ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

தூய ஆவி ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
   
Sr. Gnanaselvi (india)
பரிசுத்த ஆவியின் அருளை நாடி வந்திருக்கும் உள்ளங்களே
பரிசுத்த ஆவியை பரிசாகப் பெற்றுக் கொள்ள இன்றைய திருப்பலி நம்மை வரவேற்கின்றது. தூய ஆவியை நம் மீது ஊதி ஏவிவிடவும் முன்மொழிகின்றது.

இயேசுவுக்கு மரணத்தோடு வாழ்வு முடிந்த போது....உயிர்ப்பின் வாசல் திறந்தது.... புதிய வாழ்வு பிறந்தது....

தன்னை அனுப்பிய தந்தையிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட கொடைகளைத் தான் அனுப்புகின்ற சீடர்களும் பெற்றுக் கொள்ள ஆவியை ஊதி ஏவி விடுகின்றார்.
ஊதி ஏவிய ஆவியோ...திக்கற்ற, திகைப்புற்ற� சீடர்களுக்கு அச்சம் அகற்றியது...
திசையைக் காட்டியது...
புதுத் தெம்பூட்டியது...
அமைதியை நிறைத்தது.....
பாவங்களை மன்னிக்க அதிகாரம் தந்தது....

அதே தூய ஆவி இதோ இப்போது இந்த திருப்பலியில் நம்மீதும் ஊதப்படுகின்றது.
நம் வாழ்வுக்கு வழிகாட்ட....
நம் சொல்லுக்கு ஒளியூட்ட....
நம் செயலுக்கு அறிவூட்ட....
நம் சிந்தனைக்கு சிறப்பூட்ட....
நம் கடமையை நினவூட்ட....
அதை சிறப்பாகச் செய்ய ஆற்றலூட்ட....
ஆன்மீக வாழ்வுக்கு அழகூட்ட.....

இந்த திருப்பலி வழியாக வலுவூட்டுகிறது.
நமது ஆன்மீக வாழ்வில் பரிசுத்த ஆவியை பரிசாகப் பெற்றுக் கொள்ள நம் இதயத்தை சுத்தமாக்குவோம். அவரின் திருவுளப்படி நடக்க அருள் தரும் திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. பரிசுத்த ஆவியை அனுப்பி தேற்றுகின்ற தெய்வமே!
திருச்சபையின் திருப்பணிகளை ஒளிரச்செய்யவும், புது வலுவுடன் செயல்படவும், கடமைகளை உம் திருவுளப்படி நிறைவேற்றவும் திருப்பீடப் பணியாளர்களுக்கு பரிசுத்த ஆவியை ஏராளமாக அனுப்பி திடப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தூய ஆவியின் கனிகளால் உலகை நிரப்புகின்ற இறைவா!
நீதியையும் நேர்மையையும் வெளிப்படுத்துகின்ற அரசை அமைக்க நாடுகளின் தலைவர்களுக்கு நல்லொளி வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. தூய ஆவியை திருத்தூதர்கள் மேல் ஊதி அனுப்பிய தெய்வமே!
பாவச்சிறையில் இருக்கின்ற மாந்தரை விடுவிக்கும் பணியை ஆற்ற பாவங்களை மன்னிக்க திருத்தூதர்கள் மீது ஊதிய அதே ஆவியை அனுப்பி எங்கள் பங்குத் தந்தையை பராமரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. தூய ஆவியார் வழியாக மாந்தரை மாட்சி பெறச் செய்கின்ற தெய்வமே!
உமது தூய ஆவியார் எங்களுக்கு இருளில் ஒளியை வழங்கவும், வெறுப்பை அன்பாகவும், கவலையை மகிழ்ச்சியாகவும், எல்லாப் பிரச்சனைகளையும் விடுதலையாகவும் மாற்றி நாங்கள் தேடும் மாட்சியை பெற்றுக் கொள்ள எங்களுக்குள் உறைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்
 
ஆவியானவர் நம்மில் உறையட்டும்....

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாள் அவரைப்பாக்க 4 பேரு வந்திருந்தாங்க...! முனிவர்கிட்ட அந்த 4 பேரும், "சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே, அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க..!! அதுக்கு அந்த முனிவர் ":தெரியலயேப்பா" ன்னு ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு..! ஆனாலும் வந்தவங்க விடாம, "என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இது கூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே.!" அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட, "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு..!! சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க..!!

கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி, குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரைதேடி அந்தப் பக்கமா போனது.. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக்கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. .!! அத சாப்பிட்ட அந்தப் புலிக்குட்டிங்களுக்கு சந்தோசம்..!! இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம்...!!

இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப்பத்தி உங்க கருத்து என்ன":ன்னு கேட்டாரு..!! அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் ":இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு":. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு..!!

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு, ":ஏம்பா உன் கருத்து என்னன்னு.?" ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன், ":இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு..!!" ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு..!! இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான்,
":இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு":. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி..!!

கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர், ":ஏம்பா உன் கருத்து என்னன்னு":, அதுக்கு அவன், ":தெரியலயே சாமின்னு":, சொன்னான்..!!
இந்தமுற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி..!!
நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும். தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அநாவசியம்..!! அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்ச மாதிரி பேசுறதும் அநாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்..!!

தெரியாததை தெரியாது என ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை தருபவர்தான் இந்த தூய ஆவி.
நாம் செய்கின்ற செயலை சிறப்பாகச் செய்ய தூய ஆவியை வேண்டி செயல்படும்போது அதன் பலன் பளிச்சென வெளிப்படுவதை கண்டுணர்வோம்.
பரிசுத்த ஆவியின் அருள் வேண்டி எச்செயலையும் செய்தால் நம் மனம் எப்போதும் சுத்தமாக இருக்கும். மனம் நிறைய நல் உணர்வுகளை மட்டுமே சுமக்க ஆவியானவரும் உதவியாவீருப்பார்.

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் !)
மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.
மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
("EACH GIVES WHAT HE HAS")

எவ்வளவு நிதர்சனமான உண்மை....! நம்மிடம் இருப்பதைதான் நம்மால் கொடுக்க முடியும்.
நமக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?
அன்பா - பகையா ?
அமைதியா - வன்முறையா ?
வாழ்வா - சாவா ?
நம் திறமை, பலம்
அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?
இத்தனை காலங்களில் நாம் அடைந்தது என்ன ? செய்தது என்ன?

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். அந்த புத்தியால் இது நல்லது இது கெட்டது என்று செயலின் விளைவை யோசித்து அணுகவேண்டும். அந்த யோசனையை தூண்டிவிடுபவர் தான் தூயஆவி.

எச்செயலைச் செய்தாலும் அதனை முறையோடு செய்யப் பழகுதல் அவசியம். முறை தவறி செய்தால் துன்பம் தான் உண்டாகும். நியாயமான பாதையில் நடப்பவர்கள் எப்போதும் முறை தவறுவதில்லை.

"என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்பது தான் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கடன் என்றால் வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று நாம் அர்த்தம் கொண்டிருக்கிறோம். ஆனால், கடமை என்பது தான் பொருள். எச்செயலையும் ஆர்வத்தோடு இதயப்பூர்வமாகக் குழப்பமின்றி, நன்மையானதைச் செய்வதற்கு துணையாக இருப்பவர் இந்தத் தூய ஆவி. அச்சம், தயக்கம், குழப்பம், துக்கம் நம் உடன்பிறப்பு. மனதில் உண்டாகும் அச்சம், தயக்கம்,, குழப்பம், வீண் எண்ணங்கள் துக்கம் இவைகளை எல்லாம் தூய ஆவியின் துணை கொண்டு விரட்டுவோம். அப்போது வாழ்க்கை லேசாகி விடும். மனம் நிறைய நல் உணர்வுகளை சுமக்கும் போது மனமும் வாழ்க்கையும் லேசாகிவிடும். கோபம் பொறாமை கவலை இவைகளை சுமக்கும் போது மனமும் கனத்துவிடும்.
நம்மிடம் இருப்பதை கொடுக்க மனதுக்குள் நல்லதை நிரப்ப தூய ஆவியே துணையாக வாரும் என மன்றாடுவோம்.

அழகான உணர்வே தூயஆவி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்..
ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.
"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அந்த நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
இந்த அழகான உணர்வைத்தான் உயிர்த்த இயேசுவும் சீடர்கள் மீது ஊதி ஏவினார். "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவைகள் மன்னிக்கப்படா என்றார்."
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது நம் எண்ணங்களே ....
எண்ணங்கள் அழகானால் ....எல்லாம் அழகாகும். அழகான எண்ணங்களுக்கு அழகான வண்ணங்களைத் தீட்ட தூய ஆவியின் கொடையை விடாது கேட்டுக் கொண்டே இருப்போம்.

கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!": என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் : "எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!":

இரண்டாம் மனிதன்: "நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!"

மூன்றாம் மனிதன் : "உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!"

நான்காம் மனுஷி: "உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!"

இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்: "உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!"
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
"மனநிம்மதி, மன நிறைவு, நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?"

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : "நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!
நீங்கள் போகலாம்..!" என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..சிறிது நேரம் கழித்து வருகிறேன்..": என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம் "பத்தாவது" மனிதனா..? இல்லை "பத்தாது" என்கிற மனிதனா..? முடிவு எடுப்போம்..
நல்ல முடிவுகளை எடுக்க மன நிறைவைத் தர வேண்டியதை மட்டுமே பெற்றுக் கொள்ள பரிசு தருபவர் பரிசுத்த ஆவி. இந்த பரிசுத்த ஆவி நம்முள், நம்அருகில், நமக்குள் இருக்கிறார். நாம் எண்ணும் எண்ணங்களே நாம் யார் என நம்மைத் தீர்மானிக்கும்.
நல்ல எண்ணங்களை எண்ண இனிமையான எண்ணங்களுடன்...வாழ தூய ஆவியே துணையாக வாருமே என மன்றாடுவோம்.


திருடன் ஒருவன் இருந்தான். பல முறை திருடி மாட்டிக் கொண்டு சிறை சென்று வருவான். ஒவ்வொரு முறையும் அவன் சிக்கிக் கொள்ளும் போதும் அவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரும் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் அவனுக்காக வாதாட மறுத்து விடுவார். இருந்தாலும் அவன் அவரது கையை காலைப் பிடித்துக் கெஞ்சுவான். அவரும் மனம் இரங்கி, "இனி இந்த மாதிரி செய்தால் உனக்காக வாதாட மாட்டேன் " என்று எச்சரிக்கை செய்து விட்டு அவனுக்காக வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார். இது பலமுறை தொடர்ந்தது. வருடங்கள் ஓடின. இப்படியே திருடன் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் ஒரு பெரிய வழக்கில் சிக்கிக் கொண்டான். அது கொஞ்சம் பெரிய குற்றம். இப்போதும் அவனது வழக்கறிஞர் திறமையாக வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார் என்று நம்பினான். ஆனால் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் இப்போது வழக்கறிஞர் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்று நீதிபதி ஆகிவிட்டார் என்பது. அவனுக்கு மிகுந்த சந்தோஷம்.
தனக்காக வாதாடியவரே இப்போது நீதிபதி . அவர் நினைத்தால், தன் பேரிலுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூட முடியும். இம்முறை, அவன் சும்மா பேருக்கு ஒரு சாதாரண வக்கீலை நியமித்துக் கொண்டு நம்பிக்கையோடு குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றான். நீதிபதி அவன் முகத்தை ஏறிட்டார். ஆஹா, நமக்கு விடுதலைதான். அவனது மனம் குதூகலமாய்த் துள்ளியது.

நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கவனித்துக் கேட்டார். பிறகு அவன் இதுவரை அனுபவித்திராத ஒரு பெரிய தண்டனையை வழங்கினார். அவன், அதை எதிர்பார்க்கவில்லை. துடித்துப் போனான். ஐயா, "எப்போதும் எனக்காகப் பரிந்து பேசும் நீங்களே எனக்கு இப்படி ஒரு தண்டனையை விதித்து விட்டீர்களே " என்று அவரது காலில் விழுந்து கதறினான். நீதிபதி கடுமையாகச் சொன்னார், ":மூடனே,
நான் வழக்குரைஞராக இருக்கும்வரை உன்னை எவ்வளவோ எச்சரித்தேன். தொடர்ந்து உனக்கு சாதகமாக வாதாடி வந்தேன். இப்போது நான் நீதிபதி. உன்னுடைய எல்லாக் குற்றங்களுமே நான் அறிந்திருக்கிறேன். நீ தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இந்தக் கடுமையான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் ".

ஆம்.... இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறவர்தான். ஆனாலும், அவர் நீதிபதியாய் வரும்போது நமக்கான பலன் நம்முடனேயே கூட வரும். நல்ல பலனானாலும்,
கெட்ட பலனானாலும் அனுபவித்தே தீரணும். தப்பவே முடியாது. எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்,
இந்த எச்சரிக்கை மணியை நமது மனதுக்குள் ஓங்கி ஒலிக்கச் செய்பவர் தூய ஆவியே. ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்க முன்வருவோம்.

"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடம் உள்ளது" திருவெளிப்பாடு 22:12 என்று ஆண்டவர் சொல்கின்றார்.

நல்ல பலனை அனுபவிக்க வழிகாட்டும் ஆவியானவரின் ஏவுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ முன்வருவோம். அப்போது நம் செயலுக்கு ஏற்ற கைமாறு மகிழ்ச்சி மிகுந்ததாக அமையும். நடைமுறை செயல்பாடுகளை நம் இறைவன் தூய ஆவியானவர் வழியாக நமக்குக் கற்றுத் தருகிறார்.

ஆவியானவர் நம்மோடு உறையட்டும்!

நம் உடலில் ஏதோ மெழுகுவர்த்தியின் சூடு தெரியாமல் படுகிறது. அதை வலி எனும் உணர்வின் மூலமாய் மூளை தெரியப்படுத்தி, உடனே அதைவிட்டு விலகி தப்பிக்க வைக்கிறது.

சமையல் செய்கையில் அடுப்பை அணைக்காது விட்டதால், அடிப்பிடித்துக் கருகல் வாசனை வருகிறது. மூக்கு அதனை உணர்ந்து ஓடிப்போய் அடுப்பை அணைக்கவைக்கிறது. பெரும் விபத்து தவிர்க்கப்படுகிறது.

தாகம் என்ற உணர்வால் தண்ணீர் பருகி உடல் புத்துணர்வு பெறுகிறது. பசி உணர்வால், உணவு உண்டு பலப்படுகிறது.

இப்படி அழிவுக்கேதுவான உடல் தன்னகத்தே அநேக உணர்வுகளைக் கொண்டிருந்து அவைகளைப் பயன்படுத்தி ஆபத்துகளிலிருந்து தப்பிக்கிறது. அல்லது அவைகளைக் கொண்டு பலன் பெறுகிறது. ஆனால் பரிசுத்தமாக வாழவேண்டிய ஆவியோ, ஆவிக்குரிய உணர்வை இழந்துபோய் அழிவுக்கு நேரே சென்றுகொண்டிருக்கிறது.

நம் இறைவன் நமக்கு போதித்து உணர்த்துகிறவர். உணர்வை ஏற்படுத்தி ஜெபிக்க வைக்கிறவர். துதிக்க, ஆராதிக்க வைக்கிறவர். நற்செய்தி வாசிக்க வைக்கிறவர். நற்செயல் செய்ய வைக்கிறவர்.நற்பண்பில் வளர வைக்கிறவர்.

காலையில் நேரமே எழுந்து, முழங்கால் படியிட்டு தூய ஆவியின் துணையை நாடுவோம். புதிய நாள் முழுவதையும் ஆசிர்வதிக்க செபிப்போம்.

தேவையற்ற மனித சிந்தனை. தேவையற்ற உலக சிந்தனை. அத்தனை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கெடுக்கும் உணர்வற்ற வாழ்க்கை!

ஆவியானவரின் உணர்வு மிகுந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்போம்.

கண்கள் ஆவியானவரின் துணையோடு விழிக்கட்டும்.

கால்கள் ஆவியானவர் காட்டும் திசையில் நடக்கட்டும்.

கரங்கள் ஆவியானவர் ஏவும் செயலை செய்யட்டும்.

சொல் செயல் சிந்தனை ஆவியானவரின் அருளால் நிரம்பி வழியட்டும்.

அன்றாட வாழ்க்கை ஆவியானவரின் அருட்துணையோடு நடத்தப்பட ஒவ்வொரு வைகறை பொழுதையும் வைகறையின் ஒளியாக வரும் தூய ஆவியிடம் ஒப்புக்கொடுப்போம்.

ஒவ்வொரு பொழுதும் பரிசுத்த ஆவியானவருடன் இணைந்து நாம் செயல்படும் போது பரிசுத்தமடைவோம்.

ஆவியானவருக்கு செவிகொடுக்கப் பழகுவோம்... அப்போது அவர் நம்மோடு உறைவார்..

தூய ஆவி நம்மோடு உறையட்டும்.
நிறைஉண்மையை நோக்கி வழி நடத்தட்டும்.
அவர் தரும் அமைதி நமதாகட்டும்.
விடுதலை நம் அனுபவமாகட்டும்..
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்பொழுதே வாரும் இறங்கிவாரும் எங்கள் உள்ளத்திலே.
ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பிடும் எழுந்து ஒளி வீசச் செய்யும்.
என மன்றாடி மனதுக்குள் அவரை உறைய வைப்போம்� நிறைய வைப்போம்.
நம் வாழ்வுக்கு வழிகாட்ட
நம் சொல்லுக்கு ஒளியூட்ட
நம் செயலுக்கு அறிவூட்ட
நம் சிந்தனைக்கு சிறப்பூட்ட
நம் கடமையை நினவூட்ட
அதை சிறப்பாகச் செய்ய ஆற்றலூட்ட
ஆன்மீக வாழ்வுக்கு அழகூட்ட
நமது ஆன்மீக வாழ்வில் பரிசுத்த ஆவியை பரிசாகப் பெற்றுக் கொள்ள நம் இதயத்தை சுத்தமாக்குவோம்.

ஆவியானவர் நம்மில் உறையட்டும்!!!!
 
   திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி 24 05 2026

திருப்பலி முன்னுரை

"உங்களுக்கு துணையாளரை அனுப்புகின்றேன்" என்று இறைவன் தந்த தூய ஆவியைப் பெற்று மகிழ அழைக்கப்ட்டிருக்கும் இறைமக்களை தூய ஆவியாரின் பெருவிழா கொண்டாட்ட மறைநிகழ்வுக்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், தாயை பிரிந்த குழந்தைப் போல தவித்து நின்ற சீடர்களுக்கு வல்லமையின் ஆவியாரை, உற்ற துணையாகும் துணையாளரை இறைவன் அனுப்பினார். சீடர்கள் பல்வேறு அற்புதங்களையும், அதிசயங்களையும் தூய ஆவியின் துணையோடு செய்தனர். தங்களுக்கு ஏற்பட்ட நிந்தைகளையும், பாடுகளையும் தூய ஆவியாரின் துணையோடு கடந்து துணிவுடன் நற்செய்தியை பறைசாற்றினர்.

இன்றைய முதல் வாசகத்தில் பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் அனுபவத்தை சீடர்கள் பெற்றுக் கொண்டதைப் பார்க்கின்றோம். தூய ஆவியாரின் துணையோடு அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர், எனத் திருத்தூதர்கள் நூலில் பார்க்கின்றோம். இதன் மறைபொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அடுக்கு மொழிகளில் பேசுவதும், புரியாத மொழிகளில் பேசுவதுமே தூய ஆவி என்று எண்ணப்பட்டு தாய் திருச்சபையை விட்டு தனிக்குடித்தனம் சென்றவர்கள் ஏராளம். தூய ஆவி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. தூய ஆவியின் வரங்களை பெற்று, அதன் கனிகளை வாழ்க்கையில் பிரதிப்பலிப்பதே சிறப்பு,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று சீடர்களை வாழ்த்துகின்றார். மேலும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும் என்று பாவங்களை மன்னிக்கின்ற ஒப்பற்ற வல்லமையை திருத்தூதர்களுக்கு அருளினார். இதன்வழியாக அறிய வேண்டியது ஒப்புரவு அருட்சாதனம் இறைவனால் நிறுவப்பட்டது, இதனை மனதில் கொள்ள வேண்டும்.

நாமும் அமைதியை ஏற்படுத்தவும், நற்செய்தியை பறைசாற்றவும் தூய ஆவியை துணையாக கேட்போம். பிறர் இழைக்கும் தவறுகனை தாங்கிக் கொள்ளும் போது, குற்றங்களை பொறுத்துக் கொள்ளும் போது, மனிதம் மலர்கின்றது. குற்றங்களை மன்னிக்கும் போது, மறக்கும் போது, புனிதமாகின்றோம். தூய ஆவியானவரிடம் இப்புனிதத்தை வேண்டுவோம்.

மன்றாட்டுகள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள் என திடப்படுத்தியவரே! திருஅவையை வழிநடத்தும் இறைப்பணியாளர்களை தூய ஆவியின் துணையினால் அர்ச்சித்து, உறுதிப்படுத்தி, இறுதிமட்டும் திடமனதுடனே சான்று பகர அருள்தர வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

திருவருட்சாதனங்களின் வழியே தூய ஆவியை பொழிபவரே! திருவருட்சாதன கொண்டாட்டங்கள் வெறும் சடங்காக இரந்து போகாமல், எங்களை நாங்கள் தூய்மையாக்கிக் கொள்ள, அற்புத அரும் மருந்தாக வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

குணமளிக்க தூய ஆவியை தரும் நல்மருத்துவரே! உடல், உள்ள, ஆன்ம நோயினால் வருந்தும் யாவரையும் உம் வல்லமைமிக்க தூய
ஆவியினால் முற்றிலுமாக குணப்படுத்தி உம்சாட்சிகளாக்கிட வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

தேற்றரவளானகிய தூய ஆவியை அருளும் இறைவா! பல்வேறு இழப்புகளினால், இன்னல்களினால், வருந்தும் யாவரையும் உம்தூய ஆவியின் துணையினால் தேற்றி வழிநடத்திடவும், திடம் கொள்ளும் மனநிலையோடு பயணிக்க செய்யவும் வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

வழிநடத்தும் தூய ஆவியாரை தருபவரே எம் இறைவா! எதிர்கால கனவுகளோடு உள்ள எம் இளையவர்களை உம் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தி நேரிய பாதையிலும் சத்தியத்தின் பாதையிலும் அவர்கள் வழிநடந்திட வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி


வெளியேறு துணிவுகொள் - கூவியழை

இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன் உயிர்ப்புக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலிய, வழிபாட்டு, இறையியல், மற்றும் ஆன்மிக வளமை மேன்மையானது. 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (இலத்தீன் மொழியில், 'இவாஞ்சலி கௌதியம்') என்னும் திருத்தூது ஊக்கவுரையில், நற்செய்தி அறிவிப்பாளர்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டும் என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ் (எண். 259), பெந்தகோஸ்தே நிகழ்வை மூன்று சொல்லாடல்களால் எடுத்துரைக்கிறார்: 'வெளியேறுங்கள், துணிவு கொள்ளுங்கள், கூவி அழையுங்கள்.' இச்சொல்லாடல்களின் துணைகொண்டு இந்நாளின் மறையுண்மை குறித்து சிந்திப்போம்.

அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார்.
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் அவசியம்.

அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.

திருத்தூதர்கள் மேலறையில் கூடியிருக்கும்போது அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். தூய ஆவியாரால் நிறைந்த அவர்கள் முதலில் வேறு மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடைய நாக்கு கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மொழி என்ற வேலியிலிருந்து வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறிய அவர்கள் பல மொழிகள் பேசுகின்ற மக்களை எதிர்கொள்கிறார்கள். ஆக, தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட வேலியிலிருந்தும், தங்களுக்கும் பிறருக்கும் இடையே இருந்த வேலியிலிருந்தும் அவர்கள் வெளியேறுகிறார்கள்.

'வெளியே போ!' என்று தூய ஆவியார் என்னை அழைக்கிறார். நான் உடைத்தெறிய வேண்டிய அல்லது தாண்ட வேண்டிய வேலிகள் எவை? எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட வேலிகளாக, அல்லது மற்றவர்கள் எனக்கு இடுகின்ற வேலிகளாக அவை இருக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை, இணக்கத்தை, உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா? எனக்கு அருகில் இருக்கும் குடும்பம், நண்பர்கள், குழுவினரோடும், தூரமாக இருக்கும் நபர்களோடும் நான் கொள்ளும் நெருக்கம் எப்படி இருக்கிறது? மற்றவர்கள் அனைவரும் 'வௌ;வேறு மொழி பேசக் கூடியவர்கள்' என நான் முற்சார்பு எண்ணம் அல்லது அச்சம் கொள்கிறேனா? நான் ஒருவர் மற்றவரோடு உரையாடும்போது தூய ஆவியார் எனக்குக் கற்றுத் தருவதற்கு நான் அனுமதிக்கிறேனா?

ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார் தூய ஆவியார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பர்ரேஸியா' என்னும் கிரேக்கச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். தூய ஆவியார் தருகிற கொடை இது என மொழிகிறார். படைப்புத் திறத் துணிவு என்று நாம் இதை அழைக்கலாம். அதாவது, நம் துணிவின் வழியாக நம் வாழ்வும் மற்றவர்கள் வாழ்வும் மேம்படுகிறது. நாம் விரும்புவதைத் தெளிவாகவும், உறுதியாகவும், கட்டின்மையோடும் சொல்லக் கூடிய ஆற்றலே படைப்புத் திறத் துணிவு. திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, பெந்தகோஸ்தே நாளில் உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரையின் தெளிவு நமக்கு வியப்பு தருகிறது. மீன்பிடிக்கும் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர் தெளிவாகவும், உறுதியாகவும் மறைநூலை மேற்கோள் காட்டிப் பேசுவது தலைமைச்சங்கத்தாருக்கு வியப்பூட்டுகிறது. 'ஆண்டவராகிய இயேசு உயிர்த்து விண்ணேற்றம் அடைந்து கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்' என்பதே கடவுளின் வல்ல செயல். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகரில் உள்ள குழுமத்தார் பெற்றிருக்கிற கொடைகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இக்கொடைகள் அனைத்தும் பொதுநன்மைக்காகவே வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொதுநன்மை என்ன? கடவுளின் வியத்தகு செயல்களைக் குழுமமாக எடுத்துரைப்பது, மாற்று வாழ்வு வாழ்வது.

இன்று நான் துணிவிழந்து நிற்கும் பொழுதுகள் எவை? படைப்புத் திறத் துணிவை நான் பெற என்ன செய்ய வேண்டும்? ஆண்டவர் என் வாழ்வில் எனக்கு ஆற்றிய அரும்பெரும் செயல்களை நான் எடுத்துரைக்கத் தயாராக இருக்கிறேனா? தூய ஆவியார் எனக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்து நான் அக்கறை உள்ளவனாக இருக்கிறேனா? தூய ஆவியாரின் கொடைகளை முன்னிட்டு நான் மற்றவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்த்தால், அந்த மனநிலை விடுக்க நான் தயாராக இருக்கிறேனா?

இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் நலம்.

மூவொரு இறைவனில் அதிகமாக மறக்கப்பட்ட நபர் தூய ஆவியார்தாம். தம் இறுதி இராவுணவில் தூய ஆவியாரைத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற இயேசு, 'தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் ... உங்களை வழிநடத்துவார்' (காண். யோவா 15:26, 16:13) என மொழிகிறார். தூய ஆவியாரைப் பெற்றவுடன் திருத்தூதர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்கள். தூய ஆவியாரின் பணிகளாக மூன்றை வரையறுக்கிறார் இயேசு: துணையாக இருத்தல், உண்மையை வெளிப்படுத்துதல், வழிநடத்துதல். நம் வாழ்வில் நாம் பல நேரங்களில் துணையின்றி நிற்கிறோம். உண்மையைப் பொய்யிலிருந்து பகுத்தாய இயலாமல் நிற்கிறோம். திசை தெரியாமல் நிர்கதியாக நிற்கிறோம். இவ்வேளைகளில் தூய ஆவியாரை நாம் கூவி அழைத்தால் அவர் நமக்குத் துணையாளராக வந்து, உண்மையைத் தெளிவுபடுத்தி, வழிநடத்துகிறார். தூய ஆவியார் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெறுமையே என்கிறார் திருத்தந்தை. தூய ஆவியாரை நாம் அழைக்க வேண்டுமெனில், அவரை அறிந்தவர்களாக நாம் இருக்க வேண்டும். நம் வாழ்வு ஊனியல்பை விடுத்து ஆவிக்குரிய இயல்பை அணிந்திருக்க வேண்டும் (காண். கலா 5:18-24). நற்செய்தி வாசகத்தில் தம் திருத்தூதர்கள்மேல் ஊதுகிற இயேசு தூய ஆவியாரை அவர்களுக்கு அளிக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் பெறுகிறார்கள்.

நான் ஆவியாரைக் கூவி அழைக்கிறேனா? அவருக்கு நான் என் வாழ்வில் தரும் இடம் என்ன? அவரை அழைப்பதன் வழியாக என் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா? என் உள்ளொளியாக அவர் சுடர்விடுவதற்கு நான் அனுமதிக்கிறேனா? வாழ்வின் தெரிவுகள் கடினமாக இருக்கும்போது, பாதைகள் தெளிவு இல்லாமல் இருக்கும்போது அவரின் துணைகொண்டு தெரிவுகளை மேற்கொள்ளவும், தெளிவு பெறவும் தயாராக இருக்கிறேனா? அவர் வழியாகவே நான் கடவுளை அப்பா, தந்தாய் என அழைக்கிறேன் எனில், நான் எப்போதெல்லாம் இறைவேண்டல் செய்கிறேன்? அவரின் நெருப்பு இன்று என் வாழ்வில் தூய்மையாக்க வேண்டிய பகுதிகள் எவை? ஆண்டவரின் ஆவி சாமுவேலை விட்டும், சவுலை விட்டும் அகன்றது போல என்னை விட்டும் அகன்றுவிட்டாரா?
நிற்க.

'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கிறீர்!' (திபா 104) என்று இன்றைய பதிலுரைப்பாடலில் பாடுகிறோம். நம் வாழ்வை தூய ஆவியார் புதுப்பிப்பாராக! 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்கு முயலுவோம்' (கலா 5:25) என்னும் பவுலின் சொற்களை நினைவில்கொள்வோம். பாதுகாப்பு வளையும் மற்றும் வேலிகளை விட்டு வெளியேறுவோம்! இறைவனின் வியத்தகு செயல்களை அறிவிக்கும் துணிவு பெறுவோம்! அவரை அன்றாடம் கூவியழைப்போம்.



 
 அருள்பொழிவும் அனுப்புதலும்

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன.

'தூய ஆவியானவர் திருவிழா' நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது: (1) இவரை எப்படி அழைப்பது? 'தூய ஆவி' என்று அழைப்பதா? அல்லது 'தூய ஆவியார்,' அல்லது 'தூய ஆவியானவர்' என்று அழைப்பதா? (2) 'தந்தை' மற்றும் 'மகன்' என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. 'தூய ஆவியானவர்' உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? (3) 'தந்தை உலகைப் படைத்தார்,' 'மகன் உலகை மீட்டார்,' 'தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்' என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. (4) இன்று 'பெந்தகோஸ்தெ' என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், 'நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' என்று கேட்கிறார்கள். மற்றும் (5) 'அருங்கொடையாளர்கள்' ('கரிஸ்மேடிக்ஸ்') என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:1-10)
இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் 'தூய ஆவி' என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் 'தூய ஆவி' என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

(1) 'ஆண்டவரின் ஆவி.' எபிரேயத்தில் 'ருவா' என்ற வார்த்தையை 'ஆவி' என்று மொழிபெயர்க்கிறோம். இந்த 'ஆவி' தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

(2) 'இயேசுவின் ஆவி.' தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

(3). 'மூவொரு இறைவனில் ஓர் ஆள்.' தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், 'தூய ஆவியானவர்' என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட 'தூய ஆவி' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். 'ஊனியல்பு,' 'ஆவிக்குரிய இயல்பு' என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் 'ஆவிக்குரிய இயல்பு' என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) 'ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.' முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) 'நிபந்தனைக்குட்பட்டவர்.' தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) 'அவர் ஒரு ஆற்றல்.' தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) 'அனைவருக்கும் தூய ஆவி.' திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) 'நிபந்தனைகள் அல்லாதவர்.' ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) 'அவர் ஒரு மனிதர்.' மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவர் வழியாகவே நாம் கடவுளை, 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம்.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

'பெந்தக்கோஸ்து' என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.
மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.
மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.
மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.
தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வெவ்வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'எல்லாம் முடிந்தது!' என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'அருள்கொடைகளும் அவற்றின் பயன்பாடும்' என்று பேசுகிற பவுல், ஆவியாரே அனைத்து அருள்கொடைகளின் ஊற்றாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே உடல் என முன்மொழிகிற பவுல், இந்த உடலை இயக்குகிற ஆன்மாவே தூய ஆவி எனக் குறிப்பிடுகிறார்.

நற்செய்தி வாசகத்தில், உயிர்த்த ஆண்டவர் தம் திருத்தூதர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!' என்கிறார். படைப்பின் தொடக்கத்தில் முதல் மனிதர் மேல் தம் ஆவியை ஊதுகிறார் கடவுள். இங்கே தம் சீடர்களைப் புதிய படைப்பாக்குகிறார் இயேசு.

இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம்.

நம் உடலில் உயிர் குடியிருப்பதை பல நேரங்களில் மறந்துவிடுவதுபோல, தூய ஆவியாரின் இருத்தலையும் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.

இன்றைய நாள் நமக்கு வழங்கும் அழைப்புகள் எவை?

(அ) அருள்பொழிவு

திருமுழுக்கின் வழியாகவும், உறுதிப்பூசுதல் வழியாகவும் நம்மேல் பொழியப்பட்ட ஆவியார் நமக்குத் தந்த அருள்பொழிவை நினைவில் கொண்டு வாழ்வது.

(ஆ) அனுப்புதல்

தங்களுக்குள்ளே பூட்டிக் கிடந்தவர்களை தங்களுக்கு வெளியே அனுப்புகிறார் ஆவியார். நமக்குள்ளே எழும் எண்ணங்கள் பல நேரங்களில் நம்மை சிறைப்படுத்துகின்றன. நமக்கு வெளியே நோக்கி தொடர்ந்து நகர நம்மை அழைக்கிறார் ஆவியார்.

(இ) ஆவியார்

மூவொரு இறைவனில் நாம் அடிக்கடி மறக்கிற ஓர் ஆள் தூய ஆவியார். இந்த ஆவியாரின் துணையை வேண்டி நாம் மன்றாடுவோம். இவரிடம் கேட்கும் அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன. ஏனெனில், இவர் வழியாகவே நாம் கடவுளிடம் பேசுகிறோம்.

இறுதியாக, 'பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்' இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, 'அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்' (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை



தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக 'Joyful News Magazine' என்ற சஞ்சிகையில் வந்த ஒரு நிகழ்வு. நார்வேயைச் சார்ந்த நான்சென் (Nansen 1861- 1930) என்ற ஆய்வாளர், பனி படர்ந்த ஆர்ட்டிக் பகுதியில், மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார். அப்படிப் புறப்படும்பொழுது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு புறாவையும் தன்னோடு கொண்டுசென்றார்.

பல நாள்கள் பயணத்திற்குப் பின்பு, ஆர்ட்டிக் பகுதியை வந்தடைந்த நான்சென், மிகப் பொறுமையாகத் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்திருந்த அந்தப் பகுதியில் இருப்பது இவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், வந்த வேலையை முடிக்காமல் பாதியில் செல்வது நல்லதல்ல என்பதை உணர்ந்த இவர், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இப்படி இவர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டதால், நாள்கள் போனதே தெரியவில்லை; கண்மூடி முழிப்பதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தது இவருக்குத் தெரிந்தது.

இதனால் இவர், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்குத் தான் பத்திரமாகத்தான் இருக்கின்றேன் என்ற செய்தியைச் சொல்ல விரும்பினார். அதனால் இவர் ஒரு காகிதத்தில், தான் மேற்கொண்டு வரும் ஆய்வு, நன்றாகப் போய்க்கொண்டிருப்பது பற்றியும் தான் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் எழுதி, தன்னோடு இருந்த புறாவின் காலில் கட்டி, அதனைத் தன்னுடைய வீட்டாருக்கு அனுப்பி வைத்தார். நான்சென் இருந்த இடத்திற்கும் இவருடைய வீடு இருந்த இடத்திற்கும் இடையே இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள். ஆனாலும், நான்சென் அனுப்பி வைத்த அந்தப் புறா, பாதுகாப்பாக, இவருடைய வீட்டிற்குச் சென்றது. புறாவையும் அதன்காலில் இருந்த காகித்தத்தில் பார்த்த இவருடைய மனைவியும் பிள்ளையும், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

எப்படி ஆய்வாளர் நான்சென் அனுப்பி வைத்த புறாவைக் கண்டதும், அவருடைய குடும்பத்தார், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்ற மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்களோ, அப்படி விண்ணகப் புறாவான, தூய ஆவியார் சீடர்களிடம் வந்ததும், அவர்கள் விண்ணகத்திற்குச் சென்ற இயேசு, தந்தையின் வலப்பக்கத்தில்தான் இருக்கின்றார் என்றும் தங்களுக்குத் துணையாகத் தூய ஆவியார் இருக்கப்போகிறார் என்றும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

ஆம், இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொன்னதுபோன்றே தூய ஆவியார் அவர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியாரின் வருகை சீடர்கள் நடுவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு எத்தகையது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

துணிவைத் தரும் தூய ஆவியார்

யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்ற பிறகு, அவருடைய சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை அடைத்தே வைத்திருந்தார்கள் (யோவா 20: 19). இத்தனைக்கும் உயிர்த்த ஆண்டவரைக் கண்ட மகதலா மரியாவும் (யோவா 20: 18) எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களும் (லூக் 24: 15-16) சீமோன் பேதுருவும் (லூக் 24:34) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி மற்ற சீடர்களிடம் சொன்னபொழுதுகூட, அவர்கள் அதை நம்பாமல், அச்சத்தோடே இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று இரண்டு சொல்லி, தன் கைகளையும் விலாவையும் அவர்களுக்கு காட்டுகின்றார். மட்டுமல்லாமல், அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார்.

'இயேசு சீடர்கள் மேல் ஊதினார்' என்ற சொற்கள், ஆண்டவராகிய கடவுள் 'மண்ணால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொநூ 2: 7) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. மண்ணால் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர் மூச்சை ஊதும் வரையில், அவன் உயிரற்றவனாகத்தான் இருந்தான். எப்பொழுது கடவுள் அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சி ஊதினாரோ, அப்பொழுது அவன் உயிர் உள்ளவன் ஆனான். அதுமாதிரித்தான் இயேசுவின் சீடர்களும். சீடர்கள் தூய ஆவியாரைப் பெறும்வரையிலும் யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்பொழுது அவர்கள் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டார்களோ, அப்பொழுது அவர்கள் துணிவுள்ளவர்களாக மாறி, இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அவ்வாறெனில், இன்றைக்கும் தூய ஆவியார் அச்சத்தோடு இருக்கின்ற நமக்குத் துணிவைத் தருகின்றார் என்பதே உண்மை.

நற்செய்தி அறிவிக்க வல்லமையைத் தரும் தூய ஆவியார்

இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம் பேசுகின்றபொழுது, "தந்தை என்னை அனுப்பியது போல் நானும் உங்களை அனுப்புகிறேன்" என்பார். பின்னர் அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகச் சீடர்களிடம், "தூய ஆவி உங்களிடம் வரும்பொழுது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று.... எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (திப 1:8) என்பார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

தூய ஆவியார் சீடர்கள்மீது வரும்பொழுது, கடவுளின் வல்லமையைப் பெற்றவர்களாய் அவர்கள் இயேசுவுக்குச் சாட்சிகளாய் இருப்பார்கள் என்றால், தூய ஆவியார் சீடர்களுக்கும் நமக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கு வல்லமையைத் தருகின்றார் என்பதுதானே பொருள். ஆம், இயேசுவின் சீடர்கள் தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு, யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தியை அறிவித்தார்கள். இன்று நாம் ஆண்டவரின் நற்செய்தி அறிவித்தால் ஆபத்து வருமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தால், தூய ஆவியார் நற்செய்தியை அறிவிப்பதற்கான வல்லமையைத் தருகின்றார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நாம் நற்செய்தியை அறிவித்தால், இன்னும் சிறப்பாக நற்செய்தியை அறிவிக்கலாம்.

பாவங்களை மன்னிக்கும் அருளைத் தரும் தூய ஆவியார்

உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது தூய ஆவியை ஊதிய பின், எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்" என்கின்றார். அப்படியானால், தூய ஆவியார் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் ஆற்றலையும் சீடர்களுக்குத் தருகின்றார் என்பதுதானே உண்மை.

தூய ஆவியார் வேறு யாருமல்ல, அவர் மற்றொரு துணையாளர் (யோவா 14:16); இயேசுதான் நமக்கு முதல் துணையாளர். இயேசுவுக்கு எப்படி எல்லா அதிகாரமும் இருக்கின்றதோ, அப்படி தூய ஆவியாருக்கும் இருக்கும் (மத் 28: 18). ஆகையால், தூய ஆவியார் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் வல்லமையும் சீடர்களுக்கும் நமக்கும் தருகின்றார். இது மறுக்கமுடியாத உண்மை. எனவே தூய ஆவியாளர் அளிக்கின்ற பாவ மன்னிப்பை, நாம் ஒவ்வொருவரும் வழங்கி, அவர்கள் கடவுள் அளிக்கும் மீட்பினைப் பெற நாம் கருவிகளாக இருந்து செயல்படவேண்டும். ஏனென்றால், பாவ மன்னிப்பால்தான் மீட்பு வரும் (லூக் 1: 76-77).

எனவே, தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம், எல்லா அச்சத்திலிருந்தும் விடுதலை பெற்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்கள் பாவ மன்னிப்பினால் வரும் மீட்பை அடைய, நாம் கருவிகளாக இருந்து செயல்படுவோம்.
சிந்தனை

'கடவுள் மனிதர்களிடம் பல வழிகளில் பேசுகின்றார். அதில் முதன்மையான வழி தூய ஆவியார்' என்பார் ஹென்றி ப்ளாக்கபி என்ற எழுத்தாளர். ஆகையால், கடவுள், தூய ஆவியார் வழியாக நம்மிடம் பேசுகின்றபொழுது, நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து (கலா 5:16), ஆண்டவரின் நற்செய்தியைத் துணிவோடு அறிவித்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை


ஒரு குழந்தை பிறந்துவிட்டால்‌ அன்று அந்தக்‌ குடும்பத்தில்‌ மகிழ்ச்சி. ஒரு குழந்தையின்‌ பிறந்த நாள்‌ மிக ஆடம்பரமாக, மிக மகிழ்ச்சியோடு பெற்றோர்‌, உறவினர்கள்‌ கொண்டாடுகிறார்கள்‌. ஏனெனில்‌ புதுவாழ்வு கிடைத்தது என்பதால்தான்‌.

இன்று நாம்‌ கொண்டாடும்‌ திருவிழா தூய ஆவியின்‌ பெருவிழா, ஆவியானவர்‌ நமக்கு ஆண்டவர்‌ இயேசுவின்‌ விண்ணக ஏற்புக்குப்‌ பிறகு தந்தையால்‌ தரப்பட்ட கொடை... தூய ஆவி பிறந்தார்‌ என்பது அல்ல. மாறாக தூய ஆவியானவரின்‌ வருகையால்‌ திருச்சபையானது பிறப்பெடுத்தது என்பதுதான்‌. இதன்‌ மகிமை. இறை மக்கள்‌ பிறந்தார்கள்‌. ஆவியின்‌ வாழ்வில்‌ திருத்தொண்டர்கள்‌ தொடங்கி, சீடர்கள்‌, ஆதி கிறிஸ்தவர்கள்‌ என்றெல்லாம்‌ திருக்கூட்டமானது பெருகியது என்பதைத் தான்‌ இன்று நினைவுகூர்கின்றோம்‌.

ஆதியிலே தூய ஆவியானவர்‌ காற்றாக, தீப்பிழம்பாக, புறாவாக, ஏன்‌ தண்ணீராக அடையாளம்‌ காட்டப்பட்டுள்ளார்‌. மனித வாழ்வில்‌ ஆவி, காற்று இவை மிக முக்கியம்‌. மூச்சுவிட காற்று, ஆவி இன்றி மனிதனால்‌ வாழ முடியாது. அதேபோலத்தான்‌ மனிதவாழ்வுக்கு காற்று வடிவில்‌ தேவ ஆவி காட்சி தருகிறார்‌. தீ நாவாக மனித வாழ்வுக்குக்‌ காட்சி தருகிறார்‌. மனிதன்‌ பேசவும்‌, போதிக்கவும்‌ நாவு தேவை. இதை ஆவியானவர்‌ வடிவாக காட்சி தருகிறார்‌. மூன்றாவது நெருப்பாகக்‌ காட்சி தருகிறார்‌. நெருப்பானது தண்ணீரைச்‌ சூடாக்கி நீராவியாகி இயக்கும்‌ சக்தி பெறுகிறது. உணவுக்கு ரசி உண்டாக்குகிறது. இதேபோல்தான்‌ மனிதரைச்‌ சுவையுள்ள மனிதராக மாற்றுகிறது. நான்காவதாகப்‌ புறா வடிவில்‌ காட்சி தருகிறது. இதனால்‌ தூய்மை உண்டாக்கி, இருளைப்‌ போக்கும்‌ ஆவியாகக்‌ காட்சி தருகிறார்‌. ஐந்தாவதாக ஆவியானவர்‌ தண்ணீராக அழைக்கப்படுகிறார்‌. யாரேனும்‌ தாகமாக இருந்தால்‌ ஆன்ம தாகத்தைத்‌ தீர்க்க அருளாளராகவும்‌, நம்மைத்‌ தூய்மை ஆக்குபவராகவும்‌ உள்ளார்‌.

ஒரு கொல்லுப்பட்டறை தொழிலாளி ஒரு இரும்புக்‌ கம்பியைத்‌ தீச்சூழையில்‌ வைத்துச்‌ சூடேற்றுகிறார்‌. சூடேற்ற, சூடேற்ற அது நெருப்பாக, சிவப்பாக மாறுகிறது. அதனால்‌ கொல்லன்‌ விரும்பும்‌ சாயலை இந்த இரும்பால்‌ உருவாக்கி விடுகிறார்‌. இதேபோல்தான்‌ நகைகளை உருவாக்கும்‌ தங்கம்‌ செய்யும்‌ பணியாளரும்‌. ஆனால்‌ சூடேற்றிய இருபானது சூடு குறைந்தால்‌ கருப்பாகி, வளைக்க முடியாத நிலைக்கு ஆகிவிடும்‌. இதுபோலத்தான்‌ ஆவியானவரின்‌ செயல்‌.

நாம்‌ ஆவிக்கு நம்மை அர்ப்பணம்‌ ஆக்கிடும்போது நாம்‌ செயல்‌ வீரர்கள்‌ ஆவோம்‌. உறுதியூட்டும்‌ இறைவனால்‌ எதையும்‌ செய்யும்‌ ஆற்றல்‌ உண்டு (பிலி. 4:18) என்பது என்‌ விருதுவாக்கு. ஆம்‌ ஆவியானவரின்‌ துணை கொண்டு செயலாக்கம்‌ பெற முடியும்‌.
கதை

ஒரு வேடன்‌ காட்டில்‌ வேட்டையாடிய பின்‌ காட்டில்‌ கிடைத்த ஒரு முட்டையை எடுத்து வந்து கோழி முட்டையுடன்‌ சேர்த்து கோழியில்‌ அடைகாக்க வைத்தான்‌. 22 நாட்கள்‌ சென்று குஞ்சுகள்‌ வெளி வந்தன. இந்தக்‌ காட்டில்‌ இருந்து வந்த முட்டையில்‌ இருந்தும்‌ குஞ்சு வெளி வந்தது. வளர ஆரம்பித்தவுடன்தான்‌ அது கழுகுக்‌ குஞ்சு என வெளிப்பட்டது. ஆனால்‌ கோழி குஞ்சுகளுடன்‌ உறவாடியதால்‌ கோழிகளின்‌ செயல்களை மட்டும்தான்‌ செய்ய முடிந்தது.

ஒரு நாள்‌ ஒரு பருந்து ஆகாயத்தில்‌ சிறகை விரித்துப்‌ பறப்பதைப்‌ பார்த்து வியந்து நின்றது. ஆனால்‌ கோழிக்‌ குஞ்சோ, தம்பி! நாம்‌ கோழிக்‌ குஞ்சு. தரையில்‌ வாழ்வதுதான்‌ நமது வாழ்வு. ஆகாயத்தில்‌ பறப்பதோ பறவை இனத்தின்‌ அரசனான கழுகு. அவன்‌ போல்‌ உன்னால்‌ பறக்க முடியாது என்றது. ஆனால்‌ கழுகுக்‌ குஞ்சோ ஒவ்வொரு நாளும்‌ தன்‌ இறக்கையை விரித்துப்‌ பறக்க முயற்சித்தது. முதலில்‌ தாவிக்‌ குதிக்கப்‌ பழகியது. இரண்டாவது, வேலி உயரம்‌ தாவ முடிந்தது. பின்‌ மரத்தின்‌ கிளையை எட்ட முடிந்தது. இறுதியாக ஆகாயத்தில்‌ பறந்தது. ஆம்‌ கழுகுக்‌ குஞ்சு கோழிக்‌ குஞ்சோடு இருந்தாலும்‌ தன்னால்‌ முடியும்‌ என சாதித்தது. அதேபோல்தான்‌ அரச குல இறைமக்களாகிய ஆவியானவரின்‌ துணை கொண்டு நாம்‌ ஆகாயம்‌ என்ற விண்ணகம்‌ பறக்க முடியும்‌.

அதற்காக நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌?

நாம் நம்‌ பாவத்திற்காக மகதலா மரியாளைப்போல்‌ மனம்‌ வருந்தி பாவி என்ற உணர்வோடு நம்மைத்‌ தாழ்த்தி இறைவனிடம்‌ வரவேண்டும்‌ (லூக்‌ 7 : 38, 50).
கொர்னேலியுவைப்போல்‌ புனித பவுலைப்போல்‌ செபத்திலும்‌, தபத்திலும்‌ ஈடுபட்டு இடைவிடாது செபிக்க வேண்டும்‌ (தி. ப. 10:44-46).
நமது மனதை கழுகுக்‌ குஞ்சைப்போல்‌ மேல்நோக்கி உயர்த்த வேண்டும்‌. உலகம்‌ அதன்‌ இன்பம்‌, பொருள்‌ இவைகளுக்கு அடிமையாகி இருந்தால்‌ ஆவியானவர்‌ நம்மில்‌ செயலாற்ற முடியாது.
நாம்‌ தாகத்தோடு இருக்க வேண்டும்‌. தாகம்‌ இருந்தால்தான்‌ தண்ணீர்‌ குடிக்க ஆசை வரும்‌. அதேபோல்‌ பாவமின்றி ஆன்ம தாகம்‌ இருந்தால்தான்‌ ஆவியானவரைப்‌ பெற முடியும்‌ (யோவா 7 : 37).
தேவ வார்த்தையை, விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும்‌. தேவவார்த்தையைக்‌ கவனமுடன்‌ கேட்க வேண்டும்‌.
மூப்பர்கள்‌ குருக்கள்‌ கை வைக்க நாம்‌ ஆவியைப்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌ (தி. ப. 8:1 19:0).
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி



உனக்குள்ளே நான்‌ காத்திருப்பேன்‌

இன்று இயேசு அவருடைய சீடர்களுக்குத்‌ தூய ஆவியாரை அளித்த திருநாளைக்‌ கொண்டாடி மகிழ்கின்றோம்‌ [நற்செய்தி]. தூய ஆவியார்‌ என்பவர்‌ யார்‌ என்பதற்கு மூன்று அழகான விளக்கத்தை இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்கு அளிக்கின்றது .

தூய ஆவியார்‌ யார்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்ட திருத்தூதர்‌ பணிகளின்‌ ஆசிரியர்‌ பயன்படுத்தும்‌ முதல்‌ அடையாளம்‌ காற்று [திப 2:2). காற்று உயிருக்கு அடையாளம்‌. உள்ளே போகும்‌ மூச்சு வளியே வர மறந்தால்‌ போச்சு என்பார்கள்‌. ஆக, தூய ஆவியார்‌ என்பவர்‌ நமக்கு உயிர்‌ தருபவர்‌.

இரண்டாவது அடையாளம்‌ நெருப்பு (திப 2:3௮). நெருப்பு தூய்மைக்கு அடையாளம்‌. பொன்னை நெருப்பிலிட்டுப்‌ புடம்‌ போடும்போது அது தூய்மை அடைந்து ஒளிவீசுகின்றது. ஆக, தூயஆவியார்‌ என்பவர்‌ நம்மை தூய்மைப்படுத்துபவர்‌.

மூன்றாவது. அடையாளம்‌ நாக்கு [திப 2:3]. நாக்கு பேச்சுக்கு அடையாளம்‌. செந்தமிழும்‌ நாப்பழக்கம்‌ என்பார்கள்‌. ஆக, நம்மை அழகாகப்‌ பேச வைப்பவர்‌ தூய ஆவியார்‌.

நமக்கு உயிர்தரும்‌ ஆவியாரை, நம்மைத்‌ தூய்மைப்படுத்தும்‌ ஆவியாரை, நம்மை பேசவைக்கும்‌ ஆவியாரை இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவலழிகளார்‌ கூறுவது போல நாம்‌ எல்லாருமே திருமுழுக்கின்‌ வழியாகப்‌ பெற்றிருக்கின்றோம்‌ [! கொரி 12:13].
இன்றைய உலகச்‌ சூழ்நிலை எப்படி இருக்கின்றது?

கதம்ப மாலைக்குள்‌ கட்டுண்டு கிடந்த ரோஜாவுக்கு நேருவின்‌ சட்டைப்‌ பையில்‌ குத்தப்பட்ட ஒற்றை ரோஜாவாய்‌ உலா வர ஆசை. ஒற்றை ரோஜாவாகச்‌ சுதந்தரமாக வாழ ஆசைப்படும்‌ இந்தியர்கள் ஆயிரம்‌! 125 கோழிக்கு மேற்பட்ட மக்கள்‌ கூட்டத்தில்‌ அகப்பட்டு மூச்சுவிடமுழயாமல்‌ திண்டாடும்‌ மனிதர்கள்தான்‌ எத்தனை எத்தனை! மூச்சுக்கூட விட முழயாமல்‌ நடைபிணங்களாய்‌ வாழ்ந்துகொண்டிருப்போரின்‌ சோகக்‌ கதைகள்‌ எண்ணிலடங்காது.

அடுத்து, இன்று எங்கு நோக்கினும்‌ பாவத்தின்‌ வேகம்‌! ஒரு பக்கம்‌ அதிகாரக்‌ கலாச்சாரம்‌ ! மறுபக்கம்‌ ஆயுதக்‌ கலாச்சாரம்‌! பலருடைய மனத்திலே பணத்திற்காகவும்‌, பதவிக்காகவும்‌ எதையும்‌ செய்யலாம்‌ என்ற பாவக்‌ கலாச்சாரம்‌ கொடிகட்டிப்‌ பறக்கின்றது!

அடுத்து, இன்று எத்தனையோ அர்த்தமற்ற பேச்சு வார்த்தைகள்‌. சமாதானப்‌ பேச்சு வார்த்தைகளுக்குப்‌ பிறகு ஒப்பந்தத்தில்‌ கைசயெழுத்திடப்படும்போதே, போருக்கான தேதியும்‌ இரகசியமாகக்‌ குறிக்கப்படுகின்றது. வாய்மையும்‌, தூய்மையும்‌ நிறைந்த உரையாடல்களைக்‌ கேட்பது மிகமிக அரிதாக இருக்கின்றது. மனிதன்‌ மனிதனோடு பேசுவதில்‌ மட்டுமல்ல, மனிதன்‌ இறைவனோ பேசுவதிலும்‌ தடுமாற்றம்‌.
இதோ ஒரு புதுக்கவிதை!

தகப்பன்‌ கோவிலுக்குள்‌ செபித்துக்‌ கொண்டிருந்தார்‌. மகன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து தகப்பன்‌ முன்னால்‌ மண்டியிட்டுச்‌ செபித்தான்‌. அவன்‌ செபித்த முறை தகப்பனுக்குப்‌ பிடிக்கவில்லை. வீட்டுக்கு மகன்‌ வந்ததும்‌, மகனைத்‌ தகப்பன்‌ பார்த்து:

குலக்‌கொழுந்தே ஏன்‌ கோவிலுக்குப்‌ போனாய்‌?
சாமியைக்‌ கும்பிடப்‌ போனாயா?
ஆசாமியைக்‌ கும்பிடப்‌ போனாயா?
வானத்தை ஏன்‌ பார்த்தாய்‌?
இடிந்துவிடும்‌ என்று பார்த்தாயா?
பூமியை ஏன்‌ பார்த்தாய்‌?
விழுங்கிவிடும்‌ என்று பார்த்தாயா?
பக்கத்தில்‌ ஏன்‌ பார்த்தாய்‌?
யாராவது பார்க்கின்றார்களா எனப்‌ பார்த்தாயா?
இறுதியாக ஏன்‌ பீடத்தைப்‌ பார்த்தாய்‌? எனக்‌ கேட்க,
அதற்கு மகன்‌, அதையெல்லாம்‌ நான்‌ பார்த்தேன்‌.
அதை ஏன்‌ நீங்கள்‌ பார்த்தீர்கள்‌? என்றான்‌.

சிந்தனையைச்‌ சிதறவிடாமல்‌ நம்மால்‌ இறைவனோடு பேச முடியவில்லை! இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ என்ன செய்யலாம்‌? அதோ தூய ஆவியார்‌ நம்மை அழைக்கின்றார்‌ ; அவர்‌ நம்மோட பேசுகின்றார்‌: நான்‌ இறைவனின்‌ ஆவி ! என்னால்‌ முடியாதது ஒன்றுமில்லை ! என்னிடம்‌ வா! உன்னை நான்‌ என்‌ வரங்களாலும்‌ [1 கொரி 12:8-10)] கனிகளாலும்‌ [கலா 5:22-23] நிரப்புவேன்‌.

நீ புதிய விடியலுக்குள்‌ நுழைவாய்‌ ; உன்‌ பாவங்கள்‌ கழுவப்பட்டு நீ வெண்பனியிலும்‌ வெண்மையாவாய்‌ ; உன்‌ நா வலிமை பெற்று நீ பெரும்‌ இறைவாக்கினராவாய்‌ ! உன்னில்‌ இறந்தவை அனைத்தும்‌ உயிர்பெற்று எழும்‌. வருவாயா? ... நீ என்னிடம்‌ வரும்‌ வரை உனக்குள்ளே நான்‌ காத்திருப்பேன்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

சொல்லுக சொல்லிற்‌ பயனுடைய சொல்லற்க
சொல்லிற்‌ பயன்ஞலாச்‌ சொல்‌ (குறள்‌ : 200).

பொருள்‌ :

ஏதேனும்‌ ஒன்றைச்‌ சொல்ல விரும்பினால்‌ பயன்‌ மிக்க சொற்களையே கூற வேண்டும்‌. பிறருக்குப்‌ பயன்தராத சொற்களை ஒருபோதும்‌ பேசலாகாது!
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்



திருமணமான ஒருவர்‌ தன்‌ நண்பரிடம்‌, "ஒரு பத்திரிகையால்‌ என்‌ வாழ்வு பாழடைந்து விட்டது" என்றார்‌. "அது என்ன பத்திரிகை?" என்று நண்பர்‌ அவரிடம்‌ கேட்க அவர்‌ கூறினார்‌: "கல்யாணப்‌ பத்திரிகை." வேறொரு கணவர்‌ தன்னுடைய முதல்‌ ஆண்டு திருமண நிறைவு நாளன்று தனது திருமண அழைப்பிதழைத்‌ துருவித்‌ தருவிப்‌ பார்த்தார்‌. அதைக்‌ கண்ட அவருடைய மனைவி அவரிடம்‌, "அதில்‌ என்ன பார்க்கிறீர்கள்‌" என்று கேட்டதற்கு அவர்‌ கூறினார்‌: "நமது திருமண அழைப்பிதழில்‌ நமது திருமணத்தின்‌ "Expiry Date" (காலாவதியாகும்‌ நாள்‌) குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று பார்க்கின்றேன்‌."

பலருடைய தனிவாழ்வும்‌, குடும்ப வாழ்வும்‌, அரசியல்‌ மற்றும்‌ சமூக வாழ்வும்‌ நலிவடைந்து நம்பிக்கை அற்றுத்‌ தோன்றும்‌ அவல நிலையை நாம்‌ காணும்போது இவற்றிற்‌ கெல்லாம்‌ விடிவு காலம்‌ வராதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று மனிதரின்‌ மாபெரும்‌ தேவை வாழ்க்கையில்‌ பிடிப்பு, நாளையதினத்தைப்‌ பற்றிய நம்பிக்கை.

பழைய ஏற்பாட்டில்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில்‌ நம்பிக்கை இழந்த நிலையில்‌ அவர்கள்‌ கூறியது: "எங்கள்‌ எலும்புகள்‌ உலர்ந்து போயின: எங்கள்‌ நம்பிக்கை அற்றுப்‌ போய்விட்டது. நாங்கள்‌ துண்டிக்கப்பட்டோம்‌" (எசே 37:11). அப்போது கடவுள்‌ அவர்களிடம்‌ கூறியது: "என்‌ ஆவியை உங்கள்‌ மீது பொழிவேன்‌. நீங்களும்‌ உயிர்‌ பெறுவீர்கள்‌" (எசே 37:14).

இன்று தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடு கின்றோம்‌. நம்பிக்கையற்ற நமக்குத்‌ தூய ஆவியார்‌ நம்பிக்கையைத்‌ தருகிறார்‌. இன்றைய பதிலுரைப்‌ பாடல்‌ கூறுகிறது: "ஆண்டவரே, உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின்‌ முகத்தைப்‌ புதுப்பிக்கின்றீர்‌" (திப 104:1). கிறிஸ்துவின்‌ விண்ணேற்றம்‌ சீடர்களின்‌ மனதில்‌ ஒரு சூன்யத்தை ஏற்படுத்தியது. கதிகலங்கிப்‌ போயிருந்த சீடர்கள்மீது தூய ஆவியார்‌ பிளவுற்ற நாவுகள்‌ வடிவத்தில்‌ இறங்கிவர, அவர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசி, யூதர்களையும்‌ கிரேக்கர்களையும்‌ வியப்புறச்‌ செய்த மாபெரும்‌ செயலை இன்றைய முதல்‌ வாசகம்‌ எடுத்துரைக்கின்றது (திப 2:1-11).

யூதர்களுக்கு அஞ்சிக்‌ கதவுகளை மூடி வைத்திருந்த சீடர்கள்‌ நடுவே வந்து, அவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்கள்மீது ஊதித்‌ தூய ஆவியைப்‌ பொழிந்து, அவர்களுக்குப்‌ பாவ மன்னிப்பு வழங்கும்‌ வல்லமையை உயிர்த்த ஆண்டவர்‌ கொடுத்ததை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது (யோவா 20:19-23), உயிர்த்த ஆண்டவர்‌ - இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்குத்‌ தோன்றுகிறார்‌; அவர்கள்‌ அடிமனத்திலிருந்து அச்சத்தை அகற்றுகிறார்‌; புத்துயிரையும்‌ புதிய நம்பிக்கையையும்‌ கொடுத்து அவர்களிடம்‌ புதிய பணியை ஒப்படைக்கின்றார்‌.

தூய ஆவியார்‌ யார்‌? தந்தையிடமிருந்தும்‌ மகனிடமிருந்தும்‌ புறப்படுகிறவர்‌; உயிர்‌ அளிப்பவர்‌. கடவுளின்‌ அன்பு தூய ஆவியார்‌ வழியாக நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5). தூய ஆவியார்‌ வழியாகவே நாம்‌ கடவுளை அப்பா தந்தையே எனக்‌ கூப்பிடுகிறோம்‌ (கலா 4:6). எனவே நாம்‌ எத்தகைய சூழ்நிலையிலும்‌ அவநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது.

ஒரு வரலாஜ்யூ ஆசிரியர்‌ "பிரஞ்சு புரட்சியைப்‌" பற்றி ஒரு நூல்‌ வெளியிட. விரும்பி, பல ஆண்டுகளாக அவர்‌ எழுதிய கைப்பிரதிகளைத்‌ தன்‌ நண்பரிடம்‌ கொடுத்து அவரது கருத்தை அறிய விரும்பினார்‌. அந்த நண்பர்‌ அப்பிரதிகளைத்‌ தன்‌ வீட்டில்‌ ஒரு மூலையில்‌ கட்டாக வைத்திருந்தார்‌. அவர்‌ வீட்டின்‌ வேலைக்காரி அப்பிரதிகளைப்‌ பழைய காகிதம்‌ என்று எண்ணி அதை அடுப்பில்‌ போட்டு ளித்துவிட்டாள்‌. இச்செய்தியைக்‌ கேட்ட. வரலாற்று ஆசிரியர்‌ மனமுடைந்து பல நாள்களாக உணவின்றி, உறக்கமின்றித்‌ தவித்தார்‌. கடைசியில்‌ அவர்‌ மீண்டும்‌ பிரஞ்சு புரட்சிபற்றி எழுதி நூலை வெளியிட்டு, உலகப்‌ புகழ்‌ பெற்றார்‌. நம்து வாழ்வு என்ற நூல்‌ எிந்து சாம்பலாகப்‌ போன புத்தகம்‌ போன்று தோன்றலாம்‌. இருப்பினும்‌ அதை மீண்டும்‌ எழுதிப்‌ புதுப்‌ பதிப்பாகப்‌ பொலிவுடன்‌ வெளியிட முடியும்‌. அந்த நம்பிக்கையை நம்முன்‌ வாழும்‌ ஆவியார்‌ நமக்குக்‌ கொடுத்துக்‌ கொண்டே. இருக்கிறார்‌.

ஆனால்‌ சீடர்‌ கதவை அடைத்துக்‌ கொண்டிருந்ததுபோல்‌, தூய ஆவியார்‌ நுழையாத வண்ணம்‌ நமது இதயக்‌ கதவை அடைத்து வைத்திருப்பது தவறாகும்‌ "தூய ஆவியே! துணையாய்‌ வாருமே! இப்ப வாரும்‌! இறங்கி வாரும்‌ ! எங்கள்‌ மத்தியிலே" என்று மன்றாடுவோம்‌. அவர்‌ நிச்சயமாக நமது உள்ளத்தில்‌ வந்து புத்துயிர்‌ அளிப்பார்‌. . தூய ஆவியார்‌ நம்மீது பொழியப்படுவது நமது தனிப்பட்ட நன்மைக்காக மட்டுமல்ல, மாறாக, அது திருச்சபையின்‌ பொது நன்மைக்காகவே என்று இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுல்‌ கூறுகின்றார்‌. "அருள்‌ கொடைகள்‌ பலவகையுண்டு. ஆனால்‌ தூய ஆவியார்‌ ஒருவரே..... பொது நன்மைக்காகவே தூய ஆவியின்‌ செயல்பாடுகள்‌ ஒவ்வொருவரிலும்‌ வெளிப்படுகிறது" (1 கொரி 12: 4,7).

இன்று திருச்சபையில்‌ அருங்கோடைகளின்‌ மோதல்களைக்‌ கண்டு வேதனை அடைய வேண்டியிருக்கிறது. அருங்‌ கொடையாளர்கள்‌ திருச்சபையின்‌ ஒற்றுமையை வளர்ப்பதற்குப்‌ பதிலாகத்‌ திருச்சபையைப்‌ பிளக்கின்றனர்‌. கொரிந்து திருச்சபையில்‌ அருங்கொடைகளின்‌ மோதல்களைக்‌ கண்டு, "அன்பே தலைசிறந்தது" என்று அறுதியிட்டுக்‌ கூறுகின்றார்‌ திருத்தூதர்‌ பவுல்‌.

ஒரு வெள்ளாடு மே" என்று கத்தாமல்‌, "லா, லூ, லே" என்று கத்தியதாம்‌. ஏன்‌ அது அவ்வாறு கத்துகிறது? என்று கேட்டதற்கு, "நான்‌ பரவசப்பேச்சுப்‌ பேசுகிறேன்‌" என்றதாம்‌. ஒருவர்‌ மண்ணோர்‌ மொழியிலும்‌ விண்ணோர்‌ மொழியிலும்‌ பேசினாலும்‌, அவரிடம்‌ அன்பு இல்லை என்றால்‌, அது வெறும்‌ சப்தமேயன்றி வேறொன்றும்‌ இல்லை என்கிறார்‌ புனித பவுல்‌ (1 கொரி 13:1). உயிர்‌ அன்பில்‌ நிலைத்துள்ளது. அன்பில்லாதவரின்‌ உடல்‌ எலும்பு தோலால்‌ போர்த்தப்பட்ட வெற்றுடம்பே என்கிறார்‌ வள்ளுவர்‌.

அன்பின்‌ வழியது உயிர்நிலை அஃதுஇலரர்க்கு
என்புதோல்‌ போர்த்த உடம்பு (குறள்‌ 80).

எனவே, அருங்கொடைகளின்‌ பெயரால்‌ வீண்‌ குழப்பத்தையும்‌ பிரிவினையையும்‌ உருவாக்காமல்‌, அனைத்துக்‌ கொடைகளிலும்‌ தலைசிறந்த கொடையாகிய அன்பைத்‌ தூக்கிப்‌ பிடிப்போம்‌. ஒற்றமையை ஊட்டி வளர்ப்போம்‌. அப்போது உலகின்‌ இறுதி எல்லை வரைக்கும்‌ கிறிஸ்துவுக்குச்‌ சாட்சியம்‌ பகர்வோம்‌!

"தூய ஆவி உங்களிடம்‌ வரும்போது கடவுளது வல்லமையைப்‌ பெற்று... உலகின்‌ கடை எல்லை வரைக்கும்‌ எனக்குச்‌ சட்சிகளாய்‌ இருப்பீர்கள்‌" (திப 1:8).
 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை



உயிர்‌ நாடி தூய ஆவி

ஆண்டவர்‌ இயேசு உயிர்த்தெழுந்து விண்ணேறிச்‌ சென்றதும்‌ மூன்று குட்டிச்‌ சம்மனசுக்கள்‌ ஓடிவந்து "ஆண்டவரே, தந்தையின்‌ திருவுளத்தை ஏற்று உலகில்‌ இறையாட்சியின்‌ சின்னமாகத்‌ திருச்சபையை நிறுவி விட்டு வந்திருக்கிறீரே, யாரிடம்‌ ஒப்படைத்து விட்டு வந்தீர்‌? அந்தத்‌ திருத்தூதர்களிடமா? தலைவன்‌ என்று நீர்‌ நினைத்தவரே, நியமித்தவரே உம்மை "அறியேன்‌" என்று மறுதலித்தார்‌. மற்றவர்களோ கோழைகளாகப்‌ பயந்து ஒடி ஒளிந்து கொண்டார்கள்‌. அவர்களை நம்பினால்‌ திருச்சபை உருப்படுமா? என்றெல்லாம்‌ புலம்பிய போது இயேசு சொன்னாராம்‌: "யாரையும்‌ - எந்தக்‌ கொம்பனையும்‌ நம்பியல்ல. ஆற்றல்மிக்கத்‌ தூய ஆவியை நம்பித்தான்‌. அதோ, புனித ஆவி புறப்பட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌. அவர்‌ பார்த்துக்‌ கொள்வார்‌".
"உனது ஆற்றலாலும்‌ அல்ல, வலிமையாலும்‌ அல்ல. ஆனால்‌ எனது ஆவியாலே ஆகும்‌" - செக்கரியா 4:6.
கிறிஸ்தவனுக்கோ திருச்சபைக்கோ தூய ஆவியே ஆற்றல்‌, சக்கி, இயக்கம்‌!

கத்தோலிக்குத்‌ திருச்சபையின்‌ கடந்தகால வரலாற்றில்‌ அறியாத கடவுளாக (Unk॥0ற G௦0) மறக்கப்பட்ட கடவுளாக (forgotten paraclete) ஆவியானவர்‌ இருந்த காலம்‌ உண்டு. புதிய ஏற்பாட்டில்‌ தூய ஆவிக்கு வலுவான முக்கியத்துவம்‌ இருந்தும்கூட அவர்‌ எப்ப்டி மறக்கப்பட்டார்‌? என்பது புதிரானதுதான்‌. ஆவி என்ற சொல்லே அதற்குக்‌ காரணமாக இருக்குமோ!?"

கடவுள்‌ தந்தை யாக இருக்கிறார்‌ என்ற எண்ணமே உறவுக்கு வழிவகுக்கும்‌. கடவுள்‌ மகனாக" இருக்கிறார்‌ என்று சொல்லும்‌ போதே உறவுக்கு வழிபிறக்கும்‌. கடவுள்‌ ஆவியாக இருக்கிறார்‌ என்றால்‌... ஆவியோடு எப்படி உறவு கொள்வது?

தூய ஆவியைப்‌ புரிந்து கொள்ள ஐந்து அடையாளங்கள்‌ வழியாகத்‌ தன்னை வெளிப்படுத்தினார்‌.

1 பெருங்காற்று : "திடீரென்று கொடுங்காற்று வீசுவது - போன்று ஒர்‌ இரைச்சல்‌. வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள்‌ அமர்ந்திருந்த வீடு முழுவதும்‌ ஒலித்தது. (தி.ப.2:2)

2. தீ நாக்கு : "மேலும்‌ நெருப்புப்‌ போன்ற பிளவுற்ற நாவுகள்‌ ஒவ்வொருவர்‌ மேலும்‌ வந்து அமர்ந்ததை அவர்கள்‌ கண்டார்கள்‌ (தி.ப.2:3)

3. வெண்புறா : "தூய ஆவி புறா வடிவில்‌ தோன்றி அவர்‌ மீது இறங்கியது (லூக்‌.3:22)

4. நீரூற்று : "யாரேனும்‌ தாகமாயிருந்தால்‌ என்னிடம்‌ வரட்டும்‌... பருகட்டும்‌... அவருடைய உள்ளத்திருந்து வாழ்வு தரும்‌ தண்ணீர்‌ ஆறாய்‌ பெருக்கெடுத்து ஒடும்‌... தூய ஆவியைக்‌ குறித்தே அவர்‌ இவ்வாறு சொன்னார்‌ ' (யோவான்‌ 7:39)

5. திரு எண்ணய்‌ : "சாமுவேல்‌ எண்ணெய்‌... எடுத்து அவனைத்‌ திருப்பொழிவு செய்தார்‌. அன்று முதல்‌ ஆண்டவரின்‌ ஆவி தாவீதின்‌ மேல்‌ நிறைவாக இருந்தது. (1 சாமு.16:13)

இந்த ஐந்து அடையாளங்களிலும்‌ இழையோடும்‌ பொதுக்‌ கூறு ஒன்று உண்டு. காற்று வீசுகிறது, தீ எரிகிறது, புறா பறக்கிறது, தண்ணீர்‌ ஓடுகிறது, எண்ணெய்‌ ஊடுருவுகிறது... எல்லாமே இயக்கம்‌, சக்தி, ஆற்றல்‌, வல்லமை.

விவிலியத்தில்‌ தூய ஆவி வல்லமையாகவே சித்தரிக்கப்படு கிறார்‌. இயேசுவின்‌ பிறப்பை முன்னறிவித்த வானதூதர்‌ மரியாவிடம்‌ "தூய ஆவி உம்மீது வரும்‌. உன்னத கடவுளின்‌ வல்லமை உம்மேல்‌ நிழலிடும்‌"" (லூக்‌.1;35) என்றார்‌. பணி வாழ்வைத்‌ தொடங்கிய போது "இயேசு தூய ஆவியின்‌ வல்லமையுடையவராய்க்‌ கலிலேயாவுக்குத்‌ திரும்பிப்‌ போனார்‌" (லூக்‌.4:14) என்கிறார்‌ லூக்கா. கொர்னேலியுவின்‌ இல்லத்தில்‌ பேருரை ஆற்றிய பேதுரு குறிப்பிடுவார்‌: "கடவுள்‌ நாசரேத்து இயேசுவின்‌ மேல்‌ தூய ஆவியின்‌ வல்லமையைப்‌ பொழிந்தருளினார்‌ " (தி.ப.10:38). உயிர்த்த இயேசு தன்‌ சீடர்களுக்குத்‌ தோன்றிச்‌ சொன்னது: "இதோ என்‌ தந்தை வாக்களித்த வல்லமையை நான்‌ உங்களுக்கு அனுப்புகிறேன்‌ " (லூக்‌.24:49). விண்ணேறு முன்‌ "தூய ஆவி உங்களிடம்‌ வரும்போது நீங்கள்‌ கடவுளின்‌ வல்லமையைப்‌ பெற்று... எனக்குச்‌ சாட்சிகளாய்‌ இருப்பீர்கள்‌ ' (தி.ப.1;8) என்று பணித்தார்‌.

தூய ஆவியானவர்‌ விசுவாச அறிக்கையின்‌ ஓர்‌ உண்மையாக மாறுவதற்கு மூன்னரே, தொடக்க காலத்‌ தீராச்சபையில்‌ அனுயவத்தீன்‌ ஓம்‌ உயீருள்ள ஹய்ம்மையாக ஒருந்தார்‌ ' என்கிறார்‌ ஓர்‌ இறையியல்‌ அறிஞர்‌. இந்தக்‌ கூற்று முற்றிலும்‌ உண்மையே. திருத்தூதர்‌ பணிகள்‌ தொடக்க காலத்‌ திருச்சபையின்‌ வரலாறாகும்‌. அது தூய ஆவியின்‌ வரலாறும்‌ கூட, காரணம்‌? பக்கத்துக்குப்‌ பக்கம்‌ தூய ஆவியின்‌ அருளாற்றல்‌ செயல்படுவதைக்‌ காணலாம்‌.

.. திருச்சபைக்கு வாழ்வின்‌ உயிர்‌ நாடி தூய ஆவி. "இதோ இறுதி நாள்களில்‌ நான்‌ மாந்தர்‌ யாவர்‌ மேலும்‌ என்‌ ஆவியைப்‌ பொழிந்து அருள்வேன்‌. அவர்களும்‌ இறைவாக்கு உரைப்பர்‌" (தி.ப.2:17,18) பெந்தகோஸ்து நாளில்‌ பேதுரு ஆற்றிய முதல்‌ மறையுரை இது. திருத்தூதர்‌ பவுலுக்கு நற்செய்திப்‌ பணியின்‌ உயிர்நாடி தூய ஆவி. "நான்‌ பறைசாற்றிய செய்தி ஞானத்தின்‌ கவர்ச்சியான சொற்களில்‌ அமையவில்லை. ஆனால்‌ அது தூய ஆவியின்‌ வல்லமையை எடுத்துக்‌ காட்டுவதாக அமைந்தது. உங்கள்‌ நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானமல்ல. கடவுளின்‌ வல்லமையே" (1 கொரி. 2:4-5). திருத்தூதர்களைத்‌ திடப்படுத்துபவர்‌ மட்டுமல்ல, சிக்கலான நேரங்களில்‌ சரியானத்‌ தீர்வு காண வழிநடத்துபவர்‌ தூய ஆவி. விருத்த சேதனப்‌ பிரச்சனையில்‌ "தூய ஆவியாரும்‌ நாங்களும்‌ தீர்மானித்தோம்‌ " (தி.ப.15:25) என்றார்‌ பேதுரு. சாட்சிய வாழ்வில்‌ இரத்த சாட்சிகளுக்கு வலிமைக்கும்‌ மகிழ்ச்சிக்கும்‌ ஊற்றாக இருந்தார்‌ தூயஆவி. எ.கா.ஸ்தேவான்‌. (தி.ப.7:55)

இவ்வாறு தூய ஆவியின்‌ வல்லமை தொடக்க காலத்‌ திருச்சபையில்‌ நிறைந்திருந்தது. அந்த வல்லமையைத்‌ தம்‌ அருள்கொடைகளால்‌ வளப்படுத்தித்‌ தொடக்க காலத்‌ திருச்சபையின்‌ அனுபவப்‌ பொருளானார்‌ தூய ஆவி. திருமுழுக்கில்‌, சிறப்பாக உறுதிப்‌ பூசுதலில்‌ நாமும்‌ அதே வல்லமையால்‌ நிரப்பப்படுகிறோம்‌.

காது இல்லாமல்‌ கேட்க முடியுமா? நுரையீரல்‌ இல்லாமல்‌ மூச்சு விட இயலுமா? தூய ஆவி இல்லாமல்‌ கிறிஸ்தவம்‌ ஏது? கிறிஸ்தவ வாழ்க்கை ஏது?

 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி



ஒருநாள் கொண்டாட்டம், வாழ்நாள் கொண்டாட்டம்

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு. சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.

எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகையும், அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இவ்விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே இவ்விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இவ்விழாக்களில் முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

'கொண்டாட்டம்' என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மாற்றங்களை உருவாக்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?.. இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.

 
ஞாயிறு மறையுரை அருள்பணி அருள்பணி கிங்ஸ்லி MMI- சென்னை

இன்று திருச்சபையின் பிறந்தநாள்!

பெந்தக்கோஸ்து பெருவிழா (Pentecost Solemnity). இது திருச்சபையின் பிறந்தநாள்! உயிர்த்த ஆண்டவர் வாக்குறுதி அளித்தபடி, தூய ஆவியார் நெருப்பு நாவுகளாகத் திருத்தூதர்கள்மீது இறங்கி வந்ததை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
மறையுரைத் தலைப்பு: "தூய ஆவியார்: திருச்சபையின் உயிர் மூச்சு!"

இன்றைய நற்செய்தியில் (யோவான் 20:19-23) இயேசு சீடர்கள்மீது ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இது ஒரு புதிய படைப்பின் தொடக்கம்.

1. பயத்தைப் போக்கும் வல்லமை (Power over Fear) முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 2:1-11), கதவுகளைப் பூட்டிக்கொண்டு பயந்து போயிருந்த சீடர்கள், தூய ஆவியாரைப் பெற்றவுடன் வீதிக்கு வந்து துணிச்சலோடு நற்செய்தி அறிவிக்கிறார்கள்.
சிந்தனை: தூய ஆவியார் நம்மிடம் வரும்போது, நம் வாழ்வின் பயங்கள் மறைந்து "சாட்சியம் பகிரும்" துணிச்சல் பிறக்கிறது. நாம் முடங்கிக் கிடக்கப் பிறந்தவர்கள் அல்ல, முழங்கப் பிறந்தவர்கள்!
2. பன்முகத்தன்மையில் ஒற்றுமை (Unity in Diversity)
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எருசலேமில் கூடியிருந்தனர். தூய ஆவியார் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே மொழியில் கடவுளின் வியத்தகு செயல்களைப் புரிந்துகொண்டனர்.
விளக்கம்: பாபேல் கோபுரத்தின்போது மனிதன் பிரிந்தான்; பெந்தக்கோஸ்து திருநாளில் தூய ஆவியார் அனைவரையும் இணைக்கிறார். இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 12:3-13) கூறுவது போல, நாம் வெவ்வேறு கொடைகளைக் கொண்டிருந்தாலும், ஒரே உடலாகிய திருச்சபையில் இணைக்கப்பட்டுள்ளோம்.
3. பாவ மன்னிப்பின் அதிகாரம் (The Gift of Forgiveness)
இயேசு தூய ஆவியாரை வழங்கியபோது, "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்" என்கிறார்.
பாடம்: தூய ஆவியார் சமாதானத்தின் ஆவியார். அவர் நம் இதயத்தில் இருக்கும் கசப்புணர்வையும், பகையையும் நீக்கி, பிறரை மன்னிக்கும் ஆற்றலைத் தருகிறார்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்தப் பெந்தக்கோஸ்து திருநாளில் நாம் செய்ய வேண்டியவை:
கொடைகளைக் கண்டறிதல்: தூய ஆவியார் உங்களுக்குத் தந்துள்ள கொடை என்ன? (பாடுதல், போதித்தல், நிர்வாகம் செய்தல், பிறருக்கு உதவுதல்). அதைத் தூசு தட்டி உங்கள் பங்கின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துங்கள்.
அன்பிய ஒருமைப்பாடு: உங்கள் அன்பியத்தில் மொழி, சாதி அல்லது பொருளாதார வேறுபாடுகள் இருந்தால், அதைத் தூய ஆவியாரின் உதவியோடு களைந்து எறியுங்கள். திருச்சபை என்பது ஒரு குடும்பம்.
ஆவியின் கனிகள்: இந்த வாரம் உங்கள் வாழ்வில் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, நன்னயம், நம்பிக்கை, மென்மை, இச்சையடக்கம் ஆகிய ஆவியின் ஒன்பது கனிகளில் ஒன்றை அதிகமாகப் பயிற்சி செய்யுங்கள் (கலாத்தியர் 5:22-23).
செபம்: தினமும் காலையில் "தூய ஆவியாரே வாரும், என் இதயத்தை உமது அன்பின் நெருப்பால் எரியச் செய்யும்" என்று செபியுங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"மின்சாரம் இல்லாத விளக்கு எப்படி ஒளிராதோ, அதுபோலத் தூய ஆவியார் இல்லாத கிறிஸ்தவ வாழ்வு ஒளிராது. அவர் நம் வாழ்வின் ஆற்றல்; நம் பயணத்தின் வழிகாட்டி!"
 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
தூய ஆவி பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:1-11)

திருத்தூதர் பணி, திருத்தூதர்கள் ஆவியானவர் நாளில் தூய ஆவியில் நிரம்பப்பட்டதை தெளிவுற விளக்குகிறது. நற் செய்தியாளர் லூக்காவின் திருத்தூதர் பணி திருத்தூதர்களின் மேல் ஆவியானவர் பொழியும் நிகழ்வை மையப்படுத்ததாது, இந்த நிகழ்வினால், திருத்தூதர்கள் எவ்வாறு திருச்சபையில் பணிகளை உலகத்தின் கைகளிலை வைக்கும் பரப்பினார்கள் என்பதை சிறப்பிக்கிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலில் மக்கள் ஆவியானவர் மக்கள்மீது பொழியப்படுகின்ற நாளுக்காகக் காத்திருந்தனர். அது இன்று நிறைவேறுகிறது.

ஆவியானவர் கிறிஸ்துவின் வார்த்தையால் இவ்வலகை ஒரு புதுபடைப்பாக மாற்றுகிறார். அன்று சீனாய் மலையில் கடவுள் நெருப்பின் வழியில் மக்களுக்குத் தோன்றினார். பத்துக் கட்டளைகளை மோயிசனுக்கு கொடுத்தார். இன்று தூய ஆவி நெருப்பு நாக்கு வழியில் புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறார். எனவேதான் திருத்தூதர்கள் பலவேறு மொழிகளில் பேசினாலும், மக்கள் தம்மம் மொழிகளில் பூரித்து கொள்கிறார்கள். இவ்வாறு மொழியாலும், இனத்தாலும், பலவேறு வேறுபாடுகளாலும் பிரிந்திருந்த மனித குலத்தைக் கடவுள் தூய ஆவியின் வழியாக ஒன்று சேர்க்கிறார். இந்த ஆவியானவரின் பெருவிழாவில்தான் சீடர்கள் உயிர்ப்பு பெருவிழாவின் மிகிழ்ச்சியை முழுமையாகப் பெறுகிறார்கள்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 12:3ஆ-7)

கொரிந்து நகர கிறிஸ்தவர்களுக்கு இந்தப் பலவேறு பிரச்சனைகளில் ஒன்று தூய ஆவியின் கொடைகளை பற்றியது. கொரிந்து மக்கள் தம்மிடம் ஆன்மிக கொடைகள் இருப்பதாக உணர்ந்தனர். எனவே பலவுலடிகள் அவர்களுக்குக் கொடையை சோதனைக்கு உட்படுத்துகிறார். யாராவது கிறிஸ்துவ விசவாசத் திற்கு சான்று பகரவில்லையென்றாலும், திருச்சபையில் பணிக்காக தங்களுக்கு கொடைகளை பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழிநடத்தவுதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றிருக்கும் ஆவியானவரின் கொடைகள் கிறிஸ்தவ சமுதூயத்த ஒன்றிய சமுதமாக மாற்ற வேண்டும்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 20:19-28)

கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவும், தூய ஆவியின் வருகையும் பெருவிழாவும் நமக்குப் பேருண்மை ஒன்றை தெளிவாப்படுத்துகின்றன. கிறிஸ்துவே உயிர்த்த ஆண்டவர் என்பதை நமக்கு இப்பேருண்மை விளக்குகிறது. கிறிஸ்து தந்தையாய் கடவுளின் வெளிப்பாடு.

இதை தந்தை என்னை அனுப்புவது போல நாங்களும் உங்களை அனுப்புகிறோம், தூய ஆவியைப் பெற்று கொள்ளுங்கள் என்ற வார்த்தையின் மூலம் விளக்குகிறார். தந்தையாய் கடவுள் தூய ஆவியை அனுப்புவதன் வழியாக இயேக தனது மகன் என்பதை உறுதிப்படுத்துகிறார். அந்த ஆவியானவர்தான் அங்கு இயேகவின் சீடர்களை ஒன்றுபடுத்தினார். பதிய திருச்சபையாக அவர்களை உருவாக்கினார்.
மறையுரை:-

ஆவியானவர் நாளன்று சீடர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள். ஆவியானவர் என்றால் ஜம்பதம் நாள் என்று பொருள். ஆவியானவர் நான்கு பாஸ்கா காலம் நிறைவு அடைகிறது. பழைய ஏற்பாட்டில் பெந்தெகோஸ்தே திருவிழாவானது அறுவடையில் விளைந்த முதல் கனியைக் கடவுளுக்கு நன்றியாக ஒப்பக் கொடுத்தார்கள். இந்தத் திருவிழவில் அனைத்து இஸ்ரயேல் மக்களும் எருசலேம் கோவிலில் ஒன்றுகூடிச் சிறப்பு செய்தார்கள். சீனாய் மலையில் கடவுள் கொடுத்த பத்தாக்கட்டளைகளை இத்திருவிழா நினைவு கூறுகிறது.

இயேகவின் காலத்தில், இயேகவின் உயிர்ப்பிற்கு பின், ஏற்குறைய 120 சீடர்கள் ஒன்ராகக் கூடினார்கள். அவர்கள் செபத்திலும், இயேகவின் போதனைகளை நினைவு கூர்ந்தும், அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி விவாதித்தும் வந்தார்கள். பெர்தேகோஸ்து நாளில் ஆவியானவர் அவர்கள்மீது அக்னி நாக்கு வடிவில் இறங்கி வந்தார்.

அன்று தூய நாளாக இருந்ததால், தெருமுழுதும் நிறைய மக்கள் இருந்தார்கள். தூய ஆவியை பெற்ற சீடர்கள், இயேசுவே ஆண்டவர் என்று போதித்தார்கள். அங்கிருந்த மக்கள் ஒவ்வொருவரும் தம் மொழியில் கேட்டார்கள்.

தூய ஆவியானவர் தம் அருளினால் மக்களின் இதயங்களையும், காதுகளையும் தொட்டார். எனவே ஏற்குறைய 3000 மக்கள் கிறிஸ்தவர்களாக வாழத் திருமுழுக்கு பெற்றார்கள். இவர்கள் அனைவரும் ஆலியின் அருளினால் அறுவடையில் விளைந்த முத்தர்க்கிகள். இவ்வாறு பதிய கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவின் அருளால் பதுபிற்படைந்த பதிய உடன்படிக்கையின் மக்கள்.
**ஆவியானவர் நாளின் ஆவியானவர்**

ஆவியானவர் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வந்திருக்கிறார். மக்கள் அனைவரையும் வழிநடத்தி வழிநடத்தினார். மனிதர்களுக்குக் கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தியும், வாழ்வின் மறைபொருளை விளக்கியும், இறைவாக்குகளை இறைவாக்கினர் வழியாக எடுத்துரைத்தும் வழிநடத்தினார். பதிய ஏற்பாட்டில் அந்த ஆவியானவர் தூய திருமுழுக்கு போவாவின சக்தி வாய்ந்த இறைவார்ததை வெளிப்படுத்தவும் காரணமாக இருந்தார்.

இயேசு திருமுழுக்கு பெறும் போதும், மக்கள் பணியில் ஈடுபடும் போதும் தீவிரமாகச் செயல்பட்டார். இயேசுகிறிஸ்து ஆவியின் வல்லமையால் முழுமையாக நிரம்பப்பட்ட போதனையும் பதுமகளையும் பரிந்திடும் இறுதியில் சிலுவையில் இறை திட்டத்தை நிறைவேற்றவும் மன உறுதியை அவருக்குக் கொடுத்தார்.

பெத்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் முதல்முறையாக, இயேசுவை பின்பற்றிய அனைத்து சீடர்களையும் முழுமையாக ஆட்கொண்டு, சீடர்களுக்கு இயேசுவை பற்றி அறிவிக்க மனதிடனைத் தருகிறார். இன்று தான் இயேசுவின் உடலான திருச்சபை பிறந்தது. எனவே இன்று திருச்சபையின் பிறந்தநாள். இன்று நாம் ஒவ்வொருவரும் பிறந்தநாள் வாழ்த்து செல்வத்தில் தப்பு எதுவுமில்லை. பெத்தேகோஸ்தே நாளில் சீடர்கள் தங்களை பணினை முன்முறையாக முழுமையாகப் பரிந்து கொள்கிறார்கள். பணி தெளியை பெற்றவர்கள் ஒற்றைமயின் உறைவிடமாக அமைகிறார்கள்.
1. ஆவியானவர் ஒற்றுமையின் பாலம்

பழைய ஏற்பாட்டில் தொ.நூ.11:4-இல் கடவுளுக்கு இறையாகத் தம் பெயரை நினைவாட்ட முற்பட்டபோது மொழி குழப்பம் ஏற்பட்டது. பாபேல் கோபுரம் அகங்காரத்தால் மனிதன் பிறிந்ததை சட்டிக்காட்டுகிறது. மக்கள் உலகம் முழுவதும் சிதறுக்கப்பட்டார்கள். சிதறுண்டு போன மக்கள் தூய தூய தூய ஆவியின் வரையையால் மொழிகுழப்பம் நீங்கித் தம்மம் மொழியில் புரிந்து கொள்கின்றனர் (தி.ப. 2:6-8).

தூய ஆவியில் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையைத் தூய ஆவி தம் அருட்பொழிவால் தெளிவாக்குகின்றார். எனவே சீடர்களிடம் இரங்கிவரும் தூய ஆவியினவரின் பொழிவு நம் ஒவ்வொருவரையும் ஒற்றுமையின் பாலமாகச் செயலாற்ற அழைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையின் பாலமாகச் செயல்படுகிறோமா?
2. வீரர்களை உருவாக்கிய நான்

தூய ஆவியின் வரையக்கு முன்னாள், சீடர்கள் கோழையாகவும், உயிருக்கு அச்சி பயந்து ஒழியவாக்காகவும் இருந்தனர். சமய, அரசியல் தலைவர்களுக்கும், ஏன் அரண்மனை பணிப்பெண்களுக்கும் கூடப் பயந்தனர். இயேசுகை மறுதலித்தனர். இயேசுகை காட்டி கொடுத்தனர். தப்பி ஒடினர். தூய ஆவியானவரோ கோழைகளை வீரர்களாக, பாமரார்களை மீட்பின் செய்திக்குச் சாட்சிகளாக (தி.ப. 2:24-32), உயிர் பணயம் வைத்துச் சிறை செல்ல, துணிவு பெறும் மனிதர்களாக மாற்றுகின்றார்.

அச்சத்துடன் இருந்த அவர்கள், மாடிமேல் நின்று கொண்டு, நீங்கள் தான் இயேசுகை சிலுவையில் அறைந்து கொன்றீர்கள் (தி.ப. 2:23) என்று முழக்கமிட்டனர். ஆவியால் நிரம்பிய ஒவ்வொருவரும் இதைப் பணியைச் செய்ய அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கை தர, வாழ்வு தந்து வாழ்வை மேம்படுத்த, பயம் நீக்கி வாழ்வின் பாதை காண, மாற்று மதிப்பீடுகளைத் தரச் சிறப்பு அழைப்பைத் தூய ஆவியின் பணியில் செயல்பட நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். இன்று நாம் நம்மையே மதிப்பீடு செய்வோம். கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க நாம் நம்மையே மாற்றிடுவோம். கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க நாம் வீரர்களாக இருக்கின்றோமா? அந்தியை சுட்டுக்காட்ட, வன்முறையை வெறுத்து ஒதுக்க, என்ன செய்யப்போகிறோம்?
3. வாழ்வளிக்கும் ஆவியானவர்

எசக்கியேல் இறைவாக்கினர் வாபிலாகக் கடவுளின் ஆவி உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரளிக்க கூடியவர் என்று விளக்கப்படுகிறது (எசே 33:10). எஸ்ரா, நெகேமியா புத்தகங்களுக்கும் இறந்து போன நாட்டை, கடவுளின் ஆவி புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது என விளக்குகின்றன. அந்த வாழ்விற்குக்கூடிய ஆவியானவர் அன்று திருத்தாதர்களின் மேலும் இறங்கி வந்தார். பயத்தினால் இறந்தவர்களை, உயிர்க்கொடுத்து உற்சாகம் மூட்டினார். புதுவாழ்வு கொடுத்தார். அந்த ஆவியானவரத்தான் நாமும் திருமுழுக்கினபோதும், உறுதிபூசுதலும் பெற்ற திடமடைகிறோம். எனவே நமது வாழ்வு ஆவிக்குரிய வாழ்வாக இருக்கிறதா? கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி நாம் உயிருடன் இருக்கிறோமா?
4. ஆவியானவர் நம்மைப் பொது நன்மைக்கு அமைத்துச் செல்பவர்

பணிகளைப் பொறுத்தமட்டில் தூய ஆவியானவர் தரும் கொடைகளின் செயல்பாட்டில் வேறுபட்டிருந்தாலும் எல்லாமே இயல்பிலே ஒரே தன்மையைக் கொண்டவர்கள். ஆவியின் கொடையை பெற்ற பலர் இறைவாக்கு பணியாளராக,தொண்டாற்றும் உள்ளம் கொண்டவராக, கற்று கொடுப்பவராக, ஊக்மூட்டுபவராக, பிறருக்கு தாராளமாக வழங்கும் உயர்ந்த மனம் கொண்டவராக, தலைமை பொறுப்பேற்று செயல்படும் தலைவராக, இரக்க செயலை முகமலர்ச்சியுடன் செய்யக் கூடியவராக, செயல்பட வேண்டும் (உரோ 12: 6-8).

திருமுழுக்கு என்றும் அருட்சாதனம் வழியாகப் பெற்ற தூய ஆவியானவரில், பணிவேற்றுமை என்பது தூய ஆவியின் கொடையே, ஆனால் இயல்பில் அனைவரும் சமமானவர், எனவே எல்லோரும் அவர்வர் தூய ஆவியிடம் பெற்றுகொண்ட கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். பேதுரு கோர்னேலியலின் வீட்டில் பிற இனத்தவர்மீதும் தூய ஆவி பொழியப்பட்டதை கண்டபோது, தூய ஆவியின் முன் அனைவரும் சமம் என்பதை கற்றுக்கொண்டார் (தி.ப. 10:34,35).

தூய ஆவியைப் பெற்றுள்ள நாம், நமது கொடைகள் அனைத்தையும் பொது நன்மைக்காக நம்மிடம் (1கொரி. 12:7) கொடுக்கப்பட்டுள்ளது எனப் பவுல் தம் திருமுகத்தில் தெளிவுபடுத்துகிறார்.
5. வாழ்வுக்கு

நாம் கிறிஸ்துவின் ஆவியால் திருமுழுக்கு பெற்றிருந்தோமென்றால், நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கிறோமா? தூய ஆவியின் வலிமையை நம்மிடம் நாம் உணர்கிறோமா? அவர் செயல்பட நம்மை அப்பணிக்கிறோமா? இன்று நாம் யாராக வாழ்கிறோமா? சீடர்களை போலவா அல்லது சீட்களின் செய்தியைக் கேட்டு மனமாறிய கூட்டத்தைப் போலவா அல்லது சீட்களின் செய்தியைக் கேட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்ற மற்ற கூட்டத்தைப் போலவா? சிந்திப்போம். ஆவியானவரை பெற்ற நாம், புதுவாழ்வு பெறுகிறோம்! பொதுநன்மைக்காக நம்மையே அப்பணிப்போம்! ஒற்றுமையாகப் பாடுபடுவோம், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் வீரர்களாக வாழ்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்

பெந்தகோஸ்தே பெருவிழா சீனாய் மலையில் இறைவன் கட்டளைகளைத் தந்ததன் ஆண்டு நினைவுப் பெருவிழா! அதே நாளில் தூய ஆவி சீடர் மேல் இறங்கி வருவது, நாம் 'புதிய இஸ்ரயேல்' எனப் புரிந்து கொள்ள இவ்வழி நம்மை அழைக்கிறது.

திருச்சபையில் மூலம் தூய ஆவியானவர்! அவரே அதன் இயக்கு சக்தி. நம்மிடமிருந்து கொண்டு அவர் திருச்சபையைச் சிறப்பிக்கிறார். ஆகவே ஆவியின் கனிகளால் (கலா. 5:19-21) நாம் நிரப்பப்பட்டுபோது திருச்சபையை நாம் வலுப்படுத்துகின்றோம்.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
தூய ஆவியார்‌ பெருவிழா
திப 21-11 1 கொரி 12:3-7, 12-13 யோவா 20:19-23

இன்று தாயாம்‌ திருஅவை மீட்பின்‌ வரலாற்றில்‌ மிக முக்கியமான திருவிழாவைக்‌ கொண்டாடுகின்றது. கராய ஆவியார்‌ திருத்தூதர்கள்‌ மீதும்‌, சீடர்கள்‌ மீதும்‌ பொழியப்பட்ட உன்னதமான நிகழ்வை இன்று நினைவு கூர்கன்றோம்‌. எனவே, இன்றைய இறைவார்த்தைகள்‌ அனைத்தும்‌ தூய ஆவியாரைப்‌ பற்றியே அமைந்துள்ளன. நற்செய்தி, ஆண்டவர்‌ இயேசு தாம்‌ உயிர்த்த பிறகு சீடர்களுக்கு அமைதி என வாழ்த்தியதோடு அவர்கள்மீது ஊதி தூய ஆவியை அளித்ததை விவரிக்கின்றது. இன்று நமது சிந்தனைக்கு முதல்‌ வாசகத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இறைவாக்கு நமக்கு தருகின்ற செய்திகளை கண்டறிய முயல்வோம்‌.

திருத்தூதர்‌ பணி நூலின்‌ இரண்டாம்‌ அதிகாரத்தின்‌ ஒன்று முதல்‌ பதின்மூன்றாம்‌ வசனம்‌ வரையிலான பகுதியை இருபெரும்‌ பிரிவுகளாகப்‌ பிரிக்கலாம்.


1. தூய ஆவியாரின்‌ வருகை (வச.1-4).
2. கூடியிருந்தோரின்‌ எண்ணங்கள்‌ (வச. 5-13).
1. தூய ஆவியாரின்‌ வருகை (வச.1-4)

பெந்தகோஸ்தே விழாவைப்‌ பற்றிய ஆதி குறிப்புகள்‌ லேவி 23:15-22 இல்‌ ஏற்கெனவே காணக்கிடன்றன. தூய ஆவியின்‌ வருகையைப்‌ பற்றி லூக்கா விவரிக்கின்றபோது அது நடந்த சூழலை முதலில்‌ தருகின்றார்‌. இது மக்கள்‌ பெருந்திரளாக கூடி வருகின்ற நாளில்‌ நிகழ்கின்றது. உலகின்‌ பல்வேறு திக்குகளிலிருந்து மக்கள்‌ அங்குவந்து கூடியதால்‌, தூய ஆவி இறங்கிவந்த... இந்த முக்கியமான செய்தி உலகின்‌ பல திசைகளுக்கு எளிதாய்‌ சென்றடையக்‌ கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப்‌ பெந்தகோஸ்தே திருவிழா இஸ்ரயேல்‌ வரலாற்றில்‌ மோசே வழியாக திருச்சட்டம்‌ வழங்கப்பட்டதையும்‌ நினைவுகூறும்‌ நானாகவும்‌ இருந்தது. எனவே, அன்று பழைய ஏற்பாட்டின்‌ இறைபயக்களாக அல்லது இறை சமூகமாக அவர்கள்‌ ஒன்றிணைக்கப்பட்டனர்‌.

புதிய ஏற்பாட்டில்‌ நிகழும்‌ இந்த ஆவியார்‌ பொழியப்பட்ட நிகழ்வில்‌ இயேசுவை நம்புவோரின்‌ இறை சமூகம்‌ ஒன்றிணைக்கப்‌ பட்டு உருவாக்கப்படுகின்றது.

தூய ஆவியாரின்‌ வருகையைப்‌ பற்றி குறிப்பிடும்போது புனித லூக்கா இரு வெளி அடையாளங்களின்‌ மூலம்‌ அதை விவரிக்கின்றார்‌.

1. கொடுங்காற்று வீசுவது போன்று ஒர்‌ இரைச்சல்‌.
2. நெருப்புப்‌ போன்ற பிறவுற்ற நாவுகள்‌. இவை இரண்டின்‌ பின்‌ பல கருத்துக்கள்‌ உள்ளன. அவற்றை அறிய முயல்வோம்‌.
1. கொடுங்காற்றின்‌ இரைச்சல்‌

காற்று மற்றும்‌ அதன்‌ ஓசை ஆகியவை இறை செயல்‌ பாட்டின்‌ அடையாளங்களாக விவிலியத்தில்‌ பல இடங்களில்‌ காணக்கிடக்கின்றன (காண்‌. திவெ6]; திபா 135:7; நீமொ 30:4; யோவா 3:8). மேலும்‌ இறைவாக்கர்‌ உயிர்‌ மூச்சுக்கு இறைவாக்‌ குரைத்து உலர்ந்த எலும்புகளை உயிர்பெற்றெழச்‌ செய்ய பணிக்கப்படுகின்றார்‌ (எசே 37:9).

காற்றும்‌ இறை வருகைக்கு தயாரிக்கும்‌ ஒன்றாக, இறை உடனிருப்பை பறைசாற்றும்‌ ஒன்றாக பார்க்கப்படுகின்றது (காண்‌! அர 1911-12). சுழற்காற்றும்‌, புயல்காற்றும்‌ (நாகூம்‌ 1:3) அவரது வழிகளாக காணப்பட்டன. எனவே, பெருங்காற்று இறைவன்‌ பெரும்‌ ஆற்றலோடு வரலாற்றில்‌ செயல்படுவதன்‌ அடையாளமாய்‌ திகழ்னெறது.
2. நெருப்பு யோன்ற பிறவுற்ற நாவுகள்‌

பழைய, புதிய ஏற்பாடுகளில்‌ நெருப்பும்‌, தீப்பிழம்பும்‌ இறைவனின்‌ அடையாளங்களாக வெளிப்பாடுகளாக இருந்துள்‌ ளன (காண் எசே 1:4-13; எசா 6:7, லூத்‌ 3:16; 12:49). மேலும்‌ இந்த நெருப்பு பிளவுற்ற நாவுகள்‌ போல இருந்தன என லூக்கா குறிப்பிடுகின்றார்‌.

நாவு பேச்சை குறித்து காட்டுகின்றது. இங்கு இது நற்செய்தி அறிவிக்கப்படுவதை குறிக்கும்‌. எனவேதான்‌ நாவு போன்ற நெருப்பாய்‌ வந்த தூய ஆவியை பெற்றுக்கொண்ட திருத்தூதர்‌ பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கன்றதை காண்கின்றோம்‌ (காண்‌.திப 2:14-36).

மேலும்‌, நாவு மொழியையும்‌ குறிக்கும்‌. பாபேவின்‌ நாவு பல்வேறு மொழிகளாக பிளவுபட்டுபோனது. இங்கு தூய ஆவி யாகிய நெருப்பு நாவு பல மொழியினரையும்‌ ஒரே நற்செய்தியால்‌ இணைக்கின்றது.

மேலும்‌ பழைய ஏற்பாட்டின்‌ ஆண்டவரின்‌ ஆவி ஒருவர்‌ மீது வந்து இறங்குகின்றபோது, அதுஎதற்காக அனுப்பப்பட்டதோ அதுவரை அது அவரோடு தங்கியிருந்தது. ஆனால்‌ இங்கு திருத்தூதர்கள்‌ மற்றும்‌ சீடர்கள்‌ மீது பொழியப்பட்ட ஆவி அவர்களோடு என்றும்‌, அவர்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ தங்கி யிருந்தது. திருமுழுக்கு மற்றும்‌ உறுதிப்பூசுதல்‌ வழியாக நாம்‌ பெறுகின்ற தூயஆவியார்நம்மோடுளந்நாளும்‌ உடனிருக்கின்றார்‌.
1. ஆவி அருளப்பட்டதின்‌ உடனடி விளைவுகள்‌

தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டவர்கள்‌ தூய, விண்ணக, அருளால்‌ நிறைக்கப்பட்டனர்‌. அவர்களுக்கு துணிச்சலும்‌, நம்பிக்கையும்‌ வந்தது. துன்பங்களும்‌, பயங்களும்‌ மறைந்து போயின. தூய ஆவியின்‌ தரண்கெலால்‌ அவர்கள்‌ பேசத்‌ தொடங்னெர்‌. ஆண்டவரின்‌ புகழை பாடத்‌ தொடங்கினர்‌. 77 ஆம்‌ வசனம்‌ இன்னும்‌ குறிப்பாக அவர்களின்‌ மொழிகளில்‌ கடவுளின்‌ மாபெரும்‌ செயல்களை பேசினர்‌. அதாவது அவர்கள்‌ கடவுள்‌ மீட்பின்‌ வரலாற்றில்‌ செய்த அரும்பெரும்‌ செயல்களைப்‌ பற்றி பேசியிருக்க வேண்டம்‌ (காண்‌. இச 3412; திபா 66:3). இன்னும்‌ குறிப்பாக இறைவன்‌ இயேசு வழியாக நிகழ்த்திய வல்ல செயல்கனைப்பற்றி பேசியிருக்கலாம்‌ (காண்‌. மத்‌ 11:20-23; 13:54-58) அல்லது தூய ஆவி பொழியப்பட்ட நிகழ்வின்‌ காரணத்தையும்‌, அர்த்தத்தையும்‌ பேசியிருக்கலாம்‌.

இங்கு குறிப்பாக அவர்கள்‌ அயல்‌ மொழியில்‌ பேசியதாகக்‌ குறிப்பிடப்படுகின்றது. இது ஏதோ அங்கொன்றும்‌, இங்கொன்றுமாக அயல்மொழி வார்த்தைகளை உச்சரிப்பது அல்ல. மாறாக, முழுமையான ஒருவர்‌ தன்‌ தாய்மொழியில்‌ அழமான விஷயங்களை பேசுவதுபோல இயல்பாய்‌, சாதாரண மாம்‌ ஆவியின்‌ வழிநடத்துதலோடு பேசினர்‌. இவ்வாறு ஆவி யானவர்‌ பல்மொழி பேசிய மக்கள்‌ திரளை ஒன்றுபடுத்துகின்றார்‌.
2. கூடியிருந்தோரின்‌ எண்ணங்கள்‌ (வச 5-13)

எருசலேமில்‌ கூடியிருந்த இறைப்பற்றுள்ள யூதர்கள்‌ (இவர்கள்‌ இரு வகையினர்‌: யூதர்கள்‌, யூதம்‌ தழுவியர்கள்‌) மற்ற நாட்டு இன மக்கள்‌ இந்த நிகழ்வுக்கு தங்களின்‌ பதிலிருப்பை, தங்களின்‌ உள்ளக்‌ கிடக்கையை வெளிப்படுத்துகன்றனர்‌. அவர்‌ களின்‌ கண்ணோட்டத்தின்படி இது ஒரு புதுமை. கலிலேயர்கள்‌ இயல்பிலே கல்லாதவர்கள்‌, பிற மொழிகளை கஊற்றுத்தேறும்‌ அற்றல்‌ இல்லாதவர்கள்‌ அல்லது அந்த வசதி வாய்க்கப்படாத வர்கள்‌. இவர்கள்‌ இத்தனை இன மக்களின்‌ மொழிகளில்‌ பேசுவது என்பது, ஆண்டவரின்‌ வல்ல செயல்களை ஒவ்வொருவரும்‌ புரிந்து கொள்ளும்படி எடுத்துச்‌ சொல்வது என்பது, அவர்களுக்கு ஓர்‌ அற்புதமாக, புதுமையாகப்பட்டடது. அவர்கள்‌ குழம்பிப்‌ போனார்கள்‌. திக்குமுக்காடிப்‌ போனார்கள்‌.

இத்தகைய ஆற்றலும்‌, சக்தியும்‌ கொண்ட இதயங்களை, இனெங்களை ஒன்றாய்‌ பிணைக்கின்ற ஆவியானவர்‌ நம்‌ எல்லோருக்கும்‌ அருளப்பட்டிருக்கின்றார்‌. புனித பவுடையார்‌ கூறுவதுபோல அருள்‌ கொடைகள்‌ பலவைகை உண்டு. ஆனால்‌ தூய ஆவியார்‌ ஒருவரே (1 கொரி 12:4).

அகவே, இந்த ஆவி இணைக்கும்‌ ஆவி. இந்த ஆவியை பெற்றுக்கொண்ட நாம்‌ இணைக்கும்‌ கருவிகளாக, இணக்கத்திற்கு உழைக்கன்றவர்களாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌ பவுலடியார்‌ மீண்டும்‌ கூறுவாா்‌:

நாம்‌ எல்லாரும்‌ ஒரே தூய ஆவியால்‌ ஒரே உடலாய்‌ இருக்கும்படி திருமுழுக்குப்‌ பெற்றோம்‌. அந்த ஒரே ஆவியையே பானமாகவும்‌ பெற்றோம்‌ (1 கொரி 12:13). அந்த ஆவி தருகின்ற அருள்‌ வளங்களை, கொடைகளை பொது நன்மைக்காக சிறப்பாக இதயங்களின்‌, சமூகத்தின்‌, திருஅவையின்‌ இணக்கத்திற்காக பயன்‌ படுத்துவோம்‌.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.


தூய ஆவியார்‌ பெருவிழா
முதல் வாசகம் திப 2:1-11

தனது மீட்புப்‌ பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து, மாட்சிமையுடன்‌ விண்ணோக்கிச்‌ சென்று, தான்‌ ஏற்கனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம்‌ தூய ஆவியானவரை அனுப்புகிறார்‌. ஆவியானவரின்‌ தனிப்பட்ட ஆற்றலை நிறைவாகப்‌ பெற்று, பல மொழிகளில்‌ பேசி, திருச்சபையின்‌ அகில உலகத்‌ தன்மையை திருத்தூதர்கள்‌ அன்று வெளிப்படுத்தினார்கள்‌.
நன்றி விழா

யூதர்கள்‌ மூன்று பெரும்‌ விழாக்களைக்‌ கொண்டாடினர்‌. அவை பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து விழா, கூடாரத்‌ திருவிழா. பெந்தகோஸ்து என்பதற்கு ஐம்பதாவது நாள்‌ என்று பொருள்‌. அதாவது செங்கடலைக்‌ கடந்து பாஸ்கா விழா முடித்த ஐம்பதாவது நாள்‌. இந்த பெந்தகோஸ்து நாளில்‌ தூய ஆவியார்‌ ஏன்‌ தன்னை வெளிப்படுத்தி திருத்தூதர்கள்‌ மீது வந்து, திருச்சபையைத்‌ துவக்கிவைக்க வேண்டும்‌?

பெந்தகோஸ்து திருநாள்‌ அறுவடை விழா என்றும்‌, முதற்கனிகள்‌ விழா என்றும்‌ அழைக்கப்பட்டது (விப 23 : 16; எண்‌ 28 : 26). அறுவடை காலத்தின்‌ இறுதியில்‌, தாங்கள்‌ பெற்ற அறுவடைக்காக நன்றியின்‌ நாளாகவே இந்நாள்‌ தொடக்கத்தில்‌ கொண்டாடப்பட்டது. அன்று யூதர்கள்‌ புதுப்‌ பலனுக்குரிய காணிக்கைகளை இறைவனுக்குப்‌ பலியாக்கினார்கள்‌ (லேலி.23:15-17). இவ்வாறு பாஸ்கா விழாவில்‌ தொடங்கிய அறுவடையும்‌ அதையொட்டிய நன்றி உணர்வும்‌ பெந்தகோஸ்து விழாவில்‌ நன்றிப்‌ பலியோடு நிறைவுற்றது. இத்தகைய ஒரு நன்றித்‌ திருநாளின்போது இறைவன்‌ தன்‌ ஆற்றலையும்‌ கொடைகளையும்‌ தந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி, திருச்சபையை நிறுவியது மிகப்‌ பொருத்தமே.

பெந்தகோஸ்து பற்றிய இன்னொரு யூத மரபும்‌ உண்டு. இறைவன்‌ தங்களோடு சீனாய்‌ மலையில்‌ உடன்படிக்கை செய்து, சட்டத்தை அளித்த நாளின்‌ ஆண்டு விழாவாகவும்‌ பெந்தகோஸ்து திருநாள்‌ கொண்டாடப்‌ பட்டது. உடன்படிக்கை செய்த நாள்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ வாழ்க்கையில்‌ ஒரு பெருநாள்‌... தங்களைக்‌ கடவுளின்‌ மக்களாக ஏற்படுத்திய நாள்‌ அது. அதே திருநாளில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்து ஒரு புதிய இனத்தை, அதாவது திருச்சபையை ஏற்படுத்தியது சாலப்‌ பொருத்தமே.
புது உலகக்‌ தோற்ற விழா

பெந்தகோஸ்து நாளில்‌ தூய ஆவியானவர்‌ வந்த நிகழ்ச்சியை லூக்கா வருணிக்கும்போது, பழைய ஏற்பாட்டில்‌ சீனாய்‌ மலையில்‌ இறைவன்‌ இறங்கி வந்து, உடன்படிக்கை செய்துகொண்ட நிகழ்ச்சியைப்‌ பின்னணியாகக்‌ கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (விப 19:16-19). சீனாய்‌ நிகழ்ச்சியில்‌ கார்மேகம்‌, பேரிடி, மின்னல்‌, எக்காள ஒலி, நெருப்பு ஆகிய அறிகுறிகள்‌ யாவே கடவுளின்‌ பிரசன்னத்தைக்‌ குறித்தன. அதே போலத்தான்‌, தூய ஆவியார்‌ வருகையின்போது பெருங்காற்று இரைச்சலிட்டு வருகின்றது; நெருப்பு நாவுகள்‌ தோன்றுகின்றன.

சீனாய்‌ உடன்படிக்கை வழியாக இஸ்ரயேல்‌ மக்கள்‌, அரச குருத்துவத்‌ திருக்கூட்டமாகவும்‌, தூய மக்களாகவும்‌ மாறி ஒரு புது யுகத்தினுள்‌ நுழைந்தனர்‌ (விப 19:6). அதேபோல, தூய ஆவியாரின்‌ கொடையால்‌ திருச்சபை, தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, அரச குருத்துவத்‌ , திருக்கூட்டமாக, பரிசுத்த குலமாக, இறைவனுக்குச்‌ சொந்தமான மக்களாக உருவாகிறது (1 பேது 29). மீண்டும்‌ ஒரு புதுயுகம்‌ பிறக்கிறது.

தூய ஆவியாரைப்‌ பெற்ற திருத்தூதர்களும்‌ சீடர்களும்‌ அயல்‌ மொழிகளில்‌ பேசி அனைவரின்‌ கவனத்தையும்‌ கவர்ந்ததாக நாம்‌ வாசிக்கிறோம்‌ (திப 2:4-13). அயல்மொழிகளில்‌ பேசியது ஆவியாரின்‌ ஆற்றலுக்கு ஓர்‌ அடையாளமே. இறையரசு உலகமெங்கும்‌ பரவ இருக்கிறது ; நற்செய்தி நான்கு திசைகளையும்‌ எட்டும்‌ ; பல இனங்கள்‌, பல மொழிகள்‌ பேசும்‌ மக்கள்‌ அனைவருமே இறையாசில்‌ ஒன்றிப்பார்கள்‌. இயேசு கிறிஸ்து என்ற ஒரே மீட்பரின்‌ கீழ்‌ செயல்படுவார்கள்‌ என்பதற்கு ஒரு அடையாளமே அயல்மொழிகளில்‌ பேசி அனைவரும்‌ புரிந்துகொள்ளும்‌ செயல்‌.

ஆவியானவர்‌ அருளியபடி அயல்மொழிகளில்‌ பேசத்‌ தொடங்கினர்‌ (திப 2:4).
இரண்டாம் வாசகம் 12: 3-7,12-13

பவுலடியார்‌ எழுதிய திருமுகங்களுள்‌ அவர்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகம்‌ ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அது திருச்சபை என்ற அமைப்புப்‌ பற்றிய கருத்துரைகளைக்‌ கொண்டது. திருச்சபையில்‌ நிலவ வேண்டிய ஒற்றுமைபற்றி பவுலடியார்‌ ஆழ்ந்த இறையியலை அதில்‌ தருகிறார்‌. தான்‌ வாழ்ந்த காலத்தில்‌ குறிப்பாக, கொரிந்து சபையில்‌ எற்பட்டிருந்த பிரிவுகளே பவுலடியாருக்கு இவ்வாறு எழுதத்‌ தூண்டியிருக்கலாம்‌ (கொரி 110-16). இயேசு கிறிஸ்துவின்‌ தொடர்ச்சி யாகவே விளங்கும்‌ திருச்சபை, அது தலத்திருச்சபையானாலும்‌, பிளவுபட்டிருக்க முடியாது. ஏனெனில்‌ அதன்‌ தலையாகிய இயேசுகிறிஸ்து பிளவுபட்டவர்‌ அல்லர்‌.
வரங்கள்‌ பல, ஆவியார்‌ ஒருவரே..

தூய ஆவியாரின்‌ ஆற்றல்‌ மகத்தானது. திருச்சபை வாழ்வின்‌ அடிப்படை துய ஆவியானவரே. ஆகவேதான்‌ புனித பவுலடியார்‌ தூய ஆவியின்‌ ஏவுதலாலன்றி இயேசு ஆண்டவர்‌ என்று யாரும்‌ சொல்லமுடியாது (1கொரி.12:3) என்கிறார்‌.

திருச்சபையில்‌ நாம்‌ விசுவசிக்கும்‌ ஆண்டவர்‌ ஒருவரே. அவரது ஆற்றலாகி திருச்சபையில்‌ செயல்படும்‌ தூய ஆவியானவரும்‌ ஒருவரே. ஆனால்‌ ஆவியாரின்‌ வரங்கள்‌ பல தரப்பட்டவை. பல்வேறு மக்களில்‌ பல்வேறு விதமாக ஆவியானவர்‌ தன்‌ வரங்களைப்‌ பொழிகின்றார்‌. உதாரணமாக ஞானம்‌ நிறைந்த பேச்சு ஒரு வரம்‌, அறிவாற்றல்‌ இன்னொரு வரம்‌, ஆழ்ந்த விசுவாசம்‌, நோய்களைக்‌ குணமாக்குதல்‌, இறைவாக்கு உரைத்தல்‌, பரவசப்‌ பேச்சு பேசுதல்‌, ஆவிகைளைத்‌ தேர்ந்து தெளிதல்‌ போன்ற வரங்களும்‌, தேவைக்கேற்ப தூய ஆவியாரால்‌ வெவ்வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட சபையில்‌ வெவ்வேறு வரங்கள்‌ செயல்படுவது அந்தச்‌ சபையின்‌ வளர்ச்சிக்கும்‌ முழுமைக்கும்‌ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரங்களை வழங்கும்‌ ஆவியானவர்‌ எவ்வாறு ஒருவராக இருக்கிறாரோ, அதேபோல இந்த வரங்களைப்‌ பெறும்‌ சபையினரும்‌ ஒருமித்துச்‌ செயல்படவேண்டும்‌. இவ்வாறு ஒருமித்த செயல்பாடே சபைக்குச்‌ சான்று தரும்‌. எந்த ஒரு தனி வரமும்‌ தனி மனிதனின்‌ பெருமைக்காக அன்று.
ஆவியாரில்‌ அனைவரும்‌ ஒன்‌றே

திருச்சபையில்‌ நிலவ வேண்டிய ஒற்றுமையைப்‌ பற்றியும்‌, ஆவியாரின்‌ வரங்கள்‌ தனிநபரின்‌ பெருமை என்ற பீடத்திற்குப்‌ பலியாகக்‌ கூடாது எனவும்‌ வலியுறுத்திய பவுலடியார்‌, இக்கருத்தை மீண்டும்‌ வலியுறுத்த ஒர்‌ உவமையைத்‌ தருகிறார்‌. உடல்‌ ஒன்று, உறுப்புகள்‌ பல; உடலின்‌ உறுப்புகள்‌ பல வகையாயினும்‌ ஒரே உடலாய்‌ உள்ளன; கிறிஸ்துவும்‌ அவ்வாறே என்க. (கொரி 1212).

கிறிஸ்துவின்‌ உடலே திருச்சபை. உடலில்‌ பல. உறுப்புகள்‌ உள்ளதுபோல திருச்சபையிலும்‌ பல்வேறு உறுப்புகள்‌ உள்ளன. பல உறுப்புகள்‌ சேர்ந்துதான்‌ உடல்‌ அமைகிறது. பல உறுப்பினர்கள்‌ சேர்ந்தே திருச்சபையும்‌ உருவாகிறது. அவ்வாறெனில்‌, பிளவுபட்ட திருச்சபை ஒரு முரண்பாடாகிறது. தன்‌ பூத உடலோடு தொடர்ந்து இயேசு கிறிஸ்து வாழவில்லை. ஆனால்‌ திருச்சபை என்ற உடலிலே அவர்‌ உறுதியாக தொடர்ந்து வாழ்கிறார்‌. பவுலடியார்‌ காலத்தில்‌ திருச்சபையில்‌ இருந்த பெரும்‌ இனங்கள்‌ இரண்டு : யூதர்கள்‌, பிறவினத்தார்‌ அல்லது கிரேக்கர்‌. காலாகாலமாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌ யூதர்கள்‌; புதிதாக அழைக்கப்பட்டவர்கள்‌ பிறவினத்தார்‌. இவர்களுக்குள்‌ எந்த வேற்றுமையும்‌ இருத்தலாகாது என்று அடிக்கடி வலியுறுத்துகிறார்‌ பவுலடியார்‌ (எபே 4:4-6, கலாத்‌ 3:28; கொலோ 3:11).

இனி யூதரென்றும்‌ கிரேக்கரென்றும்‌ இல்லை; அடிமையென்றும்‌ உரிமைக்‌ குடிமகனென்றும்‌ இல்லை; ஆணென்றும்‌ பெண்ணென்றும்‌ வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள்‌ யாவரும்‌ ஒன்றாய்‌ இருக்கிறீர்கள்‌ கலாத்‌ 3:28).

ஆம்‌; இயேசு கிறிஸ்து நமக்கு அளித்துள்ள அடிப்படை மதிப்பீடுகள்‌ ஒற்றுமை, ஏற்றத்‌ தாழ்வுகள்‌ பாராட்டாமை... குறிப்பாக, தமிழகத்‌ திருச்சபையில்‌ நிலவும்‌ சாதி வேறுபாடுகள்‌ ஒரு மகத்தான முரண்பாடு என்று சொன்னால்‌ மிகையாகாது.

வரங்கள்‌ பலவகை: ஆவியானவரோ ஒருவர்தான்‌ (1கொரி 12:4)
நற்செய்தி : யோவா 20 : 19-23

உயிர்த்த இயேசு சீடருக்குத்‌ தோன்றி ஆவியாரை அவர்களுக்கு அளித்தது இன்றைய வாசகம்‌. உயிர்த்த இயேசு அளிக்கும்‌ கொடைகளான சமாதானம்‌, பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின்‌ பிரசன்னத்தின்‌ வெளிப்பாடுகள்‌. பாவமன்னிப்புப்‌ பெற்று, சமாதான வாழ்வு வாழ இவ்வாசகம்‌ தூண்டுகிறது.
ஆவியாரின்‌ கொடை சமாதானம்‌

ஆவியானவரின்‌ பலன்களாக அமைதி, பொறுமை, சாந்தம்‌ (கலா 5 : 22) முதலியவற்றைச்‌ சுட்டுவார்‌ பவுலடியார்‌. உயிர்த்த இயேசுவும்‌ இருமுறை உங்களுக்கு அமைதி உரித்தாகுக (20 : 19-21) என்று கூறியே ஆவியாரை அளிக்கிறார்‌. இங்கு அமைதி என்ற சொல்‌ நிறைவை, முழுமையைக்‌ குறிக்கும்‌. பிறருடன்‌, கடவுளுடன்‌, நம்முடனே நமக்கிருக்க வேண்டிய உறவு நிறைவைச்‌ சுட்டும்‌. இத்தகைய நிறையுறவை இயேசு ஒருவர்தான்‌ தர முடியும்‌. எனவேதான்‌ அமைதியை உங்களுக்கு விட்டுச்‌ செல்கிறேன்‌; என்‌ அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன்‌. நான்‌ உங்களுக்கு அளிக்கும்‌ அமைதி உலகம்‌ தரும்‌ அமைதி போலன்று (அரு.14 : 27) என்பார்‌ இயேசு. இந்த அமைதி ஆவியாரே. அவர்‌ நம்மோடிருக்கும்போது, அவர்‌ நமது துணையாளராய்‌ (14 : 26) இருக்கும்போது நம்மிடம்‌ சாந்தம்‌, பொறுமை, அமைதி குடிகொள்ளும்‌. ஆவியார்‌ நமக்களிக்கும்‌ சாந்தம்‌ மயான அமைதியன்று ; மாறாக, நம்மை அன்புச்‌ செயல்களுக்குத்‌ தூண்டும்‌ உறவு ஆகும்‌. எனவே நம்மை இவ்வுறவுநிலை முழுமையும்‌ ஆட்கொள்ள ஆவியாரிடம்‌ வேண்டுவோம்‌. சமாதான நிறைவுக்காக வேண்டுவோம்‌. அப்போது நாம்‌ அமைதி பெறுவோம்‌; பிறரும்‌ இவ்‌ அமைதியை அடைய நாம்‌ ஏற்ற கருவிகளாவோம்‌. வாரும்‌ தூய ஆவியாரே!
ஆவியாரின்‌ கொடை பாவமன்னிப்பு

கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த வரங்களுள்‌ மேலானதொன்று பாவமன்னிப்பு. மண்ணுலகில்‌ நீங்கள்‌ எதெல்லாம்‌ அவிழ்ப்பீர்களோ அதெல்லாம்‌ விண்ணுலகிலும்‌ அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்‌ (மத்‌.18:18; 16:19). இப்பாவ மன்னிப்பு கிட்டுவது தூய ஆவியாராலேதான்‌. எனவேதான்‌ இயேசு, தூய ஆவியைப்‌ பெற்‌ றுக்கொள்ளுங்கள்‌ " (20 : 22) என்றவுடனே, எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்‌ (20 : 23) என்பார்‌. நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள்‌ புகு. அப்பொழுது இவர்கள்‌ உயிர்‌ பெறுவர்‌" (சேக்‌ 37:9) என்று உலர்ந்த எலும்புகளுக்கு ஆண்டவர்‌ கூறிய சொற்கள்‌ நமக்கும்‌ பொருந்தி அமைகின்றனவா? பாவங்களினால்‌ காய்ந்து உலர்ந்துவிட்ட நமக்கு மன்னிப்பளித்து, உயிருள்ள அன்பு நீர்‌ நம்மில்‌ பெருக்கெடுத்து ஒட உதவுபவர்‌ ஆவியாரன்றோ? அந்த ஆவியாரிடம்‌ இவ்வுயிரளிக்கும்‌ நீரை நமக்கு நிரம்பத்‌ தரவும்‌, இதன்வழி, பாவத்தினால்‌ உலர்ந்துபோன பல்வேறு இதயங்களிலும்‌ இவ்வுயிர்‌ நீரைப்‌ பாய்ச்சும்‌ சாதனங்களாக நாம்‌ அமையவும்‌ வேண்டுவோம்‌. கடவுளே, தூயதோர்‌ உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்‌; உறுதி தரும்‌ ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்‌ (திபா 51:10).
 
மறையுரை மெடடுக்கள் நன்றி வழிகாட்டும் தோழன்
துணிவோடு ஒற்றுமையை விதைப்போம்‌

திப 19:1-10இல்‌ சொல்லப்படும்‌ ஒரு நிகழ்வு இது. மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு நகருக்குச்‌ செல்லும்‌ திருத்தூதர்‌ பவுல்‌, அங்கு திருமுழுக்குப்‌ பெற்ற கிறிஸ்தவர்களைப்‌ பார்த்து நீங்கள்‌ தரய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொண்டீர்களா ? என்று கேட்டபோது தரய ஆவி என்று ஒன்று உண்டு என்று கூட நாங்கள்‌ கேள்விப்பட்டதில்லையே என்று அவர்கள்‌ பதில்‌ தருகின்றார்கள்‌. இன்று கத்தோலிக்கர்கள்‌ நமக்குத்‌ தூய ஆவியாரைத்‌ தெரியும்‌. அவர்‌ மூவொரு கடவுளில்‌ மூன்றாம்‌ ஆள்‌, இயேசுவால்‌ தரப்பட்ட துணையாளர்‌ என்று தெரியும்‌. ஆனாலும்‌, தூய ஆவியாரின்‌ முக்கியத்துவத்தை நாம்‌ உணர்வதே இல்லை.

இன்றைய நாள்‌ பல முக்கிய மறையுண்மைகளை நமக்கு விளக்குகின்றது.

1. இன்று தய ஆவியார்‌ பெருவிழா -- திருதுவையின்‌ வழிபாட்டில்‌ தூய ஆவியாருக்கென்று நாம்‌ கொண்டாடுகின்ற ஒரே ஒரு திருவிழா இதுதான்‌.

2. இன்று புதிய இஸ்ரயேல்‌ மக்களாகிய நமக்குப்‌ பெந்தகோஸ்துப்‌ பெருவிழா -.- பெந்தகோஸ்து என்பது செங்கடலைக்‌ கடந்து கொண்டாடிய பாஸ்கா விழாவின்‌ 50ஆம்‌ நாள்‌. கடவுள்‌ சீனாய்‌ மலையில்‌ இறங்கி வந்து பத்துக்‌ கட்டளைகளைத்‌ கந்த நாள்‌. புதிய ஏற்பாட்டு இஸ்ரயேல்‌ மக்களாகிய நமக்குச்‌ சாவு என்ற செங்கட்லை இயேசு கடந்து உயிர்ப்பு என்கின்ற பாஸ்காவைக்‌ கொண்டாடியதன்‌ 50ஆம்‌ நாள்‌. தூய ஆவியாராம்‌ கடவுள்‌ நம்பிக்கையாளர்மீ து இறங்கி வந்த நாள்‌.

3. இன்று திருச்சபையின்‌ பிறந்த நாள்‌ -- வெறும்‌ 12 பேராக இருந்த கிறிஸ்தவச்‌ சமூகம்‌ தூய ஆவியாரால்‌ நிரப்பப்பட்ட பிறகு, அந்த சமூகத்தின்‌ தலைவராக இருந்த பேதுரு நீண்ட மறையுரை ஆற்றி 3000 பேருக்குத்‌ திருமுழுக்குக்‌ கொடுக்கிறார்‌. ஆவியாரின்‌ ஆற்றலோடு திரு அவை என்னும்‌ மாபெரும்‌ அமைப்பு உருவான நாள்‌ இது.

இன்று நாம்‌ தரய ஆவியாரால்‌ இயக்கப்படும்‌ மக்களா கூடருக்கின்றோமா ? அல்லது ஊனியல்பினால்‌ இயக்கப்படும்‌ மக்களாக இருக்கின்றோமா ? என்பதுதான்‌ இன்றைய நாள்‌ நம்முன்‌ வைக்கும்‌ கேள்வி. தூய ஆவியால்‌ ஒரு மனிதன்‌ இயக்கப்பட்டால்‌ அவரிடம்‌ இரண்டு பண்புகள்‌ இருக்கும்‌.

1. ஒற்றுமை - தொநூ 11:1-9இல்‌ தன்‌ பெயரைக்‌ குறித்துப்‌ பெருமை கொண்ட ஊனியல்பால்‌ இயக்கப்பட்ட மனிதன்‌ உயர்ந்த கோபுரம்‌ ஒன்றைத்‌ தன்‌ பெருமையின்‌ அடையாளமாகக்‌ கட்டுகின்றான்‌. கடவுள்‌ மனிதனின்‌ மொழியைக்‌ குழப்புகின்றார்‌, ஒருவர்‌ பேசுவது இன்னொருவருக்குப்‌ புரியாதபடி, மனிதன்‌ பிளவுபட்டுப்‌ போகின்றான்‌. அதே மனிதன்‌, இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ ஆவியாரால்‌ இயக்கப்படும்போது ஒருவரது பேச்சை எல்லாரும்‌ தத்தம்‌ மொழிகளில புரிந்து கொள்கின்றனர்‌. இங்கே ஆவியாரால்‌ ஒற்றுமை உருவாகின்றது. இன்று நாம்‌ ஒற்றுமையை உருவாக்குகின்றவர்களா ?

2. துணிவு - தூய ஆவியாரைப்‌ பெற்றுக்கொண்ட சீடர்கள்‌ பெற்ற மிகப்பெரும்‌ கொடை துணிவு. அதுவரை பூட்டிய அறைகளுக்குள்‌ முடங்கிக்‌ கிடந்தவர்கள்‌, அதன்பின்‌ எருசலேம்‌, யூதேயா, சமாரியா தொடங்கி உலகின்‌ கடையெல்லைவரை இயேசுவுக்குச்‌ சான்று பகர்கின்றார்கள்‌. இன்று நம்மிடம்‌ தவறுகளைத்‌ தட்டிக்‌ கேட்கின்ற, துன்பங்களைத்‌ தாங்கிக்கொண்டு இயேசுவுக்குச்‌ சான்று பகர்கின்ற, அநீதியை எதிர்த்து அறச்சினத்தோடு கேள்வி கேட்கின்ற துணிவு இருக்கின்றதா ?

ஒற்றுமையும்‌ துணிவும்‌ கொண்டு, ஆவியாரின்‌ விழாவைக்‌ கொண்டாடுவோம்‌. அவரால்‌ இயக்கப்படுகின்ற மக்களாக வாழ்வோம்‌
 
 

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!