கடவுள் நம்மீது கொண்ட அன்பையும் இரக்கத்தையும் இந்த ஞாயிறு
மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு சுரக்கும், ஒழுக்கம் நெருங்கி இருக்கும்.
நன்மை மட்டுமே மலரும். மெய்யுணர்வு உண்டாகும். ஆணவம் இல்லாத மரியாதை
பிறக்கும். இரக்கமுள்ள மனிதன் எந்த தீமைக்கும் அடிமையாவதில்லை.
இரக்கம் மிக்க மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது. இரக்கமிக்க
இனிய பேச்சுக்களால் அன்பும் சமாதானமும் பெருகும். இரக்கச்
சிந்தனையால் துன்பங்கள் துடைக்கப்படும். பிறரின் நலம்
பாதுகாக்கப்படும். நமது கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் இரக்க
உணர்வுடன் நேசிப்பதை, நமது இயல்பான சுவாசமாக்க முயற்சிக்கும்
பயிற்சி அளிக்க வரவேற்கிறது இன்றைய திருப்பலி.
இரக்கத்தை விட மேலான சிறந்த அறம் இந்த உலகில் வேறொன்றுமில்லை.
இறைவன் நம்மீது கொண்ட அன்பின் மிகுதியால் தம் சாயலாக மனிதனைப்
படைத்தார். மனிதன் தன் பாவத்தால் தாழ்ந்த போதும், அவரை விட்டு
விலகிய போதும் இறைவன் அவனைக் கீழே விழ விடாமல் தூக்கி எடுத்து
அரவணைத்து அவனைப் பின் தொடர்கின்றார்.
உள்ளதை எல்லாம் நமக்காய் கொடுத்தவர் உயிரையும் நமக்காக
கொடுக்கிறார். இரக்கம் இருக்கும் இடத்தில் எவை எல்லாம்
இனியவையோ அவை எல்லாம் நிரந்தரமாகத் தங்கி இருக்கும். வானகத்
தந்தையின் இதயவாசலும் நம்மீது கொண்ட பேரிரக்கத்தினால் திறந்தே
கிடக்கிறது. நமது இதயவாசலையும் பிறருக்காக பேரிரக்கத்துடன்
திறந்து வைக்கச் சொல்லி இந்தத் திருப்பலி அருளை நம் மீது
பொழிகிறது.
பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியைவிட மேலான இன்பமில்லை.
இரக்கத்தைவிட மேலான அறமில்லை.
இரக்கத்தின் இறைவா இத்தவக்காலத்தில் என் மன வீணையில் இரக்கம்
இயல்பான இசையாய் வெளிப்பட வரம் தாரும் என செபிப்போம்.
1.நற்செயல் புரிவதற்கென்று திருச்சபையை ஏற்படுத்திய இனியவரே!
திருச்சபையின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும்
திருப்பணியாளர்களை ஆசீர்வதியும்;. அனைவரும் நற்செயல்
புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
2. இரக்கமும் அன்பும் நிறைந்த இனியவரே இறைவா!
நீர் எம்மீது கொண்டிருந்த அன்பையும், இரக்கத்தையும்
நாடுகளின் தலைவர்கள் எல்லா மக்கள் மீதும் காட்ட
வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3.உம் மீது விசுவாசம் கொள்வோரை உறுதிப்படுத்தும்
இனியவரே இறைவா!
உம்மீது எங்கள் விசுவாசத்தை நாள்தோறும்
உறுதிப்படுத்தி, இன்னும் அநேகரை உமது விசுவாசத்தில்
பங்கெடுக்கச் செய்யும் கருவியாக, இங்கு வருகை தரும்
ஆன்மீகத் தந்தையர்கள் அனைவரையும் பயன்படுத்த
வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. மீண்டும் மீண்டும் இரக்கத்தைப் பற்றி
எடுத்துரைக்கும் இனியவரே!
இரக்கமிகு செயல்கள் எங்கள் நடுவே செயல்பட எங்களிடம்
உள்ள சினம், கூச்சல், பொறாமை, ஆங்காரம் போன்ற செயல்களை
கைவிட உமதருள் வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. இரக்கமிகு செயல்களை செய்பவரை ஆசிர்வதிக்கும்
இனியவரே!
நோயுற்றோர், கைவிடப்பட்டோர், ஆதரவு இழந்து தவிப்போர்,
முதியோர், வறியோர், கைம்பெண்கள் அனைவருக்கும்
இத்தவக்காலத்தில் எங்களால் இயன்ற இரக்கமிகு செயல்களைச்
செய்ய அருள்புரிய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இறைவன் மனிதன் மீது காட்டிய பொறுமையும், இரக்கமும் இன்றைய நற்செய்தி
வாசகங்களாக நம் மனதில் இடம் பெறுகின்றது. பாவ இருளில் மனிதன் நடக்கும்
போதெல்லாம் அருளின் ஒளியை மேகமாக்கி, அந்த மேகத்தின் அடியில் மனிதனை
பத்திரமாக கைபிடித்து அழைத்துச் செல்கின்றார். மனிதன் நிலைவாழ்வின்
பாதையில் நடக்க தடுமாறிய போது அவனை பாதை நோக்கி பயணிக்க
வழிகாட்டுகின்றார். ஒளியினை விடுத்து இருளைப் பிடித்துக் கொண்ட மனிதனைக்
கூட, இருகரம் நீட்டி தூக்கி எடுத்து அரவணைத்துக் கொள்கின்றார். இறைவனின்
இரக்கத்தை மனிதன் அரக்கத்தனமாக வெறுத்த போதும்கூட, மனிதன் மீது
காட்டிய இரக்கத்தை இறைவன் கைவிடத் தவறவில்லை.
நபிகள் நாயகம் ஒரு சமயம் நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம்.
அவரது உடையானது தரையில் படர்ந்து கிடந்தது. அப்போது ஒரு பூனை, அவரது
உடையில் வந்து உட்கார்ந்து கொண்டது. பின்பு அந்தப்பூனை நன்றாக
தூங்கிவிட்டது. தான் தொழுகை செய்ய வேண்டிய நேரம் வந்ததும் எழுந்திருக்கப்
பார்த்த போது, பூனையானது தனது உடையில் தூங்குவதை நபிகள் நாயகம் கண்டு
கொண்டார். உடனே தனது சகோதரியை அழைத்து ஒரு கத்தரிக்கோல் கொண்டு வரச்
சொல்லி, தனது ஆடையில் பூனை தூங்குகின்ற பகுதியை மட்டும் கத்தரித்துவிட்டு,
பூனையை தொந்தரவு செய்யாமல் தொழுகைக்குச் சென்றாராம்.
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நன்மை தீமை அறியும் நெஞ்சில்
மெய்யுணர்வு பிறக்கும். ஆணவம் இல்லாத நெஞ்சில் மரியாதை பிறக்கும்.
கடவுளும் முக்கியம். அந்தக் கடவுள் படைத்த படைப்புகளும் முக்கியம்
என்கிற மனநிலையை படைத்தவர்கள் ஞானிகள். ஞானிகளுக்கு காணுகின்ற உயிர்களில்
எல்லாம் கடவுள் தன்மை வெளிப்படுகிறது. அதனால் தான் ஞானிகளைக்
காணும் நமக்கும் இறைவனின் சாயலைக் கண்டது போன்ற மனதிருப்தி ஏற்படுகிறது.
இரக்கமுள்ள மனிதன் எந்த தீமைக்கும் அடிமையாவதில்லை. இரக்கம் மிக்க
மனிதர்களால்தான், இந்த உலகம் இயங்குகிறது.
நீரோ மன்னனின் கொடூர மனப்பான்மையையும், கொடுங்கோல் ஆட்சியையும்
வரலாறு வருத்தத்தோடு பேசுகிறது. ஆனால் அவன் ஆட்சியில் இருந்த முதல்
ஐந்து ஆண்டுகாலம், அன்பிலும், பரிவிலும், இரக்கவுணர்விலும்
நிகரற்று விளங்கியிருக்கிறான். ஒரு மனிதனுக்கு மரண தண்டனை
விதிக்கும் சாசனத்தில் கையெழுத்திட வேண்டி வந்த போது, நீரோ சொன்ன
வார்த்தைகள்," குவாம்வெல்லம் மீ நெஸ்க்யைர் லிட்ராஸ்" இதன் பொருள்
"எனக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தால் எவ்வளவு
நன்றாக இருந்திருக்கும்". இவனைக் கொடூரமாக மாற்றியது எது?
அதிகாரமா? அனுபவமா? ஆணவமா?
எதுவாக இருந்தாலும் இன்றைய மனிதனுக்கு இரக்க உணர்வு அதிகமாக சுரக்க
வேண்டிய கட்டாயம் உள்ளது. விழுந்து கிடக்கின்ற மனிதனை தூக்கி
எடுக்க, மனதில் இடமில்லை. அப்படி இருக்க இரக்கம் எங்கே
சுரக்கப்போகிறது. படிப்பு, பணம், பதவி இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு
அவசியமானதுதான். சொத்து பாகம் பிரிக்கும்போது அண்ணன் தம்பி என்ற
உணர்வே காணமல் போய், கத்திக்குத்து, சாவு, கொலை என உயிர் பறிக்கும்
நிலை, பணத்திற்காக பெற்ற மகனே தாயைக் கொலை செய்யும் நிலை. பேராசை
இரக்க உணர்வை முகமூடி போட்டு மூடிவிடுகிறது. அன்பிற்கும் உண்டே
அடைக்கும் தாழ். வருந்தி வருபவருக்கு வானகத் தந்தையின் இதயவாசல்,
எப்போதும் திறந்தே கிடக்கிறது.... பாவ மழையில் குடையாக, பாவப்
புயலில் படகாக, பாவஇடியில் இடிதாங்கியாக வந்தார் இறைமகன் இயேசு.
மனிதன் மீது பாவம் என்ற மழைத்துளி விழுந்தபோது, இயேசு அன்பு எனும்
போர்வையால் மூடிக்கொண்டார். பணிவாழ்வில் போராட்ட வாழ்வில், சோதனைக்
காலங்களில் உள்ளதைக் கொடுத்து, இறுதியில் சிலுவையில் உயிரையே
கொடுத்தார்.
இரக்கம் என்ற நற்பண்பு ஒருமனிதனின் இனிய முகவரியாகும் என, சிலுவைச்
சாவு வரை இறைமகன் இயேசு நமக்கு தெளிவாக்கிவிட்டார்;
அந்த முகவரியை தவக்காலத்தில் இப்படி அடையாளப்படுத்தினால், நம்
தவத்தின் வலிமை நமக்குக் கூடுதாலாகக் கிடைக்கும் அல்லவா!
*யாருமற்ற, சிறுவர் சிறுமியர்க்கு மனமிரங்கி உதவி செய்வோம்.
*தேற்றும் சொற்களை கொட்டுவதற்கு நோயாளிகளைத் தேடித்திரிவோம்.
*பிறருக்கு மதிப்பளித்து உதவி செய்வோம்.
*சமூகம் ஒதுக்கிய மனிதர்களின் நலனில் அக்கறை காட்டுவோம்.
*திருந்த விரும்பும் கைதிகள் மீது இரக்கம் காண்பிப்போம்.
*தாயகத்தை விட்டுப் பிரிந்து அந்நிய தேசத்தில் வாழும் நமது
நட்புக்களின் பெருமையை சிறுமையாக்காமல், மதிப்புடன் உற்று
நோக்குவோம்.
*பிறரின் குறைகளை விட்டுவிட்டு நிறைகளை அதிகமாகப் பேசுவோம்.
நம்மிடம் இருப்பதை இல்லாதோருடன் பகிர்வோம்.
*மனமிரங்கிக் கடன் கொடுப்போர் நல்லதைச் செய்கின்றனர். தேவையென
வருவோருக்கு உதவுவோம்.
*ஆன்மீகத்தின் உச்சக் கட்ட பகிர்தல் பிறரின் பசி போக்குதல்.
பசித்தோருக்கு உணவளிப்போம்.
தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கக் கூடிய நம்மை இறைவன் உண்மை
ஒளியை நோக்கி வர அழைக்கின்றார். இயேசுவின் பாடுகளோடு பயணித்து நம்மை
நாமே செதுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் யார் ஒளி? அது உண்மை ஒளியா
என ஆராய்ந்து பார்த்து வாழ அழைக்கின்றார். தேர்தல் நேரத்து பரபரப்புகள்
, பரப்புரைகள், அவசர செய்திகளின் அதிர்வலைகள், இலவசங்களின் இடர்ப்பாடுகள்,
விலையேற்றத்தின் வீரியங்கள் என பல்வேறு இருள்களின் மத்தியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஒளியை நோக்கி முன்னேறி வரச்சொல்கின்றார்.
உண்மை ஒளியை நாம் கண்டறிய முதலில் நம்மில் இருக்கும் இருள்களை விரட்டியடிக்க
வேண்டும்.
இருள் என்ற ஒன்று முதலில் இல்லை . மாறாக ஒளியானது பல்வேறு பொருள்களால்
மறைக்கப்பட்டிருப்பதாலே இருள் என்ற ஒன்று ஏற்படுகின்றது. சூரியன்
இரவில் காணாமல் போவதில்லை. அது மறைக்கப்பட்டிருப்பது போல. நாமும்
பல தேவையற்ற குணங்களால் பண்புகளால் நம்மிடம் உள்ள ஒளியை மறைத்து
வைத்திருக்கிறோம். அதனை நீக்கிவிட்டால் நாமும் நமது ஒளியைக் காணலாம்.
ஜென் கதை ஒன்று; துறவி ஒருவர் தனது மாணவர்களிடம் எது உண்மையான ஒளி
என்று எப்போது அறிந்து கொள்ளலாம்? என்று கேட்டார். சீடர் ஒருவர் தூரத்தில்
இருப்பது ஆலமரமா? அரசமரமா என்று கண்களுக்கு நல்ல வெளிச்சமாய் தெரிவது
உண்மை ஒளி என்றார். மற்றொருவர், எதிரில் வருவது குதிரையா கழுதையா
என்று கண்டுபிடிக்கும்படி தெளிவாய் இருக்கும் வெளிச்சம் உண்மை ஒளி
என்றார். ஆனால் குருவோ ஆறறிவற்ற பொருளான மரம், விலங்குகளை அடையாளம்
காண்பதற்கு உதவும் வெளிச்சம் உண்மை ஒளி அல்ல, மாறாக ஆறறிவுடைய மனிதன்
என் சகோதரன் என்று அறியும் படி நம் மனக்கண்களுக்கு கிடைக்கும்
வெளிச்சமே உண்மை ஒளி என்றார். பல நேரங்களில் நாம் எங்கோ யாருக்கோ
நடக்கும் துன்பங்களுக்காக நம்மை அறியாமல் கண்ணீர் விடுகின்றோம் இரக்கம்
கொள்கின்றோம். ஆனால் அருகில் இருக்கும் நம் சக நண்பர்களின் துன்பங்களை
கண்டு கொள்ளாமல் விடுகின்றோம். நம் அருகில் இருக்கும் மனிதர்களின்
உணர்வுகளை புரிந்து உதவும் நேரத்தில் உண்மை ஒளி நம் உள்ளத்தில்
உதயமாகி விட்டது என்று அர்த்தம்.
உண்மை ஒளியை நாம் உணர இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு சில அறிவுரைகளைக்
கொடுக்கின்றார்.
1. ஆலயம் செல்.
2. நற்செயல் புரி.
3. ஒளியை நோக்கி
வா.
1. ஆலயம் செல்:
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செய்த பாவச்செயலும் அதனால் கடவுளின்
சினத்திற்கு அவர்கள் ஆளானதும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள்
எவ்வளவு தான் பாவம் செய்தாலும், கடவுள் அவர்கள் மேல் இரக்கம்
கொண்டு தூதர்களை அனுப்புகின்றார். ஆனால் மக்கள் அதனை புரிந்து
கொள்ளாமல் மேலும் மேலும் பாவம் செய்கின்றனர். 70 ஆண்டுகளுக்கு
பின், கடவுளின் ஆலயம் நம்மிடத்தில் இல்லை என்பதை உணர்ந்து அதனை கட்ட
அரசன் ஆணை பிறப்பிக்கின்றான். "ஆண்டவரின் மக்கள் அவரின் ஆலயம் செல்லட்டும்"
என்ற ஆணையைப் பிறப்பிக்கின்றான். ஆக மக்களின் துன்பத்திற்கு காரணம்
அவர்கள் ஆண்டவரை நாடாமல் இருப்பதே என்பதை அரசன் அறிந்து அதனை செயல்படுத்த
வழிவகை செய்கின்றான்.
நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம்.
ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன்
வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில்
ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும்
தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம்.
இந்த தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும்
நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி
செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர்
இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது
இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற
உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக
சுடர்விடும்.
2. நற்செயல்கள் புரி:
கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும்
அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள்
இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக
உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய
நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை ரசிக்கப்படவில்லை என்று
எண்ணி அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன்
உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும் எல்லா நேரமும்
ரசிப்பதில்லை அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம்
செய்கின்ற நற்செயல்களை ரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும்
இருக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து
வாழ்ந்தால் நல் விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள்
புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம்.
அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை உளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.
3. ஒளியை நோக்கி வா:
சிறு பிள்ளைகள் நடை பயிலும் நேரத்தில் தாய், தந்தையர்
அக்குழந்தைகளை தரையில் இறக்கி விடுவர். பின் தன்னை நோக்கி வருமாறு
கைகளை நீட்டுவர். குழந்தைகள் அம்மா அப்பாவின் முகம் அறிந்து
அவர்களை நோக்கி நடையெடுக்கும். தான் நடக்கிறேன் என்பதை விட தன்
அம்மா அப்பாவை நோக்கி செல்கின்றோம் என்ற மகிழ்வே அவர்களுக்கு
உற்சாகம். அப்படியே நடை பழகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள்
மேல் வைக்கும் நம்பிக்கையினால் அவர்கள் வாழ்வு மேம்படுகின்றது.
நாமும் பல நேரங்களில் நம் இறைவனால் கீழே இறக்கி விடப்படுகின்றோம்.
சிலர் அதை, நமது வாழ்வு என்னும் நடைபழக என்று எடுத்துக் கொண்டு
ஒளியாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு செல்கின்றனர். சிலர் இறைவனால்
தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணிக் கொண்டு அழுது அழுது கண்களால் ஒளியை
மறைத்துக் கொள்கின்றனர்.
உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு
செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்று நற்செய்தி வாசகத்தில்
வாசிக்கக்கேட்டோம். நமது ஒளி இயேசு அவர் நமக்காக சிலுவையில்
உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு
பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை
விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம்
செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். ஆலயம்
சென்று, நற்செயல்கள் புரிந்து ஒளியை நோக்கி வரும் போது, நாமும்
அந்த ஒளியின் சிறு பிம்பங்களாகின்றோம். அப்போது கடவுளாம் ஆண்டவர்
நம்மோடும் இருந்து நம்மையும் வழி நடத்துவார்.
உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம் இறைவனின்
ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும்
இருந்து வழி நடத்துவதாக ஆமென்
திருவருகைக்காலத்தின் 3ஆம் ஞாயிறு "மகிழ்ச்சி ஞாயிறு" என்று
அழைக்கப்படுவதுபோல, தவக்காலத்தின் 4ஆம் ஞாயிறும் "மகிழ்ச்சி
ஞாயிறு" (லெயதாரே சன்டே) என அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு
அழைக்கப்படுவதன் காரணம் "அகமகிழ்வாய்! எருசலேமே!" எனத்
தொடங்கும் இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியே.
இன்றைய நாள் சிந்தனைக்கு "கடவுளோடு இணைந்தே மகிழ்ச்சி" என்ற
தலைப்பை எடுத்துக்கொள்வோம்.
ஓர் இரவில் தன்னிடம் வந்த நிக்கதேமிடம் இயேசு ஆற்றும் உரையின்
இறுதிப் பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இந்த இறுதிப்
பகுதியின் இறுதி வார்த்தைகளோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:
"இதனால் இவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே
செய்கிறார்கள் என்பது வெளியாகும்!"
"கடவுளோடு இணைந்தே செய்தல்" - இதுதான் மகிழ்ச்சிக்காக இன்றைய
இறைவாக்கு வழிபாடு வைக்கும் ஒரு வழி.
மகிழ்ச்சிக்காக ஒரு வழி இருக்கிறது என்றால், இன்பத்திற்கான ஒரு
வழியும் இருக்கும். இந்த இரண்டு வழிகளை நாம் முதலில்
புரிந்துகொள்வோம்:
அ. இன்பத்திற்கான வழி
படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரைப்
படைக்கின்றார். தோட்டத்தில் தங்கள் விருப்பம்போல வாழ்ந்த
இவர்களில் பெண்ணைத் தேடி பாம்பு வருகின்றது: "கடவுள் உங்களிடம்
தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக் கூடாது என்றது
உண்மையா?" (தொநூ 3:1) என்ற கேள்வியை முன்வைக்கின்றது.
தொடர்ந்து, "... நீங்கள் சாகவே மாட்டீர்கள் ... கடவுளைப் போல
ஆவீர்கள்..." என்றும் சொல்கின்றது. "கடவுளைப் போல" என்ற இந்த
வார்த்தைகளில் கொஞ்சம் சரிந்துவிடுகின்றார் நம் தொடக்கத்தாய்
ஏவாள். "கடவுளைப் போல" இருப்பது என்பது கடவுளிடமிருந்து
பிரிந்து கடவுளுக்கு இணையாக நிற்பது. ஆக, கடவுளைப் போல
இருப்பது இன்பம்.
ஆ. மகிழ்ச்சிக்கான வழி
பாம்பின் பேச்சைக் கேட்டு ஏவாளும், தொடர்ந்து ஆதாமும்
விலக்கப்பட்ட கனியை உண்ண, அவர்கள் கண்கள் திறக்கப்பட, தாங்கள்
ஆடையின்றி இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். மென்காற்று
வீசும் பொழுதில் ஆண்டவர் வரும்போது இருவரும் ஒளிந்து
கொண்டிருக்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு,
"நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார் (காண். தொநூ
3:8). மனிதன் எங்கிருக்கின்றான் என்று தெரியாமல் கடவுள்
அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக, "நீ இருக்க
வேண்டிய இடத்தில் இல்லையே!" என்று அவனிடமும், அவளிடமும்
உணர்த்துவதற்காகவே இக்கேள்வியைக் கேட்கின்றார். ஆக, "என்னோடு
இணைந்திருக்க வேண்டிய நீ என்னைப்போல ஆக முயற்சி
செய்துவிட்டாயே!" என்ற ஆதங்கமாகத்தான் கடவுளின் கேள்வி
இருக்கிறது. இணைந்திருந்த நிலையை அவர்கள் இழந்ததால் அவர்கள்
வாழ்வில் வேதனையும், வேட்கையும், சாபமும், வலியும்,
வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. ஆக, கடவுளோடு இணைந்திருப்பது
மகிழ்ச்சி.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு சுட்டிக் காட்டும் மகிழ்ச்சியை
நாம் நம் வாழ்வில் மீட்டெடுக்க நாம் கடவுளோடு இணைதல்
அவசியமாகிறது.
இந்த அவசியத்தை இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் பார்ப்போம்:
இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 குறி 36:14-16, 19-23) எட்டு
வசனங்களில் விவிலிய ஆசிரியர் ஏறக்குறைய 300 ஆண்டுகள் நிகழ்வைச்
சொல்லி முடிக்கின்றார். இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில்
(கிமு 587) இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய படையெடுப்பபுக்கு
உள்ளாகி, நெபுகத்னேசர் அரசர் காலத்தில்,
நாடுகடத்தப்படுகின்றனர். அவர்களின் எருசலேம் நகரமும், ஆலயமும்
அழிக்கப்படுகின்றன. திருச்சட்டம், ஆலயம், ஓய்வுநாள், சொந்த மண்
என எதுவும் இல்லாமல் அந்நியநாட்டில் அடிமைகளாக நிற்கின்றனர்.
இவர்களின் இந்த நாடுகடத்தலுக்கும், அடிமைத்தனத்துக்குமான
காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், குறிப்பேடு நூலின் ஆசிரியர்
குருக்கள், அரசாட்சி செய்பவர்கள், சாதாரண மக்கள் என
எல்லாரையும் குற்றம் சாட்டி, ஓய்வுநாள் மீறலை முதன்மையான
குற்றமாக முன்வைக்கின்றார். நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல்
மக்களுக்கான மீட்பு பாரசீக மன்னன் சைரசு (கிமு 320) வழியாக
வருகிறது. தான் வெற்றி கொண்ட பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக
இருந்த இஸ்ரயேல் மக்களை திரும்பவும் தங்களின் சொந்த நாட்டிற்கு
அனுப்பும் சைரசு மன்னனின் வார்த்தைகள் முக்கியமானவை:
அ. "ஆண்டவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்."
ஆ. "கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக."
மக்கள் ஆண்டவரோடு இருக்க வேண்டும். ஆண்டவர் மக்களோடு
இருப்பார். ஆக, மக்கள் கடவுளோடு இணைந்திருத்தல் அவர்களுக்கு
மறுவாழ்வை, நாடு திரும்பும் நல் மகிழ்ச்சியைத் தருகின்றது.
அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் நாடு திரும்பக் காரணமாக
இருந்தவர் சைரசு மன்னன் என்றாலும், நாடு திரும்புதலின்
மகிழ்ச்சி ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பானதாகவே
இருக்கிறது.
எனவே, கடவுளோடு இணைந்திருத்தல் என்பது பாரசீக மன்னன் சைரசு
வழியாக வழங்கப்படும் கொடையாகவும், அதே நேரத்தில் மக்கள்
மேற்கொள்ள வேண்டிய கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 2:4-10) "கிறிஸ்துவும்
திருச்சபையும்" என்ற இறையியல் பதிவில், இறைமக்கள் சாவின்
நிலையிலிருந்து வாழ்வின் நிலையை அடைதல் என்ற பகுதியில், "நாம்
கடவுளின் கைவேலைப்பாடு" என்றும், "இயேசு கிறிஸ்துவோடு இணைந்த
நிலையில் இருப்பது அவரின் கொடை" எனவும் பதிவு செய்கின்றார்
பவுலடியார். ஆக, கடவுளின் இணைப்பு அல்லது கடவுளின் இணைந்த நிலை
என்பது இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் நமக்குக் கொடுத்த கொடையாக
இருந்தாலும், நாம் கடவுளின் கைவேலைப்பாடு என்பதை உணர்ந்து,
"நற்செயல்கள் புரிந்து வாழும்படி" கடவுள் நம்மை அழைக்கிறார்.
இவ்வாறாக, கடவுளோடு இணைந்திருத்தல் தொடக்கமுதல் தரப்பட்ட ஒரு
கொடையாகவும், தொடர்ந்து நடைபெற வேண்டிய செயலாகவும் இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 3:14-21) "மீண்டும்
பிறப்பது" அல்லது "தூய ஆவியால் பிறப்பது" பற்றி நிக்கதேமோடு
உரையாடும் இயேசு தொடர்ந்து, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டியதன்
அவசியத்தையும், அவ்வாறு உயர்த்தப்படுதலால் மனுக்குலம் பெறும்
பயனையும், அந்தப் பயனில் நிலைத்திருக்க மனுக்குலம் செய்ய
வேண்டிய செயல்களையும் எடுத்துரைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. மானிட மகன் உயர்த்தப்படும்போது அனைவரையும் அவர்
ஈர்த்துக்கொள்வார்.
2. அப்போது அவரில் நம்பிக்கை கொள்வோர் வாழ்வு பெறுவர்.
3. இந்த வாழ்வைத் தரவே கடவுள் தன் மகனை அனுப்பினார்.
4. நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனை பெறுவர்.
5. ஒளியிடம் வருவோர் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.
இப்படிப் பிரித்துப் பார்க்கும் போது நற்செய்தியின் பொருள்
எளிதாக விளங்குகிறது. மையமாக இருப்பது (3) கடவுளின் அன்பையும்
அவரது கையளிப்பையும் உணர்த்துகிறது. (2) மற்றும் (4) நம்பிக்கை
கொள்பவர்களையும், நம்பிக்கை கொள்ளாதவர்களையும் பற்றிச்
சொல்கின்றது. (1) மற்றும் (5)ல் கடவுளோடு மக்கள்
இணைக்கப்படுவதையும், அவரிடம் ஈர்க்கப்படுவதையும் சொல்கின்றது.
"கடவுள் - மனிதர் - கடவுள் - மனிதர் - கடவுள்" என்று
கட்டமைக்கப்பட்டுள்ளது இயேசுவின் பேச்சு.
இந்த நற்செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்
அவற்றில் வரும் ஒருசில வார்த்தைகளுக்குப் பொருள் அறிவோம்:
1. "உயர்த்தப்படுதல்" என்பது யோவான் நற்செய்தியில் மட்டுமே
பயன்படுத்தப்படும் சொல் (3:14, 8:28, 12:32-34). யோவானைப்
பொறுத்தவரையில் இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும்
விண்ணேற்றம் என்ற மூன்று நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்தவை.
இந்த மூன்றையும் குறிக்கும் சொல்தான் "உயர்த்தப்படுதல்".
ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தன் பாடுகளையும், இறப்பையும்,
உயிர்ப்பையும் பற்றி மூன்று முறை முன்னுரைப்பது போல, யோவான்
நற்செய்தியில் மூன்றுமுறை தனது உயர்த்தப்படுதல் பற்றிப்
பேசுகின்றார்.
2. "நிலைவாழ்வு" - இந்த வார்த்தையைப் பற்றி பல்வகைக்
கருத்துகள் நிகழ்கின்றன. சிலர் இதை நிறைவாழ்வு எனவும்
மொழிபெயர்க்கின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் இறப்பிற்குப்
பின் உயிர்ப்பு அல்லது வாழ்வு இருப்பதாக மக்கள் நம்பவில்லை.
ஆக, இயேசு இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப்
பேசியிருக்க வாய்ப்பில்லை. யோவான் நற்செய்தியில் "வாழ்வு"
என்பது இயேசுவை நம்புவதன் பரிசு என்றே சொல்லப்படுகிறது. வாழ்வு
என்பதை மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் என்ற பொருளில்
நாம் எடுத்துக்கொள்வோம்.
3. "உலகம்" - இதற்கு இரண்டு பொருள் உண்டு: ஒன்று, மனிதர்களின்
உறைவிடம். இரண்டு, கடவுளின் செயல்பாடுகளுக்கு எதிரான
இயங்குதளம்.
4. "ஒளி" - கடவுளையும், கடவுளின் செயல்களையும், கடவுளின்
மனிதர்களையும் குறிக்கும் உருவகம். "ஒளியின் மக்கள்" என்ற
உருவகம் கும்ரான் குகைகளில் வசித்த எஸ்ஸீன் சமூகத்தின்
சொல்லாடல். ஊர் வேண்டாம், உலகம் வேண்டாம், பொன் வேண்டாம், பெண்
வேண்டாம், பொருள் வேண்டாம் என்று தங்களையே
பாலைவனத்திற்குள்ளும், மலைகளின் குகைகளுக்குள்ளும் அடைத்துக்
கொண்டவர்கள் தங்களை ஒளியின் மக்கள் என அழைத்துக்கொண்டனர்.
யோவான் நற்செய்தியாளர் ஏதோ ஒரு வகையில் இவர்களோடு அல்லது
இவர்களின் கருத்தியலோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது பலரின்
கருத்து. ஏனெனில் யோவான் நற்செய்தியில் பயன்படுத்தப்படும்
சொல்லாடல்கள் பல இவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை.
5. "தண்டனைத் தீர்ப்பு" - இறைவனையும், அவரது மகனையும்
ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனுபவிப்பது. இந்தத் தண்டனைத் தீர்ப்பு
நாம் வாழும்போதே இங்கே நாம் அனுபவிப்பதா, அல்லது இறந்தபின்
அனுபவிப்பதா என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் சிதறிக்கிடக்கும் முத்துக்களை இணைக்கும்
ஒரே நூல்: "கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16)
என்பதுதான்.
யோவான் 3:16ஐ இரண்டு வகைகளில் நாம் மொழிபெயர்க்கலாம்:
1. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
2. கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்ததால் தம் ஒரே மகன் மீது
நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்
பொருட்டு அந்த மகனையே அளித்தார்.
முதல் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் அன்பு முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டாம் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் கையளிப்பு
முக்கியத்துவம் பெறுகிறது.
அதிகமான பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்வகை மொழிபெயர்ப்பையே
நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
எப்படி? தன் மகனையே அளிக்கும் அளவுக்கு.
ஏன்? மகனை நம்பினவர்கள் நிலைவாழ்வ பெற.
கடவுள்-மனித இணைப்பு இரண்டு நிலைகளில் நடந்தேறுகின்றன: (அ)
கடவுள் மகனை அனுப்புகின்றார். (ஆ) மகன் தன்னை நம்புவோருக்கு
நிலைவாழ்வைத் தருகின்றார்.
இந்த இணைந்திருத்தலை தொடர்ந்து "ஒளி-இருள்" என்ற இருதுருவ
உருவகம் வழியாக விரிக்கின்றார் யோவான். "நம்புவோர்"
உண்மைக்கேற்ப வாழ்வோர் என அழைக்கப்பெறுகின்றனர். இறுதியாக,
இவர்களின் செயல்கள் அனைத்தும் "கடவுளோடு இணைந்தே
செய்யப்படுபவையாக" இருக்கின்றன.
ஆக, இங்கும் கடவுளோடு இணைந்திருத்தல் ஒரு பக்கம் கொடையாகவும்,
மற்றொரு பக்கம் கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது.
இத்தகைய புரிதல் எதைக் காட்டுகிறது?
கடவுளோடு இணைந்திருத்தல் நமக்கு "ஆட்டோமேடிக்" மகிழ்ச்சியைக்
கொண்டுவருவதில்லை. மாறாக, அந்த மகிழ்ச்சிக்கான பாத்திரமாக நாமே
இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றல் இறங்கிய நமது
கைபேசியை ஆற்றல் ஏற்றுவதற்காக சுவரில் உள்ள மின்வழங்கியில்
பொருத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். பொருத்தியவுடன்
ஆட்டோமேடிக்காக ஆற்றல் பரிமாறப்படுமா? இல்லை. ஆற்றல்
பரிமாறப்படுவதற்கான மின்கற்றை, கைபேசியின் பேட்டரியின்
உள்வாங்கு நிலை என அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி
இல்லை என்றால், விடிய விடிய அது மின்வழங்கியோடு
இணைந்திருந்தாலும் அது ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில்லை.
ஆதாம், ஏவாள், இஸ்ரயேல் மக்கள் என அனைவரும் செய்த தவறு
இதுதான்: கடவுளோடு இணைந்திருத்தல் என்ற ஆட்டோமேடிக் செயலால்
மகிழ்ச்சி வந்துவிடும் என நினைத்தது.
ஒளி உலகிற்கு வந்திருந்தாலும் மனிதர்களுக்கு ஒரு சாய்ஸ்
இருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒளியிடம் வரலாம்.
விரும்பாவிட்டால் ஒளியைவிட்டுத் தூரமாகலாம். மனிதர் ஒளியைவிட
இருளையே விரும்புவதாகவும், ஏனெனில் அவர்களின் செயல்கள்
தீயனவாய் இருக்கின்றன என்றும் பதிவு செய்கின்றார் யோவான். ஒளி
அனைத்தையும் ஒளிர்விக்கக் கூடியது. ஒளியிடம் எந்த மறைவும்
இல்லை. அது இருப்பதை அப்படியே காட்டிவிடுகின்றது. ஒருவர் தானே
விரும்பி அந்த ஒளியிடம் வர வேண்டும். வரும்போது தன்
தீச்செயல்களை விட்டுவிட வேண்டும்.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் இருளை விரும்பியதால்
நாடுகடத்தப்படுகின்றனர். சைரசு மன்னனால் ஒளியை நோக்கி
திரும்பவும் அனுப்பப்படுகின்றனர்.
நற்செய்தி வாசகத்தில் பாவம் என்ற இருளால் மனுக்குலம்
சூழப்பட்டிருக்கின்றது. கடவுளின் ஒரே திருமகனின் வருகை இருளை
அகற்றி ஒளியைத் தருகின்றது.
கடவுளை விட்டு தூரமாக இருந்தவர்கள் மீண்டும் கடவுளோடு
இணைந்திருக்கின்றனர்.
இணைந்திருத்தலின் மகிழ்ச்சி வீடுதிரும்புவதிலும், நிலைவாழ்வு
பெறுவதிலும் புத்துயிர் பெறுகிறது.
இறுதியாக,
இன்று நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். கடவுளுக்கும்
எனக்கும் உள்ள தொப்புள் கொடியை நான் எப்போதெல்லாம் அறுத்துக்
கொள்கிறேன்? நானாக அறுத்துக்கொண்டு அவரை வி;ட்டு
அகலும்போதெல்லாம் என்னிடம் வாழ்வும், இருப்பும், இயக்கமும்
குறைவுபடுமே. அதை நான் எப்படி சரி செய்கின்றேன்?
அவரைவிட்டு நான் என்னை வெட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வேறு
எவற்றோடு என்னை இணைத்துக்கொள்கிறேன்?
நான் அவரோடு இணைந்திருக்கும்போது மகிழ்ச்சியும், மற்றவற்றோடு
இணைந்திருக்கும்போது வெறும் இன்பமும் மட்டுமே கிடைக்கிறது
என்றால், நான் பின்னதிலிருந்து முன்னது நோக்கிச் செல்ல
துணிச்சல் பெறாதது ஏன்?
நான் அன்றாடம் அணைத்துவிடத் துடிக்கும் வெளிச்சம் எது?
கடவுளோடு இணைந்திருத்தல் என்னும் அவரின் கொடையும், நம்
கடமையும் நம்மை மகிழ்ச்சியாகட்டும் - இன்றும், என்றும்!
முதல் வாசகம்: 2 குறிப்பேடு 36,14-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 137
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2,4-10
நற்செய்தி: யோவான் 3,14-21
நம்பிக்கையும் நிலைவாழ்வும்
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய எழுத்தாளர் எர்னெஸ்ட்
ஹெமிங்வே (1899-1961). இவர் எழுதிய கிழவனும் கடலும் (The
Old Man and the Sea) என்ற நாவலுக்காக 1954 ஆம் ஆண்டு நோபல்
பரிசு கிடைத்தது. இவர் பெரிய பணக்காரர், விளையாட்டிலும்
வேட்டையாடுவதிலும் வீரதீரச் செயல்களைச் செய்வதிலும்
மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். மட்டுமல்லாமல், இவர் தான்
படைத்த கதாப்பாத்திரங்களைக்கூட வீரதீரச் செயல்களை செயபவர்களாகப்
படைத்தவர். இவர் விமானத்தில் பயணம் செய்யும்பொழுது, விமானம்
மோதி மூன்றுமுறை உயிர்பிழைத்தவர்.
இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் கடவுள்
நம்பிக்கையில்லாதவர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
1961 ஆம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் வந்தது. வீரதீரச் செயல்களில்
ஈடுபடும் இவர், எப்படியும் புற்றுநோயிலிருந்து மிக எளிதாக
மீண்டுவிடுவார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்; ஆனால்,
இவர் யாருமே நினைத்துப் பார்த்திராதவகையில், துப்பாக்கியை
எடுத்துத் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து
கொண்டார்.
ஒருவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவர் கடவுள்மீது
நம்பிக்கையில்லாமல் இருக்கும்பொழுது, அவரது முடிவு மிகக்
கொடியதாகவே இருக்கும் என்பதற்கு எழுத்தாளர் எர்னெஸ்ட்
ஹெமிங்வேவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர்
நிலைவாழ்வு பெறுவார் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது.
அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஆண்டவரிடம் நம்பிக்கைகொள்ளாத இஸ்ரயேல் மக்கள்
"
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்"
(மத்
24: 13). இது ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய மிக முக்கியமான
வார்த்தைகள். இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களோடு அதிலும்
குறிப்பாக இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துப் பார்க்கின்றபொழுது,
அவர்கள் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை மனவுறுதியோடு
இருக்கவும் இல்லை, மீட்புப் பெறவும் இல்லை என்பது
புரிந்துவிடும்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக்கட்டளைகளைக்
கொடுத்தார் (விப 20: 1-7). அந்தப் பத்துக் கட்டளைகளைக்
கொடுப்பதற்கு முன்பாக அவர் அவர்களிடம், "
நீங்கள் என்
வார்த்தைக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்.....
நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்"
(விப 19: 5) என்பார்; ஆனால், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின்
வார்த்தைக்குச் செவிசாய்க்கவும் இல்லை, அவரது உடன்படிக்கையைக்
கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக வேற்று தெய்வங்களை வழிபட்டு,
எருசலேமிலிருந்த திருக்கோயிலை மேலும் தீட்டுப்படுத்தினார்கள்.
இதனால் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் கனன்று எரிந்தது. அதன்பொருட்டே
கி.மு. 586 ஆம் ஆண்டு ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள் அவர்கள்
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
ஒருவேளை இஸ்ரயேல் மக்கள் மட்டும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு,
அவர் தங்களோடு செய்திருந்த உடன்படிக்கையைக் கடைப்பிடித்திருந்தால்
பாபிலோனுக்கு நாடுகடத்தப்படல் என்ற ஒன்று நடந்திருக்கவே
நடந்திருக்காது. அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததாலேயே
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
இறந்தவர்களாயிருந்தவர்களை அன்பினால் உயிர்பெறச் செய்த கடவுள்:
"
விடியாமல்தான் ஓர் இரவேது; வடியாமல்தான் வெள்ளம்
கிடையாது"
. இவை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகள்.
இஸ்ரயேல் மக்கள் தனது வார்த்தைக்குச் செவிசாய்க்காமலும்,
தன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்காமலும்
இருந்ததால், அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டாலும்,
ஆண்டவர் அவர்களைக் கைநெகிழ்ந்து விடவில்லை. மாறாக, ஆண்டவர்
அவர்களைப் பாரசீக மன்னர் சைரசு வழியாக மீட்டு, அவர்களது
சொந்த நாட்டில் குடியமர்த்துகின்றார். இது குறித்து இன்றைய
முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் நாம்
வாசிக்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில்,
"
குற்றங்களின் காரணமாக இறந்தவர்களாகயிருந்த நாம், அன்பின்
மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார் கடவுள்"
என்கிறார்
புனித பவுல்.
திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல், கடவுள் நம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால் யாரும் அவர்முன் நிலைத்து நிற்க
முடியாது. அவர் மன்னிப்பு அளிப்பவர் (திபா 130: 3-4) என்பதால்தான்
இறந்தவர்களாக இருந்த நம்மை உயிர்த்தெழச் செய்தார். கடவுள்
நம் குற்றங்களை மன்னிப்பவர் மட்டுமல்ல அல்லது அவர் நம்மீது
இரக்கம் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. மாறாக அவர் நம்மீது பேரன்பு
கொண்டிருப்பவர்.. அவர் நம்மீது பேரன்பு கொண்டிருப்பவர் என்பதன்
அடையாளம்தான், அவர் தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அளித்தது.
இது குறித்து இன்றைய நற்செய்தியில், "
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை
கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு, அந்த
மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்"
என்று வாசிக்கின்றோம்.
அவ்வாறெனில் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோருக்கு
நிலைவாழ்வும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவருக்கோ தண்டனைத்
தீர்ப்பும் உண்டு என்று உறுதியாகச் சொல்லலாம். நாம் இயேசுவின்மீது
நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வு பெறவேண்டும் எனில், அதற்கு ஒரு
முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்னவென்று
சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செயல்கள் புரிவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கின்றோம்
தன்னால் இயன்ற மட்டும் ஏதாவதொரு நல்ல செயலை ஒவ்வொரு நாளும்
செய்து வந்த ஒரு பெரியவரிடம் இளைஞன் ஒருவன், "
உங்களால் மட்டும்
எப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நல்ல செயலைச் செய்ய
முடிகின்றது?"
என்று கேட்டதற்குப் பெரியவர், "
நான் சிறுவனாக
இருக்கும்போது என் தாய் என்னிடம், "
என்றைக்கு நீ எந்தவொரு
நன்மையையும் செய்யாமல் இருக்கின்றாயோ, அன்றைக்கு உன் இறந்த
நாள்"
என்றார். அதனால்தான் நான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு
நன்மையைச் செய்துகொண்டிருகின்றேன்"
என்றார். ஆம், நன்மைகள்
செய்யாத நாள், இறந்த நாளுக்குச் சமமே. குற்றங்களின் காரணமாக
இறந்தவர்களாகிருந்த நம்மை, கடவுள் தம் பேரன்பினால் உயிர்பெறச்
செய்தார் எனில், நாம் ஒவ்வொருவரும் அவர்மீது நம்பிக்கைகொண்டு
நற்செயல்கள் புரிந்து வாழவேண்டும். இதற்காகவே நாம்
கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்று இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் மிகத் தெளிவாக எடுத்துக்
கூறுகின்றார். இன்றைக்குப் பலர் தாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே
படைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராமல், தீச்செயல்
புரிந்துகொண்டிருக்கின்றார்கள். இது வேதனையிலும் வேதனையான
செயல். இறைவன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் எனில்,
அந்த நம்பிக்கை நற்செயல் புரிவதில் வெளிப்பட வேண்டும். அதுதான்
உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை; அதுவே நமக்கு நிலைவாழ்வினை அளிக்கும்.
நாம் நற்செயல் புரிகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"
நமது நம்பிக்கை அன்புநிறைந்த வார்த்தைகளாலும் செயல்களாலும்
வெளிப்பட வேண்டும்"
என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே,
நாம் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இறைவன் அளிக்கும்
நிலைவாழ்வையும் அவரது அருளையும் நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப
வாழ்விலோ, சில நேரங்களில் துன்பங்கள், தோல்விகள், ஏமாற்றங்களை
அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் தான் மனித
பலவீனத்தில் பல கேள்விகள் வருவதுண்டு! கடவுள் உண்டா ? கடவுள்
காக்கின்றவரா? கடவுள் அன்பு செய்பவரா?
சில ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டு ஆகாய விமானம் நாடு
கடத்தப்பட்டு 159 பயணிகளை ஆப்கானிஸ்தானத்தில் இறக்கிய
கொடுமை நாம் எல்லோரும் கேள்விப்பட்ட செய்தி. புதுமண தம்பதிகளாகத்
தேனிலவு காணச் சென்ற தன் கணவன் தீவிரவாதிகளால் விமானத்தில்
சுட்டுக் கொலையுண்ட காட்சி கண்டு துடித்தாளே ராசனா கபியாள்.
அந்த நேரத்தில் அன்பு செய்யும், காக்கும் கடவுள் ஒருவர் உண்டு
என்று அந்தப் பெண்ணாலோ, அல்லது நாடு கடத்தப்பட்டு 8 நாட்களாக
அந்தச் சிறிய விமானத்திலே அடைபட்டுக் கிடந்த பயணிகளாலோ
நினைத்திருக்க முடியுமா? ஆம், இதே நிலை நமக்கும் நடந்தால்
பதில் கூற முடியாத நிலைதான் ஏற்படும். ஏன் கிறிஸ்தவ
பாதிரியாரான தந்தையையும், இரு மகன்களையும் தீயிட்டுக்
கொளுத்தினார்களே ஒரிசாவில் கயவர்கள். மனைவியின் மனநிலை எப்படி
இருந்திருக்கும்?
இன்றைய முதல் வாசகத்தில் பாருங்கள். கொடுத்த
வாக்குறுதியில் தவறிய இஸ்ரயேல் மக்களை இறைவன் தண்டித்தார்.
நாடு கடத்தினார். ஆனால் நாடு கடத்தப்பட்ட நிலையோடு முடியவில்லை
கடவுளின் செயல்! மனம் திரும்பியபோது கடவுள் சைரஸ் என்ற மன்னன்
மூலம் மீட்புக்கு வழிகாட்டினார். ஆலயத்தைக் கட்ட வைத்தார்.
இழந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அன்பும், அரவணைப்பும்
கொடுக்கும் கடவுளாக அங்கே காட்சி தருகின்றார்.
அன்பார்ந்தவர்களே! துன்பம் உடலால் அனுபவிப்பதாக இருக்கலாம்.
அல்லது, ஆன்மிகம் சம்பந்தமாக இருக்கலாம். ஆனால் அது மனித
சக்திக்கு அப்பாற்பட்ட இரகசியம். இரகசியத்திற்குத் தீர்வு
காண முடியாது. இதைத்தான் நம் ஆண்டவர் நமக்கு வாழ்ந்து
காட்டிக் கற்பித்தார்.
பிரான்ஸ் நாட்டிலே ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். கல்லில்
கலை வண்ணம் காண்பதில் கைதேர்ந்தவன். உலகிலே தலைசிறந்த
சிலையொன்றைச் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை. எனவே களி மண்ணைக்
கொண்டு சிலையைச் செய்யத் தொடங்கினான். மெய்வருத்தம்
பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாயிருந்து
நாளும் பொழுதும் தன் கனவை நனவாக்கினான். ஆனால் சிலையை
முடித்த இரவு, மேகம் இருண்டு வர மழை மேகங்கள் மழைத் துளிகளைத்
தெளிக்க, அது சிற்பியின் சிலையின் மீது விழுகிறது.
எந்த இடமும் கிடைக்காத அந்தப் பிச்சைக்காரன் எப்படியாவது
தன் உயிரைவிட அதிகமாக நேசித்த சிலையைக் காப்பாற்ற வேண்டும்
என்று தன் குளிர் போக்க வைத்திருந்த போர்வையைச் சிலையில்
போர்த்தி, அந்தச் சிலையை அரவணைக்க விரும்பினான். மழையால்,
குளிரால் சிலையைக் கட்டி பிடித்த நிலையில் அவனும் உயிரற்றச்
சிலையாக மாறிவிட்டான். பார்த்த மக்கள் பரவசத்தோடு தன் உயிர்
கொடுத்து மண் உயிரைக் காத்தானே என்று பேசிச் சென்றார்கள்.
இதேபோல்தான் மீட்பின் வரலாற்றிலே நடந்தது அற்புத நிகழ்ச்சி
ஒன்று. தன்னிகரில்லா சிற்பி, அவர்தான் நம் ஆண்டவர் இயேசு .
மனிதன் மீது பாவம் என்ற மழைத் துளி பட்டபோது, அவனைக்
காப்பாற்றத் தன் அன்பு என்னும் போர்வையில் அரவணைத்துத் தன்னுயிர்
தந்து மண்ணுயிர் காத்தார் சிலுவை மரத்தில். இதைத்தான் தம்
ஒரே பேரான மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியா
வாழ்வைப் பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16) என்கிறோம்.
ஆம் கடவுள் இந்த உலகத்தை அழிக்க அல்ல, வாழ வைக்கவே, காக்கவே
திரும்பத் திரும்பத் தன் தூதுவர்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்
(2 குறிப்பேடு 36:15). நான் நோயுற்றவருக்கே தேவை (லூக்.
5:31-34) என்றார்.
அன்புக்குரியவர்களே புனித பவுல் அடிகளார் எபேசியருக்கு எழுதிய
மடலில் (எபே. 2:10) கூறுவதுபோல் நாம் கடவுளின்
கைவேலைப்பாடு. அவர் அனைத்து தீய சக்திகளினின்றும் நம்மைக்
காக்க ஒரு போதும் தவறுவதில்லை . மனிதன் வேண்டுமானால் இறைவனின்
கையைப் பற்றிக்கொள்ள மறுக்கலாம். ஆனால் இறைவன் ஒருபோதும்
தம் கையை நீட்ட மறுப்பதில்லை , மறப்பதும் இல்லை . புனித பவுல்
அடிகளார் கூறுவதுபோல , ஆதி மனிதனால் பாவம் நுழைந்தது,
சாவும் பிறந்தது இந்த உலகில். இரண்டாம் ஆதாமால் மீட்பு
கிடைத்தது. எனவே ஒவ்வொரு துன்பமும் ஒரு சிறு சாவுதான்.
எப்படிக் கிறிஸ்துவின் துன்பங்கள், பாடுகள், மரணம் மூலம்
உலகிற்கு மீட்பு கிடைத்ததோ, அதேபோல் இந்த உலகில் மற்றவரின்
துன்பமும் மீட்பாக மாறும்.
கடவுள் நம் தந்தை . நம்மைக் காக்கின்றவர். நமது குறுக்குக்
கோடுகளையும் நேராக்குபவர்.
சில மனிதர்களின் இதயங்கள்
ஈசல்களின் இறகுகள்!
கொஞ்ச நேரம்
படபடத்து விழுந்துவிடுகின்றன!
காரணம்? தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு
உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள். முரண்பாடுகள்,
நோய்கள், நொடிகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள்!
இதோ, வாடிவதங்கிக் கிடப்பவர்களுக்கு இன்று இயேசு
வழிகாட்டுகின்றார். அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து : என்மீது
நம்பிக்கைக் கொள். நீ அழியாத நிலைவாழ்வு பெறுவாய் என்கின்றார்
(நற்செய்தி).
நம்பிக்கை என்றால் என்ன? காயப்படுத்தும் இறைவன் குணமாக்குவார்
என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை. கல்தேயரின்
மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு
வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்ததாக 2 குறி
36:14-23 கூறுகின்றது. காயப்படுத்தினாலும் கட்டுப் போடுபவர்
அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே என்கின்றது யோபு
நூல் (யோபு 5:18). புனித பவுலடிகளாரோடு இணைந்து கடவுள்
மிகுந்த இரக்கம் உடையவர், அவர் நம்மீது மிகுந்த அன்பு
கொண்டுள்ளார் (எபே 2:4) என்று அறிக்கையிடுவதற்குப் பெயர்தான்
நம்பிக்கை.
நம்பிக்கை நம்மை நலமாக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.
சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் அருங்கொடை மாநாடு மூன்று
நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளில் குணமளிக்கும்
வழிபாட்டில் கலந்துகொள்ள அந்நகரைச் சேர்ந்த,
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெகு ஆவலாய்
இருந்தாள்.
இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பினாள். அவளை
அவளது உறவினர் செபக்கூட்டம் நடக்கும் இடத்திற்குக் கொண்டு
சென்றனர். போகும் வழியில் ஒரு கடையில் தன் கால்களுக்கு
ஏற்ற ஒரு ஜோடி காலணிகளை அவள் வாங்கினாள். குணம் பெற்று
திரும்பி நடந்து வரும்போது அவை வேண்டுமே என அவள்
எண்ணினாள். அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை. குணமளிக்கும்
வழிபாட்டில் அவள் பூரண சுகமடைந்து நடக்க ஆரம்பித்தாள்.
திரும்பிச் சென்றபோது காலணிகளை அணிந்துகொண்டு வீட்டுக்குச்
சென்றாள்.
உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத்
தவிர இயேசுவால் அவரது சொந்த ஊரில் வேறு வல்ல செயல் எதையும்
செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர்
வியப்புற்றார் என்று நற்செய்தியில் படிக்கின்றோம் (மாற்
6:5-6அ).
நாம் நமது மன்றாட்டின் வழியாக நலம் பெற நமக்கு இரண்டு
கைகள் இருந்தால் பற்றாது ; மூன்றாவது கை ஒன்று வேண்டும் -
அதுதான் நம்பிக்கை. மேலும் அறிவோம் :
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (குறள் : 734).
பொருள் : கொடிய பசி, நீங்காத நோய், அழிவு செய்யும் பகை
ஆகிய தீமைகள் வராமல் அமைதியாக இயங்குவதே நல்ல நாடாகும்!
சாமிநாதர் சபைக்குருவும், இயேசு சபைக்குருவும்,
கப்புச்சின் சபைக் குருவும் உணவறைக்குச் சென்றனர். அங்கு
ஒரு பெரிய பொரித்த மீன் மட்டும் இருந்தது. ஒரு பாத்திரத்தில்
குழம்பும் இருந்தது. பொருத்தமான விவிலிய வசனத்தை யார்
சொல்லுகிறாரோ, அவர் மட்டும் அந்த மீனைச் சாப்பிடலாம் என்று
மூவரும் ஒத்துக்கொண்டனர். சாமிநாதர் சபைக்குரு கத்தியை எடுத்து
"முதலும் முடிவும் நானே" என்று சொல்லி, மீனின் தலையையும்
வாலையும் வெட்டி எடுத்துக் கொண்டார். இயேசு சபைக்குரு,
"நானோ உயர்த்தப்பட்டபின் அனைத்தையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்"
என்று சொல்லி மீதியிருந்த மீன் முழுவதையும் எடுத்துக்
கொண்டார், கப்பூச்சின் சபைக்குரு வேறு வழியின்றி, தனது
நீண்ட தாடியைக் குழம்பில் தோய்த்து, "ஆண்டவரே! ஈசோப்
புல்லினால் என்மேல் தெளித்தருளும்" என்றார்.
இயேசு சபைக்குரு கூறிய விவிலிய வாக்கு இன்றைய நற்செய்தியில்
முக்கிய இடம் பெறுகிறது. 'மானிட மகன் உயர்த்தப்பட
வேண்டும்' பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் கடவுளுக்கும்
மோசேக்கும் எதிராகப் பேசியவர்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால்
கடிபட்டு இறக்கும் நிலையில் இருந்தனர். கடவுள் கேட்டுக்
கொண்டபடி, மோசே வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு
கோலில் உயர்த்திப் பிடித்தார், அப்பாம்பைப் பார்த்தவர்கள்
உயிர் பிழைத்தனர் {எண் 21:4-9). கிறிஸ்து இந்நிகழ்ச்சியை
நினைவிற் கொண்டு நிக்கதேமுவிடம் "மானிட மகனும் உயர்த்தப்பட
வேண்டும்" என்கிறார்.
ஒத்தமைவு நற்செய்திகளில் கிறிஸ்து தம் பாடுகளை மூன்று முறை
முன்னறிவிக்கின்றார் (எ.கா. மத் 16:21; 17:22; 20:18). ஆனால்
யோவான் நற்செய்தியில் இயேசு மும்முறை மானிட மகன் உயர்த்தப்பட
வேண்டும் என்று குறிப்பிடுகிறார்,
"மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" (யோவா 3:14); "நீங்கள்
மானிட மகளை உயர்த்திய பின்பு, இருக்கிறவர் நானே , , என்பதை
அறிந்து கொள்வீர்கள்" (யோவா 8:28); "நான் மண்ணிலிருந்து
உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்
கொள்வேன்" (யோவா 12:32), யோவானின் இறையியல் கண்ணோட்டத்தில்
கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, மாறாக உயர்த்தப்பட்டார்,
அதாவது மாட்சிமையடைந்தார். சிலுவைச்சாவு மகிமையின் வாயில்,
கிறிஸ்து பாடுபடவேண்டிய நேரம் அண்மையில் வந்தபோது, "மானிட
மகன் மாட்சிமை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது"
என்றார்
(யோவா 12:23), துன்புறும் இறை ஊழியனைப் பற்றிய கவிதையிலும்
இறைவாக்கினர் எசாயா, "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர்
மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும்
மாட்சியுறுவார்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது (எசா
52:13).
சிலுவையானது யூதருக்குத் தடைக்கல்; பிற இனத்தவருக்கு மடமை.
ஆனால், உண்மையில் சிலுவை கடவுளின் வல்லமை, கடவுளின் ஞானம்
(1 கொரி 1:23 24). கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை.
கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக
வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் சைரசு
வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும்
தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார்
(முதல் வாசகம்).
கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு
கொண்டுள்ளார் (இரண்டாம் வாசகம் எபே 2:4). இத்தகைய அன்பும்
இரக்கமும் கொண்ட கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறத்
தம் ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு
கூர்ந்தார் (யோவா 3:16), ஆனால் அந்த அன்பு மகன் துன்புறும்
ஊழியனாகச் சிலுவையின் வழியாகவே உலகை மீட்க வேண்டுமென்பதே,
அவர் வகுத்த வழி, கிறிஸ்து கடவுளின் திட்டத்தை ஏற்று. சாவை
ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்ப்பின் மூலம்
உயர்த்தி மாட்சி பெறச் செய்தார் (பிலி 2:6-11), நாம் மீட்படைய
கடவுளின் திட்டத்தை ஏற்கவேண்டும், சிலுலை வாயிலாகவே நமக்கு
மீட்பு உண்டு. சிலுவையிலிருந்து விடுதலை அளிக்காமல்,
சிலுவையின் வாயிலாகவே விடுதலையளித்தார் கிறிஸ்து.
புனித வெரோனா பீட்டர் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில்
இயேசு ஒரு பாரமான சிலுவையைச் சுமந்துகொண்டு ஒரு பேராலயத்தின்
வாயிலிலிருந்து பீடத்தை நோக்கி நடந்தார், பீடத்தை அடைந்தவுடன்
அவருடைய சிலுவையே சிம்மாசனமாக மாற, அதில் அவர் அமர்ந்தார்.
அவரைப் பின்தொடர்ந்து அன்னை மரியாவும் இலட்சக்கணக்கான மக்களும்
தங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு பீடத்தை அடைந்தவுடன்,
அவர்களுடைய சிலுவைகளும் சிம்மாசனங்களாக மாற, அவர்களும் அவற்றில்
அமர்ந்தனர். சிலுவையே மகிமையின் வழி என்பதை இக்காட்சி மூலம்
அறிந்தார் வெரோனா பீட்டர். இவ்வுலகில் இருக்கும்வரை நம்
வாழ்வில் சிலுவை, துன்பங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் வந்தே
தீரும். அச்சிலுவையை நாம் வாழ்வின் வைகறையாகப் பயன்படுத்த
வேண்டும். பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில், இஸ்ரயேல்
மக்களால் ஆண்டவருடைய பாடலை அன்னிய நாட்டில் பாட முடியவில்லை;
அவர்களுடைய தாயகமாகிய எருசலேமை மறக்க இயலவில்லை (பதிலுரைப்பாடல்,
திபா 137:4-5).
விண்ணக எருசலேமை நோக்கிப் பயணிக்கும் நாமும் ஒருவகையில் இவ்வுலகிற்கு
அன்னியர்களாக இருக்கின்றோம். "இவ்வுலகில் நீங்கள் அன்னியராய்
வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் " (1 பேது.
1:17), விசுவாசத்திற்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைத்தவர்கள்,
"இவ்வுலகில் தாங்கள் அன்னியர்கள் என்பதையும் தற்காலிகக்
குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் சிறப்பான
ஒரு நாட்டை அதாவது விண்ணக நாட்டையே நாடுகிறார்கள்"
(எபி
11:13,16).
விண்ணகமே நமது தாய்நாடு (பிலி 3:28), எனவே பயணம் செய்யும்
திருச்சபையில் வழிப்போக்கர்களாய் உள்ள தாம், ஒருபோதும்
சிலுவைக்குப் பகைவர்களாக வாழாமல் (பிலி 3:18), சிலுவையின்
மறைபொருளை மேன்மேலும் ஆழமாக உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்,
பாலைவனத்தில் பாம்பால் கடிபட்டவர்கள் உயர்த்தப்பட்ட வெண்கலப்
பாம்பைப் பார்த்துக் குணமடைந்தனர். அந்த வெண்கலப் பாம்பு
சிலுவையின் முன்னடையாளம். சிலுவையில் உயர்த்தப்பட்டவரை, நம்
பாவங்களுக்காக ஊடுருவக் குத்தப்பட்டவரை உற்று நோக்கி (யோவா
19:37), பாவக் காயங்களிலிருந்து விடுதலை பெற்று, திறை வாழ்வடைவோம்
சிலுவையே மகிமையின் வாயில்.
சில ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய புனிதத் தலங்களாக மட்டுமல்ல
கருத்தாழமிக்கக் கலைக் கூடங்களாகவும் காட்சி தருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னே இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்
ஃபோர்டு பல்கலைக் கழகச் சிற்றாலயம் ஒன்றில் அமைந்திருந்த
கண்ணாடிச் சித்திரம் அதற்குச் சான்று. பீடத்துப் பின் சுவரில்,
நுழைந்ததும் கண்ணில் பட்டு ஈர்க்கும் வகையில் இருந்தது அந்த
ஒவியம். கண்ணாடியின் வெளிப்புறம் பழைய ஏற்பாட்டு நிகழ்வும்
உள்புறம் அதற்கு இணையான புதிய ஏற்பாட்டு நிகழ்வும் ஓவியங்களாகத்
தீட்டப்பட்டிருந்தன. வெளியிலிருந்து ஒளி கண்ணாடியை உடுருவுகிற
போது இரண்டு காட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றுக் கொன்று
நிறைவும் பொருள் விளக்கமும் தருவதாகத் தெரியும்.
ஆலயத்தில் உள்ளே இருந்து அந்தக் கண்ணாடியை உற்றுப்
பார்த்தால், மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப்
பலி கொடுக்க ஓங்கிய கையோடு இருப்பது மென்மையான ஒளியின்
பின்னணியில் தெரியும். அதே நேரத்தில் கல்வாரிச் சிலுவையும்
தெரியும். சிறிது அசைந்து வேறொரு கோணத்தில் கம்பத்தில் உயர்த்திய
வெண்கலப் பாம்பையும் பார்க்கலாம்.
இயேசுவின் தியாக மரணம் பழைய ஏற்பாட்டில் நிழலாடும் நிகழ்வாகவும்
புதிய ஏற்பாட்டில் நிறைவு காணும் நிகழ்வாகவும் இறைவனின் ஒட்டு
மொத்த மீட்புத் திட்டத்தை எப்படித் தெளிவு படுத்துகின்றன!
திருவிவிலியம் முழுவதுமே மனித மீட்புக்காகத் தன்னுயிர் ஈந்த
இயேசுவின் சிலுவையை நோக்கியது, மையமாகக் கொண்டது. கொள்ளி
வாய்ப் பாம்புகளால் கடியுண்ட இசரயேல் மக்கள் சாவினின்று
விடுதலை பெற கோவில் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கியது
போல, நிலைவாழ்வு காண சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி
மனத்தைத் திருப்பத் தவக்காலம் நம்மை அழைக்கிறது.
"பாம்புகளும் ஏணிகளும் என்ற விளையாட்டு தெரியுமா? வீடு
நோக்கிய பயணம். பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக பாம்புகளும்
ஏணிகளும், தாயத்தை உருட்டிப் போட அதில் வரும் எண்களுக்கேற்ப,
காயை நகர்த்துகிறோம், யார் முதலில் வீட்டை அடைவது என்பதுதான்
போட்டி. காய் ஏணியைத் தொட்டால் மேலே கிடுகிடுவென ஏறும்.
பாம்பின் வாயில் பட்டால் மடமடவெனக் கீழே இறங்கும், வீட்டை
நெருங்கிய நேரத்தில் கூட பாம்பால் கடியுண்டு கீழே படுபள்ளத்தில்
இறங்க நேரிடும்.
வாழ்க்கையும் அப்படித்தான். நமக்குப் பாம்பு எது, ஏணி எது?
பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் இறைவனுக்கும்
மோசேக்கும் எதிராகக் கைகளை உயர்த்தியவர்களை, குரல் எழுப்பியவர்களைக்
கொள்ள வாய்ப் பாம்புகள் கடிக்க, இறைவனின் ஆணைப்படி மோசே
வெண்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்து அதை உயர்த்திப்
பிடித்தார். அதை உற்று நோக்கியவர்கள் உயிர் பிழைத்தனர் (எண்.24:4-9)
உலக மருத்துவத் துறை தனது சுகம் அளிக்கும் தொழிலின் அடையாளச்
சின்னமாகக் கொண்டிருப்பது இந்தக் "கோலில் சுற்றிய பாம்பு"
.
விவிலியத்தில் பாம்பு 1. பாவத்தின் சின்னமாகச் சித்திரிக்கப்
படுகிறது. (ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்த காரணத்தால்)
2. பாவத்தின் தண்டனையாகக் குறிக்கப்படுகிறது.
(கொள்ளிவாய்ப் பாம்புகளைக் கொண்டு இசர யேலரைக் கடிக்க வைத்ததால்)
3.பாவத்தின் கழுவாயாக ஆக்கப்படுகிறது (வெண்கலப் பாம்பை
பார்த்தவர்களை சாவினின்று விடுவித்ததால்). இந்த நிகழ்ச்சியுடன்
தொடர்புபடுத்தி, மனித இனம் வாழ்வு பெற "பாலை நிலத்தில்
மோசே யால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட
வேண்டும்" என்கிறார் இயேசு.
சிலை வழிபாட்டை வீரியத்துடன் எதிர்த்த இறைவன் வெண்கலப்
பாம்பைச் செய்ய ஆணையிட்டது வியப்பைத் தருகிறது. இதனால்
வெண்கலப் பாம்பைச் சிலுவையின் முன் அடையாளமாக இறைவன் மனத்திலிறுத்தி
இந்த ஆணையைத் தந்திருக்க வேண்டும்,
நிழலின் அருமை வெயிலில் தெரியும். இறைவனின் அன்பு
சிலுவையில் தெரியும். சிலுவை ஒருபக்கம் பாவத்தின் கொடுமையை
வெட்ட வெளிச்சமாக்குகிறது. மறுபக்கம் எல்லையற்ற இறையன்பை
வெளிப்படுத்துகிறது.
மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச்
சென்ற நாம், மீண்டும் மனந்திரும்பி அந்த அன்பின் அரவணைப்புக்குள்
வருவதுதான். அதற்குப் பாலைவனப் பாம்பாக இயேசு சிலுவையில்
உயர்த்தப்படுகிறார். அவரைப் பார்த்து அவரோடு ஒன்றிக்கும்போது
நாம் மீட்படைகிறோம்.
யோவானின் இறையியல் பார்வையில் இயேசு சிலுவையில் அறையப் படவில்லை;
உயர்த்தப்பட்டார். அதாவது மாட்சிமை அடைந்தார். சிலுவைச்
சாவு இயேசுவுக்கு மகிமையின் வாயில், மரணமடையும் நேரத்தை
மாட்சிமை பெறும் நேரம் என்றே சொல்வார் (யோ. 12:23)
துன்புறும் இறைஊழியன் பற்றி கவிதையிலும் எசாயா அதே சிந்தனையைத்
தருவார் (எசா.52:13)
கிறிஸ்து மூன்றுமுறை தன் பாடுகளை முன்னறிவிப்பதாக மத்தேயு
எழுதுகிறார் (மத்.16:21, 17:33, 20:18). இயேசு மூன்று
முறையும் உயர்த்தப்படுவதாகவே குறிப்பிடுகிறார். (யோ. 3:14,
8:28, 12:32)
சிலுவையில் உயர்த்தப்பட்டவரை உற்றுநோக்குங்கள் பாவ நஞ்சு
நீங்கும், உயிர் பெற்று வாழ்வோம்.
பாவ இருளின் பிடியில் நாம் சிக்கி அழியா வண்ணம் "
நாம்
வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. தம் மகனை
நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின்
தன்மை விளங்குகிறது"
(1 யோ.4:9,10)
அன்பே கடவுள். நம்பிக்கையே வாழ்வு.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
தவக்காலம் 4ம் ஞாயிறு - 'அகமகிழ்தல்'
ஞாயிறு
தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' (Laetare) ஞாயிறெனக்
கொண்டாடுகிறோம். இன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியில்,
எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று
கூடுங்கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள் (எசாயா
66:10), என்று காணப்படும் சொற்களின் அடிப்படையில், இந்த
ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆனால்,
கடந்த ஐந்து மாதங்களாக (2023, அக்டோபர் 7 முதல்) எருசலேமிலும்,
அதைவிட குறிப்பாக, காசாப் பகுதியிலும் நடைபெற்றுவரும்
போரையும், அழிவுகளையும் காணும்போது, 'எருசலேமே அகமகிழ்' என்று
மனதாரக் கூறமுடியுமா என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது.
வரலாற்றில் பல முறை எருசலேமும், புனித பூமியும் போர்களையும்,
அழிவுகளையும் கண்டு வந்துள்ளன. அந்த அழிவுகளில் ஒன்றை, இன்றைய
முதல் வாசகம் (குறிப்பேடு 2ம் நூல் 36:14-16,19-23) நமக்கு
நினைவுறுத்துகிறது: கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின்
மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும்
தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.
மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு
கடத்தினான். (குறிப்பேடு 2ம் நூல் 36:19-20) ஆனால், முதல்
வாசகத்தின் இறுதி பகுதி நம்பிக்கை தரும் சொற்களுடன்
நிறைவுபெறுகிறது. "
பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம்
கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள்
எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள
எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப்
பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு
செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!"
(குறிப்பேடு 2ம் நூல் 36:23)
இஸ்ரேல் நாட்டன் இன்றையப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்
(Benjamin Netanyahu) அதிகார வெறியினால், இன்றைய புனித
பூமியில் உருவாகிவரும் அழிவுகளையே நாம் ஊடகங்கள் வழியே கண்டுவருகிறோம்.
இருப்பினும், இது முழு உண்மை அல்ல. புனித பூமியில், இஸ்ரேல்,
பாலஸ்தீனா ஆகிய இரு நாடுகளிலும், அமைதியை, ஒப்புரவை
விரும்பும் பல்லாயிரம் மக்கள், குறிப்பாக, அறிவு சார்ந்த
ஆன்றோர் உள்ளனர். அவர்கள் கூறும் எண்ணங்களோ, அவர்கள்
மேற்கொண்டுவரும் முயற்சிகளோ, ஊடகங்களில் பேசப்படுவதில்லை.
காரணம், இந்த ஒப்புரவு முயற்சிகளால் அரசியல்வாதிகளுக்கு எந்தப்
பயனும் இல்லை. அரசியல் தலைவர்கள், வெறுப்பை வளர்த்து, ஆயுதங்களைப்
பயன்படுத்தி, அதன் வழியே ஆயுத வர்த்தகத்தை வளர்ப்பதிலேயே
குறியாய் உள்ளனர்.
இருப்பினும், அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் இந்த
திருவழிபாட்டு நேரத்திலாவது, புனித பூமியில் ஒப்புரவைக் கொணர
விழைவோரைக் குறித்து இறைவன் சந்நிதியில் நினைவுகூர்ந்து
அவர்களுக்காக நன்றி செலுத்துவது, நம் கடமை. அதுவே, இந்த
ஞாயிறன்று நாம் கொண்டாடும் அகமகிழ்தல் என்ற எண்ணத்திற்கு
அர்த்தம் கொடுக்கும்.
புனித பூமியில், அமைதியை, ஒப்புரவைக் கொணர விழையும் ஒரு மருத்துவரைப்
பற்றிய செய்தி, கடந்த மாதம், பிப்ரவரி 26ம் தேதி, அமெரிக்க
ஐக்கிய நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரால் நடத்தப்படும்
'America' என்ற மாத இதழில் வெளியானது. முஸ்தபா பர்கூத்தி
(Dr. Mustafa Barghouti), என்ற 70 வயதான மருத்துவர், 'America'
மாத இதழுக்கு அளித்த பேட்டியில், தற்போது அங்கு உடனடியாக
நிலவவேண்டிய போர்நிறுத்தம், இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரண்டும்,
இரு வேறு நாடுகளாக, அல்லது, ஒரே குடியரசில் இரு வேறு
குழுக்களாக ஒப்புரவுடன் வாழக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றைக்
குறித்து பேசியுள்ளார். அவரது பேட்டியில், ஆயுதமற்ற, அகிம்சையைப்
பற்றி அவர் கூறியுள்ள சொற்கள் உள்ளத்தைத் தொடுகின்றன:
"நான் ஒரு மருத்துவராக, வெள்ளை மேலுடையை அணிந்து, காயமுற்றிருந்த
ஒருவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது, என்னை
இஸ்ரேல் இராணுவம் சுட்டது. அதனால், 35 வெடிகுண்டு துண்டுகள்,
இன்னும் என் உடலில் பதிந்துள்ளன. இருப்பினும், அகிம்சை ஒன்றே
இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளைக் காப்பாற்றமுடியும் என்ற என்
நிலைப்பாட்டிலிருந்து நான் மாறமாட்டேன்." என்று
கூறியுள்ளார். மருத்துவர் பர்கூத்தி அவர்கள், 2010ம் ஆண்டு
நொபெல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் பர்கூத்தி அவர்களைப் போலவே, அமைதியையும், ஒப்புரவையும்
விரும்பும் பல்லாயிரம் நல்ல உள்ளங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனா
நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களது நல்லெண்ணங்களை
ஊடகங்கள் வெளியிடுவதில்லை. ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவற்றை
வலியுறுத்தும் இந்த அறிஞர்களின் எண்ணங்களை அகமகிழ்தல் ஞாயிறன்று
நாம் கொண்டாடுவோம்.
தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால்,
நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக்
கொண்டாட, தாய் திருஅவை இன்று நம்மை அழைக்கிறார். 'அகமகிழ்தல்'
ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களை, 'மன்னிப்பின்
விழா'வாகக் கொண்டாட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு
விடுத்திருந்தார். இந்த இரு நாள்களிலும், பகலும், இரவும்,
ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்காக, உலகெங்கிலும் உள்ள ஆலயங்கள்
24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுமாறு திருத்தந்தை
கேட்டுக்கொண்டார். 2014ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும்
இந்த மன்னிப்பின் விழாவுக்கு, "புதுவாழ்வு பெற்றவர்களாய்
வாழும்படி" (உரோமையர் 6:4) என்ற சொற்கள், இவ்வாண்டின் மையக்கருத்தாகத்
தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டாடிய வெள்ளி, சனி ஆகிய
இரு நாள்களைத் தொடர்ந்துவரும் இந்த ஞாயிறன்று, தந்தையாம்
இறைவன் எவ்வாறு இவ்வுலகை கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கினார்
(காண்க. 2 கொரி. 5:19) என்பதை சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புரவை உருவாக்க, இயேசு, தன்னையே நம்மில் ஒருவராகக்
கரைத்துக்கொண்டார். அந்தக் கரைதலை நாம் 'மனுவுருவாதல்' என்று
குறிப்பிடுகிறோம். மனுவுருவாதலின் ஆழத்தை உணர்த்தும் அழகிய
சொற்களை இன்றைய நற்செய்தியில் (யோவான் 3:14-21)
கேட்கிறோம். "
தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள்
உலகின் மேல் அன்பு கூர்ந்தார்."
(யோவான் 3:16)
விவிலிய வாக்கியங்கள், குறிப்பாக, நான்கு நற்செய்திகளின்
வாக்கியங்கள் பல, மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள
ஒரு வாக்கியம் உள்ளது என்றால், அது நாம் இப்போது வாசித்த
இறைவாக்கியம் - யோவான் 3:16 - என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the
gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச்
சொல்லும் ஓர் இலக்கணம் இது.
அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக்
கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு
சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு
உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால்,
நம் இல்லங்களில், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும்,
திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக,
செய்திகளாக வெளிவருவதில்லை. 'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம்
ஒதுக்கி, நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் அன்பு
நிகழ்வுகளை அசைபோடுவோம். இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகள்
வழியே, சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று
அசைபோடுவோம்.
பல குடும்பங்களில், உடல்நலம், அல்லது, மனநலம் குன்றிய குழந்தைகள்,
வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு
நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று,
குடும்பத்தில் மற்றவர்கள் செய்துவரும் பணிவிடைகள் அற்புதமானவை.
இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள், எந்த ஊடகத்திலோ, நூல்களிலோ
வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல
ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக,
ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடமுடியாது. வெளி உலகிற்கு
தெரியாத வண்ணம், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும், அன்புப்
பணியில், தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் இதயங்களுக்காக,
இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.
'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப்
புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.
உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து
நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி
இவ்வாறு சொல்கிறது: ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள்
தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்...
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள்
தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.
(யோவான் 3:19-20)
இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத்
துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான
முறையில் கூறும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. பாலை நிலத்தைக்
கடந்துகொண்டிருந்தார், ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால்,
அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில்,
திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு
சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது
நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ
மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது,
பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே,
அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார்.
அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு
அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது.
அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின்
அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது.
இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு
பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர்
எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்துவிட்டு, மீதிப் பழங்களை
இருளில் சாப்பிட்டு முடித்தார்.
இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. மனசாட்சி என்ற
விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும்
நம் எண்ணங்களெல்லாம் சரியென்றே தோன்றும். நமது 'பசிகளும்'
அடங்கிவிட்டதாகத் தோன்றும். இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப
வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள்
செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.
(யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில், மனதிற்கு
நிறைவுதரும் ஓர் உண்மையை இறைமகன் கிறிஸ்து உணர்த்துகிறார்.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் 'ஒளி' மற்றும் 'இருள்' என்ற
எண்ணங்கள், பல உன்னத உள்ளங்களைத் தூண்டியதால், பல தலைமுறைகளுக்குத்
தேவையான உயர்ந்த கூற்றுகளை நாம் பெற்றுள்ளோம். பியோடோர்
தொஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoevsky) என்ற இரஷ்ய எழுத்தாளர்,
1866ம் ஆண்டு வெளியிட்ட 'குற்றமும் தண்டனையும்' (Crime and
Punishment) என்ற நெடுங்கதையில், "இரவு நேரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு
இருள் மண்டிக்கிடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு விண்மீன்கள் இன்னும்
கூடுதலாக ஒளிவீசுகின்றன" ("
The darker the night, the
brighter the stars."
) என்ற கூற்றை பதிவு செய்துள்ளார். இருள்
நம்மை அதிகம் சூழ்ந்திருக்கும்போது, சிறு, சிறு மகிழ்வுகளையும்,
நல்லெண்ணங்களையும் நாம் கூடுதலாக உணரவேண்டும் என்ற உண்மையை
இக்கூற்று தெளிவாக்குகிறது.
கறுப்பின மக்களின் சம உரிமைகளைப் பெறுவதற்காக போராடிய
மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் (Martin Luther King Jr.)
அவர்கள், 1963ம் ஆண்டு வெளியிட்ட 'அன்பு செய்வதற்கு சக்தி'
(Strength to Love) என்ற நூலில் பதிவு செய்துள்ள கூற்று,
மிக எளிதான, அதே வேளையில், மிக ஆழமான உண்மையைக் கூறுகிறது.
"இருளைக்கொண்டு இருளைத் துரத்த இயலாது, ஒளி மட்டுமே அதைச்
செய்யக்கூடும். வெறுப்பைக்கொண்டு வெறுப்பை விரட்டியடிக்க
முடியாது. அன்பு மட்டுமே அதைச் செய்யக்கூடும்." ("
Darkness
cannot drive out darkness; only light can do that. Hate
cannot drive out hate; only love can do that."
)
தீய சக்திகள் அணிதிரண்டு, இவ்வுலகை இருளில் மூழ்கச்செய்துகொண்டிருக்கும்
இன்றையச் சூழலில், ஒளியாக விளங்கும் கிறிஸ்துவை நெருங்கிச்
செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற, நாம் அழைக்கப்படுகிறோம். அந்த
அழைப்பை ஏற்கப்போகிறோமா? அல்லது, இருளில் நம்மேயே
புதைத்துக்கொண்டு, சுகம் காணப்போகிறோமா? எது நம்மை உண்மையில்
அகமகிழ்வோடு வாழவைக்கும் என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக
மேற்கொள்ள, தவக்காலம் தகுந்ததொரு காலம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
இன்று மங்களகரமான
மகிழ்ச்சியின் நாள்.
கடவுள் நம்மை அன்பு செய்கிறார். இதுதான் மகிழ்ச்சிக்கு
அடிப்படைக் காரணம். இத்தகைய கருத்துகளை வாசகங்கள் நமக்கு
எடுத்துரைக்கின்றன. கடவுள் நம்மை எந்தப் பாரபட்சமுமின்றி
முழுமையாக அன்பு செய்கிறார். இறைவாக்கினர் எரேமியா கூறுவது
போல் "நமக்கு முடிவில்லா அன்பைக் காட்டியுள்ளார் தமது
பேரன்பால் நம்மை இழுத்துக் கொள்கிறார்" (எரே 31:3).
தாயைப் போல், ஏன் அவரை விட ஒரு படி மேலாக இறைவன் நம்மை
அன்பு செய்கிறார் (எசா 49:15), இப்படிக் கடவுள் நம்மீது
கொண்டுள்ள அந்த அன்பை அறிகின்றோம். அன்புக்குரிய இறை மக்களாக
நாம் இருக்கின்றோம். "அவர் நம்மை அன்பு செய்வதால்
நாம் வெற்றி யாளர்களாக இருக்கிறோம்" (உரோ 8:37).
எல்லாவற்றுக்கும் மேலாக தந்தையாம் இறைவன் தம் ஒரே மகன்
வழியாக நம்மை அன்பு செய்தார் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை
கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல்
அன்பு கூர்ந்தார் (யோவா 3:16).
"நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு
அனுப்பினார் இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது"
(1யோவா 4:9) இதுதான் கடவுளது அன்பின் உச்சம்.
தந்தையின் அன்பு இப்படிப் பட்டதாக இருக்கின்றது என்றால்
மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இறைமகன் இயேசுவின் அன்பு
இணையற்றதாக இருக்கின்றது.
"நல்ல ஆயன் நானே; நல்ல ஆயர் தம் ஆடுகளுக்காகத் தம் உயிரைக்
' கொடுப்பார்" (யோவா 10:11) என்று சொல்லி மந்தையைக்
காத்திடத் தம்மையே கையளித்தார்.
"நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடம்
இல்லை" என்று கூறுகிறார் இயேசு (யோவா 15:13).
"இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் நமக்காக ஏழையானார்.
அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு
செய்தார்" (காண். 2 கொரி 8:9),
இப்படி தந்தையின் அன்பை முழுமையாகக் கிறிஸ்து வெளிப் படுத்தினார்.
இறைமக்கள் ஆகிய நாம் கடவுளின் அன்பை மையப்படுத்தி வாழ
அழைக்கப்படுகின்றோம். கடவுளின் மக்களாகவே வாழ அழைக்கப்படு
கின்றோம். எனவே இறைமக்களாகிய நாம் அனைவரும்
கிறிஸ்துவின் அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று
உணர்ந்து கடவுளை முழுமையாக அன்பு செய்ய வேண்டும்.
கடவுளின் சாயலில் உள்ள ஒவ்வொரு நபர்களிடமும் அன்பு
செய்து வாழ வேண்டும். அன்பில்லாத ஒருவர் கடவுளை அறிந்து
கொள்வதில்லை ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்.
கடவுள் அன்பிலிருந்து எதுவும் பிரிக்காதவண்ணம் செயல்பட
முயற்சி செய்வோம்.
அருட்பணி மேரி
ஜான் R . புனித அலோசியஸ் குரு மடம் கோட்டாறு