உயிர்த்த யேசு சீடர்களிடையே தோன்றி "உங்களுக்கு அமைதி உண்டாகுக" என்று வாழ்த்தினார்!
உள்ளத்திலே அமைதி, உறவுகளிலே அமைதி, குடும்பத்திலே அமைதி என நாம் தேடும் அமைதியை
அனுபவிக்க, இன்று இந்த திருப்பலிக்கு நம்மையும் வரவேற்று வாழ்த்துகிறார்.
அமைதிக்கு அடிப்படைத் தேவை கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை. உயிர்ப்பு அனுபவம் என்பது
ஏதோ இறந்த ஒருவர் உயிர்த்துவிட்டார் என்பதல்ல. மாறாக எங்கும் நிறைந்தவர்
உயிர்த்துவிட்டார். எங்கும் நிறைந்து, இறைமையோடு கலந்து, முற்றிலும் ஒன்றித்து
புதிதாகப் பிறந்த இறை மனித இனத்தை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும். உயிர்ப்பு
என்பது வரலாற்றில் ஒரு அற்புதமான நிகழ்வாகும்.
இயேசு நம்மை நம் குடும்பங்களைப் பார்த்து:
அமைதி உண்டாகுக!
மங்கலம் பெருகுக!
நலம் விளைக!
நன்மை பெருகுக! என்று வாழ்த்தும் திருநாள்.
உயிர்த்த இயேசு அருளிய அந்த அமைதியே, சீடர்களின் உள்மன இருளை அகற்றி உருமாற்றத்தின்
நிச்சயத்தைக் கொடுத்தது. இந்த நிறைவான மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதை இரண்டு.
ஒன்று மன்னிப்பு
மற்றொன்று நம்பிக்கை.
பார்த்தும், தொட்டும் புலன்களுக்கு அடிமையாகி, அடையாளத்தையே எதிர்நோக்கிப்
பழகிப்போன சீடர்களுக்கு, பார்க்காமலேயே பழகவும், தொடாமலேயே உணரவும் கற்றுக்
கொடுக்கிறார் இயேசு. அகக்கண்களின் ஊடே அண்ட சராசரங்களைப் பார்க்க பயிற்சி
அளிக்கிறார். கண்ணைத் தாண்டி, விண்ணைத் தொட விலாவைத் தொட்டுப் பயிற்சி அளிக்கிறார்.
நம்பிக்கையில் வளர நற்போதனைத் தருகிறார்.
ஐயம் தீர்க்கவும், ஆண்டவனில் வளரவும் அருள் தரும் திருப்பலியில், அமைதி தேடி
அலையும் நெஞ்சத்தை தஞ்சமாக்குவோம். அருள்வாய்... அருள்வாய்... யான் விரும்பித்
தேடுகின்ற அமைதி இறைவா... இறைவா... என செபிப்போம்.
1. உயிர்த்த இயேசுவுக்கு வல்லமையோடு சான்று பகர எமை அழைக்கும் வல்ல தேவனே!
எம்மை வழிநடத்தும் திருச்சபையை உம்கரம் தருகின்றோம். திருப்பீடப் பணியாளார்கள்
அனைவரும் மக்களின் மிகுதியான நல்லெண்ணத்தைப்
பெற்று, தேவையில் உழல்வோர்
அனைவருக்கும் தங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து, நம்பிக்கையோடு ஆன்மீகத்தில்
ஐயமின்றி மக்களை வளார்தெடுக்க வல்லமை பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகை வெல்லும் நம்பிக்கையால் எமை நிரப்பும் வல்ல தேவனே!
அன்பு நிறைந்த கட்டளைகளை இதயத்தில் சுமந்து பணி செய்யும்போது இதயம் லேசாகும்
பணியும் ஈடேற்றம் பெறும். இதை உணார்ந்து ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக் கனவுகள், உயிர்ப்புப் பெருவிழா மகிழ்ச்சியை அனுபவிக்கும் பாதையில் மக்களை வளார்தெடுக்க,
நாடுகளின் தலைவார்களுக்கு வல்லமை பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
3. தந்தை உம்மை அனுப்பியது போல எம் அருட்தந்தையர்களை எமக்காய் அனுப்பிய வல்ல தேவனே!
உம்மைக் காணாமல் விசுவாசத்தை சுவாசமாக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் எம்
அருட்தந்தையர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் உமது வாழ்வு
நூலில் இடம் பெற வல்லமை
பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. "இதோ! என் கைகள், இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம்
தவிர்த்து நம்பிக்கைக் கொள்" என எம்மை திடப்படுத்தும் வல்ல தேவனே!
கருத்து வேறுபாடுகளாலும் சந்தேகத்தாலும் மனமுடைந்து போய் தற்கொலையின்
விளிம்பிற்குத் தள்ளப்பட்டு வாழும் கணவன், மனைவி, பிள்ளைகள், நண்பார்கள் என
அனைவரையும் உம் பாதம் தருகின்றோம். வீண் சந்தேகங்களை நீக்கி குடும்பங்களில்
அமைதியையும் ஒற்றுமையையும் அன்பையும் நிலவச் செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
5. காணாமலேயே விசுவசிப்போர் பேறு பெற்றோர் என உணார்த்தும் வல்ல தேவனே!
வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளால், துன்பங்களால் அலைக்கழிக்கப்படும் நாங்கள்
உமது விசுவாசத்தில் வேரூன்ற, அச்சத்தை அகற்ற, நம்பிக்கையில் வளர வல்லமை பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
காயம்பட்ட மனிதர்களால் மட்டுமே காயம்பட்ட பிறமனிதர்களையும் குணப்படுத்த முடியும்.
காயம் பட்ட இயேசு, தம் காங்களால் நமது காயங்களை குணப்படுத்தினார். இயேசுவைப் போல
சான்று பகர்ந்தவர்கள் சிலர், நம்மோடு வாழ்ந்துள்ளார்கள். நமது பாசமிகு
மேரிபஸ்தியான், சரத் சீவன் போன்ற அடிகளாரும் இத்தகைய
வரிசையில் இடம் பெற்று, நம்மையும்
இயேசுவுக்காய் வாழத்தூண்டும் சீவன்களாவார்கள்.
நான்காம் ஈழப்போரின் இறுதி கட்டம்.
விதிமுறைகளைப் பொருட்படுத்தாது, இலங்கை இராணுவம் தன் நாட்டு தமிழ்
மக்களை கண்மூடித்தனமாகக் கொன்று
குவித்த நேரம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உட்பட, மக்களின்
குடியிருப்புகளை கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் அழித்து, மக்களை
கொன்றொழித்தது இலங்கை இராணும். கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு, இடம் விட்டு இடம்
பெயர்ந்து, காடு கழனி கடந்து, இலட்சக் கணக்கான மக்கள் நந்திக்கடல் என்னும்
இடத்தினருகே ஒரு சிறிய நிலப்பரப்பில் பாதுகாப்புத் தேடினார். எனினும் இராணுவம்
பதுங்குக் குழிகளிலும் குண்டு வீசி, மக்களைத் தாக்கி அழித்தது. செஞ்சிலுவை
சங்கமும், பிற மனித நேயக்குழுக்களும் மக்கள் பணி செய்ய அனுமதிக்கப்படாத நிலையில்,
அவர்கள் நடுவில் சில கிறிஸ்தவ அருள்பணியாளார்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் போரின் போக்கு மக்களை கொன்றொழிப்பதிலேயே குறியாயிருப்பதை உணர்ந்த,
யாழ்ப்பாணம் ஆயர் பணியாற்றிய
அருள்பணியாளர்களை பாதுகாப்புக் கருதி, ஆயர் இல்லம் திரும்பி விடப் பணித்தார்.
பணியாற்றிய பலரும் திரும்பிவிட்ட நிலையில் சரத்சீவன்
மரியாம் பிள்ளை என்னும் 42
வயது அருள்பணியாளார், மக்கள் துயர்துடைத்து அருள்பணி ஆற்றுவதை தொடர்ந்து
மேற்கொண்டார். தன் கண்முன்னே தன் மக்கள் கொத்து கொத்தாய் குண்டுகளுக்கு இரையாக
மடிவதையும், குற்றுயிராய் மருத்துவ வசதியின்றி தவிப்பதையும், உடல் உறுப்புகளை
இழந்து வலியால் துடிப்பதையும் கண்டு, இடைவிடாது அவர்களுக்குப் பணியாற்றினார்.
அவரின் இதயத் துடிப்பு இறுதியில் மே 18- 2009 அன்று நின்று போயிற்று.
காயம்படத் தயாராக இருக்கின்ற மனிதர்களால் மட்டுமே காயம்படும் மனிதர்களுக்கு
உழைக்கும் மனமும் இருக்கும். பிறர்நலப் பணிக்காய் நம்மை அர்ப்பணிக்கும்போது
காயங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளை ஏற்கும்போது, வரலாறு மறவாது தனது நாளிதழில்
குறித்து மகிழும்.
கோடைகாலம் கொதிக்கின்ற வெயிலில்,
ஏழை ஒருவன் காலில் செருப்பில்லாமல்
கையில் குடையில்லாமல் நடந்து கொண்டிருந்தான். அந்த பக்கமா குதிரையில் ஒரு
பணக்காரர் கையில் குடையுடனும், காலில் செருப்புடனும் வந்து கொண்டிருந்ததைப்
பார்த்த ஏழை, அவரிடம்
"ஐயா! நான் ஏழை. நெடுந்தூரம் போகவேண்டும். நீர் குதிரையில் தானே போகிறீர்.
செருப்பு எதற்கு! தயவு செய்து
உங்க செருப்பைத் தரக்கூடாதா?" என்று
கேட்க, அவரும் தன் செருப்பை கழட்டி கொடுத்தார்.
"ஐயா! உமக்கு நல்ல குணம்.
குதிரையில் நீர் வேகமாக போய்விடலாம். நான் நடந்துதானே வரணும், அந்த குடையைக்
கொடுத்துதவுங்கள்" என்று ஏழை கேட்க பணக்காரரும்
சரி என்று குடையைக் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து
"ஐயா!
உமக்குதான் எவ்வளவு தாராள குணம்.
என்னால நடக்க முடியல. உங்க குதிரையை தார்றீங்களா?" என்று கேட்க பணக்காரர்
கோபத்துடன் அவனை அதட்டினார். ஏழை உடனே
"என் சந்தேகம் தீர்ந்தது. செருப்பு, குடையை
தந்தவர் குதிரையை கேட்டிருந்தால் தந்திருப்பாரே, கேட்காமல்
போனோமே என்று சாகும்வரை உறக்கம் வராது. இப்ப என் சந்தேகம் தீர்ந்தது"என்றான்.
சந்தேகம் வளர ஆரம்பித்தால் சந்தோஷம் தளர ஆரம்பிக்கும். இளைதாக முள்மரம்
களையாவிட்டால் மரம்
பெரிதாகி வெட்டுவோரின் கைக்கு துன்பம் விளைவிக்கும். சந்தேகம்
முளைக்க ஆரம்பித்தால், களையும் முளைக்க ஆரம்பித்து துன்பத்தைத்தரும்.
"நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால், உனக்கு கைம்மாறு கிடைக்கும். நீ செய்வது
அனைத்திலும் கவனமாயிரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
உனக்கு பிடிக்காத
எதையும் பிறருக்கு செய்யாதே".
அந்த மேலாளருக்கு சொந்தமான பார்னிச்சர் கடை ஒன்று, மேல்மாடியில் இயங்கிக்
கொண்டிருந்தது. விற்பனையும் அமோகமாக இருந்தது. திடீரென்று மாலை வேளையில் தீப்பற்றி
கடை முழுவதும் எரிந்து, பொருட்கள் அனைத்தும் கருகிப் போய்விட்டன.... மறுநாள் காலை
கடை
வழக்கம் போல இயங்குமா? என சந்தேகப்பட்டவர்களுக்கு கடை இயங்கியது
சந்தோஷமாகப்பட்டது. பார்னிச்சர் கடையில்
பொருட்கள் கருகின. ஆனால் கடை உரிமையாளரின் நம்பிக்கை கருகவில்லை.
நம்பிக்கை தான் குடும்பத்தை வளர்த்தெடுக்கும். அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம்
குடியிருக்கும். சூழ்நிலைகளை
சரியாகக் கையாளும் மனிதன் மற்றவர்களுக்கு பாடமாக
அமைகிறார்கள்.நம்பிக்கையும் நற்சிந்தனையும் தான் விரும்பியதை சாதிக்க மனதில்
வரிந்து கட்டிக்கொண்டு நிரந்தரமாக நிற்கும்.
அமைதி மனதில் குடியிருந்தால், விரும்பியதை எல்லாம் சாதிக்க முடியும். பழகிக்
கொள்வோம் அமைதியை.
வாழ்க்கையில் நடைபெறும் சில நிகழ்வுகள், நம்மை முற்றிலும் மாற்றி விடுகின்றன.
உயிர்ப்பு நிகழ்வும் சீடர்களின் வாழ்வில் ஒரு
பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
அவநம்பிக்கை கொண்டிருந்த திருத்தூதர் தோமா நம்பிக்கைப் பெற்றார். இயேசுவைக்
கண்டு "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்று விசுவாச அறிக்கையிட்டார்.
தொடக்கத் திருச்சபையில் வாழ்ந்த நம்பிக்கை கொண்டோர், திருத்தூதரின்
படிப்பினையிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய்
நிலைத்திருந்தார்கள். எல்லா உடமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நல்லெண்ணமும்
சமத்துவம் வளர்ந்தன. திருச்சபையும் எண்ணிக்கையில் பெருகியது.
விசுவாசமும் வாழ்க்கையும் வெவ்வேறு அல்ல. இறைப்பற்று நம்மை இயக்கும்போது,
இறைவாழ்வு நம்மில் நிறையும்போது
தூய வாழ்வு வெளிப்படும்.
இயேசுவைப் போல காயம்படத் தயாராக இருப்போம். உளிதாங்கும் கல்தான் மண் மீது
சிலையாகும்.
ஐயம் தவிர்க்க
தூய ஆவியின் துணையை இடையறாது நாடுவோம்.
மனதில் அமைதியை நிரப்பிக் கொள்ள ஆண்டவன் சந்நிதிக்குள் நுழைவோம்.
நம்பிக்கையில் வளர்வோம் நற்போதனையை வாழ்வாக்குவோம்.
உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மகிழ்வில் திளைத்துக்கொண்டிருக்கும் அன்பு
உள்ளங்களே, இன்றைய இறைவார்த்தையின் வழி இயேசு நம்பிக்கை கொண்டவர்களாய்
வாழும்படி நம்மை அழைக்கின்றார். நம்புங்கள் வாழ்வு பெறுங்கள் என்கின்றார்.
இயேசுவின் வாக்குறுதி வெற்று வாக்குறுதி அல்ல. அது உண்மையின்
வாக்குறுதி. அவரை நம்பி வாழ்வு பெற்றவர்கள் ஏராளம். இன்றைய நாளில்
இயேசு நமக்கு மூன்று விதங்களில் தன்னை வெளிப்படுத்துகிறார்.
1. வல்லமையுள்ளவர், 2. அமைதி அருள்பவர், 3. ஆசீர் அளிப்பவர்.
1. வல்லமையுள்ளவர்:
இயேசு உயிர்த்த பின்பும் தான் வல்லமையுடையவர் என்பதனை பல விதங்களில்
தன் சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். பலர் சேர்ந்து புரட்டி
வைத்த கல்லறையை விட்டு வெளியே வல்லைமையுடன் வந்தார். பூட்டி இருந்த
வீட்டின் உள்ளே வந்து தம் சீடர்களுக்கு காட்சி அளிக்கின்றார். சீடர்களின்
பசியைப் போக்க, தாயன்போடு மீன் சுட்டு தருகின்றார். இப்படி பல விதங்களில்
தன்னை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
பூட்டியிருந்த வீட்டில் சீடர்கள் பயத்துடன் பதுங்கி இருக்க, இயேசு
அவர்கள் முன் பிரசன்னமாகின்றார். அவர்களுக்கு தன்னுடைய வல்லமையை பரிசாகக்
கொடுக்கின்றார். உயிர்த்த பின்பும் தான் வல்லமையுடன் இருப்பதை அவர்களுக்கு
எடுத்துக்காட்டுகின்றார்.
பேயோ பூதமோ என்று சீடர்கள் அலறி இருக்கக்கூடும். தன்னுடைய காயம்பட்ட
கைகளையும் கால்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டுகின்றார்.
பயத்துடன் இருந்த அவர்களுக்கு தன்னுடைய காயத்தின் தளும்புகள்
கொண்டு வல்லமை அளிக்கின்றார். அவருடைய காயங்களால் நாம் சுகமானோம்.
அவருடைய தளும்புகளால் நாம் வல்லமை பெறுகின்றோம். இயேசு நமக்குக்
கூறுவதும் இதுவே. இன்றைய உன்னுடைய காயங்கள் நாளைய தளும்புகள். இன்றைய
உன்னுடைய தளும்புகள் நாளை வேறொருவருக்கு வல்லமை தரக்கூடியதாக மாறலாம்.
நமது வல்லமை நமது துன்பத்தோடு கூட மறைந்து போய்விடுவதில்லை. துன்பத்திலிருந்து
நாம் மீண்டு வந்த பிறகும் நமது வல்லமை இரட்டிப்பு மடங்கு பலம்
பெறுகிறது. எனவே துன்பத்தைக் கண்டு தளராது வாழ்வோம். உயிர்த்த இயேசுவின்
வல்லமை பெறுவோம்.
2. அமைதி அருள்பவர்:
இயேசு அமைதியை அருள்பவர். அவர் வாழ்ந்த போதும் சரி. இறக்கும் தருவாயிலும்
சரி, ஏன் இறந்த பிறகும் சரி, அமைதியின் வடிவமாக காட்சி அளிப்பவர்.
இவ்வுலகு அமைதி பெறவே வந்தேன் அதுவும் நிறைவாக பெறவே வந்தேன் என்றவர்,
அதனை முழுமையாக நிறைவாக இவ்வுலகுக்குக் கொடுத்தவர். கொடுக்கும்
பாத்திரமான இயேசு நிறைவாகவேக் கொடுக்கின்றார். அதனைப் பெறும் நாம்
தான் அதனை முழுமையாக பெறுவதில்லை. இன்றைய சூழலில் மன அமைதி இன்றி
நம்மில் பலர் இருக்கின்றோம். நமது எண்ண அலைகளை அறிபவர் இயேசு. எவ்வாறு
குழப்பத்திலும் பயத்திலும் இருந்த சீடர்கள் முன் தோன்றி உங்களுக்கு
அமைதி உரித்தாகுக என்றாரோ அது போல இன்று மனக்குழப்பத்தில் இருக்கக்
கூடிய நம் முன்னும் தோன்றி அதே அமைதியை நமக்கும் அருள்கின்றார்.
நமது உள்ளக்கதவுகள் பயம், குழப்பம் என்னும் கதவினால் அடைக்கப்பட்டிருந்தாலும்
இயேசு நம் உள்ளே வந்து நமக்கு அமைதி அளிக்கக்கூடியவர். அவரது அமைதி
நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கும்.
எவ்வாறு உயிர்த்த இயேசுவின் அமைதியைப் பெற்ற சீடர்களின் வாழ்வு
புது மாற்றம் பெற்றதோ அது போல நமது வாழ்வும் அவருடைய அமைதியினால்
புது வாழ்வு பெறும். அமைதியைப் பெறுபவர்களாக மட்டுமில்லாமல் அதனைப்
பிறருக்கும் அளிப்பவர்களாக நாம் மாற வேண்டும். அதற்காகவே இயேசு உயிர்த்தார்.
தந்தை அவரை அனுப்பியது போல இயேசு நம்மை அனுப்புகின்றார். தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்ற அமைதியைப் பிறருக்கு அளிக்கக் கூடியவர்களாவோம்.
3. ஆசீர் அளிப்பவர்:
இயேசு நமக்கு ஆசீர் அளிப்பவர். நானே நல்ல ஆயன் நீங்கள் என் மந்தைகள்.
நானே உலகின் ஒளி .உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும் என்று பல நேரங்களில்
அவருடைய அருளாசீரை நமக்கு அள்ளித் தந்திருக்கின்றார். இறந்து உயிர்த்த
பின்பும் தன்னுடைய சீடர்களுக்கு ஆசீர் அளித்து சென்றதைப் போல நமக்கும்
இன்றைய நாளில் ஆசீர் அளிக்கின்றார். சீடர்களில் ஒருவரான திதிம் என்னும்
தோமா அவருடைய உயிர்ப்பை நம்பாத போது, மீண்டும் ஒரு முறை தோன்றி தன்னை
வெளிப்படுத்தியவர். அவரது நம்பிக்கையின்மையைக் கண்டு வெறுக்காது அன்போடு
அவரது சந்தேகம் தீர்க்கின்றார். தோமா இயேசுவின் காயங்களைக் கண்டதால்
மட்டும் நம்பவில்லை மாறாக இயேசுவின் தாயன்பை கண்டு அவரை அடையாளம்
கண்டு கொள்கின்றார். நம்புகின்றார் அதன் அடையாளமாக நம்பிக்கை பிரகடனம்
ஒன்றை வெளிப்படுத்துகிறார். என் ஆண்டவரே, என் தேவனே என்ற அந்த செபத்தின்
மூலமாக தன்னுடைய ஒட்டு மொத்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றார்.
தோமாவின் நம்பிக்கையின்மையினால் காணாமலே விசுவசிக்கும் நம்முடைய நம்பிக்கை
போற்றப்படுகிறது உயிர்த்த இயேசுவால். நாம் பேறுபெற்றவர்கள் என நமக்கு
ஆசீர் அளிக்கின்றார். எல்லா நிலையிலும் என் ஆண்டவரே என் தேவனே என்று
அவரை நினைத்து வாழ அழைக்கின்றார். நம்முடைய நம்பிக்கையின்மை உயிர்த்த
இயேசுவின் பிரசன்னத்திற்கு பின் முழு மாற்றம் பெற்றதாக இருக்க
வேண்டும். "நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் ஆனால் நம்பிக்கை இருப்பவனை
வீழ்த்துவது கடினம்". என்பதற்கேற்ப நம்முடைய வாழ்வு வீழ்ந்து போகாத
ஒன்றாக இருக்க வேண்டும்.
நம்மை சுற்றி இருக்கக் கூடிய எல்லோரும் நம்மால் முடியாது முடியாது
என்று சொன்னாலும் நம் ஆழ்மனதில் சிறு மெல்லிய சத்தம் உன்னால்
முடியும் என்று சொல்லும் போது நம்முடைய நம்பிக்கை கொண்டு நாம் எழுந்து
வருவோம். அதுவே நம்முடைய உயிர்ப்பு. இயேசு வருடத்தில் ஒரு நாள் மட்டும்
உயிர்க்கவில்லை. அவரது உயிர்ப்பின் மகிழ்வை நாம் ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக் கொண்டாட்டத்தின் போதும் கொண்டாடி மகிழ்கின்றோம்.
நாமும் ஒவ்வொரு முறையும் நம்முடைய நம்பிக்கையில் அவரோடு உயிர்க்க
வேண்டும். வல்லமையருளும், அமைதியருளும், ஆசீர் அளிக்கும் இயேசு நம்மோடு
இருந்து நம்முடைய நம்பிக்கையின் தரத்தை உயர்த்தட்டும். அவரது வல்லமையும்
அமைதியும், ஆசீரும், நம்மை நம்பிக்கையினால் நிரப்பி நமது வாழ்வை
வளம் பெறச்செய்யட்டும். உயிர்த்த இயேசுவின் வல்லமையும் அருளும் ஆசீரும்
நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்த்து நம்மை வழி
நடத்துவதாக .. ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
தோமாவின் அழைப்பு
திருவழிபாட்டு ஆண்டின் பாஸ்கா காலத்தின் 2ஆம் ஞாயிற்றை அலங்கரிக்கும்
நாயகன் திருத்தூதர் தோமா. இந்த நாயகனின் அழைப்பை நம் இன்றைய
சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். நற்செய்தி நூல்களில் 4
திருத்தூதர்களின் (பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு)
அழைப்பு மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. உயிர்ப்புக்குப்
பின் தோமாவுக்குத் தோன்றும் நிகழ்விற்கும் மோசேயின் அழைப்பு
நிகழ்விற்கும் (விப 3) ஏதோ தொடர்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
இதில் என்ன விந்தை என்றால், மற்ற திருத்தூதர்களின் அழைப்பு
அவர்களுக்கான அழைப்பாக மட்டுமே இருக்கிறது. ஆனால்,
தோமாவின் அழைப்பு நம் ஒவ்வொருவருக்கான அழைப்பாக இருக்கிறது.
எப்படி?
முதலில் தோமா என்ற கதைமாந்தரைப் புரிந்துகொள்வோம்.
தோமா பேசியதாக யோவான் நற்செய்தியாளர் (மட்டும்) மூன்று இடங்களில்
பதிவு செய்கின்றார்:
முதலில், இலாசர் உயிர்ப்பு நிகழ்வு. இலாசரை உயிர்ப்பிக்க
விரும்பிய இயேசு, 'மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்'
என்கிறார். 'ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய
முயன்றார்கள்' என்று மற்ற சீடர்கள் தயக்கம் காட்டியபோது,
'நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்' (யோவா 11:16) என்று
துணிந்து சொல்கிறார் தோமா.
இரண்டாவதாக, இறுதி இராவுணவில் தம் சீடர்களின் பாதங்களைக்
கழுவிய இயேசு, யாருக்கும் புரியாததுபோல 'நான் அங்க போறேன்.
இங்க போறேன். வழி தெரியாது. வகை தெரியாது. உறைவிடம் இருக்கு.
தந்தை இருக்காரு' என்று சொல்லிக்கொண்டே போக, தோமா
குறுக்கிட்டு, 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத்
தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள்
எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' (யோவா 14:5) என்கிறார்.
மூன்றாவதாக, தாங்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டதை மற்ற சீடர்கள்
தோமாவிடம், 'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்ல, 'அவருடைய
கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என்
விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'
(யோவா 20:25) என்கிறார். மேற்காணும் மூன்று நிகழ்வுகளின்
பின்புலத்தில் தோமாவின் மூன்று பண்புகளை நாம் முன்வைக்கலாம்:
அ. தோமா பயம் இல்லாதவர். அச்சங்கள் தவிர்த்தவர்
வாரத்தின் முதல் நாள் மாலையில் இயேசு சீடர்களுக்குத்
தோன்றியபோது, சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டு
அறையில் ஒளிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், தோமா அவர்களோடு
இல்லை. ஆக, அவர் வெளியில்தான் இருந்திருக்கின்றார். ஒருவேளை
நகரில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அவர் வெளியில்
சென்றிருக்கலாம். அல்லது தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில்
தங்கியிருக்கலாம். அல்லது யூதாசுக்கு என்ன நடந்தது என்ற
பார்க்கச் சென்றிருக்கலாம். எப்படியோ அவர் அவர்களோடு
இல்லை. அவரின் தனிமை அவர் பயமற்றவர் என்பதைக் காட்டுகிறது.
ஆ. தோமா ப்ராக்டிகல் ஆனவர்
வானத்தில் தெரியும் ஆகாய தாமரையைவிட கையில் இருக்கும்
மல்லிகைப்பூ பெரிது என நினைத்தவர் தோமா. ஆகையால்தான் இயேசு
தன் வான் வீட்டிற்கான வழியைப் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கும்போது, 'நீர் போகிற இடமே தெரியாதபோது
வழி எப்படித் தெரியும்?' எனக் கேட்கிறார். மேலும்,
இயேசுவின் உயிர்ப்பின்போது பல இறைமக்களின் உடல்கள்
உயிர்த்தெழுந்ததாகவும் அவர்கள் எருசலேமில் பல இடங்களில்
தோன்றினார்கள் எனவும் மத்தேயு நற்செய்தியாளர் பதிவு
செய்கின்றார். ஆக, தோமாவைப் பொறுத்தமட்டில் சீடர்களுக்குத்
தோன்றியது இவர்களில் யாராவது ஒருவருடைய உடலாக இருக்கலாம்.
ஏன்? யூதாசு கூட தோன்றியிருக்கலாம். விலாவில் காயம்,
கரங்களில் காயம்பட்ட உடல் இயேசுவின் உடலாகத்தான் இருக்க
முடியும். இவ்வாறாக, நம்புவதற்கும் லாஜிக் வேணும்,
பக்தியிலும் கொஞ்சம் ப்ராக்டிகாலிட்டி வேணும் என
நினைக்கிறார் தோமா.
இ. தோமா உள்மனச்சுதந்திரம் கொண்டவர்
'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சீடர்கள் சொன்னவுடன்,
தான் அந்த வாய்ப்பை தவற விட்டோம் என்ற வருத்தமோ, குற்ற
உணர்வோ, அல்லது 'இவர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்களே'
என்று தன் சக திருத்தூதர்கள்மேல் பொறாமையோ இல்லை. மேலும்
'நீங்கள் உயிர்த்த ஆண்டவரைப் பார்த்த பாக்கிசாலிகள்' என்று
அவர்களை மேலே உயர்த்திக் கொண்டாடவும் இல்லை.
வெளிப்புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தன் உணர்வைப்
பாதிக்காத ஒருவரே உள்மனச்சுதந்திரம் கொண்டவர். அதை
நிறைவாகப் பெற்றிருக்கிறார் தோமா.
நிற்க.
இங்கு, தோமாவுக்குத் தோன்றிய இயேசுவின் மூன்று
பண்புகளையும் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்:
அ. இயேசு தன் சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை
வாரத்தின் முதல் நாள் மாலை தோன்றியபோதும், எட்டாம் நாள்
தோன்றியபோதும் இயேசு தம் சீடர்கள் தம்மைவிட்டு
ஓடியதற்காகவோ, அல்லது தம்மை அவர்கள் மறுதலித்ததற்காகவோ,
பூட்டிய வீட்டிற்குள் ஒளிந்துகொண்டிருப்பதற்காகவோ
அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. 'எல்லாரும் இங்க இருக்க, நீ
மட்டும் எங்க போன?' என்று தோமாவையும் கடிந்துகொள்ளவில்லை.
மாறாக, அவர்களைக் காணும்போதெல்லாம், 'அமைதி' (ஷலோம்) என்று
மட்டுமே சொல்கின்றார். சிலுவையிலேயே அவர் எல்லாக்
காயங்களையும் மன்னித்துவிட்டதால் என்னவோ அவருக்கு இங்கே
மன்னிக்க ஏதும் இல்லை.
ஆ. இயேசு தன் சீடர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார்
ஆகையால்தான் தோமா தன் சக திருத்தூதர்களிடம் பேசியது
அவருக்குத் தெரிந்தது. சீடர்களின் பயம், கலக்கம், திகில்,
அச்சம், வியப்பு, மகிழ்ச்சி என அவர்களின் எல்லா
உள்ளுணர்வுகளையும் அறிந்திருந்தார் இயேசு.
இ. இயேசு நேரத்தையும் இடத்தையும் கடந்தவராக இருந்தார்
பூட்டிய அறைக்குள் நுழையும் வகையிலும், அதே நேரத்தில்
எதையும் தொட்டு உணரும் நிலையிலும் இயேசு இருந்தார்.
இயேசுவின் சமகாலத்தின் கிரேக்க புரிதல்படி ஆவிக்கும் மனித
உடலுக்கும் உள்ள வேற்றுமை 'பார்த்தல்,' 'கேட்டல்,'
'தொடுதல்' என்னும் மூன்று உணர்வுகளில் இருந்தது. இயேசு
இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டவராக இருக்கிறார்.
இந்த மூன்று பண்புகளுக்காகத்தான் என்னவோ, இயேசு தன் முன்
தோன்றி, 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை
நீட்டி என் விலாவில் இடு' என்ற சொன்னவுடன், 'நீரே என்
ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என சரணாகதி அடைகின்றார்.
மற்றவர்கள் எல்லாம் இயேசுவில் ஆண்டவரைக் கண்டனர். ஆனால்,
தோமா மட்டுமே அவரில் கடவுளைக் காண்கிறார். தோமாவின்
மிகப்பெரிய நம்பிக்கை அறிக்கை இது.
இந்த நம்பிக்கை அறிக்கையோடு யோவானும் தன் நற்செய்தியை
நிறைவு செய்கிறார்.
இந்த இடத்தில் மோசேக்கும், தோமாவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப்
பதிவு செய்வோம்:
அ. அழைக்கப்பட்டபோது மோசேயும், தோமாவும் தனியே
இருக்கின்றனர்.
ஆ. எகிப்தில் இஸ்ரயேல் மக்களின் துன்பங்களைக் கண்டு,
அவர்கள் துயரங்களின் ஒலியைக் காதால் கேட்டதால் இறங்கி
வருகின்றார் கடவுள். இங்கே தோமாவின் ஏக்கத்தைக் கண்டு,
எதிர்பார்ப்பு வார்த்தைகளைக் கேட்டவுடன் இறங்கி
வருகின்றார் இயேசு.
இ. அந்த நிகழ்விலும் யாவே இறைவனின் பெயர் 'ஆண்டவர்'
என்றும் 'கடவுள்' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கேயும்
அதே சொற்களால் இயேசுவை அழைக்கின்றார் தோமா.
ஈ. அங்கே இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைக் தங்கள் கடவுள் என
ஏற்றுக்கொள்கின்றனர். இங்கே தோமா இயேசுவைத் தன் கடவுள் என
ஏற்றுக்கொள்கின்றார்.
உ. அங்கே மோசே தயக்கம் காட்டுகிறார். இங்கே தோமாவும்
தயக்கம் காட்டுகிறார்.
ஊ. மோசே கடவுளை முட்புதரில் கண்டார். நம்பினார். ஆனால்,
அவர் சொன்னதைக் கேட்ட மக்கள் காணாமலே நம்பினர். இங்கே தோமா
இயேசுவைக் கண்டார். நம்பினார். இவர்(கள்) சொன்னதைக் கேட்ட,
கேட்கின்ற நாம் இன்றுவரை இயேசுவை நம்புகின்றோம்.
இவ்வாறாக, மோசேக்கு கிடைத்த முட்புதர் அனுபவம் அவரை
பாரவோன் முன்னிலையில் நிறுத்தியதுபோல, தோமாவுக்கு கிடைத்த
இந்த அனுபவம் அவரைக் கண்டங்களைக் கடந்து செல்லும்
திருத்தூதர் ஆக்குகிறது. இயேசு-தோமா நிகழ்வு நமக்கு ஒரு
அழைப்பையும், ஒரு ஆறுதலையும் விடுக்கிறது:
அழைப்பு: 'நம்பிக்கையற்றவனாய் இராதே! நம்பிக்கை கொள்!'
நம்பிக்கை என்பது ஒரு சாய்ஸ். நான் நம்பிக்கையற்றவனாகவும்
இருக்கலாம். நம்பிக்கையாளனாகவும் இருக்கலாம். முந்தைய
நிலையிலிருந்து பிந்தைய நிலைக்குக் கடந்து வருகின்றார்
தோமா. தோமாவின் இந்தப் பயணம் ஒரு போராட்டமாக, தயக்கமாக,
ஐயமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களும் மோசேயையும், மோசே
சொன்ன கடவுளையும் உடனே முழுமையாக நம்பிவிடவில்லை.
அவர்களும் தயக்கம் காட்டுகின்றனர். சந்தேகம் கொள்கின்றனர்.
நம்பிக்கையில் பின்வாங்குகின்றனர். மோசேக்கும்
கடவுளுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை எனக்கு ரொம்ப அவசியம். என் நாளை நகர்த்த
உதவுவது இதுவே.
கடவுள் மேல் உள்ள நம்பிக்கை மட்டும் நம்பிக்கை அல்ல.
பிறர்மேல், தன்மேல் வைப்பதும் நம்பிக்கையே. 'நம்பிக்கை'
என்பது 'எமேத்' என்று சொல்கிறது எபிரேயம். 'எமேத்' என்றால்
பாறை. அதாவது, தளர்ச்சியின் எதிர்ப்பதம் இது. தளராத,
நொறுங்காத, அசையாத எதுவும் நம்பிக்கையே. தளராத, நொறுங்காத,
அசையாத ஒன்றின்மேல்தான் நாம் அதைவிட மேலானதைக் கட்ட
முடியும்.
இன்று இறைநம்பிக்கை, பிறர்நம்பிக்கை, தன்நம்பிக்கை என்னும்
முக்கோணத்தில் நான் நம்பிக்கையற்றவனாய் இருக்கக் காரணமாக
இருப்பது எது? அதை நான் எப்படி களைகின்றேன்?
ஆறுதல்: 'காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'
'காண்பதையும், கேட்பதையும், தொடுவதையம் தாண்டிய ஒரு உலகம்
இருக்கிறது' எனச் சொல்கிறது இயேசுவின் இந்த ஆறுதல். நம்
வீடுகளில் இறந்த நம் அப்பாவோ, அம்மாவோ நம்மோடு இப்போது
இல்லை என்றாலும், அவர்களின் நினைவு நமக்கு ஒருவித ஆற்றலைத்
தருகிறதே. ஏன்? காண்கின்றவர்கள் தரும் ஆற்றலைவிட காணாத
அவர்கள் எனக்கு எப்படி நம்பிக்கை தர முடிகிறது? ஆக, வாழ்வை
விரித்து, விசாலமாகப் பார்த்தல் அவசியமாகிறது.
இயேசுவைச் சுற்றி கால வட்டங்கள் வரைந்துகொண்டே சென்றால்
நாம் இப்போது 2018ஆம் வட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
தோமாவும் அவருடைய சக திருத்தூதர்களும் இயேசுவைக்
காண்கின்றனர். நம்புகின்றனர். ஆனால், நமக்கு அந்த முதல்
நேரிடை அனுபவம் கிடையாது. நாம் நம்புவது சீடர்களின்
சீடர்களின் சீடர்களின் சீடர்களின் ... சீடர்களையே. ஆக,
நீங்க, நான், அவர் என எல்லாருமே காணாமலே நம்புவோர்தாம்.
இறுதியாக,
காண முடியாதவற்றையும் கண்டு நம்பக் கற்றுக்கொண்டோமென்றால்,
காண்கின்ற எந்த மனிதரோடும் நம்மால் இணக்கமாகவும்,
அமைதியாகவும், பகிர்ந்துகொண்டும் ஒரே உள்ளமும் ஒரே
உயிருமாய் வாழ முடியும். அந்த நிலையைத்தான் இன்றைய முதல்
வாசகம் (திப 4:32-35) நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது.
தோமாவின் அழைப்பு - அவருக்கும், உங்களுக்கும், எனக்கும் -
நம்பிக்கை கொள்ள, காண முடியாதவற்றைக் காண!
என் ஆண்டவர், என்
கடவுள்!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றை இறைஇரக்கத்தின் ஞாயிறு
எனக் கொண்டாடுகிறோம். ஒப்புரவு அருளடையாளத்திற்கான உறுதிவாக்கியம்
எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ இன்றைய நற்செய்திப்
பகுதியில் காணப்படுவதால், ஒப்புரவு அருளடையாளம் இறைவனின்
இரக்கத்தை உணரும் தளமாக இருப்பதால், இந்த ஞாயிறு இறைஇரக்கத்தின்
ஞாயிறு என அழைக்கப்படுகிறது.
இரக்கம் என்பதன் எபிரேயப் பதம் ரஹேம் இந்தச் சொல்
வயிறு என்னும் சொல்லோவியத்தால் அடையாளப்படுத்துகிறது. ஒரு
குழந்தை அதனுடைய தாயின் வயிற்றில் உணரும் பாதுகாப்பைப்
போல, மனிதர்கள் கடவுளுடைய பராமரிப்பை உணர்கிறார்கள்.
மேலும், வயிறு அனைத்து உணர்வுகள் தங்கும் இடம், அதுவே ஒரு
மனிதரின் ஆழமான இயல்பு என்றும் இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள்.
இரக்கம் என்பதற்கு இணையான கிரேக்கச் சொல் எலேயோஸ். இச்சொல்
ஒலிவ எண்ணெய், ஒலிவ எண்ணெய் தரும் இதம், நலம் ஆகியவற்றைக்
குறிக்கிறது. மனிதர்களுக்கு இதமும் நலமும் தருவது இரக்கம்.
மனித வலுவின்மையைத் தழுவுதல்
கடவுள் மனிதர்களின் வலுவின்மையைத் பொறுத்துக்கொண்டு தழுவுதலே
இறைஇரக்கத்தின் முதல் பரிமாணம். இன்றைய நற்செய்தி வாசகத்தில்
இயேசுவின் உயிர்ப்புத் தோற்றமளித்தல் நிகழ்வு ஒன்றை
வாசிக்கிறோம். நிகழ்வு இரண்டு வாரங்களில் நடைபெறுகிறது. இயேசு
உயிர்த்த அதே நாளில் ஒன்று, எட்டாம் நாளில் இன்னொன்று. முதல்
நிகழ்வில் தோமா இல்லை. இரண்டாவது நிகழ்வில் தோமா இருக்கிறார்.
மகதலாவின் சொற்கள், வயலுக்குச் சென்ற இருவரின் சான்று, பத்துச்
சீடர்களின் சான்று என எதுவும் தோமாவைத் தொடவில்லை. அவற்றை
நம்புவதற்கு வலுவற்றவராக இருக்கிறார் தோமா. இரண்டாவதாக
தோன்றுகிற ஆண்டவராகிய இயேசு தோமாவின் வலுவின்மையைத் தாமே
தழுவிக்கொள்கிறார்.
தீர்ப்பிடாத அன்பு
இரண்டாவது நிகழ்வில் தோன்றுகிற இயேசு, என்னை நம்புகிறவர்கள்
எனக்கு வலப்புறம் வாருங்கள்!, நம்பாதவர்கள் இடப்புறம்
நில்லுங்கள்! எனச் சொல்லி அவர்களைத் தீர்ப்பிடவில்லை. தம்மை
நம்பியவர்கள் கண்டு அவர் வியக்கவில்லை. தம்மை நம்பாதவர்கள்
கண்டு அவர் சோர்வடையவில்லை. எந்தவிதத் தீர்ப்பிடுதலும் இல்லாமல்
சீடர்களை, குறிப்பாக தோமாவை, ஏற்றுக்கொள்கிறார் இயேசு. இது
இறைஇரக்கதின் இரண்டாவது பரிமாணம்.
இதயம் தொடும் நெருக்கம்
இயேசு சிலுவையில் அறையப்படும் நிகழ்வில், சிலர் அவரைத் தூரத்திலிருந்து
பார்க்கிறார்கள். அவரை ஊடுருவக் குத்திய நூற்றுவர் தலைவர்,
அவரைச் சற்றே அருகில் வந்து பார்த்து, இவர் உண்மையாகவே இறைமகன்
எனச் சான்று பகர்கிறார். தம் கையை நீட்டி இயேசுவின்
விலாவுக்குள் இட்டு அவரின் இதயம் தொட்ட தோமா, நீரே என் ஆண்டவர்,
நீரே என் கடவுள்! எனச் சரணாகதி அடைகின்றார். மனுவுருவாதலில்
மனித இயல்பை ஏற்கிறார் கடவுள். உயிர்ப்பு நிகழ்வில் மனிதர்கள்
தங்கள் கைகளை நீட்டி தம் இதயத்தைத் தொடும் அளவுக்கு அவர்களுக்கு
நெருக்கமாக வருகிறார் கடவுள்.
இரண்டாவது படைப்பு நிகழ்வில் ஆதாமின் விலா திறக்கிற கடவுள்
புதிய படைப்பை உருவாக்குகிறார். உயிர்ப்பு நிகழ்வில் இயேசுவின்
விலா திறக்கிற தோமா புதிய படைப்பாக உருவாகிறார். இறைவனின்
இரக்கம் நம்மைப் புதிய படைப்பாக உருவாக்குகிறது.
இயேசுவின்மேல் நாம் கொள்ளும் நம்பிக்கை செயல்களாக வெளிப்பட
வேண்டும் என உரைக்கிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கை
கொண்டோரின் வாழ்க்கை முறையும், செயல்களும் மாற்றம்
பெறுகின்றன. தங்களையும் தங்களுடைய தேவைகளையும் மையமாக
வைத்துச் சிந்தித்தவர்கள் மற்றவர்களையும் மற்றவர்களின்
தேவைகளையும் முன்வைத்துச் சிந்திக்கிறார்கள். இவருக்கு இதைச்
செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்பதைவிட,
இவருக்கு இதைச் செய்யாவிட்டால் இவருக்கு என்ன ஆகும் எனக்
கேட்கும் மனிதர் மற்றவர்மேல் இரக்கம் காட்டுகிறார்.
கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் என
மொழிகிறது இரண்டாம் வாசகம். கடவுளின் இரக்கத்தைப் பெறுகிற
நாமும் நம் இரக்கத்தால் உலகை வெல்கிறோம்.
இந்த ஞாயிறு நமக்கு விடுக்கும் அழைப்பு
என்ன?
(அ) இறைவனின் இரக்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம்? அதை
அனுபவிப்பதற்கான சிறந்த தளமாக ஒப்புரவு அருளடையாளம் இருக்கிறது
என்பதை நாம் உணர்கிறோமா? கடவுளோடு ஒப்புவரவாகி, அவருடைய
இரக்கத்தை அனுபவிப்பதற்கான தடைகள் எவை? சோம்பல், தள்ளிப்போடுதல்,
கண்டுகொள்ளாத்தன்மை, தன்-நியாயப்படுத்துதல் போன்றவையா?
(ஆ) இறைவனின் இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை நம் வாழ்வியல்
தளங்களில் எப்படி மற்றவர்களோடு பகிர்கிறோம்?
(இ) என் ஆண்டவரே, என் கடவுளே! எனச் சரணாகதி ஆகும் நான்,
ஒவ்வொரு பொழுதும் அவருடைய எண்ணங்களை என் வாழ்வாக்க முயற்சி
செய்கிறேனா?
இறைவன் மீது நம்பிக்கைக் கொண்ட மக்கள்
அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் இருந்தார்கள்.
எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது என்று முதல்
வாசகம் அறிவிக்கிறது. ஆதிக் கிறிஸ்தவர்கள் உண்மையான
விசுவாசம், ஒற்றுமை, அமைதி, தேவைக்கேற்ப பகிர்வு, தெளிவான
சிந்தனை இவைகளை மையமாகக் கொண்டு வாழ்ந்ததால் அவர்கள் அனைவரும்
பகிர்விலும், நம்பிக்கையிலும் நிலைத்திருந்தனர். பகிர்வையும்
நம்பிக்கையையும் இரு கண்களாகக் கருதினார்கள். செயலற்ற
நம்பிக்கை பயனற்றதாகும் (தொ நூ. 2:20), ஆதிக் கிறிஸ்தவர்கள்
போட்டி, பொறாமை, சுயநலம் போன்ற நஞ்சுக் குணங்கள் இல்லாமல்,
பகிர்வும், சகோதர வாஞ்சையும், பொதுநோக்குப் பார்வையும்
கொண்டு வாழ்ந்தனர். அதுவே அவர்கள் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை
அதிகரித்தது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தவர்
தோமா.
தோமா தனது நம்பிக்கையை இழக்கக் காரணம் அவர் மற்ற சீடர்களிடமிருந்து
விலகித் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர்
மீண்டும் சீடர்களுடன் இணைந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர்
அவருக்குத் தோன்றினார். குழம்பிய நிலையில்தான் தெளிந்த
சிந்தனை பிறக்கும். குழம்பிய குட்டையில்தான் தெளிந்த
நீர் கிடைக்கும். எனவே குழம்பிய நிலையில் இருந்த தோமா
இயேசுவைக் கண்ட பிறகு தெளிவு பெற்றார். நீரே என் கடவுள்.
நீரே என் ஆண்டவர் (யோவான் 20:29) என்றார். தோமாவைத் தவிர
வேறு யாரும் இயேசுவைக் கடவுள் என்று நேரடியாக அழைக்கவில்லை.
அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம்
பிடிக்கும் குழந்தையைப்போல, இயேசுவைப் பார்த்தால்தான்
நம்புவேன் என்று சொன்ன தோமா, காயத்தோடு காட்சி தந்த இயேசுவைக்
கண்டவுடன், என் ஆண்டவரே என்று கதறினார். அதன் விளைவு,
நாடுகள் கடந்து இந்தியாவுக்கு வந்து நற்செய்திக்காக உயிரைத்
தியாகம் செய்தார்.
ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை நாட்டில் மிக முக்கியமான அதிகாரிகளை
அழைத்துப் பேசும்போது, எல்லா அதிகாரிகளும் என்னை
விட்டுப் போனாலும், இந்த நாட்டிலுள்ள உயர் மட்டமும் என்னைக்
கைவிட்டாலும், இறைவன் மேல் உள்ள உறுதியான நம்பிக்கையாலும்,
என்னிடம் உள்ள தன்னம்பிக்கையாலும் இறுதிவரை நிலைத்து
நின்று வெற்றிகரமாகச் செயல்படுவேன் என்றார். தோமா இறை
மனித நம்பிக்கையின் அடித்தளமானவர். நம்பிக்கையின் நங்கூரம்.
விசுவாசத்தின் வித்து. தியாகத்தின் திரு உருவம். தெளிவு
பெற்ற பின் விசுவாசத்தில் வைரமாகத் திகழ்கின்றார். முதலில்
மறுத்தவர், நம்பிக்கை கொண்ட பிறகு, என் ஆண்டவரே, என்
கடவுளே, என்று சொன்ன வார்த்தைகள் மூலம் கிறிஸ்தவர்களின்
விசுவாசக் கண்களைத் திறந்துவிட்டவர் என்றே கூறலாம்.
சீடர்களின் அச்சத்தைத் தீர்த்து வைப்பவராக இன்றைய நற்செய்தியிலே
இயேசு காட்சி அளிக்கின்றார். அன்று யூதர்களுக்கு அஞ்சி அவர்கள்
தங்கியிருந்த வீட்டின் கதவுகளை மூடி வைத்திருந்தனர்.
பச்சை மரமாகிய இயேசுவுக்கே இந்த மக்கள் மரண தண்டனை அளித்து
விட்டார்கள். நம்மை என்னச் செய்யப்போகின்றார்களோ? என்பதை
எண்ணி சீடர்கள் பயந்தார்கள். இயேசு பட்ட பாடுகள் அனைத்தும்
அவர்கள் கண் முன்னால் நின்று அவர்களை அச்சுறுத்தின.
அச்சம் அந்தச் சீடர்கள் மனத்திலிருந்ததால் அவர்களிடம் மகிழ்ச்சி
இல்லை. அச்சமிருக்கும் இடத்திலே அமைதியிருக்காது. அமைதியில்லா
இடத்திலே மகிழ்ச்சி இருக்காது.
நான் ஒரு நாள் மாலை நேரத்தில் வங்கக் கடலோரத்தில் நடந்து
கொண்டிருந்தேன். அங்கே ஓர் அழகான ஆண் குழந்தை, அந்தச் சிறுவனுக்கு
வயது நான்கு இருக்கும். அவனுடைய பெற்றோர் அந்தக் கடற்கரையிலிருந்த
மணல் மேடுகளில் ஒன்றின் மீது அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவனோ கடலைப் பார்த்தோ
, கடலலைகளைப் பார்த்தோ பயப்படாமல் கடலோரத்தில்
விளையாடிக்கொண்டிருந்தான். தாயும், தந்தையும் தன் அருகிலிருப்பதால்,
தனக்கு எந்த ஆபத்தும் நேராது ; அப்படியே நேர்ந்தாலும் தனது
தாயும், தந்தையும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்
அவன் அப்படி அச்சமின்றி விளையாடிக்கொண்டிருந்தான்.
நம்மை அன்பு செய்யும் ஒருவர் நம் அருகில் இருக்கும்போது,
அதுவும் அன்போடு கலந்த ஆற்றல் மிக்க ஒருவர் நம்மோடு இருக்கும்போது
நாம் எதற்கும் அஞ்சுவதில்லை.
இன்றைய நற்செய்தியில் சீடர்களை அன்பு செய்த இயேசு அவர்கள்
அருகில் நின்றபோது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைக்
காண்கின்றோம்.
வாழ்க்கையிலே எத்தனையோ வகையான அச்சங்கள்!
வானம் இடிந்து போகுமோ என்ற அச்சம்!
பூமி தூர்ந்துபோகுமோ என்ற அச்சம்!
கடல் தொலைந்து போகுமோ என்ற அச்சம்!
சூரியன் சுண்டிப் போகுமோ என்ற அச்சம்!
சந்திரன் சரிந்து போகுமோ என்ற அச்சம்!
இதோ உயிர்த்த ஆண்டவர் நம்முன்னே நின்று நம் ஒவ்வொருவரையும்
பார்த்து இவ்வாறு கூறுகின்றார்:
வறுமையிலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா
2:1-11). பசியிலிருந்து மக்களை நான்
விடுவித்திருக்கின்றேன் (யோவா 6:1-13). பாவத்திலிருந்து மக்களை
நான் விடுவித்திருக்கின்றேன் (லூக் 7:36-50), மரணத்திலிருந்து
மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 11:1-44). நான்
உன்னோடு இருந்தால் அச்சம் தரக்கூடிய எதுவும் உன்னருகில் வராது.
நீ எல்லா நம்பிக்கையையும் என் மீது வைத்து தொடக்க கால
கிறிஸ்தவர்களைப் போல வாழ முற்படு (முதல் வாசகம்); உலகை
வெல்வது நம்பிக்கையே என்ற என் அடியார் யோவானின்
கூற்றுக்குச் செவிமடு (இரண்டாம் வாசகம்). அப்போது நீ
துணிந்து நிற்பாய், நிமிர்ந்து நிற்பாய் !
மேலும் அறிவோம் :
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்(கு) இயல்பு (குறள் : 382).
பொருள் : அச்சம் எதுவுமில்லாத துணிவு, தேவைப்படுவோர்க்கு
வேண்டியவற்றை வழங்கும் கொடைச் சிறப்பு, வருமுன் காக்கும்
அறிவாற்றல், அயர்வில்லாத ஊக்கம் ஆகிய நான்கும் நாடாளும்
வேந்தனுக்கு உரிய இயல்புகள் ஆகும்.
வித்தை காட்டுபவர் ஓர் ஊருக்குச்
சென்று, இரண்டு இரும்புக் கம்பங்களை நீண்ட இடைவெளி
விட்டுத் தரையில் ஊன்றி, இரு கம்பங்களுக்குமிடையே ஒரு
பெரிய இரும்புக் கம்பியைக் கட்டி, பஜார் மக்களை வித்தைக்கு
அழைக்க, அவர்களும் திரண்டு வந்தனர், அம்மக்களிடம், "நான்
இந்த இரும்புக் கம்பியின் மீது ஒரு "சைக்கிளைத் தூக்கிக்
கொண்டு நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டபோது.
அனைவரும், "உங்களால் முடியும்" என்று சொல்ல, அவரும்
சைக்கிளைத் தூக்கிக் கொண்டு இரும்புக் கம்பியின் மீது நடக்க,
அனைவரும் கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினார். அடுத்து அவர்
அவர்களிடம், "ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த இரும்புக்
கம்பியின் மீது நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று
கேட்டபோது. அனைவரும், "உங்களால் நிச்சயமாக முடியும்" என்றனர்.
ஆனால் யாருமே அவரை நம்பித் தங்கள் குழந்தையை அவரிடம்
கொடுக்க முன்வரவில்லை! அவர்கள் அவரை எண்ணத்தளவில் நம்பினாலும்
மனத்தளவில் நம்பவில்லை!
நாமும் கடவுளைக் கொள்கையளவில் நம்பி, அவரை ஏற்றுக்
கொள்கிறோம். ஆனால் மனத்தளவில் அவரிடம் நம்மை முழுமையாகக்
கையளிக்க இன்னும் பக்குவமடையவில்லை. நமது கடவுள் நம்பிக்கை
முழுமையடையவில்லை.
இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமா. ஆனால்
உயிர்த்த இயேசுவை அவர் நேரில் கண்டபோது அவரது நம்பிக்கை உச்சக்
கட்டத்தை அடைந்தது. உயிர்த்த ஆண்டவரைப் பார்த்து, "நீரே என்
ஆண்டவர்! நீரே என் கடவுள்" (யோவா 20:29) என்றார், அவர்
கூறியது உண்மையிலேயே விசுவாச அறிக்கையாகும். நற்செய்தியில்
தோமாவைத் தவிர வேறு யாருமே இயேசுவைக் 'கடவுளே' என்று நேரடியாக
அழைக்கவில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
புனித தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது நமக்குள்ள
நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம். 'இயேசு ஆண்டவர்'
என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை உயிர்த்தெழச்
செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம் மீட்படைவோம் (உரோ
10:9).
நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான
இயேசுவின் மீது நமது கண்களைப் பதியவைத்து, மனந்தளராது எவ்வித
இன்னல் இடையூறுகளையும் மேற்கொள்ள வேண்டும் (எபி 12:2-3).
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் குறிப்பிடுவதுபோல,
தமது நம்பிக்கைதான் உலகை வெல்லுகிறது (1யோவா 5:4). நம்பிக்கையைக்
கேடயமாகக் கொண்டுதான் நாம் தீயோனை வெல்ல முடியும் (எபே
6:16).
நமது நம்பிக்கையைச் செயலில் காட்டவேண்டும், கிறிஸ்துவ.
வாழ்வு என்பது, 'அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை'
(கலா. 5:6), செயலற்ற நம்பிக்கை பயனற்றது (யாக் 2:20)...
இன்றைய முதல்வாசகம் இயேசுவின் சீடர்கள் எவ்வாறு தங்களது நம்பிக்கைக்குச்
செயல் வடிவம் கொடுத்தனர் என்பதை விவரிக்கிறது. நம்பிக்கை
கொண்டோர் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ்ந்தனர்.
அவர்களுக்கு எல்லாமே பொதுவுடைமையாக இருந்தது, செபக்கூடத்தில்
அப்பத்தைப் பிட்டுப் பகிர்ந்தது போலவே, வீட்டிலும் தங்களது
உணவை மற்றவர்களுடன் கபடற்ற உள்ளத்துடன் பகிர்ந்தனர் (திப
4:32-35), அவர்களுடைய வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையே
முரண்பாடில்லை, தொடக்கத் திருச்சபையில் நாம் காண்பது சமத்துவபுரம்,
சம்பந்தி.
ஒருவர் தனது நண்பர் வீட்டிற்குச் சென்றபோது, நண்பர் அவருக்குச்
சுவையான சூப்புக் கொடுத்தார். அதில் கொஞ்சம் மீதி வைத்துக்
கொண்டார். அந்த விருந்தினர் தொடர்ந்து மூன்று நாள் வத்தார்.
ஒவ்வொரு நாளும் முதல் நாளில் மீதியிருந்த சூப்பில் தண்ணீரைச்
சேர்த்துச் சுட வைத்துக் கொடுத்தார். நான்காம் நாள்.
குப்பைக் குடித்த விருந்தினர் நண்பரிடம், "இதுஎன்ன!
சூப்பா?" என்று கேட்டதற்கு, அவரிடம் நபர் கூறினார்: "இது
சூப்பல்ல, சூட்பினுடைய சூப்பினுடைய சூப்பினுடைய சூப்பு."
நாம் இப்போது கடைப்பிடிப்பது நற்செய்தியில்லை, மாறாக, நற்செய்தியினுடைய,
நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி, நற்செய்தியில்
கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்து விட்டோம். நாம்
இன்று கடைப்பிடிக்கும் நற்செய்தி சாரமற்றச் சக்கை, எனவே,
"நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை
விளங்கச் செய்வோம்" (1யோவா 3:18).
தோமா தனது நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர் மற்றச் சீடர்களிடமிருந்து
விலகித் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார், அவர் மீண்டும்
மற்றச் சீடர்களுடன் இணைந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர் அவருக்குத்
தோன்றினார். இயேசு தோமாவுக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றவில்லை.
சிலர் இன்று தங்கள் நம்பிக்கையை இழப்பதற்குக் காரணம், அவர்கள்
திருச்சபையின் உறவு ஒன்றிப்பிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்
கொள்கின்றார், தாயிறு திருவழிபாட்டிற்குக் கூட அவர்கள் வருவதில்லை.
அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பிரேய
திருமடலின் ஆசிரியர், "சிலர் வழக்கமாக நமது சபைக் கூட்டங்களில்
கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்று கூடி
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக" (எபி 10:25).
எனவே, குறைந்த அளவு ஞாயிறு தோறும் திருவழிபாட்டில் கலந்து
கொண்டு, * திருக்கட்டத்திலும் அருள்வாக்கிலும் திருப்பணியாளரிடத்திலும்,
சிறப்பாக அப்பம் பிடுதலிலும் கிறிஸ்துவை அடையாளம் கண்டு,
நமது நம்பிக்கையும் அன்பும் வலிவும் பொலிவும் மிக்கதாக
மாற்றுவோமாக.
திருத்தூதர்களில் மூன்று பேருடைய கல்லறைகளின் மீது மட்டும்
பேராலயங்கள் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் அவை
புகழ்பெற்று விளங்குகின்றன.
இத்தாலியின் உரோமை மாநகரில் பேதுரு பேராலயம்
ஸ்பெயினில் கம்பொஸ்டெல்லா மாநகரில் யாக்கோபு பேராலயம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தோமா பேராலயம்.
சென்னை தூய தோமா பேராலயம் இன்று தேசியத் திருத்தலமாகித் திரள்
திரளாகத் திருப்பயணிகளை - சுற்றுலாப் ஆர்வலர்களை ஈர்க்கிறது.
இந்தியத் திருநாட்டின் மீது இயேசு கொண்டிருக்கும் அன்புக்கு
எடுத்துக்காட்டு தூய தோமா. தன் திருத்தூதர்களில் ஒருவரை -
அதுவும் தூய தோமாவை இந்த நாட்டில் நம்பிக்கைத் தீபம் ஏற்ற
அனுப்பினார் எனில், இயேசு நம்நாட்டை எவ்வளவு நேசித்திருக்க
வேண்டும்! தோமாவை நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் பெருமிதத்தால்
விம்மி எழும்.
உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமா
அங்கு இல்லை. இயேசுவின் தழும்புகளைப் பார்த்து "ஆணிகள் இருந்த
இடத்தில் என் விரலை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன் என்றார்.
தோமாவின் ஐயப்பாட்டினை நீக்க இயேசு மீண்டும் தோன்றினார்.
தோமாவை அழைத்து "இதோ என் கைகள். இங்கே உன் விரலை விடு என்று
கூறினார். மகிமையான அந்தக் காயங்கள் தோமாவில் எத்தகைய மாற்றத்தை
உண்டாக்கிச் சரணடைய வைத்தது! நம்பாத தோமாவை நம்ப வைத்தது
இயேசு தன் காயங்களைக் காட்டித்தானே!
இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமார். ஆனால்
உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதும் அவரது நம்பிக்கை உச்சத்தை
அடைந்தது. "நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்றார்.
நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு எவருமே இயேசுவைக் கடவுள்
என்று நேரடியாக அழைத்ததில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச்
சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
கோடி அற்புதர் தூய அந்தோனியாரின் பார்வையில் இயேசுவை
அடையாளப்படுத்தும் தோமாவின் காயங்கள். ஒருநாள் அலகை
இயேசுவின் உருவில் பதுவை அந்தோனியாருக்குத் தோன்றி,
"எதற்கும் ஒருகாலம் உண்டு என்று விவிலியம் சொல்ல வில்லையா?
இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு கடும்தவம் தேவைதானா?
முதிர்ந்த வயதில் அதில் முனைப்பைக் காட்டலாமே!" என்று
சோதித்ததாம். இந்தக்காட்சியின் உண்மைத் தன்மையைச்
சந்தேகித்த அந்தோனியார் கேட்டாராம்: "'நீ உண்மையில் இயேசு
என்றால் உன் கைகளையும் கால்களையும் துளைத்திருக்கும்
காயங்களைக் காட்டு", "நான் விண்ணிலிருந்து வருகிறேன் என்
மகிமையான உடலில்" என்று அலகை சொல்ல, "சாத்தானே, அப்பாலே
போ, வடுக்கள் இல்லாக் கிறிஸ்து, கிறிஸ்து அல்ல என்றாராம்
அந்தோனியார். சவாலைச் சந்திக்கச் சக்தியற்ற பேய்
தலைதெறிக்க ஓடி மறைந்ததாம்.
இயேசுவின் காயங்கள் அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல. நமக்கு
அடைக்கலம் தருபவை. தூய பெர்னார்து சொல்வார்: "நீங்கள்
அவருடைய விலாவில் கையை விட்டால் மட்டும் போதாது நீங்கள்
முழுவதும் நுழைய வேண்டும். அவருடைய விலாவில் உள்ள வாயில்
வழியாக இயேசுவின் திரு இருதயத்துக்குள் தஞ்சம் புக
வேண்டும். அவரது காயங்களில் நாம் புகலிடம் தேடும் போது,
உயிர்த்த இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கைக்கு இன்றைய
வழிபாடு வாக்களிக்கின்ற பரிசுகள் மூன்று .
1. சமாதானம் (அமைதி) உறவின் முறிவு சாவில் வந்து
முடிகிறது. உறவின் முறிவுக்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய
தொடர்பினை நாம் மறைநூலில் காணலாம். விலக்கப்பட்ட கனியை
உண்டதால் இறைவனோடு உறவு முறிந்தது, அதனால் சாவு நுழைந்தது
(தொ.நூல்.2:17) மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
முறிந்ததால் வந்ததும் சாவுதான். அதுதான் முதல் கொலை
(தொ.நூ.4:8). இப்படி உறவுகள் முறிந்தாலேயே இறுதியாகக்
கிறிஸ்து ஏற்றதும் சாவுதான். இயேசுவின் உயிர்ப்பால் புது
உறவு, புது வாழ்வு. அதனால், தான் தோன்றும் போதெல்லாம்
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக என வாழ்த்துகிறார்.
2. ஒப்புரவு (பாவ மன்னிப்பு.) "மன்னிப்பைக் கொடு மன அமைதி
பெறு - இது திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பரின் 1997 உலக
அமைதி நாள் செய்தி. இறைவனோடும் அயலாரோடும் இயற்கையோடும்
என்னோடும் நான் ஒப்புரவாகிற போது அமைதி என்னில்
நிலைபெறும். அமைதி நிலைபெற்றால் ஆனந்தம் என்னைத் தானே
வந்தடையும். அது உயிர்ப்பின் மகிழ்ச்சி.
3. தோழமை (சகோதர அன்பு) ஒப்புரவாகி உறவைப்
புதுப்பிக்கின்றோம். அன்பு என்பது ஒன்றிக்கும் ஆற்றல்
என்கிறார் தூய அக்வினாஸ் தோமா. ஆக, குடும்பத்தில் பங்கில்
சமுதாயத்தில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவும் போது
நாம் உயிர்ப்பின் மக்கள் நேருகிறது ஆகிறோம். கிறிஸ்தவர்களை
"அல்லேலூயா மக்கள்" என்பர், ஒரு தொடக்கக் காலக்
கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே அல்லேலூயா மக்களாகத் தான்
இருந்தார்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் - விவிலியத்தில்
பார்க்கிறோம். அதுவும் உடைமைகளைப் பொதுவாக்கிப் பகிர்ந்து
கொள்ளும் அளவுக்கு (தி.ப.2:44). இதுதான் அல்லேலூயா
கிறிஸ்தவம்.
இன்றைய நற்செய்தியின் இறுதிவாக்கியம் விவிலியத்தின்
தெளிவான நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. "இயேசுவே
இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி
அவர் ஒரு பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை
எழுதப்பட்டன" (யோவான் 20:31). நம்புவதற்காகவும் அதனால்
புதுவாழ்வு பெறுவதற்காகவும், அதாவது
-உயிர்ப்பால் வரும் நம்பிக்கை. நம்பிக்கையின் அடித்தளமே
இயேசுவின் உயிர்ப்புத்தான். "கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்படவில்லை என்றால்... நீங்கள் கொண்டிருக்கும்
நம்பிக்கையும் பொருளற்றதாய் வார்த்தைகளில் மரியா
வெளிப்படுத்தியதும் போராட்டமே! இருக்கும் (1 கொரி.15:14)
- நம்பிக்கையால் வரும் புதுவாழ்வு. தொடக்க கால
திருச்சபையின் வாழ்வுதான் அது. (தி.ப.2:42) பேதுரு
சுட்டிக் காட்டும் புதுப்பிறப்பு (1 பேதுரு 1:3) கிறிஸ்தவ
நம்பிக்கையே இயேசுவின் உயிர்ப்பில் வேரூன்றியது.
- தூய தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது
நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம்.
"இயேசு ஆண்டவர் என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை
உயிர்த்தெழச் செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம்
மீட்படைவோம் (உரோமை 10:9) உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அல்லேலூயா!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
இறை இரக்கத்தின்
ஞாயிறு
இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள்
(பிரச்சாரங்கள்) சூடு பிடித்துள்ளன. கோடை வெயிலின் வெப்பத்தையும்
சேர்த்து, தேர்தல் களம் கொதி நிலையை அடைந்துள்ளது என்று
சொன்னால், அது மிகையல்ல. தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும்,
ஊடகங்களையும், சமுதாய வலைத்தளங்களையும் விளம்பரங்களால்
நிறைத்து வருகின்றன. அண்மையில், தமிழக கட்சியொன்று
வெளியிட்ட விளம்பரம், வேலையில்லாத ஏழை இளையவரை மையப்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் வறியதொரு சூழலில் இருக்கும் தன் வீட்டின் முன்
அமர்ந்து, கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல்
காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திடீரென அந்த இளைஞர், உரத்தக்
குரலில், வீட்டினுள் இருக்கும் தந்தையை அழைக்கிறார். ஆவலுடன்
வெளியே வரும் தந்தையிடம், தன் வங்கிக்கணக்கிலும், தந்தையின்
வங்கிக்கணக்கிலும் பல இலட்சம் ரூபாய் வைப்பு நிதியாக
சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் இளைஞர். அத்துடன்,
தனக்கு வேலையும் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த காட்சியில், அந்த இளைஞர், பரிதாபமான
ஒரு கட்டிலில் புரண்டபடி, 'தனக்கு வேலை கிடைத்துவிட்டது'
என்று தூக்கத்தில் உளறிக்கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
இளைஞரின் தந்தை, அவரை தட்டியெழுப்பி, இப்படி கனவு கண்டு
வாழ்க்கையை வீணாக்கவேண்டாம் என்று எச்சரிக்கை
விடுக்கிறார்.
ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய்
செலுத்தப்படும் என்றும், இளையோருக்கு வேலை வாய்ப்புக்கள்
வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அடுக்கிய அரசியல் கட்சி,
கடந்த பத்தாண்டுகளில் எதுவும் செய்யாமல் இருப்பதை நாம் அறிவோம்.
தேர்தல் வந்ததும், 'வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல்
மணலில் கயிறு திரிப்பதாகவும்' வாக்குறுதிகளை கொடுத்து மக்களை
ஈர்ப்பது, அரசியல் கட்சிகள் பின்பற்றும் பொதுவான ஒரு
யுக்தி.
அரசியல் கட்சியொன்றை நாம் கற்பனை செய்துகொள்வோம். அந்த கட்சியினர்
பின்வருமாறு கூறுவதாகவும் கற்பனை செய்து பார்ப்போம்: "எங்களுடைய
கட்சி ஆட்சிக்கு வந்தால், சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள்
அனைத்தும் நீக்கப்படும். மக்களிடையே உள்ள சொத்துக்கள் அனைத்தும்
பொதுவில் சேர்க்கப்பட்டு, அவரவருக்குத் தேவையான அளவு
பிரித்து கொடுக்கப்படும். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இனி
இராது" என்று அந்த கட்சியின் அறிக்கை கூறினால், அதை, ஒரு
கனவுலகம் என்று நாம் கூறுவோம்.
இத்தகைய கனவுலகம் அன்று எருசலேமில் உருவாக்கப்பட்டிருந்தது.
இயேசுவின் வழியை நம்பினோர் இணைந்து உருவாக்கிய சமுதாயம் எவ்வாறு
இருந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு கூறுகிறது:
திருத்தூதர் பணிகள் 4:32-35
அந்நாள்களில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும்
ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத்
தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய்
இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள்
அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை
அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக்
கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர்
தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இந்த வாசகம் கத்தோலிக்க உலகின் ஆலயங்கள் அனைத்திலும் இந்த
ஞாயிறன்று ஒலிக்கும். இந்த வாசகத்தைக் கேட்கும்போது, உள்ளம்
மகிழ்வால் நிறைவடைகிறது. அதே நேரம் 'இப்படிப்பட்ட ஒரு சமுதாயம்
இருந்திருக்க முடியுமா?' என்ற சந்தேகமும் எழுகிறது. மனித
உள்ளம் மகிழ்வில் நிறையும்போதும், வேதனையில் வீழும்போதும்,
சந்தேகங்கள் எழுகின்றன. தங்கள் தலைவரும், போதகருமான இயேசு
உயிர்த்துவிட்டார் என்ற மிக அற்புதமான செய்தியைக் கேட்டதும்,
சீடர்களில் ஒருவரான தோமா அதை நம்ப மறுத்ததும், அவரது சந்தேகத்தைத்
தீர்க்கும் வண்ணம் இயேசு தோமாவைச் சந்தித்ததும் இன்றைய நற்செய்தியாக
(யோவான் 20:19-31) வழங்கப்பட்டுள்ளது.
இந்த நற்செய்தியை மையப்படுத்தி நாம் சிந்தனைகளை மேற்கொள்ள,
அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்ஸாஸ் (Texas) மாநிலத்தில் நிகழ்ந்த
ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏதென்ஸ் (Athens) என்ற
நகரில் வாடகைக் கார் ஓட்டிவந்தவர் பாட்ரிக் கிரீன்
(Patrick Greene). இவர் இறை நம்பிக்கையற்றவர். தன் இல்லத்தைச்
சுற்றி வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படையாகக்
காட்டும் முயற்சிகளை வன்மையாக எதிர்த்து வந்தார். கிறிஸ்மஸ்
விழாவையொட்டி ஏதென்ஸ் நகரின் நீதி மன்றத்திற்கு வெளியே
குடில் ஒன்று அமைக்கப்பட்டபோது, பாட்ரிக் அவர்கள், சிறு
கூட்டம் ஒன்றைத் திரட்டி, போராட்டம் நடத்தினார். நகராட்சிக்கு
எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இவர் இந்த வழக்கை ஆரம்பித்த ஒருசில வாரங்களில், பாட்ரிக்
அவர்களின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மருத்துவ ஆய்வில்,
இவருக்கு அறுவைச் சிகிச்சை தேவை என்றும், அச்சிகிச்சைக்குப்
பிறகும் கண் பார்வை முற்றிலும் திரும்புமா என்பது உறுதியில்லை
என்றும் சொல்லப்பட்டது. அவரால் வாடகைக் கார் ஓட்ட முடியாமல்
வீட்டில் தங்க வேண்டியதாயிற்று. அவர் தொடுத்திருந்த வழக்கினால்,
வங்கியிலிருந்த அவரது சேமிப்பும் கரையத் துவங்கியது. எனவே,
சில வாரங்களில் அவர் தன் வழக்கை 'வாபஸ்' பெற்றுக்கொண்டு
வீட்டுக்குள்ளேயே அடைபட்டார்.
அவருடைய அயலவர்களில் ஒருவர், ஜெஸிக்கா என்ற பெண். இவர்
பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர். பாட்ரிக் அவர்களின்
உடல்நிலையைப்பற்றி ஜெஸிக்கா கேள்விப்பட்டார். அவர்
தொடுத்திருந்த வழக்கைப் பற்றியும் அவருக்குத் தெரியும். இருப்பினும்,
அவர் பாட்ரிக்கிற்கு உதவ முன்வந்தார். "இறைவன் அன்பை
கிறிஸ்தவர்கள் வழியாக பாட்ரிக் அனுபவித்ததில்லை என்று
நினைக்கிறேன். தன் வழக்குகள் வழியே, அவர் எங்களை ஒரு கன்னத்தில்
அறைந்துள்ளார். மறு கன்னத்தை அவருக்குக் காட்டும் தருணம்
இது" என்று ஜெஸிக்கா அவர்கள், ஒரு நாளிதழுக்கு அளித்த
பேட்டியில் கூறியுள்ளார். பாட்ரிக்கின் உடல் நிலையைப் பற்றி
அவர் தன் கோவிலில் எடுத்துக்கூறினார்.
ஊரே அறிந்த கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரின் மருத்துவச் செலவுக்கு
அக்கோவிலைச் சேர்ந்தவர்கள் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
பாட்ரிக் அந்த நிதியை வாங்க மறுத்தார். தன் அறுவைச்
சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவர்கள்
உறுதி கூறாததால், பாட்ரிக் அறுவைச் சிகிச்சை மீதும் நம்பிக்கையற்று
போனார்.
அவரது மறுப்பையும் பொருட்படுத்தாது, பாப்டிஸ்ட் ஆலய உறுப்பினர்கள்
வேறு எவ்வகையில் அவருக்கு உதவமுடியும் என்று பாட்ரிக்கிடம்
கேட்டனர். தனக்கு எந்த வேலையும் இல்லாததால், தன் இல்லத்திற்குத்
தேவையான பொருட்களை வாங்க ஏதாவது நிதி உதவி செய்யும்படி அவர்களிடம்
கேட்டுக்கொண்டார். அந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் தன் தேவைகளுக்காக
ஒருவேளை பத்து அல்லது 20 டாலர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்
பாட்ரிக். சில நாட்கள் சென்று, பாப்டிஸ்ட் ஆலயத்திலிருந்து
அவருக்கு 400 டாலர்கள் வந்து சேர்ந்தன.
நாட்கள் செல்லச் செல்ல, அவருக்கு இன்னும் அதிக உதவிகள் வந்தன.
அவர் இல்லத்தைச் சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவக் குடும்பங்கள்
அவர் இல்லத்திற்கு வந்து நேரம் செலவழித்தனர், அவருக்காகச்
செபங்கள் செய்தனர். அவர்கள் அன்பில் அவர் தினமும்
மூழ்கினார். கடவுள் மறுப்பு என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டிருந்த
அவரது பெருமையும், ஆணவமும் அடியோடு சரிந்தன. உயிர்ப்புத்
திருவிழாவன்று அவர் ஒரு கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். அச்சபையின்
பணியாளர்களில் ஒருவராக மாற அவர் பயிற்சிகள் மேற்கொண்டார்.
பாட்ரிக் கிரீன் அவர்கள், தன் வாழ்வில், இறைவனைத் தொட்டுணர்ந்தது,
நமக்கெல்லாம் நல்லதொரு பாடம். இறைவனை நேரில் சந்திப்பதோ,
இறை அனுபவத்தை நேரடியாகப் பெறுவதோ நடக்காத காரியம் என்பதால்,
இறைவனை நம்ப மறுத்தவர் பாட்ரிக். இறை நம்பிக்கை கொண்டவர்களை
ஏளனமாகக் கருதினார்; வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களுக்குத்
தன் எதிர்ப்பைத் தெரிவிப்பதில் பெருமைகொண்டார். அவரை இறைவன்
சந்தித்தார். அவர் எதிர்பார்த்த நேரடி அனுபவத்தில் அவரைச்
சந்திக்கவில்லை, மறைமுகமாக, ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தின்
வழியாக இறைவன் அவரைச் சந்தித்தார்.
இறை நம்பிக்கையற்றவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்த
பாட்ரிக், தன் பார்வையை இழக்க ஆரம்பித்தபோது வேறு பல உண்மைகளைக்
காணமுடிந்தது. உடலளவில் பார்வை இழந்து, உள்ளத்தில் பார்வை
பெற்ற பாட்ரிக் போன்றவர்களை மனதில் எண்ணி, இயேசு கூறும்
அழகியச் சொற்களை இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு
கேட்கிறோம்: "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவான்
20:29)
சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப்
பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை, 'இறை இரக்கத்தின்' ஞாயிறு
என்று கொண்டாடுகிறோம். இறை இரக்கம் அல்லது இறைவனின் பேரன்பு
என்ற கதிரவன் எழும்போது, சந்தேக மேகங்கள் கலைந்துவிடும் என்பதை
இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்குவது, இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்பு. இந்த மறையுண்மை இல்லையெனில், கிறிஸ்தவ மறை அர்த்தமில்லாமல்
போய்விடும். (காண்க. 1 கொரிந்தியர் 15:14) நம் கிறிஸ்தவ நம்பிக்கையின்
அடித்தளமான உயிர்த்த கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை இஞ்ஞாயிறன்று
சந்திக்க வந்திருக்கிறோம்.
சென்ற வாரம், எரியும் மெழுகுதிரிகளை ஏந்தி, பாஸ்காப் புகழுரையைப்
பாடி, இயேசுவின் உயிர்ப்பை அறிக்கையிட்டபோது, நமக்குள் ஒரு
நிறைவும் மகிழ்வும் தோன்றியதை உணர்ந்தோம். உயிர்த்த இயேசு
இன்று நமக்கு முன் தோன்றினால், உடனே அவர் திருவடி பணிந்து
நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட எவ்விதத்
தயக்கமும் இருக்காது. முதல் உயிர்ப்புத் திருவிழாவில் இத்தகைய
மகிழ்வு, நிறைவு, உற்சாகம் இருந்ததாகத் தெரியவில்லை. அது
ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். சந்தேகம்...
உயிர்த்த இயேசுவைச் சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும்
அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு... சந்தேகம். இந்த நிகழ்வுகள்
அனைத்தின் சிகரமாக இன்று நாம் நற்செய்தியில் காண்பது, சந்தேகம்
கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.
நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது
எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஒரு கூட்டு உணர்வு; பல
உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில்
கூடவே பயம், கோபம், வருத்தம், நம்பிக்கையின்மை என்ற பல உணர்வுகள்
கூட்டுக் குடித்தனம் செய்யும். தோமா இயேசுவின் உயிர்ப்பைச்
சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், உடனே ஒரு
நீதியிருக்கை மீது அமர்ந்து, "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு
மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட
முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது
தவறு." என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில்
அமர்ந்து தீர்ப்பு எழுதுவது எளிது.
இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம்
விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவப் பாரம்பரியத்தில்
இன்று வாழும் நமக்கே அந்த உயிர்ப்பு குறித்த நம்பிக்கையில்
அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பு
பற்றிய எண்ணங்களில் தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு
முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச்
சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு.
தீர்ப்பிடுவது தவறு.
கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப்
பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய்
மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப்
பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். ஆகவே,
தீர்ப்புகளை வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து
முதலில் எழுந்து வருவோம். குற்றவாளிக் கூண்டில் நாம்
நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச்
சிந்திப்போம். எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில்
வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது.
அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும்
விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள்
இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது
உலகம் என்ற நிலை உருவாகியிருந்த நேரத்தில், அந்த உலகம், ஆணி
வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. எருசலேமில்,
கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும்
நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு அவர்கள் வாழ்வில்
விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன.
யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவரே இயேசுவைக்
காட்டிக்கொடுத்ததால், இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர்
வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது. சிலுவையில் கந்தல்
துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை உடலோடு புதைப்பதற்கு
முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.
நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது
என்ன? உள்ளத்தையும் சிந்தனையையும் இறுகப் பூட்டிவிட்டு, இருளில்
புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத்
தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான்
இயேசு செய்து காட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை
வேரறுக்க வாய் வார்த்தைகள் மட்டும் போதாது, சில வேளைகளில்
ஆங்கிலத்தில் சொல்வதுபோல் 'physical proof', உடலளவு நிரூபணங்கள்
தேவைப்படலாம். இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய
நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையை
நிரூபணமாக அளிப்பதாலும் தோமாவை, நம்பிக்கையற்ற சந்தேகக் கல்லறையிலிருந்து
இயேசு உயிர்ப்பிக்கிறார்.
இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா இல்லையா
என்பது உறுதியாகத் தெரியவில்லை. உடலால் தோமா இயேசுவைத்
தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின்
மூலம் அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த
மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்!
நீரே என் கடவுள்!" (யோவான் 20:28) இயேசுவை, கடவுள் என்று
கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த்
தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக,
இந்திய மண்ணிலும் பறைசாற்றினார் தோமா.
இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது.
அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, அவரது இரக்கத்தை
நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள்
தானாகவே அடங்கும் சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து
உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை
வழியாக இறைவனை மன்றாடுவோம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தை இயேசு
பாபு சிவகங்கை
உயிர்ப்பின் காலம் நம்மை அன்பு,
எதிர்நோக்கு, நம்பிக்கை (1கொரி 14:13) கொண்டு கடவுளின்
உடன் இருப்பை உணர்ந்து கொள்ள தூண்டுதல் தருகிறது. இன்றைய
நற்செய்தி, சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி நடுங்கிக்கொண்டு
இருந்தார்கள். அவர்களின் நிலையை அறிந்து இயேசு சீடர்களுக்கு
தன்னுடைய உடன் இருத்தலை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பொதுவாழ்வில் உடன்
இருந்தவர்கள் சீடர்கள். இயேசுவின் இறப்புக்கு பிறகு
வாழ்கையில் ஏதுவுமில்லை என்று முடிவு செய்து அஞ்சி நடுங்கிய
சீடர்களுக்கு தன் உடன் இருப்பை உணர்த்தி அவர்களை திடப்படுத்துகிறார்.
இவற்றை உணரமால் இருப்பதற்கு காரணம் அவர்களின் நம்பிக்கையற்ற
நிலையும், எதிர்நோக்குப் பற்றி உறுதிபாடு இல்லாத நிலையற்ற
தன்.மையும் ஆகும். இவர்களின் நம்பிக்கையை உறுதிப் படுத்தவே,
தோமாவின் நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால்
நற்செய்தியின் அழத்திற்கு சென்று பாரத்தால் தனிபட்ட
தோமாவின் நம்பிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த சீடர்களின் நம்பிக்கையை
ஆழப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இயேசு சீடர்களை நோக்கி றியது அடையாளங்களையும், அருஞ்செயல்களையும்
கண்டாலன்றி நீங்கள் நம்ப மாட்டடீகள் என நான் உங்களுக்கு
சொல்கிறேன் (யோவா 7:48). தோமாவிடம் இதோ என் கைகள், இங்கே
உன் விரலை இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள் (யோவா
20:28). "நீ என்னை கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர் (யோவா 20:29).
"அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து வாழ்ந்தால் நாம்
அவரின் உடன் இருப்பை உணர்ந்து கொள்வோம் என்பதே உண்மை.
நமது நம்பிக்கை, எதிர்நேர்க்கு ஆகியவற்றை மையமாக வைத்து நம்முடைய
வாழ்வை அமைத்துக் கொள்வோம். கடவுளின் உடன் இருப்பை உணர்வோம்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ