ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         பாஸ்கா 4ஆம் வாரம் - ஞாயிறுழா

    திருப்பலி முன்னுரை



நல்ல ஆயன் நானே!
தந்தை என்னை அறிவது போல என் மந்தையை நான் அறிவேன்!
வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
Sr. Gnanaselvi (india)
நல்ல ஆயனாகிய இயேசுவைத் தேடி வந்திருக்கும் ஆட்டுக்குட்டிகளாகிய இறைமக்களே!

நல்ல ஆயனாகிய நம் இயேசுபிரான் நமது குடும்பத்தில், நாம் வாழும் இடங்களில் நாமே நல்ல ஆயனாக வாழவேண்டும் என்ற கருத்தை பொறுப்புமிக்க ஆயனாக வந்து நின்று, இந்த ஞாயிறு வழிபாட்டின் மூலம் கூறி நல்ல ஆயனாக வாழ அழைக்கின்றார்.

தனக்கு சொந்தமில்லாத மந்தையை கூலிக்கு மேய்ப்பவர் கள்வரோ, கொடிய மிருகமோ வரும்போது தன்னை, தன் உயிரைக் காத்துக் கொள்ள ஆடுகளை விட்டு விட்டு ஓடி விடுவார். அவருக்கு அதைப் பற்றிக் கவலையுமில்லை, வருத்தமுமில்லை. ஏனெனில் அது அவரது சொந்த ஆடு இல்லை.

ஆனால், நல்ல ஆயனாகிய நம் இயேசுக்கிறிஸ்து தன்னுடைய ஆடுகளை அறிந்திருக்கிறார். அவைகளின் குரலை புரிந்திருக்கிறார். உலகமெங்கும் ஒரே மந்தையும், ஒரே ஆயரும் என்ற நிலையை ஏற்படுத்தத் தன் உயிரையும் தன் ஆடுகளுக்காகக் கொடுக்கிறார். அவரே உண்மையான ஆயன்.

ஆனால் இன்றோ சேவைக்கும், தன்னலமற்ற பணிவாழ்வுக்கும் இலக்கணமாகத் திகழவேண்டிய அரசியல், சமூகசேவை போன்ற அமைப்புகள் செல்வம் சேர்ப்பதற்கும், அதிகாரம் செய்வதற்கும் ஏற்ற எளிய வழிகளாய் மாறிவிட்டன.

ஒரு பொறுப்புக்கு தலைமை ஏற்போர் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நல்ல ஆயனாகிய நம் இயேசுவைப் பின்பற்றுவோம்! நல்ல ஆயனுக்கு வேண்டிய ஈடுபாடு, பணிவிடை, தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை இன்று எடுத்துக்காட்டும் நம் இயேசுவிடம் அவரைப் போலவே வாழவும், அவரது பெயரை எடுத்துரைக்கவும் தேவையான வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்!
ஆயனைப் பின்பற்றுவோம்!
அவர் வழியில் செல்வோம்!


 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மக்கள் மீட்புப் பெற வானத்தின் கீழ் இயேசுவின் பெயரை எழுதிய இறைவா!
நற்செயல் செய்வதற்காக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்ட திருஆட்சியாளர்கள், இறைமக்கள் அனைவரும் இயேசுவின் மீட்பு பணியை இவர்களால் அன்றி வேறு எவராலும் வானத்தின் கீழ் செய்ய இயலாது என்ற அளவிற்கு செய்ய ஆற்றல் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. கடவுளின் மக்களாக எமை அடையாளப்படுத்தும் அன்பரே எம் இறைவா!
நாட்டுத் தலைவர்கள் ஈடுபாடு, பணிவிடை, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற நற்பண்புகளுடன் கடவுளின் மக்களுக்குப் பணி செய்ய அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆடுகளை அறிந்திருக்கும் நல்ல ஆயனே!
மந்தையை விட்டு எந்த ஆடும் விலகி விடக்கூடாது, ஓநாய்கள் ஆடுகளை இழுத்துப் போய் விடக்கூடாது என தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் ஆயராய் உழைக்கும் எங்கள் ஆன்மீகத் தந்தைக்கு அவரின் மந்தைகளை மேய்க்க அளப்பரிய ஆற்றல் பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உடல் நலமற்றோரை அன்போடு விசாரிக்கும் எம் ஆயனே!
உடல் நோயாலும், மனநோயாலும், குடும்பப் பிரச்னையாலும், கடன் தொல்லையாலும், போதைப் பழக்கவழக்கத்தாலும் நிம்மதி இழந்து நிற்கும் எல்லாக் குடும்பங்களையும் இன்று உமது கருணை மிகு விசாராணையால் தேற்ற, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஆயனின் குரலுக்கு செவி கொடுக்கும் ஆடுகளை அரவணைக்கும் ஆயரே!
எத்தனை முறை வழி தவறி சென்றாலும் உமது மந்தைக்குள் எம்மை இழுத்து இழுத்து சேர்த்துக் கொள்கிறீர். எங்களது துன்ப துயர வேளையிலும் உமது குரலைக் கேட்டு வாழும் ஆடுகளாய் எந்நாளும் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. ஆயனின் கட்டளையை கடைபிடிப்போரிடம் அன்பு நிறைவடைகிறது என உணர்த்தும் ஆயனே!
கடுமையான வார்த்தைகளைப் பேசியதால் மனம் புண்ணாகி அவமானமாக இருக்கிறது. பல்வேறு தொல்லைகள் என்னைப் புண்ணாக்கி வேதனையால் நொந்து போகச் செய்துவிட்டது என மனம் வருந்தும் உள்ளத்தினரை அன்பு நிறைந்த வார்த்தையால் அரவணைக்கவும், உமது திருக்காயங்களுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழவும் அருள் பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

ஆடுகளை மேய்க்கும் ஆயன் ஒருவன், ஓநாய் வருவதைக்கண்டு தன் ஆடுகளை பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டிச் செல்கிறான். குறுக்கே ஒரு சிற்றாறு. ஆடுகளால் அதைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல இயலாது. ஆகவே இந்த நல்ல ஆயன் அந்த ஆற்றின் குறுக்கே பாலம்போல படுத்துக் கொண்டான். ஆடுகள் அவன் மீது ஏறி பாதுகாப்பாக ஆற்றின் மறுகரைக்குச் சென்றன. ஆனால் இறுதியாக அந்த ஓநாய் ஆயனைப் பற்றிக்கொண்டு கொன்று போட்டது. அவன்தான் ஆடுகளுக்காக தன் உயிரையும் கொடுத்த நல்ல ஆயன்.

மகளையும் மருமகனையும் பார்க்க வந்த தந்தை ராபர்ட், வாசற்படியேறி கதவைத்தட்ட கை தூக்கியபோது உள்ளே தன்னைப்பற்றி மருமகன் - மகள் பேசிக்கொண்டிருப்பதை கேட்டார்.

மருமகன் : கல்யாணி, உங்கப்பா இன்னைக்கும் வரலயா. எனக்கென்னவோ அவர் வர்றமாதிரி தெரியல. பேசாம ஒரு வேலைக்காரிய ஏற்பாடு பண்ணிக்கோ.
மகள்: உங்களுக்கு எப்பவும் நல்லது கெட்டது அவ்வளவு சீக்கிரம் புரியாதே. வேலைக்காரிக்கு இரண்டு வேளை சோறு போட்டு, மாசா மாசம் முழு சம்பளம் குடுத்தாலும் மாசத்துல பத்துநாள் அதையும், இதையும் சொல்லிட்டு வரமாட்டா. அப்பா வந்துட்டா அப்படி இல்ல தெரியுமா? காவலுக்கு வீட்டுல நம்பிக்கையான ஆளுமாச்சு. சம்பளம் இல்ல, போனஸ் இல்ல, நல்லது கெட்டதுக்கு லீவு இல்ல. அவருக்கு வயத்துக்கு சோறும், கட்டிக்க துணியும் குடுத்தாப் போதும். இப்ப கணக்குப் போட்டுப் பாருங்க உங்களுக்கு நல்லா புரியும்.

இதையெல்லாம் கேட்டு "மகளா" என்று நினைத்தபோது நெஞ்சு வலித்தது "மகள்தானே" என்று நினைத்;து கொண்டபோது அந்த வலி நின்று போனது. கதவை தட்டினார் ராபர்ட்.

"உள்ளத்திலிருந்து எந்நேரமும் அன்பு வெள்ளம் பெருகி ஓடினால், அழுக்கெதுவும் தோன்றினாலும் அடித்துச் செல்லப்பட்டு விடாதோ."

"நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.அவைகளுக்காக எனது உயிரையும் கொடுக்கிறேன்." யோவான் 10:14-15.

சொந்த மகனின் நலனில் தந்தை அதிகம் அக்கறையாக இருப்பது போல, இயேசு நமது உரிமைக்கும் உடையவர் என அறிவோம்.

ஆயனின் குரல் கேட்டு ஓடும் ஆடுகள் பாதுகாப்பும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகின்றன. அவரின் கட்டளைகளை கேட்டு அதன்படி வாழும் போது நமக்கும் பாதுகாப்பும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

பாவம் என்னும் திருடர், கொள்ளைக்காரர், வன்முறையாளர் போன்றோரிடம் இருந்து நம்மைக் காப்பாற்ற தியாகத்தோடு தம் உயிரைக் கொடுத்தவர் நம் அன்பர் இயேசு.

பொறுப்புமிக்க ஆயன், நம்மையும் பொறுப்புமிக்கோராய் வாழ பணிக்கிறார். ஆயன் காட்டும் வழிகளில் செல்லும் ஆடுகள் என்றும் நலமாக இருக்கும். ஆயனைப் பிரிந்து சென்ற ஆடுகளை தியாகத்துடன் தேட வேண்டும்.

பிறரின் நலனுக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மந்தையில் சேராத ஆடுகள் மீதும் கவனமாக இருக்க வேண்டும். நோயுற்ற ஆடுகளின் காயங்களை கவனிக்க வேண்டும்.

"நானே நல்ல ஆயன்" என நம்மை வழிநடத்தும் ஆயனிடம் ....என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு என்று நிறைவான மனதுடன் பின்தொடர்வோம்.

பாவச் சுமையால் வருந்தியவரை
பாதுகாப்பின்றி மனம் கலங்கியவரை
இழப்பினால் கண்ணீர் சிந்தியவரை
உடமைகளை இழந்து துடித்தவரை
உரிமைகள் தேடி அலைபவரை
உறவுகளை பிரிந்து வாடுபவரை
தேடி மந்தையில் சேர்க்க வந்த நம் ஆயன் நல்ல ஆயனன்றோ!.
நானே நல்ல ஆயன் என சொல்லும் நம் ஆயனிடம் என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு என்று சொல்லி அவரது குரல் செல்லும் திசையில் ஓடிச் செல்வோம்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

அறிவோம் தெரிவோம் புரிவோம்.

திருத்தூதர் பணி: 4: 8-12
1 யோவான் 3:1-2
யோவான் 10; 11-18

இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, ஆண்டவர் இயேசுவை ஆயனாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களே இன்றைய நற்செய்தி வாசகங்களின் வழியாக நாம் அனைவரும் அவர் தம் மந்தையின் ஆடுகள் என்பதை நினைவுபடுத்துகிறார். ஆயனை அனுப்பிய தந்தை கடவுள் பற்றி அறியவும், ஆயனாம் இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆடுகளாக நமது செயல்பாடு என்ன என்பதை புரிந்து கொள்ளவும் இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அறிவோம் ஆண்டவர் யாரென்று:
அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் வாழ்வில் பல உண்டு. நாம் நம்மைப் படைத்த இறைவன் யாரென்று அறிந்திருக்கிறோம். ஆனால் அவர் எத்துணை வல்லமை மிக்கவரென்பதை அறியாமல் இருக்கிறோம். அவரது அன்பு எல்லையில்லாதது. அவர் நம்மை மீட்கும் படியாக தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்று வார்த்தையால் சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் உணர்வதில்லை. விளையாடும் போது, நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பில் நாம் காட்டும் நம்பிக்கை போன்றது இறைவன் தன் மகனை நமக்காக இவ்வுலகிற்கு அனுப்பியது. நம்முடைய ஒட்டு மொத்த நம்பிக்கையையும் அந்த கடைசி வாய்ப்பில் நாம் வைத்து மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். தோற்றுப்போவது போல தோன்றி, வெற்றி பெற்ற தருணம் தான் இயேசுவின் சிலுவை மரணமும் உயிர்ப்பும். இறைவன் தன் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் தன் மகன் மேல் வைத்து அவரை அனுப்பினார். அவரால் நாம் மீட்கப்படுவோம் என்று எண்ணினார். அதைப் போலவே அவருடைய இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம். இறைவன் நம்மையும் அவர் தம் பிள்ளைகளாக நினைக்கின்றார். ஆனால் நாம் தாம் அவருடைய பிள்ளைகள் என்பதை மறந்து செயல்படுகிறோம். இயேசுவிற்கு கொடுக்கப்பட்டது போல நமக்கும் சில கடமைகள் இறைவனால் கொடுக்கப்படுகின்றன. அதை அறிந்து செயல்படுவோம். நமது தந்தை இரக்கமும் அன்பும் நிறைந்தவர் என்பதை அறிந்து நாமும் அவர் போல இரக்கமும் அன்பும் உடையவர்களாய் வாழ முற்படுவோம்.

தெரி(ந்து கொள்)வோம் இயேசு நம் ஆயனென்று:
இயேசு நம் ஆயன். ஆடுகளாகிய நம்மை எல்லா தீங்குகளினின்றும் காப்பவர். நம்மை தாக்க வரும் கொடிய விலங்குகளினின்றும் நம்மைப் பாதுகாப்பவர். நல்ல உணவு, நீர், தங்க இடம் என்று நம்மை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்பவர். மற்ற மந்தையைச்சேர்ந்த ஆடுகளிடத்திலும் அன்பாய் இருப்பவர். அனைவரும் சமம் என்பதை தனது செயலால் எடுத்துரைப்பவர். பல நேரங்களில் நாம் யாருடைய மந்தையைச்சேர்ந்த ஆடுகள் என்பதில் குழப்படி ஏற்பட்டு நமக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்துகிறோம். நாம் யாராக இருந்தாலும் நம்முடைய ஆயன் இயேசு. அவர் தந்தையை எவ்வளவு ஆழமாக அறிந்து இருக்கிறாரோ அது போல நாமும் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் நம்மை பாதுகாத்து பராமரிக்கின்றார். முதல் வாசகத்தில் கூறப்படுவது போல அவர் விலக்கப்பட்ட கல்லாய் இருந்தாலும் இறுதியில் முதன்மையான மூலைக்கல்லாக தந்தையால் தெரிவு செய்யப்பட்டார். நம்முடைய வாழ்வில் நாம் பல சூழல்களில் பிறரால் விலக்கப்பட்டாலும், இறுதியில் முதன்மையான மூலைக்கல்லாக நாமும் மாற்றப்படுவோம்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஆயனாக இயேசு என்றும் நம்மோடு உடன் பயனிக்கிறாரென்று தெரிந்து வாழ வேண்டியது தான். ஆக நமது ஆயன் இயேசு நம்மோடு பயனிக்கிறார். பாதுகாக்கின்றார். பராமரிக்கின்றார் என்று தெரிந்து வாழ்வோம்.

புரி(ந்து கொள்)வோம் நாம் யாரென்று:

நாம் யாரென்றே பல சமயங்களில் நமக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கின்றது. வாழ்வில் இன்பம் நடந்தால் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. மாறாக துன்பம் நடந்தால் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? நாம் யாருக்கு என்ன தீங்குசெய்தோம்? என்று புரியாமல் புலம்பி தவிப்பதுண்டு. இயேசுவும் தான் யாருக்கு என்ன தீங்கு செய்தார்?. அவர் துன்பப்படவில்லையா? ஆயனாக இயேசு நம் உடன் இருந்தாலும் ஆடுகளாகிய நாம் சில சமயம் பாதை மாறிப் போவதுண்டு. ஆயனின் குரலைக் கேட்காமல் இருப்பதால் பல அபயக்குரல்களை கேட்க நேரிடுகின்றது. ஆயன் நல்லவர் தான் ஆடுகளாகிய நாம் தான் ஒரே பாதையில் ஒருவர் பின்னே செல்ல வருத்தப்படுகிறோம். வாழ்க்கைன்னா சில மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும் என்று வார்த்தையில் வாரி இரைக்கின்றோம். வாழ்வில் செய்ய வருந்துகிறோம். ஆயன் அவர் தான் என்று தெரிந்து இருந்தாலும் அவரைப் பின் தொடர்வதில் சிறிது தயக்கம் காட்டுகிறோம். அவருக்கு பிற மந்தைச் சேர்ந்த ஆடுகளும் இருக்கின்றன. அவர் அவற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கின்றார். இதனால் நாம் அனைவரும் ஒரே மந்தைச்சேர்ந்த ஆடுகளாக மாறுகின்றோம். நம்முடைய குழு, இனம் பெரிதாகின்றது. நாம் பலுகிப் பெருக அவர் வழிவகுக்கின்றார். தான் வளராவிட்டாலும் பரவாயில்லை, பிறர் வளரக் கூடாது என்று நினைப்பவர்கள் எவ்வகையிலும் முன்னேற முடியாது. பிறரின் வளர்ச்சியில் தன்னுடைய வளர்ச்சியைக் காண்பவர் மென்மேலும் வளர்கின்றார். ஆக ஆடுகளாகிய நாம் அவரது மந்தையைச் சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து வாழ முயற்சிப்போம்.

கடவுள் பக்தி நிறைந்தவர் மனிதர் தினமும் ஒருவருக்கு உணவு தானமாக வழங்குவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் ஒருவருக்கு உணவு வழங்கினார். உணவு உண்ணத்தொடங்கும் முன் அவரிடம் உனக்கு இன்றைய நாள் உணவைத்தரும் இறைவனுக்கு நன்றி கூறி உணவினை உண் என்றார். அவரோ மறுமொழியாக, கடவுள் என்பது பொய். எனக்கு உணவு அளிக்கும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார். பக்தரோ கோபமுற்று அவருக்கு உணவளிக்க மறுத்துவிட்டார். இரவு கனவில், கடவுள் பக்தருக்கு தோன்றி, இத்தனை நாளும் அவன் என்னை வழிபட்டதில்லை ஆனால் ஒரு நாள் கூட அவனை நான் பசியோடு விட்டதில்லை. ஆனால் இன்று ஒரு நாள் உன் முன் எனக்கு நன்றி கூற மறுத்ததற்காக அவனுக்கு உணவளிக்காதது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

ஆம் அன்பு உள்ளங்களே இறைவன் இரக்கமே உருவானவர். அவரிடத்தில் பாரபட்சம் என்பதே இல்லை. அவர் முன் நாம் அனைவரும் சமம். அவர் தம் பிள்ளைகள். எனவே அவரிடத்தில் உள்ள அந்த அளவில்லா இரக்க உள்ளத்தை நாமும்பெற முயற்சிப்போம்.

நமது இறைவன் நமது வானகத்தந்தை என்பதை அறிந்து அவரது அன்பை இரக்கத்தை நமதாக்கிக் கொள்வோம்.

ஆயன் இயேசுவின் பாதுகாப்பையும் பராமரிப்பையும், தெரிந்து அவர் போல நாமும் வாழ முயற்சிப்போம்.

இறுதியாக நாம் அனைவரும் கடவுளின் அன்புப்பிள்ளைகள் அனைவரும் சமம் என்பதை புரிந்து வாழ்வோம்.

அறிந்து தெரிந்து புரிந்து வாழ உயிர்த்த இறைவன் அவர் தம் அருளாற்றலை நம்மீது நிரம்ப பொழிவாராக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
 பாஸ்கா காலம் 4 ம் ஞாயிறு

ஆயனின் அன்பும்,.. ஆடுகளின் பண்பும்..

இறையேசுவில் பிரியமான அன்பு உள்ளங்களே ! பாஸ்கா காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கும் நாம், ஆயன் இயேசுவின் ஆடுகளாக வாழ அழைக்கப்படுகிறோம். ஆயனுக்கும், ஆடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படியென்றால் கடலும், அலையும் போல, மரமும், நிழலும் போல, ஆயனாக இருந்தாலும் சரி, ஆடுகளாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரின் பாஷை மொழிகளை புரிந்து கொண்டு வாழும்போது, அங்கே மகிழ்ச்சியும், நிம்மதியும் மலர்கிறது. நாம் ஒவொருவரும் இறைவனின் ஆடுகளாகவும், இறைவன் நம் ஆயனாகவும் இருப்பது இத்தகைய உறவின் அடிப்படையிலே தொடர்கிறது.

இஸ்ராயேல் மக்கள் இயல்பிலேயே ஆடுமேய்ப்பவர்கள். ஆடு மேய்ப்பது என்பது அவர்களின் தொழிலாக இருந்தது. எங்கெல்லாம் மந்தைக்குத் தேவையான மேய்ச்சல் நிலம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று அவர்கள் ஆடுகளை மேய்த்தார்கள். ஆடுகளைத் தாக்க வரும் ஓநாய்களிடமிருந்து, அவர்கள் பாதுகாத்தார்கள். ஆயன் இருக்கின்ற போது, ஓநாய்களால் ஆடுகளை கவரமுடியாது. ஏனென்றால் ஆயன் என்பவர் ஆடுகளை வெறும் ஆடுகளாகப் பார்காமல், அன்பு, பாசம் , கருணை காட்டி பிள்ளையைப்போல் பாதுகாத்துவந்தனர். இத்தகைய உறவு நிலை தொடக்கக் காலத்திலிருந்து, இன்று வரை தொடர்கிறது. மனிதர்களாகிய நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, மண்மீது மனுவுருவான இறைமகன் இயேசு, " நானே நல்ல ஆயன், நீங்களே என் மந்தையின் ஆடுகள்" என்ற உணமையை உரக்கச் சொல்கிறார். நானே நல்ல ஆயன் என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. அர்த்தம் வாய்ந்தது. சிறந்த, நல்ல, அழகிய, நம்பிக்கையான என்ற பொருளையே இந்த நல்ல` என்ற சொல் குறிப்பிடுகிறது. இப்படி நற்குணங்கள் நிறைந்த, நம்பிக்கையான ஆயன் தான் நம்பெருமான் இயேசு. நல்லாயன் காட்டும் பாதையில் நமது பயணம் தொடர வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருக்கிறது.

ஆயனின் அன்பு :

ஆடுகளை மேய்க்கக் கூடிய ஒருவரை உற்று நோக்கினால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். காலையில் பட்டியிலிருந்து எழுந்ததும், மேய்ச்சலுக்கு கூட்டமாக ஓட்டிச் செல்வார். அதுவும் மேய்ச்சல் நிறைந்த இடங்களைத் தேடிச் செல்வார். அங்கு அவைகளை வயிறார மேய விடுவார். ஆடுகள் தாகமாக இருப்பதை அறிந்ததும், நீர் நிரம்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார். தாகத்தைத் தணித்த பிறகு, மரங்கள் சூழ்ந்த, நிழல் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்று இளைப்பாறச் செய்வார். ஆடுகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல், கண்விழித்து காத்திடுவார். மாலை நேரமானதும், மீண்டும் தன் ஆடுகளை பட்டிக்கு அழைத்து வருவார். வரும் வழியில் தன் கோலால் இளைத் தலைகளை வளைத்துக்கொடுப்பார். ஆடுகளை விரட்டிவரும் ஓநாய்களிடமிருந்து பத்திரமாக பாதுகாப்பார். ஆடுகளை பட்டியில் அடைத்த பிறகு, அத்தனை ஆடுகளும் இருக்கின்றனவா? அல்லது ஏதாவது காணாமல் போய் விட்டதா..? என்றெல்லாம் கண்ணும் கருத்துமாய் கவனிப்பார். அத்தனை ஆடுகளும் திரும்ப வந்து விட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். ஒரு வேளை ஓர் ஆடு காணாமல் போய்விட்டால், மற்ற ஆடுகளை பட்டியில் விட்டு விட்டு , காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்வார். ஆடு கிடைத்ததும் அதனை தன் தோளில் போட்டுக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்புவார்.

காணாமல் போன ஆடுகளாய், அலைந்து திரிந்த நம்மையும் இவ்வாறே இயேசு தேடிவந்தார். முட்செடிகளின் நடுவிலும், களைகளின் மத்தியிலும் சிக்குண்டு தவித்த நம்மை, தேடிவந்து விடுவித்தார். பரந்த வனாந்தரத்தில் தொலைந்துபோயிருந்தோம். நல்ல ஆயன் இயேசு நம்மை தேடி வந்து காத்தார். இறைவனை விட்டு தூரமாய் விலகியிருந்தோம், திரும்பி வருவதற்கான பாதையும் தெரியாமல் அலைமோதிக் கொண்டிருந்தோம், ஆனால் நல்லாயன் இயேசு நம்மை தேடி வந்து இரட்சித்துக் கொண்டார். அவர் பாதையை காட்டிவிட்டார். அவ்வழியில் நமது பயணம் தொடர்ந்து செல்லவேண்டும் என்பதற்காக தன் உயிரையும் கொடுத்துச் சென்றார். இயேசுவின் ஆயன், ஆடு உறவு தெய்வீகமானது. புனிதமானது.

ஆடுகளின் பண்பு :

ஒரு கோழியானது இரையைத் தேடி, தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு , ஒரு குப்பை மேட்டிற்குச் சென்றது. அங்கிருந்த குப்பைகளை கிளரிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கோழியானது ஒரு சப்தத்தை எழுப்பியது. அனைத்து குஞ்சுகளும் கோழியின் அருகே வந்து உணவை உட்கொண்டன. மீண்டும் ஒருவித குரல் எழுப்பியது. குஞ்சுகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றன. கோழியானது மீண்டும் ஒருவித சப்தத்தை எழுப்பியது, அனைத்து குஞ்சுகளும் ஓடி வந்து, தாய்க் கோழியின் சிறகினுள் தஞ்சம் புகுந்தன. ஏனென்றால் அங்கே ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்திடமிருந்து, தன் குஞ்சுகளை பாதுகாப்பதற்காக, இத்தகைய குரரொலியை எழுப்பியது. குஞ்சுகளும் தாய்க் கோழியின் சப்தத்தை அறிந்து , தெரிந்து வைத்திருந்ததினால், தங்கள் உயிரை காத்துக் கொண்டன. இந்த கோழிக் குஞ்சுகளைப் போன்றுதான் நம்முடைய செயல்களும், ஆயனாம் இயேசுவிடத்தில் நம்பிக்கையோடும், பண்போடும் இருக்க வேண்டும்.

ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் அறிந்ததவராயிருக்கிறார், அனுதினமும் நம்மை கண்நோக்குறார். அன்புகாட்டி அரவணைக்கின்றார், ஆசீர் வழங்கி வழியனுப்புகிறார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமூட்டுகிறார், கவலையுற்ற நேரத்தில் நம் கரம் பிடிக்கின்றார், கண்ணீர் விடும் நேரத்தில் நம் கண்ணீரைத் துடைக்கிறார். இத்தகைய கருணை உள்ளத்தோடு நம்மை நாளும் தேடி வருபவர் தான், நல்ல ஆயன் இயேசு. நாம் எவ்வகையில் இயேசுவை அறிந்திருக்கிறோம் ? .நாம் இறைவனை விட்டு விலகிச் செல்லும் போதும், நமது வாழ்க்கைப் பயணம் திசைமாறும் போதும், நம்மை எச்சரிக்கிறார் இறைவன். பல நபர்கள் வழியாக, நல்ல சிந்தனை வழியாக, இறைவார்த்தை வழியாக, நல்ல செயல்கள் வழியாக இறைகுரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. யாரெல்லாம் இறைவனின் குரலுக்கு செவிமடுக்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சியான இறைப் பாதுகாப்பை அனுபவிப்பர்.

ஆகவே ஆடுகளாகிய நாம், ஆயனின் அன்பை உணர்ந்து, அவரது குரலுக்கு செவிமடுத்து வாழ்வோம். அவர் காட்டும் பாதையில் செல்வொம், அப்போது ஆயன் இயேசு எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை பாதுகாப்பார். ஆயனின் அன்பை அனுதினமும் அனுபவிப்போம், பண்புள்ள ஆடுகளாக உருமாறுவோம் . நல்ல ஆயன் எந்நாளும் நம்மோடு இருந்து, நம்மை வழிநடத்துவாராக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
நல்லாயனின் நல்உணர்வுகள்

திருத்தூதர்பணிகள் 4:8-12
1 யோவான் 3:1-2
யோவான் 10:11-18

பாஸ்கா காலத்தின் 4ம் ஞாயிற்றை "நல்லாயன் ஞாயிறு" என நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். "ஆயன்" என்ற உருவகம் "இஸ்ரயேலரின் பணி மற்றும் வாழ்வியல் உருவகம்." உருவகங்களைக் கையாளும்போது மிகக் கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், ஒவ்வொரு உருவகமும் ஓர் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டுக் கட்டமைக்கப்படுகிறது. அது அந்த இடத்தையும், நேரத்தையும் கடந்த மனிதர்களால் புரிந்துகொள்ளப்படும்போது நிறைய இடைவெளி இருக்கவே செய்கிறது. மேலும், ஒரு உருவகத்தை நாம் எடுக்கும்போது அந்த உருவகம் சாராத நபர்களை நாம் ஒதுக்கிவிடுகின்றோம். எப்படி?

இயேசுவின் சமகாலத்தில் யூதர்கள் ஆடு மேய்க்கவும், புறவினத்தார் பன்றிகள் மேய்க்கவும் செய்தனர். இயேசு ஓர் யூதராக இருந்ததால் அவர் "ஆடு மேய்க்கும் ஆயன்" உருவகத்தைச் சொல்கின்றார். இயேசு இப்படிச் சொல்வதால் அல்லது அவர் உயர்வாகக் கருதப்படுவதால், அவரைச் சாராத "பன்றி மேய்க்கும் ஆயன்" உருவகம் தாழ்வானது என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எடுத்துக்கொண்டால் நாம் ஒட்டுமொத்தமாக பன்றிகள் மேய்க்கும் ஆயன்களை ஒதுக்கிவிடும் ஆபத்து வந்துவிடும்.

இயேசுவின் "நல்லாயன்" உருவகம் ஒரு தொழில் உருவகம். "நல்லாசிரியர்," "நல்விவசாயி," "நல்மருத்துவர்," "நல்தணிக்கையாளர்," "நல்துப்புரவாளர்" என நாம் மாற்றிக்கொண்டே போகலாம். "நல்ல ஆசிரியர் நானே. நல்ல ஆசிரியர் தன் மாணவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பார். வெறும் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர் தேர்வு வருவதைக் கண்டு அல்லது பாடங்கள் அதிகம் இருப்பதைக் கண்டு மாணவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவார். அவர் ஆசிரியரும் அல்ல. மாணவர்கள் அவருக்குச் சொந்தமும் அல்ல..." - இப்படியாக நாம் எந்தத் தொழிலோடும் இந்த உருவகத்தைப் பொருத்திப்பார்க்க முடியும்.

ஆடுமேய்க்கும் ஆயன் தொழில் மட்டுமல்ல, மாறாக, எல்லா தொழில்கள் மற்றும் பணிகளுக்கு பொதுவாக இந்த "ஆயன்" என்ற உருவகத்தை எடுத்துக்கொண்டு, குடும்பத்தில், சமூகத்தில், நம் பணித்தளத்தில் நாமும் நல்ல ஆயர்களாக இருப்பது எப்படி என்பதை "சொந்தம், பொறுப்பு" என்ற இரண்டு உணர்வுகள் வழியாகச் சிந்திப்போம். நல்லாயானின் நல்உணர்வுகளாக இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்வது மேற்காணும் இரண்டு உணர்வுகளே.

"அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்" ("The Seven Habits of Highly Effective People") என்ற நூலின் ஆசிரியர் ஸ்டீபன் கோவே மனித நடத்தையின் சில கூறுகளை ஒரு மாதிரி வழியாக விளக்குகின்றார். இந்த மாதிரியில் இரண்டு வட்டங்கள் உண்டு: (அ) கவலை வட்டம் (The Circle of Concern), (ஆ) பாதிப்பு வட்டம் (The Circle of Influence). வெளியில் இருக்கும் வட்டம் கவலை வட்டம். இந்த வட்டத்தில் உள்ளவை நமக்கு கவலை தருகின்றன. ஆனால், இவற்றைக் குறித்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சரின் செயல்பாடு, பெட்ரோல் விலை ஏற்றம், பொருளாதாரம், சூரிய வெப்பம், ஐபிஎல் கிரிக்கெட் போன்றவை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை நம்மை அச்சுறுத்தி நமக்குக் கவலை தருகின்றன. ஆனால், இவற்றை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளே இருக்கும் வட்டம் பாதிப்பு வட்டம். இந்த வட்டத்தில் இருப்பவர்கள் நம் உறவுகளும், நண்பர்களும், நம் வேலையும். இவற்றின்மேல் நாம் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்த முடியும். அவைகளும் நம்மேல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உள்வட்டத்தை விட்டு வெளிவிட்டத்தின்மேல் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கு அந்த வட்டம் விரிந்துகொண்டே சென்று உள்வட்டத்தையும் விழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது. அவர்களுக்குப் பதற்றம், பரபரப்பு, கவனமின்னை அதிகமாகும். ஆனால், உள்வட்டத்தின்மேல் மட்டும் அக்கறை கொள்பவர்கள் தங்கள் குடும்பம், நட்பு, வேலை அனைத்திலும் நல்பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக உருப்பெறுவர்.

இன்றைய நாளின் பின்புலத்தில் சொல்ல வேண்டுமென்றால் உள்வட்டத்தின்மேல் கவனம் செலுத்துபவர்களே நல்ல ஆயர்கள். இந்த நல்ல ஆயர்களிடம் இரண்டு பண்புகள் மேலோங்கி இருக்கும் என இயேசு இன்றைய நற்செய்தியில் முன்மொழிகின்றார்: அ. சொந்தம் உணர்வு, ஆ. பொறுப்புணர்வு.

அ. சொந்தம் உணர்வு ("Sense of Ownership")

தன்னை "நல்ல ஆயன்" என்று உருவகிக்கின்ற இயேசு தொடர்ந்து, "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல. ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல" என்கிறார். கூலிக்கு மேய்ப்பவர் ஆடுகள்மேல் உரிமை கொண்டாட முடியாது. இவ்வாறாக, ஆடுகளின் உரிமையாளருக்கும், ஆடுகளுக்கும் அவர் அந்நியமாகவே இருக்கிறார். ஆனால், ஆயன் அப்படி அல்ல. ஏனெனில் ஆடுகள்மேல் அவருக்கு உரிமை உண்டு. அவர் அவைகளின் மேல் சொந்தம் கொண்டாட முடியும். சொந்தம் கொண்டாடும் இந்த உணர்வே அவருக்கு ஆடுகளின் மேல் உள்ள அக்கறையை இன்னும் அதிகமாக்குகிறது. "சொந்த உணர்வு" இங்கே "அறிதல்" என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிறது. "நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன" என்கிறார் இயேசு.

இன்று நம் உறவுநிலைகளில் சில இரத்த உறவுகள், சில திருமண உறவுகள், சில உடன்படிக்கை அல்லது நட்பு உறவுகள். இந்த மூன்று வகை உறவுகளிலும் சொந்த உணர்வு இயல்பாகவே இருக்கிறது. சில நேரங்களில் இரத்த, திருமண உறவுகளை விட உடன்படிக்கை மற்றும் நட்பு உறவுநிலைகளில் சொந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. இந்த சொந்த உணர்வு வரக்காரணம் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளுதலே.

அறிந்துகொள்ளுதலில் இரண்டு வகை உண்டு: (அ) மேலோட்டமான அறிதல் ("superficial knowing" - "to know about), (ஆ) ஆழ்ந்த அறிதல் ("deeper knowing - "to know" . எடுத்துக்காட்டாக, ஜென் தியானம் பற்றிய அறிதலில் மேலோட்டமான அறிதல் என்பது இந்த தியான முறையைத் தோற்றுவித்தவர் அல்லது அதன் வரலாறு பற்றி அறிதல். ஆனால் ஆழ்ந்த அறிதல் என்பது இந்த தியானத்தில் பங்கேற்று இந்த தியானத்தை முழுமையான அனுபவத்தைப் பெற்றிருப்பது. அது போலவே, ஒரு நபரைப் பற்றிய மேலோட்டமான அறிதலில் நாம் அவரின் பெயர், ஊர், சுற்றம், விருப்பு, வெறுப்பு பற்றி அறிகின்றோம். ஆனால், அதுவே ஆழமான அறிதலாக மாறும்போது அந்த நபரோடு நாம் இருக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருக்கின்றோம்.

இரண்டாம் வகை அறிதல்தான் "சொந்த உணர்வை" தோற்றுவித்து வலுப்படுத்துகின்றது.

ஆ. பொறுப்புணர்வு ("Sense of Responsibility")

சொந்தம் உணர்வு என்னும் நாணயத்தின் இரண்டாம் பக்கம் பொறுப்புணர்வு. ஒரு உணர்வுநிலை நமக்கு எப்படி உரிமையைக் கொடுக்கிறதோ, அதுபோல அது பொறுப்புணர்வையும் வரையறுக்கிறது.

"என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்... நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும்" என தன் பணியை வரையறுக்கின்றார் இயேசு. இயேசுவின் இந்த வரையறை நல்லாயனின் பொறுப்புணர்வை எடுத்தியம்புகிறது. உயிரைக் கொடுத்தல் தான் உச்ச கட்ட கொடுத்தல். நேரம், ஆற்றல், பணம் போன்ற அனைத்து கொடுத்தல்களிலும் ஒருவர் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உயிரைக் கொடுத்தலில் அப்படி எதுவும் இல்லை. ஒருவர் தன் வாழ்வை அழித்து மற்றவருக்கு வாழ்வு கொடுத்தல் எப்படி எல்லாம் சாத்தியமாகலாம்?

இஸ்ரயேல் நாடு மலைப்பாங்கான நாடு. இவ்வகை இடங்களில் ஆடுகளை மேய்ப்பவர் ஆடுகளுக்கு முன் நடந்து செல்வார். ஒருவேளை ஓநாய் மந்தையைத் தாக்க முன்வந்தால் இவர் தன்னை இரையாக ஓநாய்க்கு கையளித்து ஒட்டுமொத்த மந்தையின் உயிரைக் காப்பாற்றுகின்றார். இவ்வாறாக, அடுத்தவரின் வாழ்வுக்குத் தன் உயிரைக் கையளிக்கின்றார் நல்லாயன்.

இன்று நாம் நம் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நல்லாயனாக இருக்க முடியவில்லை என்றாலும், நம் நேரம், ஆற்றல், பொருள், அறிவு ஆகியவற்றை அடுத்தவருக்கு விரித்துக்கொடுத்தாலே அது பெருமையே.

இன்றைய முதல் வாசகத்தில் (திப 4:8-12) எருசலேமின் சாலமோன் மண்டபத்தில் பேதுரு ஆற்றிய மறையுரையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டோம். இயேசுவின் இறப்புக்குக் காரணமானவர்களைக் கடிந்துகொள்கிறார் பேதுரு. இவர்களிடம் "சொந்தம் உணர்வு" மற்றும் "பொறுப்புணர்வு" இல்லாத காரணத்தால்தாம் அவர்கள் இயேசுவை சிலுவைச்சாவுக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் அவரின் உயிர்ப்பில் வானகத்தந்தையின் "சொந்த உணர்வு" மற்றம் "பொறுப்புணர்வு" துலங்குகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் கடவுள் மனிதர்கள்மேல் பாராட்டும் சொந்த உணர்மூ கடவுளுக்கும் நமக்கும் உள்ள "தந்தை-பிள்ளை" உறவு என்று விரிகின்றது. இங்கேயும் அறிதலே அடிப்படையான ஒரு செயலாகக் கருதப்படுகிறது.

இறுதியாக,

"சொந்த உணர்வு" மற்றும் "பொறுப்புணர்வு" நல்லாயனின் நற்பண்புகளாக அவரிடம் நாம் கற்றுகொள்வோம். அவற்றை நம் குடும்பங்களிலும், பணி மற்றும் படிப்பு தளங்களில் கொண்டிருக்க முன்வருவோம்.

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
I திருத்தூதர் பணிகள் 4: 8-12
II 1 யோவான் 3: 1-2
III யோவான் 10: 11-18

தன்னுயிரையே கொடுத்த நல்லாயன் இயேசு

நிகழ்வு

இளைஞர்களின் எழுச்சி நாயகனாம் சுவாமி விவேகானந்தருக்கு நன்கு அறிமுகமானவர் ஆங்கிலேயரான ஜெனரல் ஸ்ட்ராவ். இவரிடம் விவேகானந்தர் மனம்விட்டுப் பேசுவதுண்டு. ஜெனரல் ஸ்ட்ராவும் விவேகானந்தரிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.

ஒருநாள் விவேகானந்தர் இவரிடம், "நடந்து முடிந்த சிப்பாய்க் கலகத்தில் எங்களுடைய சிப்பாய்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், கையில் தரமான துப்பாக்கிகளோடும், வெடிமருந்துகளோடும், உணவுக் பொருள்களோடும் இருந்தும், அவர்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?" என்றார். அதற்கு ஜெனரல் ஸ்ட்ராவ், "சிப்பாய்க் கலகத்தின்போது உங்களுடைய படைத்தலைவர்கள், சிப்பாய்களுக்கு முன்னால் நின்று போர் புரியாமல், அவர்களுக்குப் பின்னால் மிகவும் பாதுகாப்பாக நின்றுகொண்டு, வீரர்களே! சண்டையிடுங்கள்" என்று கத்திக்கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் தாங்கள் முதலில் இறப்பை எதிர்கொள்ள முன்வராவிட்டால், எஞ்சிய வீரர்கள் ஒருபோதும் இறப்பை எதிர்கொள்ள முன்வரமாட்டார்கள். இதுதான் உங்களுடைய தோல்விக் காரணம்" என்றார்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் அவரிடம், "நீங்கள் சொல்வதிலிருந்து ஒன்று எனக்கு நன்றாகப் புரிகிறது. அது என்னவெனில், தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக்கூடியவனாய் இருக்கவேண்டும். ஒரு இலட்சியத்திற்காக உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனே உண்மையான தலைவன் என்பதாகும்" என்றான்.

ஆம், தலையைப் பலியாகக் கொடுக்கக்கூடியவனே உண்மையான தலைவன், ஆயன். இன்று நாம் நல்லாயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட வாசகங்கள், இயேசு கிறிஸ்துவை எத்தகைய ஆயனாக முன்னிலைப்படுத்துகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆடுகளுக்காக உயிரையும் தரும் நல்லாயன்

மேய்ச்சல் நிலங்களைத் தேடி, நாடோடிகளாய் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய கடவுளை ஓர் ஆயனாகப் பார்த்ததில் வியப்பேதும் இல்லை (திபா 23: 1; எசா 40: 11); ஆனால், இஸ்ரயேலை ஆயரென ஆண்டவர்கள் மந்தையைச் சரியாக மேய்க்காமலும், நலிவுற்றதைத் திடப்படுத்தாமலும், நோயுற்றதை நலப்படுத்தாமலும், காயப்பட்டதிற்குக் கட்டுப் போடாமலும், வழிதவறிப்போனவற்றைத் தேடாமலும் இருந்து, கொழுத்ததை உண்டு, மந்தையைச் சிதறடித்து வந்ததால் (எசே 34: 1-6) ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தார் (யோவா 10: 10) "நல்ல ஆயன்" இயேசு.

"நல்லாயன் நானே" என்றும், "எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே" (யோவா 10:8) என்றும் சொல்வதற்கு இயேசுவுக்கு மிகுந்த துணிச்சல் இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இயேசு இவ்வார்த்தைகளைப் பேசிய நேரம், எருசலேமில் அர்ப்பண விழாவானது நடந்துகொண்டிருந்தது (யோவா 10: 22). இவ்விழாவானது கி.மு.165 ஆம் ஆண்டு யூதா மக்கபே, அந்தியோக்கு எப்பிபானை வெற்றிகொண்டு, எருசலேம் திருக்கோயிலை மீண்டுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்ததன் நினைவாகக் கொண்டாடப்பட்டது. நிச்சயம் இவ்விழாவிற்குத் தங்களை ஆயர்கள் என்று அழைத்துக்கொண்ட யூத சமயத்தலைவர்கள் வந்திருக்கவேண்டும். அவர்களுக்கு நடுவில், தனக்கு முன்பாக வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே என்று சொல்லிவிட்டு, நல்லாயன் நானே என்று இயேசு சொல்வதால், அவருக்கு மிகுந்த துணிவு இருந்திருக்கவேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றது.

ஆம், இயேசு தனக்கு முன்பிருந்தவர்களைப் போன்று மந்தையிலிருந்த கொழுத்ததைத் தின்றவர் அல்ல, மாறாக, அவர் மந்தைக்காக, ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அதனால் அவர் நல்லாயனாகத் திகழ்கின்றார்.

ஆடுகளை அறிந்த நல்லாயன்

எல்லாராலும் ஆயனாக, அதுவும் நல்லாயனாக முடியாது. காரணம், ஒரு நல்லாயன் ஆடுகளின் பெயரை மட்டுமல்லாது, அவற்றின் தேவையையும் நன்றாக அறிந்து வைத்திருப்பான். "பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே" (எசா 45: 3) என்ற வார்த்தைகளும், "நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (மத் 6: 8) என்ற வார்த்தைகளும் கடவுள் நல்லாயனாய் இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்திப்படுத்துகின்றன.

இப்படி ஆடுகளின் பெயரையும் தேவையையும் அறிய, அவற்றின்மீது அன்புகொண்டிருப்பவரால் மட்டுமே முடியும். கடவுளாகிய ஆண்டவர் நம்மீது பேரன்பு கொண்டுள்ளார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. திருத்தூதர் புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும், "நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார்!" என்ற வார்த்தைகளே இதற்குச் சான்றாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு, "என் ஆடுகளை நான் அறிந்திருக்கின்றேன்" என்று சொல்கிறார் எனில், அவர் தன் ஆடுகளை நம்மை முழுமையான அன்பு செய்வதாலேயே அப்படிச் சொல்கின்றார் என்று புரிந்துகொள்ளலாம்.

இன்றைக்கு மக்கள் தலைவர்கள் என்று இருக்கும் பலர் மக்களுடைய தேவைகளையும், அவர்களுடைய பிரச்சனைகளையும் அறியாமல், மழைக்கு மட்டும் வந்துபோகும் புற்றீசல்கள்போல், தேர்தல் சமயங்களில் மட்டும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு நடுவில், தன் ஆடுகளை மக்களை முழுமையாக அறிந்துவைத்திருக்கும் இயேசு நல்லாயன்தான்.

ஆடுகளுக்கு மீட்பளிக்கும் நல்லாயன்

திருத்தூதர் புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்" (1திமொ 2: 4). பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தோடும், முதல் வாசகத்தோடும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், நல்லாயனாம் இயேசு எல்லா மனிதரும் மீட்பு பெற விரும்புகின்றார் என்பது புரியும்.

நற்செய்தியில் இயேசு, "இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன" என்கின்றார். இங்கு இயேசு குறிப்பிடும் வேறு ஆடுகள் என்பன, ஏழைகள் மற்றும் பிறவினத்தார் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். ஆகையால், ஏழைகளும் பிறவினத்து மக்களும் அவருக்கு ஆடுகளாக இருக்கின்றார்கள் அல்லது அவர் எல்லாருக்கும் ஆயராக இருக்கின்றார் என்பது உறுதியாகின்றது. இப்படி எல்லாருக்கும் ஆயராக இருக்கும் நல்லாயன் இயேசு, எல்லாருக்கும் மீட்பு அளிக்கக்கூடியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பேதுரு, "இயேசுவாலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை" என்கின்றார்.

இன்றைக்குப் பலர் மக்கள் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு அலையலாம். அவர்களால் யாருக்கும் மீட்பளிக்க முடியாது. நல்லாயனாம் இயேசுவாலேயே எல்லாருக்கும் மீட்பளிக்க முடியும். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை! இப்படி நமக்காகத் தன்னுயிர் தந்து, நம்மை முழுவதும் அறிந்து, நமக்கு மீட்பினை வழங்கும் நல்லாயனாகிய இயேசுவின் ஆடுகளாக இருக்க, நாம் அவரது குரல் கேட்டு நடப்பது தேவையான ஒன்று. ஏனெனில், இயேசுவின் ஆடுகள் அவரது குரலுக்குச் செவிமடுக்கும்.

நாம் நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரின் ஆடுகளாக முயற்சி செய்வோம்.

சிந்தனை

மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, மக்களுக்குப் பணிபுரிவது ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் மட்டுமல்லாது, எல்லாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என உணர்ந்து, நல்லாயன் இயேசுவைப் போன்று மக்களுக்காக நம்மையே தர முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
நல்லாயன் இயேசு

1792 ஆம் ஆண்டு மெக்லென் பெர்க்கின் இளவரசர் ஆரஞ்ச் நாட்டின் இளவரசரைச் சந்திக்கச் சென்றார். கப்பல்கள் கடலுக்குள் செல்லும் விழாவிற்கு அயல்நாட்டு இளவரசரை அழைத்துப் போனார் ஆரஞ்ச் நாட்டு இளவரசர்.

விழாவைக் குறிக்கும் விதமாக கப்பலில் இருந்தவர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் கடலில் தவறி விழுந்துவிட்டான். அடுத்த வினாடியே ஆரஞ்சு நாட்டு இளவரசர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்தார். இதைப் பார்த்து, இளவரசரையும் இளைஞனையும் மீட்க பலரும் குதித்தனர். இறுதியில் இளவரசரை மட்டுமே முடிந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசரிடம், "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேட்டபோது அவர் சொன்னார், "என் சொந்த சகோதரன் விழுந்திருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா? கடலில் குதித்து, அவனைக் காப்பாற்றி இருப்பேன் அல்லவா... கடலில் தவறி விழுந்த இளைஞனை என்னுடைய சொந்த சகோதரனாகவே பார்த்தேன். அதனால்தான் கடலில் குதித்து அவனைக் காப்பாற்ற முயன்றான். ஆனால், என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை" என்றார். பின்னர் இறந்த இளைஞனின் குடும்பத்திற்கு பெரும் தொகையைக் கொடுத்து, குடும்பத்தாரிடம், எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் கேளுங்கள், நான் உங்களுக்கு நிறைவேற்றித் தருகின்றேன்" என்றார் அந்த இரக்கமிக்க இளவரசர்.

"நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுப்பார்" என்பார் இயேசு கிறிஸ்து. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளவரசர் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டகத் திகழ்கின்றார். பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை திருச்சபை நல்லாயன் ஞாயிராகக் கொண்டாடப் பணிக்கின்றது. இந்த நல்ல நாளில் ஆண்டவர் இயேசு எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், நல்லாயனின் மந்தையாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தொடக்க காலத்தில் யூதர்கள் ஆடு மேய்க்கும் தொழிலைத்தான் பிரதானத் தொழிலாகச் செய்துவந்தார்கள். விவிலியத்தில் நாம் வாசிக்கின்ற ஆபேல், மோசே, தாவீது, இறைவாக்கினர் ஆமோஸ் இன்னும் ஒருசில முக்கியமான ஆளுமைகள் எல்லாம் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவந்தார்கள் என்பது நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இப்படி ஆடுமேய்த்தலை பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்த யூதர்கள் தாங்கள் வணங்கும் கடவுளை ஆயனாக பார்த்ததில் வியப்பேதும் இல்லை (திபா 23). இதனை நன்கு உணர்ந்த இயேசு கிறிஸ்து தன்னை ஓர் ஆயனாகவும், மக்களை மந்தையாகவும் உருவகமாகப் பேசுகின்றார். எனவே, இயேசு தன்னை ஒரு ஆயனாக, அதுவும் நல்ல ஆயனாகக் குறிப்பிடும் பட்சத்தில், அவர் எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், அவருடைய மந்தையாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நல்ல ஆயனுக்கு உரிய முதன்மையான தகுதி ஆடுகளை அறிந்திருப்பதாகும். எதுவெல்லாம் தன்னுடைய ஆடுகள், அந்த ஆடுகளின் தேவை என்ன, அவற்றிற்கு என்ன பிரச்சனை என்பதை ஓர் ஆயன் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். ஆடுகளையும், அவற்றின் பிரச்னையையும் முழுமையாக அறியாத ஆயன் நல்ல ஆயானாக இருக்கமுடியாது என்பதுதான் உண்மை. இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வில் சீடர்களையும், மக்களையும் அழைக்கின்றபோது அவர்களுடைய பெயர் சொல்லிதான் அழைக்கின்றார். எடுத்துக்காட்டாக மத்தேயுவையும், நத்தனியேலையும், ஏன் சக்கேயுவையும் அழைக்கின்றபோது அவர் பெயர் சொல்லித்தான் அழைக்கின்றார். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர்களையும், இறையடியார்களையும் அழைக்கின்றபோது எப்படி பெயர் சொல்லி அழைத்தாரோ, அதுபோன்று ஆண்டவர் இயேசுவும் மக்களைப் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

பெயர் சொல்லி அழைப்பது என்பது ஒரு மனிதரை முழுமையாக அறிவதற்குச் சமமாகும். அந்த வகையில் நம்மை முழுமையாக அறிந்திருப்பதால் இயேசு ஓர் நல்ல ஆயானாகத் திகழ்கின்றார்.

நல்லாயனாகிய இயேசு ஒவ்வொருவரையும் முழுமையாக அறிந்திருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நம்மை ஆளக்கூடியவர்கள், நம் தலைவர்கள், ஏன் நாம் நம்மோடு இருப்பவர்களை முழுமையாக அறிந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை, கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவரையும் முழுமையாக அறிந்திருக்கவில்லை, அதனாலேயே குடும்பத்தில் அதிகமான குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு தம்பதியினர் தங்களுக்குத் தெரிந்த இன்னொரு தம்பதியினரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றிருந்தனர். விருந்து மிகத் தடபுலாக நடைபெற்றது. விருந்து முடிந்ததும் மனைவியர் இருவரும் சற்று வெளியே சென்றுவிட்டனர். கணவன்மார்கள் இருவர் மட்டும் சாப்பிட்ட இடத்திலேயே நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவர் மற்றவரிடம், "நேற்று இரவு நானும் என் மனைவியும் ஓர் உயர்தர உணவகத்திற்குச் சென்றிருந்தோம். அந்த உணவகத்தில் உணவு அருமையாக இருந்தது. நீங்களும்கூட அந்த உணவகத்திற்குப் போகலாம், நிச்சயம் அருமையாக உணவு வகைகள், அற்புதமான உபசரிப்பு அங்கு கிடைக்கும்" என்றார். உடனே மற்றவர் அவரிடம், "அந்த உணகத்தின் பெயர் என்ன?" என்று கேட்டார். அவருக்குத் திடிரென்று உணவகத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை. உடனே அவர் அதனை மற்றவரிடம் வெளிகாட்டிக்கொள்ளாமல், "நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர் என்றால், அவருக்கு என்ன பூவை பரிசாகக் கொடுப்பீர்கள்?... அந்தப் பூ சிவப்பாக இருக்கும், அதன் அடியில் முட்கள்கூட இருக்கும். அது என்ன பூ?" என்று கேட்டார். உடனே மற்றவர், "ரோஸ்" என்றார்.

"மிகச் சரியான பதில்" என்று சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து, "ரோஸ்! நேற்று நாம் சாப்பிடச் சென்ற உணவகத்தின் பெயர் என்ன?" என்று கேட்டார். இதைக் கேட்ட மற்றவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

தன் மனைவியின் பெயரைக்கூட அறிந்து வைத்திராத கணவனை என்னவென்று சொல்வது? இப்படித்தான் நிறையப் பேர் தங்களோடு இருப்பவர்களை, தங்களுடைய மக்களை முழுமையாக அறிந்துவைக்காமல் இருக்கின்றார்கள். ஆனால், நல்லானாகிய இயேசு நம்மை முழுமையாய் வைத்திருக்கின்றார்.

நல்லாயனுக்குரிய இரண்டாவது முக்கியமான தகுதி ஆடுகளின் தேவையை பூர்த்தி செய்வதாகும். திருப்பாடல் 23 ல் வாசிக்கின்றோம், "பசும்புல் வெளிமீது அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதிவழி நடத்திடுவார்" என்று. ஆம், ஒரு நல்ல ஆயன் என்பவர் இப்படித்தான் தன்னுடைய மந்தையின் தேவையென்ன, அதன் அன்றாடப் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டும்.

இயேசு ஒரு நல்ல ஆயனைப் போன்று செயல்பட்டார் என்பதை நற்செய்தியில் வருகின்ற பல நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டார் என்றும், அவர்களுக்குப் பலவற்றைப் போதித்து, மக்களிடமிருந்த நோயாளிகளைக் குணமாக்கினர் என்று நாம் வாசிக்கின்றோம் (மத் 14:14). அது மட்டுமல்லாமல், இயேசு மக்களின் அவலநிலையை கண்டு, தாமாகவேச் சென்று உதவி செய்தார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச் சான்று பகர்கின்றன. இவையெல்லாம் இயேசு ஒரு நல்ல ஆயன் என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன.

நல்லாயன் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களின் தேவையை அறிந்து, அவற்றினை நிவர்த்தி செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நல்லாயனுக்கு உரிய மூன்றாவது முக்கியமான தகுதி ஆடுகளுக்காக உயிரைத் தருவதாகும். இயேசு சொல்கின்றார், "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளைவிட்டு விட்டு ஓடிபோவார்" என்று. இது முற்றிலும் உண்மை. இயேசு மந்தையாகிய நமக்காக தன்னுடைய உயிரையே தந்தார். உயிரைத் தந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இறப்பினால் நமக்கு பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் மீட்பைப் பெற்றுத் தருகின்றார் (முதல் வாசகம்). இதுதான் இயேசுவுக்கும் மற்ற ஆயர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஏனையோர் ஆடுகளைப் பற்றி அக்கறைகொள்ளவில்லை, அவற்றிற்காக உயிரையும் தரவில்லை. ஆனால், இயேசுவோ ஆடுகளுக்காக உயிரைத் தந்தார். அதுவும் தாமாகவே தந்தார். இவ்வாறு அவர் நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ( 1 யோவான்) யோவான், "நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள" என்கின்றார். தந்தை நம்மீது அன்பு கொண்டதுபோன்றே மகனாகிய இயேசுவும் நம்மீது அன்புகொண்டார். அதன் வெளிப்பாடுதான் தன்னுடைய உயிரைத் தந்தது. இயேசு நம்மீது அன்புகொண்டது போன்று, நாமும் ஓருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் சவாலாக இருக்கின்றது.

ஒரு நல்ல ஆயன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்த நாம், ஆடுகளாக நம் எப்படி இருக்கவேண்டும் என்றும் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசு கூறுவார், "என் ஆடுகள் என் குரலுக்கு செவிகொடுக்கும்". ஆம், ஆடுகளாகிய நாம் ஆயனின் குரலுக்கு செவிமடுத்து, அதற்கேற்ப வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆயனின் குரலுக்குச் செவிகொடுக்காத ஆடுகள் அழிவுக்குச் செல்வது போன்று, ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, அதன்படி வாழவில்லை என்றால், நாம் அழிவது உறுதி.

ஆகவே, நல்லாயன் ஞாயிரைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இயேசுவை நல்லாயன் என்பதை உணர்வோம். ஆயனின் குரலுக்கு செவிமடுத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
பாலமாகிய கிறிஸ்து

ஒரு மனிதன்‌ 100 ஆடுகளுக்கு மேல்‌ வைத்திருந்தான்‌. தினமும்‌ காட்டுக்கு அழைத்துச்‌ செல்வான்‌. எந்தக்‌ குறையும்‌ அவன்‌ வைக்கவில்லை. ஒருநாள்‌ திடீரென புதருக்குள்‌ இருந்து ஒரு புலி ஒன்று வெளியே வந்தது. ஆட்டுக்‌ கிடையை நோக்கி வந்தது. கண்‌ எதிரே வெகு தூரத்தில்‌ ஒரு பாலம்‌ தெரிந்தது. அதன்‌ வழியாக ஆட்டை ஓட்டி தப்பித்துவிடலாம்‌ என ஓட்டினான்‌. தண்ணீர்‌ நிறைந்திருந்தது. ஆனால்‌ பாலம்‌ உடைந்திருந்தது. ஆடுகள்‌ கடந்தால்‌ நீரில்‌ விழ நேரிடும்‌. எனவே தான்‌ படுத்து பாலமாக்கி ஆடுகளைக்‌ கடக்க வைத்தான்‌. ஆடுகள்‌ அவன்மீது மிதித்து கடந்தன. முதுகில்‌ காயம்‌, இரத்தம்‌. இறுதியாக புலி ஓடி வந்து மயங்கிக்‌ கிடந்த ஆயனைக்‌ கடித்துச்‌ சாப்பிட்டுப்‌ பசியைத்‌ தீர்த்துக்‌ கொண்டது.

தன்‌ உயிர்‌ கொடுத்து தனது ஆடுகளின்‌ உயிரை அந்த மனிதன்‌ காப்பாற்றினான்‌. அந்த ஆயன்‌ யாரும்‌ அல்ல. நாம்‌ வாழ தனது உயிரைத்‌ தந்த இயேசுதான்‌ அந்த ஆயன்‌. ஒரு காலத்தில்‌ பாவங்கள்‌ என்னும்‌ புலிகள்‌ துரத்தி அடித்துச்‌ சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில்‌ நல்லாயனாம்‌ இயேசு உலகத்தில்‌ உதித்து விண்ணுக்கும்‌, மண்ணுக்குமிடையே பாலமாக நின்று உலக மக்களைப்‌ பாவத்திலிருந்து காப்பாற்றி, உயிர்‌ கொடுத்தார்‌.

ஒருவனை திமிர்வாதம்‌ தாக்கியது. அன்போடு அவனை நோக்கி உன்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன. எழுந்து நட என்றார்‌. மதலேன்‌ மரியாவிடம்‌ உன்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன. சமாதானமாகப்‌ போ என்றார்‌.

முடிவரை
இயேசுதான்‌ நமக்குப்‌ பாலம்‌, வழி, உண்மை, உயிர்‌ (யோவா. 14:6). அவர்‌ மீது நடந்தால்தான்‌ நமக்கு வாழ்வு உண்டு. இன்று எத்தனையோ புலிகள்‌ போன்ற பாவங்கள்‌ நம்மைத்‌ துரத்துகின்றன. விழுந்தால்‌ வித்தாக விழ வேண்டும்‌.

கோதுமை மணி தரையில்‌ விழுந்து மடிந்து எழுந்தால்‌ பலன்‌ தருவதுபோல நாமும்‌ மடிந்து வாழ்வுக்கு எழ வேண்டும்‌ (யோவா. 12:24). இன்று வாய்மைக்கும்‌, தூய்மைக்கும்‌, நீதிக்கும்‌, நேர்மைக்கும்‌ எதிராக எத்தனையோ போராட்டங்கள்‌. வீட்டிலும்‌ உள்ளத்திலும்‌ இந்தப்‌ போராட்டங்கள்‌.

பாலமாகிய கிறிஸ்து அழைக்கிறார்‌. என்மீது நடங்கள்‌. என்‌ வாழ்வின்‌ மீது நடங்கள்‌. உங்கள்‌ இதயம்‌ பாவத்திலிருந்து விடுபடட்டும்‌. வாழ்வு கிடைக்கும்‌.
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
நாம் மீட்புப் பெற என்ன செய்யவேண்டும்?

சென் மாஸ்டர் சோயென் ஷாக்கு அறுபத்தோரு வயதுவரை இந்த உலகத்திலே வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்திட்டத்தில் அவர் மிகவும் அரிய போதனைகளை இந்த உலகுக்குத் தந்தார். இவருடைய வாழ்க்கையிலே நடந்த நிகழ்ச்சி இது!

சோயென் சிறுவனாக இருந்தபோது அவருடைய சென் மாஸ்டர் வெளியே சென்றிருந்தபோது கால்களை நீட்டி, பகலில் படுத்துத் தூங்கிவிட்டார்: சுமார் மூன்று மணி நேரம் சென்ற பிறகு அவர் திடீரென கண்விழித்தபோது அவருடைய சென்மாஸ்டர் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டார். என்னை மன்னித்துக்கொள் என்னை மன்னித்துக்கொள் என்று மெல்லக்கூறிவாறு, யாரோ ஒரு புகழ்பெற்ற விருந்தாளியைக் கடந்துசெல்லுவது, போல, சொயென் மீது கால்கள் படாதவாறு மிகவும் எக்சரிக்கையாக சென்மாஸ்டர் சோயெனைத் தாண்டி உள்ளே சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சோயென் பகலில் தூங்குவதே இல்லை. ஒரு சென்மாஸ்டாரின் அன்பு ஒரு சீடனை பகல் தூக்கத்திலிருந்து விடுவித்ததை மீட்டதை இங்கே காண்கின்றேன்.

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்கந்தத் தம் உயிரைக் கொடுப்பார். அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கின்றேன்" (யோவான்10:11,15) என்று சொன்னபடியே இயேசு அவரது உயிரை உலக மக்களுக்குக் கொடுத்தார். இப்படி உயிரைக் கொடுத்ததின் வழியாக ஒரு மனிதன் எந்த் அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்ய வேண்டும் என்பத்தை உலகுக்குக் கட்டிக்காட்டி, உலகத்தை இயேசு சுயநலத்திலிருந்து மீட்டார்.

நாம் உண்மையிலேயே கடவுளின் மக்களாக (இரண்டாம் வாசகம்) வாழ விரும்பினால், இயேசுவின் அன்பு நிறைந்த பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றின் உள் பொருளை உணர்ந்து. சுயநலத்திலிருந்தும் அது பெற்றெடுக்கும் பாவங்களிலிருந்தும் நம்மையே நாம் விடுவித்துக்கொண்டு மீட்கப்பட்டவர்களாக வாழ முன்வர வேண்டும்.

நாம் மீட்பு பெறுவதற்காகவே (முதல் வாசகம்) இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினார். இந்த உண்மையைப் உணர்ந்து, செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைக் கேட்டு இறைவனிடம் மன்றாடுவோம்.

இறைவன் இயேசுவின் ஆழமான அன்பைப் பார்த்துப் பாராட்டுகின்ற பாராட்டாளர்களாக மட்டுமல்ல, இயேசுவின் வாழ்க்கையைப் படிக்கும் மாணவர்களாக மட்டுமல்ல, இயேசுவின் தியாகத்தை அறிக்கையிடும் நற்செய்தியாளர்களாக மட்டுமல்ல; இயேசுவின் சொல்லாலும், செயலாலும் தொடப்பட்டவர்களாய் விடுதலை அடைந்தவர்களாய் மீட்கப்பட்டவர்களாய் வாழ எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.

மேலும் அறிவோம்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள்: 228)

பொருள் :
வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து. இவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது. பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்.
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக 'மோட்டார் சைக்கிளில்' மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில் வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார். அவ்வழியே சென்ற பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவார், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இன்று கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர். அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை."

இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை" முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-16: திபா 23).

நல்லாயனுடைய தனிப்பண்புகள்: "அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்."

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3:15), கடவுளால் வாக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர்தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16).

நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள், தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, பங்குமக்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்பு செய்து, வீடுகளில் அவர்களைச் சந்தித்து, இயன்ற மட்டும் அவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்து, அவர்கள் மந்தையை விட்டு விலகாமல் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கட்டாயத்தினாலோ இழிவான ஊதியத்திற்காகவோ பணிபுரியாமல் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். மக்களை அடக்கி ஆளாமல் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருத்தல் அவசியம் (1 பேது 5:2-3).

காணாமற்போன தனது ஒரே ஆட்டைத் தேடிச் சென்றவர், பல இடங்களில் ஆட்டைக் காணாத நிலையில், ஒரு பூங்காவிற்குச் சென்றார். இரு காதலர்கள் இப்பூங்காவில் மெய் மறந்து பேசிக் கொண்டிருந்தனர். காதலன் காதலியிடம், "மானே! உன் முகத்தில் உலகமே தெரிகிறது" என்றான், உடனே ஆட்டைத் தேடிச் சென்றவர் அக்காதலனிடம், "தம்பி, அந்தப் பெண் முகத்தில் உலகமே தெரிஞ்சா, என் ஆடு எங்கே நிற்கிறது? என்று தயவு செய்து சொல்லப்பா' என்றார். இது பழைய கதை என்றாலும், ஓர் ஆயனுக்குத் தன் ஆட்டின் மீது இருக்கவேண்டிய அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. திருப்பணியாளர்கள் ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கு மட்டும் பணிபுரியாமல், ஆலயத்திற்கு வராதவர்களையும் தேடிச் செல்லவேண்டாமா?

திருமேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும், அவ்வாறே ஆடுகளும் தங்களுடைய மேய்ப்பர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து, மந்தையில் திருட்டுத்தனமாக நுழைந்து ஆடுகளைப் பறித்துக் கொண்டுபோகும் ஓநாய்களான போலிப்போதகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விழிப்பாயிருக்க வேண்டும்,

"ஆண்டவர் என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை " என்னும் 23-ம் திருப்பாவைக் குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் உண்மையிலேயே இன்று பாட முடியுமா? நமது நல்ல ஆயன் இயேசு கிறிஸ்துவா? அல்லது டி.வி. யா?

23-வது திருப்பாவை இக்காலத்தில் பின்வருமாறு தான் பாடமுடியும்: "டி.வி, என் ஆயன்; ஆகவே எனக்கொரு குறையுமிராது. அது என்னை பஞ்சுமெத்தையில் படுக்கச் செய்கிறது விசுவாச வாழ்விலிருந்து விலகச்செய்கிறது. என் ஆன்மாவைக் கொலை செய்கிறது, சிற்றின்பத்திற்கும் வன்முறைக்கும் அது என்னை அழைத்துச் செல்கிறது. தனிமையைக் கண்டு நான் பயப்படவே மாட்டேன். ஏனெனில் என் டி.வி, என்றும் என்னுடன் இருக்கின்றது. உலக மனப்பான்மையாலும் நுகர்வுப் பொருள் கலாசாரத்தாலும் டிவி, என்னைத் திருநிலைப்படுத்துகிறது. என் பேராசைப் பொங்கிவழிகிறது. சோம்பலும் அறியாமையும் என்னைப் பின்தொடரும். வாழ்நாள் முழுவதும் டி.வியைப் பார்த்த வண்ணம் என் இல்லத்தில் குடியிருப்பேன்."

இது வெறும் கற்பனையல்ல, முழுக்க முழுக்க உண்மை . துறவறத்தாரும் இல்லறத்தாரும் டி.வி.-யின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். டி.வி. நம்மை அடிமைப்படுத்தி, நமது மூளையைச் சலவை செய்து, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பறித்து விட்டது. இப்பேராபத்திலிருந்து நாம் நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் காத்துக் கொள்ளவேண்டும்.

'நல்லாயன் ஞாயிறு' என்றழைக்கப்படும் இந்த ஞாயிறு இறை அழைத்தல் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் சிக்கித் தவிக்கும் இன்றைய இளைய சமுதாயம், "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற் 1:17) என்னும் நல்லாயன் குரலைக் கேட்டு. விசுவாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் அவரைப் பின்பற்றத் துணிச்சலுடன் முன் வரவேண்டும், கடலுக்குத் தேவை 'மீன்வலை' (fishing net), காதலுக்குத் தேவை 'இணையக வலை' (internet), ஆனால் இறை அழைத்தலுக்குத் தேவை 'விசுவாச வலை' (Faith net).

'ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ? உன்னைக்காணும் முன்னே கடவுளே வந்தாலும் தொழமாட்டேன்" எனப்பாடுகிறது திரைப்பட உலகம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:68) என்றழைக்கிறது விவிலிய உலகம். முந்தைய உலகம் நிழல் உலகம்; பிந்தைய உலகம் நிஜ உலகம், இன்றைய இளைஞர்கள் நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவார்களா?

"இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது. தீயோனை நீங்கள் வென்று விட்டீர்கள்" (1 யோவா 2:14).
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
குருவுக்கான வரைபடம்

பழைய ஏற்பாட்டில் கடவுள் தன் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை உறவை மூன்று விதங்களில் பார்க்கலாம்.

தந்தை - மக்கள் உறவு
கணவன் - மனைவி உறவு
ஆயன் - மந்தை உறவு

இந்த மூன்று வகை உறவுகளில் ஆயன் - மந்தை உறவு சிறிது அதிக அழுத்தம் பெறுவதை விவிலியத்தில் உணரலாம். (தி.பா.23, எசா.40, எரேமி.23, எசேக்.34, யோவான் 10)

இந்த அடிப்படையில் இறைமகன் இயேசுவோடு அவரது அடிச்சுவட்டில் திருத்தூதர் வழிமரபினரும் ஆயர்பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இன்று பங்குக் குருக்களும் ஆயர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இங்கெல்லாம் பணித்தளம் ஒன்றுக்குப் பங்குக்குரு வேண்டுமா? பங்கு மக்களின் தலையெழுத்தோ, பணியேற்கும் குருவின் தலையெழுத்தோ ஆயரின் கையெழுத்தைப் பொறுத்தது.

அமெரிக்காவில் ஒரு பங்கில் அப்படி இல்லையாம். குரு இல்லாத காலியிடத்தை நிரப்ப நேர்ந்தால் மறைமாவட்ட அலுவலகத்திலிருந்து மூன்று நான்கு பெயர்ப் பட்டியலும் அவர்களது தகுதிகள் திறமைகள் பற்றிய விவரங்களும் அனுப்பப்படும். பங்குப் பேரவை அதனை அலசி ஆராயும். வேண்டுமானால் ஒவ்வொருவரையும் அழைத்து நேர்முகப் பேட்டி காணும். பங்கின் வளர்ச்சிக்கு, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கு, அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து திருப்தியானால் ஒருவரை மேலிடத்திற்குப் பரிந்துரைக்கும். இல்லை யென்றால் புதிய பட்டியலைக் கோரும். அப்படி ஒரு முதிர்ச்சியான செயல்பாடு. ஆனால் அதுவெல்லாம் நமது மண்ணுக்கும் மனநிலைக்கும் ஒத்துவருமா என்பது வேறு கேள்வி.

இப்படி ஒரு பங்குப் பேரவைக்கு வந்த பட்டியல்களில் உள்ள எந்தக் குரு பற்றியும் மக்களுக்குத் திருப்தி இல்லை. நெடு நாட்களாக அங்கு நிரந்தரப் பணியாளர் நியமிக்க முடியாமல் இருந்தது. பேரவைத் தலைவர் பொறுமை இழந்தார். எரிச்சலடைந்தார். ஒருநாள் திடீரென்று பேரவையைக் கூட்டினார். தனக்கு வந்த ஒரு விண்ணப்பத்தைப் பேரவையில் சமர்ப்பித்துப் படித்தார்.

"பெரு மக்களே, உங்கள் பங்கின் காலியிடத்தில் என்னை ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கிறேன்.

"எனக்கெனச் சிறப்புத் தகுதிகள் சில உண்டு. நல்ல மறையுரையாளர், நல்ல எழுத்தாளர் என்றெல்லாம் சொல்வார்கள். நல்ல நிர்வாகி என்பவர்களும் உண்டு. நான் சென்ற பல இடங்களிலும் உறுதியான தலைமைப் பண்போடு செயல்பட முனைந்துள்ளேன். எனக்கு வயது ஐம்பதுக்கு மேல். ஒரே இடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை. இருந்த இடங்களிலும் என் பணி குழப்பங்களையும் கலவரங்களையும் எழுப்பியதால் வெளியேற நேரிட்டது.

"மூன்று நான்கு முறை நான் சிறைவைக்கப்பட்டேன். நீதி மன்றத்துக்குக் கூடச் சென்றதுண்டு. தற்காப்புக்காக உச்ச நீதி மன்றத்துக்கே அப்பீல் செய்த வரலாறு உண்டு. என் உடல் நிலையும் மிகச் சீரானது என்று சொல்வதற்கில்லை. என் உள்ளமோ... ஏதோ ஒன்று முள்போல் குத்திக் கொண்டே இருக்கிறது என்றாலும், இயன்ற வரை நிறையவே உழைக்கிறேன்.

"மற்றொன்றும் மறுப்பதற்கில்லை. பணியாற்றிய இடங்களில் எல்லாம் மதத் தலைமைப் பீடமும் என்னோடு எப்போதும் ஒத்துப் போனதும் இல்லை. புரிந்து கொண்டதும் இல்லை. இதையெல்லாம் அறிந்தும் நீங்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், என்னால் முடிந்த அனைத்தையும் அர்ப்பண உணர்வோடு உங்களுக்காகச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்..."

விண்ணப்பம் படிக்கப்படும் போதே பலப்பல முணுமுணுப்புக்கள்,கண்டனக் கனைகள், எதிர்க்குரல்கள். "என்ன கிண்டலா? கோர்ட்,சிறை என்று சுற்றுபவனா நமக்குப் பங்குக் குரு? உடலும் சரியில்லை, மனமும் சரியில்லை என்பவனா நமக்குப் பங்குக்குரு? இருந்தஇடமெல்லாம் கலாட்டா, கலவரம் என்கிறான். இங்கேயும் இரண்டு படுத்தவா அந்தக்குரு?...

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: "நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?..." என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர்.

"இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.

"புனித பவுலா!" வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை.

குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.

இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!

நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: "நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?..." என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர். "இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.
"புனித பவுலா!" வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை.

குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.

இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!

நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
இன்றைய நற்செய்தியில்‌ இயேசு தனக்கும்‌, தனது மந்தைக்கும்‌ உள்ள உறவைப்‌ பற்றி பேசுகிறார்‌. இதில்‌ நல்ல உறவுக்கான இலக்கணங்களை நமக்கு கற்றுத்‌ தருகிறார்‌. அதாவது ஒரு நல்ல உறவில்‌ காணப்படவேண்டியவைகள்‌.
1. அறிந்து இருத்தல்‌

இன்றைய நற்செய்தியில்‌ அடிக்கடி வருகிறது. இது இரு அர்த்தங்களை கொண்டது
1‌] முழுமையாக தெரிந்து வைத்தல்‌,
2) அன்பு செய்தல்‌. முழுமையாகத்‌ தெரிந்துகொண்டு ஒருவரை அன்பு செய்தல்‌ இன்றையச்‌ சூழ்நிலையில்‌ பல உறவு முறைகள்‌ ஒற்றுமையுடன்‌ இல்லாமால்‌ உடனே தீப்படித்து எரிந்து அணையும்‌ சருகுகள்போல இருக்கின்றன. சகோதரத்துவத்தின்‌ முழுமையை உணராமல்‌ பகைமையை வளர்த்து அன்பை மறந்துவிட்ட நிலை.
2. உயிரைக்‌ கொடுத்தல்‌

"நல்ல ஆயர்‌ ஆடுகளுக்கு தம்‌ உயிரைக்‌ கொடுப்பார்‌". இயேசு. உயிரைக்‌ கொடுப்பது என்பது ஒருவருக்காகத்‌ தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதைச்‌ சுட்டிக்காட்டுகிறது. ஒருவரை முழுமையாக அறிந்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது அங்கு தடை எதுவும்‌ இல்லை. அதாவது உறவில்‌ ஈடுபாடற்ற தன்மை நிலவக்கூடாது. மாறாக, முழு ஈடுபாட்டோடும்‌, அர்ப்பண உணர்வோடும்‌ பிறரை ஏற்று, அன்பு செய்ய அழைக்கப்படுகிறோம்‌.
இதுவே இயேசுவின்‌ அன்பின்‌ தன்மை

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ