விண்ணகம் சென்ற நம் பெருமான் இயேசுபிரான், மண்ணகத்தில் வாழும்
நமக்கு, அவர் பணி தொடர வரம் தருகிறார். இந்தக் கருத்தை சுமந்து
வருகிறது, இந்த விண்ணேற்பு பெருவிழா ஞாயிறு வழிபாடு.
தந்தைக்கு பிரியமானதை செய்து முடிப்பதை பணியாகக் கொண்ட இயேசு,
தந்தையைச் சென்றடையும் நிகழ்வே விண்ணேற்பு. இயேசு
விண்ணிலிருந்து நம்மிடம் இறங்கி வந்தபோது, விண்ணகத்தை விட்டுவிடவில்லை.
அவர் மீண்டும் விண்ணுக்கு ஏறிச் சென்ற போது, மானிடத்தை
விட்டுவிடவுமில்லை. தந்தைக்கு பிரியமானதை செய்து முடிப்பதை பணியாகக்
கொண்ட இயேசு தந்தையைச் சென்றடைந்ததைப் போல, நாமும் நம்முடைய
நிலையில்லா மண்ணக வாழ்வு முடியும்போது, விண்ணகம் செல்ல
வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.
நம் வாழ்வுப் பயணத்தின் இலக்கு விண்ணகம்தான். அதே சமயத்தில் நம்
அயலாரையும் விண்ணகம் நோக்கி அழைத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து அவரது அன்பை உலகின் கடை எல்லை வரை
கொண்டு சேர்க்க, இன்று நம்மையே நம்பி இருக்கிறார். அதற்கான
பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். கடவுள் நம்மோடும்,
நாம் அவரோடும் இருக்கும்போது நம் பணி எளிதாகும். அப்போது இயேசுவைப்
போல பணிசெய்து விண்ணகம் செல்ல முடியும்.
நற்பணி புரிந்து விண்ணகம் செல்ல வழிகாட்டும் திருப்பலி ஆரம்பமாகிறது.
உலகின் கடை எல்லை வரை உமது அன்பை சுமந்து செல்லும் கருவியாய்,
எமை பயன்படுத்தும் இறைவா என மன்றாடுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. விண்ணகம் சென்ற இறைவா !
நீர் விண்ணேற்பு அடைபும் போது கொடுத்த கட்டளையை ஏற்று,
திருத்தூதர்கள் வழியாக நற்செய்திபணி ஆற்றி வரும்
திருச்சபை தலைவர்களை ஆசீர்வதியும். இன்னும் இயேசுவைப்
பற்றி அறியாதவர்கள் அனைவருக்கும், விரைவில் நற்செய்தியை
அறிவிக்க திருச்சபைத் தலைவர்களுக்கு ஆற்றலை தரும்படி,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணேற்றத்தால் மாட்சி பெற்ற இறைவா!
நீர் வாக்களித்தபடி வல்லமையுடைய ஆவியானவர் அருள், எம்
நாட்டுத் தலைவர்களையும் வழிநடத்தி, மக்கள் குறை
போக்கி, நிறை வாழ்வு பாதையில் மக்களை பயணிக்கச் செய்ய
நாட்டுத் தலைவர்களுக்கு ஆற்றலை தரும்படி, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. வான் நோக்கி நடக்க வரம் தரும் இறைவா!
நற்செய்தி அறிவித்தல் பணியை சிறப்பாக ஆற்றும் எம் பங்குத்
தந்தைக்கு உம் ஆசீர் தாரும். நற்செய்தி அறிவிப்பு பணி
குருக்களுக்கு மட்டுமே உரியது என்று பொது நிலையினராகிய
நாங்கள் ஒதுங்கி விடாமல். நாங்களும் திருத்தூதுப் பணியை
அறிவிக்க ஆற்றலை தரும்படி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.எங்களுக்காக உறைவிடம் தயாரிக்க சென்ற இறைவா!
நீர் திரும்பி வரும்போது, உம்மோடு கூட வான்வீட்டிற்கு
வரத்தகுதியுள்ளவர்களாக நாங்கள் வாழும் ஆற்றலைத் தரும்படி,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. வல்லமையை வரமாய் தரும் இறைவா !
ஏழைகள், ஆதரவற்றோர், நோயாளிகள், துன்பத்தால் வாடுவோர்
அனைவருக்கும், இயேசுவின் ஆறுதலையும், ஆதரவையும் அறிவிக்கும்
வல்லமையை, இங்கே கூடியிருக்கும் எங்கள் அனைவருக்கும்
வரமாய் தரும்படி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
கடவுள் நம்மோடு கடவுள் நமக்காக
லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தியை எருசலேமில் தொடங்கி
எருசலேமிலேயே முடிக்கின்றார். விவிலியத்தில் இயேசுவின்
விண்ணேற்றம் இரண்டு நேரங்களில் நடப்பதாகப் பதிவு செய்யப்படுகிறது.
1. உயிர்த்த நாள் அன்று (லூக் 24ஃ51), (திப1ஃ1-2) 2.
உயிர்த்தபின் 40 நாட்களுக்குப்பின் (திப 1ஃ9-11)
விண்ணேற்றம் என்று நடந்தது என்று ஆராய்வதைவிட, எதற்காக
என்பதை சிந்திப்போம். தூய அகுஸ்தினாரின் வார்த்தைகள்
விண்ணேற்றத்தின் முக்கியத்துவத்தை, உணர்த்துகின்றனர்.
அவர் இன்று நம்மை விட்டு அகன்று சென்றார். நம் நிலை
அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் அல்ல. இதோ இன்று முதல்
அவரை நம் இதயத்தின் ஆழத்தில் தேடிக் கண்டுகொள்ளவே அவர்
நம் பார்வையை விட்டு அகன்றார்.
இயேசுவின் விண்ணேற்றம் அவரது பணிவாழ்வு நிறைவு செய்து
திரு அவையின் பணிவாழ்வைத் தொடங்கி வைக்கின்றது. வானகத்
தந்தையால் அனுப்பப்பட்ட இயேசு தம் தந்தையிடம்
திரும்பிச் செல்வதற்கு முன் தம் சீடர்களை அனுப்புகிறார்.
'தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்' (மாற்கு 3ஃ1-4)
என்று அழைக்கப்பட்ட சீடர்கள் இன்று பணிக்காக அனுப்பப்படுகின்றார்கள்.
இந்தப் பணியின் இன்றியமையாத நோக்கம் மனந்திருப்புவது
அல்ல மாறாக சான்று பகர்வது இயேசுசைச் சுற்றியிருந்த சீடர்களின்
வட்டம் இன்று 2013 ஆண்டுகள் விரிந்து நிற்கின்றது. நமக்கும்
இன்று இயேசு கொடுக்கும் கட்டகளை இதுதூன் 'சான்று பகர்வது'
நீங்கள் ஒருவர் மற்றவர்களுக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.
விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு விவிலியத்தில் உள்ள
பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை
இஸ்ராயேலின் குலமுதுவர் யாக்கோபு (தொநூல் 49-50)
திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34) இஸ்ராயேல் நம்பிக்கை
மற்றும் திருச்சட்டத்தை நிறைவு இயேசு (திப1ஃ1-11) இந்த
மூன்று பிரியாவிடைகளும் நான்கு உள்ளடக்கங்களைக்
கொள்வேன்.
1. ஆசியுரை, 2.பிரிவு, 3.பார்த்தவர்களின் பதில் மற்றும்
4. கீழ்ப்படிதல் அறிக்கை
இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் பழைய
ஏற்பாட்டு நிகழ்வுகளில் பிரதிபலிப்பாகவே அமைகின்றது.
(லேவி 9ஃ22, சீகா 50ஃ20-21) ஆகையால் இயேசுவின்
விண்ணேற்றம் ஒரு இறையியல் நிகழ்வாகவும் அமைகின்றது. ஆசியமர்த்தல்
தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும்
இறுதி நிகழ்வுகளில் முக்கியமானதாக இருக்கின்றது.
(1ஃ56,2ஃ20,43ஃ45, 24ஃ9,33, 8ஃ13, 15ஃ7. 10) ஆகையால்
இயேசுவின் ஆசீர் சீடர்களுக்கும் மகிழ்வே இயேசுவின்
விண்ணேற்றம் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது.
1. இது இயேசுவின் உயிர்ப்பிற்குச் சான்று,
2. சீடர்களுக்கு விட்டுச் சென்ற பணி,
3. பிரியாவிடை ஆசீர் கடவுள் மீட்டுகிறார். அனுப்புகின்றார்.
ஆசீர் அளிக்கின்றார்.
1. அண்ணார்ந்து பார்க்கும் ஆன்மீகம் 'கலிலேயரே ஏன் வானத்தை
அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறீர்கள்' என்ற வானதூதர்களின்
கேள்வி நம்மிடமும் கேட்கப்படுகின்றது. 'இயேசு திரும்ப
வருவார். என்பதற்காக நாம் வானத்தையே பார்த்துக்
கொண்டிருக்க வேண்டியதில்லை குனிந்து நம் வாழ்க்கையைப்
பார்ப்போம் இயேசு வருகிறார். சீக்கிரம் வருகிறார்' என்ற
குரல் வெளியில் கேட்கிறதா? எங்கும் ஓட வேண்டுமென்ற அவசியமில்லை
அண்ணார்ந்து பார்க்க வேண்டாம் என்ன செய்து கொண்டிறோமோ
அதிலேயே நிலைப்போம் நம் நிந்தனைமட்டும் இயேசுவில் ஊன்றியிருக்கட்டும்
நம் உணர்வுகள் இயேசுவின் உணர்வுகளோ இரண்டறக் கலக்கட்டும்
ஏன் இயேசுவின் உணர்வால் சிந்தனையால் உறவால் நம்மை நிரப்பிக்
கொள்வோம்.
2. நீங்கள் கிறிஸ்வோடு உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகு
சார்ந்தவற்றையே எண்ணுங்கள் (கொலோ 3ஃ1). உயர்ந்தவை எண்ணுதல்
வேண்டும். நம் எண்ணங்கள் போலத்தான் நம் வாழ்க்கை
வாழ்கின்றோம். உயர்ந்த கனவுகள் காண்போம். அவை உயர்ந்த
எண்ணங்களாக உதயமாகட்டும். அந்த உதயம். புதியவர்களாக நம்மை
மாற்றட்டும்.
3. தொடர் ஓட்டல் தொடத் ஓட்டத்தில் ஒரு வீரரின்
கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்
போல ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து
அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம்போல, விண்ணரசுப் பணி
இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது.
இந்தத் தீபத்தை அணையாமல் காத்து இலக்கை, அடைவதே நம்மால்
சுமத்தப்பட்ட ஒரு பணி எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ அந்த
அளவிற்கு இது ஒரு கடமை.
இயேசுவுகிகு விண்ணேற்றம் என்பது தந்தையிடம் திரும்புவது
இந்த நினைப்பில் மகிழ்கிறார். தந்தையான கடவுள் திட்டமிட்டு
வகுத்தபடி இயேசு மானிட வாழ்வை முழுமையாக வாழ்ந்து
முடித்தார். தனக்குத் தந்த தனக்குத் தந்த வெறுப்பைச்
சிறப்பாக நிறைவேற்றினார். அவருக்கு உணவும் உயிர்
மூச்சுமாக இருந்தது எப்போதும் இறைத்திருவுளமே (யோவான்
4ஃ34) உலக வாழ்வின் முடிவில் அவரது இறுதிவார்த்தை 'எல்லாம்
நிறைவேறிற்று' (யோவான் 19ஃ30) விண்ணேற்றத்தில் தான் ஏற்ற
இந்தத் மானிட இயல்பு பெறும் மகிமையை நினைத்து இயேசு மகிழ்கிறார்.
அவர்தன் தந்தையிடம் திரும்புவது தந்தையின் நெஞ்சத்தில்
இருந்த நித்திய வார்த்தையாக அல்ல மனிதனின் வாக்காக இனி
அவர் என்றென்றும் இறைமகன் மட்டுமல்ல மனிடமகன் இவர் மனிதன்
மனிதன் என்ற முறையில் தாவீதின் வழி மரபினர் தூய ஆவியால்
ஆட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர்
உயிர்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. (உரோ1ஃ3-4)
கனினி மரியிடமிருந்து பிறந்த அவர் நம்மோடு நம்மில் ஒருவரானார்
எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர் எனினும்
பாவம் செய்யாதவர் ( எபி.4ஃ15) சிலுவைச் சாவை ஏற்கும்
அளவுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே தாழ்த்தியதால் இயேசுவே
ஆண்டவர் என்று எல்லா நாவுமே அறிக்கையிடும் அளவுக்குத்
தந்தை அவரை உயர்த்தினார். (பிலிப் 2ஃ8-11) தனது
விண்ணேற்றத்தால் நமது மனித இயல்பை மூவொரு கடவுளின்
இதயத்துக்குள்ளேயே கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்.
மகிமையடைந்த இயேசுவில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில்
மகிமை அடைந்து விட்டோம்.
நம்மை எவ்வளவு உயர்வாக மதித்திருந்தால் தன் பணியை நமக்கு
விட்டுவ் வென்றிருப்பார். 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
அனைத்து அதிகாரமும் எங்கு அருளப்பட்டிருக்குகிறது. எனவே,
நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் '(மத்
28ஃ18-19) எருசலேமிலும் யூதேயா சமாரியா முழுவதிலும்
உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்
(திப 1ஃ8) நம்பிக்கை என்னும் அருள்கொடை அனைத்து மக்களுக்கும்
பகர்ந்தளிக்கப்பட்ட வேண்டும். இயேசுவே மீட்பராக ஏற்றுக்கொள்ளும்
வாய்ப்பை அனைவருமே பெற வேண்டும். இனி சீடர்கள் செய்ய
வேண்டிய பணி தெளிவானது சென்றடைய வேண்டிய இலக்கு உறுதியானது.
பொறுப்பை ஏற்கத் தயக்கமா? சாட்சியாக வாழ சக்தி உண்டா
என்ற ஐயமா? நாம் தனியாக இல்லை. இயேசு நம்மோடு இருக்கிறார்.
தூய ஆவியால் நம்மை நிறைந்திருக்கிறாள் அவரது மறையுடலின்
உறுப்புகள் அன்றோ நாம்! வுpண்ணகத் தந்தையின் சாட்சிகளாய்
வாழ வேண்டுமெனில் வார்த்தையால் மட்டுமல்ல வாழ்க்கையின்
மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இன்று விண்ணகத் தன்தை
நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி. மகனே! மகளே! நான்
விட்டு சென்ற பணியைத் தொடர உனது கரங்களை என் மொழியாகப்
பிறருக்குத் தருவாயா? உனது கால்களை என் வழியாகப் பிறருக்குத்
தருவாயா? உள்ளம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற என
வழியாக உனது இதயத்தைத் தருவாயா? இந்த கேள்விகளுக்கு
நமது பதில்?.... சிந்திப்போம்.
திருமதி. ஜோஸ்பின்
சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா 17
05 2026
திருப்பலி முன்னுரை
மண்ணக உயிர்களை மீட்டெடுத்து, மீண்டும் விண்ணகத்திற்குச்
சென்று, தந்தையோடு இயேசு கிறிஸ்து இணைந்ததை எடுத்துரைக்கும்
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு அன்புடனே
அழைக்கிறோம்.
இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, மண்ணக உயிர்களுக்காக
மீண்டும் மீண்டும் பரிந்து பேசவே இயேசு கிறிஸ்து விண்ணகம்
பயணிக்கிறார். இயேசுவின் இவ்வுலக நற்செய்திப் பணி சில
ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரின் துணையாளராம் தூய ஆவியின்
அருளால், சீடர்களால் பல்வேறு தேசங்களுக்குள் நற்செய்தி
பறைசாற்றப்பட்டது. நாமும் இறைவனைப் பற்றிய நற்செய்தியை
நற்செயல்களிலே வெளிப்படுத்துவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், தூய ஆவி உங்களிடம் வரும்
போது, கடவுளின் வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய்
இருப்பீர்கள் என திருத்தூதர்களுக்கு இயேசு அறிவிக்கிறார்.
இயேசு மரித்து, உயிர்த்தெழுந்த பின்னும் சீடர்களோடு உரையாடுகின்றார்.
உள்ளத்தில் வலிமையை வளர்க்கிறார். தொடர்ந்து அவர்களோடு
இருக்க தூய ஆவியின் வல்லமையை அளித்து விட்டு, விண்ணகத்திற்கு
எழுந்தருளுகின்றார். மனிதராய் பிறந்த எவரும் பெறாத
புனித நிகழ்வு. இந்நிகழ்வை நம் மனதிற் கொள்வோம். மண்ணக
வாழ்வு என்பது விண்ணகத்திற்குச் செல்லும் நுழைவுச்
சீட்டிற்கான போராட்டம். நேர்மையாய் ஓடி வெற்றி
பெறுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதோ உலகம் முடிவு வரை
நான் உங்களோடு இருக்கிறேன் என்று இயேசு நம்மை அரவணைத்து
ஆசியளிக்கிறார். நமது வாழ்வு பிறருக்கு
முன்மாதிரியானால்தான் நாம் நடக்கும் வாழ்க்கைப்பாதை நற்செய்தியாகும்.
சொற்களால் நற்செய்தியை பறைசாற்றுதலினும் நமது செயல்களால்
பறைசாற்றுவோம்; இறை விசுவாசத்தை பெறுவோம்; பிறரில்
விதைப்போம்; ஆன்மாக்களை அறுவடை செய்வோம் என்ற நம்பிக்கையோடு
இத்திருப்பலியில் இணைவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. விண்ணேற்றம் அடைந்தவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர், பணியாளர்கள்,
உம் வழியில் நற்செய்திப் பணியாற்றிடவும், மக்களோடு சமூக
வாழ்வில் தம்மை இணைத்துக் கொண்டு, விண்ணகக் கதவுகளண்டை
மக்களை நடத்த தூய ஆவியின் அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தாலந்துகளைத் தந்து வாழச் செய்தவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள், நாட்டின் தாலந்தாகிய
வளங்களையும், மக்களையும் சுரண்டாமல், வலியவர்களுக்காக
திட்டத்தைச் செயல்படுத்தாமல், வறியவர்களுக்கான
வாழ்வாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி, மனசாட்சியுடன்
கூடிய நேர்மையான, தொண்டு உள்ளத்தோடு ஆட்சி புரிய ஞானம்
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய ஆவியான துணையாளரைத் தந்தவரே எம் இறைவா!
எங்களையே நாங்கள் தாழ்த்தி, தூய ஆவியின் கனிகளை எம்முள்
பெற்று, அன்பால் அனைவரோடும் ஒன்றித்து வாழவும்,
வாழ்க்கையில் தேவையில் உள்ளோருக்கு இயன்ற உதவிகளைச்
செய்து உமக்கு உகந்த வாழ்வு மேற்கொள்ள வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நலன்களைப் பொழிபவரே எம் இறைவா!
பருவ மழை உரிய காலத்தில் தொடங்கி, பருவ வேளாண்மை சிறக்கவும்,
பொருளாதாரம் ஏற்றம் பெறவும், குடும்ப அமைதி மகிழ்ச்சி
நிறையவும், உள்ளத்தின் தேவைகள் உமதருளால் சந்திக்கப்படவும்,
இயல்பு வாழ்வு மீண்டு வரவும் வரம் அருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புள்ள அறந்தாங்கி பங்கு மக்களே!
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம்
ஞாயிறான இன்று, இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக்
கொண்டாட ஆலயம் வந்திருக்கும் பங்கு மக்களாகிய உங்கள்
அனைவரையும், இன்றைய ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்கும்,
ஆரோக்கிய அன்னை அன்பியக் குடும்பத்தார் அன்புடன், வருக!
வருக! வரவேற்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை
என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின்
அடித்தளங்கள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில்
நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய்
நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த
ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு
மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம்.
மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு,
நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய
பின்பு விண்ணேற்றம் அடைகிறார். இந்த உலகை விட்டு
செல்லும் முன், எந்நாளும் நம்மோடு இருப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார்.
தந்தையாம் இறைவனின் மாட்சிக்காக, தூய ஆவியாரின்
துணையோடு கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை உலகெங்கும்
பறைசாற்ற நினைவூட்டப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தை
பயன்படுத்தி மக்கள் அனைவரையும் அவரது சீடர்களாக்கும்
ஆர்வத்துடன் பணியாற்ற, இத்திருப்பலியில் நாம் வரம்
வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை (திப 1:
1-11)
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின்
விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு
தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப்
பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின்
விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால்
திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை
வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார்.
இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் என்ன
வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!
என்று உலகைக் காண்பித்து அவர் பணித்த பணிகளைச் செய்ய
உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்" என்று கூறுவது போல
எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர்
நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!
இரண்டாம் வாசக முன்னுரை (எபே
1:17-23)
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை
முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும்
தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு
அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று
கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார்
கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும்
மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது
உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில்
கவனமுடன் கேட்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
1.) விண்ணேற்றப் பெருவிழாவாகிய இன்று கடவுள் வலிமைமிக்க
தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, அவரைத்
திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே
அவரது உடல் என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாய்,
கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்காக மன்றாடுகிறோம்.
திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும்
பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் விண்ணகத்தையே இலக்காகக்
கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2.)
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். உலகனைத்தையும்
ஆளும் மாவேந்தர் அவரே என்கிற திருப்பாடலைத் தியானித்த
நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளை ஆளுகிற தலைவர்களுக்காகவும்,
எம்நாட்டின் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். நல்லாட்சி,
அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை, உலகிலும்,
எம்நாட்டிலும் நிலவ வேண்டுமென்றும், அதற்காக அனைவரும்
உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 3.)
உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்.
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்
என்கிற உமது அறைகூவலை சிரமேற்கொண்டு, மறைத்தூதுப் பணியாற்றவும்,
அறப்பணிகள் வழியாகத் தொண்டாற்றவும் தங்களையே கையளித்துள்ள
அனைத்து துறவியருக்காகவும், சிறப்பாகப் பிற நாடுகளில்
பணிபுரிவோருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களை நீர்
தாமே நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறையாட்சிப்
பணிக்காக மேலும் பலர் முன்வரவேண்டுமென்றும், அதற்காக
நடத்தப்படும் தேவ அழைத்தல் முகாம்கள் நிறைந்த பலன் தரும்படியாகவும்,
இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4.) திருமுழுக்கு வழியாகக்
கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், குடும்பங்கள்
ஒவ்வொன்றும், குறிப்பாகக் குழந்தைகளும், இளையோரும்,
தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைப்பேறு, எதிர்நோக்கு, நம்பிக்கை,
ஆகியவை எத்துணை மேலானவை என்பதை உணர்ந்து செயலாற்றி, நம்பிக்கை
வாழ்விலும், உலகுசார் வாழ்விலும், வெற்றி பெறவேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5.) இங்கே கூடியுள்ள நாங்கள்
அனைவரும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்
உமக்கு அருளப்பட்டிருப்பதையும், இதோ! உலக முடிவுவரை
எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிற
வாக்குறுதியையும் இறுகப்பற்றிக்கொண்டு, விண்ணேற்றம் அடைந்த
உம்மைப் போல், நாங்களும் வாழ்வில் ஏற்றம் அடைய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தந்தை தஞ்சை டோமி
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இணைப்பாளர்-எந்நாளும்-வானம்
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை, 'இணைப்பாளர்,' 'எந்நாளும்,' 'வானம்'
என்னும் மூன்று சொற்களால் புரிந்துகொள்வோம்
.
அ. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இணைப்பாளர். ஆ. 'இதோ!
உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்.' இ. வானத்தைப்
பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!
அ. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இணைப்பாளர்
ஆண்டவரின் விண்ணேற்ற நிகழ்வுடன், கிறிஸ்தியல் வட்டம் நிறைவுக்கு வருகிறது.
மூவொரு இறைவனின் நெஞ்சில் நிறைந்திருந்த வார்த்தையானவர் மனுவுருவாகி,
பிறந்து, விண்ணக அரசை அறிவித்தார். தம் பணிகள், வல்ல செயல்கள், மற்றும்
போதனைகள் வழியாக விண்ணரசு இம்மண்ணுலகில் இப்போதே வந்தது என இயேசு
முழக்கமிட்டார். பாடுகள் பட்டு, இறந்து, உயிர்த்து, இன்று விண்ணேற்றம்
அடைகிறார். இந்த வட்டம் கிறிஸ்துவின் மனுவுருவாதலை நிறைவு செய்வதோடு,
நம் வாழ்வுக்கும் பொருள் சேர்க்கிறது. மனித உடல் ஏற்றுள்ள நாமும்
உயிர்த்து விண்ணேறிச் செல்வோம் என்னும் எதிர்நோக்கை நமக்கு வழங்குகிறது.
இன்றைய திருப்பலித் தொடக்கவுரையில், 'இயேசு கிறிஸ்து இணைப்பாளர்'
என வாசிக்கிறோம். இயேசுவின் மனுவுருவாதலே அவரைக் கடவுளோடும் மனிதர்களோடும்
இணைக்கிறது. கடவுளே மானிடர்களின் இணைப்பாளராக விளங்குவதன் வழியாக
மானுடத்தின் மாண்பு மேன்மையடைகிறது. 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்த
இயேசு, இன்று, 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கிறார்.
இன்று நான் எந்த வாழ்வியல் நிலையில் - குழந்தை, பதின்மம், இளமை,
முதிர்ச்சி, முதுமை - இருக்கிறேன்? எந்த வாழ்வியல் நிலையில் நான்
இருந்தாலும் அதை முழுமையாக ஏற்று வாழ்கிறேனா? கடவுள் மனித உடலை ஏற்று
அதை மாட்சிப்படுத்தியிருக்கிறார் எனில், நான் என் உடலையும் மற்றவர்களின்
உடலையும் எப்படிப் பார்க்கிறேன்? உடல் என்பது பாவம் செய்வதற்கான கருவி
என எதிர்மறையாக எண்ணுகிறேனா? அல்லது இந்த உடல் கடவுளின் ஆலயம் என
அதை நேர்முகமாக ஏற்று அன்பு செய்கிறேனா? இயேசு தம் மனுவுருவாதல்
வழியாக மனுக்குலத்தை மாற்றினார் எனில், நான் என் குடும்பம், நண்பர்கள்,
சுற்றுச்சூழல், உலகம் ஆகியவற்றின்மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறேன்?
என் நம்பிக்கை அனுபவத்தில் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்னால்
இணைத்துப் பார்க்க முடிகிறதா? இறைவேண்டல் மற்றும் அன்றாட வாழ்க்கை,
ஆன்மிக வாழ்க்கை மற்றும் உடல்சார் வாழ்க்கை என இரண்டையும் இணைத்துப்
பார்க்க முடிகிறதா? இயேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளர் எனில்,
அவரோடு இணைந்து இணைப்பாளர் நிலையில் இருக்கும் நான் என்
பொதுக்ஞானஸ்நானம் மற்றும் பணிக்குருத்துவத்தை நினைவுகூர்ந்து, ஒருவர்
மற்றவருக்கான இணைப்பாளராகச் செயல்படுகிறேனா? அல்லது பிரிவினைகளை
வளர்க்கிறேனா?
ஆ. 'இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்!'
மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய குறிப்பு இல்லை.
தம் திருத்தூதர்களுக்கு இயேசு வழங்கும் மறைத்தூதுக் கட்டளையோடும்,
அவருடைய உடனிருப்புச் சொற்களோடும் தன் நற்செய்தியை நிறைவு
செய்கிறார் மத்தேயு. இறையியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், மத்தேயு
நற்செய்தியாளர் இயேசுவை, 'கடவுள் நம்மோடு' (இம்மானுவேல், மத் 1:23)
என அறிமுகம் செய்கிறார். கடவுள் நம்மோடு என வந்த இயேசு, நம்மை
விட்டு அகல இயலாது. 'நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்னும்
இயேசுவின் சொற்கள் கடவுள் மனுக்குலத்தோடு ஏற்படுத்திக்கொண்ட
நீங்காத உடனிருப்பை உறுதி செய்வதுடன், கடவுளின் நீடித்த
திருமுன்னிலையை (பிரசன்னத்தை) நமக்கு நினைவூட்டுகிறது. 'எனக்கென
யாரும் இல்லையே?' என்று தனிமையில், விரக்தியில், சோர்வில் நாம் உதிர்க்கும்
சொற்களுக்கு, மாற்றாக இருக்கின்றன இயேசுவின் சொற்கள். 'வார்த்தை மனிதரானார்.
நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என வாசிக்கிறோம்.
'குடிகொண்டார்' எனில் அவர் தொடர்ந்து நம்முடன் குடியிருந்துகொண்டே
இருக்கிறார். ஏனெனில், கடவுளைப் பொருத்தவரையில் அவருக்கு அனைத்தும்
'இன்று' தான். 'உலக முடிவு' என்னும் சொல்லாடல் உலகின் இறுதி அல்லது
அழிவை நமக்கு நினைவூட்டவில்லை. மாறாக, 'நீடித்த நிலையான நேரத்தை'
இது குறிக்கிறது. 'கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை
தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக' (காண். திபா 72:5) என்னும்
அருள்வாக்கியத்தில், 'கதிரவனும் நிலாவும் உள்ளவரை' என்னும் சொல்லாடல்
'கதிரவனும் நிலாவும் இல்லாமல் போய்விடும்' என்று உணர்த்தவில்லை,
மாறாக, 'நீடித்த நிலையான நேரத்தையே' உணர்த்துகிறது. 'என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு' (திபா 136:1) என்னும் முதல் ஏற்பாட்டுச்
சொற்கள் இயேசுவின் சொற்களில் நீட்சி அடைந்து இறைவனின் நீடித்த உடனிருப்பை
நமக்கு உணர்த்துகின்றன.
தம் வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் நம் ஆண்டவரின் சொற்கள்
என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைவேறுகின்றன என்பதை நான் உணர்கிறேனா?
'எந்நாளும் உன்னுடன் இருக்கிறேன்' என்னும் அவருடைய சொற்கள் எனக்கு
ஆறுதலைத் தருகின்றனவா? என் வாழ்வின் துன்பமான நேரங்களில் இயேசுவின்
சொற்கள் என் நம்பிக்கைக்கு வலிமை தருகின்றனவா? இயேசுவின் உடனிருப்பு
தரும் சொற்களை, என் வாழ்க்கை அனுபவமாக மாற்றும் நான், தனிமை, நோய்,
சோர்வு என வருந்தும் சகோதர, சகோதரிகளுக்கு நம்பிக்கை தரும் சொற்களை
நான் மொழிகின்றேனா?
இ. வானத்தைப் பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!
இயேசு விண்ணேறிச் செல்வதைக் காண்கின்ற திருத்தூதர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது தோன்றுகிற வெண்ணிற ஆடை அணிந்த
இருவர், 'நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றனர். மறைப்பணிஆர்வம்
நிறை சீடர்கள் (ஆங்கிலத்தில், 'மிஷனரி டிஷைப்ள்ல்') தங்கள்
பார்வையை வானத்தை நோக்கிச் செலுத்தினாலும், பாதங்களை அழுத்தமாகத்
தரையில் பதித்திருக்க வேண்டும். மண்ணின் அழுக்கு தங்கள்மேல் படத்
தங்களை அனுமதிக்க வேண்டும். மனித வரலாறு முழுமை பெறும் இடம் விண்ணகம்.
அந்த விண்ணகம் பற்றிய சிந்தனை மண்ணகம் பற்றிய நம் கவனத்தைச் சிதறடிக்கக்
கூடாது. மண்ணக வாழ்வை நன்றாக வாழ்வதை விடுத்து, விண்ணகம் நோக்கி தப்பிச்
செல்லக் கூடாது. ஆக, ஒவ்வொரு நாளும் இந்த மண்ணக வாழ்வுக்கான அர்ப்பணம்
நம்மில் வளர வேண்டும். பொறுப்புணர்வு கூட வேண்டும். 'நம் விண்ணகம்
தாய்நாடு' (காண். பிலி 3:20) என்றாலும், நாம் சார்ந்திருக்கும் மண்ணின்மேலும்
நமக்கு பொறுப்பு உண்டு.
நான் என் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் தொடுகிறேனா? இயேசுவின்
விண்ணேற்றப் பெருவிழா எனக்குத் தரும் செய்தி என்ன? என் வாழ்க்கை,
எனக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தாண்டி வலுவற்றவர்களின்,
விளிம்புநிலையில் இருப்பவர்களின், ஒதுக்கப்பட்டவர்களின்
வாழ்க்கைமேல் எனக்கு பொறுப்பு இருக்கிறது ன்பதை உணர்கிறேனா? இறப்புக்குப்
பின் உள்ள வாழ்வு பற்றியே கவலைப்படும் நான், இறப்புக்கு முன் உள்ள
வாழ்வை எப்படி வாழ்கிறேன்? மகிழ்ச்சி, அமைதி, கட்டின்மை போன்ற மதிப்பீடுகளைப்
போற்றி என் தனிநபர் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேனா?
நிற்க.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகிற
அவரால் திருஅவை நிறைவுபெறுகிறது' என எழுதுகிறார் பவுல். இயேசு தம்
விண்ணேற்றத்தின் வழியாக எங்கும் எல்லாவற்றையும் நிரப்பி
நிற்கிறார்.
'எக்காளம் முழங்கிடவே உயிரே ஏறுகின்றார் ஆண்டவர்' எனப் பதிலுரைப்பாடலில்
அக்களிக்கும் நாம், இணைப்பாளராக வானகம் ஏறிச்செல்லும் அவர், நம்மோடு
எந்நாளும் இங்கேயே இருக்கிறார் என்னும் நம்பிக்கையில் நம் கால்களை
உறுதியாக மண்ணில் பதித்துக்கொள்வோம்.
உயரே ஏறுகிறார் ஆண்டவர்!
ஆண்டவரின் விண்ணேற்றத்தை பெருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம்.
இந்த நிகழ்வை ஒரு பிரியாவிடை நிகழ்வு என்று எடுப்பதை விட,
பிரிவு அல்லது இழப்பு நிகழ்வு என்று எடுக்கும்போது இந்த நிகழ்வின்
வலியை நம்மால் உணர முடிகிறது. நம் அன்புக்குரியவர்கள் இறந்துவிட்டால்
அவர்களை அடக்கம் செய்துவிட்டு, அல்லது எரித்துவிட்டு, அல்லது
மருத்துவமனைக்குத் தானமாக அளித்துவிட்டு வீடு வருகிறோம்.
அவர் இருந்த இடத்தில் இப்போது அவர் இல்லை என்ற எதார்த்தம்
நமக்கு வலியைத் தருகிறது. இயேசுவின் விண்ணேற்றத்தை நேரில்
கண்ட திருத்தூதர்கள் இப்படிப்பட்ட ஓர் உணர்வையே
பெற்றிருப்பார்கள். மூன்று ஆண்டுகள் பணி வாழ்வில் உடனிருந்து,
40 நாள்கள் உயிர்த்த ஆண்டவராக உடனிருந்த இயேசுவை இனி அவர்கள்
காண மாட்டார்கள். அவருடைய குரல் இனி அவர்களுக்குக்
கேட்காது. அவரை இனி அவர்களால் தொட முடியாது. அவர்களுடைய கண்கள்
இனி அவர்களைப் பார்க்காது. இயேசு இல்லாமல் அவர்கள் வாழத்
தொடங்க வேண்டும். இந்த இடத்தில் அவர்கள் தங்கள் பொறுப்புணர்வின்
வலியையும் உணர்ந்திருப்பார்கள்.
இயேசுவின் விண்ணேற்றத்தைப் புரிந்துகொள்ள நமக்கு மூன்று தடைகள்
இருக்கின்றன:
(அ) இயேசுவின் உடல்
இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது மனித உடல் கொண்டிருந்தார்.
நடந்தார், நின்றார், போதித்தார், அழுதார். ஆனால், அந்த உடல்
சிலுவையில் அறையப்பட்டது. இறந்து அடக்கம் செய்யப்பட்டது.
உயிர்த்தபின்னர் அவர் இன்னொரு வகை உடலை ஏற்கிறார். அந்த
உடல் பூட்டிய அறைக்குள் நுழைகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில்
மறைகிறது. விண்ணேற்றத்தின்போது இயேசு உடலோடு மேலே
செல்கிறார் என்றில், அவருடைய உடல் எப்படிப்பட்டதாக இருந்தது?
அந்த உடலை வைத்து அவர் விண்ணகத்தில் என்ன செய்வார்? தந்தைக்கு
உடல் இல்லை. ஆவியாருக்கு உடல் இல்லை. மகனுக்கு மட்டும் உடலா?
(ஆ) காலத்தையும் இடத்தையும் கடத்தல்
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட இயேசு இவ்விரண்டையும்
கடந்து செல்கிறார். ஆனால், நான் எந்நாளும் உங்களோடு
இருக்கிறேன் என்று கூறுகிறார். இந்தப் பிரசன்னம் எப்படி
சாத்தியம்? இயேசுவின் அல்லது கடவுளின் பிரசன்னம் இந்த
உலகில் உண்மையாகவே இருக்கிறதா? அல்லது இது நம் உள்ளத்தில்
தோன்றக்கூடிய அல்லது ஒட்டுமொத்த கூட்டு நினைவில்
தோன்றக்கூடிய ஓர் உணர்வா?
இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய குறிப்பை மாற்கும்
லூக்காவும் பதிவு செய்கிறார்கள். ஆனால், விண்ணேற்ற நிகழ்வை
அவர்கள் நேரடியாகப் பார்க்கவில்லை. லூக்காவின் பதிவிலும்
ஒரு முரண் உள்ளது. அவருடைய நற்செய்தியின்படி இயேசு
உயிர்த்த நாளன்றே விண்ணேற்றம் அடைகிறார். திருத்தூதர்
பணிகளின்படி அவர் நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைகிறார்.
கடவுள் நம்மோடு (இம்மானுவேல்) என்று இறங்கி வந்த இயேசு
மத்தேயு நற்செய்தியில் இங்கேயே தங்கி விடுகிறார். யோவான்
இந்த நிகழ்வு பற்றி முழுமையாக மௌனம் காக்கிறார். இயேசுவின்
விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வா? அல்லது இறையியல்
நிகழ்வா? அல்லது யாக்கோபு, மோசே, எலியா இவர்களுடைய
வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதையாடலா?
விண்ணேற்றம் எப்படி? என்று கேட்டால், நமக்கு விடை இல்லை.
விண்ணேற்றம் ஏன்? என்று கேள்வியை சற்றே மாற்றிக்
கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தம்
சீடர்கள் இந்த உலகில் சாட்சிகளாகத் திகழ்வார்கள் என்று
அறிவிக்கிறார். உயரே எடுத்துக்கொள்ளப்படுகிறார் இயேசு.
மேகம் ஒன்று அவரை சீடர்களின் பார்வையிலிருந்து மறைக்கிறது.
மேகம் என்பது முதல் ஏற்பாட்டுப் பின்புலத்தில் கடவுளுடைய
பிரசன்னம். அங்கே தோன்றுகிற வெண்ணுடை அணிந்த இருவர்,
வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டாம் என்று சீடர்களுக்கு
அறிவுறுத்துகிறார்கள்.
இரண்டாம் வாசகத்தில், திருஅவை இயலை எழுதுகிறார் பவுல்.
ஆண்டவராகிய இயேசுவை கடவுள் தம் வலப்பக்கம் அமரச்
செய்கிறார். வலப்பக்கம் என்பது ஆற்றலைக் குறிக்கிறது.
மேலும், இயேசு திருஅவையின் தலையாக இருக்கிறார். தலையாகிய
உடல் விண்ணகம் சென்றுவிட்டது. அவருடைய மறையுடலாகிய திருஅவை
இந்த உலகில் வாழ்கிறது.
நற்செய்தி வாசகத்தில், மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின்
விண்ணேற்ற நிகழ்வை ஒரு பிரியாவிடை நிகழ்வுபோலப் பதிவு
செய்கிறார். யாக்கோபு, மோசே போல சில சொற்களைச் சொல்லி
இயேசு தம் சீடர்களிடமிருந்து விடை பெறுகிறார். கலிலேயாவில்
இந்த நிகழ்வு நடக்கிறது. கலிலேயா என்பது இயேசுவின் பணி
தொடங்கிய இடம். சீடர்களின் பணியும் அங்கேதான் தொடங்கப்
போகிறது. தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்கிறார்
இயேசு. இறுதியில், உலக முடிவுவரை எந்நாளும் நான்
உங்களுடன் இருக்கிறேன்! என்று வாக்குறுதி தருகிறார்.
விண்ணேற்ற நிகழ்வு இயேசுவுக்குத் தரக்கூடிய பொருள் என்ன?
(அ) தந்தையின் இல்லம் திரும்புகிறார் இயேசு விண்ணேற்ற
நிகழ்வோடு இயேசுவின் மனுவுருவாதல் நிகழ்வு முடிவடைகிறது.
தந்தையிடமிருந்து வந்த இயேசு தந்தையிடம் திரும்புகிறார்.
(ஆ) மாட்சி அடைகிறார் சிலுவையில் அறையப்பட்ட இறந்த இயேசு
கடவுள் தன்மையில் மாட்சிமை அடைகிறார்.
(இ) கடவுளுக்கும் மனிதர்களுக்குமான இணைப்பாளராக, பாலமாக
மாறுகிறார் பகைமை என்னும் சுவரை உடைக்கிறார். கடவுள்
தன்மையை மனிதர்களுக்குக் காட்டிய இயேசு மனித நிலையைக்
கடவுளிடம் கொண்டு செல்கிறார்.
திருத்தூதர்களுக்கு இந்த நிகழ்வு தரக்கூடிய பொருள் என்ன?
(அ) நம்பிக்கையில் அவர்கள் வளர வேண்டும் காணாமலே
நம்புவோர் பேறுபெற்றோர் என்று தோமாவிடம் கூறினார் இயேசு.
இனி யாரும் இயேசுவைக் காணப்போவதில்லை. ஆனால், அவர்மேல்
நம்பிக்கை கொள்ள வேண்டும்.
(ஆ) பணியைப் பெற்றுக்கொள்கிறார்கள் விண்ணரசுப் பணி
இயேசுவிடமிருந்து சீடர்களின் கைகளுக்கு மாறுகிறது.
(இ) தூய ஆவியாரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்
நான் சென்றாலன்றி துணையாளர் வரமாட்டார் என்று சொன்னார்
இயேசு. இயேசுவின் இந்த வாக்குறுதி நிறைவேறும் வரை சீடர்கள்
எருசலேமில் காத்திருக்க வேண்டும்.
நமக்கு இந்த நிகழ்வு தரக்கூடிய பொருள் என்ன?
(அ) வான் நோக்கி கண்கள் நம் கண்கள் வான் நோக்கி, மேல்
நோக்கி இருக்க வேண்டும். இந்த உலகையும் தாண்டிய வாழ்வு
உண்டு என்பதை நாம் மனத்தில் இருத்த வேண்டும். நம்
எண்ணங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
(ஆ) தரையில் ஊன்றிய கால்கள் கால்கள் அன்றாட வாழ்வில்
வேரூன்றியதாக இருக்க வேண்டும். நம் பொறுப்புணர்வை ஏற்று
வாழ்தல்.
(இ) இயேசுவின் உடனிருப்பை உணர்தலும் வழங்குதலும்
இறைவார்த்தையில், நற்கருணையில், திருஅவையில், இயற்கையில்,
எளியவரில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவைக் கண்டுகொள்தல்.
அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துதல்.
எக்காளம் முழங்கிடவே உயரே எழுகின்றார் ஆண்டவர் என்று
இன்றைய பதிலுரைப்பாடல் பல்லவியை நாம் மொழிகிறோம். உயரே
எழுகின்ற ஆண்டவர்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம். நம்
கால்களை நன்றாகத் தரையில் ஊன்றி வாழ்வோம்.
மிகச்சிறந்த மறைப்போதர் கெர்மித் லாங் (Kermith Long 1926-2009).
இவர் எல்லாக் கிறிஸ்தவ அவைகளையும் சார்ந்த, தலைவர்கள் கூடியிருந்த
ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, இவ்வாறு பேசினார்: "தரமான கல்வியோ,
நல்ல கட்டமைப்போ; இன்றைக்கு இருப்பது போன்ற பெரிய பெரிய கோயில்களோ...
இப்படி எதுவுமே இல்லாமல்கூட, இயேசுவின் சீடர்கள் மனிதர்களைப்
பிடிப்பர்களாக மாறிப் பலரையும் ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டு வந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு நம்மிடம் தரமான கல்வியும் நல்ல கட்டமைப்பும்
பெரிய பெரிய கோயில்களும் இருகின்றன. அப்படியிருந்தும் நம்மால் மனிதர்களைப்
பிடிப்பவர்களாக மாற முடியவில்லை. மாறாக, நாம் நம்மிடம் இருக்கின்ற
இறைமக்களை எப்படித் தக்கவைப்பது என்றும் ஒரு திருஅவையில் உள்ள இறைமக்களை
இன்னொரு திருஅவைக்கு எப்படி இழுப்பது என்றும் சிந்தித்துக்
கொண்டிருக்கின்றோம்."
கெர்மித் லாங் இவ்வாறு பேசி முடிந்ததும் கூட்டத்திலிருந்து ஒருவர்
எழுந்து, "இயேசுவின் சீடர்களைப் போன்று இன்று நம்மால் மனிதர்களைப்
பிடிக்க முடியவில்லை என்று சொல்கிறீர்கள்...! என்ன செய்தால், அவர்களைப்
போன்று நம்மால் மனிதர்களைப் பிடிக்கமுடியம்?" என்றார். அதற்கு
கெர்மித் லாங், "மூன்று முதன்மையான செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று.
நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும். இரண்டு, அறிவிக்கப்பட்ட
நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்டோருக்குத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.
மூன்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததைக்
கற்பிக்கவேண்டும். இம்மூன்று முதன்மையான செயல்களையும் நாம்
செய்தால், இயேசுவின் சீடர்களைப் போன்று நம்மாலும் மனிதர்களைப்
பிடிப்பவர்களாக மாற முடியும்; பலரையும் இயேசுவுக்குள் கொண்டுவரமுடியும்"
என்றார்.
ஆம், நாம் அறிவித்தல், அளித்தல், கற்பித்தல் ஆகிய முப்பெரும் பணிகளைச்
செய்தால், நம்மாலும் ஏரளாமான மனிதர்களைப் பிடித்து,
கிறிஸ்துவுக்குள் கொண்டுவர முடியும். இன்று நாம் ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்றம் அடையும்
முன்பாகத் தன்னுடைய சீடர்களிடம், மேலே சொல்லப்பட்ட மூன்று முதன்மையான
கட்டளைகளைத் தந்தார். இம்மூன்று கட்டளைகளின் முக்கியத்துவம் என்ன...?
இவற்றை நாம் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது...? என்பன குறித்து
சிந்திப்போம்.
நற்செய்தியை அறிவிப்போம்
நாம் மிகவும் அன்பு செய்த ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து
செல்கின்றார் எனில், அவர் இறுதியாகச் சொல்லக்கூடிய ஒவ்வொரு
சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்தவிதத்தில்
இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்து, விண்ணகம் செல்லும்முன்
சொன்ன ஒவ்வொரு சொல்லும் அல்லது ஒவ்வொரு கருத்தும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களைவிட்டுப்
பிரிந்து செல்லுமுன், மூன்று முதன்மையான கருத்துகளைச் சொன்னார்; அதில்
முதலாவதாக வருவது; "எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்பதாகும்.
எல்லா மக்களினத்தாரையும் எப்படிச் சீடராக்குவது என்று நாம்
சிந்திப்போம்.
இயேசு தன்னுடைய சீடர்களை முதன்முறையாகப் பணித்தளத்திற்கு அனுப்பியபொழுது,
அவர்களிடம், பிறஇனத்தாரின் எப்பகுதிக்கோ, சமாரியாவின் எந்த நகருக்குள்ளோ
நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களிடமே
செல்லுங்கள் (மத் 10: 5-6) என்றார். இங்கோ இயேசு, "எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்" என்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தி
ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
அப்பொழுதுதான் எல்லாரையும் இயேசுவின் சீடராக்க முடியும். மேலும் இயேசு
தன் சீடர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகளைச் சாதாரண வார்த்தைகளாகச்
சொல்லவில்லை; கட்டளையாகச் சொல்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய
நாம் ஒவ்வொருவரும், நற்செய்தி அறிவிப்பு என்பது நம்மேல் சுமத்தப்பட்ட
மிகப்பெரிய பொறுப்பு (1 கொரி 9: 17) என்பதை உணர்ந்து, உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்து, எல்லாரையும் இயேசுவின்
சீடராக்கவேண்டும்.
திருமுழுக்கு அளிப்போம்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த இரண்டாவது செய்தி அல்லது கட்டளை
"தந்தை, மகன் தூய ஆவியார் பெயரால் திழுமுழுக்குக் கொடுங்கள் அளியுங்கள்
" என்பதாகும். திருமுழுக்குக் கொடுப்பதற்கு முன்பாக,
திருமுழுக்கில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
திருமுழுக்கினால் ஒருவர் கடவுளோடு ஒன்றிணைகின்றார். இதைப் புனித பவுலின்
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் பாவத்திற்கு இறந்து,
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்றவராக மாறுகின்றார் (உரோ 6:
11). திருமுழுக்கினால் ஒருவர் கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து விட்டால்,
அவர் தன்னை முற்றிலும் இயேசுவிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னுடைய
விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளி, இயேசுவின் விரும்பமே தன்னுடைய
விருப்பமென வாழ்வார். இயேசுவின் விருப்பம், எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குவது. ஆகையால், நாம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்
ஒருவருக்குத் திருமுழுக்கு அளிக்கின்றபொழுது, அவர் இயேசுவோடு ஒன்றிணைகின்றார்.
அவ்வாறு ஒன்றிணையும் நபர், எல்லா மக்களினத்தரையும் சீடராக்கும் பணியிடச்
சிறப்பாகச் செய்யும் அழைப்பினைப் பெறுகின்றார்.
இயேசு கற்றுக்கொடுத்ததைக் கற்பிப்போம்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கின்ற மூன்றாவது கட்டளை;
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி
கற்பியுங்கள்" என்பதாகும். இயேசு தன்னுடைய சீடர்களுக்குப் பலவற்றைக்
கற்பித்தார். அவை எல்லாவற்றின் சாரம்சமாக இருப்பது, அவருடைய அன்புக்
கட்டளைதான் (யோவா 13: 34). ஆகையால், இயேசுவின் சீடராக இருக்கின்ற
ஒவ்வொருவரும், அவருடைய அன்புக் கட்டளையை எல்லாருக்கும் கற்பிக்க
வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கும்படி கற்பிக்கவேண்டும்.
இன்றைக்குக் கற்பிக்கும் பணி மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஏனென்றால், இன்றைக்குப் பலர் போலியானதையும் பொய்யானதையும் கற்பித்து,
அவற்றை மக்கள் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று வலியுறுத்திக்
கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில், நாம் உண்மையானதும்
வாழ்வளிப்பதுமான இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்குக்
கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின்மீது மக்களுக்கு நம்பிக்கை
உண்டாகும் (உரோ 10: 17) அந்த நம்பிக்கை அவர்களையும் இயேசுவின் சீடர்களாக
மாற்றி, அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத்
தூண்டும்.
இப்படிப்பட்ட அரும்பணியை நாம் செய்யும்பொழுது, இயேசுவின் உடனிருப்பு
நமக்கு இருக்குமா? என்ற கேள்வி எழலாம். இயேசுவின் உடனிருப்பு நிச்சயமாக
இருக்கும் என்பதுதான், நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய,
"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற
சொற்களில் பதிலாக இருக்கின்றது. ஆகையால், நாம் இயேசுவின் உடனிருப்பை
உணர்ந்தவர்களாய், அவர் நமக்குக் கொடுத்த அறிவிப்போம்; அளிப்போம்;
கற்பிப்போம் என்ற இம்மூன்று கட்டளைகளையும் கடைப்பிடித்து, எல்லா மக்களினத்தாரையும்
இயேசுவின் சீடராக்குவோம்.
சிந்தனை
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்பார்
கார்ல் மாக்ஸ். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக்
கொண்டாடும் நாம், "எல்லா மக்களினத்தையும் சீடராங்குங்கள்" என்ற நல்ல
குறிக்கோளை அடைவதற்குத் தொடர்ந்து முயன்று, எல்லாரையும் இயேசுவின்
சீடராக்குவோம். அதன்மூலம் நாம் வரலாறு சொல்லும் இயேசுவின் உண்மையான
சீடராக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, குடிகார அந்தோணி பங்குத் தந்தையிடம்
சென்று, "இன்று காலை ஆண்டவரின் விண்ணேற்பு விழா. விண்ண கம்,
மண்ணகம், மோட்சம், நகரம் என்று பிரசங்கம் வச்சீங்க. மோட்சம்,
நரகம் எங்க சாமி இருக்கு?" என்றான். பங்குத் தந்தை , "நாளை
மாலை 7 மணிக்கு குடிக்காமல் வா சொல்கிறேன்" என்றார். அதேபோல்
அந்தோணியும் வந்தான். ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே பலர் குடித்துவிட்டு, சண்டையும், கலவரமும் நடந்து
கொண்டிருந்தது. இதுதான் நரகம் என்றார் பங்குத் தந்தை . சற்று
தூரம் சென்று வேறு ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே
மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்குள்ள ஆலயத்தில் செபமாலை
சொல்லி அமைதியாகச் செபித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு
அங்குள்ள ஏழை பிள்ளைகளின் படிப்பிற்கு நாம் எந்த வகையில்
உதவி செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். " இதுதான்
அந்தோணி மோட்சம் என்றார். இதில் நீ எதை மேற்கொள்ள வேண்டும்
என்று நீயே முடிவு செய்துக்கொள்" என்றார் பங்குத் தந்தை.
இயேசுவின் விண்ணேற்பு நமக்கு வலியுறுத்தும் கருத்து, தந்தை
மகன் உறவின் அடிப்படையில் இயேசு வாழ்ந்து காட்டி, தந்தையின்
விருப்பத்தை நிறைவேற்றினார். மகனின் அர்ப்பணத்திற்கும், தன்
விருப்பத்திற்கும், உயிர் கையளிப்பிற்கும் கொடுத்த ஒரு
மாபெரும் அங்கீகாரம், மாபெரும் கொடைதான் விண்ணேற்றமாகும்.
தனது பணி வாழ்வை மண்ணுலகில் தொடங்கும் முன் இயேசு தனது இலக்கு
எது? என்று சோதித்துப் பார்த்தார். அது தெளிவான பிறகு பணியைத்
தொடங்கினார். அதற்கு திருமுழுக்கை அடித்தளமாகக் கொண்டார்.
திருமுழுக்கினால் அவர் பெற்ற அனுபவம் தந்தையின் விருப்பத்தோடு
இணைந்து போனதால் இயேசுவின் சிந்தனை, பணி, இறுதி இலக்கு இவைகளின்
நிறைவே சிலுவைச் சாவு. தனது இலக்கின் இறுதியில் சொல்கிறார்
: தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக்.
23:46). வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தையே நோக்கமாகக்
கொண்டு செயல்பட்டதால் இந்த அன்பு மகனுக்குத் தந்தையிடமிருந்து
கிடைக்கப்பெற்ற மாபெரும் கொடையே விண்ணேற்பு. இது இயேசுவோடு
முடிந்து விடுவதல்ல. நம் அனைவருக்கும் ஒரு முன்னோடி நிகழ்வாகும்.
இறைச்சாயலில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் நமது ஆவியை தந்தையிடம்
ஒப்படைக்கும் வரை அவரின் விருப்பத்தைச் சென்ற இடமெல்லாம்
மேற்கொண்டு நன்மையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இயேசுவின் விண்ணேற்பு நிகழ்விலிருந்து நாம் அறிந்துகொள்வது,
இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும்
மக்களின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்தாற்ற அழைக்கப்படுகிறோம்.
நமது திறமைகளையும், அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுத்து
வாழக் கற்றுக்கொண்டால் விண்ணேற்பு விழா பொருளுள்ள விழாவாக
அமையும். இந்த மண்ணக வாழ்விலே, ஒரு விண்ணக வாழ்வை உருவாக்குவதே
அதன் நோக்கமாகும். மண்ணக வாழ்வு என்பது ஒரு மாபெரும் கடல்.
இந்தப் பிறவிப் பெருங்கடலில் நாம் சந்திக்கும் புயலை, கொந்தளிப்பை,
தடுமாற்றத்தை உறுதியுடன் தாங்கி இறுதிவரைப் போராடி கரைசேரக்
கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக் கடலில் நீந்தத் தெரியாமல், வாழ்வின் பயன்களை,
அர்த்தங்களை அறியாமல் வாழ்பவர்கள் பாதி வாழ்விலேயே
மூழ்கிப் போவார்கள்.
பலர் கடினப்பட்டு போராடி நீந்துவர். கரை சேர வேண்டும் என்ற
எண்ணம் இருந்தாலும் துன்பம். சுமை என்று வந்தவுடன் துவண்டு
போய்விடுவார்கள்.
சிலர் பலத்தை நம்பி சவாலாக நீந்துவர். தடைவந்தாலும், தடுமாறினாலும்,
இடர் வந்தாலும் அதை சமாளிப்பர். ஆனால் வாழ்க்கைக் கடலில்
கரை சேரும் முன் உலக ஆசைகளால் இலக்கை அடையும் முன்பே
மூழ்கி விடுவர்.
வெகு சிலரே இன்பமானாலும், துன்பமானாலும், தடைகள் வந்தாலும்,
விடாமுயற்சியுடன் இறைபலத்தோடும், நம்பிக்கையோடும் போராடி
வெற்றி பெறுவர். இவர்கள் மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் கண்ட
மகத்தான மனிதர்கள் ஆவர்.
பணக்காரன் உலக ஆசைகளால் நீதியை, நேர்மையை இழந்தான். நரகத்தை
வாழ்வாக்கிக் கொண்டான். ஏழை லாசர் வறுமையிலும், நேர்மையை
வாழ்வாக்கிக் கொண்டதால் விண்ணக வாழ்வை வழியாக்கிக்
கொண்டார். இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். துன்பத்
துயரங்களைத் தாங்கி இறுதிவரை நிலைத்து நின்றதால் தந்தை அவருக்குக்
கொடுத்த பரிசுதான் விண்ணகம். துன்ப துயரங்களின் இறுதி இலக்கு
நன்மைக்கே, நியாயத்திற்கே, தந்தைக்கே என்பதே இயேசுவின்
விண்ணேற்பு நமக்கு வலியுறுத்துகிறது. இயேசுவின் விண்ணேற்பை
நமதாக்கிக் கொண்டு அவருக்குச் சான்று பகிர்ந்து வாழ
வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் இயேசுவை நன்கு அறியவும்,
உண்மையை வெளிப்படுத்தவும், அவர்மேல், நிறைவான நம்பிக்கை,
கொண்டு அவரின் வல்லமை செயல் வடிவம் பெறச் செய்யவும் முன்
வர வேண்டும் என்று இரண்டாம் வாசகம் தெளிவுப்படுத்துகிறது (எபே.
1:17-23). இவைகள் அனைத்திலும் நிலைத்து நின்று சான்று பகர
வேண்டுமானால் தூய ஆவியின் துணை நமக்கு வேண்டும் (தி.ப.
1:7-9).
விண்ணகத் தந்தையின் சாட்சிகளாய் வாழ வேண்டுமெனில்,
வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்த
வேண்டும். அவரின் சிந்தனைகள், பணி வாழ்வு, இறுதி இலக்கு இவைகளை
நமதாக்கி, இறுதிவரை நிலைத்து நின்று மண்ணகத்திலே ஒரு விண்ணகத்தை
உருவாக்க முன் வர வேண்டும்.
இன்று விண்ணகத் தந்தை நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி :
மகனே! மகளே! நான் விட்டுச் சென்றப் பணியைத் தொடர உனது கரங்களை
என் வழியாகப் பிறருக்குத் தருவாயா...? நடந்து சென்று,
சென்ற இடமெல்லாம் நன்மை செய்த எனது பணியைத் தொடர , உனது
கால்களை என் வழியாகப் பிறருக்குத் தருவாயா....? உள்ளம் உடைந்தவர்களுக்கு
ஆறுதல் கூற என் வழியாக உனது இதயத்தைத் தருவாயா...? இந்தக்
கேள்விகளுக்கு நாம் சொல்லும் பதில் என்ன? சிந்திப்போம்!
உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்
(திப 1:8). இதுதான் விண்ண கம் எழுந்து சென்ற இயேசு
அவரது சீடர்களுக்குக் கொடுத்த அன்புக்கட்டளை. நாம் இயேசுவுக்குச்
சாட்சிகளாய் வாழ விரும்பினால் நாம் அவருடைய வாழ்வின்
நீளம், அகலம், உயரம் அனைத்தையும் தெளிவாகத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும். நமக்குத் தெரியாத ஒன்றுக்கு எப்படி
சாட்சி சொல்ல முடியும்?
விண்ணகம் எழுந்து சென்றிருக்கும் இயேசு எப்படிப்பட்டவர்
என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.
இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விண்ணகத்திற்குள்
நுழைந்தார். அங்கிருந்த அழகு வானதூதர்கள் அவரைச்
சூழ்ந்து கொண்டு, இயேசுவே, உலக மக்கள் மீது அன்பு மழையைப்
பொழிந்து, அவர்களுக்கு உமது உயிரையும் கொடுத்தீர். அதற்குப்
பரிசாக அந்த மக்கள் உமக்கு என்ன கொடுத்தார்கள்? என்று
கேட்டார்கள். இயேசு வானதூதர்களிடம் அவரது உடலிலிருந்த
ஐந்து காயங்களையும் காட்டி, இதுதான் அவர்கள் எனக்கு அளித்த
பரிசு என்றார். அதற்கு வானதூதர்கள், என்ன ஆண்டவரே
வேடிக்கையாக இருக்கின்றது! அன்புக்குப் பரிசு காயமா?
என்றார்கள். அதற்கு இயேசு, அன்பு எங்கே இருக்கின்றதோ
அங்கே காயமிருக்கும் என்றார். அதற்கு வானதூதர்கள்,
நாங்களும்தான் உலகத்தை அன்பு செய்கின்றோம். ஆனால் எங்கள்
மீது எந்தக் காயமும் இல்லையே என்றார்கள். உங்கள் மீது
காயங்கள் இல்லையென்றால், நீங்கள் உண்மையிலேயே உலகத்தை
அன்பு செய்யவில்லை என்பது பொருள் என்றார். அதற்கு மேல்
இயேசுவிடம் வானதூதர்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை!
காயங்கள் என்றால் துன்பங்கள்! காயங்கள் என்றால் துயரங்கள்!
காயங்கள் என்றால் இன்னல்கள்! காயங்கள் என்றால் இடையூறுகள்!
காயங்கள் என்றால் சித்திரவதைகள்! காயங்கள் என்றால்
சிலுவைகள்!
லூக் 14:27-இல் இயேசு, தம் சிலுவையைச் சுமக்காமல் என்
பின்வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது என்கின்றார்.
இயேசுவுக்குச் சான்றுபகன்ற 12 திருத்தூதர்களில் 11
பேர் மறைச் சாட்சிகளாகக் காயப்பட்டு, இரத்தம் சிந்தி
இறந்தார்கள். நூற்றுக்கு நூறு உலகை அன்பு செய்தவர்களின்
வாழ்க்கையெல்லாம் காயங்கள் நிறைந்த மரணத்தில்தான்
முடிந்திருக்கின்றது! ஆபிரகாம் லிங்கனுக்கும், மகாத்மா
காந்திக்கும், ஜான் கென்னடிக்கும் இந்த உலகம் எதைப் பரிசாகக்
கொடுத்தது என்பதை நாமறிவோம்!
இன்றையச் சூழலிலே கிறிஸ்துவின் கட்டளைப்படி (நற்செய்தி)
எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க அழகான வழி அன்புதான்.
அன்புக்கு இணையான வேறொரு சக்தி இந்த உலகில்
வேறொன்றுமில்லை. அன்பு கடவுளுக்கு இணையானது (1 யோவா
4:8). இதனால்தான் புனித பவுலடிகளார், எதிர்நோக்கு, நம்பிக்கை,
அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே
தலை சிறந்தது (1 கொரி 13:13) என்கின்றார்.
அன்பு செய்ய முன்வராமல், காயப்பட முன்வராமல் யாராவது
விண்ணில் வாழும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழ்கின்றேன்
என்று சொன்னால் அவர்கள் சொல்வது பொய். ஒருவர்
மீதிருக்கும் காயங்களே அவர்களின் சாட்சிய வாழ்வை அளக்கும்
அளவுகோல்களாகும். உண்மையான சாட்சிய வாழ்வு இதுவரை நாம்
வாழாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒரு
முக்கியமான காரணம் நாம் இன்னும் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்து யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமலிருப்பதாகும்
(இரண்டாம் வாசகம்).
இதுவே நமது செபமாக இருக்கட்டும் : தூய ஆவியாரே, ஞானத்தை
எங்கள் மீது பொழிந்து இயேசுவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும்
எங்களுக்கு வெளிப்படுத்தும். எங்களது அழைப்பிற்கேற்ற
சாட்சிய வாழ்வு வாழ, எங்கள் அயலாருக்காகக் காயப்பட எங்களுக்கு
வேண்டிய உடல், உள்ள, மன வலிமையைத் தந்தருளும். ஆமென்.
மேலும் அறிவோம்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே
உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல்,
பொருள், ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.
"உங்கள் சொந்த ஊர் எது? என்று ஒருவரைக் கேட்டதற்கு அவர்,
*சொந்தமாக ஊர் வாங்க என்னிடம் வசதி இல்லை " என்றார். தமது
சொந்த ஊர் எது? திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நமக்கோ
விண்ணகமே தாய்நாடு" (பிலி 3:20). விண்ணகமே நமது சொந்த ஊர்;
நமது தாய்நாடு, இவ்வுலகில் நாம் அன்னியராய் வாழ்கின்றோம்
(1 பேது 1:17).
விண்ணகம் நமது சொந்த ஊர் என்றாலும், அங்கே செல்லத் தயக்கம்
காட்டுகிறோம். ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "விண்ண கம்
செல்ல விரும்புகிறவர்கள் கைகளை உயர்த்துங்கள்" என்று
கேட்டார். ஒரு மாணவனைத் தவிர மற்ற அனைவரும் கைகளை உயர்த்தினர்.
கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா! உனக்கு விண்ணகம் செல்லப்
பிரியமில்லையா?" என்று கேட்டதற்கு அம் மாணவன் கூறியது:
"விண்ண கம் செல்லப் பிரியம்தான் சார்; ஆனால், பள்ளிக்கூடம்
முடிந்தவுடன் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துவிட
வேண்டும் என்று என் அப்பா கண்டிப்பாகக் கூறிவிட்டார்."
விண்ணகம் செல்ல நமக்கு விருப்பம்தான். ஆனால் இம்மண்ணகத்தை
விட்டுப் போகத்தான் நமக்கு மனம் இல்லை,
கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம்
கொண்டாடுகிறோம். அவர் ஏன் நம்மோடு என்றும் இருக்காமல்
விண்னாகம் சென்றார். அவர் விண்ணகம் சென்றது இம் மண்ணக
வாழ்வின் துன்ப துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
அல்ல; மாறாக, நமது முதல்வரும் தலைருமான அவர் சென்ற இடத்திற்கே
நாமும் ஒருநாள் செல்வோம் என்ற நம்பிக்கையை நம்மில் உருவாக்குவதற்கே
என்று இன்றைய விழாவின் தொடக்கவுரையில் திருச்சபை நமக்கு விளக்கம்
அளிக்கின்றது.
கிறிஸ்துவின் விண்ணேற்றம் நமக்கு முன்வைக்கும் இறையியல் உண்மைகளில்
ஒருசில: 1. கிறிஸ்து தமது மனித இயல்பில் இறுதியாக ஆனால் உறுதியாக
விண்ணக மாட்சியை அடைந்து விட்டார். 2.தலையாகிய அவர் இருக்கும்
இடத்தில் அவருடைய உடலாகிய நாமும் ஒருநாள் இருப்போம் என்பது
உறுதி. 3. அவர் விண்ணகத்தில் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து
தமக்காகத் தந்தையிடம் அல்லும் பகலும் பரிந்து பேசுகிறார்,
4.உலக முடிவுவரை அவர் நம்முடன் இருக்கின்றார். 5.உலக
முடிவில் அவர் மீண்டும் மாட்சிமையுடன் வருவார். எப்போது வருவார்
என்பது நமக்குத் தெரியாது. காலங்களையும் நேரங்களையும் அறிவது
நமக்கு உரியது அல்ல (திய 1:7). 6.எல்லா மக்களையும் அவருடைய
சீடராக்கும் கடமையை நம்மிடம் அவர் ஒப்படைத்துள்ளார் (மத்
28:18-19).
மத்தேயு நற்செய்தி -இம்மானுவேல்" நற்செய்தி என அழைக்கப்படுகிறது.
அந்நற்செய்தி "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப்
பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவா
.... இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது
பொருள்" (மத் 1:22-23), என்று தொடங்குகிறது. அதே தற்செய்தி
"இதோ உலக முடிவுவரை எத்நாளும் உங்களுடன் இருக்கிறேன்" (மத்
28:20) என்ற சொற்களுடன் முடிகிறது.
கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தபோது அவர் விண்ணகத்
தந்தையை விட்டுப் பிரியவில்லை. "நான் தனியாய் இருப்பதில்லை,
தந்தை என்லோடு இருக்கிறார்" (யோவா 16:32) என்று அவரால் உறுதிபடக்
கூற முடிந்தது. அவ்வாறே, கிறிஸ்து மண்ணகத்திலிருந்து விண்ணகம்
சென்றபோது அவர் விண்னக மாந்தரை விட்டுப் பிரியவில்லை . உலக
முடிவுவரை அவர் எத்தாளும் நம்முடன் இருக்கின்றார். விண்ணகம்
சென்ற பிறகும் அவர் தம் சீடர்களுடன் உடனிருந்து செயல்பட்டு,
அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்
என்று மாற்கு நற்செய்தி கூறுகிறது (மாற் 18:20).
விண்ணகம் சென்ற கிறிஸ்து புதுவிதமான உடனிருப்பை ஏற்படுத்தினார்.
அவர் தமது சீடர்கள் மேல் தமது ஆவியைப் பொழிந்தார், எனவே
அவருடைய ஆவியின் மூலம், அதாவது, தூய ஆவியாரின் வழியாக அவர்
தம்முடன் இருந்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.
அவர் இவ்வுலகில் இருந்தபோது உடல் ரீதியாக ஓர் இடத்தில் மட்டும்
இருந்தார். ஆனால் விண்ணகம் சென்ற பிறகு அவர் தமது ஆவியின்
வழியாகப் பிரபஞ்சம் முழுவதும் உடன் இருக்கிறார். அவர் அனைத்திலும்
அனைத்துமாக இருக்கிறார் (கொலோ 2:10).
நமது பணி வானத்தை அணானாந்து பார்த்துக் கொண்டிருப்பது அல்ல
(திப 1:11); மாறாக அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடாத்து
ஆற்றுவதாகும். பேய்களை விரட்டி, நோய்களைப் போக்கி, புதிய
மொழிகளைப் பேசவேண்டும். சாதி, மத, இனம் என்ற பிரிவினைப்
பேயை ஒட்டி, வேற்றுமை என்ற நோயைக் குணமாக்கி, அன்பு மொழி
பேசவேண்டும். நீதி குடிகொண்டிருக்கும் புதிய மண்ணகத்தைப்
படைக்க வேண்டும் (2 பேது 3:13).
ஓர் அரசியல்வாதி, "நான் கச்சத்தீவை மீட்கப் போகிறேன்" என்று
தன் மனைவியிடம் கூற, அவர் அவரிடம், "முதலில் வங்கியில் அடகு
வைக்கப்பட்டுள்ள எனது தகையை மீட்டுத் தாருங்கள்" என்றார்.
மனைவியின் நகையை மீட்டுத்தர இயலாதவர், கச்சத்தீவை மீட்க
முடியுமா? அவ்வாறே இம்மையில் மக்களின் கண்ணீரைத் துடைக்க
இயலாத் திருச்சபை எவ்வாறு அவர்களை விண்ணகம் அழைத்துச்
செல்ல முடியும்? எனவே, மண்ணக மக்களின் கண்ணீரைத் துடைக்க
ஆவன செய்வோம்.
"கீழே விழுந்தாலும் மேலே எழுந்திருப்பேன்; சக்கையாக
மாறினாலும் சர்க்கரையாக இனிப்பேன்: சாவைச் சந்தித்தாலும்
சரித்திரம் படைப்பேன்" என்று சூளுரைப்போம். அப்போது மண்ணகமே
விண்ணகமாகும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் விரைவில்
வரும். மாரனாத்தா! ஆண்டவரே வருக (1 கொரி 16:22).
ஐயமில்லாதவர்களுக்கு இம்மண்ணகத்தைவிட விண்ணகம் அருகாமையில்
உள்ளது என்று வள்ளுவர் கூறுகிறார்.
1969ம் ஆண்டு ஜூலை 20ம் நாள். மனித வரலாற்றின் மறக்க
முடியாத நாள். அன்றுதான் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்
வெண்ணிலவில் காலடி வைத்துச் சொன்னார்: "That is one small
step for a man, one giant leap for mankind". தனி மனிதனுக்குச்
சின்னஞ்சிறு காலடிதான். ஆனால் மனித சமுதாயத்திற்கோ மகத்தான
சாதனை - ஓர் அசுரத் தாவல்!
விண்வெளிக் கப்பலில் ஒரு காலும் வெண்ணிலவு மண்ணில் ஒரு
காலுமாக இருந்த அந்த ஒரு கணம், நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டுமல்ல
இந்தப் பூமியில் இருந்த ஒவ்வொரு மனிதனும் புளகாங்கிதம் அடைந்தான்.
காரணம்? அதனை ஆம்ஸ்ட்ராங் என்ற தனிமனிதனின் சாதனையாக அல்ல,
மனித இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தனது சாதனையாக தானே
வெண்ணிலவில் கால் ஊன்றியது போல உணரவில்லையா?
அதுபோலவே இயேசுவின் விண்ணேற்றமும், வானகத்தந்தை இறைமகன் இயேசுவைச்
சாவினின்று உயிர்த்தெழச் செய்து வானகத்திற்கு எடுத்துக்
கொண்டார். இயேசுவின் விண்ணேற்றத்தில் வெளிப்பட்ட இறைவல்லமை
ஒருநாள் நம்மிலும் செயல்படும். நம்மையும் சாவினின்று உயிர்த்தெழச்
செய்து நாமும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதற்கு
இயேசுவின் விண்ணேற்றம் ஒரு முன்னடையாளம் கடவுள் மனிதனான இயேசு
பெற்ற விண்ணேற்ற மகிமை, நமது மனித இயல்பின் இறுதி மகிமையின்
உறுதியான முன்னறிவிப்பு,
அதனால்தான் "இவ்வாறு அவர் சென்றது எங்கள் தாழ்நிலையை
விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று, மாறாக, எங்கள் தலைவரும்
முதல்வருமாகிய அவர் சென்ற அவ்விடத்துக்கு அவர் உறுப்பினர்களாகிய
நாங்களும் அவரைப் பின்தொடர்ந்து செல்வோம் என்று நம்பிக்கை
கொள்வதற்கேயாம்" என்று திருப்பலித் தொடக்கவுரையில்
தெம்போடு பாடி மகிழ்கிறது திருச்சபை.
"தலை நுழைந்தால் வால் நுழைந்தது மாதிரி தான்" என்பது
முதுமொழி. நம் தலையாகிய கிறிஸ்து விண்ணகம் சென்றுள்ளது,
நாம் அனைவரும் விண்ணகம் சென்று விடுவோம் என்பதற்கான
முன்னோட்டமே!
1968ல் நிலவுப் பூமியில் இறங்க அமெரிக்க விண்வெளி வீரர்கள்
செய்த முதல் முயற்சியை உலகமே இதயம் படபடக்க எதிர்பார்த்தது.
அந்த முயற்சியில் வெற்றி பெற்றதும் வெள்ளை மாளிகைக்கு வந்த
செய்தி: "ஏற்ற பணி இனிது முடிந்தது" (Mission successfully
accomplished). இன்றைய விண்ணேற்ற விழாவும் இதே செய்தியைத்
தான் கொண்டு வருகிறது.
இயேசுவுக்கு விண்ணேற்றம் என்பது தந்தையிடம் திரும்புவது.
அந்த நினைப்பில் மகிழ்கிறார். தந்தையான கடவுள் திட்டமிட்டு
வகுத்த படி இயேசு மானிட வாழ்வை முழுமையாக வாழ்ந்து
முடித்தார். தனக்குத் தந்த பொறுப்பைச் சிறப்பாக
நிறைவேற்றினார். அவருக்கு உணவும் உயிர் மூச்சுமாக இருந்தது
எப்போதும் இறைத்திருவுளமே (யோவான் 4:34). உலக வாழ்வின்
முடிவில் அவரது இறுதிவார்த்தை "எல்லாம் நிறைவேறிற்று"
(யோவான் 19:30). இறுதி இரவு உணவு வேளையில் நிறைவோடு மன்றாடினார்.
"நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச்
செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.
தந்தையே, உலகம் தோன்றுமுன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர்.
இப்போது உம்திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்"
(யோவான் 17:4,5)
விண்ணேற்றத்தில், தான் ஏற்ற இந்த மானிட இயல்பு பெறும் மகிமையை
நினைத்து இயேசு மகிழ்கிறார். அவர்தன் தந்தையிடம் திரும்புவது
தந்தையின் நெஞ்சத்தில் இருந்த நித்தியவார்த்தை (Eternal
word) யாக அல்ல, மனிதனான வாக்காக (word made flesh) இனி
அவர் என்றென்றும் இறைமகன் மட்டுமல்ல மானிட மகன். "இவர் மனிதன்
என்ற முறையில் தாவீதின் வழிமரபினர். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட
நிலையில் வல்லமையுள்ள இறைமகன் இவர் இறந்து உயிர்தெழுந்ததால்
இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது" (உரோமை 1:3,4) கன்னிமரியிடமிருந்து
பிறந்த அவர் நம்மோடு நம்மில் ஒருவரானார். "எல்லா வகையிலும்
நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்"
(எபி.4;15). சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
தன்னையே தாழ்த்தியதால், இயேசுவே ஆண்டவர் என்று எல்லா
நாவுமே அறிக்கையிடும் அளவுக்குத் தந்தை அவரை உயர்த்தினார்
(பிலிப்.2:8-11). தனது விண்ணேற்றத்தால் நமது மனித இயல்பை
மூவொரு கடவுளின் இதயத்துக்குள்ளேயே கொண்டு போய்ச்
சேர்த்துவிட்டார். மகிமையடைந்த இயேசுவில் நாம் ஒவ்வொருவரும்
ஏதோ ஒரு விதத்தில் மகிமை அடைந்து விட்டோம்.
நம்மை எவ்வளவு உயர்வாக மதித்திருந்தால் தன் பணியை நமக்கும்
விட்டுச் சென்றிருப்பார்! "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து
அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள்
போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்.
28:18,19). "எருசலேமிலும், யூதேயா, சமாரிய முழுவதிலும் உலகின்
கடை எல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"
(தி.ப.1:8). நம்பிக்கை என்னும் அருள்கொடை அனைத்து மக்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இயேசுவே மீட்பராக ஏற்றுக்
கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பெற வேண்டும். இனி சீடர்கள்
செய்ய வேண்டிய பணி தெளிவானது. சென்றடைய வேண்டிய இலக்கு உறுதியானது.
பொறுப்பை ஏற்கத் தயக்கமா? சாட்சியாக வாழ சக்தி உண்டா என்ற
ஐயமா? நாம் தனியாக இல்லை இயேசு நம்மோடு இருக்கிறார். தூய
ஆவியால் நம்மை நிறைத்திருக்கிறார். அவரது மறையுடலின் உறுப்புக்கள்
அன்றோ நாம்!
விண்ணேற்றத்தில் மகிழ நமக்கு எத்தனை காரணங்கள்!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
உலக சமூகத் தொடர்பு நாள்
புகழ்பெற்ற விவிலியப் போதகர், பில்லி கிரஹாம் (Billy
Graham) அவர்கள், 67 ஆண்டுகளாக தன் போதகப்பணியை இடைவிடாமல்
ஆற்றி, 2014ம் ஆண்டு, தன் 96வது வயதில் ஒய்வு பெற்றார்.
2018ம் ஆண்டு, தன்100வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஆலயங்கள்,
அரங்கங்கள், மற்றும் தொலைகாட்சியில் அவர் ஆற்றியுள்ள உரைகள்,
பல கோடி மக்களின் உள்ளங்களைத் தொட்டன.
அவரது உரைகளை, தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி,
ஒருநாள், கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார்.
"அன்பு ஐயா, நற்செய்தியைப் போதிக்கும்படி, கடவுள் என்னை
அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு
குழந்தைகள் உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன
செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.
சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து, அந்த
இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே,
நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை
நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அதைவிட, எனக்கு, கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள்
நற்செய்தி போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே,
உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார்
என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.
உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப்
போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த
ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின்
கருப்பொருளுக்கு நம்மை அழைத்துவருகிறது. இப்பெருவிழாவின்
கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம்
அடைந்த நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு
வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். "நீங்கள் போய் எல்லா
மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு 28:19) என்ற
கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு
16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும்
குறிப்பிட்டுள்ளன.
'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற
சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள், ஆயர்கள்,
அருள்பணியாளர்கள், மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம்
எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப்
பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை.
அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத்
தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம்
அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு
அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே இவ்விழா நமக்கு உணர்த்தும்
முதல் உண்மை. அடுத்து, பறைசாற்றும் பணிகளை ஆற்ற சிறந்த
இடங்கள், கோவில், பிரசங்க மேடை, மக்கள் கூடிவரும் அரங்கம்
என்ற கற்பனைகளை நீக்கவும், இவ்விழா நம்மை அழைக்கிறது.
நற்செய்தியைப் போதிக்க, இறைவன் தன்னை அழைப்பதாக அந்த
இல்லத்தலைவி சொன்னபோது, பில்லி கிரஹாம் அவர்களைப் போன்று,
தானும் மேடைகளில் ஏறி போதிப்பதை, அவர் நினைத்துப்
பார்த்திருப்பார். தனக்கு இறைவன் வழங்கியுள்ள இந்த
அழைப்பிற்கு, ஒரு தடையாக தன் குடும்பம் இருக்கின்றது
என்பதை, அவர் தன் மடலில், சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
கிரஹாம் அவர்கள் அனுப்பிய பதிலில், இல்லத்தலைவியின்
கண்ணோட்டத்தை மாற்றியமைக்க அவர் அழைக்கிறார்.
இல்லத்தலைவியின் நற்செய்திப் போதனைக்கு, அவரது குடும்பம்
ஒரு தடையல்ல, மாறாக, அதுவே, அப்பணிக்கு தகுந்த ஆரம்பம்
என்பதை, கிரஹாம் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும்
உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம்
அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய
நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் சீடர்களை
இறுதியாகச் சந்தித்த நிகழ்வு, இன்றைய நற்செய்தியில்
கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, கலிலேயாவில் நிகழ்ந்ததென்று,
நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுவது, நம் கவனத்தை
ஈர்க்கிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில், யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய
மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில், எருசலேம் கோவிலை
மையமாகக் கொண்டிருந்த யூதேயா, உயர்ந்த, புனிதமிக்க
பகுதியாகக் கருதப்பட்டது. இதற்கடுத்திருந்த சமாரியா
பகுதியோ, இஸ்ரயேல் மக்களின் பார்வையில் மிகத் தாழ்ந்ததாகக்
கருதப்பட்டது. வடக்கில், ஏனைய நாடுகளுடன் தொடர்பு
கொண்டிருந்த கலிலேயா, பிற இனத்தாருடன் கலப்படம் கொண்ட
பகுதியாக, புனிதம் குறைந்த பகுதியாகக் கருதப்பட்டது.
இயேசு, தன் நற்செய்தியை அறிவிக்க, இறையரசை அறிமுகப்படுத்த,
கலிலேயாவைத் தேர்ந்தெடுத்தார் (மத். 4:12-17). கலிலேயக்
கடற்கரையில் அவர் தேர்ந்தெடுத்த சீடர்களுடன் இறுதி
சந்திப்பை மேற்கொண்டது, மீண்டும் கலிலேய மலைப்பகுதியே! தன்
பணிவாழ்வைத் துவக்கிய அதே பகுதிக்கு, தான் சீடர்களைத்
தேர்ந்தெடுத்த அதே பகுதிக்கு, தன் சீடர்களை மீண்டும்
அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி
துவங்கவேண்டும் என்று இயேசு பணிக்கிறார். நற்செய்தியைப்
பறைசாற்றுதல், சீடர்களை உருவாக்குதல் போன்ற உன்னத பணிகள்,
அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் துவங்கவேண்டும்
என்பதை இன்றைய நற்செய்தி வழியே இயேசு நமக்கு மீண்டும்
நினைவுறுத்துகிறார். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவின்
கருப்பொருள் இதுவே!
ஏனைய ஆண்டுகளை விட இவ்வாண்டு, விண்ணேற்றப் பெருவிழாவை நாம்
இல்லங்களில் இருந்தவண்ணம் கொண்டாடுவது, இவ்விழாவின்
கருப்பொருளை, அதாவது, நற்செய்தியின் பறைசாற்றலும்,
சீடர்களின் உருவாக்கமும் நாம் வாழும் சூழல்களில்
உருவாகவேண்டும் என்ற கருப்பொருளை மீண்டும் நம் உள்ளங்களில்
பதிக்க வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்போ என்று எண்ணத்
தோன்றுகிறது.
கடந்த சில வாரங்களாக, பொது வழிபாடுகளுக்கு கோவில்கள்
மூடப்பட்ட நிலையில், நம் இல்லங்கள், வழிபாட்டுத் தலங்களாக
மாறியிருக்க வாய்ப்புண்டு. தொலைக்காட்சி அல்லது ஏனைய
ஊடகங்கள் வழியே, நற்செய்தியின் பறைசாற்றல், இல்லங்களில்
நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்த வாய்ப்புக்களை நாம்
எவ்வாறு பயன்படுத்தியுள்ளோம் என்பதை சிந்திப்பது நல்லது.
இனிவரும் நாள்களில், தொடர்ந்து, நம் இல்லங்களை ஆலயங்களாக
மாற்றவும், நம் குடும்பங்களில் நற்செய்தியின்
பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நடைபெறவும், இறைவன்
நம்மை வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.
இல்லங்களில், விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம்
கொண்டாடும் வேளையில், இயேசு நம் இல்லங்களைத்
தேடிவருவதாகவும், உலகெங்கும் சென்று சீடர்களை
உருவாக்குதல், நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்பவை,
பிரம்மாண்டமான பணிகள் என்றாலும், அவை நம் இல்லங்களில்,
அடக்கமாக, அமைதியாக துவங்கவேண்டும் என்ற அன்புக்கட்டளைகளை
அவர் வழங்குவதாகவும் கற்பனை செய்வது பயனளிக்கும்.
'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக
செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக,
விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக
அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர்,
'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற
கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த
ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில்,
நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில்,
Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை
மேற்கொள்ள இத்தகைய வானூர்தியைப் பயன்படுத்தின. அதே
முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய
வாசகங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக்
பைகளில் அடைத்து, வானூர்தியிலிருந்து, ஊரெங்கும் போட்டனர்.
வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள்
போல், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே
வானூர்தியிலிருந்து, நற்செய்தி பாடல்கள் மிகச் சப்தமாக
ஊரெங்கும் ஒலிக்கப்பட்டன. மக்கள் அதைக் கேட்டு தங்கள்
காதுகளை மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால்
பெரிதும் கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட
ஆரம்பித்தன. விவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும்
எதிராக, மக்கள் அந்த 'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர்.
நேரடியான மனிதத்தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும்
நம்பி, பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை,
இறைவனிடமிருந்தும், நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும்
என்பதை, ஜோ பெய்லி அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார்.
இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவையும், 57வது உலக சமூகத்
தொடர்பு நாளையும் கொண்டாடும் இந்நாளில், "உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்"
(மாற்கு 16:15) என்று இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை
ஏற்று, தங்கள் வாழ்வின் வழியே நற்செய்தியைப்
பறைசாற்றிவருவோரை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
கொரோனா தொற்றுக்கிருமியின் கோரப்பிடியிலிருந்து மக்களை,
குறிப்பாக, வறியோரை காக்க போராடிவரும் அன்புள்ளங்கள்
அனைவருக்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்வோம். நல்ல,
நம்பிக்கை தரும் செய்திகளின் பறைசாற்றலும், சீடர்களின்
உருவாக்கமும் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி
வாழ்க்கையிலிருந்து துவங்கவேண்டும் என்று உருக்கமாக
மன்றாடுவோம்.
ஆண்டவரின் விண்ணேற்றம்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் புகழ்பெற்ற விவிலியப்
போதகர், பில்லி கிரஹாம் (Billy Graham) அவர்கள்,
மேடைகளிலும், தொலைகாட்சி நிகழ்வுகளிலும் ஆற்றியுள்ள
உரைகள், பல கோடி மக்களின் உள்ளங்களைத் தொட்டுள்ளன. அவரது
உரையை தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி, ஒருநாள்,
கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார். "அன்பு ஐயா,
கடவுள் தன் நற்செய்தியைப் போதிக்கும்படி என்னை அழைப்பதை
நான் உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு குழந்தைகள்
உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன
செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.
சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து,
இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே,
நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் உங்களை அழைக்கிறார்
என்பதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட, எனக்கு,
கூடுதல் மகிழ்வு என்னவென்றால், உங்கள் நற்செய்தி
போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே, உங்கள்
வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார்
என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.
உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப்
போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த
ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின்
கருப்பொருளுக்கு நம்மை அழைத்துவருகிறது. இப்பெருவிழாவின்
கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம்
அடையும் நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு
வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். நீங்கள் போய் எல்லா
மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத்தேயு 28:19) என்ற
கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு
16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும்
குறிப்பிட்டுள்ளன.
'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற
சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள்
அருள்பணியாளர்களும், துறவியரும் என்ற தவறான எண்ணம்
எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப்
பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை.
அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத்
தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம்
அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு
அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். மேலும், இப்பணிகளை
ஆற்ற சிறந்த இடங்கள், கோவில், பிரசங்க மேடை, மக்கள்
கூட்டம் என்ற பாணியில் நம் எண்ணங்கள் செல்லக்கூடும்.
அவ்வேளையில், பில்லி கிரஹாம் அவர்கள் இல்லத்தலைவிக்கு
அனுப்பிய பதில் கடிதத்தை நினைத்துப் பார்க்கலாம்.
நற்செய்தியைப் போதிக்கச் சொல்லி இறைவன் தன்னை அழைப்பதாக
இல்லத்தலைவி சொன்னபோது, பில்லி கிரஹாம் போன்று, தானும்
மேடைகளில் ஏறி நின்று போதிப்பதை, அவர் நினைத்துப்
பார்த்திருப்பார். தன் அழைப்பிற்கு, ஒரு தடையாக தன்
குடும்பம் இருக்கின்றது என்பதை அவர் தன் மடலில் சொல்லாமல்
சொல்லியிருக்கிறார். கிரஹாம் அவர்கள் அனுப்பிய பதிலில்,
இல்லத்தலைவியின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்க அவர்
அழைக்கிறார். இல்லத்தலைவியின் நற்செய்திப் போதனைக்கு,
அவரது குடும்பம் ஒரு தடையல்ல, மாறாக, அதுவே, அப்பணிக்கு
தகுந்த ஆரம்பம் என்பதை, கிரஹாம் அவர்கள்
சுட்டிக்காட்டுகிறார்.
நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும்
உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம்
அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய
நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது. இயேசு தன் சீடர்களை
இறுதி முறையாகச் சந்தித்த நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக
நம்மை அடைந்துள்ளது. இந்த நிகழ்வு, கலிலேயாவில்
நிகழ்ந்ததென்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுவது,
நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில், யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய
மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில், எருசலேம் கோவிலை
மையமாகக் கொண்டிருந்த யூதேயா, உயர்ந்ததாக, புனிதம்
மிக்கதாக கருதப்பட்டது. இதற்கடுத்திருந்த சமாரியா,
இஸ்ரயேல் மக்களின் பார்வையில் மிகத் தாழ்ந்ததாகக்
கருதப்பட்டது. வடக்கில், ஏனைய நாடுகளுடன் தொடர்பு
கொண்டிருந்த கலிலேயா, பிற இனத்தாருடன் கலப்படம் கொண்ட
பகுதியாக, புனிதம் குறைந்த பகுதியாகக் கருதப்பட்டது.
இயேசு, தன் நற்செய்தியை அறிவிக்க, இறையரசை அறிமுகப்படுத்த
கலிலேயாவைத் தேர்ந்தெடுத்தார் என்று, மத்தேயு நற்செய்தி
கூறியுள்ளது (மத். 4:12-17). கலிலேயக் கடற்கரையில் அவர்
தேர்ந்தெடுத்த சீடர்களுடன் இறுதி சந்திப்பை மேற்கொண்டது,
மீண்டும் கலிலேய மலைப்பகுதியே! தன் பணிவாழ்வைத் துவக்கிய
அதே பகுதிக்கு, தான் சீடர்களைத் தேர்ந்தெடுத்த அதே
பகுதிக்கு, தன் சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து
அவர்களது நற்செய்திப் பணி துவங்கவேண்டும் என்று இயேசு
பணிக்கிறார்.
நற்செய்தியைப் பறைசாற்றுதல், சீடர்களை உருவாக்குதல் போன்ற
உன்னத பணிகள், அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில்
துவங்கவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியே இயேசு
நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறார். ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இதுவே!
'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக
செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக,
விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக
அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர்,
'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற
கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த
ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில்,
நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில்,
Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை
மேற்கொள்ள, Blimp எனப்படும் வானூர்தியைப் பயன்படுத்தினர்.
அதே முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய
வாசங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக்
பைகளில் அடைத்து, Blimp வழியே, ஊரெங்கும் போட்டனர்.
வானிலிருந்து விழுந்த அந்த பைகள், ஏறத்தாழ குண்டுகள் போல்,
ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே
வானூர்தி வழியே, நற்செய்தி பாடல்கள் மிக சப்தமாக ஊரெங்கும்
ஒலிக்கப்பட்டது. மக்கள் அதைக் கேட்டு தங்கள் காதுகளை
மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால் பெரிதும்
கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. விவிலிய
ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த
'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர்.
நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, கருவிகளைக் கொண்டு
பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை, இறைவனிடமிருந்தும்,
நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை, ஜோ பெய்லி
அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார். மே 28,
இஞ்ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, உலக சமூகத் தொடர்பு
நாளை சிறப்பிக்கும் வேளையில், நற்செய்தியை எவ்விதம் நாம்
மக்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை சிந்திப்பது
உதவியாக இருக்கும். சமூகத் தொடர்புக் கருவிகள் உலகெங்கும்
பரவியுள்ளன, மிகுந்த சக்தி மிக்கதாக மாறி வருகின்றன என்பதை
அறிவோம். ஆனால், அக்கருவிகளைப் பயன்படுத்தும் ஊடகங்கள்
அனைத்தும், மனிதர்களின் நம்பிக்கையைக் குலைக்கும்
செய்திகளைப் பரப்புவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன
என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பல்வேறு
உரைகளிலும், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 51வது உலக சமூகத்
தொடர்பு நாளுக்கென வழங்கியச் செய்தியிலும் கூறியுள்ளார்.
நல்ல செய்திகளை மறைத்துவிட, அல்லது, குறைத்துவிட உலக
ஊடகங்கள் ஒன்று திரண்டுள்ள இன்றையச் சூழலில், நற்செய்தியை
தங்கள் வாழ்வாக்கியுள்ள ஒரு சிலரின் வழியே, இன்றும்
நற்செய்தி பறைசாற்றப்படுகிறது என்பதை உணர்ந்து, இறைவனுக்கு
நன்றி சொல்வோம்.
பல நேரங்களில், நாம், வாழ்வில் பகிர்ந்துகொள்ளும்
நற்செய்திகள், வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற
அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு
நற்செய்தியாக மாற வேண்டும் என்பதை அசிசி நகர் புனித
பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.
ஒரு நாள், புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை அழைத்து,
"வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்"
என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை
பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த
இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும்
நேரத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே
விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை மீண்டும் மரமேறி அந்தக்
கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். வயலில்
அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் பிரான்சிஸ் இறங்கி
வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து
வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு
கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப்
பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன்
அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து
சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த
அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ்.
ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது,
அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர்
எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ்
பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில் பிரான்சிஸ்
கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில்
போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக,
பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக்
கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள்
துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில்
நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்
தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே
திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்.
"நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது
செயல்கள் வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது
மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த
இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.
வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும்
நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும்
நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை
நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப்
பறைசாற்றிய பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer
என்ற மருத்துவரும் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த
நிகழ்ச்சியொன்று நமக்குப் பாடமாக அமைகிறது.
Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது,
மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில்
தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில்
நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள்,
தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு,
மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு
பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கி
40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். இளமையில்
நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற ஆல்பர்ட்
அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை
வாழ்வாக்கினார். இவரது நற்பணிகளுக்காக, 1952ம் ஆண்டு, உலக
அமைதிக்கான நொபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு, ஆல்பர்ட் அவர்கள்,
அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார். அவரை
வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில்
நிலையத்தில் காத்திருந்தனர். அவர் இரயிலை விட்டு
இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த
இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும்
என்று வேண்டியபடி, ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை
விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு
பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான,
கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு
பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்த
கூட்டத்திடம் வந்தார் ஆல்பர்ட். நடந்ததைக்கண்ட ஒரு
பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில்
மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு
நடமாடும் மறையுரையைப் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.
கோவில்களில், பிரசங்க மேடைகளில் பறைசாற்றப்படும்
நற்செய்தியைவிட, இவ்வுலகை இறையரசாக மாற்றவேண்டும் என்ற
அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிய ஆல்பர்ட் போன்ற பல்லாயிரம்
உள்ளங்களின் வாழ்வு பறைசாற்றியுள்ள நற்செய்தியே, இருபது
நூற்றாண்டுகளாய், அதிகமாய், ஆழமாய் இவ்வுலகில்
வேரூன்றியுள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை.
வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும்
அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும்
ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும்,
தலைமைத்தூதர்களில் ஒருவரான கபிரியேல், அவரைச் சந்தித்தார்.
"உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில்
உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன
திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும்,
வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு
சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப்
பேதுரு, தோமா இவர்களைப் பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப்
பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத்
தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை
நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை
ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள்
உங்கள் எண்ணத்தில் இருக்கவேண்டும், இல்லையா?" என்று
கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை
நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம்
வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.
இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும்
இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக்
காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை
கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல...
நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும் அவர் வழங்கிய நற்செய்தியும் மையங்கள் என்பதை
மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது
பேச்சுத் திறன் இவற்றை மையங்கள் என்று நாம்
நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ
வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது.
வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய
அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் Albert
Schweitzer, புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப்
பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே
வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
விண்ணேற்றம் அடைந்த இயேசு நீங்கள் போய் எல்லா
மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்று, சீடரிடம் கூறிய
சொற்கள், நமது எடுத்துக்காட்டான வாழ்வின் வழியே நிறைவேறும்
என்பதை நம்புவோம். செயல்படுத்துவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
சீடராவோம்; சீடராக்குவோம்
விண்ணேற்றப் பெருவிழாவைக் கெர்ண்டாடும் நாம் விண்ணகம்
பற்றி சிந்திக்க வேண்டும். முதலில், விண்ணகம் என்றால்
என்ன என்பது பற்றிய புரிதல் நமக்கு உண்டு. ஆண்டவரும்,
அன்னை மரியாவும், அனைத்துப் புனிதர்களும் இறைஉறவில்
இணைந்திருக்கும் நிலையே விண்ணகம் என்று நாம்
நம்புகின்றோம். இரண்டாவதாக, விண்ணகத்தில் என்ன
இருக்கும் என்ற தெளிவும் நமக்கு உண்டு. விண்ணகத்தில்
துன்பங்கள் இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே நிறைவாக,
நிலையாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
மண்ணகத்திலும் எங்கே துன்பங்கள் இல்லையோ, எங்கே
மகிழ்ச்சி இருக்கிறதோ அந்த இடத்தை சொர்க்கம் என்று நாம்
சொல்வதுண்டு. மூன்றாவதாக, விண்ணகம் செல்ல வேண்டும் என்ற
ஆவலும் நமக்கு உண்டு. நரகத்திற்கோ, துன்புறும் நிலைக்கோ
செல்லாமல் விண்ணகம் செல்ல வேண்டும் என்பதுதான்
கிறிஸ்தவர்களின் ஒற்றை இலக்கு.
விண்ணகம் விட்டு, மண்ணகம் வந்த இயேசு நம்மோடு
இருப்பதற்காகவே வந்தார் (யோவா 1:14). நம்மோடு இருப்பதாக
வாக்குறுதியும் தந்தார் (மத் 28:20). அப்படியிருக்க,
ஏன் அவர் நம்மை விட்டு மீண்டும் விண்ணகம் செல்ல
வேண்டும் ? மூன்று காரணங்கள் அதற்கு உண்டு.
1. விண்ணேற்றம் இயேசுவின் மண்ணகப் பணி நிறைவுறுதலின்
அடையாளம்: இயேசுவின் மனித உடலேற்பின் நோக்கமே நம்மை
மீட்பதுதான். தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பின் வழியாக
அதை நிறைவு செய்து தன் மண்ணகப் பணியை, தந்ைத தனக்களித்த
பணியை நிறைவு செய்து தந்தையிடம் திரும்பிச் செல்கிறார்
என்பதன் அடையாளம் இந்நிகழ்வு.
2. விண்ணேற்றம் திருஅவையின் பணி தொடங்குவதன் அடையாளம்:
இயேசுவின் பணிதான் நிறைவு பெற்றுவிட்டதே தவிர,
இறையாட்சிப் பணி நிறைவு பெறவில்லை. இதுவரை இயேசு செய்த
பணியை இனி அவரது வழித்தோன்றல்களா கிய அவர்தம் சீடர்கள்
தொடர்ந்து செய்ய வேண்டும். சீடர்களின் திருக்கூட்டமாகிய
திரு அவை இப்பணியைத் தொடர வேண்டும் என்ற அழைப்பைத்
தருவது இந்நிகழ்வு. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,
திரு அவையின் தலையாகிய இயேசுவின் பணி நிறைவுற்று,
உடலாகிய நம் பணி இன்று தொடங்குகின்றது.
3. விண்ணேற்றம் தூய ஆவியார் வருவார் என்பதன்
அடையாளம்: கடந்த ஒருசில நாள்களாகவே நற்செய்தியில் இயேசு
நான் போனால் தூய ஆவியாராகிய துணையாளர் வருவார் என்று
சொல்வதை வாசிக்கின்றோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில்
தந்தையால் வழிநடத்தப்பட்டு, புதிய ஏற்பாட்டுக்
காலத்தில் மகனால் வழிநடத்தப்பட்ட இறைச்சமூகம், இனி
திருஅவைக் காலத்தில் தூய ஆவியாரால் வழிநடத்தப்பட உள்ளது
என்பதும் இந்நிகழ்வின் வழியாக வெளிப்படுகின்றது.
திருவிவிலியத்தில், இயேசுவுக்குமுன் ஏனோக்கு (தொநூ
5:24), இறைவாக்கினர் எலியா (2 அர 2:11) போன்றோர்
ஏற்கெனவே விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இயேசுவுக்குப் பின், திரு அவையின் மரபுப்படி, அன்னை
மரியாவும் விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
ஆண்டவர் வானங்களின் நடுவே ஏறிச் சென்றது
தாழ்நிலையிலிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, ஒருநாள்
நாமும் நம் தலைவரும் ஆண்டவருமாகிய அவரைப் பின்பற்றி
விண்ணகத்திற்குச் செல்வோம் என்பதை உணர்த்து வதற்காகவே
என்று இன்றைய திருப்பலிப் புகழுரை சொல்கிறது. இயேசுவின்
வழியில் நாமும் விண்ணகம் செல்ல வேண்டும். அதற்கு ஏற்ற
வகையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்.
தித்திக்குதே (ஞாயிறு மறையுரை) அருட்பணி
அ. ஸ்தனிஸ்லாஸ்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
விண்ணேற்பு பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 1:1-11)
திருத்தூதர் பணிகள் நூலானது மூன்றாவது நற்செய்தியாகிய
லூக்கா எழுதிய நற்செய்தியின் தொடர்ச்சி என்றே அறிஞர்கள்
கூறுகிறார்கள். ஆக தூய லூக்காவே இந்நூலின் ஆசிரியருமாவார்.
இவர் யூதரல்லாததாலும் மருத்துவம் தெரிந்ததாலும் இந்நூலில்
யூத சார்பு அதிகம் இல்லாமல் புற இனத்தவரின் சார்பு அதிகம்
இருக்கும். மேலும் குறிப்புகளும் மொழி நடையும் விளக்கங்களும்
சிறப்பாக இருக்கும். இந்நூல் கிறிஸ்துவோ கிநிஸ்தவர்களோ
உரோமை ஆட்சிக்கு எதிரானவர்கள் இல்லை என்பதைப் படம்
பிடித்துக் காட்ட முனைகிறது. எனவே உரோமையர்களுடன் சுமூக
உறவு இருப்பது போன்ற அமைப்பைக் காணலாம். மேலும் யூதரல்லாத
பிற இனத்தவர்களுக்கு நற்செய்தி எப்படி சென்ற டைந்தது என்பதையும்
விளக்குகிறது. இறைவார்த்தை, தூய ஆவி, நற்செய்திப் பணி முதலிய
கருத்தியல்கள் இந்நூலில் முக்கியத்துவம்
பிடித்திருக்கின்றன.
இப்பகுதி இயேசுவின் விண்ணேற்றத்தை தெளிவாகப் படம்
பிடித்துக் காட்டுகிறது. நற்செய்தியில் விளக்கப்படாத இந்த
பகுதி இங்கே தெளிவாக விளக்கப்படூகிறது. குறிப்பாக இப்பகுதியில்
வரும் மூன்று பகுதிகளின் பெயர்கள் - எருசலேம், யூதேயா,
சமாரியா, உலகின் கடை எல்லை - இந்நூலின் பிரிவுகளனைத்தும்
சுருக்கமாக அமைகின்றன. 8-ஆம் அதிகாரம் வரை எருசலேமில்
நற்செய்தி, 12-ஆம் அதிகாரம் வரை யூதேயா, சமாரியாவில் நற்செய்தி,
பின் இறுதி அதிகாரம் வரை உலகின் கடை எல்லை (உரோமாபுரி)
யில் நற்செய்தி என பிரிக்கப்பட்டு இந்நூலின் சுருக்கம்
இந்த பகுதியில் காணக்கிடக்கிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 1:17-23)
எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடல் பொதுவாக தூய பவுல் எழுதிய
திருமடல் என கருதப்பட்டு வந்தாலும் பெரும்பாலான விவிலிய
அறிஞர்கள் மாற்றுக் கருத்து கொள்கிறார்கள். பவுலின் பெயரில்
வேறொரு ஆசிரியர் எழுதியிருக்கக் கூடும் என இறையியல்
பேராசிரியர்கள் சிலர் நம்புகின்றனர். குறிப்பாக இன்றைய
இரண்டாம் வாசக பகுதி மிகச்சிறப்பானது. வழக்கமாக மடலின்
துவக்கத்தில் வரும் நன்றி கூறும் பகுதியாக இருந்தாலும்
இதில் வரும் இறுதிப் பகுதி சிறப்பு வாய்ந்தது.
குறிப்பாக இயேசு கிறிஸ்துவைத் தலையாகவும் திருச்சபையை
உடலாகவும் உருவகப்படுத்தும் பகுதி மிகச் சிறந்த இறையியலை
உள்ளடக்கியது. கலா1:18-லும் இதே இறையியல் சிந்தனை காணக்கிடக்கிறது.
இது இரண்டாம் வத்திகான் சங்கத்தின் போது மறுபடியும் கருத்தில்
கொள்ளப்பட்டு விளக்கப்பட்டு பெரிய இறையியல் கோட்பாடாக
வெளிவந்தது. இத்தனை சிறப்பு மிக்க பகுதியை இன்றைய
திருவிழாவில் சிந்திக்கக் கொடுக்கப்பட்டிருப்பது மிக சிறப்பைத்
தருகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 28:16-20)
இந்த பகுதியானது மத்தேயு நற்செய்தியின் இறுதியாக இருந்து
முத்தாய்ப்பாக விளங்குகிறது. கிறிஸ்துவை பின்பற்று பவர்கள்
மேற்கொள்ள வேண்டிய பணியை தெளிவுபடுத்துகிறது. இதே கருத்து
பிற நற்செய்திகளிலும் வேறு வடிவங்களில் காணக் கிடக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தேயு நற்செய்தி யில்
மட்டுமே இயேசுவின் அதிகாரம், திருமுழுக்கு, இயேசுவின்
உடனிருப்பு, போன்ற மையக் கருத்துகள் காணக்கிடக்கின்றன.
இப்பகுதியில் சிறந்த இறையியல் கருத்து இருப்பதை
காண்கிறோம். தமதிருத்துவம் தெளிவு பட விளக்கப்பட்டிருப்பதையும்
பார்க்கிறோம். மேலும் திருமுழுக்கு வெகுவாகவே எண்பிக்கப்பட்டு
இயேசுவின் சீடராவதற்கு தேவை என்பது போன்ற கருத்து இருப்பதையும்
காண்கிறோம்.
எனவே விவிலிய அறிஞர்கள் இயேசுவிற்கு பின் இறையியல்
வெகுவாக வளர்ந்த நிலையில் இந்த பகுதி இணைக்கப்பட்டிருக்குமோ?
என்ற தயக்கம் கொள்கிறார்கள். எனினும் இயேசுவினால்
கொடுக்கப்பட்ட பணியும் கட்டளையும் இதுவே என்கிற தீராத
விசுவாசத்துடன் நற்செய்தி பரப்புதலை தன் தலையாகிய கடமை
யாகக் கொண்டு திருச்சபை செயலாற்றி வருகிறது என்பது
தெளிவு.
மறையுரை
இது ஒரு காட்சி. இதைக் கண்டவர் தூய யோன்.
திருவெளிப்பாட்டு நூலில் 4-ஆம் அதிகாரத்தில் நாம்
காண்கிறோம். விண்ண கத்தின் ஒரு கதவு திறந்திருந்ததாம்.
உள்ளே அரியணை ஒன்று இருந்ததாம். அதில் ஒருவர்
வீற்றிருந்தாராம். அவர் படிக்கல் போலும் மாணிக்கம்
போலும் ஒளிவீசிக் கொண்டிருந்தாராம். அவரைச் சுற்றி 24
அரியணைகளில் பொன்முடி சூடிய வெண்ணாடை அணிந்திருந்த 24
மூப்பர்கள் வீற்றிருந்தார்களாம். அந்த முக்கிய அரியணை-
யிலிருந்து மின்னலும், பேரிறைச்சலும், இடிமுழக்கமும் கிளம்பினவாம்.
7ஆவிகள் அவ்வரியணையின் முன் தீயாக எரிந்துகொண்டிருந்தன
வாம். ஆறு சிறகுகளைக் கொண்ட உயிர்கள் நான்கு இடையறாது
தூயவர் தூயவர் தூயவர் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்:
இருந்தவரும் இருக்கின்றவரும் வர இருக்கின்றவரும் இவரே
என பாடி அரியணையில் இருக்கின்றவரை போற்றிப் புகழ்ந்து நன்றி
செலுத்திக் கொண்டிருந்தனவாம். 24 மூப்பர்களும் எழுந்து
வணங்கி கடவுளை புகழ்ந்து பாடினார்கள். மாட்சிமை பொருந்திய
கடவுளுக்கு விண்ணகத்தில் நடைபெறும் வழிபாட்டை
திருவெளிப் பாடு நூல் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
விண்ணகம் முழுவதும் மாட்சிமை. முகிமை, வாழ்த்தொலி, ஒளிமயம்,
தூய ர்களின் புகழ்ச்சி, வானதூதர்களின் ஆரவாரம். விண்ணகம்
வாழ் உயிர்களின் முழக்கம். மகிமை! மகிமை! எங்கும்
மாட்சிமை. விண்ணகத்தில் தந்தையாகிய கடவுளுக்கு இவ்வா
றென்றால் மண்ணகம் வந்து மனித உரு எடுத்து இறைதந்தையின்
பேரண்பை வாழ்ந்து காட்டிய இறை மகன் - அந்த வார்த்தையாகிய
இறைவன் - நம் மீட்பர் இயேசு கிறஸ்துவிற்கு
மாட்சிமையும் மகிமையும் வாழ்த்தொலியும் எங்கே?
இறை மகன் இயேசுவும் தம் மண்ணக வாழ்வில் மாட்சிமைப் படுத்தப்பட்டார்.
விவிலியத்தில் நான்கு நற்செய்திகளில் பல முறை இதை வாசிக்கக்
கேட்கிறோம். திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு
பெறும் போது இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் நான்
பூரிப்படைகிறேன் என்ற வார்த்தைகளோடு வானம் திறவுண்டு
புறா வடிவத்தில் தூய ஆவி எழுந்தருளி மாட்சிமை படுத்தப்பட்டார்
இயேசு. மேலும் தாபோர் மலையில் அந்த மூன்று சீடர்களோடு
செபித்துக் கொண்டிருந்த போது தோற்றம் மாறினாரே..... அப்பொழுது
மாட்சிமை படுத்தப்பட்டார். தன் கடவுள் தன்மையை இறை சாயலை
ஆனால் எவரிடமும் இதை சொல்லக்கூடாது என திட்டவட்டமாகத்
தெரிவித்து விட்டார். ஏன்? தாம் உண்மையிலேயே இறைவனின்
திருவுளத்தின்படி மாட்சிமை படுத்தப்படவேண்டியது
சிலுவையிலே... என்பதனால் தான்.
சிலுவையில்தான் அந்த பாடுகளின் போது இறைமகன் இறந்ததன்
மூலமும் தான் உயர்ந்த மாட்சியடைந்தார். இதுதான்
யோவான் நற்செய்தியின் மூலம் நாம் அறிய வருவது.
சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடு.
சிலுவைப் பாடுகள் இயேசுவின் இறப்பிற்கு இட்டுச் சென்றன.
இறந்த இயேசு மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தார்.
சிலுவையில் அவர் அடைந்த மாட்சி இயேசு தம் உயிர்த்தெழுதலால்
பெரும் மாட்சி பெற உன்னதமான மகிமை பெற வழி வகுத்தது. ஆண்டவர்
இயேசுவின் மாட்சி அவர் உயிர்த்தெழுதலிலே வெளிப்பட்டது.
அத்தோடு இந்த மகிமை அடையும் படலம் நின்று விடவில்லை.
மாறாக நாற்பது நாட்களுக்குப்பின் மீண்டும் நிறைவேறியது.
அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு தினமாகும். இயேசு
மாட்சியடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகிறது.
இனி அவருடைய மண்ணக வாழ்விலே வேறு மாட்சிமை இல்லை. ஏனென்றால்
தம்முடைய முந்தைய நிலையான என்றுமுள்ள அந்த மாட்சி நிலைக்கு
மகிமைக்கு வாழ்த்தொலிக்கு இயேசு கிறிஸ்து ஏறிச்செல்கிறார்.
தாம் எந்நிலையிலிருந்து வந்தாரோ அதே நிலைக்கு திரும்பிச்
செல்கிறார்.
மாட்சிமை, மகிமை. இதுவே இன்றைய பெருநாளின் சிறப்பு.
எங்கும் மகிமை . மகிமை மகிமை. ஆனால், இந்த மகிமையில்
மயங்குண்டவர்களாக மாட்சிமையைக் கண்டு கள்ளுண்டவர்களாக
இருக்கப் போகிறோமா? முதல் வாசகத்திலே வாசிக்கக்
கேட்டோமே! சீடர்கள் இயேசு விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டு
வானத்தை அண்ணந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அப்போது அவர்களுக்குத் தோன்றிய வெண்ணாடை அணிந்த இருவர்
என்ன கூறினர்? கலிலேயரே ஏன் வானத்தை அண்ணாந்து
பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?' என்றனர். இயேசு
அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதி மயங்கி இருக்க
நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு என்று வகுக்கப்பட்ட
பணி ஒன்று இருக்கிறது. முதல் வாசகத்திலும் சரி நற்செய்தி
வாசகத்திலும் சரி விளக்கமாக அது விளக்கப்பட்டிருக்கிறது.
எது அந்த பணி?
அது... இயேசுவுக்கு சாட்சிகளாய் இருத்தல். இயேசு
விண்ணேற்றம் அடையும் போது சீடர்களுக்குக் கட்டளை
இட்டது இதுவே. இறக்கும் தருவாயில் இருக்கும் நம்
தந்தையோ தாயோ இழுதியாக நம்மிடத்தில் கேட்டுக் கொள்வதை
நாம் எவ்வளவு கண்ணும் கருத்தோடும் நிறைவேற்றுகிறோம்!
மண்ணக தாய் தந்தையருக்கே இவ்வாறென்றால் அனைத்து தாய்
தந்தையருக்கும் மேலான இயேசு தாம் பிரியவேண்டிய நிலையில்
கேட்டுக் கொண்டதை நிறைவேற்ற மிகுந்த கடமையும்
பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இயேசுவின் சாட்சிகளாய்
நாம் வாழ்வது நம்மேல் திணிக்கப்பட்டுள்ள பணி. தவறுதல்
நல்லதன்று.
நமது விசுவாச தந்தைகளான அப்போஸ்தலர்கள் செய்தது
இதைத்தான். தாங்கள் கண்ட, கேட்ட, உடன் வாழ்ந்த
இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்தார்கள். எந்த ஒரு
சூழ்நிலையிலும் இக்கடமையினின்று திரும்பவில்லை. ஆதி
திருச்சபையும் இதே நோக்கோடே வாழ்ந்து வந்தது. அன்புச்
சமூகமாக வாழ்ந்து வந்தது. இறையாட்சி இம்மண்ணில் வந்தது
போல வாழ்ந்து வந்தது. தூய ர்கள் அனை: வருமே இயேசுவின்
சாட்சிகளாய் வாழ்ந்ததன் விளைவாகவே இப்பேறு பெற்ற நிலையை
அடைந்தார்கள். இன்றும் பலர் இந்த நோக்கோடுதான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இறைமகன் இயேசு பெற்ற அந்த முழுமையான மாட்சியை
கொண்டாடுகின்ற வேளையிலே நாமும் மாட்சி பெற
அழைக்கப்படுகிறோம். நாம் மாட்சி அடையும் வழி இயேசு
நமக்கு கொடுத்த கடமையை பணியை ஆற்றி முடிப்பதே! இன்றைய
இரண்டாம் வாசகத்திலே தூய பவுலடிகளார் இதைத் தெள்ளத்
தெளிவாக விளக்குகிறார். கடவுள் நமக்கு விடுத்திருக்கும்
அழைப்பு எத்தகைய எதிர்நோக்கை தந்துள்ளது என்றும்
இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப் பேறு எத்துணை
மாட்சி மிக்கது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
என கூறுகிறார். கடவுள் நமக்கு விடுக்கும் அழைப்பை ஏற்று
அதனால் நமக்கு கிடைக்கும் உரிமைப்பேற்றைப் பெற்று
மாட்சி பெறுவோம். விண்ணகம் எழுந்த இயேசுவின்
பாதச்சுவடுகளில் செல்வோம். பாடுகளின் வழி இல்லாமல்
இயேசுவிற்கு மாட்சி இல்லை. இயேசுவின் சாட்சிகளாய்
வாழாமல் நமக்கு மாட்சி இல்லை. மகிமை இல்லை. விண்ணக
இன்பம் இல்லை.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. புதிய கருத்தாக ஒரு சிந்தனை மேலோங்குகிறது. இயேசுவின்
விண்ணேற்றத்தை வெறும் விண்ணேறிச் செல்லும் நிகழ்வாகக்
கருதாமல் இயேசுவின் தோன்றும் தன்மை முடிவடையும்
நிகழ்- வாகக் கருதுகின்றனர் அறிஞர்கள். ஏனென்றால்
மத்தேயு 28- ஆம் அதிகாரம் இறுதி வசனமாக இதோ உலகம்
முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்
என்பது பொய்க்கா வண்ணம் இந்த புரிதல்
மேலெடுக்கப்படுகிறது. இயேசு தாம் உயிர்த்த பின்னர் பல
முறை பல பேருக்குத் தோன்றி மக்களையும் சீடர்களையும்
திடமூட்டி வந்தார். தற்போது நாற்பது நாட்களுக்கு பின்
அவர் தோன்றுவது முடிவடைகிறது. எனினும் அவருடைய உயிர்த்த
பிரசன்னம் என்றும் நம்முடன் இருக்கிறது.
எனவே இயேசுவின் நிலையான பிரசன்னத்தை முக்கியப் படூத்தி
மறையுரையில் தொடரலாம். நாம் செய்யும் செயல்கள்
அனைத்திலும் நம் வாழ்வு முழுவதிலும் அவருடைய உயிர்த்த
பிரசன்னம் எப்போதும் இருந்து வருகிறது. இதை உணர்ந்தால்
நம் வாழ்வில் பயம் இருக்காது. கவலை இருக்காது.
எப்போதும் மகிழ்ச்சியே!
2.இயேசுவின் விண்ணேற்றம் இயேசுவின் உண்மை
தங்குமிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு மேலிருந்து
வந்தவர். மேலே எழுந்து சென்றார். அதோடு மீண்டும்
வருவார் என்ற விசுவாசத்தை வலியு றுத்தலாம்.
3.இயேசு தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆள், கடவுள்.
இறைவனிடம் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்.
திருவெளிப்பாடு நூலில் 4-ஆம் அதிகாரத்தில் இறைவனின்
ஆட்டுக்குட்டி இறைவனோடு சேர்ந்து சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் காட்சி விளக்கப்படுகிறது.
இயேசு யோவா 14:2-இல் கூறுவது போல... என் தந்தையின்
வீட்டில் நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு
செய்யப்போகிறேன் இயேசு நமக்கு பரிந்துரையாளராகவும்
நம்மைப்போல மனிதராக இருந்தபடியால் நம்மை கனிவுடன்
நோக்குபவராகவும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நாம்
வாழலாம்.
மேலும் இறுதி நாளில் இயேசு மாட்சிமையுடன் வருவார்.
அப்போது நீதிமான்களையும் நேர்மையளர்களையும் தம்மோடு
அழைத்துக் கொள்வார். மத்தேயு நற்செய்தியில் 25-ஆம்
அதிகாரத்தில் வரும் இறுதி தீர்வை நிகழ்வை அடிப்படையாகக்
கொண்டு மறையுரையை தொடரலாம்.
4. முழுவதும் நற்செய்திப் பணியை மையப்படுத்தி
திருப்பணியை முக்கியப்படுத்தியும் மறையுரை நிகழ்த்தலாம்.
முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் வரும்
இயேசுவின் சாட்சிகளாய் இருத்தல் என்ற கருத்தே மையம்.
கிறிஸ்தவர்கள் செய்யும் சகல நற்பணிகளுக்கு அடிப்படை
விண்ணேற்றமும் இயேசு கொடுத்த இறுதி கட்டளைகளும். அவ்வாறு
ஏற்கப்பட்ட நற்செய்திப் பணியே திருச்சபையின்
உயிர்மூச்சாக இருந்து வருகிறது.
இதை மையப்படுத்தி நற்செய்தி பணியின் முக்கியத்துவம்
மற்றும் கடமை என்பதை விளக்கலாம். தற்போது இதன்
முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மேலும் தவறான
புரிதல் கொண்டு மதமாற்றம் ஒன்றே நற்செய்தி பணி என்ற
கருத்து நிலவுகிறது. ஆகவே சரியான புரிதலைக் கொடுத்து பல
பணிகளாகிய சமூகப்பணி, கல்விப்பணி, நீதி நிலைநாட்டும் பணி
போன்றவைகள் நற்செய்திப் பணியே! என நிலைநிறுத்தலாம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
ஆண்டவரின் விண்ணேற்ற விழா
இன்றையப் பெருவிழா இயேசுவின் இவ்வுலக வரலாற்றின் இறுதி
நிகழ்வாகும். தம் உயிர்ப்புக்குப்பின் நாற்பது நாள்கள்
அளவாக இவ்வுலக வாழ்வில் பல்வேறு நிலையினருக்குத் தம்மை
வெளிப்படுத்திய இறைமகன், இன்று தம் சீடர்கள் காண
விண்ணேறுகின்றார். இதைத் திருத்தூதர் பணிகள் நூலின்
அசிரியர் லூக்கா ஓர் அருமையான விவரிப்பாகத்
தருகின்றார். அதுவே நமக்கு முதல் வாசகமாக இன்று
அருளப்படுகின்றது. இயேசுவின் விண்ணேற்றத்தை இறையியல்
கண்ணோட்டத் துடன் நோக்கும்போது இந்நிகழ்வின் வழியாகக்
கடவுள் இயேசுவை உயர்த்துகின்றார் எனக் கொள்ளலாம்.
இந்த உயர்த்தப்பதெல் என்றால் என்ன? அதன் பரிமாணங்கள்
யாவை? என்பதைப் புனித பவுலடியார் எபேசியருக்கு எழுதிய
மடலில் பட்டியலிடுகின்றார். இதன்படி கடவுள் இயேசுவை
தமது வலப்பக்கம் அமரச் செய்கின்றார். ஆட்சியாளர்,
அதிகாரம் கொண்டோர், தலைமை தாங்குவோருக்கு மேலாக
உயர்த்துகிறார். எப்பெயருக்கும் மேலான பெயரை வாங்கி
உயார்த்துகறொர். திரு அவைக்குத் தலையாக தருகின்றார்.
எனவே, இத்திரு அவையின் அங்கங்களாக இருக்கும் நாம்
எத்தகைய அழைப்பை, எதிர் நோக்கை, உரிமைப்பேற்றை, வல்லமையை
பெற்றுள்ளோம் என்றும் புனித பவுலடியார் அம்மடலில்
பட்டியலிடுகின்றார். இனி நற்செய்தியின் அடிப்படையில்
நம்முடைய வாழ்வுக்குச் சில செய்திகளையும்,
படிப்பினைகளையும் பெற முயல்வோம்.
இன்றைய நற்செய்தி மத்தேயு நற்செய்தியின் இறுதிப்
பகுதியாக அமைகின்றது. இதை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஒன்று, இயேசுவின் காட்சிப்பகுதி (வச. 16-17). இரண்டு,
இயேசுவின் வார்த்தைகள் (வச. 18-20). இயேசு கூறிய
வார்த்தைகளில் மூன்று வகையான செய்திகள் அடங்கியுள்ளன.
ஒன்று, இயேசுவுக்கு அருளப்பட்டிருக்கின்ற அதிகாரம் (வச.
13). இரண்டு, சீடர்களுக்கு அளிக்கப்பட்ட. கட்டளை, பணி (வச.
19-20). மூன்று, இயேசுவின் தொடர் உடனிருப்புப் பற்றிய
வாக்குறுதி (வச. 20).
இன்றைய வாசகத்தில் காணப்படும் இலக்கிய வகை மற்றும்
வார்த்தை சொல்லாடல்கள் தானியேல் 7:14, விட 19:20, எண்
6:22-27, 2 குறி 36:23 ஆயெ பகுதிகளில் காணக்டைக்கின்றன.
இந்தப் பகுதியின் முக்கியச் செய்தியாக
பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. மத்தேயு நற்செய்தியின் சுருக்கம்
மத்தேயு தனது நற்செய்தி முழுவதும் இயேசுவின் வரலாற்றை
விவரித்து அதன் இறுதிப் பகுதியான இன்றைய நற்செய்திப்
பகுதியில் தனது நற்செய்தியின் முக்கியச் செய்தியை
சுருக்கமாகக் கூறுகின்றார் எனக் கொள்ளலாம். அதன்படி
இதன் முக்கியச் செய்திகள்:
1. நமது ஆண்டவர் உயிர்த்த கடவுளாகக்
காட்சியளிக்கின்றார்.
2. அவர் பணிந்து வணங்கப்பட தகுதியுள்ளவர்.
3. அவரது போதனைப் பணியை தொடர்ந்தாற்ற சீடர்கள்
பணிக்கப்பட்டனர்.
4. இயேசுவுக்கு எல்லா அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
5. பிற இனத்தார் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப்
பெறுகின்றனர்.
6. இம்மானுவேலாகிய இயேசு (மத் 1:22-23) தம் சீடர்களுடன்
இறுதிவரை இருக்கின்றார்.
2. சீடத்துவத்தின் முதிர்ச்சி
மத்தேயு நற்செய்தியில் இயேசுவைப் பின்பற்றும் சீடத்து
வத்தைப் பற்றி சில பல குறிப்புகள் வந்தாலும் அதன்
நிறைவுக் காட்சியான இந்த நற்செய்திப் பகுதியில் இந்தச்
சீடத்துவம் ஒரு முதிர்ச்சியான விதத்தில்
காட்டப்படுகின்றது. சீடத்துவம் பற்றி சில முக்கியமான
கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன.
முன்பு நம்பிக்கை குன்றியவர்களாகக் காட்டப்பட்ட இடர்கள்
(மத் 6:30; 8:26; 14:31; 16:8; 17:20) இப்போது அவரை
முழுவதுமாக நம்பி பணிகின்றனர் (சிலர் இன்னும் ஐயம்
கொண்டிருப்பது தனிக்கதை).
இடர்கள் என்ற முறையில் மக்களினங்களைச் சீடராக்கு
வதும், திருமுழுக்குக் கொடுப்பதும், கற்பிப்பதும்
அவர்களின் தலையாயப் பணிகளாக அளிக்கப்படுன்றன. இவர்கள்
இந்தச் சீடத்துவப் பணியை, அனுப்பப்பட்ட பணியைச்
செய்யும்போது அனுப்பியவர் அவர்களோடு இருந்த. அவர்களை
திடப்படுத்து வார். எனவே, இந்தப் பகுதியில்
மத்தேயுவின் சீட த்துவம் பற்றிய கருத்து கனிந்து,
முதிர்கின்றது.
3. நற்செய்தி பிறஜனைத்தாரை நோக்கிச் செல்வதன் தொடக்கம்
இயேசு தம் சீடர்களை பணிக்காக அனுப்பும்போது எல்லா
மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள் ' (வச. 19) எனப்
பணிக் கின்றார். விவிலிய நூல்களின் பின்னணியிலும்,
மத்தேயு நற்செய்தியின் பின்னணியிலும் இது பிற இனத்தாரை
சீடராக்கு வதைக் குறித்தும், இதன்படி பெருவாரியாக யூதக்
கிறிஸ்தவர் களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த மத்தேயு
நற்செய்தி அளிக்கப்பட்ட குழுமம் தன் புதிய உறுப்பினர்களை
யுதர்களிட... மிருந்து அல்ல, மாறாக, யூதர் அல்லாத பிற
இனத்தாரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள, ஏற்றுக்கொள்ள
வலியுறுத்தப்படுகின்றது, வழி காட்டப்படுகின்றது. முதலில்
யூதர்களுக்கு மட்டுமே போதிக்கப் பட்ட. நற்செய்தி (மத்
10:5) இப்போது இயேசுவின் இறுதி வார்த்தை களின் வழியாகப்
பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றது.
எனவே, மத்தேயுவின் திருஅவை வரலாற்றில் ஒரு புதிய
அத்தியாயம் எழுதப்படுகின்றது. நாமும் நமது குறுகிய எல்லை
களைக் கடந்து நற்செய்தியை புதிய தளங்களுக்கு எடுத்துச்
செல்லவேண்டும்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
இயேசுவின் விண்ணேற்றம்
இன்று இயேசுவின் விண்ணேற்றவிழா. இயேசு உயர்த்தபின்
நாற்பது நாள்கள் மீண்டும் உலகிலேயே இருந்து அவ்வப்போது
ஆங்காங்கே தோன்றி, காட்சி அளித்தார். இந்த உயிர்த்த
இயேசுவின் காட்சிகள் இயேசு உயிர்த்துவிட்டார்,
மீண்டும் தொடர்ந்து வாழ்கிறார் என்ற மாபெரும் உண்மைக்கு
அடையாளங்களாகவும் சான்றுகளாகவும் விளங்கின. இப்படிப்பட்ட
சான்றுகளும், அடையாளங்களும் 40 நாள்கள் நீடித்தன என்று
குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இயேசுவின்
பாலைவனத் தவம் 40 நாள்கள் நீடித்தது. இஸ்ரயேல்
மக்களின் பாலைவன வாழ்வு 40 ஆண்டுகள் நீடித்தது. இந்த
முழுமைதான் உயிர்த்த இயேசுவின் மண்ணக வாழ்விலும்
உள்ளது.
இயேசு தான் விண்ணகம் செல்லுமுன் தூய ஆவியாரை அனுப்பப்
போவதாக வாக்களித்துச் செல்லுகிறார். தன்னுடைய உதவி
ஆவியானவரின் வழியாக என்றுமே தொடரும் என்று வாக்குறுதி
தந்துவிட்டு இயேசு செல்கிறார்.
உயிர்ப்பின் நிறைவு விண்ணேற்றும்
இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ச்சி மிகச் சுருக்கமாக
விவரிக்கப் பட்டிருந்தாலும் அதில் பல ஆழ்ந்த
கருத்துக்கள் உள்ளன. மேகம் ஒன்று அவரை மேலே எடுத்துச்
சென்றதாக வாசிக்கிறோம். விவிலிய பாரம்பரியத்தில் மேகம்
என்பது இறைமாட்சியைக் குறிக்கும் சொல். கடவுள்
மோசேமைச் சந்தித்து சீனாய் மலையில் உடன்படிக்கை
செய்துகொண்ட போது அங்கே மேகம் வந்து தங்கியதாக
வாசிக்கிறோம் (விப 19:16). ஏன், 40 ஆண்டுகள் பாலைவன
யாத்திரையில் இஸ்ரயேல் மக்களைப் பகலில் ஒரு மேகமும்
இரவில் நெருப்புத் தூணும் வழிநடத்தினவே! (விப 13:21,
14:19).
இயேசு உருமாறியபோது கூட மேகம் அவரை மூடிக்கொண்டது (மத்
17:5; மாற்கு 9:9 ; லூக் 9:34). அதுமட்டுமல்ல; இயேசு
மீண்டும் இரண்டாம் முறை திரும்பி வரும்போது, தான்
மேகங்களில் வரப் போவதாகவும் அவரே கூறியுள்ளார் (மத்
26:64, மாற்கு 14:62). ஆகவே இயேசுவின் விண்ணேற்பு ஒரு
வகையில் அவர் உயிர்ப்பில் பெற்ற மகிமையின்
முழுமையேயாகும்.
தந்தையின் சக்தி இயேசுவிடம்
இயேசு விண்ணேற்பு அடைந்த பின் தந்தையின் வலது
பக்கத்தில் தன் முழு வல்லமையோடும் வீற்றிருக்கிறார்
என்ற கருத்தும் விவிலியத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
இதுவும் இயேசுவின் மாட்சிமைக்கும் வல்லமைக்கும் ஒர்
அடையாளம் (திபா 111 : 1; திப 2 : 34, உரோ 8 : 34, 1 பேது
3: 22 எபி 1: 3, 8 : 1, 10 : 12).
அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே
வானகத்தில் அமர்ந்துள்ளார் ' (எபி 8 : 1) என்ற சொற்கள்
பரமதந்தை அனைத்தையும் அவருக்கு அடிபணியச்செய்து
அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாய்
ஏற்படுத்தினார் என்ற உண்மையை உணர்த்துகின்றன.
நற்செய்திப் போதனை தொடர வேண்டும்
இயேசு விண்ணேறிச் சென்றபோது, சீடர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது வானதூதர்,
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் என்று ஆறுதல்
கூறியதாகவும் வாசிக்கிறோம் (திப 1 : 11.) இயேசுவின்
விண்ணேற்றத்தையும் அவரது இரண்டாம் வருகையையும்
தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இது ஓர் ஆழ்ந்த
இறையியல் கருத்து.
இயேசு விண்ணகம் சென்றார். அவருடைய சீடர்களும்
உலகெங்கும் செல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்துவிட்டே
சென்றார். இயேசுவின் பணி முடிந்தது. திருச்சபையின் பணி
துவங்கிவிட்டது (மத் 28:17, மாற்கு 16:5, யோவா 20: 17,
லூக் 24 : 47, திப 1: 8). சீடர்கள் சென்று போதிக்க
வேண்டும். நற்செய்தி அறிவிக்க வேண்டும். அதன்
பிறகுதான் இயேசு வருவார்.
இயேசுவின் வருகைக்காக நாம் தயாரிக்க வேண்டுமென்றால்
நற்செய்தியைப் போதிக்க வேண்டும்.
மண்ணுலக இறுதி எல்லைவரை நீங்கள் என் சாட்சிகளாக
இருப்பீர்கள்.
இரண்டாம் வாசகம் : எபே 1: 17-23
கிறிஸ்தவ அழைப்பைப் பற்றியும் பவுலடியார் சில ஆழ்ந்த
கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும்
மாட்சிமையிகு தந்தையுமானவர் தூய ஆவியை உங்களுக்குக்
கொடுப்பாராக!'' என்ற வாழ்த்துரையுடன் இன்றைய இரண்டாம்
வாசகம் துவங்குகிறது. இத்தேவ ஆவியாரே நம் கிறிஸ்தவ
அழைப்பின் அருமை பெருமைகளை நமக்கு உணர்த்தி, நம் அகக்
கண்களுக்கு ஒளி தருபவர். இந்தத் தேவ ஆவியார் இயேசு
கிறிஸ்துவின் பேராற்றலே!
தூய ஆவியார் எந்த அளவுக்கு ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில்
செயல்பட வேண்டும் என்பதை பவுலடியார் மிகத் தெளிவாகச்
சுட்டிக்காட்டுகிறார். அவரே நம் துணையாளர். நமக்கு
அனைத்தையும் அறிவுறுத்துகிறவர் (யோவா 14:26). அவரே
உண்மையின் ஆவியானவர் (யோவா 16:26). இயேசு கிறிஸ்துவின்
ஆற்றலாம் இந்த தூய ஆவியாரால் நாம் இயக்கப்பட்டால்தான்
கடவுளின் மக்கள் என்ற உன்னத நிலையை நாம் அடைகிறோம்.
அப்பா தந்தாய்" என்ற உரிமையோடு கடவுளை அழைக்கும்
தகுதியும் பெறுகின்றோம்.
கிறிஸ்துவ அழைப்பின் மேன்மை
கிறிஸ்துவ அழைப்பின் மேன்மையைப் பற்றிச் சொல்லும்போது
பவுலடியார் அதை மூன்று கூறுகளாகப் பிரித்து
உரைக்கிறார். முதலாவதாக, கிறிஸ்தவ அழைப்பு நமக்கு
நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கையை இயேசுவின்
பெயரால் ஏற்கும் உறுதியான உள்ளமும், வாழ்க்கைப் பயன்
நமக்குக் கிடைக்கும் என்ற உள்ளுணர்வுந்தான் அந்த
நம்பிக்கை. இரண்டாவதாக, கிறிஸ்தவ அழைப்பிற்கென்ற ஒரு
தனிப்பட்ட உரிமைப்பேறு உள்ளது. அது வளம் மிக்கது. இந்த
வளம்மிக்க உரிமைப் பேறு - இயேசு கிறிஸ்துவின் அரசில்
பங்கு கொள்ளக்கூடிய தகுதியேயாகும். இத்தகுதியை நாம்
திருமுழுக்கால் பெறுகிறோம். மூன்றாவதாக, கிறிஸ்தவ
அழைப்பிலே பெருமைமிக்க வல்லமையும் நமக்கு வழித்துணையாக
உள்ளது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள
நம்பிக்கையே இந்த வல்லமை. அவர் அனைத்திற்கும் மேலானவர்.
அவரால் அனைத்தும் முடியும் என்ற பற்றுறுதி நமக்குள்ள
அனைத்து வல்லமைகளிலும் சிறப்பான வல்லமையாகும்.
இயேசுவின் வல்லமையில் நம் பங்கு
இயேசு கிறிஸ்துவின்மீது நமக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையே நமது
வல்லமை என்பதற்குக் காரணங்கள் தருகிறார் பவுலடியார்.
இயேசு இனி பாடுகளாலும் மரணத்தாலும்
ஆட்கொள்ளப்படமாட்டார். உலகில் அவர் வாழ்ந்தபோது அவர்
அனுபவித்த மனித பலவீனங்கள் எதிர்ப்புகள் போன்றவை இனி
அவரிடம் இல்லை. மாறாக, உயிர்த்த அவர் விண்ணுலகில்
மாட்சிமையுடன் தந்தையின் வலப்புறத்தில்
அமர்ந்துள்ளார். அவரது மாட்சிமை நிலையானது; நமக்கு வல்லமை
தரக்கூடியது. இயேசு அடைந்துள்ள வெற்றிநிலை அனைத்து
வானதூதர் நிலைகளுக்கும் மேலானது. யூத மரபுப்படி
ஆழ்கடல், பூவுலகம், விண்ணுலகம் போன்ற மூன்று
உலகங்களிலும் இயேசுவைப்போன்ற சிறந்தவர் இல்லை.
அனைத்திற்கும் அவரே தலைவர். இன்றும் குறிப்பாக, அவர்
பெயரில் திருமுழுக்குப் பெற்று ஒரு கூட்டமாக விளங்கும்
திருச்சபைக்கு அவரே தலைவர்.
திருச்சபையில் இயேசு
பவுலடியாரின் தலைசிறந்த போதனைகளில் ஒன்று அவர்
திருச்சபையை இயேசு கிறிஸ்துவோடு ஒன்றுபடுத்தும் உயர்ந்த
கருத்துதான். திருச்சபையைத் துன்புறுத்தி வந்த
பவுலடியார் தமாஸ்கு செல்லும் வழியில் மனந்திரும்பி
ஆண்டவரே நீர் யார்?" என்று கேட்டார். நீ
துன்புறுத்தும் இயேசுதான் நான் ' என்று இயேசு
பதிலளித்தார். இப்பதிலில் இயேசுவும் திருச்சபையும்
ஒன்றாகி விட்டதை உணர்கிறோம். திருச்சபையின்
உறுப்பினராம் நாம் பெற்றுள்ள மாட்சிமைதான் என்னே !
திருச்சபையோ இவருடைய உடல்.
இயேசு விண்ணகம் ஏறிய நாளன்று அவர் விட்டுச்சென்ற
இறுதிச் சொற்கள், மத்தேயு நற்செய்தியினின்று வாசகமாகத்
தரப்பட்டுள்ளன. இவ்வாசகம் வழி இயேசுவின் அதிகாரம்,
அவர் கொடுத்த கட்டளை, அவர் விட்டுச் சென்ற வாக்குறுதி
முதலியன வெளிப்படுகின்றன.
இயேசுவின் அதிகாரம்
உயிர்த்த இயேசுவுக்கு உலகனைத்தும் உரிமையாகின்றது.
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்
அனைவரும் மண்டியிடுவர், தந்தையாம் கடவுளின்
மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று... எல்லா
நாவுமே அறிக்கையிடும்' (பிலிப் 2:10). இப்போது
கடவுளுடைய மெசியாவின் அதிகாரம் விளங்குகிறது (திவெ
12:10). மனுமக்கள் அனைவர் மீதும் நீர் அவருக்கு
அதிகாரம் அளித்திருக்கிறீர் (யோவா 17:2) என்ற சொற்கள்
வழி உயிர்த்த இயேசுவின் தலைமை விளங்குகிறது. ஆம்,
விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் அவருக்கு
அளிக்கப் பட்டிருக்கிறது. அனைத்தையும் படைத்து (யோவா
1:1- 2 கொலோ 1:15) காத்து, ஆண்டு, நடத்தி வரும் இயேசுவை
ஏத்துவோம், போற்றுவோம். இயேசுவே உம்மிடமிருந்தே எல்லாம்
; உம் வழியே எல்லாம், உமக்கே எல்லாம் என்று கூறுவோம்.
என்மேல் இயேசு கொண்டுள்ள அதிகாரம் என் வாழ்வுக்கு
அடிப்படையாகி, என்னை வழி நடத்துகிறதா?
இயேசுவின் கட்டளை
அதிகாரம் உள்ள இடத்தில் கட்டளைகளும் உண்டு. எல்லா
இனத்தாரையும் சீடராக்குங்கள் ' (28:19) என்பதே
இக்கட்டளை. இது நம் அனைவருக்கும் (குருக்கள்,
கன்னியர், துறவியருக்கும் மட்டுமல்ல) கொடுக்கப்
பட்டுள்ள பணி. இப்பணி உலகளாவியது. அனைத்து மக்களும் அவர்
சீடராக வேண்டும், திருமுழுக்குப் பெற வேண்டும் என்று
மத்தேயு தன் திருச்சபைக்கு எழுதியது உண்மை எனினும்,
முதன்முதலாக நாம் செய்ய வேண்டியது நமது சொல் செயல் வழி
அனைத்து மக்களுக்கும் அவரைப் பறையறிவிக்க வேண்டும்.
சீடனின் கடமை சீடர்களைச் சேர்ப்பது. கிறிஸ்துவ மறையில்
பிறர் சேராவிட்டாலும், பிறருக்கு நாம் திருமுழுக்கு
அளிக்க இயலாது போயினும், நமது வாழ்வில் சீடத்துவச்
சாட்சியம் இன்றியமையாதது. நமது குடும்பத்திலே,
தொழிலகங்களிலே, வீதிகளிலே, சந்தைககளிலே, பள்ளிகளிலே நாம்
கிறிஸ்தவர்கள் - கிறிஸ்துவை, அவர் மதிப்பீடுகளை ஏற்று
வாழ்பவர்கள் என்பதைப் பிறர் அறிய வேண்டும். போய்
சீடராக்குழுன், இருந்து சீடராகுவோம். இவ்வாழ்வுச்
சாட்சியப் பணி நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள
கட்டளை என்பதை உணர்கிறோமா ? மேலும், நம்மால் கூடிய
மட்டும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் போதித்து,
அம்மதிப்பீடுகள் ஊரிலும் உலகிலும் செயல்பட நமது பங்கை
ஏற்கிறோமா?
இயேசுவின் வாக்குறுதி
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன் ;
உங்களிடம் திரும்பி வருகிறேன் (யோவா 14:18) என்பது
இயேசுவின் வாக்குறுதி. உலகம் முடிவு வரை எந்நாளும்
உங்களோடு இருப்பேன் (மத் 24:20) என்ற இயேசுவின்
சொற்கள் நமக்கு என்றும் உறுதுணையாயிருக்க வேண்டும்.
அவர் அனுப்பிய துணையாளர்' ஆகிய தூய ஆவியார் வ்ழி
அவர் என்றும் நம்மோடிருக்கிறார் (யோவா 14:26; 15:26).
இயேசு எம்மானுவேல் கடவுள். இதன் பொருள் கடவுள்
நம்மோடு என்பது. யாமிருக்கப் பயமேது? என்று இயேசு
எந்நேரமும் நம்மிடம் கூறிக்கொண்டிருக்கிறார். எனவே,
தவறாத அவரது வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து நம்
சாட்சியப் பணியைத் தொடர்வோம். நம்மால் தனித்து
ஒன்றும் செய்ய இயலாது. நம்மோடு அவர் சேர்ந்திருப்பதால்
அனைத்தும் நம்மால் கூடும்!
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 28:16-20) இயேசு தனது சீடர்களுக்கு
இறுதி கட்டளையை (The Great Commission) வழங்குகிறார்.
1. அதிகாரமும் கட்டளையும் (Authority and Command)
"விண்ணிலும் மண்ணிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது"
என்று இயேசு பறைசாற்றுகிறார். அவர் ஏதோ ஒரு மூலையில் மறைந்துவிடவில்லை;
மாறாக, அகில உலகிற்கும் அரசராக முடிசூட்டப்படுகிறார்.
கட்டளை: "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்."
இது வெறும் குருக்களுக்கும் துறவறத்தாருக்கும் மட்டும் அல்ல,
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறிஸ்தவருக்கும்
உரிய கட்டளை.
2. ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? (The
Mission Begins)
முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 1:1-11), இயேசு மேலே
செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களிடம் வானதூதர்கள்,
"ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?" என்று
கேட்கிறார்கள்.
சிந்தனை: கிறிஸ்தவம் என்பது வானத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கும் (தனிப்பட்ட பக்தி மட்டும்) மதம்
அல்ல; மண்ணில் இறங்கி வேலை செய்யும் மதம். விண்ணகம் செல்ல
வேண்டுமானால், மண்ணகத்தில் இயேசுவின் பணியைச் செய்ய
வேண்டும்.
3. எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன் (The Presence)
இயேசு பிரிகிறார், ஆனால் "உலக முடிவு வரை எந்நாளும் நான்
உங்களுடன் இருக்கிறேன்" என வாக்களிக்கிறார். அவர் உடலால்
மறைந்தாலும், தூய ஆவியார் வழியாகவும், நற்கருணை வழியாகவும்,
இறைவார்த்தை வழியாகவும் நம்மோடு இன்றும் வாழ்கிறார்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள்
(CTA)
விண்ணேற்றப் பெருவிழாவையொட்டி நாம் எடுக்க வேண்டிய முக்கிய
முடிவுகள்:
சாட்சியம் பகிர்தல்: உங்கள் வாழ்க்கையின் மூலம் இயேசுவின்
அன்பை மற்றவர்களுக்குக் காட்டுங்கள். "நீங்கள் எனக்குச்
சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்ற இயேசுவின் வாக்கை
நிறைவேற்றுங்கள்.
விண்ணகச் சிந்தனை: புனித பவுல் கூறுவது போல (எபேசியர்
1:17-23), அழியும் உலகப் பொருட்கள் மீது மட்டும் பற்று
வைக்காமல், அழியாத விண்ணக வாழ்வை நோக்கியே நம் பயணத்தை அமைப்போம்.
பங்குப் பணிகளில் பங்களிப்பு: நற்செய்தி அறிவிக்கும் பணி
என்பது வெறும் பேச்சு அல்ல; ஏழைகளுக்கு உதவுவது, அன்பியக்
கூட்டங்களில் கலந்துகொள்வது, குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பிப்பது
என எல்லாமே நற்செய்திப் பணிதான்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"இயேசு விண்ணிற்குச் சென்றது நம்மை விட்டுப் பிரிவதற்கு அல்ல;
மாறாக, நாம் இருக்கும் இடமெல்லாம் அவரும் இருக்க வேண்டும்
என்பதற்காகவே! அவர் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்,
ஆனால் நம் செயல்களில் அவர் வெளிப்பட வேண்டும்."
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!