நமது உடலையும் உள்ளத்தையும் தாக்கும் தீமைகள், சமுதாயத்தை
தாக்கும் தீமைகள் அனைத்திலும் இருந்து இந்த ஞாயிறு வழிபாடு நம்மை
பாதுகாக்கிறது.
நன்மைகளைப் பொழிய வந்தவர் நம் தேவன். தீமைகள் நம்மைத் தொடும்
போது, நமது சமூகத்தைத் தாக்கும் போது பார்த்துக் கொண்டு சும்மா
இருப்பாரா? அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் ஏன் என்றைக்குமே
கடவுள் நம்மை தொடும் தீய ஆவிகளை 'வாயை மூடு இவரை விட்டு வெளியே
போ' என அதட்டிக் கொண்டே இருக்கின்றார். அதனால் தான்; நம்மைச்
சூழும் தீமைகளுக்கு மத்தியில், நன்மைகள் நம்மைத் தொடர்கின்றன.
நம் இதயம் நன்மையை நினைக்கும்போது தீமைகளுக்கு அங்கே வேலை
வாய்ப்பில்லாமல் போகிறது. தீமை நிகழ்ந்து விட்டால் கூட நல்லதையே
செய்ய வேண்டும். நாம் செய்கின்ற நன்மை நமக்கு ஒரு போதும் தீமை
தராது. நன்மை செய்யும் ஒருவருக்கு எவரேனும் தீமை செய்து
விட்டால், அவர் வீட்டை விட்டு தீமை விலகவே விலகாது, என்பது
சீராக் ஆகமத்து வரி. தீமையை வேரறுக்கும் சக்தி தருபவர்
யேசுபிரான். தீய சக்திகள் யேசுவின் வார்த்தைக்கு கட்டுப்படுகின்றன.
இயேசுவின் வார்த்தை நல்லவர்களை வாழவைக்கும். இயேசு உரைக்கும்
வார்த்தை தந்தை கடவுளுக்கு உரியது.
இறைவார்த்தையை வாசிக்கும் போதும், அதை வாழ்வாக்கும் போதும் தீயஆவி
நம்மைத் தொடுவதற்கு நடுங்கும். தீய ஆவியின் செயல்பாடுகளை அழிக்கும்
போது நல்லவை தானாக வளரும். எனவே தான் தனது இறையாட்சிப் பணியின்
தொடக்கமாக தீய ஆவியை இயேசு விரட்டுகிறார்.
நம் சமூகத்தில் தீய ஆவியின் செயல்களான அநீதி, போலித்தனம், ஊழல்,
மனித நேயமற்ற செயல்கள் போன்றவைகளை விரட்டவும், அழிக்கவும் நாம்
முன் வரும் போது, நாமும் இயேசுவின் இறையாட்சிப் பணியை தொடர்கின்றோம்.
நல்லதை விடா முயற்சியுடன் செய்யும் போது தீயது தானாக விலகிவிடும்.
சூழ்நிலை வலுவாக தீமைக்குள் விழத்தாட்டும் போது ஆண்டவரைக் கூவி
அழைப்போம். நம்மைத் தொல்லை செய்யும் தீமைகளை தகர்க்கச் சொல்லி,
ஆண்டவரிடமே முறையிடுவோம்.
என்னைத் தொடும் தீய சக்திகளை விரட்டும் தேவா! சமூகத்தை
தாக்கும் தீய சக்திகளை விரட்டும் சக்தி எனக்குத் தாரும் இறiவா!!
என்று நம் தந்தைக் கடவுளிடம் உரிமையுடன் வேண்டுதலை எழுப்புவோம்.
1. இறைவாக்கினர்களை எங்களுக்காக அனுப்பிய இறைவா!
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள்
எப்போதும் செபத்தில் ஒன்றித்து இருந்து, அதிகாரமிக்க போதனையோடு
தீய ஆவியின் பிடியில் இருந்து மக்களை பாதுகாத்து உமது கருணையை
அனைவரும் உணர அருள்புரியும்படி, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. சமத்துவ நாயகனாகிய இறைவா!
இந்த உலகை ஆட்டிப் படைக்கும் வறுமை, இனவெறி, தீவிரவாதம்,
வரதட்சனைக் கொடுமை இவைகள் அனைத்தும் முழுமையாக ஒழிய,
நாட்டுத் தலைவர்கள் பாடுபட வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3. பாவிகளையே தேடிவந்தேன் என்று கூறிய அன்பனே!
இவ்வுலகில் வாழும் மக்களாகிய நாங்கள் உமது இறை வார்த்தைகளின்படி
வாழாமல், தீய வழிகளில் வாழ்ந்து வருகின்றோம். தீய வழிகளை
விட்டு விலகி உமது இறை வார்த்தையின் படி வாழ வரம் அருள, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் தந்தையே!
எங்கு செல்வது என முகவரி தெரியாமல் அலையும் சிறு பிள்ளைகளுக்கு
அன்பையும், எங்கள் குடும்பங்களில் சமாதானத்தையும், தவறான
பாதையில் செல்வோருக்கு நல்ல ஆலோசனையையும், பில்லி, சூனியம்,
செய்வினை, ஏவல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து மக்களுக்கு
விடுதலையையும், பாதுகாப்பையும் தந்து நீர் தாமே காத்தருள
வேண்டுமென்று, ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகிறோம்.
5. நோயுற்றவரை தேடிவந்த தந்தையே!
பல வருடங்களாக நோயினால் வருந்திக் கொண்டிருக்கின்ற ஏழை எளிய
மக்களை ஆசிர்வதித்து, நோய் நீங்கி சுகம் பெறவம் விசேட விதமாக
கொரோனா நோயினால் துன்புறும் மக்களையும் குணப்படுத்த
வேண்டுமென்று, ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
இக்கால இறைவாக்கினர்களாக வாழ்வோம்
அரசன் ஒருவர். தனக்குப் பின் தன் நாட்டின் குறுநிலப்பகுதியை
ஆள துணிவுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். எனவே
தன் நாட்டில் இருக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களில் ஒருவராவது,
தன்னம்பிக்கை உடையவராக, நாட்டை ஆளும் தகுதி உள்ளவராக இருக்கின்றாரா
என்று பார்க்க ஒரு சிறிய போட்டி வைத்தார். ஊரின் எல்லையில்
உள்ள கோட்டையின் கதவுகளை மூடி இந்தக் கதவை ஒரு கையால் திறந்து
வெற்றி பெறுபவருக்கு இந்த குறுநிலப்பகுதியை ஆளும் அரசராகும்
தகுதி வழங்கப்படும். தோற்பவரின் கைகள் வெட்டப்படும் என்று
அறிவித்தார். அரசராகும் ஆசை பலருக்கு இருந்தாலும் தோற்றால்
கைகள் வெட்டப்படுமே என்று அஞ்சி அதில் பங்கேற்காமல் பலர்
இருந்தனர். சிலர் முன்வந்தாலும் மக்களின் அவநம்பிக்கையான
சொல் மற்றும் செயல்களால் போட்டியில் பங்கேற்காமல் இருந்தனர்.
இறுதியில் ஒரு இளைஞன் மட்டும் முன்வந்து கோட்டையின் கதவுகளைத்
திறக்க துணிந்தான். மக்களும் அவனது நண்பர்களும் அவனிடம்,
நன்றாக யோசித்து செயல்படு, தோற்றால் கைகள் போய்விடும். அதன்பின்
உன் வாழ்நாள் முழுவதும் கைகள் இல்லாமலே நீ வாழ
வேண்டியிருக்கும் என்று கூறினர்.
அவனோ மிக உறுதியான மனதுடன், முயன்று தான் பார்ப்போமோ,
வென்றால் நாட்டை ஆளும் உரிமை கிடைக்கும். தோற்றால் கைகள்
தானே போகும், உயிரல்லவே என்றான். இன்னும் அதிமதிகமாக
துணிவையும் தன்னம்பிக்கையையும் மனதில் கொண்டவனாக, தன் முழு
பலத்துடன் கோட்டையின் கதவுகளைத் தள்ளினான். என்ன ஆச்சர்யம்
கதவுகள் எளிதில் திறக்கப்பட்டன. ஏனென்றால் கோட்டைக் கதவுகளின்
தாழ்ப்பாள்கள் பூட்டப்படாமலேயே இருந்தன. இளைஞன் ஒருவன்
போட்டியில் வென்றுவிட்ட செய்தி மன்னரின் காதுகளை எட்டவே,
இளைஞன் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார். இளைஞனை மக்கள்
அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அரசன்,
வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் நாம் எளிதில்
வென்று விடலாம். எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும்
நாம் இறங்கி செயல்படும்போது, அதில் நிச்சயம் நமக்கு வெற்றி
கிடைக்கும் என்று கூறினார். சில மனிதர்கள் வெற்றியை விட
தோல்வியையே அதிகமாக எண்ணுகின்றார்கள் அதனால் தான் அவர்களால்
எளிதில் வெற்றி பெற முடிவதில்லை. தோற்றால் என்ன ஆகும் என்று
ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் வெற்றி அவனைவிட்டு
வெகுதொலைவிற்கு செல்ல ஆரம்பிக்கின்றது என்று கூறி வெற்றி
பெற்ற இளைஞனிடம் குறுநிலப்பகுதியை ஒப்படைத்தார்.
ஆம் அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் நான்காம் வாரத்தில்
இருக்கும் நம் அனைவரையும், துணிவுள்ளவர்களாக தன்னம்பிக்கை
உள்ளவர்களாக மொத்தத்தில் இத்தகைய பண்பு கொண்ட இக்கால இறைவாக்கினர்களாக
வாழவே இறைவன் அழைக்கின்றார். துணிவும் தன்னம்பிக்கையும்
கொண்ட இளைஞன் எவ்வாறு போட்டியில் வென்று நாட்டை அரசாளும்
உரிமை பெற்றானோ அதுபோலவே, கடவுளின் வார்த்தையை உலகிற்கு எடுத்துரைக்க
அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும். நிகழ்காலத்தை
அறிந்து கொள்பவர், கடவுளின் திட்டங்களுக்கு ஏற்ப தானும்
நடப்பவர், பிறரும் நடக்க உதவுபவர், சான்றுள்ள வாழ்க்கை
வாழ்பவரே இறைவாக்கினர் என்பவராவார். அதுமட்டுமன்று கடவுளின்
வார்த்தையை மட்டும் எடுத்துரைப்பவராக, கவலையற்றவராக, அதிகாரத்துடன்
போதிப்பவராக இறைவாக்கினர் இருக்கவேண்டும், இத்தகைய பண்பு
நலன்கள் கொண்டவரையே இறைவாக்கினராகக் கடவுள்
தேர்ந்தெடுக்கின்றார் என்று இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு
அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கடவுளின் வார்த்தையை மட்டும் அறிவிக்கும்
இறைவாக்கினர்
முதல் வாசகத்தில் மோசே கடவுளின் வார்த்தையை இஸ்ரயேல் மக்களுக்கு
எடுத்துரைக்கும் பகுதியை நாம் வாசிக்கக் கேட்டோம். மோசே இணையில்லாத
கடவுளின் இறைவாக்கினர். அவரைப்போன்றே வேறொரு இறைவாக்கினரை
உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வேன் என்று கூறுகின்றார்
இறைவன். கானான் நாட்டை சென்றடைய மேற்கொண்ட பயணத்தில் இறைவனின்
குரலுக்கு செவிசாய்க்காமல் தங்கள் மனம் போன போக்கில்
வாழ்ந்ததாலேயே இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைக் காணமுடியாமல்
மடிந்தனர். மாறாக அவர்களது தலைமுறையினர் வாக்களிக்கப்பட்ட
நாட்டைச் சென்றடைந்தனர். நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை
நன்கு அறிந்து அதற்கேற்ப தனக்கு கீழ் இருக்கும் மக்களை வழிநடத்திச்
செல்பவரே நல்ல தலைவர் நல்ல இறைவாக்கினர். மேலும் கடவுளுடைய
வார்த்தையை இனம் கண்டறிந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும்
மனநிலை கொண்ட மக்களுள் ஒருவரையே தனது இறைவாக்கினராகத்
தேர்ந்தெடுக்க விரும்புகின்றார் இறைவன். இக்கால இறைவாக்கினர்களாகிய
நாம் நமது வாழ்வியல் சூழலில் நடக்கும் செயல்களில் இறைத்திருவுளத்தைக்
கண்டறிந்து அதனை பிறருக்கு எடுத்துரைப்பவர்களாக வாழவேண்டும்.
கடவுள் நம்மிடம் பல வழிகளில் பேசுகின்றார். நாம் சந்திக்கும்
மனிதர்கள், கிடைக்கும் அனுபவங்கள், நிகழ்வுகள், என எல்லாவற்றிலும்
நம்மோடு பேசி நல்வார்த்தைகளை நமக்கு எடுத்துரைக்கும் இறைவன்
குரலை அடையாளம் கண்டு நாம் அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கக்
கூடியவர்களாக வாழ்வோம்.
கவலையற்றவர்களான இறைவாக்கினர்கள்
இன்றைய நமது இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இறைப்பணி
செய்பவர்கள் மனத்துறவு மேற்கொள்பவர்களாக இருப்பது நலம் என்று
எடுத்துரைக்கின்றார். திருமண உறவால் இணைக்கப்பட்ட மனிதர்கள்
ஒருவர் மற்றவரின் தேவையையும் நலனையும் கருத்தில் கொண்டு
அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். ஆனால் திருமணமாகாதவர்கள்
முழு மனநிறைவுடன் கடவுள் பணியை ஆற்றமுடியும், கவலையற்றவர்களாக
வாழ முடியும் என்று கூறுகின்றார். கவலை ஒரு மனிதனின் எண்ணங்களையும்
நற்செயல்களையும் விழுங்கிவிடும் தன்மை கொண்டது. தீய எண்ணங்களின்
கூடாரம் கவலை. கவலை சூழ்ந்துகொண்ட மனிதனால் எந்த ஒரு செயலையும்
மனநிறைவுடன் செய்ய இயலாது. கவலை நம் ஆற்றலையும் உடல் வலிமையையும்
இழக்கச்செய்யும்.
நாம் கவலையற்று மனமகிழ்வுடன் இருக்கும்போது நமது உடலும் உள்ளமும்
புத்துணர்ச்சியுடன் இருக்கும். பல நல்ல செயல்களை நம்மால்
செய்ய முடியும். தெளிவாக துணிவாக பல முயற்சிகளை எடுத்து அதில்
நாம் நிறைவான வெற்றியையும் அடையமுடியும். எனவே இறைவனின்
வார்த்தையை நமது சொல்லாலும் செயலாலும் பிறருக்கு எடுத்துரைக்க
அழைக்கப்பட்டிருக்கும் நாம் கவலை என்னும் தீய ஆற்றல் நம்மைத்
தாக்காதவாறு பார்த்துக்கொள்வோம். இக்காலத்தில் கவலைப்பட எதுவுமே
இல்லை என்று கவலைப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே
வருகின்றது. எனவே கவலையற்றவர்களாக வாழ்வோம். கடவுளின்
வார்த்தையை கவனமுடன் எடுத்துரைப்போம்.
அதிகாரத்துடன் போதிக்கும் இறைவாக்கினர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேய் பிடித்த ஒருவரை
குணமாக்கும் நிகழ்வில் அதிகாரத்துடன் இயேசு அதற்கு கட்டளையிடுகின்றார்.
தொழுகைக்கூடம் என்பது இறைவார்த்தையை வாசிக்கும் இடம் அங்கும்
கூட தீய ஆவியினால் பிடிக்கப்பட்ட நபர் இருக்கின்றார். ஆக
கடவுளைத்தேடி, கடவுள் இருக்கும் இடத்திற்கே நாம்
சென்றாலும் கூட, நம்மை சோதிக்க தீயஆவி முயற்சிக்கும். இயேசுவைக்
கண்ட பேய்கள் எங்களை அழித்துவிடவா இங்கு வந்தீர்? உமக்கு
இங்கு என்ன வேலை என்று கேட்கின்றன. இயேசு வாயை மூடு இவரை
விட்டு வெளியே போ என்று பதிலளிக்கின்றார். அவற்றிற்கு அதிகாரத்துடன்
கட்டளையிட்டு அம்மனிதரை விட்டு வெளியே போய்விட
சொல்கின்றார் அவைகளும் பெருங்கூச்சல் எழுப்பி, அங்கிருந்து
வெளியேறுகின்றன. இயேசுவின் அதிகாரத்துடன் கூடிய கட்டளையானது
தீய ஆவிகளை விரட்டியடிக்கின்றது. நாமும் இறைவார்த்தையை அதிகாரத்துடன்
எடுத்துரைக்கும் போது முதலில் நம்மில் உள்ள தேவையற்ற எண்ணங்கள்
நம்மை விட்டு வெளியேறுகின்றன. நம்மைச்சுற்றிலும் உள்ள
தீய ஆவியின் செயல்பாடுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன.
நாம் நல்ல எண்ணங்களாலும் நற்தூண்டுதல்களாலும் ஈர்க்கப்படுகின்றோம்.
எனவே துணிவுடன் அதிகாரத்துடன் நாம் இறைவார்த்தையைப் பிறருக்கு
எடுத்துரைப்போம்.
ஆக இக்கால இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும்
கடவுளின் வார்த்தையை மட்டும் எடுத்துரைப்பவர்களாக, கவலையற்றவர்களாக,
துணிவுடனும் அதிகாரத்துடனும் இறைவார்த்தையை எடுத்துரைப்பவர்களாக
வாழ முயற்சிப்போம். இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும்
இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி.
அதிகாரம் - யாருக்கு? யார்மேல்?
மனித உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசுகின்ற ஆஸ்திரிய நாட்டு
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு அவர்கள், 'மனித மனத்தில்
மேலோங்கி இருக்கும் உள்ளுணர்வுகள் இரண்டு எனவும், அவை வன்முறை
மற்றும் பாலுணர்வு' என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால் இவை
இரண்டையும்விட ஓர் உள்ளுணர்வு நமக்கு அடிப்படையாக இருக்கிறது.
அதுதான் 'அதிகாரம்.' இந்த 'அதிகாரம்' அல்லது 'ஆற்றல்' உணர்வு
நமக்கு பிறப்பிலேயே இயல்பாக வருகிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில்
மனிதர்கள் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்' என தனித்;து, உயர்ந்து
நிற்பதற்குக் காரணமும் இந்த 'அதிகாரமே.'
இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அதிகாரம்' என்ற இந்த ஒற்றைச்
சொல்லின் மூன்று பரிமாணங்களை - யாருக்கு? யார்மேல்?
யாரால்? - நமக்கு எடுத்தியம்புகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். 1 கொரி 7:32-35)
தொடங்குவோம்.
'மணமாகாதவர்களும், கைம்பெண்களும்' என்ற கருத்துருவோடு
கொரிந்து நகரத் திருச்சபைக்கு அறிவுரை வழங்கும் பவுலடியார்
'அக்கறை கொள்வதிலும், அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும்
அதிகாரம் இருக்கிறது' என பதிவு செய்கின்றார். மணமானவர் உலகிற்கு
உரியவற்றில் அக்கறை கொள்கிறார். தன் மனைவிக்கு உகந்தவற்றைச்
செய்கின்றார். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை
கொள்கிறார். தன் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்கின்றார்.
பவுலின் விருப்பத்தேர்வு ரொம்ப சிம்பிள்: 'நீ இந்த இரண்டில்
ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். இதுவும்
வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலை கூடாது!' ஏனெனில்,
மணமானவர் தன் மனைவியின்மேல் கொள்ளும் அக்கறையும், அவருக்கு
உகந்தவற்றைச் செய்வதும் தன் மனைவியின்மேல் அவருக்கு அதிகாரம்
அளிக்கிறது. அதே போல மணமாகாதவர் ஆண்டவர்மேல் கொள்ளும் அக்கறையும்,
அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும் ஆண்டவரின்மேல் அவருக்கு
அதிகாரம் அளிக்கிறது. ஆக, அதிகாரத்தின் ஊற்று அக்கறை கொள்வதிலும்,
அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும் அடங்கியிருக்கிறது.
ஏன் இரண்டு பேர்மேல் - மனைவிமேல், ஆண்டவர்மேல் - ஒரே நேரத்தில்
அதிகாரம் கொள்ள முடியாது என்றால், யார் ஒருவர் பிளவுபடா உள்ளம்
கொண்டிருக்கிறாரோ அவர்தான் அதிகாரம் காட்ட முடியும். மனைவிக்கும்,
ஆண்டவருக்கும் இடையே உள்ளம் பிளவுபட்டிருக்கக் கூடாது.
இதை எப்படி புரிந்துகொள்வது?
இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மாற் 1:21-28) ஒரு பகுதி
நமக்கு இதற்கு உதவி செய்கிறது.
இயேசுவின் போதனையைப் பற்றிய மக்களின் வியப்பை பதிவு
செய்கின்ற நற்செய்தியாளர் மாற்கு, 'அவர் மறைநூல் அறிஞர் போலன்றி,
அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்' என்று பதிவு
செய்கின்றார். ஆக, இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது.
ஆனால் மறைநூல் அறிஞரின் போதனையில் அதிகாரம் இல்லை.
தொழுகைக்கூடத்தில் பேய்பிடித்த ஒருவர் இருக்கிறார். மறைநூல்
அறிஞர் இவரை ஒருவேளை தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியேற்றி இருப்பார்.
ஆனால், இயேசுவோ தீய ஆவியை விரட்டுகின்றாரே தவிர, தீய ஆவி
பிடித்திருந்த நபரை வெளியேற்றவில்லை. மறைநூல் அறிஞர் தன்மையம்,
இறைமையம் என இரண்டு மையங்களைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு செயலைச்
செய்யும்போதும் தனக்கு எது ஏதாயம் அல்லது உகந்தது என்ற எண்ணத்தோடு
இருந்தார். அதே வேளையில் மறைநூலைக் கற்றறிந்ததால் இறைமையமும்
கொண்டிருந்தார். ஆனால், இயேசுவிடம் மையங்கள் பிளவுபடவில்லை.
அவர் ஒரே மையத்தைக் கொண்டிருந்தார். அதுதான் இறைமையம். இவர்
இத்தகைய இறைமையம் கொண்டிருந்தார் என்பதை தீய ஆவியும்கூட அறிக்கையிடுகின்றது:
'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.'
இவ்வாறாக, பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவரே அதிகாரம்
கொண்டிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 18:15-20), 'உன்னைப்போல்
ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக
ஏற்படுத்துவேன்' என்று மோசேயிடம் முன்னுரைக்கின்ற கடவுள்,
உடனடி இலக்கிய சூழலில் இறைவாக்கினர் எரேமியாவைக்
குறித்தாலும், தொலைதூர சூழலில் மெசியாவாகிய இயேசுவைக்
குறிக்கின்றது. இந்த இறைவாக்கினன் தன் அதிகாரத்தை கடவுளிடமிருந்து
பெறுகிறான். அவரது பெயராலேயே அவன் இறைவாக்குரைக்க
முடியும்.
ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பின்புலத்தில் அதிகாரம்
'யாருக்கு' இருக்கிறது?
அ. கடவுளின் கட்டளைப்படி பேசும் இறைவாக்கினன் (முதல் வாசகம்).
கடவுள் கட்டளையிட்டதை மட்டும் சொல்லும் இறைவாக்கினன். கடவுள்
கட்டளையிடுவது நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ, அந்தக் கட்டளையைக்
கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லும் இறைவாக்கினன். இத்தகையை
பணியை மோசே செய்தார். இப்போது இதே பணி புதிய இறைவாக்கினன்மேல்
சுமத்தப்படுகிறது.
ஆ. பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவர் (இரண்டாம் வாசகம்)
உலகமா? அல்லது கடவுளா? ஆண்டவரா? அல்லது மனைவியா? என்ற
கேள்வியும், அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று விடை வந்தால்
ஏற்படும் பிளவும் இல்லாமல் இருப்பவர். இப்படிப்பட்ட பிளவற்ற
நிலைக்கு மிகவும் அடிப்படையானது 'தேர்வு.' அதாவது, நல்லது
எது, அல்லாதது எது என தேர்ந்து தெளிந்து, அந்தத் தேர்வில்
நிலையாய் இருப்பதுதான் பிளவுபடா உள்ளம். முன்னுக்குப் பின்
பயணம் செய்யும் மனம், தெளிவான முடிவை எடுக்கத் தயக்கம்
காட்டும் மனம், தெரிந்தபின் வருந்தும் மனம் ஆகியவை பிளவுபடாமல்
இருக்க முடியாது.
இ. கடவுளுக்கு அர்ப்பணமானவர் (நற்செய்தி வாசகம்)
'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற மொழிபெயர்ப்பு கிரேக்கத்தில்
'ஹோ ஹாகியோஸ் தூ தெயூ' என்று உள்ளது. அதாவது, 'கடவுளின் தூயவர்'
அல்லது 'கடவுளின் புனிதமானவர்.' புனிதம் அல்லது தூய்மை
நிலை என்பது எந்தவொரு கலப்பும், பாரபட்சமும், தன்னலமும்,
கலக்கமும், பயமும் இல்லாதது.
இன்று நான் என் தனிப்பட்ட வாழ்விலும், என் நட்பு வட்டத்திலும்,
என் குடும்பத்திலும், என் பங்கு, பணியிடம், என் அருள்பணி
வாழ்க்கை நிலையிலும் கையாளும் அதிகாரம் மேற்காணும் மூன்று
நிலைகளில் ஊற்றெடுக்கிறதா? அல்லது 'என் கட்டளைப்படி,' 'பிளவுண்டு,'
'தூய்மையற்ற' நிலையில் ஊற்றெடுக்கிறதா?
அதிகாரம் 'யார்மேல்' இருக்கிறது?
அ. வார்த்தைகளின்மேல் (முதல் வாசகம்)
வார்த்தைகளின்மேல் அதிகாரம் கொண்டிருப்பது என்பது
வார்த்தைக்கும், செயலுக்கும் இருக்கின்ற இடைவெளியைக்
குறைப்பது. 'நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பேன்'
என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். என் இந்தச்
சொற்களும், காலையில் 5 மணிக்கு எழும் என் செயலும் இணைந்து
சென்றால்தான் என் வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம்
இருக்கிறது என்று அர்த்தம். '5 மணிக்கு எழுந்திருப்பேன்'
என்று சொல்லிக்கொண்டு 7 மணிக்கு எழுந்தால் என்
வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம் இல்லை என்றும், என்
வார்த்தைகள் வெறும் சப்தமே என்றும் பொருள்.
ஆ. மனைவி அல்லது ஆண்டவர்மேல்
இங்கே 'அக்கறை,' மற்றும் 'உகந்ததைச் செய்வது' மேலோங்கி
நிற்கிறது. மனைவி அல்லது ஆண்டவர்மேல் அதிகாரம்
கொண்டிருப்பது என்பது, தான் அவர் மேல் காட்டிய அக்கறையால்
அல்லது அவருக்கு உகந்ததைச் செய்ததால் அவரிடமிருந்து
தேவையானதைப் பெற்றுக்கொள்வது. தன் தந்தை விரும்பியவாறு
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை தன்
தந்தையிடம் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கேட்டுப்பெறுதல்கூட
இவ்வகையில் அதிகாரம் ஆகிறது.
இ. தீயஆவியின் மேல்
இயேசுவின் அதிகாரம் தீய ஆவியின் மேல் இருக்கிறது. 'நீர்
யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு
அர்ப்பணமானவர்' என்ற தீய ஆவியின் நம்பிக்கை அறிக்கையில்
அல்லது முகஸ்துதியில் இயேசு மயங்கிவிடவில்லை. 'பரவாயில்லை.
நீ இங்கேயே இரு!' என்று தீய ஆவியைத் தங்கவிடவில்லை. மாறாக,
எந்தவித சமரசமும் இல்லாமல் அதை வெளியே துரத்துகின்றார்.
சில நேரங்களில் தீமையின் மாயக் கவர்ச்சி அதன்மேல் நாம்
அதிகாரம் செலுத்துவதைத் தடுக்கின்றது. ஆட்சி, அதிகாரத்தில்
இருக்கும் எல்லாருக்குமே இலஞ்சம், ஊழல் ஆகியவை தீமை
என்றும், அவற்றை அழிக்கத் தங்களுக்கு அதிகாரம் உண்டு
என்பதும் தெரியும். இருந்தாலும் அவர்கள் தீமை
மேலோங்குவதையும், வளர்வதையும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில்,
தொழுகைக்கூடத்தின் தீய ஆவி போலவே இவ்வகைத் தீமைகளும் மாயக்
கவர்ச்சி வலையை விரிக்கின்றன.
இன்று நம் வாழ்வில் எழும் வாழ்வியல் மற்றும் உறவு
பிரச்சினைகளுக்கு மேற்காணும் இரண்டு கேள்விகளே காரணமாக
அமைகின்றன: 'யாரால் அதிகாரம்?' 'யார்மேல் அதிகாரம்?'
ஆனால், இன்று என் அதிகாரம் யாரால் வருகிறது? என் அதிகாரம்
யார்மேல் வருகிறது?
பேருந்தில் காலியாக இருக்கும் ஓர் இருக்கையில் அமர வேகமாக
நகர்வதிலிருந்து,
திருமண நிகழ்ச்சியில் முன்னால் இருக்கையில் அமர்வது
தொடர்ந்து,
ஒவ்வொரு நாளும் நம் மனதிற்குள்ளேயே அதிகாரத்திற்கான
போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இன்று என் அதிகாரம்
அடுத்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது என்றால்,
அடுத்தவர்களை மையமாக வைத்திருக்கிறது என்றால் எத்துணை
நலம்!
இறுதியாக,
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் உள்ள சின்னஞ்சிறு
வார்த்தைகளை இறுதிப்பாடமாக எடுத்துக்கொள்வோம்:
அ. 'அவர் விரும்பும் இறைவாக்கினன்'
ஆண்டவரின் இதயத்திற்கு உகந்த இறைவாக்கினன், மோசே போன்ற
இறைவாக்கினன் யார்? என்ற கேள்வி இன்றும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது. யோசுவா, எரேமியா, இயேசு கிறிஸ்து என பல
விடைகள் இதற்குச் சொல்லப்பட்டாலும், உறுதியான விடை
நம்மிடம் இல்லை. அந்த இறைவாக்கினர் நீங்கள் மற்றும்
நானாகக் கூட இருக்கலாம். இந்த இறைவாக்கினருக்குத் தேவையான
தகுதி ஒன்றே: 'அவரின் கட்டளைகளைக் கேட்டு அடுத்தவருக்குச்
சொல்வது.' இன்று அவரின் வார்த்தைகளைக் கேட்க பலர் ஆர்வமாக
இருக்கின்றனர். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையே
உள்ள இந்த இடைவெளியைக் குறைக்க ஆள்கள் தேவை. இதற்கான
அழைப்பை நாம் நம் அன்றாட வாழ்வில் ஏற்றுக்கொள்தல் முதல்
பாடம்.
ஆ. 'மணமானவர், மணமாகாதவர்'
'நீங்கள் கவலைகளின்றி வாழ நான் இதை எழுதுகிறேன்' என
தொடங்குகின்ற பவுலடியார் மணமானவர்கள் மற்றும்
மணமாகாதவர்கள் பற்றிப் பதிவு செய்கின்றார். பவுல்
எழுதுவதுபோல பல நேரங்களில் எதார்த்தம் இல்லை. மணமானவர் தன்
மனைவி மேல் அக்கறை கொண்டிருப்பதும், அவருக்கு உகந்ததைச்
செய்வதும் பல நேரங்களில் நம் குடும்பங்களில் நடப்பதில்லை.
அதுபோல, மணமாகாதவர் ஆண்டவர்மேல் அக்கறை கொண்டிருப்பதும்,
அவருக்கு உகந்ததைச் செய்வதும் அருள்பணி வாழ்வில்
நடப்பதில்லை. சில நேரங்களில் மணமானவர் ஆண்டவர்மேல் அதிக
அக்கறை கொண்டிருப்பதையும், அவருக்கு உகந்ததை இன்னும்
அதிகமாகச் செய்வதையும் காண்கிறோம். ஆக, இன்று நாம் எந்த
நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலைக்குரிய வாழ்வை முழுமையாக
வாழ்தல் அவசியம் என்பது இயேசு தரும் இரண்டாம் பாடம்.
இ. 'வாயை மூடு!'
தொழுகைக்கூடத்தில் இருக்கின்ற தீய ஆவியை 'வாயை மூடு!' என
அதட்டுகின்றார். அதட்டுவது என்பது அதிகாரத்தைக்
குறிக்கிறது. 'வாயை மூடுவதும்' அதிகாரத்தின்
வெளிப்பாடுதான். அதிகாரம் கொண்டிருப்பவர்கள் அதிகம்
பேசுவதில்லை. வாழ்க்கையின் இரகசியம் இரண்டு 'எஸ்'களில்
உள்ளது: 'ஸைலென்ஸ்,' 'ஸ்மைல்.' வாயை மூடிவிட்டாலே வாழ்வின்
பாதி பிரச்சினைகள் முடிந்துவிடுகின்றன. பல அதிகார
பிரச்சனைகள் வருவதை தவிர்க்க நல்ல வழியும் 'வாயை மூடுவதே!'
நிற்க.
அதிகாரம் அது கடவுளால் தரப்பட்டது என்றாலும் அதற்கும்
வரையறை உண்டு.
'வாயை மூடு!' என்று தொழுகைக்கூடத்தில் தீய ஆவிக்கு
கட்டளையிட்ட இயேசு, தான் தலைமைச்சங்கத்தின்முன்னும்,
பிலாத்தின்முன்னும் நிறுத்தப்பட்டபோது, அங்கே நிலவிய
கூச்சலைப் பார்த்து, 'வாயை முடு!' என ஏன் சொல்ல
முடியவில்லை?
இயேசு என்னும் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்!
Tales to Hoffman என்னும் நூலில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு.
ஒரு சமயம் கடலில் ஓர் அமெரிக்கக் கப்பல் போய்க்கொண்டிருந்தது.
அந்தக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த குருவானவர் அங்கிருந்த
மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்களும் அவருடைய போதனையை
வியந்து கேட்டனர்
அவருடைய போதனை முடிந்ததும் அவருடைய போதனையைக்
கேட்டுக்கொண்டிருந்த கப்பல் பயணி ஒருவர் அவரிடம் வந்து,
"
தந்தையே! உங்களுடைய போதனை மிக அருமையாக இருந்தது"
என்றார்.
"
எதை வைத்து அவ்வாறு சொல்கின்றீர்?"
என்று குருவானவர் அவரிடம்
கேள்வி கேட்க அவர், "
உங்களுடைய போதனை உங்கள் உள்ளத்தின்
ஆழத்திலிருந்து வந்தாக இருந்தது. மேலும் அது என்னுடைய உள்ளத்தைத்
தொடுவதாக இருந்தது"
என்றார்.
உள்ளத்திலிருந்து போதிக்கப்படும் எந்தவொரு போதனையும் / மறையுரையும்
எப்போதும் பிறருடைய உள்ளத்தைத் தொடுவதாகவே இருக்கும்.
இப்படி சாதாரண இறையடியார்களின் போதனையே உள்ளத்தைத் தொடுவதாக,
வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்போது இறைவாக்கினர்களுக்கு
எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் போதனை எந்தளவுக்கு
வல்லமையுள்ளதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து
பார்த்துக்கொள்ளலாம்.
பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
படிக்கக்கேட்ட வாசகங்கள் '
இயேசு என்னும் இறைவாக்கினருக்கு
எல்லாம் பெரிய இறைவாக்கினர்'
என்னும் சிந்தனையைத் தருகின்றன.
நாம் அதனைக் குறித்து சில மணித்துளிகள் சிந்தித்துப்
பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச்
சென்று போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக்
கேட்ட மக்கள் வியந்துபோய் நிற்கின்றார்கள். மக்கள் வியந்து
பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை இருந்ததற்குக் காரணம்
என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின்
போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்ததற்கு
மூன்று முக்கியமான காரணங்களை நாம் சொல்லலாம். ஒன்று அவருடைய
போதனை அதிகாரம் கொண்டதாக இருந்தது. பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும் போதித்தபோது '
அவர் சொன்னார்'
, '
இதில் இப்படி
இருக்கின்றது'
என்றுதான் போதித்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ
'
நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று போதிக்கின்றார். அதனாலே
அவருடைய போதனை அதிகாரம் கொண்ட போதனையாகவும், மக்களால் வியந்து
பார்க்கின்ற போதனையாக இருந்தது.
இரண்டாவது காரணம் ஆண்டவர் இயேசுவுக்கு அலகையும் கட்டுப்பட்டது.
யூத போதகர்கள், சமயத் தலைவர்கள் மாய வித்தைகளை
வைத்துக்கொண்டு அலகையை ஒட்டிவந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ
அப்படி இல்லை. அவர் தூய ஆவியின் துணையைகொண்டு அலகையை ஒட்டி
வந்தார். திருத்தூதர் பணிகள் நூல் 10 ஆவது அதிகாரம் 38 ஆவது
இறைவார்த்தை இதை மிக அழகாக எடுத்துரைக்கின்றது, "
கடவுள் நாசரேத்து
இயேசுவின் மேல் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த
அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே
சென்றார்"
. ஆகையால், இயேசுவின் போதனைக் கேட்டு வியப்பதற்கு
காரணமாக அவர் அலகையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததையும்
சொல்லலாம்.
மூன்றாவது காரணம் அவர் ஆண்டவர் சொன்னதையே போதித்தார் என்பதாகும்.
இஸ்ரயேலில் ஒரு சில (போலி) இறைவாக்கினர்கள் இருந்தார்கள்.
அவர்கள் கடவுள் சொல்லாதையும் கடவுள் சொன்னதாகப் போதித்தார்கள்.
இதனால் மக்கள் அந்த போலி இறைவாக்கினர்களின் போதனையால் தவறாக
வழிநடத்தப்பட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ தந்தையாம்
கடவுள் எதைப் போதிக்கச் சொன்னாரோ அதையே போதித்தார். அதைவிடவும்
இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கினர், வாழ்ந்ததைப்
போதித்தார். அதனாலேயே மக்கள் அவருடைய போதனையை வியந்து
பார்த்தார்கள். ஆகையால், இயேசுவின் போதனை மக்களால் வியந்து
பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்தது என்று சொன்னால் அவருடைய
பேச்சில் அதிகாரம் இருந்தது, அவருடைய போதனைக்கு அலகையும்
கட்டுப்பட்டது; அவர் வாழ்ந்ததையோ போதித்தார், போதித்ததையே
வாழ்ந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம். ஓர் உண்மையான இறைவாக்கினர்
என்பவர் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய
இயேசுவைப் போன்று இருக்கவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய
மனதில் பதிய வைக்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
ஓர் இறைவாக்கினர் என்பவர் யார்? அவருடைய பணிகள் என்ன? என்பதைக்
குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நாம் அதனைக்
குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு பெரிய இறைவாகினராகிய
இயேசுவின் வழியில் எப்படி நடக்கலாம் என்ற முயற்சிப்போம்.
"
ஓர் இறைவாக்கினனை உங்களுடைய (அவர்களுடைய)
சகோதரர்களினின்று நான் உங்களுக்கு ஏற்படுத்துவேன். என்
வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது
அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால்
அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதவனை நான்
வேரருப்பேன்"
என்று இன்றைய முதல் வாசகத்தில் நாம்
படிக்கின்றோம்.
ஆம், ஓர் இறைவாக்கினன் என்பவர் மனிதரால்
தேர்தெடுக்கப்படுகின்றவர் அல்ல, அவர் கடவுளால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்; கடவுளின் வார்த்தைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவர். எனவே, அவரை
ஏற்றுக்கொள்வது கடவுளை ஏற்றுக்கொள்வதற்கும், அவரைப்
புறக்கணிப்பது கடவுளைப் புறக்கணிப்பதற்குச் சமமாக
இருக்கின்றது. மத்தேயு நற்செய்தியில் இதைத்தான் ஆண்டவர்
இயேசு, "
உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை
ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை
அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்"
(மத் 10: 40)
என்கிறார்.
பல நேரங்களில் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச்
சொல்கின்ற இறைவாக்கினர்கள்/ இறையடியார்கள் மக்களால்
புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனை தரக்கூடியதாக
இருக்கின்றது.
1960 - களின் தொடக்கத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள
சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய மதக்கலவரம்
வெடித்தது. அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும்
தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள அண்டை நாடான
உகாண்டாவிற்குத் தப்பி ஓடினார்கள். அப்படித் தப்பி ஓடிய
கிறிஸ்தவர்களில் பாரிட் தபான் (Paride Thapan) என்ற
சிறுவனும் அடங்கும். அவர் உகாண்டாவிற்கு சென்று,
அங்கிருந்த குருமடத்தில் குருத்துவக் கல்வி பயின்று
குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு சூடானில்
அமைதி திரும்பியபோது அருட்தந்தை தபான் தன்னுடைய சொந்த
நாட்டிற்குத் திரும்பினார்.
சூடானுக்குத் திரும்பிய பிறகு அருட்தந்தை தபானை பலோடகோ
என்னும் பங்கில் பங்குத்தந்தையாக நியமித்தார்கள். அவரும்
அந்தப் பங்கில் சிறப்பான பணிகளைச் செய்ய வேண்டும் என்று
மிக ஆர்வமாகச் சென்றார். ஆனால், அவருக்கு அங்கு மிகப்பெரிய
அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன அதிர்ச்சி என்றால்,
பலோடகா பங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள், இவரோ
கருப்பினத்தைச் சார்ந்தவர். ஒரு கறுப்பினத்தைச் சார்ந்தவரை
எப்படி பங்குக் குருவாக ஏற்றுக்கொள்வது என்று மக்கள்
அவரைப் புறக்கணித்தார்கள். இதற்கிடையில் இரண்டாம்
வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மிகப்பெரிய
மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் கொண்டு வந்தது.
அவற்றையெல்லாம் அருட்தந்தை தபான் அமல்படுத்த முயன்றபோது,
மக்களிடமிருந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக எதிர்ப்புகள்
வந்தன. அவற்றையெல்லாம் தாங்கிகொண்டு இறைப்பணியை அவர்
செவ்வனே செய்தார். ஒருகட்டத்தில் பங்கு மக்கள் அவர் செய்து
வந்த நற்பணிகளைப் பார்த்து, அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளத்
தொடங்கினார்கள்.
இறைப்பணியாளர்களும் இறையடியார்களும் எப்படி இன ரீதியாக,
சாதிய ரீதியா மொழி ரீதியாக ஒதுக்கப்படுகின்றார்கள்,
புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு அருட்தந்தை தபான்
ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைக்கும் ஏராளமான
இறையடியார்கள், குருக்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவதும்
ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதைப் பார்க்கின்றபோது நெஞ்சம்
கனக்கின்றது.
இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான உண்மையைப்
புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இறைப்பணியாளர்களை
வெறுப்பவர்களுக்கு, ஒதுக்கின்றவர்களுக்கு இறைவன்
கொடுக்கின்ற தண்டனை. இன்றைய முதல் வாசகம் ஓர் இறைவாக்கினர்
என்பவர் யார் என்பதை எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில்
இறைவாக்கினரைப் புறக்கணிக்கின்றவர்களுக்கு என்ன தண்டனை
கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
"
என் பெயரால் இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகளுக்குச்
செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்"
(இச 18:19) என்று
ஆண்டவர் மிகக் கண்டிப்பாய் கூறுகின்றார். நற்செய்தியில்
ஆண்டவர் இயேசு கூட இதை ஒத்த கருத்தினைத் தான்
சொல்கின்றார், "
உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள்
அறிவித்தவற்றிற்கு செவி சாய்க்காமலோ இருந்தால் அவரது
வீட்டை அல்லது நகரைவிட்டு வெளியேறும்போது உங்கள் கால்களில்
படிந்துள்ள தூசியை உதவி விடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம்
கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவைத் அந்த
நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்"
(மத்
10: 14 -15).
ஆகையால், இறைப்பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள் இறைவனின்
அடியார்கள் என்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாக
இருக்கின்றது. அது நேரத்தில் இறைவாக்கினர்களுக்கு எல்லாம்
பெரிய இறைவாக்கினராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வதைக் கொண்டே
நம்முடைய வாழ்வும் மீட்பும் அடங்கி இருக்கின்றது.
ஆகவே, நம் மத்தியில் இறைப்பணி செய்யும் இறையடியார்களுக்கு
உரிய முக்கியத்துவம் தருவோம், இயேசுவே உண்மையான இறைவன்,
இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர் என்பதை
உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
எங்கெல்லாம் பாவச் சூழல் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் அசுத்த
ஆவி செயல்படுகிறது என்பது தெளிவு. வன்முறை, வரதட்சணை, ஊழல்,
அடிமைத்தனம், சுயநலம், மதவெறி, காம வெறி, ஏற்றத் தாழ்வுகள்
போன்றவைகள் நிறைந்த இடங்களிலும் அசுத்த ஆவி
குடிகொண்டிருக்கிறது.
"பேசாதே! இவனை விட்டுப் போ" (மாற்கு 1:25) என்று இயேசு அதிகாரத்தோடு
சொல்லும் வார்த்தைகளை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது.
இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்தது. அவரது வார்த்தைகள் உயிருள்ள
ஆற்றல் மிக்க வார்த்தைகள் (எபி. 4:12). ஏன் அதிகாரத்தோடு
போதித்தார் என்றால், தன் தந்தையோடு கொண்டுள்ள நிரந்தரமான
உறவாலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின்
பிடிப்பாலும் துணிவோடு போதித்தார். பாவ நிலைகளை எதிர்த்தார்.
மனித மாண்புகளைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்தார். ஓய்வு
நாள் சட்டத்தை மீறினார். இறையாட்சியின் மதிப்பீடுகளை மலைப்பொழிவில்
தொடங்கித் தன் வாழ்வின் இறுதிவரை துணிவுடன் போதித்தார். இத்தகைய
துணிவோடு போதித்த இயேசுவைத்தான், பாவக்கறை போக்கும் செம்மறி
இவரே (யோவா. 1:29) என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு
யோவான். இத்தகைய இயேசுவின் அதிகாரப் போதனையை இனங்கண்டு
கொண்ட அசுத்த ஆவி, இயேசுவே எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்?
எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத்
தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் (மாற். 1:24) என்றும்
கூறியது. ஆம்! அசுத்த ஆவிக்கே தெரிகிறது தனது ஆட்சிக்கு
முடிவு வந்து விட்டதென்று. ஏனெனில் மக்கள் எதிர்பார்த்துக்
காத்திருந்த மீட்பர் இவர்தான். அசுத்த ஆவியின் ஆட்சிக்கு
முடிவு கட்டிவிட்டு, இறையாட்சியைக் கட்டி எழுப்ப வந்தவர்.
மக்களை பாவ வாழ்விலிருந்து விடுவித்து அருள் ஒளி தரும் தூய
வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்தவர் தான் என்பதை
நிலைநாட்டுகிறார் இயேசு.
இன்றையச் சூழ்நிலையில் எதுவெல்லாம் மனிதனின் மாண்புகளைக்
குறைத்து, உறவுகளைச் சிதைத்து அடிமைப்படுத்தி, விடுதலை
பெற்ற மனிதனாக வாழத் தடையாக இருக்கிறதோ அவைகள் எல்லாம் அசுத்த
ஆவியின் செயல்பாடுகள்தான். அதை முறியடிக்க முடியுமா?
ஆம்! முடியும். தந்தையோடு இயேசு இணைந்திருந்தார். அவரது ஆற்றலால்
அசுத்த ஆவியின் செயல்பாடுகளைத் தகர்த்தெறிந்தார். அதே ஆற்றலை
தன் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அவரது பணியைத்
தொடர்ந்தார்கள் (லூக். 10:22). நாமும் திருமுழுக்கு வழியாக
இவ்வாற்றலைப் பெறுகிறோம். இறைவனின் உறவில் நாம்
நிலைத்திருந்தால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளை அகற்றி, அருள்
ஒளி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். கிறிஸ்தவ
வாழ்வு குறுக்கு வழிகளைக் கொண்டதல்ல. சரிக்கட்டி வாழும் சமுதாயமும்
அல்ல. மாறாகக் கோணலான வழிகளைக் கூட செப்பனிட்டுப் புதிய
பாதையை உருவாக்குவதே. இயேசு தொடங்கிய இறையாட்சியை
நிறைவாக்குவதே திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின்
கடமையாகும். இயேசுவைப்போல நாமும் அதிகாரத்தோடு இறையாட்சியை
உருவாக்க முயற்சி செய்தால் பாவ இருள் மறைந்து அருள் ஒளி
உதயமாகும்.
பாவச் சோதனையால் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஆதாமைப்போல
அல்லாது, பணத்திற்காக இயேசுவை விலை பேசிய யூதாசைப்போல் அல்லாது,
இயேசுவின் சந்திப்பால் புதுவாழ்வு பெற்ற சக்கேயுவைப்போல இந்தச்
சமுதாயத்தை மாற்றப் புறப்படுவோம். நாமும் மனம் மாறுவோம்.
இன்றைய நற்செய்தி தீய ஆவியைப் பற்றி பேசுகின்றது.
ஒருமுறை கர்தினால் சுவெனென்ஸ் தலைமை தாங்கிய கூட்டமொன்றில்
நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திலே ஒருவர் எழுந்து,
கர்தினால் அவர்களே, தீய ஆவிகள், பேய்கள் இருக்கின்றனவா? என்று
கேட்டார். அதற்கு கர்தினால் அவர்கள். நான் தீய ஆவியைப்
பார்த்ததில்லை; ஆனால் பாவத்தை எல்லா இடங்களிலும்
பார்க்கின்றேன் என்றார். இதற்கு என்ன அர்த்தம்? எங்கே பாவமிருக்கின்றதோ,
அங்கே பேயிருக்கின்றது: எங்கே பேயிருக்கின்றதோ அங்கே பாவமிருக்கின்றது.
தீய ஆவி இரண்டு பாவங்களைச் செய்ய நம்மைத் தூண்டும்: 1. நம்மை
நமது அழைத்தலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டும். 2. உண்மையே
உருவான தூய ஆவியாருக்கு எதிராகப் பொய் சொல்லத் தூண்டும்.
யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள்
நுழைந்தான். இயேசு அவனிடம், நீ செய்யவிருப்பதை விரைவில்
செய் என்றார் (யோவா 13:27) என்றும், புனித பேதுரு, அனனியா,
நீநிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று
வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான்
உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? என்று கேட்டார் (திப 5:3) என்றும்
நற்செய்தியிலும், திருத்தூதர் பணிகளிலும் பழக்கின்றோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல
சாத்தான் நமது மனத்தைப் பிளவுப்படுத்துவான். இன்றைய முதல்
வாசகம் கூறுவதுபோல கடவுள் கட்டளையிடுவதைக் கேட்கவிடாமல் நம்மைத்
தடுப்பான். தீய ஆவியின் சோதனைகளிலிருந்து நாம் விடுபட்டு
வாழ வழி உண்டா?
நான் அமைதி தேடி ஒருமுறை ரிஷிகேஷ் சென்றிருந்தேன். அங்கே
மூன்று வாரங்கள் தங்கியிருந்தேன். நான் தமிழகம் திரும்புவதற்கு
முன்னால் ஒரு யோகியைச் சந்தித்தேன். அவரிடம் சோதனைகளை வெல்வது
எப்படி? என்றேன். அதற்கு அவர், சோதனைகள் எல்லாருக்கும் வரும்
அந்தச் சோதனைகளை வெல்ல இரண்டு வழிகள் உள்ளன: 1. எல்லாம் வல்ல
இறைவனின் அருளை வேண்டலாம். 2. உங்களது மறைநூல் -
திருவிவிலியம் சொல்கின்றபடி வாழலாம் என்றார்.
இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசுவுக்குத் தீய ஆவி அடிபணிவதைப்
பார்க்கின்றோம். ஆகவே நாம் தீய ஆவியால் சோதிக்கப்படும்போது
இயேசுவின் அருளுதவியை நாடலாம். புனித பவுலடிகளார், மீட்பை
தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையைத்தூய ஆவிஅருளும்போர்வாளாகவும்
எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் (எபே 6:17). ஆக, இறைவார்த்தையைக்
கையிலேந்தி சாத்தானோடு போர்தொடுத்து, சோதனைகளை வெல்லலாம்.
மேலும் அறிவோம் :
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின் (குறள் : 280.)
பொருள் : உயர்ந்தோர் தவத்திற்குப் பொருந்தாதவை என்று விலக்கியவற்றை
விட்டுவிட்டால், மொட்டையடித்தல், சடை வளர்த்தல் போன்ற புற
வேடங்கள் தேவையற்றவை ஆகும்.
ஒரு மனைவி தன் கணவரிடமிருந்து மணமுறிவு
கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதற்கு அவர்
கூறியிருந்த காரணம் அவருடைய கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக
அவருடன் பேசுவதில்லை. வழக்கை விசாரித்த நீதி அரசர் கணவரிடம்,
"உங்கள் மனைவியுடன் நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டதற்கு
அவர் "அவள் என்னைப் பேசவிட்டால்தானே காலை முதல் இரவு வரை
அவளே பேசிக்கொண்டிருக்கிறாள்" என்றார்.
"உன் நாவு உன்னைச் செவிடமாக்கிவிடும்" என்று எச்சரிக்கின்றார்
ஓர் அறிஞர் ஆம், பிறரைப் பேசவிடாமல் நாமே
பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் பேசுவது நம் காதில்
விழாது. நாம் செவிடர்களாகிவிடுவோம். இன்றைய அருள்வாக்கு
வழிபாடு கடவுளுடைய வார்த்தைக்குச் செவிமடுக்க நம்மை அழைக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவுக்குக் கூறுகிறார்:
"உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை அவர்களுடைய சகோதரர்களினின்று
நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன் என் வார்த்தைகளை அவனுடைய
வாயில் வைப்பேன். என் பெயரால் அவன் சொல்லும் வார்த்தைகளுக்குச்
செவிகொடாதவனை நான் வேறுப்பேன்" (இச 13:18-19)
கிறிஸ்து தோற்ற மாற்றம் அடைந்தபோது தந்தையாகிய கடவுள் உலக
மக்களுக்குக் கூறியது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்"
(மத் 17:5). கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு நாம்
செவிசாய்க்க வேண்டும். ஏனெனில் முற்காலத்தில் இறைவாக்கினர்
வழியாகப் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன்
வாயிலாக நம்மிடம் பேசியுள்ளார் (எபி 1:1-2). இன்றைய நற்செய்தியில்,
மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தனர். ஏனெனில்
அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக்
கற்பித்து வந்தார் (மாற் 1:22). அவருடைய போதனை அவருடைய போதனை
அன்று அது அவருடைய தந்தையின் போதனை (யோவா 7:16).
ஞானம் பெறவேண்டுமென்றால், சீடர் குருவைக் கண்டு, அவருடைய
வார்த்தையைக் கேட்டு, திரும்பத் திரும்ப அவருடைய பெயரை உச்சரித்து,
அவருடைய உருவத்தையே என்றும் சிந்திக்க வேண்டும் என்கிறார்
திருமூலர்
இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாலுறுப்புகளை விருத்தசேதனம் செய்வதில்
குறியாக இருந்தனர். ஆனால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக்
கேட்க காதையோ, கேட்ட வார்த்தையை கடைப்பிடிக்கத் தேவையான
இதயத்தையோ விருத்தசேதனம் செய்யவில்லை. எனவேதான் ஸ்தேவான்
அவர்களைப் பார்த்து, "திமிர்வாதம் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக்
கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே"
(திப 7:51) என்று கூறி அவர்களை வன்மையாகக் கண்டனம்
செய்தார்.
ஒரு தாய்க்கோழியிடம் கடவுள் கேட்டார். "நீ எங்கே போனாலும்
உன் குஞ்சுகள் உன்னைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் மனிதர்கள்
ஏன் என்னை அவ்வாறு பின்தொடர்வதில்லை. கடவுளிடம் தாய்க்கோழி
கூறியது: "நீ உன் பிள்ளைகளை வளர்த்த இலட்சணம் அப்படி?" இது
கசப்பான உண்மை. இந்த உண்மையைக் கிறிஸ்து பின்வருமாறு
தெரிவித்துள்ளார்: "எருசலேமே, எருசலேமே. கோழி தன் குஞ்சுகளை
தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை
அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு
விருப்பமில்லையே" (மத் 23:37),
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்.
ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்" (திபா 957-8). கடவுளுடைய
வார்த்தை தம்மை என்றும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றத்திற்கு
நம்முன் வைக்கப்படும் சவால் கடவுளா? செல்வமா? "நீங்கள் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).
இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும், போலியான சபைகளாலும்
மக்கள் ஏமாந்து போகிறார்கள். திருத்தூதர் பவுல் தமது சீடர்
திமொத்தேயுவுக்கு வழங்கிய அறிவுரையும் எச்சரிக்கையும் இக்கால
மக்களுக்கும் திருப்பணியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமானது;
இன்றியமையாதது: "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலம் தரும்
போதனையைக் கேட்காமல், உண்மைக்குச் செவிகொடுக்காமல் புனைக்கதைகளை
நாடிச் செல்வார்கள். ஆனால் நீ இறைவார்த்தையை, வாய்ப்புக்
கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அறிவி" (2 திமொ 4:2-4).
அசல் தங்க நகைகளும் உண்டு போலியான "கவரிங்" நகைகளும் உண்டு.
இன்று மக்கள் போலியான சபைகளைத் தேடிச்சென்று தங்கள் நம்பிக்கையை
இழக்கின்றனர். இந்நிலையில் "உண்மைக்குத் தூணும் அடித்தனமுமான"
(1 jpnkh 4:15) திருச்சபையின் போதனைக்கு செவிசாய்க்க
வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் தீய ஆவிகூடக் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்டு
அவரிடம்: "நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கூறி கத்தியது.
ஆனால், "தந்தையால் mர்ப்பணிக்கப்பட்டு அவரால் இவ்வுலகிற்கு
அனுப்பப்பட்ட கிறிஸ்துவை" (யோவா 10:36) மறைநூல் அறிஞர்களும்
பரிசேயர்களும் எற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களுடைய
இதயக் கடினம். இதயக் கடினம் பாவங்களிலெல்லாம் டிய பாவம்
தூய ஆவியைப் புறக்கணிக்கும் செயல். எனவே, கடவுள் நமக்கு இன்று
கூறும் அறிவுரை வேண்டுகோள். எச்சரிக்கை "உங்கள் இதயங்களைக்
கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச்
செவிசாய்ப்பீர்"(திபா 95:7-8).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
அதிகாரம் கொண்ட புதிய போதனை
கடந்த
வாரம் இறை வார்த்தை ஞாயிறைக் கொண்டாடிய வேளையில், 'நற்செய்தி'
என்ற சொல்லின் பொருளை புரிந்துகொள்ள முயன்றோம். நம்
சிந்தனைகளின் ஒரு பகுதியாக, அசிசி நகர் புனித
பிரான்சிஸ் அவர்கள் எவ்வாறு தனது வார்த்தைகளை விட
வாழ்வின் வழியே 'நற்செய்தியைப் போதித்தார்' என்பதை
நினைவுகூர்ந்தோம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, இந்த
வாரம், நற்செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்பவரைப்பற்றி
சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் சார்பாகப்
பேச யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை முதலில்
சிந்திக்க முயல்வோம். அதற்கு உதவியாக, 'அதிகாரம்' என்ற
சொல்லை முதலில் புரிந்துகொள்வோம். தனியொரு மனிதர், சக்திவாய்ந்த
பதவியில் இருப்பதால் அதிகாரம் பெறுகிறாரா, அல்லது அவர்
உண்மையான நேர்மையான வாழ்க்கையை வாழ்வதன் காரணமாக அதிகாரம்
பெறுகிறாரா?
கோடி, கோடியாய் பணத்தைச் செலவழித்து, இந்திய அரசால்
கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்ட
விழாவுடன் நம் சிந்தனைகளைத் துவக்குவோம். அயோத்தியில்
ராமர் கோயில் கட்டும் பணி இன்னும் முடிவடையாத
நிலையில், ஜனவரி 22ஆம் தேதி, சர்வதேச ஊடகங்களுக்காக ராமர்
கோயில் திறப்பு விழாவை இந்திய அரசு 'அரங்கேற்றியது'.
பொதுவாக, கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தை யாரும் திறந்து
வைப்பதில்லை. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைய
இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும்போது, அதை திறந்துவைக்க
இந்திய அரசு காட்டியுள்ள ஆர்வத்திற்கு ஒரே காரணம், இவ்வாண்டு
வரவிருக்கும் தேர்தல் மட்டுமே என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த நிகழ்வும், இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்ட நாளான -
சனவரி 22ம், 'அதிகாரம்' மற்றும் 'சக்தி' என்ற சொற்களைப்
புரிந்துகொள்ள உதவுகின்றன. 1999ம் ஆண்டு சனவரி 22ம்
தேதி இரவு, இந்து அடிப்படைவாதக் குழுவினரால் மூன்று
பேர் கொல்லப்பட்டனர். ஒடிஸ்ஸா மாநிலத்தின் மிகவும் ஏழ்மைப்பட்ட
ஓர் ஊரில், 34 ஆண்டுகளாக தொழுநோயாளர்களுக்கென பணியாற்றிவந்த
58 வயதான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், மற்றும் அவரது இரண்டு
மகன்கள், 10 வயதான பிலிப், 6 வயதான திமோதி ஆகிய மூவரும்,
அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த ஜீப்பில் உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டனர். அந்த ஜீப்பை சுற்றி வளைத்த பஜ்ரங் தள்
குழுவினர் '
ஜெய் ஸ்ரீ ராம்'
என கோஷம் எழுப்பியபடி அந்த
ஜீப்பை தீ வைத்து கொளுத்தினர்.
ராமர் உட்பட, எந்த ஓர் உண்மையான கடவுளும், கிரஹாம்
ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ்
ஆகியோரை உன்னதப் பணியின் அதிகாரப்பூர்வ எடுத்துக்காட்டுகள்
என்று நிச்சயமாகப் பாராட்டியிருப்பார். அதேபோல், '
ஜெய்
ஸ்ரீ ராம்'
என்று தன் பெயரைச் சொல்லியவண்ணம் ஜீப்பை எரித்து
மூவரைக் கொன்ற பஜ்ரங் தள் குழுவின் மிருகத்தனமான சக்தியை,
ராமர் வன்மையாகக் கண்டனம் செய்திருப்பார்.
இந்தக் கொடூரக் கொலைகளின் 25வது ஆண்டு நினைவு நாளில்,
'
ஜெய் ஸ்ரீ ராம்'
என்ற அதே முழக்கம், அயோத்தியில்,
சனவரி 22 கடந்த திங்களன்று ஒலித்திருக்க வேண்டும். இது,
தற்செயலாக நடந்ததா? அல்லது, திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின்
உள்ளங்களை புண்படுத்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டதா
என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட
இடத்திலேயே ராமர் கோவில் எழுப்பப்பட்டிருப்பது, இஸ்லாமியர்
உள்ளங்களில், ஆறாத காயங்களாக இருப்பதை நாம் அறிவோம்.
சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல்
நடத்தப்பட்ட இந்த கோவில் திறப்பு விழாவை ராமர் நிச்சயம்
பாராட்டியிருக்கமாட்டார் என்பது உறுதி. ஒருவருக்கு அளிக்கப்படும்
அதிகாரம் மிருகத்தனமான சக்தியாக உருவெடுத்தால் என்ன நிகழும்
என்பதை, கடந்த திங்கட்கிழமை, ஜனவரி 22, 2024 அன்று அரங்கேறிய
நாடகம், நமக்கு உணர்த்துகிறது.
அயோத்தியில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் செயல்பாடுகள்,
அதற்கு முன்னதாக, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும்
நோக்கத்தோடு, நாட்டின் பிரதமர், பல கோவில்களில்,
வழிபாடு என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்த நாடகங்கள்
அனைத்தும், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்!
இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப்
புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.
இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும்
என்பதை இன்றைய முதல் வாசகம் (இணைச்சட்டம் 18: 15-20)
நமக்குச் சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி,
தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று,
இன்றைய நற்செய்தி (மாற்கு 1: 21-28) நமக்குச் சொல்கின்றது.
இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல.
அவர்கள் அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை
ஒலித்தது. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது?
இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின் அதிகாரம்
எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.
'
அதிகாரம்'
என்று நாம் தமிழில் பயன்படுத்தும்
சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச்
சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப்
பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில்
ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று
குறிப்பாகச் சிந்திக்கவேண்டியது. இதில், Authority என்ற
வார்த்தைக்கு, '
the power to influence others,
especially because of one'
s commanding manner or
one'
s recognized knowledge about something'
அதாவது,
"ஒரு விடயத்தைக் குறித்து ஒருவர் பெற்றிருக்கும் அறிவு,
அல்லது, ஒருவர் இயல்பிலேயே பெற்றிருக்கும் தலைமைப்பண்பு
ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்கள் மீது செலுத்தப்படும்
தாக்கம்" என்பது, இரண்டாவது அர்த்தமாகத் தரப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது அர்த்தத்தின் ஆழத்தை, புரிந்துகொள்ள ஒரு
கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். உலகத்தலைவர்கள்
கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை
செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள்,
ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் பல்வேறு
செயற்கைத்தனமான அடைமொழிகளுடன் அறிவிக்கப்படும், அவர்களைச்
சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று,
பலர் வருவார்கள். ஒருவேளை, எக்காளம் ஒலிக்கலாம், அல்லது,
ஆடம்பரமான இசை ஒலிக்கலாம். அந்தத் தலைவரைப்
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கரவொலி எழுப்ப
வேண்டியிருக்கும்.
அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள்,
ஸ்டான் சுவாமி, அல்லது, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் போன்று, மக்களின்
மனங்களில் உயர்ந்ததோர் இடம் பிடித்திருக்கும் ஒருவர்
வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள்
தேவையில்லை, அவரைச்சுற்றி பல மெய்காப்பாளர்கள் ஓடிவரவும்
தேவையில்லை. ஆடம்பர இசை தேவையில்லை. அவர் அரங்கத்தில்
நுழைந்ததும், அங்கு உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில்
இருக்கும். அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல்,
எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில்,
அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும்
மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர்,
நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான்
'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது
வகையான அர்த்தம்.
இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு,
அந்த அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ,
எழுதுவதற்கோ, அவர் கொண்டிருக்கும் அதிகாரம் என்பது, இந்த
இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம்.
பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, மின்விளக்கை
உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப்
பேச, இவரைவிட, யாருக்கு '
அதிகாரம்'
இருக்கமுடியும்? எடிசன்
அவர்கள், எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை.
கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட
அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு, பலநூறு கண்டுபிடிப்புக்களை
உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி
பேசும் அதிகாரமும் பெற்றார்.
'
அதிகாரம்'
என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித
அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், எத்தனையோ
பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும். நமது
குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை
அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.
போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக்
கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. இத்தகைய அதிகாரத்தைப்
பெறும் அரசியல்வாதிகள், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள
மேற்கொள்ளும் பரிதாபமான, வெறித்தனமான முயற்சிகள், நம்மை
வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.
இதற்கு முற்றிலும் மாறாக, உன்னதமான பண்பு, அல்லது, உயர்ந்த
அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம்,
அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில்,
ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற
வெறி இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள் வளர்த்துக்கொள்ளும்
இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப்
பேசவைக்கும். அது, கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச்
செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.
இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த
ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி
தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்த உண்மைகளை மக்களிடம்
பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை மக்களை வியப்பில்
ஆழ்த்தின. அதுவரை, ஏதோ மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல்
மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு
தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும்
வேறுபாடுகள் இருந்தன. "இது என்ன? இது அதிகாரம் கொண்ட
புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்;
அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27)
என்று மக்கள் இயேசுவைப்பற்றி வியந்து பேசுவதை, இன்றைய
நற்செய்தியில் கேட்கிறோம். கடவுளால் அனுப்பப்பட்டவர்
என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் வியத்தகு அதிகாரத்துடன்
போதித்தார்.
கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி
இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன்
சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத்
தங்களுக்கு விளக்கி, தங்களை அதுவரை வழிநடத்தி வந்த
மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால்
கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல்
சொல்லும்வண்ணம் அமைந்திருந்த மோசேயின் சொற்களை இன்றைய
முதல் வாசகமாகக் கேட்கிறோம். (இணைச்சட்டம் 18:15-20)
மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக,
தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில்
அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான
நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால்
பேசுகிறோம் என்ற அந்த உறுதி ஒன்றே, அவர்களுக்கு அதிகாரத்தையும்
துணிவையும் வழங்கியது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக,
இறை வாக்காகவே வந்த இயேசு, '
அதிகாரம்'
என்ற சொல்லுக்கு
இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார். அதிலும்
குறிப்பாக, இறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக்
கழுவி, ஓர் அடிமையின் பணிகளைப் புரிந்தவேளையில், உண்மையானத்
தலைவர், போதகர், ஆண்டவர் யார் என்ற இலக்கணத்தை அவர்களுக்குச்
சொல்லித்தந்தார் (யோவான் 13:12-16)
'
அதிகாரம்'
என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள்
அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள்
நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள்,
தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம்
வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை, நமது
ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி,
அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும்,
கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.
உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும்,
பிரதமர்களாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ
300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி
ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும்
மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக்
காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து
தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. இந்தியா
போன்ற நாடுகளில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்கள், தவறுகளைச்
சுட்டிக்காட்ட துணிவில்லாமல், பிரதமர் மற்றும் ஏனையத்
தலைவர்களின் துதிபாடி வருகின்றன.
"Power corrupts; absolute power corrupts absolutely"
அதாவது, "அதிகாரம், கெடுதலை விளைவிக்கிறது; அத்துமீறிய
அதிகாரம், அத்துமீறிய கெடுதலை விளைவிக்கின்றது" என்ற
ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்களை
எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இத்தலைவர்களின்
உள்ளங்களில் உறங்கிக்கிடக்கும் மனசாட்சி என்ற விளக்கு,
தூய ஆவியாரின் தூண்டுதலால் மீண்டும் ஒளியேற்றப்பட்டு,
இவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று இறைவனிடம்
வேண்டுவோம்.
உலகம், தலைவர்கள், அரசு, அதிகாரம் என்று மற்றவர்களைக்
குறித்து சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவர் வாழ்விலும்
'அதிகாரம்' எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு
செய்வது நல்லது. நம் குடும்பங்களிலும், உறவு, மற்றும்
நட்பு வட்டங்களிலும் நிலவும் அதிகாரம், 'யார் பெரியவர்'
என்ற போட்டியாக உருவெடுக்கிறதா? அல்லது, ஒவ்வொருவரிடமும்
உறைந்திருக்கும் நற்பண்புகள், ஒருவர்மீது ஒருவர்
காட்டும் மரியாதையாக உருவெடுக்கிறதா? என்பதை ஆய்வு
செய்வோம்.
அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே
வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின்
நன்மதிப்பைப் பெறவேண்டும் என்று, இயேசு வாழ்ந்து
காட்டிய அந்த வழியில் நாமும் வாழ, இறையருளை மன்றாடுவோம்.
அரசர்கள், தலைவர்களின் அதிகாரங்கள் உலகத் தலைவர்கள்மீது,
மக்கள் நம்பகத் தன்மையை இழந்து அச்சத்திலும்,
பயத்திலும் வாழ்கிற அவல நிலையை சமூகப் பொறுப்புகள்,
கல்வி, மருத்துவம், பொருளாதாரம், சமயம்
அனைத்திலும் பணிப் பொறுப்புக் கொடுப்பதிலும் பணி
உயர்விலும், பணி மாற்றத்திலும் இதே நம்பகத் தன்மை
இன்றி அதிகாரமற்றவர்களாகவே பெற்றோர்களுக்கும்
பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை.
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான அதிகாரம்
சம்பளத்தை பொறுத்தே நிர்ணமிக்கப்படுகிறது.
அருள்பணியாளர்களுக்கும் ஆயருக்கும் கூட கடவுளின்
பெயரால் வழங்கப்படுகின்ற அருள்பொழிவின் மூலமே இந்த
அதிகாரம் கிடைக்கிறது.
மக்கள் எல்லாருமே கொடுக்கப்பட்ட பதவியிலிருந்து
அதிகாரத்தை, ஆளுகையை வெளிப்படுத்துகிறார்கள்.
மேலே சொல்லப்பட்ட அதிகாரங்கள் எல்லாமே, அடுத்தவரை
அடக்கி ஆளவும் அன்பு காட்டாமல் பழிவாங்கவும், ஆணவ
அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றன. அடுத்தவர்களின்
உணர்வுகளுக்கும் உரிமை களுக்கும் மதிப்பளிக்காத
அதிகாரமாக உள்ளது. "
எனக்கு என்ன தேவையோ அதை நீ கொடு,
நான் விரும்பும் விதத்தில் கொடு"
என்று அடுத்தவரை
அடக்கி ஆளும் அதிகாரமே ... நடைமுறை.
இயேசுவைப்போல் அதிகாரம் கொண்ட போதனையாக நம் வாழ்வு
இருக்கச் சில வழிமுறைகள்
1. இயேசுவின் போதனையும் அதிகாரமும் உண்மையாகவும்,
நேர்மையாகவும், நம்பகத் தன்மையிலும் இருந்தது,
நாம் அதைக் கடைப்பிடிக்கப் பயிற்சி எடுக்க
வேண்டும் நமது சொல்லும் வாழ்வும் இயேசுவைப்போல்
இருக்க வேண்டும்.
3. நமது அதிகாரம், பொறுப்புள்ள மனிதர்களாக
நடந்துகொள்வதில் உள்ளது. நாம் கடவுளுக்கும்,
மனிதர்களுக்கும், சமூகம், குடும்பம் அனைவருக்கும்
'கடமைப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும்.
4. நமது ஆளுமை இயேசுவைப்போல் பணிபுரிவதில் இருக்க
வேண்டும். வெறும் பேச்சாளர்களாக இல்லாமல் நமது
தோள்... பிறரை சுமக்க முன்வர வேண்டும்.
மறையுரைச்சிந்தனை திரு.
சின்னப்பன் டிசில்வா.வெலிங்டன்.ஊட்டி
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு
பாபு சிவகங்கை