ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா ஆசி பெற வந்திருக்கும்
அன்பு நெஞ்சங்களே!
வளமான வாழ்க்கை வாழ விருந்துக்கு வாருங்கள் என, திருப்பலியில்
அருந்த இருக்கும் திருஉணவு இன்று நம்மை அன்போடு வரவேற்கின்றது.
வாழ்நாட்களில் உணவு முதலிடத்தையும் முக்கிய இடத்தையும்
பெறுகிறது. உடலை வளர்க்கும் ஆற்றல் உணவுக்குள்
மிகுந்திருப்பது போல், ஆன்மாவை வளர்க்கும் ஆற்றல் நற்கருணைக்குள்
மிகுந்திருக்கிறது.
பிறரின் வளர்ச்சிக்காக, வாழ்வுக்காக தன்னிடம் இருப்பதை
தருபவர் எல்லாம் மனிதநேயம் மிக்க மாமனிதர்கள். இயேசுவோ
அதையும் தாண்டி தன்னையே முழுவதும் தந்து, மாமனிதர்களின்
தரவரிசையில் முன்னனியில் முதலிடத்தில் நிற்கின்றார்.
தான் அன்பு செய்யும் மனிதன் எப்போதும் மகிழ்ந்திருக்க
வேண்டும், தன்னோடு இணைந்திருக்க வேண்டும் என்ற ஆவலினால்
தன் உடலையும், குருதியையும் உணவாக தருகின்றார்.
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா? என் உடலை உண்டு
குருதி அருந்தி, என்னைப் போல வாழ மாட்டாயா? என்ற
வினாவை எழுப்பி, நம் பதிலுக்காய் நம்மை உற்றுப்
பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்.
நம்மை வாழச் செய்ய உச்ச கட்டமாய் என்னவெல்லாம் செய்ய
முடியுமோ அதை எல்லாம் செய்தவர், நாமும் அதைச் செய்து
மகிழ்வதை நம் பதிலாக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுக்கின்றார்.
வாழ்வு தரும் உணவை அருந்தும் நாம், பிறருக்கு வாழ்வாக
அமைய, அருள்தரும் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. வாழ்வளிக்கும் உணவாகிய இயேசுவே!
நற்கருணை என்ற திருஉணவின் வழியாக எங்களுக்கு வாழ்வு தந்து
கொண்டிருக்கிறீர். எங்களுக்காக உழைக்கும் திருச்சபைத்
தலைவர்களை உமது திரு உணவினால் வலுவூட்ழ வழி நடத்த
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்
என்று சொன்ன ஆண்டவரே!
நாடுகளின் தலைவர்கள் உலக மக்கள் எல்லோரும், என்றுமே வாழக்கூடிய
அளவிற்கு தங்கள் பணியை பொதுநல உணர்வுடன் ஆற்ற, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
3 . உமது வாய்ச் சொல்லினால் வாழ்வளிக்கும் இறைவா!
அப்;பத்தினால் மட்டுமல்ல மனிதன் இறை வார்த்தையால்
வாழ்வான் என்ற செய்தியால், பணித்தள மக்களை வாழச்
செய்து கொண்ழருக்கும் எங்கள் ஞான மேய்ப்பர்களின்
வழிகாட்டலால், பயன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கச்
செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வு தரும் வார்த்தைகளை உணவாக தருகின்ற இயேசுவே!
நீர்தரும் உணவை அருந்தும் நாங்கள், எங்களோடு வாழும்
ஏழை எளிய மக்களுக்கு வாழ்வு தரும் வார்ர்தைகளால்,
அவர்களின் துயர் தீர்க்க அருள் தர வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. உடலை உணவாய் தந்த இறைவா !
பசியால் வாடுவோருக்கும், சிறுவர்களுக்கும், ஆதரவு
இழந்து தவிப்போர்க்கும் வசதி படைத்தோர் உதவி செய்யக்
கூடிய மனநிலை பெற, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பிரியமானவர்களே! நற்கருணைத் திருவிழாத் திருப்பலிக்கு, நல்ல
கருணை கொண்ட கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்புடனே
வாழ்த்தி வரவேற்கின்றோம்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படை ஊற்று, ஆதாரம் நற்கருணை.
எல்லாருக்காகவும் தன்னை கல்வாரியில் ஒப்புக்கொடுத்த
கிறிஸ்து, தன்னை நம்பி விசுவசிக்கின்றவர்களுக்கு, உணவாக,
பானமாக தன் சதையை, குருதியைத் தந்து, தன் அன்பினை, கருணையை
வெளிப்படுத்துகின்றார்.
உடலுக்கு உணவை தேடும் நாம், ஆன்மாவிற்கு உணவை
தேடுகின்றோமா? இந்த உணவு மற்ற பிற உணவைப் போல அல்ல, இது படைத்தவர்,
பாதுகாப்பவர், பராமரிப்பவர் தன்னையே உணவாக தந்து நம்மை அவரைப்
போல அழியாத வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.
வயிற்று பசியால் அழும் குழந்தைக்கு தாய் தன் குருதியை
பாலாக்கி பருக கொடுப்பது போல.
இத்தகைய அற்புதமான தியாகமான கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்துள்ள
நாம், அவரது கருணையை எண்ணி வணங்குவதோடு நில்லாமல்,
வாழ்வின் வழி சான்று பகர உறுதி எடுத்தவர்களாக பங்கேற்போம்.
பயன் கொடுப்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. தியாகத்தின் உருவே இறைவா!
திருஅவை அன்பர்களின் பணிகளை ஆசீர்வதித்தருளும். தியாக
வாழ்வின் வழி உம்முடைய சாட்சிகளாக இருந்திட அருள்தர இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2. நல்கருணையே இறைவா!
நாட்டை ஆள்வோரை ஆசீர்வதித்தருளும். தங்களது கருணையின் செயல்பாட்டால்,
உம்மை உலகுக்கு வழங்கி, உண்மையாய் உழைத்திட அருள்தர இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
3. உணவான தெய்வமே!
பசியால், பட்டினியால் வருந்துவோரை நாங்கள் இனம் கண்டு, உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வாக்கிற்கு ஏற்ப, உணவு
கொடுத்து உயிர் கொடுக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உயிரான தெய்வமே!
உம்மை வணங்கி வழிபடும் நாங்கள், உயிருள்ளவரை வாழ்வின் வழி
பிறருக்கு சான்று பகர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்று கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். நற்கருணைத் திருவிழா என்றும் இது
அழைக்கப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் ஒரு வாக்கியத்தையே
நம் சிந்தனையின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்வோம்:
'உங்களுக்குப் பசியைத் தந்தார்!'
பசி என்பது அனைத்து உயிர்களின் அடிப்படையான உணர்வு. பசி
வரும்போது மற்ற உணர்வுகள் செயல் இழக்கின்றன. நாம்
வலிமையற்றவர்களாக மாறுகிறோம். பசியின் கொடுமையை
திருவள்ளுவர் இப்படியாகச் சொல்கிறார்:
'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு' (குறள் 1048)
பொருள்: நேற்று என்னைக் கொல்வதுபோலத் துன்புறுத்திய
வறுமையும் பசியும் இன்றும் என்னைத் தேடி வருமோ என்று ஏழை
மனிதன் தினமும் அஞ்சி நடுங்குவான்.
பசி ஒருவருக்கு இறப்பு உணர்வைத் தருகிறது.
பசியை உணவால் மட்டுமல்ல, உறவாலும், கடவுளின்
உடனிருப்பாலும் போக்க முடியும் என்று கற்பிக்கிறது இன்றைய
இறைவார்த்தை வழிபாடு.
(அ) இறையியல் விளக்கம்
'நற்கருணையே திருஅவை வாழ்வின் ஊற்று, மையம், உச்சம்' என்று
கற்பிக்கிறது நம் திருஅவை. நம் திருஅவையின் மறைக்கல்வி,
நற்கருணையை மூன்று சொற்கள் வழியாக எடுத்துரைக்கிறது.
(1) உணவு (Meal / Food)
நற்கருணை என்றால் உணவு. 'நானே வாழ்வுதரும் உணவு' என்று
தம்மையே முன்மொழிந்த இயேசு, இறுதி இராவுணவில் 'இது என்
உடல்' என்று சொல்லி நற்கருணையை ஏற்படுத்துகிறார்.
'அப்பத்தின் வீடு' (பெத்லகேம்) என்னும் ஊரில் பிறந்த இயேசு
நாம் உண்ணும் அப்பமாகவே மாறுகிறார். அனைத்து
உயிர்களுக்கும் அடிப்படையான ஓர் உணர்வு பசி. அந்தப் பசி
போக்குகிற உணவாகத் தம்மையே முன்மொழிகிறார் இயேசு.
(2) பலி (Sacrifice)
நற்கருணையில் நாம் இயேசுவின் கல்வாரிப் பலியை
நினைவுகூர்கிறோம். கல்வாரிப் பலியை நாம் திரும்பவும்
நிறைவேற்றுவதில்லை. ஏனெனில், இயேசுவின் பலி ஒரே பலியாக,
நிறைவான பலியாக கல்வாரியில் நிறைவேறப்பட்டுவிட்டது.
அந்நிகழ்வை நாம் திருப்பலியில் நினைவுகூர்கிறோம். ஆகையால்,
நற்கருணைக் கொண்டாட்டத்தை 'திருப்பலி' என்று அழைக்கிறோம்.
(3) உடனிருப்பு (Real Presence)
இயேசு நற்கருணையில் பிரசன்னமாகி நம்மோடு உடனிருக்கிறார்.
நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் பிறகும் அவருடைய பிரசன்னம்
அப்பத்தில் தொடர்கிறது.
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், நற்கருணை
குறித்துக்காட்டுகிற மகிழ்ச்சியை எடுத்துரைக்கிறார்: 'ஓர்
அரசனின் உடனிருப்பு அந்த நாட்டு மக்களுக்கு ஊக்கமும்
மகிழ்ச்சியும் தருகிறது. அதுபோல, இயேசுவின் உடனிருப்பு
நமக்கும் நம் நகரத்துக்கும் மகிழ்ச்சி தருகிறது.'
திருத்தந்தை பிரான்சிஸ், நற்கருணையை 'வியப்பின்
அருளடையாளம்' என அழைக்கிறார். ஏனெனில், அனைத்தையும் கடந்த
கடவுள் தம்மையே ஓர் அப்பத்துக்குள் சுருக்கிக்கொள்ளும்
அளவுக்கு இறங்கி வருகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம், 'அவர்
உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார்.
ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின்
வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று
நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு மன்னாவினால் உங்களுக்கு
உணவூட்டினார்' என மொழிகிறார்.
இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையுமுன்
அவர்களை ஒன்றாகக் கூட்டி, ஆண்டவரின் அரும்பெரும் செயல்களை
எடுத்துரைக்கிறார். ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த
பயிற்சிகளில் ஒன்று, அவர்களுடைய தன்நிறைவு உணர்வை
அகற்றுவது. பசி என்பது அடிப்படையான உந்துணர்வு. இந்த
உந்துணர்வால் நாம் வருந்தும்போது மற்றவர்கள்மேல்
கொண்டிருக்கிற சார்புநிலையை உணர்கிறோம். 'அப்பம்' என்பது
ஒருவர் தம் சொந்த உழைப்பால் உருவாக்குவது கோதுமை பயிர்
செய்து, மாவு எடுத்து, எண்ணெய் சேர்த்து, சுட்டு
உருவாக்குவது. 'மன்னா' கடவுளுடைய சொற்களால் பெய்வது.
தங்களால் அல்ல, மாறாக, கடவுளால்தான் தங்கள் இருத்தல்
சாத்தியமாகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்,
நினைவில் நிறுத்த வேண்டும், மற்றவர்களுக்கும் அறிவிக்க
வேண்டும்.
இப்படியாக, மனிதர்களின் பசியைப் போக்குகிறது உணவு.
(2) பசி போக்கும் தோழமை (இரண்டாம் வாசகம்)
இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகரில் 'அப்பம் பிட்குதல்'
நிகழ்வில் காணப்பட்ட பிறழ்வைக் கண்டித்துத் திருத்துகிறார்
பவுல். இந்த மடலில் பல பிறழ்வுகளை பிரிவினை, பாலியல்
பிறழ்வுகள், சிலை வழிபாடு, சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை,
வழிபாட்டுப் பிறழ்வுகள் கண்டித்து அறிவுறுத்துகிறார்.
'அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில்
பங்குகொள்ளுதல் அல்லவா!' என்கிறார். 'கிறிஸ்துவில்' என்பது
பவுலுடைய மடல்களில் காணப்படும் ஒரு முக்கியமான சொல்.
'கிறிஸ்துவில் பங்கேற்கிற' நபர் கிறிஸ்துவோடு உறவாடி,
நெருக்கமாகி, கிறிஸ்துவாகவே மாறுகிறார்.
தொடர்ந்து, 'நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்'
என்கிறார். ஏனெனில், ஒரே பாத்திரத்தில் நாம் கையிட்டு
உண்ணும் உணவு நமக்குள்ளே உறவை ஏற்படுத்துகிறது.
இப்படியாக, நம் பசியை உறவுகள் வழியாக நீக்க முடியும்
என்கிறது இரண்டாம் வாசகம்.
(3) பசி போக்கும் கடவுள் (மூன்றாம் வாசகம்)
நற்செய்தி வாசகம், இயேசுவின் 'நானே வாழ்வுதரும் உணவு'
பேருரையிலிருந்து தரப்பட்டுள்ளது. அப்பங்களைப் பலுகச்
செய்து மக்களுக்கு உணவூட்டிய இயேசு, தொடர்ந்து, 'நானே
வானினின்று இறங்கி வந்த உணவு' என்று தம்மையே
முன்மொழிகிறார். இதுவே இயேசுவின் முதல் 'நானே' கூற்று
ஆகும்.
'எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்' என்னும் வாக்கியத்தை
நற்கருணையின் வழியாக இயேசு தம்மை நமக்கு வழங்குகிறார்
என்றும், கல்வாரிப் பலியில் தம்மையே பலியாக
ஒப்புக்கொடுத்தார் என்றும் புரிந்துகொள்ளலாம்.
'உலகு' என்பது யோவான் நற்செய்தியில், 'கடவுள் இயங்கும்
தளமாகவும்,' 'கடவுளுக்கு எதிரான மனப்பாங்காகவும்
இருக்கிறது.'
மேலும், இயேசுவை உண்பவர் அவரோடு 'இணைந்திருப்பர், வாழ்வு
பெறுவர்.' யோவா 15-இல் இணைந்திருத்தலும் கனிதருதலும்
இணைந்த செல்கின்றன. இயேசுவோடு இணைந்திருப்பவர் நிறைவாழ்வை
இங்கேயே பெற்றுக்கொள்கிறார்கள்.
மனிதர்களின் பசியை ஆற்றக்கூடியவர் கடவுளோடு நாம் கொள்ளும்
உறவு என்பது இங்கே தெளிவாகிறது.
(இ) வாழ்வியல் விளக்கம்
(1) ஒருவர் மற்றவரின் பசி போக்கும் அழைப்பு
நற்கருணை அடிப்படையில் நம் பசியை நமக்கு நினைவூட்டுகிறது
என்றால், நாம் ஒருவர் மற்றவரின் பசியைப் போக்க
அழைக்கப்படுகிறோம். உடல்பசி மட்டுமல்ல, அறிவுப் பசி,
உணர்வுப் பசி, ஆன்மிகப் பசி என அனைத்துப் பசிகளையும் போக்க
நம்மால் இயலும்.
(2) வலுவற்றவர்களின் மருந்து நம்பிக்கை
திருமணத்தை அருளடையாளமாகக் கொண்டாடதவர்களுக்கு, மணவிலக்கு
அல்லது மறுமணம் செய்தவர்களுக்கு நாம் நற்கருணை
வழங்குவதில்லை. ஏனெனில், அவர்கள் திருஅவையின் ஒன்றிப்பில்
(கம்யூனியன்) இல்லை. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ்,
'அன்பின் மகிழ்ச்சி' (அமோரிஸ் லெத்திட்சியா) என்னும்
திருத்தூது ஊக்கவுரையில், 'நம்பிக்கை என்பது
வலிமையானவர்கள் பெறும் பரிசு அல்ல, வலுவற்றவர்கள் பெறும்
மருந்து' என்கிறார். ஒவ்வொரு நிகழ்வையும் நாம்
கருத்தில்கொண்டு தேர்ந்து தெளிந்து, அவசியம் ஏற்படின்
நற்கருணை வழங்கலாம் என்று பரிந்துரை செய்கிறார். நற்கருணை
நம் ஆன்ம நோய் போக்கும் மருந்தாக இருக்கிறது.
(3) காண இயலாத கடவுளின் காணக்கூடிய மறைபொருள் நற்கருணை
'இது என் உடல், இது என் இரத்தம்' என்னும் அர்ப்பண
வார்த்தைகளைச் சொல்கிற அருள்பணியாளரும் ஆயரும்
திருப்பலியில், 'நம்பிக்கையின் மறைபொருள்' என்று
அறிவிக்கிறார்கள். நம்பிக்கைக் கண்கள் கொண்டு மட்டுமே நாம்
காணும் நற்கருணை கடவுள் உணர்வை நமக்குத் தருகிறது. நாம்
காண்கிறவற்றையும் தாண்டிய ஒரு மறைபொருள் உள்ளது என்ற நம்
தேடலை நமக்கு நினைவூட்டுகிறது.
'எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக!' என்று அழைப்பு
விடுக்கிற திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 147),
'ஆண்டவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச்
செய்கின்றார். உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச்
செய்கின்றார்' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.
நமக்கு பசியைத் தந்த நம் கடவுளே நம் பசியையும்
போக்குவாராக!
நாம் பலராயினும், ஒரே உடலாயிருக்கிறோம்
உயர்வு தாழ்வு வேண்டாம்
ஆஸ்திரியாவில் சீஃபீல்ட் (Seefield) என்ற இடத்தில் ஒரு கிறிஸ்தவக்
கோயில் உள்ளது. இங்கே ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு
ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலி நடந்துகொண்டிருந்தது. திருப்பலியில்
கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்த சாதாரண மக்களே. அதே
திருப்பலியில் ஒரு நிலப்பிரபும் கலந்து கொண்டான்.
அவன் அருள்பணியாளர் மக்களுக்கு நற்கருணையை வழங்கும் சமயத்தில், அவரிடம்,
"இந்தப் பகுதியில் வாழும் மக்களில் நான்தான் பெரிய ஆள். அதனால் எனக்கு
எல்லாருக்கும் வழங்கும் நற்கருணையை வழங்க வேண்டாம். திருப்பலியில்
பயன்படுத்தப்பட்ட பெரிய நற்கருணையைத் தான் வழங்கவேண்டும். அதுவும்
பீடத்தில் வைத்துத்தான் எனக்கு நற்கருணை வாழவேண்டும்" என்றான்.
"அப்படியெல்லாம் தரமுடியாது" என்று அருள்பணியாளர் சொன்னபோது அவரைக்
கொன்றுவிடுவது போல் வெறித்துப் பார்த்தான் அவன். இதனால் அருள்பணியாளர்
அவனுடைய சினத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என்று அவனைப் பீடத்திற்கு
அழைத்தார்.
பின்னர் அவர் பெரிய நற்கருணையை எடுத்து, அவனுடைய நாவில் வைத்தார்.
அவனால் அதை விழுங்க முடியவில்லை. அதைவிடவும், அதிலிருந்து இரத்தம்
வழிந்து தரையில் விழவே, அவன் பதறிப் போனான், இதனால் அருள்பணியாளர்
அவனுடைய நாவில் இருந்த நற்கருணையை எடுத்தார். அதில் ஐந்து காயங்கள்
இருந்ததால் அவர் இன்னும் அதிர்ந்து போனார். இதற்கு நடுவில் தான் மிகப்பெரிய
தவறு செய்துவிட்டதை உணர்ந்த நிலப்பிரவு அருள்பணியாளரிடம் மன்னிப்புக்
கேட்டான்.
அருள்பணியாளர் நிலப்பிரவுவின் நாவில் வைத்த அந்த நற்கருணையானது அதே
கோயிலில் இன்றும் மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நற்கருணை சமத்துவத்தின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம், ஒன்றிப்பின்
அடையாளம். அதை உட்கொள்கின்ற ஒருவர் தம்மோடு வாழும் சகோதரர் சகோதரிகளை
பிரித்துப் பார்த்தால், அவரை விடவும் இழிவான செயல் வேறு எதுவும் இருக்க
முடியாது. இன்று நாம் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும்
செய்தி என்ன என்று நாம் சிந்திப்போம்.
மன்னாவால் வாழ்வளித்தவர்
சமீபத்தில் அரசாங்கம் 'பன்னிரண்டு மணிநேரம் வேலை' என்ற சட்டத்தைக்
கொண்டு வந்து, அதனை மக்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினால்
திரும்பப் பெற்றுக்கொண்டது. எட்டு மணி நேர வேலை என்று
சொல்லிக்கொண்டு, அதை விடவும் கூடுதலான நேரம் வேலையை நிறுவனங்கள்
வாங்கும்போது, பன்னிரண்டு மணிநேரம் வேலை என்றொரு சட்டம் நடைமுறைக்கு
வந்தால், நிறுவனங்கள் எவ்வளவு மணிநேரம் வேலை வாங்கும் என்று நாம்
சொல்லித் தெரியவேண்டியதில்லை
இன்றைக்கே தொழிலாளர்களின் மக்களின் நிலைமை இப்படியிருக்கும்போது
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தபோது, அவர்களின்
நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து
பார்த்துக் கொள்ளலாம். இஸ்ரயேல் மக்கள் செய்து வந்த கடுமையான
வேலையினால் அவர்களது வாழ்வே கசந்து போனது. (விப 1:14). இதையெல்லாம்
கண்ணுற்ற கடவுள், அவர்கள்மீது பரிவு கொண்டு (விப 3: 7), அவர்களை
மோசேயின் தலையில் எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும்
பொழியும் கானான் நாட்டை நோக்கி அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்கு
மன்னாவை வழங்கி வாழ்வளித்தார். இத்தகையதொரு மாபெரும் செயலைச்
செய்திருக்கும் கடவுள் மறக்க வேண்டாம் என்கிறது இணைச்சட்ட
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம்.
தன்னுடைய உடலால் நிலைவாழ்வு
மன்னாவை உண்ட மக்கள் இறந்து போனார்கள். ஆனால், விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாகிய என்னை எவராவது உண்டால் அவர்
என்றுமே வாழ்வார் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்றார்.
இயேசு சொன்னதை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் எப்போதுமே
மேம்போக்காகப் புரிந்து கொண்டார்கள். அவர் மறுபடியும் பிறக்க
வேண்டும் என்று பேசியபோதும் (யோவா 3:4), வாழ்வளிக்கும் தண்ணீரைப்
பற்றிப் பேசியபோதும் (யோவா 4:15) அதுதான் நடந்தது. இயேசு, "என்
சதையை உணவாகக் கொடுக்கின்றேன். அதை உலகு வாழ்வதற்காகவே
கொடுக்கின்றேன்" என்று சொன்னபோது, "நாம் உண்பதற்கு இவர் சதையை
எப்படிக் கொடுக்க இயலும்?" என்று அவரது சீடர்களிடையே வாக்குவாதம்
ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான் காரணம், "இரத்தத்தை அருந்த
வேண்டாம்" (இச 12:16; லேவி 17: 10-14) என்று பழைய ஏற்பாட்டில்
சொல்லப்பட்டதாலேயே.
சீடர்கள் மேம்போக்காகப் புரிந்துகொண்டதைப் போல், இயேசு தன்
சதையையும் இரத்தத்தையும் அப்படியே உட்கொள்ள வேண்டும் என்று
சொல்லவில்லை. மாறாகத் தன்னுடைய வார்த்தையையும் விழியங்களையும்
உள்வாங்கி, அதன்படி வாழவேண்டும் என்கிறார். அவ்வாறு வாழ்பவர்
நிலைவாழ்வைப் பெறுவர் என்கிறார் இயேசு
வேற்றுமையைக் களைந்து ஒன்றுபட்டு வாழ்வோம்
இயேசுவின் வார்த்தையின்படி, அவரது விழுமியத்தின்படி வாழ்கின்ற
ஒருவர் நிலைவாழ்வைப் பெறுவார் என்று நாம் சிந்தித்தோம். இயேசுவின்
விழுமியம் என்ன என்கிற தெளிவினை இன்றைய முதல் வாசகத்தில் பவுல்
தருகின்றார்.
கொரிந்து நகரில் ஏழை, பணக்காரன், யூதர், பிறவினத்தார் என்று
பல்வேறு பிரிவினர் இருந்தனர். இவர்கள் இயேசுவின் திருவிருந்தில்
கலந்து கொண்டபோதும், அவரது திரு உடலையும் திரு இரத்தத்தையும்
உட்கொண்ட போதும் ஒற்றுமையுடன் வாழாமல் பிரிந்தே கிடந்தார்கள்.
இதனால் அவர்களிடம் பவுல், "நாம் பலராயினும் ஒரே
உடலாயிருக்கின்றோம்" என்ற செய்தியை வலியுறுத்திக் கூறுகின்றார்.
கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவைக்குத் தலையாக இருப்பவர் இயேசு
கிறிஸ்து. அவருடைய திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டு,
அவரது உடலின் உறுப்புகளாக இருப்பவர்கள் நாம். அப்படியிருக்கையில்,
நாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று வேறுபாடு பார்ப்பதும்,
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதும்
கிறிஸ்துவை இழிவு படுத்துகின்ற செயல்கள்.
இன்றைக்கும் கூட ஒருசில இடங்களில் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு
இரத்தத்தையும் உட்கொள்கின்ற கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவர்களை
வேறுபடுத்திப் பார்ப்பதும், பிரித்துப் பார்ப்பதும்
வேதனையளிக்கின்றது. ஆகையால், கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்
பெருவிழாவைக் கொண்டாடும் இந்த இந்த நாளில், பெயருக்குக்
கிறிஸ்தவர்களாய் வாழாமல், கிறிஸ்துவின் விழுமியத்திற்கு ஏற்ப,
அனைவரும் சகோதரர் சகோதரிகள் ஒன்ற உணர்வோடு வாழ்வதற்கு உறுதி
ஏற்போம்.
சிந்தனைக்கு
"விண்ணகத்தை அடைவதற்கு எளியதும் பாதுகாப்பானதுமான வழி நற்கருணையே"
என்பார் புனித பத்தாம் பயஸ். ஆகையால், நாம் விண்ணகத்தை அடைவதற்குக்
கடவுள் தந்திருக்கும் நற்கருணை உட்கொள்வதோடு நின்றுவிடால், அது
குறித்துக் காட்டும் விழுமியங்களின் படி வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
போலி உறவுகள் , சுயநல உறவுகள் சந்தர்ப்பவாத உறவுகள் , இப்படிப்பட்ட
உறவுகளில் வாழும் மனிதரை நிலையான, நிரந்தரமான, இணைப்பிரியாத
இதய உறவுக்கு இன்றைய திருவழிபாடு அழைக்கின்றது. மீட்பின்
வரலாற்றில் பல வழிகளில் இறைவன் தனது உறவைப்
புதுப்பித்துள்ளார் . மன்னாவைப் பொழிந்தும் , பாறையில் இருந்து
தண்ணீரைத் தந்தும் , தனது உறவை புதுப்பித்துக் கொண்டார் என்று
பழைய ஏற்பாடு சான்று பகர்கிறது. துன்பத்திலும் , துயரத்திலும்
, உணவு ஒருவனுக்கு கை கொடுக்கிறது. பாலைவனத்திலும் மக்களின்
பசியைப் போக்க மன்னா அளிக்கப்பட்டது (முதல் வாசகம் ).
விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு நானே. இதை உண்பவர்
வாழ்வு பெறுவர் (யோவா. 6:51). இங்கு மனித உறவும் , இறை உறவும்
இணைகிறது. நற்கருணைப் பற்றிய இயேசுவின் போதனையும் , அதில்
உள்ள அழுத்தமும் , உறுதியும் வேறு எந்த போதனையிலும் காணப்படவில்லை
எனலாம் . காரணம் வத்திக்கான் சங்கம் சொல்வதுபோல, இதுவே
கிறிஸ்துவ வாழ்வின் மையமாகவும் ஊற்றாகவும் அமைகிறது.
இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் கையளிப்பதில் இரண்டு
முக்கிய அம்சங்களைக் காண முடிகிறது. உடலை உண்பது இயேசுவின்
வாழ்வில் பங்கு கொள்வது. இரத்தத்தைப் பருகுவது அவரது இறப்பில்
பங்கு கொள்வதாகும் . உயிர்தரும் இரத்தம் கடவுளுக்கு மட்டும்தான்
சொந்தம் . கடவுளுக்குச் சொந்தமானதை, இயேசு எல்லோருக்கும்
பகிர்ந்தளிக்கிறார் . இயேசு நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும்
கொடுக்க முன் வந்தார் . தனக்கு அடையாளம் கொடுத்த உடலும் ,
இரத்தமும் , நமக்குள் வந்து, நாம் , அவரைப் பிரதிபலிக்க
வேண்டும் என்பதற்காக உணவின் வடிவில் தனது உடலையும் இரத்தத்தையும்
நமக்குக் கொடுத்து நமது உறவை நிரந்தர உறவாக்கிக் கொண்டார்
.
இன்றைய . உறவுகள் பல சமயங்களில் இதயத்தை இருட்டாக்கி, உதட்டில்
மட்டும் பூசிக் கொள்ளும் சாயமான போலி உறவுகளே. உறவுகள்
தொலைபேசியில் தொடங்கி, தொலை .. பேசியிலேயே துண்டிக்கப்படுகின்றன.
இன்டர்நெட்டிலே தொடங்கி இன்டர்நெட்டிலேயே முடிந்துவிடுகிறது.
ஆதியில் ஆதாமின் உறவு பசுமையாக இருந்தது. அது பாதியிலேயே
பாழாய்ப் போனது. இருப்பினும் படைத்தவரை, காத்தவரை, வழிநடத்தியவரை
ஏனோ அவர்கள் மறந்துவிட்டார்கள் . அங்கு உறவு என்பது கரிசல்
மண்ணில் ஏற்பட்ட விரிசலானது. இருப்பினும் , இறைவன்
சோர்ந்து போகவுமில்லை, அவர்களைக் கைவிடவும் இல்லை. மாறாக
அவர்களின் பசியையும் , தாகத்தையும் தணித்தார் . இறுதியில்
உறவின் உச்சக்கட்டமாகத் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்
. உறவுக்கு நிரந்தர உருவம் கொடுக்க உதயமானார் இறைமகன் இயேசு.
உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடாக இயேசு தனது
உடலையும் இரத்தத்தையும் நமக்குக் கொடுத்துப் பாவிகளோடும் ,
உள்ளம் உடைந்தவர்களோடும் , முடவர் களோடும் , செவிடர்களோடும்
, குருடர்களோடும் ஓடிச் சென்று தனது உறவைப் புதுப்பித்துக்
கொண்டார் . இவரின் உறவு நிலைத்திருக்கக் கூடியது, நிரந்தரமானது,
நிதமும் சுவைக்கக் கூடியது. ஆனால் எப்படி அவரின் உறவில்
நாம் நிலைத்திருப்பது என்பதுதான் இன்று நம் இதயம் எழுப்பும்
கேள்வியாக உள்ளது.
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்
. நானும் அவரில் நிலையான உறவில் நிலைத்திருப்பேன் என்றார்
.
ஓர் இளைஞன் இறக்கும் தருவாயில் இருந்தார் . அவர் மருத்துவரை
நோக்கி எனது உறுப்புகளாகிய கண்களையும் , சிறுநீரகங்களையும்
எடுத்து, தேவைப்படுவோருக்குக் கொடுங்கள் என்றார் . இவனது
கண்களால் , பார்வை இழந்த இருவர் பார்வை பெற்றனர் . உயிருக்குப்
போராடிய இருவருக்கு சிறுநீரகம் கொடுக்கப்பட்டது. இறுதியில்
அவன் இறந்தாலும் , நான்கு உயிர்களின் உறவுகளைப்
புதுப்பிக்க அவன் காரணமானான் . இதைத்தான் புனித பவுல் நாம்
இயேசுவுக்குள்ளும் , இயேசு நமக்குள்ளும் நிலைத்திருந்தால்
, நாம் மிகுந்த கனி தரும் மரமாவோம் என்கிறார் .
உறவு என்பது தேங்கிய குட்டையல்ல. மாறாக ஓடுகின்ற - அருவி
போன்றது. அப்படிப்பட்ட உறவில் நாம் உயிர் வாழ்வதைத்
தெரிந்துகொள்ள உடலும் , நாம் நம்மையே தெரிந்துகொள்ள இரத்தமும்
உதவுகிறது. கசப்பான நிகழ்வுகளை மறந்து, நமது இதயத்துக்கு
இதமான, இனிமையான உறவைத் தனது உடலாகவும் , இரத்தமாகவும்
கொடுத்தார் . வன்முறை யினாலும் , அடிப்படைவாதத்தினாலும் மனித
உறவுகளை இழந்து, வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு
நிலையான உறவு தந்தார் .
கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அடையாள முறையில் , தகுந்த
மனநிலையோடு நாம் உட்கொள்ளும்போது அவரின் உறவில்
நிலைத்திருக்கிறோம் . வாழ்வின் உணர்வை, ஒன்றிப்பின் உணர்வை
உண்டு, கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம் .
பக்தன் ஒருவன் பல நாள்கள் , பல மாதங்கள் இறைவனை நோக்கி
வரம் கேட்டு மன்றாடினான் . ஒரு நாள் கடவுள் அவனுக்குக்
காட்சியளித்து, உனக்கு என்ன வேண்டும் ? என்றார் . பக்தனோ
கடவுளைப் பார்த்து, எதைக்கேட்டாலும் கொடுப்பாயா ? என்றான்
. கடவுளோ, எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்றார் . பக்தனோ,
எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு
உம்மிடம் ஒரு தாராள மனமிருக்கின்றதா? என்று கேட்க, கடவுள்
, ஆம் என்று சொல்ல, பக்தன் , அந்த மனத்தை எனக்குக்
கொடு என்றான் . கடவுள் அந்த பக்தனைப் பார்த்து, நான்
சொன்ன சொல் தவறமாட்டேன் . நீ கேட்ட என் மனத்தைத் தருகின்றேன்
. சற்று கால அவகாசம் கொடு என்றார் . பக்தனும் சரி என்றான்
.
காலச் சக்கரம் சுழன்றது. நாள்கள் இரவு பகலென மாறின ;
மாதங்கள் மறைந்தன; ஆண்டுகள் உருண்டோழன. மனிதனின் ஆசையைக்
கடவுள் நிறைவேற்றும் நாள் பிறந்தது. கடவுள் மனிதனாகப்
பிறந்தார் . 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறப்பதற்கு
முந்தின நாள் இரவு, இயேசு பன்னிருவரை அழைத்து பந்தியிலே
அமர்ந்து அவரது உடலையும் , இரத்தத்தையும் அவர்களுக்கு
அளித்தார் [நற்செய்தி] ; அவருடைய உடல் , பொருள் , ஆவி
அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார் ; மனிதன் வரமாகக்
கேட்ட அவருடைய மனத்தை அவனுக்கு ஈந்தார் .
நற்கருணையில் வாழும் இறைவனை நாம் உணவாக உட்கொள்ளும்போது
நமக்கு ஏற்படும் நன்மைகளில் ஒன்று அவருடைய மனமாக நம்
மனம் மாறுகின்ற அரிய வாய்ப்பு! புனித பவுலழகளார்
கிறிஸ்து இயேசு கொண்ழருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்
[பிலி 2:5] என்கின்றார் .
இயேசுவின் மனம் எப்பழப்பட்டது என்பது நமக்குத்
தெரியும் . இயேசுவின் மனம் - கடவுளுக்கு இணையாயிருக்கும்
நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக்
கருதாத மனம் [பிலி 2:6]. இயேசுவின் மனம் -அது தம்மையே
வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான
மனம் .
இயேசுவின் மனம் - அது சாவை ஏற்கும்
அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தன்னையே தாழ்த்திக்கொண்ட மனம் .
இன்றைய உலகுக்கு மிகவும் தேவையானவை புதிய சிந்தனைகள் !
பணத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பகிர்தலால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
பதவியால் ஆகாது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பாசத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
அழகால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
அடக்கத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
போரால் ஆகாது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பொறுமையால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
அதிகாரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
அரவணைப்பால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
புதிய சிந்தனைகளை நாம் எந்தச் சந்தையிலும் வாங்க முழயாது!
இவை கடையில் பெறும் பொருள்கள் அல்ல! மாறாக இவை புதிய
வானத்திற்கும் , புதிய பூமிக்கும் சொந்தக்காரரான இயேசு
நமக்குத் தரும் ஆசிகள் . அவற்றை நற்கருணையின் வழியாக
நமக்குத் தர அவரே தினம் தினம் முன்வருகின்றார் [இரண்டாம்
வாசகம் ]. .
பழைய ஏற்பாட்டில் எவ்வாறு மன்னா என்னும் உணவு மக்களின்
உடல் பசியைத் தீர்த்ததோ [முதல் வாசகம் ] அதேபோல புதிய
ஏற்பாட்டிலே மக்களின் ஆன்மப் பசியை, மனிதர்களின் ஆசைகளைத்
-தீர்த்து வைக்கும் அருமருந்தாக, இயேசுவின் உடலும் ,
இரத்தமும் விளங்குகின்றன.
நமது மனநிலை இயேசுவின் மனநிலையாக மாற, நமது மனம் [அறிவு+
ஆசை) புதிய அறிவையும் , புதிய ஆசைகளையும் அணிந்துகொள்ள,
நற்கருணை விருந்திலே நாளும் பங்கேற்போம் .
மேலும்௮றிவோம் :
எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோடு
அவ்வ(து) உறைவ(து) அறிவு (குறள் : 425 )
பொருள் : உலகத்தில் சான்றோர் எவ்வாறு பிறருக்குப் பயன்
தரும் வகையில் வாழ்கின்றனரோ, அவ்வாறே அவர்களைப் பின்பற்றிப்
பயனுற வாழ்வதே உயர்ந்த அறிவாகும் !
ஓர் இளம் பெண் தன் தோழியிடம் , "உனக்கு ஒரு பையன் காதல் கடிதம்
எழுதினானே; அதை நீ என்ன செய்தாய் ?" என்று கேட் ்டதற்குத்
தோழி பின்வருமாறு கூறினாள் : "அக்கடிதத்தில் நிறைய எழுத்துப்
பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருந்தன. அவற்றையெல்லாம்
திருத்தி அவனுக்கே அக்கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்
." காதல் கடிதத்தில் அன்பைப் பார்க்க வேண்டுமே தவிர எழுத்துப்
பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் பார்க்கக்கூடாது. அப்படிப்
பார்த்தால் அது உண்மையான காதலாய் இருக்க முடியாது. கடவுன்
மனிதருடைய வாழ்வில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப்
பிழைகளையும் , அதாவது குற்றங்களையும் குறைகளையும் கண்டு
அவர்களை ஒதுக்கி விடுபவர் அல்ல; மாறாக அவர்களோடு அன்பு உடன்படிக்கையைச்
செய்பவரே கடவுள் . தொடக்கக் காலத்தில் அவர் இஸ்ரயேல் மக்களுடன்
உடன்படிக்கை செய்தார் . அவ்வுடன்படிக்கையை அவர் மோசே வழியாகச்
சீனாய் மலை அடிவாரத்தில் மிருகங்களின் இரத்தத்தினால்
செய்தார் (விப 24:8). ஆனால் அந்த மக்கள் அந்த உடன்படிக்கையை
மீறியபோது கடவுள் புதிய உடன்படிக்கை செய்யப்போவதாக வாக்களித்தார்
(எரே 31:31). கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையைக்
கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தினால் செய்தார் . "இந்தக்
கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால்
நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" (லூக் 22:20).
இன்று ஆண்டவருடைய திருவுடல் , திரு இரத்தத்தின்
பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம் . நற்கருணை, கிறிஸ்துவின்
உடன்படிக்கையை நினைவூட்டுகின்றது; நிலைப்படுத்துகிறது. இரண்டாம்
வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைதான் கிறிஸ்தவ
வாழ்வின் ஊற்றும் உச்சியுமாகும் (திருச்சபை, எண் 11). நற்கருணை
ஒரு பொருள் அல்ல; மாறாக மீட்பின் வரலாற்றை முழுமையாகத் தன்னகத்தே
கொண்டுள்ளது. நற்கருணை கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்கிறது
(இறந்தகாலம் ); அகம் அருளால் நிரப்பப்படுகிறது (நிகழ்காலம்
); இனி வரவிருக்கும் நமது விண்ணக மகிமைக்கு அச்சாரமாக இருக்கிறது
(எதிர்காலம் ). இவ்வாறு முக்காலத்தையும் தன்னகத்தே
கொண்டுள்ள நற்கருணை மீட்பின் வரலாற்றை, புதிய உடன்படிக்கையைக்
கதிரவன் தோன்றி மறையும்வரை காலமெல்லாம் செயல்படுத்துகின்றது.
நற்கருணைப்பலி கல்வாரிப் பலியின் நீங்காத நினைவுச் சின்னம்
. பழைய உடன்படிக்கையில் பலி ஒப்புக்கொடுத்த குரு வேறு; பலியாக
ஓஒப்புக்கொடுக்கப்பட்ட பலிப்பொருள் வேறு; பலிப்பீடம் வேறு.
இம்மூன்றிற்கும் இடையே இருந்த பிளவைக் கிறிஸ்து
நீக்கிவிட்டார் . அவரே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும்
பலிப்பொருளாகவும் பலிப்பீட மாகவும் திகழ்கின்றார் .
கிறிஸ்து தமது இன்னுயிரை நமக்காகக் கொடுத்தது நட்பின்
வெளிப்பாடு. அவரே கூறினார் : "தம் நண்பர்களுக்காக உயிரைக்
கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா 15:13).
கிறிஸ்துவே நட்புக்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்கின்றார்
. அன்பின் உச்சக்கட்டம் உயிர்த் தியாகம் என்கிறார் வள்ளுவர்
.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).
அன்பில்லாமல் பிறர்க்குக் கொடுக்கலாம் . எடுத்துக்காட்டாக,
அன்பில்லாமல் ஒருவர்க்குப் ச்சை போடலாம் . ஆனால் கொடுக்காமல்
அன்பு செய்ய முடியாது. கிறிஸ்து நம்மை அன்பு செய்தார் ;
எனவே தமது உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும்
கொடுத்தார் . இன்றைய நற்செய்தியில் அவர் கூறுகிறார் :
"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் . அதை உலகு வாழ்வதற்காகவே
கொடுக்கிறேன் " (யோவா 6:51).
இன்றைய முதல் வாசகம் (இச 8:16) இஸ்ரயேல் மக்கள் மன்னாவால்
உண்பிக்கப்பட்டதை நினைவுகூர்கின்றது. மன்னாவை உண்டவர்
மடிந்து போயினர் ; ஆனால் நான் கொடுக்கும் உணவை உண்பவர்
என்றும் வாழ்வர் எனக் கிறிஸ்து யூதர்களிடம் கூறுகின்றார்
(யோவா 6:58). கிறிஸ்து கொடுக்கும் உணவாகிய நற்கருணை நமக்கு
நிலைவாழ்வளிக்கும் . நாம் இறந்தாலும் கிறிஸ்து நம்மை இறுதி
நாளில் உயிர்த்தெழச் செய்வார் .
நற்கருணையை உட்கொள்ளும் நாம் பலிவாழ்வு, தியாகவாழ்வு,
பகிர்வுவாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் . கொடுத்தலிலே
மூன்று வகை உண்டு. சக்கேயுவைப் போல் தனக்கு உள்ளதில் ஒரு
பகுதியை மட்டும் கொடுப்பது ஒருவகை. ஏழைக் கைம்பெண்போல்
தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்துவிடுவது இரண்டாம் வதை;
கிறிஸ்துவைப் போல் தன்னையே கொடுப்பது மூன்றாம் வகை. நமக்கு
உள்ளதிலிருந்தும் கொடுக்கவேண்டும் ; நமக்குள்ள
எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும் , ஏன் நம்மையே கொடுக்க
வேண்டும் . இல்லையென்றால் , நற்கருணை வெறும் கொண்டாட்டமாக
மட்டும் அமையுமே தவிர, அது நமது வாழ்க்கை முறையாக (Life
Style) மாறாது!
நற்கருணை ஒற்றுமையின் அருள் அடையாளம் என்ற கருத்தை இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் வலியுறுத்துகிறார் . அவர்
கூறுகிறார் : "அப்பம் ஒன்றே; ஆதலால் நாம் பலராயினும் ஒரே
உடலாய் இருக்கிறோம் . ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே
அப்பத்தில் பங்கு கொள்கிறோம் " (1 கொரி 10:17). பல கோதுமை
மணிகள் அரைக்கப்பட்டு உருவாக்கப்படும் அப்பம்
கிறிஸ்துவின் உடலாக மாறுகிறது. ஒற்றுமையின் அருள்
அடையாளமாகிய நற்கருணை நம்மிடத்தில் வேற்றுமையை
உருவாக்கலாமா?
முதலில் , கணவன் -மனைவியிடையே குடும்பத்தில் ஒற்றுமை
நிலவுகிறதா? நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு மனைவியிடம் , "ஏன்
நீங்கள் உங்கள் கணவரை நாற்காலியால் அடித்தீர்கள் ?" என்று
கேட்டார் , அதற்கு மனைவி, 'ஏனெனில் என்னால் மேஜையைத் தூக்க
முடியவில்லை என்றாராம் ! நற்கருணை உடன்படிக்கையைத் திருமண
உடன்படிக்கையம் பிரதிபலிக்கிறது. கணவன் கிறிஸ்துவாகவம்
மனைவி திருச்சபையாகவும் திகழ்கின்றனர் . வீட்டில் கணவன் -
மனைவி மேஜை, நாற்காலி கொண்டு அடித்துக் கொண்டால் , உலக
அரங்கில் அணுகுண்டுகள் , ஏவுகணைகள் மூலம் நாடுகள் நாடுகளை
அழிக்கத் தயாராகிக் கொண்டு வருகின்றன. நாம் போரை
அழிக்காவிட்டால் போர் நம்மை அழித்துவிடும் . "புதியதோர்
உலகம் செய்வோம் . கெட்டப் போர்புரியும் உலகினை வேரோடு
சாய்ப்போம் ." நற்கருணை மறைபொருள் நமக்கு விடுக்கும்
செய்தி: பிறருக்குக் கொடுப்பதால் , நாம் பெற்றுக்
கொள்கிறோம் ; பிறருக்காகச் சாவதால் , நாம் முடிவில்லா
வாழ்வு பெறுகிறோம் .
விடுதலை பற்றி பாரதி வீரமுழக்கமிட்டான் - "பூமியில் எவர்க்கும்
இனி அடிமை செய்யோம் " என்று. ஆனால் ஒருவருக்கும் பயப்படாமல்
கட்டுப்பாடற்று வாழ்ந்தால் ஒருவன் கெட்டுப்போக மாட்டானா?
யாரையாவது தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டாமா?
ஆனால் எப்போர்ப்பட்ட தலைவனை?
ஒரு கட்சித் தலைவரின் தொண்டர்கள் ஒருநாள் தங்கள் கொடிக் கம்பத்தைத்
தரையில் நட்டு அதன் உயரத்தைக் கண்டுபிடிப் பதற்காக ஒருவர்
தோள் மேல் ஒருவர் ஏறி நின்று ஸ்கேல் வைத்து அளந்து
கொண்டிருந்தனர் . இதைக்கண்ட பெரியவர் ஒருவர் "இத்தனை நேரம்
கம்பம் தரையில் தானே கிடந்தது. அப்பொழுது அதன் நீளத்தை அளந்திருக்கலாமே"
என்றார் . அதற்குத் தொண்டர்கள் "எங்கள் தலைவர் கம்பத்தின்
உயரத்தை அளக்கச் சொன்னாரேயன்றி அதன் நீளத்தை அல்ல" என்று
பதில் சொன்னார்கள் . தலையில் அடித்துக் கொண்ட பெரியவர் தலைவரைச்
சந்தித்து "உங்கள் தொண்டர்கள் இப்படி இருக்கிறார்களே" என்று
கேட்டதற்கு "அவர்கள் அப்படி இருப்பதால் தான் நான் அவர்களுக்குத்
தலைவனாய் இருக்கிறேன் என்று சொன்னாராம் .
பொம்மைகளை, மண்ணுகளை, மக்குகளை, அறிவுச் சூனியங்களை
வைத்துச் சமாளிக்கலாம் என்று நினைப்பவன் தலைவன் அல்ல கயவன்
!
நல்ல தலைவன் வேண்டும் என்று பாரதிக்குத் தெரியாதா? அதனால்
தான் அடுத்த வரியிலேயே "பரிபூரணனுக்கே அடிமை செய்து
வாழ்வோம் " என்று பாடினார் . அந்தப் பரிபூரணனைத்தான் இன்று
நாம் நற்கருணையில் காணுகிறோம் . அந்தத் தலைவன் நமக்காகத்
தன்னையே பலியாக்கி அதன் வழித் தன்னையே உணவாக்கி நம்மோடு உறைபவன்
, உடனிருப்பவன் .
இன்று நற்கருணைக்குப் பொருள் காண வேண்டும் என்றால் அது
திருச்சபையின் பின்னணியில் மட்டுமே சாத்தியம் . நற்கருணை
என்பது திருச்சபைக்காக மட்டுமே இயேசு தந்தது. நல்லவனோ கெட்டவனோ,
நர்த்திகனோ ஆத்திகனோ, நம்பிக்கை உள்ளவனோ நம்பிக்கை அற்றவனோ,
எல்லாருக்காகவும் இயேசு பலியானார் . ஆனால் நம்பிக்கை உள்ளவர்களுக்காக
மட்டுமே உணவானார் . நம்பிக்கை யாளர்களின் கூட்டம்தானே
திருச்சபை!
உலகத் திருச்சயை இயல்பாலும் பண்பாலும் கொண்டிருக்கும் அம்சங்கள்
இரண்டு.
1 பயணம் போகும் திருச்சபை 2. பணி புரியும் திருச்சபை.
இந்தக் கண்ணோட்டத்தில்தூான் நற்கருணை அர்த்தம் பெறும் .
1. பயணம் போகும் திருச்சபை;
வாழ்க்கை என்பது ஒரு பயணம் . நாமெல்லாம் வழிப்போக்கர்கள் .
"நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை. வரப்போகும் நகரையே நாம்
நாடிச் செல்கிறோம் ". (எபி.13:14). தெளிவான இலக்குத்தான் .
திடமான பயணம் தான் . எனினும் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும்
சோகமும் சோர்வும் அலுப்பும் களைப்பும் விரக்தியின்
விளிம்புக்கே தள்ளுகின்றன. "வாழ்ந்து என்னத்தக் கண்டோம் .
செத்துப் போகலாம் போல இருக்கு". நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு
மட்டுமல்ல. எலியா போன்ற இறைவாக்கினர்களுக்கே ஏற்பட்ட உணர்வு
இது.
அரசி ஈசபேலின் கொலை வெறிக்குத் தப்பி ஒரேப் மலைநோக்கி ஓட
வாழ்ந்தது போதும் என்ற உணர்வோடு வழியில் படுத்துவிடுகிறார்
. வானதூதர் வந்து "எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீ நீண்டபயணம்
செய்ய வேண்டும் " (1 அரசர் 19:4-8) என்று சொல்லித் தந்த அப்பத்தினால்
வலிமை பெற்று 40 பகல் 40- இரவுப் பயணத்தை மேற்கொண்டார் .
எம்மாவு சீடர்களின் கண்கள் திறந்தது இயேசு அப்பத்தைப்
ிட்கும் போது தானே! "அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று
நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம் " (லூக் .24:20) என்ற
வரியில் சொனிக்கும் சோகம் மறைந்து உற்சாகம் அன்றோ
அடைந்தனர் !
நமக்கும் வாழத் தேவையான வலிமையும் நம்பிக்கையும்
நற்கருணையே தரும் . வாழ்வு தரும் உணவு, சாகா வரம் தரும்
உணவு என்றால் என்ன பொருள் . நற்கருணையை அருந்தியவர்கள்
சாகாமல் இருப்பார்கள் என்றா பொருள் ? "உங்கள் முன்னோர்
பாலை நிலத்தில் மன்னாவை உண்ட போதிலும் இறந்தனர் " (யோவான்
6:49). இயேசு சொல்லித்தானா நமக்கு இது தெரியும் ? ஏன் ,
நமது முன்னோரெல்லாம் | நம்மைவிட ஆழ்ந்த நம்பிக்கையுடன்
நற்கருணையில் பங்கேற்றார்களே, அவர்கள் சாகாமலா
இருக்கிறார்கள் ? அதாவது மன்னாவை உண்டும் மோசே உட்பட
எவரும் இலக்கை அடையவில்லை. வாக்களிக்கப்பட்ட |
நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால் இயேசுவை உண்பவர்கள் |
இலக்கை அடைவார்கள் .
வாழ்க்கையின் சோர்வுகளில் மதுவை, நஞ்சை, தூக்குக் கயிற்றை
நாடுகிறோம் . நற்கருணையை நாடியிருக்கிறோமா?
நற்கருணை பயணத்தின் வழியுணவு மட்டுமல்ல. பயண முடிவில் :
உயிர்ப்பின் உறுதிப்பாடு. மகிமையின் அச்சாரம் . "என்னை
உண்பவர் என்றுமே சாகார் .
2. பணி செய்யும் திருச்சபை
எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. "Service is the rent
you pay for your life on earth", நீ இங்கே வாழ
வந்ததற்காகத் தருகிற வாடகைதான் நீ செய்வதாகச் சொல்லுகிற
சேவை. இயேசு நம் தலைவர் என்றால் ஏற்றிருந்த பதவியால் அல்ல,
| ஆற்றி வந்த பணியால் . பணி வாழ்வே பலிவாழ்வாக இருந்ததால்
. இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு, "மானிட
மகன் . தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே
வந்தார் " (மார்க் .10:45) மனிதகுல மீட்புக்காகத் தன்
உயிரை விலையாகக் கொடுத்தார் . தன் உடலை உணவாகக் கொடுத்தார்
. தன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தார் .
பணிக்கு நிறைவு தருவது பணியில் வெளிப்படும் பணிவு,
தாழ்ச்சி, தியாகம் . பணிவு இல்லாத பணி அழிவில் கொண்டு
நிறுத்தும் . அதன் அடையாளமாகத்தான் இறுதி இரவு உணவு
வேளையில் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார் .
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன்
என்றால் | நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக்
கடமைப் .- பட்டிருக்கிறீர்கள் (யோவான் 13:14)
பணி நோக்குடைய - சமுதாய ஈடுபாட்டை உணர்த்தும் ஆன்மீகமே
நற்கருணை சுட்டிக்காட்டும் ஆன்மீகம் .
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா
இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே
அவர்கள், முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், ஜப்பானின்
ஹிரோஷிமா நகரில், இளம் துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு,
ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட
அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த
இயேசு சபை இளம் துறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது.
அந்த இல்லம் முழுவதும் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த
சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு
வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அந்தக் கோவிலில், அருள்பணி
பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலி
நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:
"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப்
பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை
விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய
வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை,
அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை
எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு
படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத்
துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா,
முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை
அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத
திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன்
நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு
முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று
நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம்
திருவிழா.
நம்மில் பலர், சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த
நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள்
நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப
இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப்
பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள், இன்னும்
நம் நினைவுகளில் தங்கியிருந்தால், அவை, இன்னும் நம்
வாழ்வில், தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.
குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பல பாடங்கள்,
இன்னும் நம் வாழ்வில், பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன.
வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை
உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள், நமது குழந்தைப்
பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட
முடியாது. பல வேளைகளில், நாம் குழம்பிப்போயிருக்கும்போது,
குழந்தைகளைப் போல் எளிதான முறையில் சிந்திக்க
முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில்
வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித்
தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித
அகஸ்டினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த
பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும்
ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவுக்குத்
தேவையான பாடத்தை, மற்றொரு குழந்தையின் வழியே பயில
முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு
மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற பேராசிரியர்
லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்பவரால்
தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.
அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க,
ஒருமுறை பேராசிரியர் லியோ அவர்களை நடுவராக நியமித்தனர். பல
குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் பேராசிரியர்
லியோ அவர்களிடம் விவரிக்கப்பட்டன. அக்குழந்தைகளில், ஒரு 4
வயது சிறுவன், மிக அன்பு காட்டிய சிறுவன் என்று,
பேராசிரியர் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்தார். அந்தச்
சிறுவன் என்ன செய்தான்?
அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர்
வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர்.
ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில்
கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன், அந்த
முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான்.
இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, சிறுவன்
மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன்
செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா,
அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட
என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம்,
"ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில
உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.
அச்சிறுவனின் செயலைப் பாராட்டிய பேராசிரியர் லியோ அவர்கள்,
அதிக அன்பு காட்டிய குழந்தை என்ற பரிசை அச்சிறுவனுக்கு
வழங்கினார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின்
மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன்,
இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவின் உட்பொருளை
நமக்கு சொல்லித் தருகிறான்.
அன்பை, ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே
மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது.
பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில்
காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும்,
பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே
அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு
நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.
எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற
கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற
கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று, சென்ற வாரம்
சிந்தித்தோம். அதேபோல், எப்படி, அப்ப இரச வடிவில் இயேசு
பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல்
விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு, ஏன் அப்ப இரச
வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது
நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில்
விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும், இஸ்ரயேல் மக்கள்
தினமும் உண்ட, எளிய உணவுப் பொருட்கள். எந்த ஓர் உணவையும்
நாம் உண்டபின், அது, நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம்
இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும்.
உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும்
உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத்
தேர்ந்தெடுத்தார் என்று புரிந்துகொள்கிறோம். எளிய
வடிவங்கள், அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில்,
நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி, நம்மை
வாழவைக்கும் உணவில், இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது,
நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல்,
எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த
வழியைத் தெரிவு செய்தார்.
தங்களுடன், தங்களுக்குள், இறைமகன் இயேசு தங்கியிருக்கிறார்
என்ற அந்த உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள்
வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத
உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ: 17ம்
நூற்றாண்டில், கானடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து,
அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை
அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues)
அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள்
செய்யப்பட்டு, அவர் தன் இரு கரங்களிலும், கட்டைவிரல்
மற்றும் ஆள்காட்டி விரல்களை இழந்திருந்தார். இந்நிலையில்
அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி
நிகழ்த்த விரும்பினார்.
அக்காலத்திய மரபின்படி, இயேசுவின் திரு உடலை, கட்டைவிரல்
மற்றும் ஆள்காட்டி விரல்களால் மட்டுமே தொடமுடியும் என்று,
திருஅவையின் திருவழிபாட்டு சட்டங்கள் இருந்ததால்,
அவ்விரல்களை இழந்திருந்த அருள்பணி ஐசக் அவர்கள், திருப்பலி
நிறைவேற்ற, திருத்தந்தையிடமிருந்து சிறப்பு உத்தரவு
பெறவேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம்
Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின்
சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர்,
திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று
சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள்
இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும்,
கிண்ணத்தையும், விரல்கள் குறைந்த தன் கரங்களில் அருள்பணி
ஐசக் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை
பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும். தன் உடலின்
ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு
உடல், திரு இரத்தம் திருநாளன்று, நாமும், மக்களின்
நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை,
இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.
ஞாயிறு மறையுரை - அருள்பணி அருள்பணி கிங்ஸ்லி
MMI- சென்னை
"நற்கருணை: வாழ்வு தரும் வானக உணவு"
இன்றைய நற்செய்தியில் (யோவான் 6:51-58) இயேசு மிகத்
தெளிவாகக் கூறுகிறார்: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த
வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர்
என்றுமே வாழ்வார்."
1. வழிப்பயணத்தின் உணவு (Food for the Journey)
முதல் வாசகத்தில் (இணைச்சட்டம் 8:2-16), இஸ்ரயேல் மக்கள்
பாலைவனப் பயணத்தில் இருந்தபோது கடவுள் அவர்களுக்கு 'மன்னா'
பொழிந்ததை நினைவுபூகிறோம்.
விளக்கம்: அன்று உடல் பசியைத் தீர்க்க மன்னா
கொடுக்கப்பட்டது. இன்று நம் ஆன்மப் பசியைத் தீர்க்கவும்,
விண்ணகப் பயணத்திற்கு வலுவூட்டவும் இயேசு தனது உடலையே
உணவாகத் தருகிறார்.
2. ஒரே அப்பம், ஒரே உடல் (Unity in One Bread)
இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 10:16-17) தூய பவுல்
கூறுகிறார்: "அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே
உடலாய் இருக்கிறோம்."
சிந்தனை: நற்கருணை என்பது தனிப்பட்ட பக்தி மட்டுமல்ல,
அது சமூக ஒருமைப்பாடு. ஒரே தட்டில் இருந்து நாம்
நற்கருணையைப் பெறும்போது, நமக்குள் இருக்கும் ஜாதி, மொழி,
இன வேறுபாடுகள் மறைய வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள்
ஒருவராகிறோம்.
3. என்னில் நிலைத்திருப்பவர் (Abiding in Christ)
"எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு
இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன்."
பாடம்: நற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும், நாம்
நடமாடும் நற்கருணையாக (Living Tabernacles) மாறுகிறோம்.
நம் வழியாக இயேசு பிறருக்கு அன்பு காட்ட விரும்புகிறார்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள்
(CTA)
இந்தத் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவில் நாம் செய்ய
வேண்டியவை:
தகுதியோடு பெறுதல்: நற்கருணையை வெறும் சடங்காகப்
பெறாமல், முழுமையான நம்பிக்கையுடனும் தகுதியுடனும்
(தேவைப்பட்டால் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று) உட்கொள்ள
வேண்டும்.
நற்கருணைப் பவனி மற்றும் ஆராதனை: இன்று உங்கள் பங்கில்
நடைபெறும் நற்கருணைப் பவனியில் பக்தியுடன் பங்கேற்கவும்.
நற்கருணை நாதரின் முன்னிலையில் அமைதியாக அமர்ந்து உங்கள்
கவலைகளை அவரிடம் ஒப்படையுங்கள்.
பகிர்ந்து உண்ணுதல்: இயேசு தன்னை உணவாகக் கொடுத்தது போல,
நாமும் நம்மிடம் இருப்பதைப் பசித்திருப்பவர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் உணவின்றி
இருப்பவர்களுக்கு இந்த வாரம் ஒருவேளை உணவாவது வழங்க
முயற்சி செய்யுங்கள்.
நற்கருணைக்கு மரியாதை: கோவிலுக்குள் நுழையும்போதும்,
நற்கருணைப் பெட்டியைக் கடக்கும்போதும் தகுந்த வணக்கம்
(Genuflection) செலுத்துவதை ஒரு பழக்கமாகக் கொள்வோம்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"நற்கருணை என்பது இயேசுவின் மரணத்தின் நினைவுச் சின்னம்
மட்டுமல்ல, அது அவர் இன்றும் நம்மோடு வாழ்கிறார்
என்பதற்கான உயிருள்ள சான்று. அவர் நம்மைப் போல
மாறுவதற்காகத் தான் உணவாக மாறினார்."
- திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்
இன்றைய வாசகங்கள்
(13.06.2026)
புனித கன்னி மரியாவின் மாசற்ற இதய விழா
மு.வா: எசா: 61: 9-11
ப.பா: 1சாமு: 2: 1, 4-8
ந.வா : லூக்: 2: 41-52
கன்னி மரியாவின் இதயமாக மாறுவோமா!
ஒரு ஊரில் ஒரு கைம்பெண் தன் குழந்தையை வளர்த்து வந்தார்.
கடினப்பட்டு உழைத்து அந்த குழந்தையை நல்ல படிப்பைப் படிக்க
வைத்தார். அந்த பையனும் சிறந்த முறையிலே பட்டப்படிப்பு
முடித்தார். படித்து முடித்த பிறகு நல்ல ஒரு வியாபாரம்
செய்தார். திருமணம் செய்து கொண்டார். அவருக்கு
குழந்தைகளும் பிறந்தன. அவர் அதிகமாக வியாபாரத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பிறகு தனது மனைவிக்கும்
பிள்ளைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். தன்னைப்
பெற்று வளர்த்த தாயை வசதி வந்த பிறகு இடையூறாக நினைத்தார்.
எனவே கல் சுமந்து மண் சுமந்து வளர்த்த அன்புத் தாயை ஒரு
இடையூறாக நினைத்து, முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
தாயும் தன் மகன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று
பரந்த மனப்பான்மையோடும் கனத்த இதயத்தோடும் முதியோர் இல்லம்
சென்றார். ஒரு முறை வியாபாரம் செய்த அந்த நபருக்கு இரசாயன
விபத்தின் காரணமாக கண் பார்வை பறிபோனது. எனவே அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால் அவருடைய பார்வை மீண்டும் பெற முடியாத சூழல்
ஏற்பட்டது. எனவே மருத்துவர் "யாராவது கண்களைக் தானமாகக்
கொடுத்தால்தான் இவருக்கு பார்வை கிடைக்கும்? " என்று
அவரின் மனைவியிடம் கூறினார். எனவே எல்லா இடத்திலும் கண்
தானத்திற்காகத் தேடி அலைந்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முதியோர் இல்லத்தில்
வாழ்ந்த அவரின் தாய் விரைந்து மருத்துவமனைக்கு சென்றார்.
தன் மகனுக்கே தெரியாமல் மருத்துவரை அணுகி " தன் கண்களை தன்
மகனுக்குக் கொடுக்குமாறு "கேட்டுக்கொண்டார். முதலில்
மருத்துவர் உயிரோடு இருப்பவரின் கண்களை எடுப்பது மனித
நேயத்திற்கு எதிரானது என்று மறுதலித்தார். ஆனால் அந்த
நபரின் தாய் முழுமூச்சாக தன் கண்களை தன் மகனுக்கு
கொடுக்குமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொண்டார்.
இறுதியில் மருத்துவர் அந்த நபரின் தாயுடைய கண்களில்
எடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இறுதியில் அந்த
நபர் பார்வை பெற்றார். பார்வை பெற்ற அந்த நபர்
மருத்துவரிடம் "தனக்கு கண்களை தானமாக கொடுத்த அந்த
மாமனிதர் யார்?" என்று கேட்டார். அதற்கு மருத்துவர் அந்த
நபரின் தாயை காட்டி "இவர்தான் நீங்கள் பார்வை பெறுவதற்குக்
காரணம் "என்று கூறினார். அதைக் கண்ட நபர் தன் தாயின் தியாக
செயலை மறந்ததற்காக மனம் வெம்பி அழுதார். தன் தாயிடம்
மன்னிப்பு கேட்டார். பார்வையிழந்த தன் தாயை வீட்டிற்குக்
கொண்டு சென்று இறுதிவரை அன்போடு பராமரித்தார். கல்லான
இதயத்தை கூடக் கனிவான தாயின் அன்பு கனிவுள்ளதாக
மாற்றிவிடும்.
இந்த உலகத்தில் தாயின் இதயம் தான் மிக உன்னதமான இதயம்.
தான் பெற்ற பிள்ளைகள் தன்னைத் துன்பத்திற்கு
உள்ளாக்கினாலும் அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று
நினைக்கும் ஒரே இதயம் தாயின் இதயம். யார் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் தன் குழந்தைகளை எப்படியாவது வளர்த்து
ஆளாக்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கும் இதயம் தாயின்
இதயம். தான் சாப்பிடவில்லை
என்றாலும் தன் பிள்ளைகள் வயிறார சாப்பிட வேண்டும் என்று
நினைக்கும் அன்பு இதயம் தாயின் இதயம். தனக்குப் பிடிக்காத
உணவுகளையும் மருந்துகளையும் தன் வயிற்றில் வளரும்
குழந்தைக்காக சாப்பிடும் நல்ல இதயம் தாயின் இதயம். தன்
வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும்
என்பதற்காக தனக்குப் பிடித்த உணவை கூட தியாகம் செய்யும்
அன்பு இதயம் தாயின் இதயம். இவ்வாறாக தாயின் உன்னதமான
இதயத்தின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றைய
நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து புனித மரியாவின்
மாசற்ற இதய விழாவினைச் மிகச் சிறப்பாக கொண்டாடி
மகிழ்கின்றோம். அன்னை மரியாள் இயேசுவுக்கு மட்டும் தாய்
அல்ல ; மாறாக, உலக மக்கள் அனைவருக்கும் தாய் ஆவார்.
உலகத்திலுள்ள எல்லா மனிதரும் கடவுளின் மீட்பைப் பெற்று
அன்போடும் மகிழ்வோடும் பொறுமையோடும் தாழ்ச்சியோடும்
தூய்மையோடும் இரக்கத்தோடும் அமைதியோடும் நீதியோடும்
சமத்துவத்தோடும் நிறைவோடும் பகிர்வோடும் பிறர் நலத்தோடும்
வாழ்ந்திடத் தன்னை முழுமையாகக் கடவுளின் விருப்பத்திற்குக்
கையளித்தார். அன்னை மரியாவின் இதயம் கடவுளுக்கு உகந்த
இதயமாக இருந்தது. தூய்மையும் நேர்மையும் உண்மையும் இறை
நம்பிக்கையும் நிறைந்த இதயமாக இருந்தது. எனவே தான் கடவுள்
அன்னை மரியா வாழ்ந்த காலகட்டத்தில் எத்தனையோ இளம்பெண்கள்
இருந்தபோதிலும் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்பி
மீட்பை கொடுப்பதற்காக அன்னை மரியாவைத் தெரிவு செய்தார்.
அந்த அளவுக்கு அவரின் இதயம் மாசற்ற இதயமாகவும் கள்ளம்
கபடமற்ற இதயமாக இருந்தது. அவரின் இதயம் தூய்மையாக
இருந்ததால்தான் அவரின் வாழ்வும் தூய்மையாக இருந்தது. அந்த
தூய வாழ்வு தான் இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசுவை
இந்த உலகத்திற்கு கொண்டு வரக் கருவியாக மாற்றியது. அவர்
இயேசுவை ஒரு குழந்தையாக பெற்றெடுத்து கல்வாரியில்
கையளிக்கும் வரை மாசற்ற வழியிலேயே அவரையும்
வளர்த்தெடுத்தார். இயேசு இறைமகனாக இருந்த போதிலும் மனித
உருவெடுத்து மண்ணில் வாழ்ந்த இயேசுவை மனித நேயத்தோடு
வளர்த்தெடுத்தார்.
இன்றைய நற்செய்தி வாசகமானது கோவிலில் காணாமல் போன சிறுவன்
இயேசுவைக் கண்டுபிடிக்கும் நிகழ்வைப் பற்றி
வாசிக்கின்றோம்.
குழந்தை இயேசு ஒரு இறைமகன் தான். அது அன்னை மரியாவுக்கும்
அவரை வளர்த்த வளர்ப்புத் தந்தை சூசைக்கும் தெரியும்.
இருந்தபோதிலும் கூட்டத்திலே காணாமல் போய்விட்டார் என்று
கேள்விப்பட்டதும் தாய்க்குரிய அன்பு இதயத்தோடு அவரைத்
தேடிக் கண்டுபிடித்து தன் உள்ளக் குமுறலை இயேசுவிடம்
கூறினார். அந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயேசு போதகர்
நடுவில் நின்று அவர்கள் சொல்வதைக் கேட்டும் கேள்விகளை
எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் போதகர்கள்
அனைவரும் குழந்தை இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியந்தார்கள்.
ஆனால் அன்னை மரியாள் தன் மகனைப் பார்த்து "மகனே, ஏன்
இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை
மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே " (லூக்: 2: 48)
என்று கூறினார். அதற்கு குழந்தை இயேசு அவர்களிடம் "
நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின்
அலுவலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத்
தெரியாதா? "என்று கூறினார். இவ்விர்த்தைகள் அன்னைக்கு
அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தாலும் அதைத் தன்
உள்ளத்தில் நிறுத்தி பதித்து வைத்ததாக வாசிக்கின்றோம். ஒரு
தாயாக தான் பெற்ற குழந்தை காணாமல் போன சூழலில் தேடி
அலைந்தார். கண்டுபிடித்தவுடன் தாய்க்குரிய மனநிலையில்
தன்னுடைய உள்ளத்தின் கேள்வியை இயேசுவிடம் கேட்டார். ஆனால்
இயேசு இறைவனுக்குரிய மனநிலையில் இறைத் தந்தையின் திருவுளம்
தான் தன் வாழ்வின் முதன்மை என்பதை வெளிப்படுத்தினார்.
அன்னை மரியாவின் இதயம் இயேசுவின் மனித இறை இயல்பை
ஏற்றுக்கொண்ட இதயம். எனவேதான் தன் மகனையே அவ்வுலக
மீட்பிற்காக சிலுவையிலே பலியாக கொடுக்கும் அளவுக்கு
துணிந்த இதயமாக மாறியது. ஒரு தாய்க்கு மிகவும் கொடுமையான
ஒரு நிகழ்வு என்றால் தன்னுடைய மகனின் இறப்பை பார்ப்பது.
அந்த நிலைதான் அன்னை மரியாவுக்கும் வந்தது . ஆனால் அன்னை
மரியாவின் இதயம் இயேசுவின் இதயத்தைப் போல தியாகம் நிறைந்த
இதயமாகவும் மாசற்ற இதயமாகவும் இருந்ததால் அனைத்தையும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல இதயமாக இருந்தது.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் அன்னை மரியாவின்
இதயத்தைப் போல நம்முடைய இதயமும் மாற நம்மை முழுமையாகக்
கடவுளிடம் ஒப்படைப்போம். அன்னை மரியாவின் நல்ல நற்பண்புகளை
நம்முடைய வாழ்வின் மதிப்பீடுகளாக மாற்ற முயற்சி செய்வோம்.
அன்னை மரியாவின் மாசற்ற இதயம் இவ்வுலகிற்கு மீட்பையும்
மாற்றத்தையும் கொடுத்தது. எனவே நாமும் கடவுளின் மீட்பு
இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்கப் பெற அன்னை
மரியாளைப் போல நல்ல இதயமாக மாறுவோம். தாய்க்குரிய
மனநிலையில் நம்மோடு வாழக்கூடிய எல்லா மனிதர்களையும் அன்பு
செய்ய முயற்சி செய்வோம். அவ்வாறு வாழும் பொழுது நம்
வாழ்விலே முழுமையில் அன்னை மரியாவைப் போல பெறமுடியும்.
இறைவேண்டல் :
அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப்
பெருவிழாவை கொண்டாடும் இந்த நாளில் அன்னை மரியாவைப் போல
எங்கள் இதயத்தையும் மாற்றும் நல்ல மனதை எங்களுக்குத்
தாரும். ஆமென்.
தித்திக்குதே (ஞாயிறு மறையுரை) அருட்பணி
அ. ஸ்தனிஸ்லாஸ்
இயேசுவின் திருவுடல், திரு இரத்தப்
யெருவிழா
தாயின் பிறந்தநாளுக்கு மூன்று மகன்களும் அழகான பரிசு
கொடுக்க நினைத்தார்கள். மூத்த மகன் பெரிய வங்கி அதிகாரி
தாய்க்கு அழகான பட்டுச்சேலை கொடுத்தான். மூன்றாவது மகன்
படிக்காதவன் விவசாயி. தாயின் மடியில் அமர்ந்து, "அம்மா!
என்னையே உங்களுக்கு பரிசாகக் கொடுக்கிறேன்"என்று சொல்லி
அம்மாவுக்கு அன்பு முத்தம் கொடுத்து கட்டியணைத்தான்.
தன்னையே கொடுப்பதுதான் உத்தம- சிறந்த பரிசு என்பதை தாயும்
உயர்ந்து அனுபவித்தார்.
* கொடுப்பதிலே இன்பம்
மனிதர்கள் பல இரகம். அவர்கள் வாழ்கின்ற லாழ்வும் பலவிதம்.
வாழும் வாழ்க்கை முறையை வைத்துத்தான் அவர்கள் யார்,
எப்படிபட்டவர்கள் என்பதை உலகம் நிர்ணயிருக்கிறது.
தங்களிடமுள்ள சுயநலவாதிகள். பிறரின் வாழ்வுக்காக
தங்களையே தானமாக முழுமையாக கொடுப்பவர்கள் தியாகிகள்.
கொடுப்பதில்தான் இன்பம் இருக்கிறது. அடுத்தவர்களுக்காக
அள்ளி அள்ளி கொடுப்பதில்தான் மகிழ்ச்சியும், இன்பமும்,
மனநிறைவும் கிடைக்கிறது. இதை மனமுவந்து கொடுப்பவர்கள்
மட்டும்தான் பத்து, மகிழ்ந்து, உணரமுடியும்
.
விவிலியத்திலே கொடுத்தலின் மூன்று வகைகளைக் காண்கிறோம்.
சக்கேயு மனம்மாறிய உடன் உள்ளத்திலிருந்து கொடுத்தான்.
"என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து
விடுகிறேன். நான் நான்கு மடங்காக திருப்பி தருகிறேன்.
லூக் 19:8. ஏழைக்கைம்பெண் உள்ளதெல்லாம் கொடுத்தார்.
"இந்த ஏழைக்கைம்பெண் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன்
தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
கொடுத்துவிட்டார்" மாற் 12:41-45. கொடுத்தலுக்கு சிகரமாக
நம் அன்பு ஆண்டவர் இயேசு உள்ளதெல்லாம் கொடுத்து தம்
உயிரையும் நமக்காகக் கொடுத்தார். "தம் நண்பர்களுக்காக
உயிரைக்கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை"யோவா
15:13. தம் நண்பர்களாகிய நமக்காக தம் உயிரையும்
சிலுவையிலே கொடுத்தார். யோவா 19:30.
ஆண்டவர் இயேசு பிறர்வாழ தன்னையே தியாகபலியாக
ஒப்புக்கொடுத்து, தம் உடலையும் இரத்தத்தையும் உணவாகக்
கொடுத்து நம்மை வாழ வைக்கிறார். அழியா வாழ்வு தரும் தம்
உடலையும் ரத்தத்தையும் கொடுத்து நமக்கு நிலைவாழ்வு
கொடுக்கிறார்.
* நற்கருணை தரும் வாழ்வு, நிலைவாழ்வு, உடலின் உயிர்ப்பு:
மனிதன் வாழ்க்கைப் போராட்டத்திலே, தம் வாழ்வைத்
தொலைத்துவிட்டு நிற்கிறான். என்னடா வாழ்க்கை, எதுக்குடா
வாழ்க்கை, என விரக்தியின் விளிம்பில் இருக்கிறான்.
உலகப் பொருட்களோ, உலகிலுள்ள மனிதர்களோ அவனுக்கு
தற்காலிகமான அல்ப சந்தோஷத்தைத்தான் கொடுக்கிறதே தவிர,
நிலையான நிச்சயமான, உறுதியான மகிழ்ச்சி வாழ்வைத்
தருவதில்லை. இப்படிப்பட்ட விரக்தி வாழ்விலே தான் அடிக்கடி
தற்கொலைகள், திடிர் மரணங்கள் அரங்கேறிக்
கொடுடிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில்தான் இயேசு, "வாழ்வுதரும் உணவு நானே.
இந்த உணவை எவராது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,
யோவான் 6:51 என்று சொல்லி தம் உடலையும், இரத்தையும்
நமக்கு கொடுத்து "நான் இந்த உலகிற்கு வாழ்வைக் கொண்டு
வந்தேன். அதையும் நிறைவாகக் கொண்டு வந்தேன், யோவான்
10:10 என்பதை நிரூபிக்கிறார். இறைவன் கொடுத்த மனித
வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக்க இயேசு தரும் அருள்
மருந்துதான் நற்கருணை. தடுமாறும் நமக்கு கடவுள் தரும்
வாழ்வு தான் இந்த நற்கருணை.
இந்த நற்கருணை இவ்வுலகிலே வாழத் தேவையான வாழ்வை
மட்டுமல்ல, மறு உலகில் வாழத் தேவையான நித்திய
நிலைவாழ்வையும் தருகிறது. அதனால்தான் இது ஆன்ம உணவாக
வாழ்வளிக்கிறது. "என் தசையை உண்டு என் ரத்தத்தை
குடிப்போர் நம் உயிர்ப்பின் மூலம்தான் அடைய முடியும்
என்பதை உணர்ந்து "என் தசையை உண்டு, என் ரத்தத்தைக்
குடிப்பவரை நான் இறுதிநாளில் உயிர்ப்பிப்பேன்",
என்கிறார். எனவே நற்கருணை இவ்வுலக வாழ்வையும், மறுஉலக
நிலைவாழ்வையும் அதற்கு முன்பு உயிர்ப்பின் மகிமையையும்
நமக்கு நிறைவாகத் தருகிறது.
* நற்கருணை தரும் நிலையான அன்புறவு:
உணவு உறவை உருவாக்குகிறது. வளப்படுத்துகிறது. அதனால்தான்
எந்த மங்கள, அமங்கள நிகழ்ச்சியானாலும் உணவு நான் உன்
மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்; உன் துக்கத்தை
பகிர்ந்து கொள்கிறேன், என்பதை உறுதிபடுத்துகிறேன். உணவு
விருந்து உண்பவருக்கும், விருந்து கொடுப்பவருக்குமிடையே
அன்பு உறவு உருவாகி, வளர்ந்து வளப்படுகிறது. நமக்கு
பிடிக்காதவர் வீட்டிலே நாம் சாப்பிடமாட்டோம். நாம்
அடுத்தவர்களுடன் சண்டை போட்டு மனத்தாங்கலாக இருக்கும்போது
கூட இனி உன் வீட்டில் கை நனைக்க மாட்டேன்.
சாப்பிடமாட்டேன் என்று சாப்பிட மறுப்பது உறவு அறுப்பதற்கு
சமம் என்கிறோம். அன்புறவை மக்களிடையே வளர்ப்பது
அன்புடன் பரிமாறப்படும் உணவுதான்; விருந்துதான்.
ஆண்டவர் இயேசுவும் தம் உடல், ரத்தத்தை நமக்குக்
கொடுக்கும் போது அதன்மூலம் நம்முடன் அன்புறவை
உருவாக்கி, அது வளர, வாழ உதவுகிறார். அவரின்
திருஉடலையும், திருரத்தத்தையும் உண்போர் அவரோடு
அன்புறவில் இணைந்திருப்பதாகச் சொல்கிறார். "என் தசையை
உண்டு, என் ரத்தத்தைக் குடிப்போர் என்னோடு
இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
யோவா 8:58. அவரோடு கனி தர முடியும். தம் அன்பில்
தொடர்ந்து நிலைத்திருக்க முடியும். "நான் உங்களோடு
இணைந்திருப்பதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்.
நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது.
ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார்". யோவா 15;4-5,
நம் வாழ்வில் பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ள நம்
சொந்தபலம் மட்டும் போதாது. சொந்த பலத்தில் நம்பிக்கை
வைக்கும் நாம் பல சமயங்களில் தோற்றுவிடுகிறோம். மாறாக
நற்கருணை வழியாக இறைவனோடு இணையும்போது அவரின் பலமும்,
ஆற்றலும், சக்தியும், வல்லமையும் நமக்குக்
கிடைக்கின்றன. வாழ்வில் வெற்றியடைகிறோம். விழியில்
விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் உறவில் கலக்கும்
அன்புறவு தான் உண்மையான உறவு.
இயேசுவை நற்கருணையில் பார்த்து பார்த்து, அவரை இதயத்தில்
சுமந்து சுமந்து, அவரின் உயிரோடு கலக்கும் அன்புறவுதான்
நற்கருணையில் நடைபெறுகிறது. எனவே நற்கருணை மூலம் தான்
நாம் கடவுளின் நிலையான அன்புறவில்
நிலைத்திருந்துஅனுபவித்து பலனளிக்கக்கூடிய, கனிதரக்கூடிய
அன்பு மக்களாக நாம் வாழ முடியும்.
* நற்கருணை தரும் ஒறறுமை:
மனிதன் 'எலி வளையானாலும் தனி வலைவேண்டும்' என்று வரட்டு
வேதாந்தம் பேசிக்கொண்டு தனித்தனியே வாழ
ஆரம்பித்துவிட்டான். கூட்டுக் குடும்பங்கள் எல்லாம்
சிதைந்து தனித்தனி குடும்பங்களாக மாறிவிட்டது. தாய்,
தந்தை, பிள்ளைகள் எல்லோரும் ஒரே இடத்தில் சாப்பிட்டு,
மகிழ்ச்சியாக பேசி சாப்பாடு, தனி அறை, தனி உறக்கம் என்ற
தனித்துவிடப்பட்ட என்பதை மறந்து, தனித்தனியாக வாழ்கிறோம்.
இந்த தனிப்பட்ட வாழ்வில் பாதுகாப்பில்லை ஆதரவு
அரவணைப்பில்லை; என்ற விரக்தியான வாழ்க்கைத்தான் .
இப்படிப்பட்ட நமக்கு நற்கருணை மூலமாக ஒற்றுமை, சேர்ந்து
வாழ்தல் எனும் மாபெரும் கொடையைத் தருகிறார்.
திருவிருந்தில் வாழ்கிறோம். ஒருவர் மற்றவரை
புரிந்துகொண்டு, குறைநிறைகளுடன் ஏற்றுக்கொண்டு, பிரதிபலனை
எதிர்பார்க்காத அன்புடன் வாழ நற்கருணை உதவுகிறது.
"தந்தையே! நீர் என்னுள்ளும், நான் உம்முள்ளும்
ஒன்றாய் இருப்பதுபோல, அவர்களும் ஒன்றாயிருப்பார்களாக,"
யோவா 17:21, என்று செபித்த இயேசு, தம் திருஉடல்,
திருரத்தம் மூலம் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் கூடிய
அன்பு வாழ்வைப் பரிசாகத் தருகிறார். "அப்பம் ஒன்றே.
ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாயிருக்கிறோம்.
ஏனெனில் 1கொரி 10:17.
"நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டு
இருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல உடலும்
ஒன்றே; தூயஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே. நாம்
கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே. திருமுழுக்கு ஒன்றே.
எல்லாருக்கும் தந்தையுமானவர் ஒருவரே. அவர்
எல்லாருக்கும் மேலானவர். எல்லார் மூலமாகவும்
செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். எபேசி
4:4-6 இதனால் தான்கற்பித்தவற்றிலும், நட்புறவிலும்,
அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாக
நிலைத்திருந்தால், திப 2:42 நம்பிக்கை கொண்ட மக்கள்
அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் ஒற்றுமையுடன்
இருந்தனர். திப 4:32. அதனால் அவர்களில் பகிர்வு
எண்ணம், பகிர்வு மனப்பான்மை வளர்ந்தது. "அவர்களுள்
எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை.
எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது. அவரவர்
தேவைக்கேற்ப பகிர்ந்து வாழ்ந்தவர்கள்"திப 4:95. எனவே
வாழ்தலையும் நிறைவாகத் தருகிறது.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
திருவுடல் திருஇரத்தப் பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (இ.ச. 8:2-3,14-16)
இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில் ஆண்டுகள் பல பயணம்
செய்து கானான் நாட்டில் நுழையும் முன் மோவாப்
சமவெளியில் தங்கி இருக்கின்றார்கள். காலங்கள் பல
கடக்கின்றன, ஆனால் இவர்கள் பாலும் தேனும் பொழிகின்ற
கானான் நாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.
இதற்கான காரணத்தை மோயிசன் தனது இரண்டாம் பேருரையின்
வழியாக மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அதிலி ருந்து
எடுக்கப்பட்ட ஒரு பகுதியே இன்றைய முதல் வாசகம்.
மக்களுடைய கீழ்ப்படியாமையும் ஆண்டவரின் வழிகளை அறிந்து
கொள்ளாததுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. எனவே
மோயீசன் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளை
எடுத்துக் கூறி இனிமேல் அவர்கள் எவ்வாறு கடவுளுக்குப்
பணிந்து நடக்க வேண்டும் என்றும் இந்த பகுதியில்
கூறுகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (கொரி. 10:16-17)
கிரீஸ் நாட்டு முக்கிய வாணிக நகரங்களுள் ஒன்று கொரிந்து.
இது பலவிதமான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளால்
பாதிக்கப்பட்டதால் இங்கு பலவிதமான கலாச்சாரங்களைக்
காணலாம். இந்த நகரானது கி.பி.50-இல் தூய பவுலடியாரால்
கிறித்தவத்திற்கு கொண்டு வரப்படுகிறது. யூத
சமுதாயத்தினரும் மற்ற சமயத்தவரும் மதம் மாறினார்கள்.
இதனால் இவர்களுள் சில கருத்து வேறுபாடுகள் இருந்து
வந்தன.
இன்றைய 2-ஆம் வாசகத்தின் பின்னணி என்னவென்றால் மற்ற
வேற்று தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட உணவை உண்ணுவது
குறித்ததாகும். ஆண்டவர் படைத்தவை அனைத்தும் நல்லவை,
உண்ணத்தக்கவை. இருப்பினும் நம்முடைய செயல் பிறருடைய
விசுவாசத்தை குலைக்கக் கூடியதாக அமைய வேண்டாம். ஒரே
அப்பம் மற்றும் ஒரே கிண்ணத்தில் நாம் பங்கு
கொள்கிறோம். எனவே நமக்குள் எந்த விதமான பிரிவினையும்
வேண்டாம் என்று இந்த பகுதியில் அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 6:51-57)
விவிலிய அறிஞர்களின் கருத்துப்படி யோவான் நற்செய்தி
6-ஆம் அதிகாரம் முழுவதுமே நற்கருணை பற்றிய பேருண்மைகள்.
இயேசு செய்த புதுமைகளை கேள்வியுற்று அவரிடம் ஆதாயம் தேடி
பலர் கப்பர்நாகுமுக்கு வருகின்றனர். இந்த இடமானது
கலிலேயக் கடலின் வடமேற்கு பகுதியில் யோர்தான் நதிக்கு
அருகாமையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தன்னை தேடி
வந்த மக்களைப் பார்த்து "அழியாத உணவைத் தேடுங்கள், என்
தசையை உண்டு என் இரத்தத்தை குடிப்பவன் நிலைவாழ்வைப்
பெறுவான்' என்று கூறுகிறார். இதனைக் கேட்ட யூதர்களும்
அவருடைய சீடர்கள் பலரும் முணுமுணுத்தவாரே அவரைவிட்டு
விலகி ஓடுகிறார்கள்.
கடைசியில் தன் பன்னிரு சீடர்களையும் பார்த்து
நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா? என்று கேட்க,
பேதுரு முன்வந்து "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் ! வார்த்தைகள் உம்மிடம் தானே
உள்ளன"என்று அறிக்கையிடு கிறார். இந்தப்பகுதியில்
நற்செய்தியாளர் மிகச் சிறப்பாக நற்கருணையின்
மகத்துவத்தை விளக்குகிறார்.
மறையுரை
இன்று தாயாம் திருச்சபை கிறஸ்துவின் திருவுடல்
திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மக்கள்
பாவங்கள் பல செய்து நேர் வழி தவறிய போது அவர்களைப்
பாவத்திலிருந்து மீட்டு நிலை வாழ்வளிக்க தந்தையாம்
கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்புகிறார். இந்த மக்கள்
வாழ்வு பெற மகன் தன் பங்கிற்கு அழியாத உணவாக தன்
உடலையும் இரத்தத்தையும் தருகிறார். இந்த மாபெரும்
நற்கருணையைதான் இன்று விழா எடுத்துக் கொண்டாடுகிறோம்.
இந்த விழாவானது திருத்தந்தை 10-ஆம் பத்திநாதரால் 1264
ஆம் ஆண்டு "டிரான்சித் தூருஸ்' என்ற ஆணை வழியாக
அறிமுகப் படுத்தப்பட்டது. வானமும் வையமும் படைத்த
இறைவன் "எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்"(மத்தேயு
28:20) என்ற வாக்குக்கேற்ப தனது தெய்வீக பிரசன்னத்தை இந்த
நற்கருணையில் விட்டுச் சென்றுள்ளார்.
திருச்சபையும் தொடக்கத்திலிருந்தே நற்கருணையைப் போற்றி
வந்துள்ளது. நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை
வெளிப்படுத்தும் அடையாளம். திரிதெந்து திருச்சங்கமும்
திருப்பலியில் நடைபெறும் உட்கருப்பொருள் மாற்றத்தை
(Transubstantaton) வலியுறுத்துகிறது. சாதாரண அப்பமும்
இரசமும் கிறிஸ்துவின் திருவுடலாகவும் திரு
இரத்தமாகவும் மாறுகிறது.
5 அப்பங்களையும் 2 மீன்களையும் பகிர்ந்து 5000 பேருக்கு
கொடுத்த பின் மீண்டும் அதே அளவிலான மக்கள்
அவரிடமிருந்து ஏதாவது கிடைக்குமா? என்று கூடுகின்றனர்.
இங்கு ஆண்டவர் நற்கருணையைப் பற்றி தானே 'வானின்று இறங்கி
வந்த உணவு' என்று போதிக்கிறார் (யோவான் 6:35).
முதன் முறை சொன்ன போது அங்கே முணுமுணுப்பு எழுகிறது.
இயேசுவின் குடும்பம் கோத்திரம் அலசிப் பார்க்கப்பட்டு
அவருடைய வார்த்தைக்கு மதிப்பு உண்டாகிறது. இதனால் 5000
லிருந்து 1000 மாக மாறுகிறது. இந்த சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாமல் 3 ஆவது முறையாக தன்னை முழுமையாக நற்க ருணையோடு
ஐக்கியப்படுத்திப் பேசுகிறார் (6:58).
மக்கள் தங்களுடைய வெறுப்பினை வெளிப்படையாகக்
காட்டியவர்களாக இயேசுவை, வாழ்வு தரும் உணவினை,
புறக்கணித்துச் செல்கின்றனர். இந்த நிலையில்தான்
"நீங்களும் போய்விட மனதாயிருக்கிநீர்களா?' என்று தான்
தேர்ந்து கொண்ட சீடர்களைப் பார்த்துக்கேட்கிறார்.
அப்போதுதான் பேதுரு இயேசுவே "வாழ்வு தரும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன"(6:68) என்று கூறி சரணடைகிறார்.
இத்தகைய மனநிலையைத்தான் இன்றைய முதல் வாசகத்தில்
காண்கிறோம். கடவுளின் அற்புதச் செயலை புரிந்து கொள்ள
முடியாத வணங்கா கழுத்தினராய் இஸ்ராயேல் மக்கள்
இருக்கின்றார்கள். கடவுளுக்கு கீழ்படிய மறுக்கின்றனர்.
அவர்க ளோடு இருந்த இறைபிரசன்னத்தை அவர்கள் உணர்ந்து கொள்ள
வில்லை.
இது போலவே இயேசுவின் வார்த்தையை கேட்டு சமயத்
தலைவர்களும் மக்கள் கூட்டமும் நிலை வாழ்வை புறக்கணிக்
கின்றனர். நாமும் அவர்களைப் போல் அல்லாமல் இயேசுவை
நற்கருணையில் கண்டு பாவிப்போம். தூய தாமஸ் அக்குவினாஸ்
நற்கருணையைப் பற்றிப் பேசும் போது "ஆயன் தன்
மந்தைக்கு உணவளிப்பது போல கிறிஸ்து தன் சொந்த உடலாலும்
இரத்தத்தாலும் தன் விசுவாசிகளுக்கு ஆன்ம உணவு
வழங்குகின்றார்"என்கிறார்.
நற்கருணையே நமக்கு வாழ்வளிக்கக் கூடியது. நற்கருணையில்
ஆண்டவரின் பிரசன்னம் உள்ளது. உண்மை யானது. இறுதி வரை
நிலைத்து நிற்க கூடியது. "இது என் உடல், இது என்
இரத்தம்' என்று சொன்ன நம் ஆண்டவர் வாக்கு மாறாதவர்.
நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம், மருள வேண்டாம் (யோவான்
14:27) என்று கூறிய இயேசு இதற்கு சாட்சியாக நற்கருணை
பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
எனவே இதை விசுவசிப்பதன் மூலமாக நாம் அனைவரும் நிலை
வாழ்வு பெறுவோம். தூய ஆஸ்டின் என்பவர் இவ்வாறு
கூறுகிறார், "விசுவாசத்தோடு அவர்கள் நற்கருணையை உண்டால்
கொல்லும் நஞ்சு கூட அவர்களுக்கு தீங்கிழைக்காது.
நம்மடைய வாழ்வுக்கு வருவோம். நற்கருணை ஆண்டவர் மீது
நாம் முழுமையான விசுவாசம் கொண்டுள்ளோமா? இன்றைய இண்டாம்
வாசகத்தில் தூய பவுல் கூறுவது போல ஓரே அப்பத்தி லும்
ஒரே கிண்ணத்திலும் பங்கெடுக்கும் நிகழ்வு நம்மிடையே
ஒற்றுமையை வளர்க்கிறதா?
இதைத் தான் தூய அகுஸ்தினார் "திருச்சபை நற்கருணையை
உருவாக்குகிறது, நற்கருணை இறை சமூகத்தை உருவாக்குகிறது"
என்று கூறுகிறார்.
ஆகவே நற்கருணை ஆண்டவரில் விசுவாசம் கொள்வோம்.
ஒற்றுமையுடன் வாழ்வோம்.
மக்களை கடவுளின் பதம் சேர்ப்போம்.
ஆண்டவர் என்றும் நம்மோடு இருப்பாராக!
பிற மறையுரைக் கருத்துக்கள்
உடலின் பசியை போக்குவது உலக உணவு. ஆன்மாவின் பசியை போக்க
வல்லது வானக உணவாகிய நற்கருணை. "இறைவா, உம்மை வந்தடையும்
மட்டும் என் உள்ளம் அமைதி கொள்ளாது.
கிறிஸ்துவின் உடலும் இரத்தமும், இயேசு கிறிஸ்துவின்
மனித தசையும், மனித இரத்தமும் என்பதை நற்கருணையின்
அற்புதங்கள் நமக்கு தெளிவுப் படுத்துகின்றன.
இரத்தம். உயிர்வாழ இன்றியமையாதது கிறிஸ்து இரத்தத்தையே
சிந்தி உலக மக்களின் பாவங்களை போக்கினார் அதே போல்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் மற்றவர்களுக்காக, மற்றவர்களின்
விடுதலைக்காக போராட வேண்டும்.
உடலும் இரத்தமும் ஒன்றாய் இருந்தால் தான் மனிதன்
உயிர் வாழ முடியும் திருச்சபை உயிரோட்டமானதாக இருக்க
அனைவரும் கிறிஸ்துவில் ஒன்று படுவோம்.
கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா
இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின்
பெருவிழா. அந்த கடவுளின் பிள்ளைகளாகிறோம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
இயேசுவின் திருவுடல், திருஇரத்தம்
பெருவிழா
பிற கிறிஸ்தவ சபைகள் எவற்றிலும் காணக்கிடைக்காகத,
கத்தோலிக்கருக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றிருக்றெ உன்னத
கொடையான நற்கருணையை நினைவு கூர்ந்து தாயாம் திருஅவை இன்று
"இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக்"
கொண்டாடுகிறது. நற்கருணையை திருஅருளடையாளமாக அதன் பல்வேறு
பரிமாணங்களையும், அதன் வழியாய் நாம் எதை
நம்புகின்றோம் என்பதையெல்லாம் நாம் பல
காலக்கட்டங்களில் அறிந்திருப்போம். இங்கு நமது
சிந்தனைக்கு இயேசு யோவான் நற்செய்தியில் தமது திருவுடல்
திரு இரத்தத்தைப்பற்றி கூறுகின்ற ஒரு சில சிறப்புக்
கருத்துகளே எடுத்துக் கொள்வோம்
இருவகை உணவு
இயேசு இரு வகையான உணவுகளைக் குறிப்பிட்டு ஒன்றை
மற்றதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றார். முதல்
வகையானது பழைய ஏற்பாட்டில் பாலைநிலத்தில் அவர்களுக்குப்
பொழியப்பட்ட மன்னா எனும் உணவு. அது இறை பராமரிப்பின்
அடையாளமாக இருந்தாலும் அதனால் நிலைவாழ்வைத் தர
இயலவில்லை. அதை உண்ட மோசே உட்பட அனைவரும், இறந்து
போயினர். ஆனால் விண்ணிலிருந்து இறங்கிவந்த இன்னொரு உணவு
உண்டு. அது நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. இதை
உண்பவருக்கு ஆண்டவர் நிலைவாழ்வைக் கட்டளைமிடுகின்றார்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே!
இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
என்து சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு
வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் ' (வச. 51) என்பவை,
இயேசுவின் வைர வார்த்கைகள்.
இயேசு எப்படி தமது சதையைத் தாங்கள் உண்பதற்குத் தர
முடியும் என்று வாக்குவாதம் தொடங்கியபோது இயேசு
மீண்டும் தமது கருத்தை, நிலைப்பாட்டை வலியுறுத்திக்
கூறுகின்றார். "உறுதியாக உங்களுக்குச் ' சொல்கிறேன்.
மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக்
குடித்தால் ஒழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் (வச.
53) என 51 ஆம் வசனத்தில் நேர்மறையில் சொன்ன அதே கருத்தை
53 ஆம் வசனத்தில் எதிர்மறையில் சொல்கிறார். எனவே,
"இயேசுவின் திருவுடலை உண்பவரும் அல்லது திருஇரத்தத்தைப்
பருகுபவரும் ஏற்கெனவே நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (வச.
54). இந்த நம்பிக்கை இறுதி நாளில் இறந்தோர் உயிர்த்து
நிலை வாழ்வு பெறும்போது மெய்ப்பிக்கப்படும்,
நிஜமாக்கப்படும் (வச. 54). எனவே, இயேசு தரும் உணவு
வெறும் உடலை வளர்க்கின்ற, அழிந்து போகின்ற உணவு அல்ல.
மாறாக ஆன்மாவைப் பாதுகாத்து வளர்த்து வரும் வாழ்வின்
ஆன்மிக உணவு.
நற்கருணை கொணரும் இணக்கம்
இயேசுவின் சதையை உண்டு இரத்தத்தைக் குடிப்பதால் ஒருவர்
நிலைவாழ்வை பெற்றுக் கொள்வதுடன் அவர் இயேசுவோடு ஒரு
நெருக்கமான, பிணைப்பில் இணைந்திருக்கிறரார். இந்த
இணக்கத்தை இரு வகைகளிலும் இரு பக்கங்களிலும் இருந்து
குறிப்பிடுகின்றார். "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்
குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு
இணைந்திருப்பேன் (வச. 56). இணக்கமான உறவு என்பது இரு
நபர்கள் சார்ந்தது. இரு பக்கமும் அதற்கான ஆவல்,
ஈடுபாடு, செயல்பாடு இருக்கவேண்டும். அப்போதுதான் அது
முழுமையான உறவாக, இணக்கமாக இருக்கும்.
இயேசுவின் திரு உடலை உண்டு, அவரது திருஇரத்தத்தைப்
பருகுபவர் இயேசுவோடு இணக்கமாக இணைந்து விடுகின்றார்.
இயேசுவும் அவரது இதயத்தில் இறங்கிவந்து அவருடன்
இரண்டறக் கலந்து விடுகின்றார். இங்கு "கிறிஸ்துவின்
அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது"வேதனையா?
நெருக்கடியா? இன்னலா? ஆடையின்மையா? இடரா? எதுதான்
நம்மைப் பிரிக்க முடியும்? ' "ஏனெனில் சாவோ, வாழ்வோ,
வான தூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவேோ, வருவனவோ,
வலிமைமிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில்
உள்ளவையோ, வேறெந்த படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து
இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து
நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான
நம்பிக்கை (உரோ 8:35, 38-39) என்னும் புனித பவுலடியாரின்
உன்னதமான வரிகள் நம் நினைவுக்கு வருகன்றன.
அதாவது நற்கருணையை உட்கொள்வதால் நாம் இயேசுவோடு
இரண்டறக் கலந்து விடுகின்றோம். ஒரு விதத்தில் நாம்
இயேசுவைப்போல் ஆகின்றோம். அது மட்டுமல்ல, இந்த
இயேசுவுக்கும், அவரை உட்கொள்பவருக்கும் இடையேயான
இணக்கத்தில் இயேசு தந்தையாம் இறைவனையும்
உள்கொணர்கின்றார். இந்த இணக்கமும், மேலே குறிப்பிட்ட
நிலைவாழ்வும் தந்தையாகய கடவுளிடமிருந்து தொடங்குகின்றன.
அவரே இவற்றின் தொடக்கமும் தோற்றுவாயும். எனவே, ஒரு
சிலர் நற்கருணையை உட்கொள்வதால் நிலைவாழ்வைப் பெறுவர்
மற்றும் இயேசுவோடு இணக்கமாக மட்டுமில்லாமல், தூய
தமத்திருத்துவத்தின் மூன்று ஆள்கள் தமக்குள்
கொண்டிருக்கிற அந்த உறவுடனும் இணைக்கப்பட்டு
தந்தையிடமிருந்து மகன் பெற்ற வாழ்வை அவர் வழியாக தாமும்
பெற்றுக்கொள்கிறார். இது உண்மையில் பெரும் பேறு அல்லவா!
நற்கருணையில் இதை நாளும் சுவைத்து மகிழ்வோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தம் முதல் ஆண்டு
முதல் வாசகம்: இச 8:2-3,14-16
துன்பத்திலும் துயரத்திலும் ஆண்டவர் தம் மக்களோடு
இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய வாசகம்
அமைகிறது. பாலைவனத்தில் பசியால் வாடிய மக்களுக்குக்
கடவுள் மன்னா எனும் உணவை அளித்தது திவ்ய நற்கருணைக்கு
ஒரு முன் அடையாளம். எனவேதான் இன்றைய திருநாளின் வாசமாக
இந்நிகழ்ச்சி தரப்படுகிறது.
துன்பத்தில் ஆண்டவர் துணை
ஆண்டவர் அருகில் இருக்கிறார்; எனவே, அச்சமுறத்
தேவையில்லை என்று உணர்த்தவே துன்பங்கள் வருகின்றன எனக்
கூறலாம். பாலைவனத்தில் உண்ண உணவும், குடிக்க நீரும்
கிடைப்பது அரிது. எனினும் இத்தேவையே இறைவன் மக்களுக்கு
உதவக் காரணமாய் அமைகிறது. "எகிப்தில் என் மக்கள்
படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை
வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும்
குரலையும் கேட்டேன்"(விப 3:7-10) என்பதிலிருந்து,
இன்னல் இக்கட்டுக்களில் இறைவனின் இரக்கம் அணைபுரண்டு
ஓடுகிறது என்பது புலனாகிறது. "உள்ளபடி அவர் உன்னைப்
பசியினால் வருத்தினார் ' (இச 8:3) என்பது இறைவனே
துன்பத்தின் பின்னணியில் இருக்கிறார் என்பதைச்
சுட்டுகிறது. எனவே துன்பங்கள் இறைவனின் விருப்பப்படியே
ஏற்படுகின்றன என்பதை உணர்வோம். "நரம் கடவுளின் கையில்
இருந்து நன்மையைப் பெறலாம்: தீமையை மட்டும்
பெறக்கூடாதா?"(யோபு.2:10) என்ற யோபுவின் சொற்கள் நம்
துன்பங்களில் நமக்கு உறுதுணையாயிருக்க வேண்டும்.
துன்பங்களில் துவண்டு விடாது இறைத்துணையாகிய
நங்கூரத்தைப் பற்றிக்கொள்வோம்.
மன்னா-இறைவார்த்தை, திவ்யநற்கருணை
மன்னா எனும் உணவு ஒரு அடையாளம். இறைவனுடைய வாக்கு
வாழ்வளிக்க வல்லது; இயேசுவின் திருவுடலும் இரத்தமும்
நமக்கு உண்மை உயிரை அளிப்பன என்பதை மன்னா முன்
அறிவிக்கிறது எனலாம். "ஆண்டவரின் வார்த்தையைக்
கேட்காதிருக்கும் பஞ்சம் (ஆமோஸ் 8:11) நம்மை
ஆட்கொண்டுள்ளது. இப்பஞ்சம் தீர நாம் இறைவாக்கை,
விவிலியத்தை தினமும் வாசிக்க வேண்டும். ஏனெனில்
"மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுள் வாயிலிருந்து
வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் "(இச 8:3)
என்பதை உணர வேண்டும். "நாம் சொன்ன சொற்கள் உங்களுக்கு
ஆவியும் உயிருமாகும்"(யோவா 6:63) என்ற நம் ஆண்டவரின்
வாக்கு விவிலியத்தின்பால் நமது பற்றையும் பாசத்தையும்
மிகுதிப்படுத்துமா? "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன "(யோவா
6:68) என்போம்.
இயேசுவின் வார்த்தை மட்டுமன்று, அவருடைய உடலும் உயிரும்
நமக்கு வாழ்வளிக்கவல்லன. நமக்கு உயிராயமைவன. "நானே
உயிர்தரும் உணவு. பாலைவனத்தில் உங்கள் முன்னோர்
மன்னாவை உண்டனர்; ஆயினும் இறந்தனர். ஆனால் நான்
குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான்"(யோவா 6:48-50)
என்பது திவ்யநற்கருணை பற்றி கூறப்பட்டதன்றோ? எனவே திவ்ய
நற்கருணைப் பந்தியில் பக்தியோடு, நன்றியுள்ளத்தோடு
பங்கெடுப்போம். இது வானோரின் உணவு; நமக்கு
அளிக்கப்படுகிறது. நன்றி, இறைவா ; உம்மையே உணவாக ஈந்ததற்கு
நன்றி, நன்றி என்று நவில்வோம்.
குறிப்பு மன்னா எண்பது இனிப்பான வெண்மைப் பூ வகையைச்
சார்ந்தது, பாலைவன மரங்களிலிருந்து வெளிப்பட்ட பால்போன்ற
பொருள் அல்லது ஒருவகைப் புழுக்களின் வயிற்றிலிருந்து
வெளிப்பட்ட இனிப்புடைய வெண்மைப் பொருள் என்று
பலமுறைகளில் ஆராய்ச்சியாளர் விளக்கம் தருவர்.
மனிதன் அப்பத்தனால் மட்டுமன்று: கடவுள் வாயினின்று
வரும் ஒவ்வொரு சொல்லினாவும் உயிர் வாழ்கிறான்.
ஆண்டவர் தன் இறுதி இராவுணவில் நற்கருணையை நம் உணவாக,
திருச்சபையின் பலியாக ஏற்படுத்தினார். அப்பம்
பிட்குதல் என்ற வழிபாட்டுச் சடங்கின் வழியாக
நமதாண்டவரின் மரணமும் உயிர்ப்பும் பிரசன்னமாயின. அப்ப
இரசத்தின் வழியாக ஆண்டவருடன் இணைவதால் ஏற்படும்
விளைவுகளை விளக்குகிறார் பவுலடியார்.
அப்பமும் இரசமும்
பழைய ஏற்பாட்டுப் பாஸ்கா விருந்தில் குடும்பத் தலைவன்
திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை ஆசீர்வதித்து
அனைவருடனும் பருகுவார்; கசப்பான பூண்டுகளைக் குழம்பில்
தோய்த்து பாஸ்கா செம்மறியுடன் உண்பர்; பின்னர் புளியாத
அப்பத்தைக் கையிலேந்தி செபிப்பார். அப்போது "ஹல்லேல்
என்ற இறைபுகழ் பாடப்படும். நமதாண்டவர் இம்முறையில்தான்
தன் சீடர்களுடன் பாஸ்கா உணவை உண்டார். அதே உணவு
வேளையில் திராட்சை இரசக் கிண்ணத்தை எடுத்து ஆசீர்வதித்து
"உடன் படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும்
இரத்தம் இது"என்றார். அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி,
பிட்டு அவர்களுக்கு அளித்து, இதை வாங்கிக் கொள்ளுங்கள்;
இது என் உடல் என்கிறார் (மாற்கு 14:23--24). பழைய
உடன்படிக்கை மறைந்து புதிய உடன்படிக்கை தோன்றுகிறது.
இரத்தம் உயிரின் உறைவிடமாக எண்ணப்பட்டது
(காண்.லேவி.17:11). பலிப்பொருளை பலிசெலுத்திய குடும்பம்
உண்ணும். அவ்வேளையில் கடவுளே விருந்தினராக வருவார்
என்று எண்ணினர். இப்பலிப் பொருள்களில் கடவுளே
இருப்பதாகவும் எண்ணினர். எனவே இப்பலிப் பொருளை
உண்ணும்பொழுது தங்கள் குலதெய்வத்துடன் இணைந்து
விட்டதாகவே எண்ணினர். இந்தச் சமயக் கோட்பாட்டின்
அடிப்படையில் தான் பவுலடியாரும் "திருக்கிண்ணத்தை ஏந்தி
நாம் இறைபுகழ் கூறுகின்றோமே; அது கிறிஸ்துவின்
இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அன்றோ? நாம் அப்பத்தைப்
பிட்கின்றோமே; அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல்
அன்றோ?"என்கிறார். எனவே நற்கருணையில் பங்குகொள்ளும்போது
அவரது உடல் இரத்தத்தின் வழியாக நாம் கிறிஸ்துவில்
இணைகின்றோம். எனவேதான் "எவராவது தகுதியற்ற நிலையில்
இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில்
பருகினால் அவர் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும்
எதிராகக் குற்றம் புரிகிறார்'"என்கிறார் (11:27).
"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்
கூடும்?"(6:52) என்று வினவிய யூதர்களுக்கு இயேசு கொடுத்த
பதில் இன்றைய வாசகம். இயேசு தரும் உணவு அவர் தசை,
அவரது இரத்தம். இவற்றை உண்டு குடிப்பதன் வழியேதான்
முடிவில்லா வாழ்வு கிட்டும் என்று இயேசு உணர்த்துகிறார்.
என் தசை, என் இரக்கும்
இயேசு கடவுள் நம்மில் ஒருவரானார். "பாவம் தவிர
மற்றெல்லாவற்றிலும்"நம்மைப் போலானார் (எபி 4:15 ;
2:14-18). திரு நற்கருணை நமக்குக் காட்டுவது, மனிதரை
மீட்க இயேசு மனிதரானார் : தசை, இரத்தம் கொண்டவரானார்
என்பது. நம் தசையை, நம் இரத்தத்தை அவர் ஏற்றதால்
மட்டுமே நமக்கு மீட்புத் தருபவரானார் (எபி 210-12). இது
நமக்குப் பெரும் பாடமாக அமைய வேண்டும். ஏழைகளுக்காகப்
பாடுபடுவோம். ஒடுக்கப்பட்ட வருக்காகக் குரல்
கொடுப்போம் என்று கூறும் வெறும் வாய்ப் பேச்சாளர்களை
இன்று நிறையக் காண்கிறோம். ஏழையரின் தசை, அவர்களது
இரத்தம் நமதாக வேண்டும். ஏழைகளோடு ஏழையாக
வாழும்போதுதான் "இவர்கள் என் தசை, என் இரத்தம்" என்று
கூறமுடியும். திருநற்கருணையை ஏற்படுத்தியபோது "இது
உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்... உங்களுக்காகச்
சிந்தப்படும் என் இரத்தம்"(1கொரி 11:23-27); மத்
26:26-29 முதலியன) என்று இயேசு கூறிய சொற்கள் : நமதாகுமா
?
என்னில் நிலைத்திருங்கள்
இயேசுவின் தசையையும் இரத்தத்தையும் திரு நற்கருணையில்
உண்டு குடிப்பவர் இயேசுவாக மாறவேண்டும். "இனி வாழ்பவர்
நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்"(கலா 2:20)
என்று கூறக்கூடிய நிலையை அடைய வேண்டும். இயேசு நம்மில்
வாழ்வதுபோல் நாமும் அவரில் நிலைத்திருக்க வேண்டும்
(யோவா 15:4). திராட்சைக் கொடி உவமையிலே (யோவா 15)
பத்துத் தடவை "நிலைத்திருத்தல்"என்ற சொல் வருவதைக்
காண்க. கிளைகள் கொடியோடு இணைந்திருக்க வேண்டும்;
கொடியில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான்
அவற்றிற்கு வாழ்வு உண்டு. இதே போன்றே கிறிஸ்துவர்
கிறிஸ்துவில் நிலைத்திருந்தால்தான் ' அவருக்கு வாழ்வு
உண்டு. இப்பிணைப்பைத் தருவது திருநற்கருணை. "என் தசையை
உண்டு என் இரத்தத்தைத் குடிப்போர் என்னோடு
இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன் "
(6:56). அவரில் நாம் நிலைத்திருப்போமாயின் அவரே
நம்மில் செயல்படுவார் என்பது உண்மை. "என்னை உண்போரும்
என்னால் வாழ்வார் (6:57).
அவரில், அவரால் வாழ்வது என்பது அவரைப் போல்
வாழ்வதாகும். அவருடைய கட்டளையைப் பின்பற்றுவதாகும்.
"நான் உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் ஒருவர்
ஒருவரிடம் அன்பு கூர வேண்டுமென்பதே என் கட்டளை"(15:12)
என்பார் இயேசு. திரு நற்கருணை வாழ்வு என்பது அன்பு வாழ்வு
என்பதை உணர்ந்து நடப்போமா?
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. (குறள்-75)
மனித வாழ்வில் உணவு முக்கிமானது. எந்த சமயத்திலும்
கடவுள் உணவாக வந்ததில்லை. கிறித்தவ மதத்தில் மட்டுமே
வந்தார். பிறக்கும்போதே உணவாகப் போகிறேன் என்பதை
அறிவித்தார். தீவனத் தொட்டிபில் கிடத்தப்பட்டதன்
வழியாக, தான் உணவு என உலகுக்கு உணர்த்தினார். தன்
பணிவாழ்வின்போது "என் சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை
உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்"(யோவாக6:51) என்று
அறிவித்தார். பின்னாளில் தன் பணிவாழ்வின் நிறைவில்
நற்கருணையை ஏற்படுத்தியபோது "எனது உடலை அனைவரும் உண்டு,
எனது இரத்தத்தை அனைவரும் பருகுங்கள்"என்றார்.
அன்றுமுதல் இன்றுவரை கத்தோலிக்கத் திரு அவையில்
முக்கியமான தனியிடத்தை நற்கருணை பெறுகின்றது.
2ஆம் வத்திக்கான் சங்கம் திருவழிபாடு பற்றிய
கொள்கைத்திரட்டில் "கிறித்தவ வாழ்வின் ஊற்றும்
உச்சமும் மையமும் நற்கருணையே"என வியந்து போற்றுகின்றது.
எனவே இன்றைய விழா ஒருவகையில் கிறித்தவ வாழ்வையே
கொண்டாடும் விழா. கிறித்தவ வாழ்வே நற்கருணையை
மையப்படுத்திய வாழ்வுதான். இத்தகைய திருநற்கருணை
நமக்குக் கற்றுத்தரும் இரண்டு பாடங்களை இன்று
தியானிப்போம்.
1. பிறருக்காக உங்களையே தியாகம் செய்யத் தயாராக
இருங்கள்: அடிப்படையில் நற்கருணைத் தியாகத்தின்
சின்னம். மேலறையில் நற்கருணையை ஏற்படுத்திய இயேசு
கல்வாரியில் தன்னையே தியாகப் பலியாக்கினார்.
அப்பத்தையும் இரசத்தையும் பெரிய வியாழன் அன்று தந்தவர்
தன் உடலையும் இரத்தத்தையும் பெரிய வெள்ளி அன்று
தந்தார். தன்னையே கியாகமாக்கிய இயேசுவை
அடையாளப்படுத்துவதுதான் நற்கருணை. நாம் சாவதற்குப்
பதிலாக இயேசு தன்னையே அழித்ததன் அடையாளம்தான் தற்கருணை.
நாமும் பிறருக்காக நம்மையே தியாகம் செய்ய நற்கருணை நம்மை
அழைக்கின்றது. நம் வீடுகளில், சமுதாயத்தில் பிறருக்காக
நம்மையே தியாகம் செய்யும்போது நாமும் நற்கருணையை
வெளிப்படுத்தும் அடையாளங்களாக மாறலாம்.
2. பகிர்ந்து வாழத் தயாராக இருங்கள்: நற்கருணை ஒரு
பகிர்வின் சின்னம். இயேசு தன்னை நம்மோடு பகிர்ந்து
கொண்டதன் அடையாளம். இயேசுவின் வாழ்வில் பகிர்வு என்பது
அவரது குணங்களுள் ஒன்று. அவர் மக்களுக்கு அப்பத்தைப்
பகிர்ந்தளித்தார் (மத்.14:13-21, மாற்.6:30-44,
லூக்.9:10-17, யோவா.6:1-15). தன் சீடர்களோடு தன்
குணமளிக்கும் வல்லமையைப் பகிர்ந்து கொண்டார்.
பேதுருவோடு தன் மன்னிக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து
கொண்டார். தன் திருத்தூதர்களுக்குத் தன் ஆவியைப்
பகிர்ந்தளித்தார். இறுதியாக, தன் உடலையும்
இரத்தத்தையும் மனிதகுலத்தோடு பகிர்ந்து கொண்டதன்
அடையாளமே நற்கருணை.
முதல் கிறித்தவர்களின் வாழ்வில் பகிர்வு முக்கிய
இடம்பிடித்தது (திப 2:42-47). பகிராமல் வாழ்வது
பெருங்குற்றமாகக் கருதப்பட்டது (திப 5:1-11). இயேசுவைப்
போல, முதல் கிறித்தவர்களைப் போல நாமும் பகிர்ந்து வாழ
வேண்டும் என நற்கருணை நம்மை அழைக்கின்றது. பகிர்ந்து வாழ
நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நம் ஆற்றலை, நம் நேரத்தை, நம் ஆறுதலான வார்த்தைகளைப்
பிறரோடு பகிர்ந்து கொண்டாலே போதும். நற்கருணை தரும்
பாடங்களைப் பின்பற்றி இயேசுவைப் போலநாமும் பகிர்ந்து
வாழ்வோம். . இயேசுவைப் போல நாமும் பிறருக்காகத்
தியாகம் செய்ய முன்வருவோம். அதன்மூலம் நாம் வாழும்
இடத்தில் நற்கருணையை பிரசன்னப்படுத்தும் அடையாளங்களாக
வாழ்வோம்.
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!