குரல் என்னை உலுக்குகிறது. முதன்முறையாகக் கேட்ட போது குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன். குரலுக்குரியவரைத் தேடினேன். அக்குரல் சிலுவையிலிருந்து வந்தது. குரலுக்குரியவர் பாடுகளின் எல்லையிலே வேதனையின் விளிம்பிலே மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், மண் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அருகிலே சென்று "இறக்கி விடுகிறேன்" என்று சொல்லி கால்களில் துளைத்திருந்த ஆணிகளைக் கழற்ற முயன்றேன். ஆனால் அவரோ விட்டு விடு. உன்னால் மட்டும் முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்று திரண்டு வந்தால் அன்றி, என்னைச் சிலுவையினின்று இறக்க முடியாது. என் வேதனையைக் குறைக்க முடியாது' என்றார். உடனே நான் "உலகம் முழுவதும் என்றைக்கு உம் சிலுவையடிக்கு வரப்போகிறது? உம் வேதனை தீரப் போகிறது? உலகம் கிடக்கட்டும். இதோ நான் இருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லும்" என்றேன். "அப்படியா?" அவர் சொன்னார் "முதலில் இந்த இடத்தை விட்டுப் போ. உலகெங்கும் போ. ஊர் ஊராகப் போ. உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சொல். உனக்காக ஒரு மனிதன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று".

எனது கற்பனை அன்று; ஓர் ஆங்கிலக் கவிஞன் காவியமாக்கிய கடவுளின் சோகக்கதை. கல்வாரி என்பது என்றோ ஒருநாள் நடந்து முடிந்த பழைய நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனித வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் தெய்வத்தின் துயர நிகழ்ச்சி என்பதை அழகாகச் சித்தரிக்கும் அற்புதமான கவிதை,

உனக்காக, எனக்காக, ஒவ்வொரு மனிதனுக்காக அங்கே இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏன் இந்த நிலை? வாய் திறந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதோ இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயத்தில் சாய்ந்து உற்றுக்கேள். அவரது இதயம் இப்படித் துடித்துக் கொண்டிருக்கும்... அன்பு, பாவம்... பாவம், அன்பு, அன்பு பாவம் என்று. ஆம் அனைத்துக்கும் காரணம் 1.பாவம் - அன்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் என்றோ உலகை அழித்திருக்கக் கூடிய மனிதனின் பாவம். 2. அன்பு - பாவத்தால் உலகம் அழிவதைப் பார்த்துச் சகிக்காத கடவுளின் அன்பு.

ஆம், பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது. அன்பு கடவுளைப் பலியாக்கிக் கொண்டது. தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி. மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை. பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை.

அதோ சிலுவையில் இருகைகள் விரித்த நிலையில் இயேசு இருப்பது ஏன் தெரியுமா? இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் பார்வையில் அன்புக்கும் பாவத்துக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாம்!

ஆதியில் மனிதன் கடவுளோடு கைகோர்த்துத் திரிந்தானாம். பாவம் நுழைந்தது. அன்புறவு அறுந்தது. பிரிவு. பிளவு. பாவம் மலிய மலிய இடைவெளியும் விரிந்தது. கடவுளை விட்டு மனிதன் ஒடினான். ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். அவனைத் தடுத்து ஆட்கொள்ள கடவுள் துரத்தினார். துரத்தினார். துரத்திக் கொண்டே இருந்தார்.

மனிதனோ அழிவின் வாசலுக்கே சென்று விட்டான். நரகம் எங்கே இருக்கிறது? கல்வாரிக்குப் பின்னேயாம்! பாவப்படுகுழியில் புரண்டு நரகத்தில் விழப்போகும் மனிதனைத் தடுப்பதற்காகத் தன் சக்தியை எல்லாம் - அன்புதானே அவரது சக்தி - ஒன்று திரட்டி அவனுக்கு முன்னே ஓடிச்சென்று தன் இரு கைகளையும் விரித்தார்.

விரித்த அந்த அன்புக் கைகளைச் சிலுவையில் அறைந்துவிட்டு - ஆணி கொண்டு பிணைத்துவிட்டுக் கீழே குனிந்து தன் இச்சைப்படி சென்றான் மனிதன்.

கடவுள் கைகளை விரித்தது மனிதன் தன் பாவத்தால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்காகவா? அழிவை நோக்கிச் செல்லும் மனிதனைத் தடுத்து ஆட்கொள்வதற்காகவன்றோ!

கடவுளின் விலை என்ன? 30 வெள்ளிக் காசுகள் என்கிறான் மனிதன். மனிதனின் விலை என்ன? என் குருதி, என் உயிர் என்கிறார் இறைவன்.
இரு ஒருபுறம் இருக்கட்டும். இன்று இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்க வேண்டுமா? "ஒவ்வொரு மனிதனும் கல்வாரியின் உச்சிக்கு வந்தால் ஒழிய..." ஆண்டவர் அழைக்கிறார்.

வாருங்கள் சிலுவையடி நோக்கி மலை ஏறுவோம். ஆனால் யாரைப்போல? பரிசேயர், படைவீரர், பொதுமக்கள் என்று எத்தனையோ பேர் அங்கே சென்றார்கள். ஆறுதலாக நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே. களங்கமின்மைக்குச் சின்னமான அன்னை மரியா. அர்ப்பணத்துக்கு அடையாளமான திருத்தூதர் யோவான். தவறான வாழ்க்கைக்காக மனத்துயர் கொண்ட மகதலா மரியா. இந்த மூன்று பேரில் ஒருவராக மாறாதவரை, சிலுவையடிக்குச் செல்ல எவருக்கும் உரிமையில்லை ; தகுதியும் இல்லை !

நாம் அத்தனை பேரும் அன்னை மரியா போல மாசற்றவர்கள் அல்லர்; யோவான் போல முழுநேர இறையாட்சி ஊழியர்கள் அல்லர்; நம் சார்பாக, நம் பதிலாள் போல் நிற்பவர் மகதலா மரியா, பாவியாக வாழ்ந்து இயேசுவின் கனிந்த பார்வையில் மனமுருகி மனம் மாறியவர்.

மலை ஏறுவது கடினமாயிற்றே, பழக்கமில்லையே என்ற தயக்கமா? மலையேறுவது கடினம் தான். பாவத்தை நினைப்பது, வருந்துவது, திருந்துவது, அறிக்கையிடுவது அனைத்துமே கடினம்தான். ஆனால் எந்தப் பாவத்துக்காக மன்னிப்புப் பெறுவதும், விட்டுவிலக உறுதிபூணுவதும் கடினமாக இருக்கிறதோ, அந்தப் பாவத்துக்காக - அதே பாவத்துக்காக - அதோ அங்கே சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் அதிகக் கடினமாக இருக்கிறது!
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
 
 ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
அருட்பணி மேரி ஜான் R . புனித அலோசியஸ் குரு மடம் கோட்டாறு