ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

ஆண்டின் பொதுக்காலம் 5 ம் ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert
Sr. Gnanaselvi (india)

 ஆண்டின் பொதுக்காலம் 5ம் ஞாயிறு  
திருப்பலி முன்னுரை

பதிலுரைப் பாடல்
திபா 112: 4-5. 6-7. 8a,9 (பல்லவி: 4a)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.

உலகிற்கு இறைஒளியாய் ஒளிர வந்திருக்கின்ற அன்பு நெஞ்சங்களே!
உலகில் உப்பாக ஒளியாக வாழ வேண்டுமென நினைவுபடுத்தி இந்த திருப்பலி நம்மை வரவேற்கின்றது.

உப்பானது உணவுக்குச் சுவை தருகிறது. பொருட்களை கெடாமல் பாதுகாக்கிறது. அதுபோல நாமும் நமது அயலாரின் துன்பச் சுமைகளை குறைத்து இன்பச்சுவையை பெருக்குவோம். பொருட்களை அழியாது பாதுகாக்கும் உப்பைபோல, நம் அருகிருப்போரின் வாழ்வு அழிந்து விடாமல் பாதுகாக்கும் கடமையும் நமக்கு உரியதே என எண்ணுவோம்.

இருளை பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவது சிறந்தது. ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதால் இழப்பு ஒன்றுமில்லையே. "எரிகின்ற விளக்காயிரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்" என்கிறார் இரவீந்திரநாத் தாவுர். ஒளியானது இருளை நீக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. ஓளி மகிழ்ச்சியையும், வாழ்வையும் கொடுக்கிறது. மின்விளக்குகள் இல்லாத காலத்தில் தெருவில் விளக்குள் எரிவதற்கான பொருட்கள் ஆங்காங்கே இருக்கும். மாலை வேளையில் ஒருவர் வந்து விளக்குகளை ஏற்றுவார். அவர் சென்றபின்னும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். இந்த தெருவிளக்கு எரிய வைப்பவர் போல, நாம் ஒவ்வொருவரும் இருந்தால் செல்கின்ற இடமெல்லாம் ஒளியூட்டம் பெறும்.

உப்பும், ஒளியும் கைமாறு கருதாது, நமக்கு பயன்படுகிறது. நாமும் நமது வாழ்வில் பிறருக்கு கைமாறு கருதாமல் பயன்படவேண்டும். பிறருக்கு உப்பாக, ஒளியாக, கைமாறு கருதாமல் பயன்பட, அருள்தரும் திருப்பலியில் உப்பாக ஒளியாக எமை மாற்றும் இறைவா, எல்லோருக்கும் எமை பயன்படுத்தும் இறைவா என மன்றாடுவோம்...



 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



எங்கள் ஒளியாய் ஒளிர்கின்ற இறைவா!
உமது ஒளியைப் பெற்று மனிதர் முன் ஒளிரச் செய்து கொண்ழருக்கும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் தொடர்ந்து தம் பணியில் இறைமக்கள் வாழ்வில் ஏற்றிய ஒளி அணையாது, எந்நாளும் சுடர்வீசி எரியச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

எரிகின்ற விளக்காயிருக்க அழைக்கின்ற இறைவா!
சமுதாய இருளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் இதயங்களில் ஒளியை ஏற்றி, அவர்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்ய, நாட்டுத்தலைவர்களுக்கு உமது அருளொளி தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

எங்கள் வாழ்வில் ஒளியேற்றும் இறைவா!
எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் புத்தொளி பெற்று, மகிழ்ச்சி ஒளியில் நாளும் நடக்க ஒளியூட்டும் எங்கள் ஆன்மீகத் தந்தையின் அருட்பணி, இன்னும் சுடர் வீசி ஒளிர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

பிறருக்கு உப்பாக வாழ அழைக்கின்ற இறைவா!
எங்களோடு வாழும் எங்கள் அயலாரின் வாழ்வுச் சுமைகளை அகற்றிடும், வாழ்வின் சுவைகளை ஊட்டிடும் உப்பு போன்ற நற்செயல்பாடுகள் கொண்டு, ஒருவர் ஒருவருக்கு கைமாறு கருதாமல் உதவி செய்து வாழும் உள்ளம், இங்கு கூடியுள்ள எல்லோருக்கும் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

எங்களை எப்போதும் பாதுகாக்கும் இறைவா!
உணவை அழியவிடாது பாதுகாக்கும் உப்பை போல, எவருடைய வாழ்வும் அலகைக்கு அடிமையாகி அழிந்துவிடாமல், ஆண்டவனுக்கு அடிமையாகி பாதுகாப்பாக வாழக் கூடிய சூழ்நிலைகள், உலகில் எப்போதும் நிலவ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

விடியலாய் எங்கள் வாழ்வை ஒளிரச் செய்கின்ற இறைவா!
பசித்தோருக்கு உணவும், இல்லிடமற்றோருக்கு இல்லிடம், உடையற்றோருக்கு உடை கொடுக்கும் போது, எங்கள் வாழ்வு ஒளிரும், நலமான வாழ்வு துளிர்க்கும், நேர்மையானது எங்கள் முன் நடக்கும். என நாங்கள் வாசிக்கக் கேட்ட வார்த்தையை எங்கள் வாழ்வில் ஒளிரச் செய்ய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.



 
மறையுரை சிந்தனைகள்
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

சரியான அளவில்

இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் 5ஆம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை இறைமகன் இயேசுசரியான அளவில் உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை ஆசீர்வதிப்பனவாக, நமக்கு ஆறுதல் தருவனவாக இருக்கின்றன.

முதல் வாசகத்தில் ஏராளமான ஆசீர்வாதங்களை கடவுள் நமக்கு கொடுக்கின்றார். இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் தனது பழைய நிலைமையை சொல்லி சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அறிந்ததால் அவர் பெற்றுக்கொண்ட மகிமையை எடுத்துரைக்கின்றார். இறுதியாக நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களை உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய காலகட்ட சீடர்களாகிய நாமும் உப்பாக ஒளியாக வாழ அவரால் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை இதற்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. உப்பிட்டவரை, உப்பு இவ்விடத்தில் உணவாக கருதப்படுகிறது. உணவு நம் அனைவருக்கும் இன்பம் தரக்கூடியது. நிறைவினைத் தரக்கூடியது. அந்த இன்பத்தினை நிறைவினை நமக்கு தந்தவர்களை, நமது பசியை ஆற்றிய அவர்களை உள்ளத்தில் எப்போதும் மறக்காமல் நினைக்க வேண்டும். இந்த அர்த்தத்திலேயே உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது சிலரது கருத்து. (வாழ்வில் இனிமை சேர்த்த அவர்களை இதயம் உள்ளவரை நினை என்பது) இரண்டாவதாக நாம் திருமணங்களில் பலமுறை கண்டிருப்போம் உணவு பரிமாறுவதற்கு முன் உப்பையும் இலையில் வைப்பார்கள். உப்பு இலையில் வைத்து பரிமாறப்படுவதற்கான காரணம் என்னவென்றால் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இருக்கும் போது யாராவது ஒரு சிலர் உப்பில்லை என்று கூறி விருந்தின் தன்மையை மாற்றிவிடக் கூடாது,அல்லது கேட்க வருத்தப்பட்டுக்கொண்டு உப்பில்லா உணவை உண்டு வருந்தக்கூடாது என்பதற்காகவே.


மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமானது உணவு. அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவிற்கு சுவையை ஊட்டுவது உப்பு. உப்பு சரியான நிலையில் இருக்க வேண்டும் அதிகமானாலும் கார்ப்பு என்பதை கரிப்பு, உப்பு கரிக்கிறது என்றும், குறைவானால் இதென்ன சப்புன்னு இருக்கு என்று சொல்லிவிடுகிறோம் இவ்வாறாக, அந்த உப்பு இல்லாத உப்பு மிகுதியான உணவினை நாம் நமது வார்த்தைகளால் வெளிப்படுத்துவோம். உப்பு கரிக்கிறது, உப்பில்லாமல் சப்பென்று இருக்கிறது என்று கூறிவிடுகிறோம்.

நமது நாம் உணவிற்கு பயன்படுத்தக்கூடிய பலவிதமான பொருட்களில் அறுசுவைகளில் இரண்டு மூன்று ஒன்றாக இணைந்து செய்யப்படுகின்றன.பொதுவாக நமக்கு பரிமாறப்படும் உணவில் புளிப்பு இல்லை என்றாலோ காரம் இல்லை என்றாலும் அதனை ஈடுகட்ட எந்த பொருளும் அந்நேரத்தில் நமது இலையில் வைக்கப்படுவதில்லை மாறாக உப்பு இல்லை என்றால் உடனடியாக உப்பு இலையில் வைக்கப்பட்டு உணவோடு சேர்க்கப்பட்டு அந்த குறையை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. உப்பு தனது குறையை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை பெற்றது. இத்தகைய உப்பு போல நாம் வாழ, இயேசுவின் சீடர்களாகிய நாம் வாழ, இயேசு அழைக்கின்றார். தனது குறையை சுட்டிக் காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்யக்கூடியவர்களாக நாம் வாழ சரியானவர்களாக, சரியான சுவை தருபவர்களாக நாம் வாழ அழைக்கின்றார்

அடுத்து ஒளி அதிகமான ஒளி தீபம் என்றும் ஜோதி என்றும் அழைக்கப்படுவதில்லை மாறாக தீப்பந்தம் என்று அழைக்கப்படும். அதுவே மிகவும் குறைவாக எரிந்தால் மங்கிய வெளிச்சம் என்று அழைக்கப்படும். எனவே ஒளியாகிய நமது நற்செயல் நமது வாழ்வில் சுடர்விட்டு எரியச்செய்வோம். வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக மாற வேண்டும். மங்கியதாகவும் இல்லாமல் அதிக தீப்பந்தம் போலவும் இல்லாமல் சரியான ஒளியாக, சரியான தீபமாக சரியான ஜோதியாக நாம் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். நம்மில் பலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்கிறென் பேர்வழி என்று நினைத்து வம்பில் மாட்டிக் கொள்வதும் உண்டு ( என்னையும் சேர்த்து தான் ).

இப்படி நமது வாழ்வு சரியான உப்பாக சரியான ஒளியாக மாறும் பொழுது நமது ஒளி விடியல் போய்விடும் நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை நமக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி நம்மைப் பின் தொடரும். இதுவரை மிகுந்த அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருந்த நாம், சொல்வன்மை உடையவர்களாக ஞானம் உடையவர்களாக மாறுவோம். இந்த சரியான உப்பாக, சரியான ஒளியாக மாற மனித ஞானம் அவசியமில்லை. மாறாக கடவுளின் வல்லமை மிகவும் தேவை என்பதை இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறார். நமது வாழ்வின் உப்பை சாரமற்றதாக மாற்றும் வாய்ப்பு கொண்டது இந்த மனிதன் ஞானம். மரக்காலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட ஒளியாக நமது வாழ்வை மாற்றக்கூடும். கடவுளின் வல்லமை ஒன்று மட்டுமே சுவையான உப்பாக சுவையூட்டக்கூடிய உப்பாக, ஒளி தரக்கூடிய ஒரு தீபமாக ஜோதியாக நமது வாழ்வை மாற்றும்.

இதுவரை இருந்த நிலை மாறி நம்மிடமுள்ள அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களாக நாம் மாறமுடியும். முதல் வாசகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல,நமது உணவை பகிர, வீடு இல்லாதவர்களுக்கு நமது இல்லத்தில் இடம் கொடுக்க, உடையற்றவர்களுக்கு உடையளிக்க நாம் அழைக்கப்படுகின்றோம். சுவையோடு கூடிய உப்பாக ஒளியாக இருக்கும் போது நம் இறைவன் நாம் மன்றாடும் போது நமக்கு பதில் அளிப்பார் நாம் கூக்குரல் இடும் போது இதோ என பதிலிறுப்பார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த நுகம் எனும் சுமையை கீழே இறக்கி வைத்தல் அல்லது அதை நம்மிடமிருந்து அகற்றுதல், குற்றம் சாட்டுதல் பொல்லாத பேசுதல் போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து நீக்கி வாழும் போது இருள் நடுவே நாம் ஒளி என திகழ்வோம். இருண்டு கிடந்த நமது வாழ்க்கை நண்பகல் போல வெளிச்சம் தரும் ஆக மனித ஞானத்தை விட கடவுளின் வல்லமையை நம்புவோம். வாழ்விற்கு இனிமை சேர்க்கக்கூடியவர்களாக, நமது வாழ்விற்கும் பிறரது வாழ்விற்கும் சுவை ஊட்ட கூடியவர்களாக வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். சரியான உப்பாக, தரமான ஒளியாக வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இருப்பதாக ஆமென்

 
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 இதய உருவாக்கம்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று, கடந்த வார ஞாயிறு வழிபாடு (நற்செய்தி வாசகம்) நமக்கு நினைவூட்டியது. நம்முடைய பிரசன்னம் வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இது நமக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:17-27) இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை சீடரின் உள்ளத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை எடுத்தியம்புகிறது அல்லது இதய உருவாக்கமே சீடத்துவத்தின் நோக்கம் என்று சொல்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 15:15-20) சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகவும். ஞானநூல்களில், ஒன்றாகவும் உள்ளது இந்நூல். 'ஞானம்' என்பதை இப்படி வரையறுக்கலாம்: 'நம்முடைய நலத்திற்கும், வளத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஏற்றபடியான தெரிவுகளைச் செய்யும் கலை.' ஒவ்வொரு மனிதரும் தான் விரும்புவதைச் செய்யும் விருப்புரிமை பெற்றிருக்கின்றார் எனவும், நன்மை எது? தீமை எது? என்பதைப் பகுத்தாய்ந்து, தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றும், தன்னுடைய நடத்தை பற்றிய தெரிவுகளை மேற்கொள்ளும் முழுச் சுதந்திரத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்றும் ஞானநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், 'ஞானம்' மற்றும் 'மதிகேடு' என்ற இரு பெரும் பிரிவுகளாக மனித தெரிவுகளைப் பிரித்து, 'ஞானம்' நிறைவான மற்றும் ஆசீர்பெற்ற வாழ்வுக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது என்றும், 'மதிகேடு' இறப்பிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் கற்பிக்கின்றன. இப்படிப்பட்ட கற்பித்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

இன்றைய வாசகத்தின் பாடச் சூழல் மனிதர்கள் கொண்டிருக்கின்ற விருப்புரிமை என்ற மேலான கொடையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாசக்த்தின் முதல் பகுதி மனிதர்கள் பெற்றிருக்கின்ற விருப்புரிமையையும் தன்னார்வ மனத்தையும் அடிக்கோடிடுகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் உண்டு. 'நீர் - நெருப்பு: 'வாழ்வு - சாவு' என்னும் இரண்டு எதிர்துருவங்கள் நம் முன் நிற்க, நான் கையை நீட்டி எனக்கு 'விருப்பமானதை நான் தெரிவு செய்ய வேண்டும். வாசகத்தின் இரண்டாம் பகுதி கடவுளுக்கு ஏற்ற வழிகளைத் தெரிவு செய்ய என்னைத் தூண்டுகிறது. இதையே 'ஆண்டவரின் ஞானம் என்கிறார் ஆசிரியர். இது திருச்சட்டங்களில் காணப்படுகிறது. மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த கடவுள் அவர்கள் தீமையில் உழல வேண்டும் என்று கட்டளையிடவோ, பாவம் செய்ய அனுமதி கொடுக்கவோ இல்லை. இந்த உலகின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் மனித தெரிவுகள் அவர்களுக்கு அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறார்.

ஆக, ஆண்டவரின் ஞானத்தைப் பெறுதலும், அந்த ஞானத்தின் பின்புலத்தில் 'நீரை,' 'வாழ்வைத்' தெரிவு செய்தலே இதய உருவாக்கம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1கொரி 2:6-10), கொரிந்து நகரத் திரு அவையில் இருந்த பிரிவுகளையும், வேறுபாடுகளையும். ஏற்றத்தாழ்வுகளையும் களையுமாறும், அவர்களுடைய குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டு பிரிவுகளைக் கடந்து நிற்குமாறும் அறிவுறுத்தும் பவுல், தன் கருத்தை வலியுறுத்த கடவுளின் ஞானம் என்னும் கருதுகோளை முன்னெடுக்கின்றார். யூத ஞான இலக்கியம் சொல்வதுபோல, கடவுளின் ஞானம் எல்லா வகை மனித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும், அது மறைபொருளாய் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஞானம் கடவுளோடு இருந்தது. கடவுள் தாம் விரும்புகிறவருக்கு அந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் ஞானம் உலகுசார் வாழ்க்கை முறையையும் தாண்டி, எல்லாவற்றின் இறுதியை நோக்கியதாக இருக்கிறது. மேலும், இவ்வகை ஞானம் மனித வாழ்க்கையை மாட்சியை நோக்கி - அதாவது, கடவுளின் வாழ்விலேயே நாம் பங்குபெற - நகர்த்துகிறது.

இப்படிப்பட்ட மேன்மையை அல்லது மாட்சியை நோக்கி நகரும் கொரிந்து நகரத் திரு அவை தனக்குள் பிளவுகளையும், பிரிவினைகளையும் எப்படி வைத்துக்கொள்ள இயலும்? என்று அவர்களைச் சிந்திக்க அழைக்கின்ற பவுல், ஒளிந்திருக்கும் மறையுண்மையான ஞானத்தைக் கண்டடையும் வழியையும் சொல்கின்றார்; ஞானமும், அறிவும் நமக்கு தூய ஆவியாரிடமிருந்து வருகிறது.' தூய ஆவியாரின் செயல்பாட்டின்படி வாழ்பவர் முதிர்ச்சி அடைகிறார். இந்த உலகின் ஞானத்தின்படி வாழ்வோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார். இவ்வுலக ஞானத்தின்படி வாழ்பவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடிக் கரைந்துவிடும். ஆக, தூய ஆவியாரின் இயக்கத்தின்வழி வாழ்பவர் இறைஞானத்தைப் பெற்றவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை அவர் அடையப் போகும் மாட்சியை நோக்கியதாக இருக்கும்.

ஆக, கடவுளுடைய ஞானத்தின்படி வாழுமாறு தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மையே கையளிப்பதே இதய உருவாக்கம்.

மலைப்பொழிவின் ஒரு நீண்ட பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் : 5:17-37) வாசிக்கின்றோம். முதலில், இயேசு, 'திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை. மாறாக, நிறைவேற்றவே வந்தேன்' என்பதை வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் பணி ஏற்கனவே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடங்கியுள்ள வெளிப்பாட்டின் நீட்சியே தவிர, அதன் அழித்தல் இல்லை என்பதை உறுதி செய்கிறார். இயேசுவின் பணியின் புதுமை என்பது மனித வாழ்வின் வழிகாட்டுதலுக்கான புதிய நெறிமுறைகளை வழங்குவதில் அல்ல; மாறாக, ஏற்கனவே உள்ள வழியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மூன்று கட்டளைகளை எடுத்து, அவற்றின் பின்புலத்தில் சரியான வழி என்ன என்பதை வரையறை செய்கிறார் இயேசு. இந்த மூன்று கட்டளைகளும் மனித வாழ்வின் சவால் நிறைந்த பகுதிகள்: கோபம், பாலுணர்வு மற்றும் தனிநபர் நாணயம்.

'கொலை செய்யாதே!" என்ற கட்டளையோடு தொடங்குகிறார் இயேசு. மனித உயிர்களை அழிக்கும் குழுமங்களைச் சிதைக்கும் முதன்மையான காரணி வன்மம் அல்லது வன்முறை. இது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும், நலனையும் சீர்குலைக்கிறது. வன்முறையின் வேர் கோபம். கோபமின்றி வன்முறையும், கொலையும் நிகழ்வதில்லை. கோபத்தைத் தடுப்பதன் வழியாக, வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடியும். மேலும், சின்னச் சின்ன மனத்தாங்கல்கள். உள்ளக்கீறல்கள் ஆகியவற்றையும் சரி செய்தபின், பலி செலுத்துதலே சால்பு என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு.

இரண்டாவதாக, 'விபசாரம் செய்யாதே!" கட்டுப்படுத்தப்படாத பாலுணர்வு குடும்ப உறவைச் சிதைக்கிறது. பாலுணர்வுப் பிறழ்வின் அடிப்படையான உணர்வு காமம் என்பதை அடையாளம் காட்டுகிறார் இயேசு. 'கண்களைப் பிடுங்குதல் மற்றும் கைகளை வெட்டுதல்' போன்ற உருவகங்கள் வழியாக, காமஉணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது குடும்ப உறவைப் பிடுங்கி எரிந்தும், வெட்டியும் விடும் என எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு அல்லது மணவிலக்கும் குடும்ப உறவைப் பாதிக்கும் என்பது இயேசுவின் தொடர்பாடமாக இருக்கிறது.

தொடர்ந்து, 'பொய்யாணை இடாதீர்!' அல்லது 'பொய்ச்சான்று சொல்லாதே!' என்ற கட்டளை பற்றிப் பேசுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் ஆணையிடுதல் என்பது, ஒரு சாதாரண செயலாக, நிகழ்வாக இருந்தது. ஒருவர் தான் சொல்வது உண்மை என்று உறுதி செய்யவும் அல்லது தான் ஒரு செயலைச் செய்வது உறுதி என்று அறிக்கையிடவும், ஆணையிடுவது மரபு. இதில் என்ன பிரச்சனை என்றால், இப்படி ஆணையிடுபவர், தன்னுடைய தனிநபர் நாணயத்தன்மையை மறந்து, தன் நாணயத்தன்மையை உறுதிசெய்ய கடவுளையோ, இன்னொருவரையோ துணைக்கு அழைக்கிறார். மேலும், தன் ஆணையை நிறைவேற்ற முடியாமற்போக, அவர் கடவுளையும், மற்றவரையும் கூட பொய்யராக்கிவிடுகிறார். இதற்கு மாற்றாக ஆணையிடுதலையே தவிர்க்குமாறு அழைக்கிறார் இயேசு. ஒருவரின் தனிநபர் நாணயம்தான் உண்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டுமே தவிர, வெளிப்புறத்திலிருந்து வரும் ஒருவர் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.

ஆக, இந்த மூன்று கட்டளை நீட்சிகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது அல்லது இவற்றை ஒரே கருத்துருக்குள் அடக்கிவிடலாம். 'இதய உருவாக்கம்' - கட்டளைகள் செயல் வடிவம் பெறவேண்டுமெனில், இதயம் உருவாக்கம் அவசியம். கோபத்தையும், காமத்தையும் உள்ளத்திலிருந்து அகற்றும்போது, கொலை மற்றும் விபசாரம் என்னும் ஆபத்துகள் மறைந்துவிடும். தனிநபர் நாணயம் என்பதும் இதய உருவாக்கத்தின் ஓர் அங்கமே. இதையே மனப்பாங்கு புதுப்பித்தல் என்கிறோம். மனப்பாங்கு புதுப்பிக்கப்படாமல் வெறும் செயல்களை மட்டும் சரி செய்தல் நீண்ட பலனைத் தராது. ஆனால், ஆண்டவரின் ஞானத்தின் வழிகளுக்கேற்ப உள்ளம் உருவாக்கம் அடைந்தால் கட்டளைகளை நிறைவேற்றுவது எளிதாகும். இயேசு கட்டளைகளை மாற்றவில்லை. ஆனால், இதயம் மற்றும் மனப்பாங்கு புதுப்பித்தல் வழியாக கட்டளைகளை நிறைவேற்ற முடியும் என்று சொல்வதன் வழியாக கடவுளின் கட்டளைகளை புதிய மற்றும் ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் இயேசு.

இவ்வாறாக, கட்டளைகளைக் கடைப்பிடிக்க இதய உருவாக்கம் அவசியம் என்பதை நற்செய்தி வாசகமும், நன்மையைத் தேர்ந்து தெளிதல் இதய உருவாக்கத்தின் முதல் படி என்பதை முதல் வாசகமும், தூய ஆவியாரின் உடனிருப்பு அதன் இரண்டாம் படி என்பதை இரண்டாம் வாசகமும் நமக்குச் சொல்கின்றன.

இன்று நம்முடைய இதயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பல நேரங்களில் மேலோட்டமாகவே வாழ்கின்றோம். நல்லா இருக்கணும், நல்லதே செய்யணும், கோபப்படக் கூடாது, தவறான அல்லது தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது, பொய் பேசக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறோம். அதன்படி நடக்கவும் செய்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் பேட்டரி விரைவாக : தீர்ந்துவிடுகிறது. மீண்டும் செய்த தவறுகளையே செய்ய ஆரம்பிக்கின்றோம். விரைவாகத் தீர்ந்துவிடும் பேட்டரிகளை அகற்றிவிட்டு, நீடித்த இறைவனோடு தொடர்பில் இருப்பதுதான் இதயத்தைப் புதுப்பிப்பது அல்லது இதயத்தை உருவாக்குவது. இதயம் உருவாக்கப்பட்டுவிட்டால் நம்முடைய செயல்கள் நற்செயல்களாகத் துலங்க ஆரம்பிக்கும்.

இன்று இதய உருவாக்கம் பெற நாம் சந்திக்கும் சவால்கள் எவை?

1.நம்மையே சூழ்நிலைக் கைதி என உணர்வது
சில நேரங்களில் நான் என்னுடைய வாழ்வு இப்படி இருக்கக் காரணம் என்னுடைய சூழல் அல்லது வளர்ப்பு அல்லது சேர்க்கை என என் பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கின்றேன். நான் இப்படி இருக்குமாறு கடவுள்மேல் எழுதிவைத்துள்ளார் என்று பழிசுமத்தும் மனநிலையும் சில இருக்கிறது. ஆனால், இன்றைய முதல் வாசகம் தெளிவாகச் சொல்கிறது. நெருப்பையோ அல்லது நீரையோ கைநீட்டித் தேர்ந்துகொள்வது நான்தான். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை. நான் என் வாழ்வின் சூழல் கைதி என்னும் மனநிலை விடுக்க நான் என் வாழ்விற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

2. குறுகிய எண்ணம் கொண்டு வாழ்வது
கொரிந்து நகர திரு அவையினர் கிறிஸ்துவின்மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அடைந்த மாட்சியை மறந்துவிட்டு, தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பவுல். கேப அப்பொல்லோ ஆகியோரின் பெயர்களைக் கொண்டு, சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டு, ஒருவர் மற்றவர்மேல் பகைமை பாராட்டுகின்றனர். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் வாழ்வின் முழுப்படத்தைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களையும் மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். ஆக, குறுகிய எண்ணத்திலிருந்து நான் விடுபட்டு, பரந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

3. மேலோட்டமாக வாழ்வது
நான்தான் யாரையும் கொலை செய்வதில்லையே? விபசாரம் செய்வதில்லையே? பொய்யாணை இடுவதில்லையே? என்று நான் மேலோட்டமாகப் பெருமை பாராட்டிக்கொண்டு, என் உள்ளத்தில் பகைமை, எரிச்சல், கோபம், காம உணர்வு, பேராசை, பொய் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு, நடந்தால் நான் மேலோட்டமாக வாழ்கிறேனே அன்றி, ஆழமாக வாழ்வதில்லை. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி போல, வெளியே தெரிகின்ற பகுதியை மட்டும் நன்றாக வாழ்ந்துவிட்டு, உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை பெறுகிறேன். அப்படி இருந்தால் மறைந்திருக்கும் அந்த 95 சதவிகித பாறையின்மேல் மோதுகின்ற வாழ்க்கை என்ற டைட்டானிக் கப்பல் உடைந்து, தரைதட்டிவிடும்.

இறுதியாக,
'என் 'உள்ளத்தில் பகைவர்கள் இல்லையென்றால், வெளியிலிருக்கும் பகைவர்கள் என்னைக் காயப்படுத்த முடியாது!" என் உள்ளத்தின் பகைவர்களை அழிக்கும் ஒவ்வொரு நாளும், என் இதயம் உருவாக்கம் பெறுகிறது. அந்தப் பயணத்தில் நானும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!' (காண். திபா 119:5).

 
 
மனிதர்முன் ஒளிர்க!

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால், அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிர வேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு!

இன்று நாம் ஒளிர்கிறோமோ இல்லையோ நம்மைச் சுற்றி நிறைய ஒளிரிகள் இருக்கின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிப்போன ஸ்மார்ட்ஃபோன், நமக்கு முன் ஒய்யாரமாக சுவரில் அறையப்பட்ட செவ்வகமாய் எல்இடி டிவி, நம் மடிக்கணினி திரை, அறையின் ஒளிவிளக்குகள் என நம்மைச் சுற்றி நிறைய ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை நோக்கி நம் கண்கள் இயல்பாகவே செல்கின்றன. இவை ஒளிரும்போது நாம் ஒளிர வேண்டாமா?

எதற்காக ஒளிர்தல் வேண்டும்?

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, இதே மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அறச்செயல்கள் பற்றிய அறிவுரைப் பகுதியில், மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள் (காண். மத் 6:1) என எச்சரிப்பது ஏன்?

இயேசுவைப் பொருத்தவரையில் நம்முடைய செயல்கள் ஒளிர வேண்டும். ஏன்? அவற்றால் விண்ணகத்தந்தை பெருமைப்படுத்தப்படுவதால்!

இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:7-10) நற்செய்தி வாசகமும் (காண். மத் 5:13-16), ஒளி என்ற வார்த்தையை மையமாக வைத்தே சுழல்கின்றன.

நற்செய்தி வாசகத்திலிருந்து நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவில், பேறுடைமைகளைத் தொடர்ந்து அமைந்திருக்கிறது. நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் என்கிறார் இயேசு. நீங்கள் என்பது இங்கே இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. உப்பாக இருக்கவும், ஒளியாக இருக்கவும் அறிவுறுத்தவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை இயேசு. மாறாக, சீடர்கள் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பதாகவே சொல்கின்றார்.

இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய குழுமம் அல்லது குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் எல்லாருமே உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறார்கள்.

உப்பு மற்றும் ஒளி உருவகங்களை எப்படிப் புரிந்துகொள்வது?

உப்பு என்பது முதல் ஏற்பாட்டில் பலிப்பொருளில் கலக்கப்படும் பொருளாகவும், உடன்படிக்கை நிகழ்வில் பயன்படுத்தப்படும் பொருளாகவும், உணவைப் பாதுகாக்கும் பொருளாகவும், உணவிற்கு சுவையூட்டும் பொருளாகவும், கெட்டதைத் தூய்மையாக்கும் (கசப்பான தண்ணீரை நல்ல தண்ணீராக்கும்) பொருளாகவும் பயன்படுகிறது. ஒரே உப்பைச் சாப்பிடுவதன் வழியாக நட்பு வலுப்படுகிறது என்று மக்கள் நம்பினர். மேலும், ஆங்கிலத்தில் உள்ளத்தில் ஸேலரி (சம்பளம்) என்ற வார்த்தையே ஸாலே (உப்பு) என்ற இலத்தீன் சொல்லிலிருந்தே வருகிறது. ஏனெனில், தொடக்கத்தில் உரோமை படைவீரர்களின் சம்பளமாக உப்புதான் வழங்கப்பட்டது. இப்படிப் பல புரிதல்கள் இருந்தாலும், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் பார்க்கும்போது, உவர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கும் வரைதான் உப்பு மதிப்பு பெறுகிறது. ஆனால், அத்தன்மையை இழந்துவிட்டால் அது குப்பையாக மாறிவிடுகிறது, பயன்படாப் பொருளாக, வைத்திருப்பவருக்குச் சுமையாக மாறிவிடுகிறது. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. ஆக, உப்பு சுவையாவதும், சுமையாவதும் அதனுடைய உவர்ப்புத்தன்மையில்தான் இருக்கிறது. அது போலவே, இயேசுவின் குழும உறுப்பினரும் சீடரும் உறுப்பினருக்குரிய சீடருக்குரிய தன்மையைக் கொண்டிருக்கும் வரை தான் அவர்கள் குழுமத்தில் இருக்க முடியும்

ஒளி என்பது கடவுளையும் வாழ்வையும் குறிக்கிறது. படைப்பின் தொடக்கத்தில், இருளும் வெறுமையும் குழப்பமும் நிறைந்த இடம், ஒளி உண்டாகுக! என்ற வார்த்தைகளால் உயிர்பெறுகின்றன. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும்போது நெருப்புத்தூணாக உடன்செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். இஸ்ரயேலைத் தன்னுடைய ஒளி என அழைத்து மகிழ்கின்றார் கடவுள். ஒளி இனிமையானது என்று ஞான இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி கடவுளிடமிருந்து வருவதாகவும், கடவுள் சார்ந்த செயல்கள் செய்பவர்கள் ஒளியிடமிருந்து பிறக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீடத்துவம் என்பது இத்தகைய ஒளியைத் தன்னகத்தே கொண்டிருப்பது. மேலும், இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் எல்லா வீடுகளிலும் விளக்கு எப்போதும் அணையாமல் இருக்கும். தீப்பெட்டி பயன்பாடு அரிதாக இருந்த காலத்தில் விளக்கை அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், திரியைச் சுருக்கி எரியவிடுவதும் இன்னும் கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. அப்படி திரியை அணையவிடாமல் பாதுகாக்க அதை அவர்கள் மரக்காலின் கீழ் அல்லது கட்டிலின் கீழ் அல்லது ஒரு பாத்திரத்தால் மூடி வைப்பது வழக்கம். வீட்டிற்குள் யாராவது வரும்போதுதான் அவர்கள் அதைத் திறந்து வைப்பர். ஸ்விட்சைப் போட்ட அடுத்த நொடி எரியும் விளக்குகளுக்குப் பழகிவிட்ட நமக்கு இந்த உருவகம் சற்று தூரமாகவே இருக்கிறது. ஆனால், பொருள் மிகவும் எளிது. ஒளி பிறருக்குப் பயன்பட வேண்டும்.

ஆக,

உப்பு தன்னுடைய உவர்ப்புத்தன்மையாலும், ஒளி தன்னுடைய ஒளிரும் தன்மையாலும் மற்றவர்களின் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும். அப்படிப் பயன்பதருவதற்கான ஒரு வழியே நற்செயல்கள்.

இந்நற்செயல்கள் எவை என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழிபாடு சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கிக்கிடந்து வாழ்வுசார் செயல்களை மறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு நோன்பு பற்றிய புதிய வரையறையைத் தருகின்றார் எசாயா. நோன்பு என்றால் என்ன? பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்க இடமில்லாதவர்களுக்குத் தங்குவதற்கு இடம் தருவது, ஆடையற்றோரை உடுத்துவது, இனத்தாருக்கு உடனிருப்பது. இத்தகைய நோன்பை மேற்கொள்பவர்கள் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொள்வர். மேலும், உன்னிடம் இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டி குற்றம் சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்கு ஒருவர் தன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்தால் இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இவை இஸ்ரயேல் மக்களின் இயலாமைகளாக, குறைகளாக இருந்தவை. இவற்றைக் களைய அவர்களை அழைக்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:1-5) புனித பவுல், தான் கொரிந்து நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது தன்னிடமிருந்த உணர்வையும் மனப்பாங்கையும் பதிவுசெய்கின்றார்: நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்தேன். இப்படிப்பட்ட நிலையில் நற்செய்தி அறிவத்ததுதான் பவுலின் நற்செயல். இந்நற்செயலாலேயே இவர் ஒளிர்கின்றார்.

இன்று நாம் மனிதர்முன் எப்படி ஒளிர்வது?

அ. நற்செயல்கள் செய்வதால்

எசாயா இறைவாக்கினர் முன்வைக்கும் பிறரன்புச் செயல்கள் வழியாக.

ஆ. நற்செய்தி அறிவிப்பதால்

பவுல் போல தன்னையே இறைவனுக்கு சரணாகதியாக்கி அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது.

இ. கலப்பதாலும் கடந்து நிற்பதாலும்

உப்பு தன்னையே அழித்து, மறைத்து, தன் இயல்பை இழந்து உணவோடு கலக்கும்போது சுவை தருகிறது. தனித்து நிற்றலில் அல்ல, மாறாக, கலந்துவிடுவதில்தான் உப்பின் பயன்பாடு இருக்கிறது. ஒளி தன் இருப்பைவிட்டு கடந்து நிற்றால்தான் மற்றவர்களுக்குப் பயன்தர முடியும்.

இப்படி வாழ்வதால் நமக்கு மன அழுத்தம் கூடிவிடாதா? எந்நேரமும் நாம் ஏன் பயன்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்? நாம் என்ன பயன்பாட்டுப் பொருள்களா? நாம் என்ன கால்நடைகளா? இப்படிப்பட்ட கேள்விகளால் எழும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து நாம் எப்படி விடுபவது?

நம்முடைய செயல்களால் இறைவன் அதாவது நம்முடைய விண்ணகத்தந்தை மாட்சி பெற வேண்டும். ஒரு குழந்தையின் செயலைக் கண்டு அதன் தாயையும் தந்தையையும் பாராட்டுவதுபோல இறைவன் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், சீடத்துவம் என்னும் உவர்ப்புத்தன்மையின் ஊற்றும், ஒளிரும்தன்மையின் ஊற்றும் அவரே. அவருக்கு அஞ்சிநடப்போர் இருளிலும் ஒளியென மிளிர்வர் (திபா 112) என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல்.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

ஓர் அரசன் தன் மூன்று மகன்களையும் அழைத்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்று கேட்டார். 'உங்களை மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன்' என்றான் முதல் மகன், இரண்டாவது மகன், 'உங்களைப் பொன்னைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனோ, 'உங்களை உப்பைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனின் பதிலைக் கேட்டவுடன் அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. இதையறிந்த சமையற்காரன் அரசனுக்கு உப்பு போடாமல் சமையல் செய்து வைத்தான். உப்பில்லா உணவைச் சுவைத்த அரசன் கோபத்தோடு சமையற்காரனைக் கூப்பிட்டான். அப்போது மூன்றாம் மகன், அப்பா! உப்பில்லா உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள். என் வாழ்வுக்குச் சுவையூட்டி, வழிகாட்டும் ஒளியாக மேன்மைப்படுத்துகிறீர்கள் என்று சொன்னவுடன் அரசன் உப்பின் தன்மையை உணர்ந்து கொண்டான்.

இன்றைய வார்த்தை வழிபாடு நாம் அனைவரும் பிறருக்குப் பயன் தரக்கூடிய சாரமுள்ள உப்பாக, ஒளி கொடுக்கும் விளக்காக வாழ வலியுறுத்துகிறது. விழிகளுக்கு ஒளியாக, உணவுக்கு உப்பாக, உலகிற்கு நாம் மாற வேண்டும். உண்மையை அறிந்து, தீமைகளைக் களைந்து நன்மைகளில் மிளிர வேண்டும். உப்பு தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும்போதுதான் அதன் பயன் முழு நிறைவடைகிறது. மெழுகுதிரி தன்னையே கரைக்கும்போதுதான் ஒளி தர முடிகிறது. ஒருவரை கிறிஸ்துவின் சீடராக்குவது அவருடைய சாரமுள்ள சான்று வாழ்வுதான். இதனால்தான் இயேசு மனித வாழ்வை உப்புக்கும் ஒளிக்கும் ஒப்பிடுகின்றார். இருளின் நடுவே உன் ஒளி உதிப்பதாக (எசா. 58:10).

உப்புக் கரைந்தால்தான் சுவை. மெழுகு உருகினால்தான் ஒளி. சந்தனம் வெட்டப்பட்டால்தான் மணம். ஆம்! மலராக மணம் வீசவும், சந்தனமாக மணக்கவும், நாம் நம்மையே இழக்காமல் கொடுக்க முடியாது. கொடுக்காமல் மன நிறைவோடு வாழவும் முடியாது. சாரமுள்ள உப்பாக, மற்றவர்களின் வாழ்வுக்கு ஒளியாக மாறும்போதுதான் நாம் மேன்மையடைகிறோம். உப்பானது பாதுகாக்கும் தன்மை கொண்டது. திருடுவதற்கும் கொல்லுவதற்கும், அழிப்பதற்குமின்றி திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு வந்தேன் (1யோவா 10:10) என்ற இயேசுவின் அமுதமொழி நமக்கும் உரியதாகும்.

உப்பானது மருந்தாகும் தன்மை கொண்டது. நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அது கலக்கப்படுகிறது. நமது வாழ்வும், சொல்லும், செயலும் மற்றவரைக் குணமாக்க வேண்டும் (1பேதுரு 2:24).

உப்பானது ருசி தரக்கூடியது. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி. "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திபா. 34:8) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் சுவைமிக்க வாழ்வை வாழ வேண்டும்.

உப்பானது வெள்ளையானது. கருப்பான கடல் நீரானது உப்பாக மாறிய பின் வெண்ணிறமாகிறதுபோல திருமுழுக்கால் நாம் புனிதம் (1பேதுரு 1: 15) பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும்.

சாரமுள்ள மனித வாழ்வு கிறிஸ்துவைப்போல சுடர்விட்டு எரிய வேண்டும். எசாயாவைப் போல நாம் வழிகாட்டும் ஒளியாக வாழ முன் வருவோம். இறையரசுக் கனவை நனவாக்கப் புறப்படுவோம்.
 
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

நான் நலம் பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒருவனுக்கு இறைவனிடமிருந்து நலம் கிடைக்க, நீதி அவன்முன் நடக்க, ஆண்டவருடைய மகிமை அவனைப் பின்தொடர, அவனுடைய கூக்குரல் இறைவனால் கேட்கப்பட, அவன் இருளின் நடுவே கலங்கரைத் தீபமாய்த் திகழ, அவன் ஏழை எளியவரின் அடிப்படைத் தேவைகளான உணவு. உடை, உறைவிடம், மதிப்பு ஆகிய நான்கினையும் அவர்களுக்களித்து, துன்புறுகின்ற அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் குறிப்பிடுகின்றார். சுருக்கமாகச் சொன்னால் கொடுப்பவருக்குக் கொடுக்கப்படும் என்கின்றது இன்றைய முதல் வாசகம். கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன.

1. உள்ளதிலிருந்து கொடுத்தல் (லூக் 19:1-10).
2.உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற் 12:41-44).
3.உள்ளதையும் கொடுத்து. உயிரையும் கொடுத்தல் (யோவா 19:28-30).

நாம் நலம்பெற என்ன செய்ய வேண்டும்?

முன்னொரு காலத்தில் ஓர் ஊர்மக்கள், அவ்வூரில் உள்ள மூன்று பணக்காரர்களில் யார் பெரியவன் என்பதை அறிந்துகொள்ள, ஒரே ஆளை மூன்று பணக்காரர்களிடமும் உதவி கேட்க அனுப்பினார்கள். முதல் பணக்காரன் உதவி கேட்டவனைப் பார்த்து : இந்த வீட்டிலிருந்து நீ எதை வேண்டுமானாலும் எடுத்துப்போகலாம் என்றான். இரண்டவாது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துப்போ என்றான். மூன்றாவது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொள். ஆனால் உடனே போய்விடாதே, சற்றுநேரம் பொறுத்திரு என்று சொல்லிவிட்டுத் தனது வேலைக்காரனை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றான்.

காத்திருந்தவன். வேலைக்காரன் மட்டும் திரும்பி வருவதைக் கண்டான். வேலைக்காரன் உதவிகேட்டு வந்தவனைப் பார்த்து. இதோ, இந்தப் பொற்காசுகளையும் என் தலைவன் உன்னிடம் கொடுக்கச் சொன்னார். உனக்காகத் தம்மையே அடிமையாக விற்றுவிட்டார் என்றான். மூன்று பணக்காரர்களில் மூன்றாவது பணக்காரன்தான் பெரியவன், உயர்ந்தவன், உன்னதமானவன், சிறந்தவன் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தன்னிடம் உள்ளதை தனது சகோதர, சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ளும் எவரையும் இறைவன் உயர்த்தத் தவறுவதில்லை. இரண்டாம் வாசகம் குறிப்பிடுவது போல புனித பவுலடிகளார் சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை என்கின்றார். சிலுவை வெறுமையின் சின்னம். ஏழ்மையின் சின்னம், அன்பின் சின்னம், கொடுத்தலின் சின்னம். சிலுவையை மட்டுமே விரும்பினேன் என்று கூறுவதின் மூலம், அவரிடமிருந்த அனைத்தையும் அயலாருக்கு அளித்து விட்டதாகப் புனித பவுலடிகளார் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட பவுலடியாருக்கு இறைவன் அளித்த பரிசு என்ன என்பதை நாமறிவோம். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் முதல் இயலில் முதல் இறைவாக்கியத்தில் புனித பவுலடிகளார் தன்னை இயேசுவின் திருத்தூதர் என்று அழைத்துக்கொள்கின்றார். ஆம். இயேசுவால் அழைக்கப்பட்டவர்களுக்கு உரிய திருநாமம் புனித பவுலடியாருக்கும் இறைவனால் அளிக்கப்பட்டது. அது அவர் வாழ்ந்த பற்றற்ற வாழ்வுக்கு இறைவன் அளித்த மாபெரும் பரிசு.

உப்பு உணவிற்குள் கரைந்து, கலந்து, அதற்குச் சுவை ஊட்டுகின்றது; உணவைப் பாதுகாக்கின்றது. எந்த உணவோடு அது உறவாடுகின்றதோ, அந்த உணவிலிருந்து அது எதையும் பெறுவதில்லை! அப்படித்தான் ஒளியும் எதையும் பெறாமல் உலகிற்கு வெளிச்சத்தை அளிக்கின்றது; மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றது. இப்படியே நாமும் வாழவேண்டுமென்பது இயேசுவின் அவா. அவரின் அவாவை நிறைவேற்றி, இறைவனின் நிறையருளைப் பெற்று நலமுடன் வாழ்வோமாக!
மேலும் அறிவோம் :

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் : 212)

பொருள்: ஒருவன் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தும் உதவி பெறத் தகுதியுடைய சான்றோர் வளர்ச்சிக்குத் துணை புரிவதற்காகவே அமையும்.
 
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஒரு தாத்தா தன் பேரனிடம், "பேராண்டி! என் நாக்குச் செத்துப் போய்விட்டது" என்றதற்கு பேரன் அவரிடம், "செத்துப்போன நாக்கைப் புதைத்தீர்களா? எரித்தீர்களா?" என்று கேட்டான்,

நாக்குச் செத்துப்போய்விட்டது என்றால், நாக்கு சுவை இழந்துவிட்டது என்று பொருள். உணவுக்குச் சுவையூட்டுவது உப்பு. 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உணவைச் சுவைத்து உண்ணக் கற்றுக்கொண்டுள்ள நாம். வாழ்வைச் சுவைத்து வாழ ஏன் கற்றுக்கொள்ளவில்லை? சுவையற்ற வாழ்வுக்குச் சுவையூட்ட வேண்டியவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்:" நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" (மத் 5:13).

உப்பு தன்னை உணவுப் பொருளுடன் கரைத்துக்கொண்டு, தன்னுருவை இழந்து உணவுக்குச் சுவை கொடுக்கிறது. அவ்வாறே கிறிஸ்தவர்கள் எங்கே. எந்தப் பண்பாட்டில் வாழ்கின்றனரோ அங்கே அந்தப் பண்பாட்டில் தங்களையே கரைத்துக்கொண்டு மக்களுக்கும் பண்பாட்டிற்கும் சுவையூட்ட வேண்டும். உப்பானது பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. அவ்வாறே சிற்றின்பம், நுகர்வு கலாச்சாரம், கட்டுப்பாடின்மை ஆகிய தீமைகளால் இவ்வுலகம் கெட்டுப்போகாமல் அதைப் பாதுகாக்க. வேண்டியதும் கிறிஸ்தவர்களுடைய கடமையாகும்.

உப்பு ஞானத்தைக் குறிக்கிறது. ஞானத்தை பசு ஞானம், பதி ஞானம் என்று இரு வகையாகக் பிரிக்கலாம். பசு ஞானம் என்பது. இவ்வுலகைப் பற்றிய அறிவு; பதி ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. இன்றைய அதி நவீன உலகில் அறிவு வளர்ந்த அளவுக்கு ஆன்மிகம் வளரவில்லை. பக்தி மார்க்கம் காணாமற் போய்விட்டது; பண மார்க்கம் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்நிலையில் கிறிஸ்துவின் சீடர்கள் உலகிற்கு உண்மை ஞானத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் நம் வாழ்வில் கருப்பொருளாக, மையமாக அமைய வேண்டும்; மற்றவை அனைத்தும் இரண்டாம் நிலையில் வைக்கப்பட வேண்டும். இதுவே உண்மையான ஞானம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்; நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே (1 கொரி 2:5), அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: இவ்வுலகம் மடமை என்று கருதும் சிலுவையில் அறையுண்ட மெசியாவே கடவுளுடைய வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

கடவுள் தமது இரக்கத்தை அனைவர்க்கும் காட்டுகிறார். அவர் தமது கதிரவனை நல்லோர்மேலும் தீயோர்மேலும் உதிக்கச் செய்கிறார். அவ்வாறே தேர்மையுள்ளோர் மேலும் நேர்மை அற்றோர்மேலும் தமது மழையைப் பொழிகிறார் (மத் 5:45). கடவுளைப்போல, நாமும் எவரையும் நமது அன்பு வட்டத்தில் இருந்து ஒதுக்காமல் அனைவரையும், பகைவரையும் அன்புசெய்து. நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டும் பக்குவம் அடையும்போது (மத் 5:43) நாமும் அவரைப்போல் நிறைவுடையோராய் உயர்கிறோம். "சிகரத்தை நோக்கிச் செல்வோமா?"

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார்: "பழிக்கும்பழி வாங்க வேண்டாம்" (லேவி 19:18); நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். உங்கள் வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத் 5:39).

1981-ஆம் ஆண்டு மே திங்கள் 13-ஆம் நாள் முகமது அலி ஆஃகா என்ற இளைஞர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைத் துப்பாக்கியால் சுட்டார். இதே ஆண்டு டிசம்பர் திங்கள் திருத்தந்தை தம்மைக் கொல்ல முயற்சி எடுத்த அந்த நபரைச் சிறைச்சாலையில் சந்தித்து தமது மன்னிப்பை அவருக்கு வெளிப்படுத்தி, அதன் மூலம் வானகத் தந்தையின் இரக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கணவர் தம் மனைவியின் காரில் சென்றார். கண் மண் தெரியாமல் அவர் கார் ஓட்டுவதைக் கண்ட அவரது மனைவி அவரிடம், "கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்க" என்று கேட்டார். கணவர் அவரிடம், "இது என் கார்; அதை எப்படியும் ஓட்டுவேன். அதைப்பற்றிக் கேட்க நீயார்?" என்று கேட்டார். வீடு திரும்பியதும் மனைவி தோசை சுட்டு கணவருக்குப் பரிமாறினார். தோசையெல்லாம் கறுப்பாக இருந்தது. கணவர் மனைவியிடம், "என்ன இது! தோசையெலாம் கறுப்பாக இருக்கிறது" என்று கேட்டதற்கு, மனைவி அவரிடம், "தோசை என் தோசை; அதை எப்படியும் சுடுவேன்: அதைப்பற்றிக் கேட்பதற்கு நீயார்?" என்று பதிலடி கொடுத்தார். இவ்வாறு ஒருவர் மற்றவரைப் பழிதீர்த்துக்கொள்ள ஆரம்பித்தால், வீடு வீடாக இருக்காது; அது கடுகாடாகக் காட்சியளிக்கும், புனிதம் என்பது அன்பின் நிறைவு. திருச்சட்டத்தின் நிறைவு என்ன? திருத்தூதர் பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13:10). நமது அன்பு எவரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அன்பாக அமையும்போது, நாம் புனிதராகிறோம். கடவுளுக்கு நிகராகின்றோம்.

பூமியானது தன்னை மண்வெட்டி கொண்டு தோண்டும் விவசாயியைத் தாங்குவதோடு அவருக்கு வேண்டிய உணவையும் விளைவிக்கின்றது. அவ்வாறே தீமை செய்வோரைப் பொறுத்துக்கொள்வதோடு அவருக்கு நன்மை செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தவை" (குறள் 151).

நமது இலக்கு 'சிகரத்தை நோக்கி' என்பதை நினைவில் நிறுத்தி, வானகத் தந்தையைப்போல் இரக்கம் உள்ளவர்களாய்த் திகழ்ந்து, கடவுளைப்போல் நிறைவுள்ளவராய் மாறுவோம்.
 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
அறத்தீபம் ஏந்திப் புறப்படு

பார்வையற்ற ஒருவர் தன் நண்பரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்ப இருந்தார். இரவு நேரம் நெருங்கியதால் அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால் அவர் பிடிவாதமாகத் தன் வீடு திரும்ப முனைந்திருந்தார். ஆகவே எரியும் கண்ணாடிக் கூட்டு விளக்கு ஒன்றை அவரிடம் கொடுத்தனர். அதற்கு அவர் "ஒளியும் இருளும் எனக்கு ஒன்றுதான். எனவே விளக்கு வேண்டாம்" என்று சொன்னார். அப்பொழுது அவருடைய நண்பர் "விளக்கைக் கையில் வைத்திருங்கள். உங்களுக்குத் தேவையில்லை என்றாலும் எதிரில் வருகிறவர்களுக்குத் தேவைப்படும்" என்றார். விழி இழந்த அவர் விளக்கை ஏந்திக் கொண்டு வழக்கப்படி நடந்தார். சிறிது தூரம் சென்றபின் எதிரே வந்த ஒருவர் இவர்மேல் மோதி நின்றார். "என்ன, வழிமேல் ஒதுங்கிப் போகக் கூடாதா? என் கையிலிருக்கிற விளக்கு உனக்குத் தெரியவில்லையா?" என்று கோபமாகப் பேச, வழிப்போக்கர் "உன் கையில் உள்ள விளக்கு அணைந்துவிட்டது உனக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டபோதுதான் தன் விளக்கு அணைந்து போன தன்நிலை புரிந்தது.

இருண்ட வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு ஒளியாய்த் திகழவும் சாரமற்ற வாழ்க்கை நடத்துவோருக்கு உப்பாக விளங்கவும் அழைக்கப்படுகிற நாம் பல சமயங்களிலும் சுடர்மங்கிய விளக்காகவும், சுவை குன்றிய உப்பாகவும் இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்ற சிறு நிகழ்வு அது. கருத்தாழமிக்க செய்தியை வைரமுத்து வழங்குகிறார்:

"எரிகின்ற தீபம் ஒளி தருகின்ற போதும்
தீபத்தின் அடியில் இருள் வட்டம் போடும்
தீபத்திற்கே இரண்டு முகங்கள் என்றால்
மனிதர்க்கு இங்கு எத்தனையோ?"

நீங்கள் உலகின் ஒளி. பூமியின் உப்பு என்று கூறி கிறிஸ்தவனுக்கான பண்பையும், பணியையும் நினைவூட்டுகிறார் இயேசு. இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஒளி விளக்காகச் சுடர்விட ஒவ்வொரு கிறிஸ்தவரையும் அதுபோல் சமூக மாற்றச் சக்தியாகச் செயலாற்ற ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தையும் அழைக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கு இரண்டு சேவைத்தளங்கள்: 1. நேரடி நற்செய்தி அறிவிப்பு: 2. சான்று பகரும் சாட்சிய வாழ்வு. இரண்டாவது வகையான சாட்சிய வாழ்வுக்கு, பிறர் வாழ்வில் நாம் ஒளியாகிட, ஒளியேற்றிட, உப்பாகிட, சுவையூட்டிட அழைக்கிறது இன்றைய வழிபாடு.

பிறர் கேட்கச் சொல்லும் வார்த்தைகள் அல்ல, பிறர் பார்க்க வாழும் வாழ்க்கையே நற்செய்திப் பணி.

ஆல்பெர்ட் சுவைட்சர் ஒரு தலை சிறந்த மதப்போதகர். அவர் ஒரு சமயம் ஓர் ஊரில் மறையுரை ஆற்ற வந்தார். அவர் இரயிலிலிருந்து இறங்கியதும் அவரை மாலையுடன் வரவேற்றனர். அங்கிருந்த அனைவரும் அவரது வருகையால் பெருமைப்படுவதாகக் கூறினர். பேசிக்கொண்டே வந்த ஆல்பெர்ட் சுவைட்சர் தூரத்தில் எதையோ பார்த்தவராய், "இதோ வந்துவிடுகிறேன். மன்னித்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றார். எல்லோரும் ஆவலுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஒரு கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்து, ஓடிச்சென்று அவற்றைத் தானே சுமந்து வந்து மூதாட்டியை இரயிலேற்றிவிட்டார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "இப்போதுதான் முதன்முறையாக ஒரு மறையுரை நடந்து போவதைப் பார்க்கிறேன்" என்று சொன்னாராம்.

சாரம் இழந்த உப்பு உப்பல்ல. சான்று பகராத வாழ்வு வாழ்வல்ல. கடவுளை நம்பாதவர்கள் இருக்கக் காரணம் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லாரும் கடவுள் இருப்பது போல வாழ்ந்தால் உலகில் நாத்திகமே இருக்காது. "இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?" (2 கொரி 6:14).

"அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்' (I யோ. 1:7) ஒளியின் பண்புகள் நம்மிடம் உள்ளனவா? ஒளி தூய்மையானது. இருளோடு தொடர்பில்லாதது. ஒளியைக் கண்டதும் இருள் மறைந்து விடும். ஒளியில் அனைத்தும் தெளிவுபடும். போலிகளைத் தோலுரித்துக் காட்டும்.

"கடவுள் ஒளியாக இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை" (1யோ.1:5). "ஆரறிவார் அண்ணல் பெருமையை ... பேர் அறியாப் பெருஞ்சுடர்" என்று வியக்கிறார் திருமூலர். தந்தையான கடவுளின் அருள் ஒளி இறைமகன் இயேசுவில் விளங்கியது. "அவர் ஒருவரே அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்" (1 திமோ. 6:16). "நானே உலகின் ஒளி" (யோ. 8:12) என்று இயேசுவும் அதனை உறுதி செய்கிறார். தூய ஆவி கூடத் தீப்பிழம்பாகத் தானே திருத்தூதர்களின் மேல் இறங்கினார்! மூவொரு கடவுளே ஒளியின் வெளிப்பாடு! அதனால்தான் "ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?" (தி.பா. 21:1) என்று திருப்பாடல் ஆசிரியரின் மனத்தில் இத்துணைத் தெம்பும் துணிவும்!

ஒளியான இயேசுவுக்கு நாம் சாட்சிகள் என்பதை உணர்த்தவே "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது" (மத். 5:14) என்கிறார் இயேசு. கடமையாக அல்ல இயல்பாகத் திருமுழுக்கில் "கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக் கொள்" என்று கூறி எரியும் திரி கொடுக்கப்படுகிறது.

"உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி" ( 1 பேதுரு 2:9).

"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது" (எபேசி. 5:8-9).

"இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!" (உரோமை 13:12-13).

நான் என்ன சூரியனாகச் சுடர் வீசமுடியுமா என்று தயங்காதே. A lantern can do what the sun can never do - shine at night' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. சூரியனால் இரவில் முடியாத ஒன்றைச் சின்னஞ்சிறு அகல் விளக்கு சாத்தியமாக்கும் - இரவில் கூட ஒளிரும்.

வாழ்க்கை என்பது சிறு மெழுகுவர்த்தி அல்ல. எனக்கு அது ஓர் அற்புதத் தீபம். அதைத் தற்சமயம் கையில் பிடித்திருக்கும் நான் வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைப்பதற்குள்ளாக, எவ்வளவு பிரகாசமாக எரியச் செய்ய முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக எரியச் செய்ய விரும்புகிறேன்.

புறப்படடா கத்தோலிக்கா அறத்தீபம் ஏந்திக் கையில்
புறப்படு நீ எட்டுத்திக்கும் புதுவிளக்கு ஏற்றி வைக்க
அவனியின் உப்பு என்றால் அகத்தினுள் அழியலாமோ?
குவலயத் தீபம் என்றால் குடவிளக்கு ஆகலாமோ?
பவ இருள் வெள்ளமாகிப் பாயுது வேகமாக
தவ நிறை மறைப்புதல்வன் சவம் எனக் கிடக்கலாமோ?

"பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்... அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்போது உன் ஒளி விடியல்போல் எழும்" (எசாயா 58:7-8).

இருளின் நடுவே ஒளியாக வாழ்வோம். இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். மனித மாண்பு விளங்க உழைப்பவர் எல்லோரும் ஒளியே!
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
உப்பாய் ஒளியாய் இருப்பதில் சவால்கள்

சிறுமி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாமல் திருப்பலியில் கலந்துகொண்டார். திருப்பலி நிகழ்ந்த கோவிலில், நல்லாயனான இயேசுவின் அழகிய உருவம், வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி சன்னலில் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும், திருப்பலி நிகழ்த்திவந்த அருள்பணியாளர் நல்ல உயரம் கொண்டவர் என்பதால், அவர் மறையுரை வழங்கும் இடத்திற்கு வந்ததும், அவருக்குப்பின் இருந்த நல்லாயன் உருவப்படம் சிறுமியின் பார்வைக்கு மறைக்கப்படும். ஒரு வாரம், திருப்பலி நிகழ்த்த வந்தவர் உயரம் குறைவானவராக இருந்தார். அவர், மறையுரை ஆற்ற வந்தபோது, நல்லாயன் உருவம் சிறுமியின் பார்வையிலிருந்து மறைக்கப்படவில்லை. அன்று, திருப்பலி முடிந்தபின் சிறுமி தன் தாயிடம், "அம்மா, ஒவ்வொரு வாரமும் நான் இயேசுவை பார்க்கமுடியாதவாறு மறைத்து நிற்கும் அந்த சாமியார் இந்த வாரம் வரலையா?" என்று கேட்டார்.

இந்த நிகழ்வை நாம் ஓர் உவமையாக எண்ணிப் பார்க்கலாம். நற்செய்தியை போதிப்பவர்கள், தங்கள் உருவத்தால் மட்டுமல்ல, தங்கள் சொல் திறமையாலும், இயேசுவின் உருவத்தை, அவரது நற்செய்தியை மறைக்கும் ஆபத்து உள்ளது என்பதை அந்தச் சிறுமியின் கேள்வி நமக்கு உணர்த்துகிறது.

நற்செய்தியையும், அதன் மையமான இயேசுவையும், அதிலும் குறிப்பாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் போதிப்பதற்கு சொல்வன்மை தேவையில்லை என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் - 1 கொரிந்தியர் 2:1-5 - புனித பவுல் அடியார் கூறுகிறார். சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. (1 கொரி. 2:1-2)

அறிவார்ந்த விளக்கங்களிலும், வாதத் திறமையிலும் சிறந்த பரிசேயரான பவுல் அடியார், தன் திறமைகளை பயன்படுத்தி நற்செய்தியை பகிர்வதற்குப் பதில், உண்மையான இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மக்களுக்கு எடுத்துரைத்தார். இயேசுவின் சீடராக அவரோடு வாழும் வாய்ப்பு இல்லாதபோதும், பவுல் அடியார், இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து, அவரது எளிமையான, தெளிவான போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அதை மக்களிடம் எடுத்துச் செல்வதில் எளிமையைக் கடைபிடித்தார்.

அதேவண்ணம், இயேசுவின் போதனைகளில் வெளிப்பட்ட எளிமை, ஏனைய சீடர்களின் உள்ளங்களிலும் ஆழமாக இடம்பெற்றன. கதை வடிவில் இயேசு கூறிய உவமைகளும், அவர் பயன்படுத்திய உருவகங்களும் சீடர்களின் நினைவுகளில் ஆழப் பதிந்தன. அந்நினைவுகளிலிருந்து உருவான நான்கு நற்செய்திகள், இவ்வுவமைகளையும், உருவகங்களையும் 20 நூற்றாண்டுகளாக நமக்கு வழங்கிவருகின்றன. இயேசு பயன்படுத்திய பல உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் அவர் சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.

உருவகங்களின் உதவியுடன் இயேசு கூறிய உண்மைகளை, புனித மத்தேயு, தனது நற்செய்தியின் 5, 6, மற்றும் 7 ஆகிய மூன்று பிரிவுகளில் தொகுத்து வழங்கியுள்ளார். இப்பகுதியை, நாம், மலைப்பொழிவு என்றழைக்கிறோம். மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக விளங்கும் பேறுபெற்றோர் கூற்றுகளை சென்ற ஞாயிறு நற்செய்தியாகக் கேட்டோம். இன்றும், இனிவரும் இரு ஞாயிறன்றும், இம்மலைப்பொழிவின் சில பகுதிகளை, நாம் நற்செய்தியாக செவிமடுக்கவிருக்கிறோம். இம்மூன்று வாரங்களைத் தொடர்ந்து நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு, இயேசுவின் மலைப்பொழிவு, ஏற்றதொரு தயாரிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில், - மத்தேயு 5:13-16 - இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) என்ற உருவகங்கள் வழியே, ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை இயேசு நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். உப்பும், விளக்கும் இல்லாத இல்லங்கள் இல்லை. மதம், இனம், ஏழை, செல்வந்தர், என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா இல்லங்களிலும் பயன்படுவது, உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள முயற்சி.

உப்பும், ஒளியும் எவ்விதம் உருவாகின்றன என்பதைச் சிந்திக்கும்போது, அவற்றை, தூய்மைக்கு அடையாளங்களாகப் புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், நாம் ஏற்றிவைக்கும் ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. நாம் ஏற்றிவைக்கும் மெழுகு, கறுப்பானாலும், வெள்ளையானாலும் சரி, நாம் ஊற்றிவைக்கும் எண்ணெய், சுத்தமானதாகவோ, மாசடைந்ததாகவோ இருந்தாலும் சரி, ஏற்றப்பட்ட சுடர், எப்போதும் தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள் என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும் என விழைகிறார்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பின் பண்புகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், பின்னணியில் இருந்து செயலாற்றுவது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையில்லை. ஆனால், உப்பு மட்டுமே உணவாக முடியாது. உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பு, ஓரு குறிப்பட்ட அளவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். உப்பு இல்லாத உணவு குப்பையிலே என்பதை அறிவோம். அதேபோல், உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட உணவும், குப்பையிலே. உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு, அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர், மண்ணுலலகிற்கு உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?

அவர்கள், உலகிற்குத் தேவையானவர்கள் என்றாலும், பின்னணியில் இருந்து செயலாற்றுகிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை. உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும், உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. (மத்தேயு 5:13) உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பு, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப்பொருட்கள் கலந்தால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளால் மாசடைந்தால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் மற்றுமோர் எண்ணமும் எழுகிறது. உணவுக்கு அவசியமாகத் தேவைப்படும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து, உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில், எத்தனையோ மனிதர்கள், இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல், உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள், ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள், மனித சமுதாயத்தால் மிதிக்கப்படுகிறார்கள்.

உலகெங்கும், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலகோடி மக்களை, இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல், ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள், ஒரே ஒரு நாள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை என்னவாகும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக உலக அரங்கில் இந்தியா பறைசாற்றி வந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டிலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி, தங்கள் கரங்களால் கழிவுகளை அகற்றும் மனிதர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். இவர்களில் பலர் இப்பணியில் ஈடுபடும்போது, மூச்சுத்திணறி மரணம் அடைவதையும் பலமுறை நாம் செய்திகளாக வாசிக்கிறோம். 'மனிதரால் மிதிபடும் உப்பாக' விளங்கும் இவர்களுக்காக, இவர்களுடைய பணியில் மாற்றங்கள் உருவாக நாம் இறைவேண்டல் செய்வது அவசியம்.

அதேபோல், உலகெங்கும் உழைக்கும் உழவர்கள், சேற்றில் கைவைக்கவில்லையெனில் நாம் சோற்றில் கைவைக்க முடியாது என்பதை அறிவோம். உழவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்ன என்பதையும் நாம் வேதனையுடன் உணர்கிறோம். மனிதர்களால் அடிக்கடி மறக்கப்படும் உழவர்கள், மனிதர்களை மறந்துவிட்டால், இவ்வுலகம் என்னாகும்? உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை மக்களும், அரசுகளும் வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ஒளி என்ற சொல்லைக் கேட்டதும், இருள் என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல், சுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்கிறது. மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.

உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழமுடியும் என்பதை, இறைவன், இன்றைய முதல் வாசகத்தில் - எசாயா 58:7-10 - நமக்கு ஆலோசனைகளாக தருகின்றார். அவர் தரும் ஆலோசனைகளுக்குப் பின்னணியாக, உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அவர், இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். விரைவில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்தில், நோன்பு பற்றிய சிந்தனைகள் நமக்குள் எழும் இத்தருணத்தில், "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது?" (எசாயா 58:5) என்ற கேள்வியை, இறைவன், நமக்கு முன் வைக்கிறார். இதைத் தொடர்ந்து, உண்மையான நோன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இறைவன் வரையறுப்பது, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது: எசாயா 58:7

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

இத்தகைய நோன்பு, நம்மை, இவ்வுலகில், ஒளியாக வாழச்செய்யும் என்ற உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்: எசாயா 58: 8-10

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும் உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன்தர முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் அவ்வப்போது கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும் என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, பலமுறை தன் உரைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உப்புக் குப்பிகளுக்குள் உறங்கி சுகம் காணாமல், மரக்காலுக்குக் கீழ் மறைந்துகொள்ளாமல், உலக மக்கள் வாழ்வில் சுவையும், ஒளியும் சேர்க்க, நாம் உப்பாக, ஒளியாக செயலாற்றும் துணிவை இறைவன் நமக்கு வழங்குவாராக! ஆற்றும் செயல்களில், நம்மையே மையப்படுத்தாமல், பின்னணியில் இருந்து கிறிஸ்துவின் நற்செய்திக்கு சுவையும், ஒளியும் வழங்கும் உப்பாக, ஒளியாக வாழும் வரங்களை இறைவன் நமக்கு தருவாராக! திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இஸ்ரயேலை நோக்கி, "உன் ஒளி விடியல்போல் எழும் (வச. 8) என்றும், "இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல்போல் ஆகும் (வச. 10) எனக் கூறி இவைகளை ஒளிர்க்கின்றார். நற்செய்தியில் நமதாண்டவர் உப்பு, ஒளி உருவத்தைப் பயன் படுத்துகின்றார். இந்தப் பின்னணியில் இன்றைய நற்செய்திதரும் செய்திகளைக் காண்போம். இன்றைய நற்செய்தி இயேசுவின் மலைப்பொழிவின் அங்கமாகவும், கடந்தவார நற்செய்தியின் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது. வச 11 ல் காணப்பட்ட முன்னிலையிலேயே இப்பகுதி தொடர்கிறது. எனவே இன்றைய நற்செய்திக்கான பின்னணியை கடந்தவார விளக்கத்தில் காண்க. இனி, இன்றைய நற்செய்தியில் உப்பு, ஒளி உருவகம் வழி இயேசு தரும் செய்தியைக் காண்போம்.

1. உப்பு (மேலூம் காண். மாற் 9:49-50; லூக் 14:34-35)

உப்புஉணவில் சுவையேற்றுவதற்காகச் சேர்க்கப்படுகின்றது (காண். 2 அர 2:19-22 யோபு 6:6). இது உணவைப் பாதுகாக்கவும், தூய்மையாக்கவும், பலியின் ஓர் அங்கமாகவும் பயன்படுத்திகிறது (காண். லேவி 2:13; எசே 43:24). எனவே இயேசுவின் சீடர்கள் இவ்வுலகில் பிறரது வாழ்வில் சுவையேற்றுபவர்களாகவும்; நமது சமூக, கலாச்சாரத்தின் நிறக்கூறுகளையும், நல்ல பண்புகளையும் பாதுகாக்கவும்; சமூகத்திலும் சமயத்திலும் உள்ள மாசுகளையும் தீமைகளையும் தூய்மை யாக்குகின்றவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளனர்.


2. ஒளி (காண். மாற் 4:21; லூக் 8:16)

ஒளி உருவத்துடன் இயேசு 'மலைமேல் உள்ள நகர்' உருவகத்தையும் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஒரு விவிலியப்பின்னணியுடையுள்ளது. எசாவா இறை இவ்வாறு இறைவக்கு உரைக்கின்றார்: இறுதி நாட்களில் ஆண்டவரின் கோவில் அமைந்தள்ள மலை எல்லா மலைகளுக் குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லா குறிப்புகளுக் குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிக் சானை சாரையாய் வருவார்கள். . . யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் (எசா 2:2, 5). எனவே ஒளியும், மலைமேல் உள்ள ஊர் உருவகமும் இங்கு இணைத்துக் காணிக்கப்படுகின்றது. இது எருசலேமைக் குறிக்கும் ஏனெனில் அது மலைகளின்மேல் கட்டப்பட்டுள்ளது. எனவே இஸ்ரயேல் இனம் பிற இனத்தவர்க்கை ஒளியாக இருக்க, மற்றவர் களைத் தன்பால் ஈர்க்க அழைக்கப்பட்டுள்ளது. இதுதான் உள்ளயே இயேசுவுக்கு உள்ள கடமை. நற்செய்தியிலும் இயேசுவின் சீடர்களுக்கு இத்தகைய உலகின்கட் கடமை உள்ளது. இதை இயேசு இன்றைய நற்செய்தியில் மண்ண விற்கு உட்பட்டிருக்கிறீர்கள் (வ. 13), உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் (வ. 14) மனிதர் முன் ஒளிர்க (வ. 16) என்றும் சொல்லிவிடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார். எனவே இயேசுவின் சீடர்கள் தங்களின் நன்மைத் தனி, ஆற்றல், திறமை ஆகியவற்றை தமக்கென வைத்துக்கொண்டு உலகினின் தன்மைக்காக, ஈடேற்றத்திற்காகப் பயன்படுத்தக் வேண்டும் என்னும் கருத்தை மரக்காலுக்குள் வைக்கப்பட வைக்கப்படும் விளக்கின் உரு விளக்குகின்றார்.

3. எல்லா இனம் மக்களுக்கே

இயேசுவின் சீடர்கள் உப்பாகவும், ஒளியாகவும், மலைமேல் உள்ள ஊராகவும், விளக்குத் தண்டில்மீது விளக்காகவும் இருப்பதெல்லாம் மகிமைக்கும் அல்ல. மாறாக, இவை அனைத்தின் வழியமாக மக்கள், உங்கள் விண்ணகத் தந்தையை போற்றிப் புகழ்வார்கள் (வ.16). எனவே எல்லா, இறைவனின் அதிக மகிமைக்கே செய்யப்பட வேண்டும்.
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்கால - ஐந்தாம் ஞாயிறு
முதல் வாசகம் : எசா. 58 : 7 - 10

"நாங்கள் உண்ணா நோம்பிருந்தோம். நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஓடுக்கினோம்; நீர் அதை அறியாததேன்? (58: 3) என்று இறைவனிடம் முறையிட்ட போலி பக்தர்களுக்கு, உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்குகிறார் எசாயா.

உண்மையான நோன்பு

உண்ணவிரதம் சமயச் சடங்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இஸ்ரேயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமை வாழ்வு வாழ்ந்தபொழுது, அடிக்கடி நோன்பிருந்து விடுதலை தேடி 5-ஆம் மாதத்தில் இறைவனை வேண்டினர். மீண்டும் எருசலேம் திரும்பியபொழுது இப்பழக்கம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமா என்ற வினாவிற்கு செக்கரியா வாயிலாக இறைவன் விடையளிக்கிறார். நேர்மையான தீர்ப்பு, சகோதரர்களிடம் அன்பு, கைம்பெண்களையும் அனாதைகளையும் துன்புறுத்தாமை , உள்ளத்திலும் மற்றவர்களுக்குத் தீங்கு எண்ணாமை ஆகிய நன்னடத்தையையே நோன்பைவிடச் சிறந்தது (செக். 7 : 9 - 10). பிறகுக்கு அன்பு செய்யத் தூண்டாத சமய நோன்புகளை ஆமோஸ் வன்மையாகக் கண்டிக்கிறார். "வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளைத் தலைகளை மண்ணில் புழுதிட் மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நேறியைக் கெடுக்கின்றார்கள்" (ஆமோ. 2 : 7-8). "எரிபலிகளையையும் தானியப் படையுயகளையும் எனக்கு நீங்கள் செலுத்துகின்றாலும் நான் ஏற்கமாட்டேன்; கொழுத்த விலங்குகள நல்லுறவுப் பயினாக்கச் செலுத்துப்போந்து நான் ஏற்கும்படி பார்க்கமாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!" என்கிறா இறைவன் (ஆமோ. 5 : 22).

உண்ணாவைக் குறைத்து, உடமை வருத்தி நோன்பிர்க்குப் மனிதன் தன்னையே கட்டுப்படுத்தி நல்லாழ்வு நடத்தவேணும். உண்ம நோன்பினால் எஞ்சிய உணவைப் பசித்தவளுக்குக் கொடுக்க வேண்டும். சண்டைச் சச்சரவு போகுப் பிறரை அயியமாச அழித்தத் துண்புயத்த வார்கள், தலை குனிவினால், கோணியினால் உடுத்துவதால், சாம்பலில் அமர்வதனால் நோன்பின் பயனைப் பெறுவதில்லை (4 - 5). உலகப் பதிப்பை ஒருவன் விட்டொழித்தல், மொட்டை அடித்தல், சடை வளர்த்தல் ஆகிய புறக்கோலங்கள் தேவை இல்லை என்பது சான்றோர் வாக்கு. மழித்தலும் நீட்டலும் வேண்டா (குறள் 280 ; குறள் 274). நோன்பும் பிறர் அன்பும் இணைந்து செல்ல வேண்டும் என்பது ஆண்டவரின் போதனை! வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு. நீங்கள் புதினா, சோம்பு சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட் குகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது (மத் 23 : 23).
**அர்த்தமுள்ள சமயக் கடங்கு**

நீதியை அதுகட்குட் கேட்கும் திடனையையும், ஒப்புக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மட்டு பரிவும் பாசமும் கொண்ட நல்ல உள்ளங்களின் நோன்பையுமே இறைவன் ஏற்றுக்கொள்வார். இவர்களின் மனnot இறைவன் கேட்பார். இவர்களின் இறைவனது நண்பர்கள்.

அப்போது உன் ஒளி விடியல்போல் எழும்;
விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்;
உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;
ஆண்டவரின் மாட்சி உனக்கும் பின் சென்று காக்கும்.
அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;
அவர் உனக்குப் பதில் அளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்;
அவர் இதோ! நான் என மறுமொழி தருவார் (89).


என் நோன்பும், தவமும் அர்த்தமுள்ளதாக அமைந்துளளதா?

பசித்துப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து கொடு.
**இரண்டாம் வாசகம் : 1 கொரி. 2 : 1-5**

"கடவுளின் மடமை மனிதரின் ஞானத்தைவிட ஞானமிக்கது. கடவுளின் வலுவின்மை மனிதரின் வன்மையைவிட வன்மை மிக்கது என்ற கருத்து. இன்றைய வாசகத்தில் மேலும் தெளிவுறுத்தப்படுகிறது. ஏதென்ஸ் நகரில் தாம் கண்ட தோல்வியின் விளைவாக (திப 17:16-34) தத்துவம், தர்க்கம் இவை வழி மறையுண்மையை எடுத்துக் கூறுவதை விடுத்து சிலுவையின் போதனையை ஒளிவு மறைவின்றி, நேரடியாக தம் ஆற்றலற்ற நிலைமை வழி எடுத்துரைக்கின்றார் பவுல்.

பவுல் அறிவித்த கிறிஸ்து

பவுல் போதித்தது "கடவுளின் மறைபொருளை (2:1) அதாவது, சிலுவையில் மரித்து உயிர்த்த கிரிஸ்துவை; கடவுளின் அன்பையும் அறியையும் ஆற்றலையும் தன்னுட்கொண்ட கிறிஸ்துவை. கடவுளின் கைவன்மை வெளிப்படுத்து இறந்த கிறிஸ்துவின் உயிர்ப்பிலும், அவ்இறப்பு உயிர்ப்பினால் நாம் பெற்றுள்ள முழுவாழ்வும் தான். இதை மையமாக்க கொண்ட கிறிஸ்துவைப் பற்றிய போதனை தான் "நற்செய்தி." இந்நற்செய்தியைத் தவிர வேறு எதையும், எவரையும் பவுல் அறியவோ அறிக்கையிடவோ விரும்பியதில்லை. நமது வாழ்விலும் கிறிஸ்து ஒருவரே நம வாழ்வின் நடுநாயகமாகியிருக்க வேண்டும். நமது எண்ணம், சொல், செயல் அனைத்தும் அவரிலே துவங்கி, அவரிலே நடைபெற்று அவரிடமே முடிவு பெறும்போது தான் நானும் பவுல் போலாவோம். "உன்னவுள்ள என்னையெடுத்து உள் விழுங்கும் நின் நிறைவு (தாயுமானவர்) என்பதாக நம வாழ்வு அமையுமா? "அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே" (திவெ. 21 :6: 22 :13) என்று கிறிஸ்து நமக்கு அமைவாரா?

பவுலின் பலமின்மை

பலவகைகளிலே தான் குறையுள்ளவன் என்பதைப் பவுல் ஏற்றுக் கொள்கிறார். தனது உடல்நோய் (2 கொரி. 12:7), தன் கவர்ச்சியற்ற தோற்றம் (2 கொரி. 10:10), தனக்குச் சொல்லாற்றல் இன்மை (2 கொரி. 11:6), தான் எத்தென்சில் தோல்வியுற்றது (பதி. 17:16 -34) இவையன்னவற்றை நினைவு கூர்கிறார். இறைவனுக்குமுன், அவர்தான் அளப்பரிய வல்லமைக்கு முன் தன் வலுவின்மையை ஏற்றுக் கொள்கிறார். தன் வலுவின்மையை ஏற்றுக்கொண்ட நிலையிலேதான் அவருக்கு இறைவனுடைய வலிமை துணை நிற்கிறது. நாம் எவ்வளவு அறிவு மிக்கவராய்ப் இருப்பினும் இறைவனுடைய ஞானத்திற்கு முன் நாம் அறிவிலிகள் என்பதை உணர்வேமா? நாம் எவ்வளவு சக்தியுள்ளவர்களாய்ப் இருப்பினும் இறைவனுடைய வலிமைக்கு முன் நாம் வலுவு அற்றவர்கள் என்பதை உணர்வேமா? "உங்களுக்குப் பெரியவர் சிறியவராகவும், ஆட்சிபுரிபவர் தொண்டுபுரியவராகவும் வேண்டும்" (லூக்கா. 22:26) என்ற ஆண்டவரின் சொற்களை மனதிற்கொண்டு, தன்னுடையதை "என்னால் ஒன்று இயலாது; இறைவனோடு சேர்ந்து என்னால் எல்லாம் முடியும்" என்று கூறக்கூடிய நிலையை அடைவோமா?

பவுலின் பலம் ஆவியாரே

வல்லமையளிப்பவர் ஆவியாரே, "உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவனுக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர். அந்நாட்களில் உங்கள் பணியாளர் பணி பெண்கள் மேலும் என் ஆவியைப்பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர் (தி. 2 : 17 - 18) என்ற சொற்கள் பவுலில் நிறைவேற்றுகின்றன. நம்மிலும் நிறைவேற வேண்டும். நாம் வாழும் வாழ்வு, நாம் அளிக்கும் சாட்சியம் ஆவியாரின் வல்லமையாலேயே என்பதை உணர்ந்து அவ் ஆவியாiர நம்மை ஆட்கொள்ளவும், வழிநடத்தவும் வேண்டுமென்று இறைஞ்சுவோம். பவுலின் நாவன்மையற்ற தன்மையிலே அவருடனிருந்து வலிமையளித்த ஆவியார் நமக்கும் உறுதுணையாய் இருப்பார். "வாரும் தூய ஆவியே வாரும்; தாரும் உமது கொடைகளைத் தாரும்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை
நற்செய்தி : மத். 5:13-16
உலகிற்கு உப்பு நீங்கள்

தம் சீடர்களுடைய வாழ்வும் சாட்சியமும் எவ்விதம் விளங்கவேண்டும் என்பதை விளக்க இயேசு இரு ஒப்புமைகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று உப்பு மற்றொன்று - ஒளி.

இந்த இரு ஒப்புமையிலும் பொதிந்துள்ள பொருளைத் தியானிப்பது நம் வாழ்விற்கு வழி காட்டும். இயேசுவின் சீடர் உலகின் உப்பாய் வாழ அழைக்கப்படுகின்றனர். இதன் உட்பொருள் என்ன? இஸ்ரயேல் மக்கள் மத்தியில் உப்பு அதிக மதிப்புள்ள பொருள். எனவே ஒருவரை உப்பு' என்பது பெரிய பெயர் ஆகும். இஸ்ரேயேல் மக்கள் ஒப்புக்கொடுத்த பலி காணிக்கையோடு உப்பையும் சேர்த்துச் செலுத்தும்படி வழக்கம். எனவே தூயப் பொருளாகக் கருதப்பட்டது. நம் மக்கள் கூட இன்று திருத்தலத்தில் காணிக்கையோடு உப்பையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். எனவே நம் களில் உப்பையும் காணிக்கையைக்குவது கண் கூடு. உப்பின் சிறப்பு அம்சங்களாக முன்று குணங்களைக் குறிப்பிடலாம்

உப்பு தூய்மையானது

அதன் வெண்ணிறமே பளச்சிடுகிறது. இயேசுவின் சீடரும் இவ்வுலகில், இன்றைய சமுதாயத்தில் தூய்மையான வாழ்விற்கு அதாவது கலப்படமில்லாத, நேர்மையான வாழ்விற்கு அழைக்கப்படுகின்றனர்.
உப்பு பாதுகாப்பு அளிக்கிறது

பண்டங்களையும் உணவையும் நீடிக்க வைக்கிறது. அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. அதுபோலவே பிறரை உலக மாயையிலிருந்து பாதுகாக்க கிறிஸ்துவர்களுக்கு ஓர் அழைப்பு.

உப்பு உணவிற்கு சுவையளிக்கிறது

கிறிஸ்துவுக்குப் பிறர் வாழ்விற்கு சுவையளிக்க, பிறர் வாழ்வு சிறக்கும்படி சேவை செய்ய அழைக்கப்படுகின்றனர். உப்பின் மூப்பெரும் குணங்களும் நம்வாழ்வில் விளங்கும்போது நாம் உலகிற்கு நற்செய்தியாகிறோம். இதனால் தான் இயேசு சொன்னார்:
"நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்" (மாற்கு 9:50).

உப்பின் குணங்கள் அழிந்துவிட்டால், ஒன்றுக்குமே பயனில்லை. அதுபோலவே, கிறிஸ்துவ வாழ்விலும் அடிப்படை அம்சமாகிய பிறர் அன்பு விளங்காவிடில், அது பயனற்றது. என்பதை இயேசு வலியுறுத்துகிறார். "உப்பில்லாமைப் பண்டம் குப்பையிலே!" நற்செய்தியின் சாரமில்லா கிறிஸ்துவ வாழ்வு ஒரு குப்பைதான்!

உலகிற்கு ஒளி நீங்கள்

நான் உலகினின் ஒளியென விளங்குவது போல், தம் சீடரும் ஒளியாக வாழ வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களின் ஒளி இயேசுவே. இயேசுவின் ஒளி நம் இதயங்களில் ஒளிர்வதால்... நாமும் ஒளியைப் பிரதிபலிக்கும் விளக்குகளாய் மாறுகின்றோம். "என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோ.8:51). ஒளியின் சிறப்புகள் எவை? ஒளி பிறருக்கு வழி காண்பிக்கிறது. கலங்கரை விளக்கு கப்பலுக்கு வழி காட்டுகிறது. இயேசுவின் சீடரும் வாழ்வுப் பாதையை ஒளிர்விக்கும் சாட்களாய்த் திகழ அழைக்கப்படுகிறார்கள். ஒளி இருளை நீக்குகிறது. வாழ்வைப் பிரகாசிக்கச் செய்கிறது. வாழ்விற்கு நம்பிக்கையளிக்கிறது. கிறிஸ்துவ வாழ்வும் சமுதாய இருளை நீக்கி, அநீதி அடக்குமுறைகளைய போக்கி உண்மையான ஒளிர் செய்ய வேண்டும். இயேசுவின் ஒளிச் சுடர்களாகப் பிரகாசிக்க விரும்பினால், நம் அகத்தில் ஏற்றப்பட்ட விசுவாச விளக்கு சுடர்விட, அன்பு எனும் எண்ணெய ஊற்றவோம்.

"அன்பே தகளியாக ஆர்வம் நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினோன்" (பூத்தாழ்வார்)

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக...
 
‌நன்றி வழிகாட்டும் தோழன்
 
 மையச்‌ சிந்தனை : சமயத்திற்கு உப்பாய்‌, சமூகத்திற்கு ஒளியாய்‌ நாம்‌

மனிதன்‌ ஒரு சமூக விலங்கு என்பது கிரேக்கச்‌ சிந்தனையாளர் அரிஸ்டாட்டிலின்‌ மனிதனைக்‌ குறித்த வரைய மற்ற விலங்குகளைப்போல தனித்தோ, தீவாகவோ இருக்காமல்‌ சேர்ந்தும்‌, சார்ந்தும்‌ வாழும்‌ இயல்பு மனிதனுடையது எனவே, தன்னோடு வாழும்‌ பிறரது நலனைப்‌ பேணுவதும்‌ மனித இயல்பாக இருக்க வேண்டும்‌. தானும்‌ நன்றாக இருக்க வேண்டும்‌, தன்னோடு வாழும்‌ பிறரும்‌ நன்றாக இருக்க வேண்டும்‌ என்று நினைப்பதும்‌, அவ்வாறு பிறர்‌ நன்றாக இல்லாதபோது அவர்களைச்‌ சரிசெய்ய முயல்வதும் தான்‌ உண்மையான கிறிஸ்தவப்‌ பண்புகள்‌. இயேசுவின்‌ உப்பு, ஒளி உவமை வெளிப்படுத்தும்‌ கருத்தும்‌ இதுவே.

உப்பு, ஒளி இரண்டுமே பலவிதங்களில்‌ வேறுபட்டவை மண்ணில்‌ உருவாகி, தான்‌ இருக்கும்‌ இடமே தெரியாமல்‌ மறைந்து இருப்பது உப்பின்‌ குண.‌ விண்ணில்‌ உருவாகி, தான்‌ இருக்கும்‌ இடத்தில்‌ எல்லாருக்கும்‌ வெட்ட வெளிச்சமாயத்‌ தெரிவது ஒளியின்‌ குணம்‌. அப்படியிருக்க, நாம்‌ எப்படி இரு வேறுபட்ட குணநலன்க௧ளோடு உப்பாகவும்‌ ஒளியாகவும்‌ இருக்க முடியும்‌ எனச்‌ சிந்திக்கும்போது, உப்புக்கும் ஒளிக்கும் பொதுவான இரண்டு பண்புகளை நாம் பார்க்கலாம்.

அதிர்வுகளை ஏற்படுத்தல்‌: தான்‌ இருக்கும்‌ இடத்தில்‌ நேர்நிலையான அதிர்வுகளை, (Positive Impact) பாதிப்புகளை ஏற்படுத்தும்‌ பண்பு இரண்டிற்கும்‌ உண்டு உணவில்‌ சேர்க்கப்படும்‌ உப்பு மறைந்து இருந்தாலும்‌, தன்‌ சுவையைப்‌ பரப்புகிறது. ஏற்றப்படும்‌ விளக்கின்‌ ஒளி இருளைக்‌ கிழித்து, வெளிச்சத்தை வீசுகின்றது. கிறிஸ்தவ சீடத்துவமும்‌ இப்படிப்பட்டதே. நாம்‌ நற்செயல்களால்‌, நாம்‌ பேசும்‌ வார்த்தைகளால்‌, நாம்‌ வாழும்‌ எடுத்துக்காட்டான வாழ்வால்‌ மிகப்பெரிய அதிர்வுகளை நம்‌ சமூகத்தில்‌, நம்மோடிருக்கும்‌ மனிதர்களிடம்‌ நாம்‌ ஏற்படுத்த வேண்டும்‌ தன்‌ நற்செயல்களால்‌ பிறரைப்‌ பாதிக்காத கிறிஸ்தவன்‌ உண்மையில்‌ கிறிஸ்தவனே அல்ல என்பார்‌ திருத்தந்தை பதினாறாம்‌ பெனடிக்ட்‌.
அழியாமல்‌ தடுத்தல்‌: தான்‌ இருக்கும்‌ இடத்தில்‌ யாரையும்‌ அழியவிடாமல்‌ காக்கும்‌ பண்பு இரண்டிற்கும்‌ உண்டு. உணவு கெட்டுவிடாமல்‌ பாதுகாப்பது உப்பு. இருளில்‌ வழிதெரியாமல்‌ தவறி யாரும்‌ விழுந்து விடாமல்‌ பாதுகாப்பது ஒளி. கிறிஸ்துவின்‌ சீடர்களாகிய நாமும்‌ யாரும்‌ தவறாதவாறு, அழியாதவாறு, கெட்டுப்போகாதவாறு பார்த்துக்கொள்ளும்‌ கடமையைப்‌ பெற்றிருக்கிறோம்.‌ உணவு கெட்டுவிடாமல்‌ பாதுகாக்கும்‌ உப்பைப்‌ போல, உலக மக்கள்‌ கெட்டுவிடாமல்‌ பார்த்துக்கொள்ளும்‌ மனிதனே உண்மைக்‌ கிறிஸ்தவன்‌ என்கிறார்‌ புனித யோவான்‌ கிறிசோஸ்தம்‌.

யார்‌ எப்படிப்‌ போனால்‌ எனக்கென்ன என்று எண்ணாமல்‌, எல்லாரும்‌ நன்றாயிருக்க நம்மால்‌ இயன்றதைச்‌ செய்யும்போது நாம்‌ கிறிஸ்துவின்‌ உண்மைச்‌ சீடர்களாக உருமாற்றம்‌ பெறுகின்றோம்‌ அப்படி வாழாதபோது நம்‌ கிறிஸ்தவத்தின்‌ சாரத்தை நாம் இழக்கிறோம்.
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே