|
ஆண்டவரின் திருக்காட்சி |
|
================================================================
முதல் வாசகம்
===============================================================
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
60: 1-6
எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின்
மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;
காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்;
அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி
வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும்
ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர்
வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து
விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின்
சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை
நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும்
வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர்.
அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
=================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை
நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு
வழங்குவாராக. பல்லவி
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில்
மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும்
அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும்
அவர் அரசாள்வார். பல்லவி
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக்
கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக்
கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும்
தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம்
செய்வார்கள். பல்லவி
12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும்
அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம்
காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி
=============================================================
இரண்டாம் வாசகம்
============================================================
பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம்
உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு
அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என
எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே
தெரியப்படுத்தப்பட்டது.
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத்
தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும்
கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும்,
வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே
அம்மறைபொருள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=============================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
================================================================
மத் 2: 2
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை
வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
==============================================================
நற்செய்தி
வாசகம்
===============================================================
அரசரை
வணங்க வந்திருக்கிறோம்.
+
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
"யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன்
எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும்
கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே
இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார்
என்று அவர்களிடம் விசாரித்தான்.
அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க
வேண்டும். ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி
மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இi றவாக்கினர்
எழுதியுள்ளார்" என்றார்கள்.
பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்
கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி
செய்துகொண்டான்.
மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத்
திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும்
சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு
அனுப்பி வைத்தான்.
அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ!
முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல்
வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி
அடைந்தார்கள்.
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா
வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை
வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும்
சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால்
வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
==========================================================
மறையுரைச் சிந்தனை
- 1
==========================================================
மூன்று ஞானிகள் விழா!
ஹென்றி வான் டிகே (Henry Van Dyke) என்ற எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடிய
ஒரு கற்பனைக் கதைதான் நான்காவது ஞானி என்பதாகும்.
விண்ணில் ஒரு மிகப்பெரிய அடையாளம் தோன்றியதைப் பார்த்த
கீழ்த்திசை ஞானிகளான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் போன்றோர்
அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார் என்று உறுதி செய்துகொண்டு,
புதிதாகப் பிறந்திருக்கின்ற அரசரைக் காண யூதேயாவை நோக்கிப் புறப்பட்டுச்
சென்றார்கள். அவர்களோடு அர்த்தபான் என்ற நான்காவது ஞானியும் புறப்படுவதாய்
இருந்தது. அவர் அவர்களோடு சேர்ந்து போகவதற்காக எல்லா ஏற்பாடுகளையும்
செய்துகொண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பரிசளிக்க முத்துகளையும்
எடுத்துக்கொண்டு கிளம்பியபோது வழியில் பெண் ஒருவர்
குற்றுயிராய்க் கிடந்தார். எனவே, அர்த்தபான் அவருக்கு பணிவிடை
புரிந்து, அவரைக் குணப்படுத்திவிட்டு, தன்னிடம் இருந்த முத்துகளில்
ஒன்றை அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
இதற்கிடையில் அர்த்தபான் வருவார் என்று நீண்ட நேரமாகக்
காத்திருந்த மற்ற மூன்று ஞானிகளும், அவர் வரக் காலம் தாழ்த்தியதால்,
அவரை விட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். அவர்கள் போனபின்பு
அர்த்தபான் விண்மீனின் வழிகாட்டுதலில் கொஞ்சம் தாமதமாகவே
யூதேயாவிற்குச் சென்றார்.
இந்த நேரத்தில் ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதனைச் சுற்றிலும்
உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும்
கொல்வதற்கு ஆணை பிறப்பித்திருந்தான். அவனுடைய ஆணைக்கிணங்க படைவீரர்கள்
இரண்டு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளை கொல்கின்ற வேலையில் இருந்தபோது
அர்த்தபான் ஒரு வீட்டின் அருகே இருந்தார். அந்த வீட்டின் உள்ளே
இரண்டு வயத்துக்கும் குறைவான வயதில் குழந்தை ஒன்று இருந்தது.
படைவீரன் ஒருவன் அந்த வீட்டில் இருந்த குழந்தையைக் கொல்வதற்கு
முயன்றபோது அர்த்தபான் படைவீரனுக்கு தன்னிடத்தில் இருந்த
முத்துகளில் ஒன்றை கையூட்டாகக் கொடுத்து, அந்தக் குழந்தையைக்
காப்பாற்றினார். இவ்வாறு அவர் ஒவ்வொரு முறையும் மெசியாவைக் காண
முயன்றபோது எதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அவரைக் காணமுடியாமலே
போய்க்கொண்டிருந்தது.
மெசியாவை எப்படியாவது பார்த்து, அவருக்கு தன்னிடம் இருக்கும்
முத்தைப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அர்த்தபான் பல
ஆண்டுகளாக எருசலேம் வீதிகளில் ஒரு பக்கிரியைப் போன்று அலைந்துகொண்டிருந்தார்.
இப்படி அவர் அலைந்துகொண்டிருந்தபொது தேவைப்படுவோருக்கு எல்லாம்
தன்னிடம் இருந்த முத்தைக் கொடுத்து அவர் உதவிசெய்து வந்தார்.
இதனால் அவரிடமிருந்த முத்துக்கள் குறைந்துகொண்டே போயின.
ஒருநாள் அவர் எருசலேம் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது
மெசியா போகிறார் என்று கேள்விப்பட்டு, அர்த்தபான் அவரைப்
பார்க்க விரைந்து சென்றார். அங்கோ மெசியா எனப்படும் இயேசு ஒரு
குற்றவாளியைப் போன்று சிலுவை சுமந்துகொண்டு
போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பரிசு கொடுக்க தன்னுடைய ஆடைக்குள்
கைவிட்டுப் பார்த்தபோது, அவரிடமிருந்து முத்துக்கள் ஏற்கனவே
தீர்ந்துபோயிருந்தது தெரிய வந்தது. மெசியாவிற்கு தன்னால் பரிசு
ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்று அவர் கதறி அழுதார். அப்போது
மெசியா என்னும் இயேசு அவரிடம், "மிகச் சிறியோராகிய இவர்களுக்குச்
செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து
நகர்ந்து சென்றார்.
மெசியாவைக் காணவேண்டும், அவருக்குத் தன்னிடம் இருக்கின்ற பரிசினைத்
தரவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்ட அர்த்தபான் என்ற அந்த
நான்காவது ஞானி, நாமும் நம்மிடம் இருப்பவற்றை ஆண்டவர் இயேசுவுக்குத்
தரவேண்டும் என்ற சிந்தனையை நம்முடைய உள்ளத்தில்
விதைக்கின்றார். நாம் இயேசுவுக்கு என்ன பரிசினைத்
தரப்போகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்துக்கொள்வோம்.
இன்று நாம் மூன்று ஞானிகளின் விழாவினைக் கொண்டாடி
மகிழ்கின்றோம். ஆண்டவர் இயேசுவைக் காணவேண்டும், அவருக்குத்
தங்களிடம் இருக்கின்ற பரிசினைத் தரவேண்டும் என்ற முனைப்போடு
செயல்பட்ட அந்த ஞானிகளின் நல்ல உள்ளம் நம்மை வியக்க
வைக்கின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம்
கொண்டாடக்கூடிய இந்த மூன்று ஞானிகள் விழா அல்லது
திருக்காட்சிப் பெருவிழாப் நமக்கு ஒருசில ஆழமான உண்மைகளை
எடுத்துக் கூறுகின்றது. அவை என்னென்னவென்று இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
திருக்காட்சிப் பெருவிழா என்று சொல்கின்றபோது மெசியா என்னும்
இயேசு தன்னை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியதைதான் இன்று
நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இயேசுவைக்
காணவந்த அந்த மூன்று ஞானிகளும் யூதர்கள் கிடையாது, அவர்கள்
அனைவரும் புறவினத்தார். ஆண்டவருக்கு எல்லாரும் தன்னுடைய
பிள்ளைகள், எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்பதுதான்
திருவுளம். அதனால்தான் அவர் தன்னை புறவினத்தாருக்கும்
வெளிப்படுத்துகின்றார்.
கீழ்த்திசை ஞானிகள் மூவர் இயேசுவைப் பார்க்க வந்த நிகழ்வு
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற, "பிற இனத்தார்
உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயப் கதிர்நோக்கி
நடைபோடுவர்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்" என்ற
வார்த்தைகளோடு ஒத்துப் போவதை நம்மால் பார்க்கமுடிகின்றது. பிற
இனத்தாரும் எருசலேமை/ ஆண்டவரை நோக்கி வருகின்றார்கள் என்றால்,
இறைவன் எல்லாருக்கும் பொது என்னும் உண்மையைத் தான் நாம்
புரிந்துகொள்ளவேண்டும். இறைவன் எல்லாருக்கும் பொது என்றால்,
நாம் அனைவருமே சகோதர சகோதரிகள்தான் என்பதுதான் உண்மை. ஆகவே,
கடவுள் எனக்குத்தான் சொந்தம், இந்தக் கோவில் என்னுடைய
இனத்தாருக்குத் தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுவதுகூட, நாம்
கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான்
வெளிப்படையாகின்றது.
திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற இரண்டாவது
முக்கியமான செய்தி ஆண்டவர் நம்மைத் தன்னுடைய ஆசிரால் நிரப்பப்
போகின்றார் என்பதாகும். பல்வேறு இடர்பாடுகளையும்,
இக்கட்டுகளையும் எதிர்கொண்டு, இறுதியில் ஆண்டவர் இயேசுவை
குழந்தை இயேசுவின் வடிவில் சந்தித்த ஞானிகள் மட்டில்லா
மகிழ்ச்சி அடைகின்றார்கள் (மத் 2:10). அவர்களுக்கு ஆண்டவர்
இயேசுவின் திருக்காட்சி நிச்சயமம் மனநிறைவையும்,
மகிழ்ச்சியையும், எல்லா விதமான ஆசீர்வாதத்தையும் தந்திருக்கும்
என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆகையால்,
யாராரெல்லாம் நேர்மையான மனதோடு ஆண்டவரைத் தேடிச் செல்கின்றாரோ
அவர்களுக்கு இறைவன் தன்னுடைய ஆசிர்வாத்தைத் தருவார் என்பது
உண்மையில்ம் உண்மை.
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், "எழு, ஒளிவீசு! உன் ஒளி
தோன்றியுள்ளது; ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! (60:
1) என்கின்றார். ஆம், ஆண்டவர்தாமே வேற்று நாட்டில் அடிமைகளைப்
போன்று வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களை, அவர்களுடைய சொந்த
நாட்டிற்கு அழைத்து வந்து, அவர்கள்மீது தன்னுடைய மாட்சியைத்
தோன்றச் செய்து, அவர்களை எல்லா ஆசிராலும் நிரப்புகின்றார்.
ஆகையால், ஆண்டவருடைய வருகை, அவருடைய திருக்காட்சி எல்லா
மக்களுக்கும் எல்லா விதமான ஆசிர்வாதங்களையும் தருகின்றது என்ற
உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நிறைவாக, இவ்விழா உணர்த்துகின்ற செய்தி இறைவனிடமிருந்து ஆசிர்
பெறவேண்டுமானால், அவருடைய சொந்த மக்களாக மாறவேண்டும் என்றால்,
அவருடைய திருக்காட்சியைக் காணவேண்டும் என்றால், நாம் அவருக்கு
ஏற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதாகும்.
நற்செய்தியில் ஆண்டவருடைய திருக்காட்சி எங்கோ இருந்து வந்த
மூன்று ஞானிகளுக்கு கிடைத்தது, ஆனால் இயேசு இருந்த பகுதியிலே
இருந்த ஏரோதுக்கும், அவனைச் சார்ந்தோருக்கும் கிடைக்கவில்லை.
காரணம் மூன்று ஞானிகளும் கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து,
நேர்மையான உள்ளத்தோடு அவரைத் தேடினார்கள். ஆனால், ஏரோது
அத்தகைய மனநிலையோடு தேடவில்லை, அவன் இயேசுவை எப்படியாவது
கொன்றுபோடவேண்டும் என்ற மனநிலையோடுதான் தேடினான். அதனால்தான்
அவனுக்கு ஆண்டவனுடைய திருக்காட்சி கிடைக்கவில்லை. இன்னும்
சொல்லப்போனால் எங்கிருந்தோ வந்த ஞானிகள் ஆண்டவருக்கு
உகந்தவர்களாக மாறினார்கள். ஆனால், அங்கிருந்த ஏரோதும் அவனைச்
சார்ந்தவர்களும் ஆண்டவருக்கு உகந்தவர்களாகவில்லை. ஆகையால்,
நாம் எந்த நாடு, எந்த குலம், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்
என்பது முக்கியம் கிடையாது. நாம் செய்யகூடிய செயல்கள்தான்
முக்கியத்துவம் பெறுகின்றன.
தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று சொல்லிக்கொண்ட
யூதர்களோ இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைக் கொல்ல
முயன்றார்கள். ஆனால், யூதரல்லாத புறவினத்தாராகிய
நூற்றுவத்தலைவர், மூன்று ஞானிகள் இது போன்றவர்கள் ஆண்டவர்
இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு அவரை மெசியாவாக
ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால், நாம் சார்ந்திருக்கும் குலமோ,
சமயமோ, இனமோ அல்ல நம்முடைய செயல்கள்தான் நம்மை இறைவனுக்கு
நெருக்கமாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
குருவானவர் ஒருவர் தனக்கு அறிமுகமான தொழிலதிபருடைய
தொழிற்சாலைக்குச் சென்றார். சென்ற இடத்தில் அவருடைய பங்கைச்
சார்ந்த ஜான் என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
தொழிலதிபரிடம் அவரைச் சுட்டிக்காட்டிப் பேசிய குருவானவர்,
"இந்த ஜான் என்பவர் என்னுடைய பங்கைச் சார்ந்தவர்தான்.
வேலையெல்லாம் நன்றாகப் பார்க்கின்றார்தானே?" என்று கேட்டார்.
தொழிலதிபர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். குருவானவர்
தொடர்ந்து அவரிடம் கேட்க, தொழிலதிபர், "உங்களுடைய பங்கைச்
சார்ந்த கிறிஸ்தவர் என்றுதான் நான் இவரை வேலையில்
அமர்த்தினேன். ஆனால், பெரிதாகச் சொல்லுகின்ற அளவுக்கு இவர்
அப்படியொன்றும் வேலை பார்ப்பதில்லை; வேலையிலும் நேர்மையில்லை"
என்று பட்டெனச் சொல்லிவிட்டு அமைதியானார். குருவானவருக்கு
ஏதோபோல் ஆகிவிட்டது. "கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு, கிறிஸ்தவ
நெறிக்குத் தகாக வாழ்க்கை வாழ்கின்றானே இந்த ஜான்" என்று அவனை
நினைத்து நினைத்தது நொந்துகொண்டார்.
ஆம், நாம் சேர்ந்திருக்கும் மதமோ, குலமோ நம்மை இறைவனுக்கு
உகந்தவர்களாக மாற்றாது. நம்முடைய செயல்கள்தான் நம்மை
இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்றும். பவுலடியார் இதைதான்
நற்செய்தியின்
- நற்செயலின்
- வழியாக பிற இனத்தவரும் கிறிஸ்து
இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும்
வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகின்றனர் என்கின்றார்.
ஆகவே, இன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழாவை
அர்த்தமுள்ளதாக்க கடவுள் எல்லாருக்கும் பொது என்பதை உணர்வோம்,
அது மட்டுமல்லாமல் நற்செயல்களால் அவருக்கு உகந்த மக்களாக,
அவருடைய திருக்காட்சியைக் காணும் பேறு பெறுவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai.
திருக்காட்சிப் பெருவிழா
(எசாயா 60: 1-6; எபேசியர் 3: 2-3, 5-6, மத் 2: 1-12)
எல்லாருக்குமான இறைவன்
நிகழ்வு
டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார்.
அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம்
மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு
முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத
இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, "இறைவா! உன் கருணையோ கருணை.
எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக
நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்"என்றார். உடனே இறைவன் அவரைப்
பார்த்து, "எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று
நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால்
என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?"என்று கேட்டார். "இதோ உடனே
கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி"என்று இறையடியார் இறைவனை
ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக்
கொண்டு போனார்.
அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது.
அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள்
அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே
கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள்.
இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார்.
தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும்
தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு
மிகவும் வியப்பாக இருந்தது. இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக
இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும் என்று நினைத்துவிட்டு, எதுவும்
கேட்காமல் அமைதியாக இருந்தார்.
நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத
தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப்
போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில்
கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப்
போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத்
தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, "இறைவா! நீங்கள் எந்த மதத்தைச்
சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?"என்று கேட்டார்.
அதற்கு இறைவன், "நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும்
சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு
தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக்
குதித்தேன்"என்றார்.
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட
பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது
அர்த்தமற்ற செயல்.
குழதை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும்
திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை
இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த
மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு,
யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு,
அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள்.
வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு
மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில்,
இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும்,
அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர்
எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?"என்கிறார்கள். இதைக்
கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள்
அறிஞர்களையும் கூப்பிட்டு, "மெசியா எங்கே பிறப்பார்?"என்று
கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம்
ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான்
பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும்
தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப்
பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை
நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும்
செய்கிறார்கள்.
இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய
வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும்
செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி.
இயேசு இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர்
இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார்.
அப்படியிருந்தபோதும் யூதர்களின் அரசர் (?) என்று அறியப்பட்ட
இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய
இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற
உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும்
பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு
மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில்
நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.
இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம், ஒரு
தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்
நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான
செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால்,
அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை
முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள்.
இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும்.
அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள்.
இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப்
போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.
சிந்தனை
இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக்
கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை
என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான்,
அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம்
இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம்.
அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
I எசாயா 60: 1-6
II எபேசியர் 3: 2-3a, 5-6
III மத்தேயு 2: 1-12
எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்
நிகழ்வு
இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர்
மற்றவரிடம், "கடவுள் இருக்கிறாரா?" என்றார். "ஆம். இதில் என்ன
சந்தேகம்?" என்றார் மற்றவர். உடனே முதலாமவர், "கடவுள் இருக்கிறார்
என்று சொல்கிறீர்... அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத்
தென்படுவதில்லை" என்றார். இரண்டாமவரோ, "எல்லாருக்கும் தென்படவேண்டும்
என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்" என்றார்.
"நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்"
என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு
அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, "இந்த மின்விசிறியில்
எத்தனை இறக்கைகள் உள்ளன?" என்றார். அதற்கு முதலாமவர் "மூன்று"
என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார்.
அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப்
பார்த்து, "இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய
கண்களுக்குத் தெரிகின்றனவா?"என்றார். "தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது"
என்றார் முதலாமவர்.
"மிகச் சரியாய் சொன்னீர்" என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம்
பேச தொடங்கினார்: "மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள
இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள்
இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம்,
மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள்.
கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும்
வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால்,
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார்.
அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே
முடிகிறது."
ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும்
பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத்
தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும்
பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய
திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா
நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள
வேண்டிய பாடம் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு
தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக்
கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர்
எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற,
"மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்"(எசா 60:3) என்ற இறைவார்த்தை
எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப்
பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை
வெளிப்படுத்தினார்.
லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய
நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக
வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு
அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம்.
இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது.
அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும்.
ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக
இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும்
சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை
வெளிப்படுத்திகின்றார்.
இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான
கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவனுடைய திருக்காட்சியைக் கண்டார்கள்;
ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக்
கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம்,
கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான்
அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள்.
கொடுங்கோலன் ஏரோதைச் சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும்
என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை.
நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத்
தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம்.
எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு
தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.
பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்
ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய
இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன்
உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன்
பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.
பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய
பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நர்செஇதியிநால்
இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும்
முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச்
சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில்
கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு
அவர், "விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்" (மத்
12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது
இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன்
மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.
ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி
ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது
மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும்.
கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா
மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம்
யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான
உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும்
இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால்
திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, "சிங்கக்
குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத்
நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது"(திபா 34: 10) என்று
கூறுவார்.
ஆகவே, நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று ஆண்டவரை
தேடிச்செல்வோம். அதன் மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான
ஆசியையும் நிரம்பப் பெறுவோம்.
சிந்தனை
"ஆண்டவரைத் தேடுங்கள்; வாழ்வீர்கள்"(ஆமோ 5:4) என்பார் இறைவாக்கினர்
ஆமோஸ். ஆகவே நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று நல்ல மனத்தோடு
ஆண்டவரை தேடிச் செல்வோம் அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும்
எல்லாவிதமான ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
================================================================
அவரது விண்மீன்!
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
(ஜனவரி 7, 2018)
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3,5-6
மத்தேயு 2:1-12
கீழைத்திருச்சபையின் கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படும்
திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
"கிறிஸ்துவில்தான் எம் மீட்பு என்னும் மறைபொருளை
புறவினத்தாருக்கு ஒளியாக இன்று வெளிப்படுத்தினீர்" என்று
புகழாரம் சூட்டுகிறது இன்றைய நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரை.
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் மையமாக இருக்கின்ற வார்த்தை
"ஒளி." "எழு! ஒளிவீசு!" என்று எருசலேமை நோக்கி இறைவாக்கு
உரைக்கின்ற எசாயா, அடிமைத்தனத்திற்குப் பின் இஸ்ரயேல் அடையும்
மாட்சியை முன்னுரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்
"விண்மீன்" காட்டிய ஒளியில் இயேசுவைக் கண்டுபிடிக்கின்றனர்
கீழ்த்திசை ஞானியர்.
நாம் வாழும் இன்றைய உலகம் ஃப்ளாஷ் லைட்களின் உலகம். எந்நேரமும்
நாம் ஏதாவது வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நம்
அறையில் எரியும் மின்விளக்குகளின் வெளிச்சம், நாம்
பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களின் வெளிச்சம், எல்.இ.டி
டிவிக்கள் உமிழும் வெளிச்சம், நம் மடிக்கணிணியின் ரெட்டினா
திரை வெளிச்சம், செல்ஃபி எடுக்கும்போது தானாகவே ஒளிரும்
ஃப்ளாஷ் வெளிச்சம் என ஒளிசூழ் உலகில் இருக்கின்றோம்.
நாம் ஒரு பொருளை தெளிவாக பார்க்க ஒளி அவசியமாகிறது. அதாவது,
ஒளி பட்டு எதிரொளித்தால்தான் பார்வையும் காட்சியும்
சாத்தியமாகிறது. விண்மீன் காட்டிய வெளிச்சம் பெத்லகேம்
குழந்தையை யூதர்களின் அரசராக ஞானியருக்குக் காட்டியது.
அவரது
விண்மீன் எது?
என் விண்மீன் எது?
நான் காணும் ஒளி
என்ன?
இவ்வளவு நாட்களாக குழந்தை இயேசுவை சந்தித்தவர்கள் எல்லாம்
இடையர்கள் மட்டுமே. வானதூதர்கள் செய்தி சொன்னதால் இவர்கள்
பெத்லகேம் சென்று மெசியாவை சந்திக்கின்றனர். ஆனால், எந்த ஒரு
வெளிப்பாடும் இல்லாமல் தாங்களே ஓர் அடையாளத்தைக் கண்டறிந்து,
அதைப் பின்பற்றி மெசியாவைக் கண்டவர்கள் ஞானியர் மட்டுமே.
"இந்த உலகில் மரணமும், நான் நடக்க வேண்டும் என நினைப்பது
நடக்காமல் போகும் வரையிலும், நடக்கக் கூடாது என நினைப்பது
எனக்கு நடக்கும் வரையிலும் கடவுளுக்கான தேடல் இருக்கும்"
என்கிறார் சுவாமி விவேகானந்தர். நாம் இயல்பாகவே கடவுளைத்
தேடுகிறோம். நாம் காண்கின்ற எதுவும் நமக்கு பொருள் தராதபோது,
அல்லது முடியக்கூடிய பொருளையே தரும்போது நம் மனம் இயல்பாகவே
மேல்நோக்கி எழும்பிவிடுகின்றது.
நாம் கடவுள் அனுபவம் பெற முடியுமா? கடவுளை நாம் எங்கே
பார்க்கலாம்? கடவுளை நாம் எப்படி அறியலாம்?
ஏரோது நினைத்தான்: "என் அரண்மனை போதும். என் படைபலம் போதும்.
என் மனைவியர் போதும். உரோமைக்குக் கொடுக்கும் வரியை
அதிகப்படுத்தினால், அதில் தனக்கு வரும் பங்கு போதும்." யூதக்
குருக்களும், மறைவல்லுநர்கள் நினைத்தார்கள்: "தோரா என்னும்
சட்டநூல்களைப் படித்தால் போதும். தொழுகைக்கூடங்களில்
இதைப்பற்றிப் பேசினால் போதும். மக்களுக்குள் ஏதாவது பிரச்சினை
என்றால் மோசே சட்டத்தை வைத்துத் தீர்ப்புச் சொன்னால் போதும்.
எருசலேம் ஆலயத்தின் காணிக்கை போதும். யாராவது கலகம் செய்தால்
அவர்களை விலக்கி வைத்தால் போதும் அல்லது கல்லால் எறிந்து
கொன்றால் போதும்".
யூதர்கள் நினைத்தனர்: "யாவே இறைவன் தன் சொந்த இனமாகத்
தேர்ந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தில் பிறந்தால் போதும். மீட்பு
கிடைத்துவிடும்" ஏரோதுக்கு அவனது பதவியே கடவுள். அவன்
அரண்மனையே கோவில். யூதக்குருக்களுக்கும், மறைநூல்
வல்லுநர்களுக்கும் சட்டமே கடவுள், எருசலேமே கோவில்
(சமாரியர்களின் கெரிசிம் அல்ல!). அனைத்து யூத மக்களுக்கும்
தங்கள் இனமே கடவுள், கோவில் எல்லாம்.
இந்த இரண்டையும் தாண்டி இறைவன் தன்னை வெளிப்படுத்தும்
நிகழ்வைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
கடவுளைப் பற்றிய தேடலைப் புரிந்து கொள்ள முதலில் நாம் மூன்று
சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்:
அ. டிஸ்கவரி. ஒன்று "கவர்" செய்யப்பட்டிருக்கிறது. அதை ஒருவர்
"அன்கவர்" அல்லது "டிஸ்கவர்" செய்கிறார். எடுத்துக்காட்டாக,
"அமெரிக்கா" நமக்குத் தெரியாமல் "கவர்" செய்யப்பட்டிருக்கிறது.
அதை கொலம்பஸ் "டிஸ்கவர்" செய்கிறார். "புவியீர்ப்பு விசை"
நமக்குத் தெரியாமல் "கவர்" செய்யப்பட்டிருக்கிறது. அதை
நியூட்டன் "டிஸ்கவர்" செய்கிறார். கண்ணுக்குத் தெரிகின்ற
முடிவைப் பார்த்து கண்ணுக்குத் தெரியாத காரணத்தைக்
கண்டுபிடிப்பது டிஸ்கவரி.
ஆ. இன்வென்ஷன். விரும்புகின்ற முடிவைப் பெறுவதற்காக அதற்காக
காரணத்தை உருவாக்குவது. வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது எனது
முடிவு. அதற்கான காரணமாக நான் மின்சாரத்தை உருவாக்குகிறேன் என
உருவாக்குகிறார் எடிசன். ஆக, வேண்டுகின்ற ஒன்றை புதிய காரண
உருவாக்கத்தில் பெற்றுக்கொள்வது இன்வென்ஷன்.
மேற்காணும் இரண்டு சொற்களால் கடவுளை அறிந்துவிட முடியாது.
கடவுளை நாம் டிஸ்கவரி செய்யவும் முடியாது. அவரை இன்வென்ட்
செய்யவும் முடியாது. பின் அவரை எப்படிக் கண்டு கொள்வது?
இ. ரெவலேஷன். அதாவது, கடவுள் தாமே தன்னை மற்றவர்களுக்கு
வெளிப்படுத்துவது. காட்சி, இறைவார்த்தை அறிவித்தல், உணர்தல்
இவை அனைத்தும் வெளிப்பாடுகள். இதையே இன்றைய இரண்டாம்
வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) தூய பவுலடியார், "அந்த
மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே
தெரியப்படுத்தப்பட்டது" என்கிறார். ஆக, கடவுள் தாமே "தூய ஆவி
வழியாக திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும்
வெளிப்படுத்துகின்றார்."
எப்படி ஒவ்வொரு டிஸ்கவரி மற்றும் இன்வென்ஷனிலும் புதிய செயல்
ஒன்று நடக்கிறதோ, அவ்வாறே ரெவலேஷனிலும் புதிய செயல்பாடு ஒன்று
நடக்கிறது. பவுலைப் பொறுத்தவரையில், "பிற இனத்தாரும் உடன்
உரிமையாளர் மற்றும் உடன் பங்காளிகளாக மாறுகிறார்கள்" என்பதே
கடவுளின் புதிய செயல்பாடு.
ஆக, இறைவன் இயேசு கிறிஸ்து வழியாக தன்னை வெளிப்படுத்தி மற்ற
இனத்தாரையும் தன் கைகளுக்குள் கூட்டிச் சேர்க்கின்றார்.
இதே செய்தி இறைவாக்காக இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா
60:1-16) முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவுக்கு நாடு
கடத்தப்பட்ட மக்கள் தாங்கள் மட்டும் திரும்பி வரப்போவதில்லை.
மாறாக, மற்ற இனத்தாரையும் தங்களிடம் கூட்டிக்கொண்டு வருவர்
என்பதே புதிய செயல்பாடு. இந்தப் புதிய செயல்பாடு எப்படி
நடக்கிறது? "கடவுளின் மாட்சி வெளிப்படுத்துப்படுவதால்"
நடக்கிறது. இங்கே புதிய பாரசீக அரசன் சைரசை இந்த ஒளி
குறித்தாலும், மெசியா இறைவாக்கு அடிப்படையில் இது இயேசுவைக்
குறிக்கிறது என்பது கிறிஸ்தவர்களின் புரிதல். கடவுளின் மாட்சி
வெளிப்படுத்தப்பட்டவுடன் ஒரு புதிய புரட்டிப்போடுதல் நிகழ்வு
நடைபெறுகின்றது. சிறைக்கைதிகளாக கால்கடுக்க நடந்து இழுத்துச்
செல்லப்பட்ட புதல்வரும், புதல்வியரும் "தோளில்
தூக்கிவரப்படுகின்றனர்." நகரமே வெறுமையாகிவிட்டது என்ற நிலை
மாறி, "ஒட்டகங்களின் பெருந்திரள்களும், பொன்னும்,
நறுமணப்பொருளும் ஏந்திவரப்படுகின்றது."
இவ்வாறாக, கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார். அந்த
வெளிப்பாடு புதிய செயலைக் கொண்டு வருகின்றது.
(முதல் வாசகம் எசா 60:1-6
1. பாட பின்புலம்
பாபிலோனிய படையெடுப்பினால் எருசலேம் களையிழந்து, இருள் கவ்விக்
கிடக்கிறது. இன்னும் எருசலேமில் எஞ்சியிருந்த மக்கள் தங்கள்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் மெதுவாகக்
கடத்திக் கொண்டிருக்கும்நேரம், எசாயா அவர்களுக்கு
நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார். இன்றைய முதல் வாசகப்
பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் இரண்டு:
ஒளி, மாட்சி.
2. வார்த்தைகளும், விளக்கங்களும்
அ. "ஒளி." முதல் ஏற்பாட்டிலும், பண்டைக்கால இலக்கியங்களிலும்
ஒளி என்பது வாழ்வின் உருவகம். ஒளி என்பது ஒரு இயற்கை உருவகம்.
பண்டைக்காலத்தில் ஒளி என்பது சூரியனை மையப்படுத்தியதாக மட்டுமே
இருந்தது. சூரியன் வந்தால் நாள் வெளிச்சமாகிறது. பனி மறைகிறது.
இருள் மறைகிறது. மலர்களும், செடிகளும் புத்துயிர் பெறுகின்றன.
சூரியனின் மறைவு இருளையும், பனியையும் கொண்டுவந்துவிடுகிறது.
ஒளி வரும்போது வாழ்வு வருகிறது. எருசலேம் இப்போது ஒளியிழந்து
கிடக்கிறது அந்நியப்படையெடுப்பால்.
ஆ. "ஆண்டவரின் மாட்சி." ஒரு நகரம் அழிக்கப்பட்டால் அந்த
நகரத்திலிருக்கும் கடவுள், நகரை விட்டு வெளியேறி விடுவார்
என்பதும் நாம் பண்டைய இலக்கியங்களில் காணும் பண்பு. எருசலேம்
நகரம் படையெடுக்கப்பட்டு, ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டவுடன்,
ஆலயத்தை நிரப்பியிருந்த கடவுளின் மாட்சி அகல்கின்றது. கடவுள்
நகரை விட்டு வெளியே புறப்படுகின்றார். இப்படி அகன்று சென்ற
மாட்சி திரும்ப வரும் என இறைவாக்குரைக்கின்றார் எசாயா. மேலும்,
எருசலேமிற்கு ஒளி தருவதும் கடவுளின் மாட்சியே. இதைத்தான்
திருவெளிப்பாட்டு நூலிலும், புதிய எருசலேம் பற்றி காட்சி
காண்கின்ற யோவான், "அந்நகருக்கு (புதிய எருசலேம்) ஒளி கொடுக்க
கதிரவனோ, நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி.
ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு" (திவெ 22:23) என்கிறார்.
இ. "கண்களை உயர்த்தி." "கண்களை உயர்த்துதல்" என்பது
பார்ப்பதற்கான உருவகம். மேலும், குனிந்திருக்கும் கண்கள்,
தாழ்ந்திருக்கும் முகம் இனி வெட்கத்தால், அவமானத்தால்
குனியாது, தாழாது என்றும், இனி எப்போதும் பெருமிதத்தால்
உயர்ந்திருக்கும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இறைவாக்கினார்.
ஈ. "தொலைவிலிருந்து வரும் புதல்வர்." பாபிலோனியாவுக்கு
நாடுகடத்தப்பட்டோர். இவர்கள் இனி நடந்து வர மாட்டார்கள்.
மாறாக, சுமந்து வரப்படுவார்கள். ஆக, அவர்களும் மாட்சியோடு
வருவார்கள்.
உ. "கடல் திரள்," "செல்வம்," "ஒட்டகத்திரள்," "பொன்,"
"நறுமணப்பொருட்கள்." வெறுமையும், சாம்பலும் மட்டும்
எஞ்சியிருக்கும் எருசலேமை நோக்கி செல்வங்கள் வருகின்றன.
மேலும், இங்கே மெசியாவின் பிறப்பு இறைவாக்கையும் காணலாம்.
அதாவது, பிறந்திருக்கும் மெசியாவைக் காண ஒட்டகத்திரளில்
கீழ்த்திசை ஞானியர் வருவர் என்று இறைவாக்கினர்
முன்னுரைப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மிதியான், ஏப்பாகு, சேபா
என்று இங்கே குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும்
எருசலேமிற்கு கிழக்கே இருக்கும் பகுதிகள்தாம்.)
இரண்டாம் வாசகம் எபே 3:2-3,5-6
பிறஇனத்தாருக்கு தான் செய்யும் திருப்பணி பற்றி எபேசு நகரத்
திருஅவைக்கு எழுதும் பவுல் இரண்டு விடயங்களைக்
குறிப்பிடுகின்றார்: (அ) மறைபொருள், (ஆ) வெளிப்பாடு
அ. என்ன மறைபொருள்? அதாவது, கிறிஸ்து இயேசுவின் வழியாக
அனைவரும் - புறஇனத்தார் உட்பட
- வாக்குறுதியின் உடன்
பங்காளிகள் ஆகியிருக்கின்றனர். அதாவது, மீட்பின் கதவுகள்
யூதர்களுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும்
திறந்துவிடப்பட்டிருக்கிறது.
ஆ. எப்படி? இறைவெளிப்பாட்டால். இயேசுவே பவுலுக்கு இதை
வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி வாசகம் மத் 2:1-12
1. மத்தேயுவும் மற்ற நற்செய்தியாளர்களும்
ஞானியர் இயேசுவைக் காண வரும் நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர்
மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும், இயேசுவின் பிறப்பு பற்றி
லூக்கா பக்கம், பக்கமாக எழுதித் தள்ள, மத்தேயுவோ, "ஏரோது அரசன்
காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" என
ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிடுகின்றார்.
மேலும், விண்மீன் பற்றிய குறிப்பு மத்தேயு நற்செய்தியில்
மட்டுமே உள்ளது.
மத்தேயு நற்செய்தியில், யோசேப்பிற்கு கனவில் எச்சரிக்கை
வருவதுபோல, ஞானியருக்கும் எச்சரிக்கை வருகிறது.
2. பழைய புரிதல்களும், புதிய சவால்களும்
அ. எத்தனை ஞானியர் வந்தனர்? மத்தேயு நற்செய்தியாளர் ஞானியர்
என்று குறிப்பிடுகிறாரே தவிர, மூன்று என்று எண்ணிக்கையை
குறிப்பிடவில்லை. அவர்கள் கொண்டுவந்த பொன், சாம்பிராணி,
வெள்ளைப்போளத்தை வைத்து பாரம்பரியத்தில் நாம் மூன்று ஞானியர்
எனக் குறிப்பிடுகிறோம். இவர்களுக்கு கஸ்பார், மெல்கியோர்,
பல்தசார் என பெயர்களும் கொடுத்திருக்கிறோம். நான்காம் ஞானியான
அர்ட்டாபன் பற்றியும் ஒரு கதை உண்டு. ஆக, எத்தனை ஞானியர்
என்பதை நாம் அறியோம். எண்ணிக்கையைக் குறிப்பிடுவதை மத்தேயு
தவிர்ப்பதற்குக் காரணம், நம்மையும் ஞானியர் என்ற
வட்டத்துக்குள் கொண்டுவரவே.
ஆ. நட்சத்திரம். ஏரோதைக் கண்டபின் நட்சத்திரத்தைக் கண்டார்களா?
அல்லது நட்சத்திரத்தைக் கண்டபின் ஏரோதைக் கண்டார்களா? அல்லது
இரண்டு முறை நட்சத்திரத்தைக் கண்டார்களா? - இதற்கான பதிலும்
தெளிவாக இல்லை. மேலும், விண்மீன் ஏரோதின் அரண்மனையிலிருந்து
அவர்களை இயேசு பிறந்திருக்கும் வீட்டிற்கு அழைத்து செல்கிறது.
இ. மரியாவும், இயேசுவும். வீட்டிற்குள் குழந்தையை மரியாள்
வைத்திருக்கிறார். யோசேப்பைக் காணவில்லை. ஆனால், மத் 1:25ன்
படி அந்த இடத்தில் யோசேப்பு இருந்திருக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் வெளிப்பாடு இரண்டு
நிலைகளில் நடக்கிறது:
அ. விண்மீன்
ஞானியர் விண்மீன் எழுவதையும், நகர்வதையும் கண்டுகொள்கின்றனர்.
புறவினத்தாரின் நம்பிக்கையின்படி புதிய அரசரின் பிறப்பு
விண்மீனால் அறிவிக்கப்படும். மேலும், யூதர்களின் நடுவில்
விளங்கிய "மெசியா எதிர்நோக்கு" "யாக்கோபிலிருந்து தோன்றும்
விண்மீன்" (காண். எண் 24:17, 1 கும்ரான்எம் 11:6) என்று
அறியப்பட்டது. ஆக, விண்மீன் கீழ்த்திசை ஞானியரையும்,
எருசலேமின் யூதர்களையும் ஒருங்கே இணைக்கிறது. ஆனால், இந்த
வெளிப்பாட்டை கீழ்த்திசை ஞானியர் கண்டுகொண்டனரே தவிர,
எருசலேம்வாழ் யூதர்களும், குருக்களும், ஆட்சியாளர்களும் அதைக்
கண்டுகொள்ளவில்லை. அல்லது பொருட்படுத்தவில்லை.
ஆ. கனவு
கனவுகள் வழியே கடவுளின் வெளிப்பாடு என்பது மத்தேயு
நற்செய்தியாளர் பயன்படுத்தும் ஓர் இலக்கியக்கூறு. மத் 1:20,
2:12, 13, 19, 22, 27:19 என ஆறு இடங்களில் "கனவு" என்ற
வார்த்தை வருகின்றது. முதல் ஏற்பாட்டு யாக்கோபு மற்றும்
யோசேப்பு கதையாடல்களின் பின்புலத்தில் இதைப் பார்க்கும்போது,
கனவின் வழியாக கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகிறது.
"விண்மீன்" என்ற வெளி அடையாளத்தின் வழியாகவும், "கனவு" என்ற
உள் அடையாளத்தின் வழியாகவும் கடவுள் தன்னை ஞானியருக்கு
வெளிப்படுத்துகின்றார்.
மனிதச் செயல்பாட்டை விட இங்கே கடவுளின் வெளிப்பாடே முதன்மை
பெறுகின்றது.
இந்த "அவரது விண்மீன்" நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள்
எவை?
1. "அவரது விண்மீன்" - "அவனது-அவளது விண்மீன்"
"அவரது விண்மீன்" ஞானியருக்கு இரண்டு முறை தெரிகின்றது.
முதலில் தங்கள் நாட்டில். இரண்டாவது ஏரோதிடம் இருந்து வெளியே
வந்தபின். ஆக, அவரது விண்மீனை நாம் கண்டுகொள்வதற்கு எங்கே
இருக்கிறோம் என்பது தேவையன்று. நாம் எங்கே இருந்தாலும் அவரது
விண்மீன் நமக்குத் தெரியும். நாம் பாவத்தில் இருந்தாலும்,
புனிதராய் இருந்தாலும், அவருக்கு அருகில் இருந்தாலும், அவரை
விட்டுத் தொலைவில் இருந்தாலும் அவரது விண்மீன் நமக்குத்
தெரியும். ஏரோதின் அரண்மனைக்கு வெளியே வந்தாலும் அவர்களுக்கு
விண்மீன் தெரிகிறது. அதாவது, இருள், இறப்பு ஆட்சி செய்யும்
ஏரோதுவைச் சந்தித்துவிட்டு வந்தாலும் அவரது விண்மீன் என்
கண்ணுக்குத் தெரியும். ஆக, கடவுளின் வெளிப்பாட்டிற்கு யாரும்
திரையிட முடியாது.
ஆனால், என்ன பிரச்சினை என்னவென்றால், பல நேரங்களில் "அவனது -
அவளது விண்மீன்" என நானாகவே சில விண்மீன்களைக் கற்பனை செய்து
கொள்வதுதான்.
எனது விண்மீன் எது? "அவரது விண்மீனா?" அல்லது "வேறு விண்மீனா?"
அவரது விண்மீன் மட்டுமே நின்று ஒளிரக் கூடியது. மற்ற
விண்மீன்கள் எல்லாம் ஃப்ளாஷ் லைட்களே. அவைகளின் ஒளி சில
நொடித்துளிகள் மட்டுமே.
2. "பிறந்திருக்கிறவர் எங்கே?"
தேடுவதை சரியான இடத்தில் தேடுதல் வேண்டும். தன் வீட்டுச்
சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தொலைத்துவிட்ட இடத்தில் தேடாமல்,
தெருவிளக்கின்கீழ்தான் வெளிச்சம் இருக்கிறது என்று அங்கே தேடிய
முல்லாவைப் போல இல்லாமல், தேட வேண்டிய இடத்தில் தேட வேண்டும்
மெசியாவை.
மெசியாவைத் தேடுகின்ற தேடலில் தேடுபவரும் தன்னைக்
கண்டுகொள்கின்றார். அதுதான் அதில் உள்ள அற்புதம்.
"அவர் எங்கே?" என்று கேட்கின்ற கேள்வி, என்னை அறியாமலேயே,
"நான் எங்கே?" என்ற கேள்வியை என்னுள் எழுப்பி விடுகிறது.
3. வந்த நோக்கம் நிறைவேறியது!
"வணங்க வந்தோம்" என வருகின்றனர். "வணங்கிவிட்டு" செல்கின்றனர்.
தங்கள் பயணத்தின் நோக்கம் எது என்பது அவர்களுக்குத் தெளிவாக
இருந்தது. மேலும், அந்தத் தெளிவை செயல்படுத்தும் துணிவும்
இருந்தது.
ஏரோதின் ஏமாற்று வார்த்தைகளும், எருசலேம் மக்களின் கலக்கமும்,
அரண்மனையின் பளபளப்பும் அவர்களின் பயணத்தை திசைதிருப்பவில்லை.
இன்று நான் என் பயணங்களில் திசைதிரும்புகின்றேனா?
அலைக்கழிக்கப்படுகின்றேனா? அல்லது என் பயணம் பாதியிலேயே
முடிந்துவிடுகிறதா?
4. "நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து"
வாழ்வின் மிகப்பெரிய அற்புதங்கள் நம் கண்களுக்குப்
புலனாவதில்லை. கடற்கரையில் நின்றுகொண்டு கடலில் எவ்வளவு
கண்ணீர்த் துளிகள் என்று எல்லாரும் எண்ணிக்கொண்டிருக்க, இந்த
கடலே ஒற்றைத் தண்ணீர்த் துளி என்கிறார் கிப்ரான். ஒரு விதையைப்
பார்க்கும்போதே அதில் ஒரு விருட்சத்தைப் பார்க்கவும், ஒரு
கல்லைப் பார்க்கும்போதே அதில் ஒரு சிற்பத்தைப் பார்க்கவும்,
ஒரு குழந்தையைப் பார்க்கும்போதே அதில் ஒரு மெசியாவைப்
பார்க்கவும் ஞானம் தேவை. அந்த ஞானம் இவர்களுக்கு இருந்தது.
குழந்தையின் முன் ஞானியர் நெடுஞ்சாண்கிடையாய் விழுகின்றனர்.
மாட்டுத்தொழுவத்தில் ஞானம் நெடுஞ்சாண்கிடையாய்
விழுந்துகிடக்கிறது.
"வலுவற்றிருப்பதன் மகிழ்ச்சி" என்ற சொல்லாடலை தன் "அன்பின்
மகிழ்ச்சி" என்னும் திருத்தூது மடலில் இயேசுவுக்குப்
பயன்படுத்துகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் தான் ஒரு
குழந்தையாக, வலுவற்றுப் பிறப்பதில் மகிழ்கின்றார்.
நெடுஞ்சாண்கிடைதான் உச்சகட்ட வலுவற்ற நிலை. நான் ஒருவர் முன்
நெடுஞ்சாண்கிடையாய் விழுகிறேன் என்றால் அவர்முன் நான்
முழுமையாக வலுவற்றவன் ஆகிறேன். அவருக்கு என்னை மிதிக்கவும்
உரிமை உண்டு. தூக்கி விடவும் உரிமை உண்டு. நெடுஞ்சாண்கிடையாய்
விழும்போது என் முகம் மறைகிறது. என் அடையாளம் மறைகிறது. என்
கைகளும், கால்களும் செயலற்றுப்போகின்றன.
இன்று பல நேரங்களில் நான் வலுவோடு இருப்பதையே மகிழ்ச்சி எனக்
கருதுகிறேன். என் படிப்பு, பெயர், புகழ், பணி, உறவுநிலை என
அனைத்திலும் என்னை வலுவாக்கிக்கொள்ள நினைக்கிறேன். என்
வல்லமையின் முன் மற்றவர்கள் பயப்பட வேண்டும் எனவும், சரணடைய
வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். ஆனால், வல்லமை என்பது
"ரெலடிவ்". எப்படி? நான் வலுவானவன் என நினைத்துக் கொண்டு சிலரை
என் முன் கூனிக்குறுக வைக்கிறேன். ஆனால், எனக்கு வலுவானவர்
முன் நான் கூனிக்குறுகி நிற்கின்றேன். ஆனால், நான் என்னையே
வலுவற்றதோடு ஒன்றிணைத்துக்கொண்டால் இப்படிப்பட்ட இருதலை வாழ்வு
தேவையில்லை.
மேலும், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள் தங்களை
வெறுமையாக்கியது மட்டுமல்லாமல், தங்களிடமிருந்த பொருள்களையும்
- பொன், தூபம், வெள்ளைப்போளம்
- வெறுமையாக்குகின்றனர்.
வலுவின்மையை முழுமையாக அணிந்து கொள்கின்றனர்.
5. "வேறு வழியாக நாடு திரும்பினார்கள்"
மெசியாவைச் சந்திப்பது இரண்டு வகைகளில் சவாலாக அமைகின்றது: (அ)
மெசியாவின் முன் முழந்தாள்படியிட்ட கால்கள் மற்றவர் முன்
முழந்தாள்படியிட தேவையில்லை. ஒளியின் முன், வாழ்வின் முன்,
குழந்தையின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள், இருளின்
முன், இறப்பின் முன், ஏரோதின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழத்
தேவையில்லை. அல்லது விழக்கூடாது. இரண்டும் வேண்டும் என்று
இரண்டோடும் சமரசம் செய்துகொள்ள முயல்வது ஆபத்தில் போய்
முடியும். (ஆ) மெசியாவை சந்திக்கும் நோக்கம் அங்கேயே அவரோடு
ஒன்றித்துவிடுவதற்கு அல்ல. மாறாக, திரும்பி நம் ஊர்
செல்வதற்கு. அவரைச் சந்தித்த ஒவ்வொருவரும் தங்கள் வீடு
நோக்கியும், ஊர் நோக்கியும், உறவு நோக்கியும் செல்ல வேண்டும்.
குழந்தையோடு அமர்வதும், அதன் புன்சிரிப்பை பார்த்துக்கொண்டே
இருப்பதும் மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த மகிழ்ச்சியை நான் என்
வாழ்க்கை நிலைகளுக்குள், உறவு நிலைகளுக்குள் எடுத்துச் செல்தல்
அவசியம்.
மேலும் சிந்திக்க,
அ. சில நட்சத்திரங்கள் வாழ்வில் ஒருமுறைதான் தோன்றும். சில
அனுபவங்கள் நமக்கு வாழ்வில் ஒருமுறைதான் வரும். சிலரை நாம்
வாழ்வில் ஒருமுறைதான் சந்திப்போம். ஆனால், நாம் அந்த
நட்சத்திரத்தைக் காணத் தவறிவிட்டால், அதை ஒருபோதும் திரும்ப
நம்மால் காணவே இயலாது. அன்று எருசலேம் வானில் தோன்றிய விண்மீனை
எல்லாருமே பார்த்திருப்பார்கள். ஆனால், பார்த்த அனைவருமே அந்த
விண்மீனைப் பின்பற்றவில்லை. விண்மீன் பலருக்கு பல்வேறு
உணர்வுகளை ஏற்படுத்துகின்றது: விண்மீன் பற்றி கேட்ட ஏரோதுக்கு
அதிர்ச்சி. தன் அரியணை பறிபோய்விடுமோ? என்ற கவலை.
மறைவல்லுநர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்தது. ஆனால் அது
எங்கேயோ? எப்போதோ? நடக்கும் நிகழ்வு என்று கண்டுகொள்ளாமல்
இருந்தனர். சாதாரண மக்களுக்கு விண்மீன் ஒரு ஆச்சர்யம். ஆனால்
அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்க்கவே நேரமில்லை.
விண்மீனைப் பின்தொடர எப்படி நேரம் இருக்கும்? ஆனால் இந்தக்
கீழ்த்திசை ஞானியர் மட்டும் எப்படி விண்மீனைத் தொடர்ந்தனர்?
ஆ. "வணங்க வந்தார்கள். வணங்கினார்கள். திரும்பிச்
சென்றார்கள்." அதாவது, ஒளியைக் கண்டவர்கள் இருளை
வணங்குவதில்லை. இவர்கள் இயேசுவுக்கு செய்த மிகப்பெரிய வணக்கம்
பொன்னோ, பொருளோ அல்ல. மாறாக, அவர்கள் ஏரோதுக்கு வணங்காததுதான்.
தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர். ஒளியை வணங்கியை
கைகளைக் கொண்டு இருளை அவர்களால் வணங்க முடியாது. ஆகையால்தான்,
வேறு வழியாக நாடு திரும்புகிறார்கள்.
இ. "வெறுமையாக்கியதால் நிறைவடைந்தார்கள்." பொன், சாம்பிராணி
மற்றும் வெள்ளைப்போளம் என்பது ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம்.
தங்களின் வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும், ஒரு
மாட்டுக்கொட்டகையில் வைத்துவிட்டு வெறுங்கையராய், ஏழையராய்
நாடு திரும்புகின்றனர். "நாங்கள் வெறுமையாய் திரும்புகிறோம்.
ஆனால் எங்கள் உள்ளம் நிறைவாக இருக்கிறது!" என்றுதான்
திரும்பியிருப்பார்கள் இந்த பெயர் தெரியா ஞானியர்.
ஈ. இரண்டு கேள்விகள்: 1. யூதர்களின் அரசராகப் பிறந்திருப்பவர்
எங்கே? 2. விண்மீன் தோன்றியது எப்போது?" முதல் கேள்வியை
ஞானியர் ஏரோதிடம் கேட்கின்றனர். இரண்டாம் கேள்வியை ஏரோது
ஞானியரிடம் கேட்கின்றான். முதல் கேள்வியின் உட்பொருள்: எங்கே?
இரண்டாம் கேள்வியின் உட்பொருள்: எப்போது? முதல் கேள்வி இடம்
சார்ந்தது. இரண்டாம் கேள்வி நேரம் சார்ந்தது. மனிதர்களையும்,
மனிதர்களின் வரலாற்றையும் குறிப்பிடும்போது "இடம்", "நேரம்"
என்ற இரண்டு அலகுகளை வைத்தே குறிப்பிடுகின்றோம். ஏதாவது ஒன்று
நடந்தால் அது எங்கே எனவும், எப்போது எனவுமே கேட்கின்றோம்.
எங்கே, எப்போது என்ற இந்த இரண்டு வார்த்தைகள் நம் இருப்பை
எடுத்துரைக்கின்றன. இந்த இரண்டு கேள்விகளும் இயேசுவின் பிறப்பை
மையப்படுத்தி இருக்கின்றன. இந்தக் கேள்விகள் மனித
வரலாற்றிற்குள் முழுமையாக இறைவன் நுழைந்து விட்டதை இந்த
வார்த்தைகள் காட்டுகின்றன. எங்கே? எப்போது? இந்த இரண்டு
கேள்விகள் தாம் நம் தேடலையும் அதிகமாக்குகின்றன. இன்றைய
நற்செய்திப் பகுதியில் பெரிய கலாச்சார மாற்றங்கள் நிகழ்கின்றன.
மூன்று புறவினத்தார் "யூதரின் அரசரைத்" தேடுகின்றனர்.
யூதர்களின் அரசன் எப்படி புறவினத்தாருக்கும் அரசராக இருக்க
முடியும்? தங்கள் அரசர்களை தாங்களே கண்டுகொள்ளாதபோது
மற்றவர்கள் அவரைத் தேடி வந்ததை ஏரோதும், எருசலேமும் எப்படி
எதிர்கொண்டது?
உ. கண்களால் காண முடியாதவையே நம் வாழ்வை அதிகம் பாதிக்கின்றன.
ஜென் துறவி ஒருவரிடம் சீடன் ஒருவன் வருகின்றான். புதிதாக வந்த
சீடன் தோட்ட வேலை பார்க்க அனுப்பப்படுகிறான். அந்தச் சீடன்
செடிகளுக்குத் தண்ணீர் விடும்போதெல்லாம் வேர்களுக்கு
விடுவதற்குப் பதில் இலைகளுக்கும், பூக்களுக்கும் விட்டுக்
கொண்டிருந்தான். கொஞ்ச நாளில் செடிகளெல்லாம்
வாடிக்கொண்டிருப்பதையும், பூக்கள் விழுந்து கிடப்பதையும்
காண்கின்ற துறவி, "என்ன ஆச்சு செடிகளுக்கு?" என்று
கேட்கின்றார். "எனக்கு ஒன்றும் தெரியாது. நான் நன்றாகத் தான்
தண்ணீர் விட்டேன்!" என்கிறான் சீடன். "எங்கே தண்ணீர் விடு
பார்ப்போம்!" என்கிறார் துறவி. சீடனும் இலைகளுக்கும்,
பூக்களுக்கும் தண்ணீர் விடுகிறான். "வேர்களுக்கல்லவா நீர் விட
வேண்டும்" என்று துறவி கேட்டதற்கு சீடன் சொல்கிறான்:
"எப்படியும் தண்ணீர் இலைக்குத்தானே வரப்போகின்றது. ஆகையால்
இலையிலேயே நீர் விடலாமே? ஏன் தண்ணீரை வேர்களில் வீணாக்க
வேண்டும்!" "வேர்களின் விரிவுகளே இலைகள். வேர்களன்றி இலைகள்
இல்லை. வேர்களைச் சார்ந்தே இலைகள் இருக்கின்றன. கண்ணுக்குத்
தெரிவது மட்டும் பயன்தருபவை அல்ல. கண்ணுக்குத் தெரியாமல்
மறைந்திருப்பவையே அதிக மதிப்பு கொண்டவை" என்கிறார் துறவி.
ஞானம் பெற்றான் சீடன். ஏரோதின் கண்ணுக்கும், எருசலேம்
நகரத்தாரின் கண்ணுக்கும் மறைவாயிருந்தது, ஞானியருக்கு
வெளிச்சமானது எப்படி?
இறுதியாக,
"அவரது விண்மீன்" ஏதோ அன்று தோன்றிய ஒன்று மட்டும் அல்ல.
அது இன்றும் தோன்றுகிறது.
நான் வலுவற்று இருக்கும்போது,
நான் என் பாதுகாப்பான கூட்டை விட்டு வெளியேற தயாராகும்போது,
நான் இருளின் முன் சமரசம் செய்து கொள்ள முயலாதபோது,
நான் என்னையே வெறுமையாக்கும்போது,
நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ளலாம் என
நினைக்கும்போது,
இன்றும் தோன்றுகிறது.
அதை நான் தேடினால், கண்டுகொண்டால், பின்பற்றினால் எத்துணை
நலம்!
அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும்
(ஜனவரி 3, 2021)
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று
சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின்
மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது
மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய
சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று
இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின்
தொடக்கவுரை.
லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும்
யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு
நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும்
புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின்
சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க
வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு.
யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள்
மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று
எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு,
புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும்
தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று
முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக
இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம்
வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம்.
யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த
காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற
திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து
இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும்,
வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என
எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும்
கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே
யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு
பெருவிழா.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர்
நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர
அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய
வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத்
தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி
தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.'
ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண்.
எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து
கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது.
இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால்
இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த
இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய
ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம்
நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட
புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின்
திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம்
வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு)
ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார்
என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும்
கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும்
அரசனாகவும் இருப்பார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை'
பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப்
பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல்
தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர்.
'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார்
மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை
அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம்
இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு
எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே,
குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும்
இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'
இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை,
பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக
மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள்.
நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும்
விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த
வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில்,
இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப்
பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க
மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான்
காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில்
அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர்.
இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று
நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள்
அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை
அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக
இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும்,
இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல்
கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த
அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக்
குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள்.
அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி
அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன்
தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா?
அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன்
இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால்,
'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப்
பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின்
மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள்
செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்),
தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின்
அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு
வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக்
காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு
செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில்
இருக்கின்றது.
இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர
மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8).
புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட,
அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர்,
அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக்
கண்டுகொள்கின்றனர்.
ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல்
பாடங்கள் எவை?
1. இருவகைக் காணுதல்:
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.
ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக்
காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட
ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர்.
ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு
உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு
ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில்
அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள்
பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில்
வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல்
ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன்
உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது
உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும்
ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு
அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது
அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15).
இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை
ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக்
காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?
2. மூவகை பதிலிறுப்புகள்:
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக்
கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப்
பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு
அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர்
நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத்
தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர்
கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை
நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள
முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும்
நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம்
செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே
விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி
அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள்
ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின்
அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள்
ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம்
சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள்
வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த
ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில்
நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!'
என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு
செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின்
தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும்
இரவில்தான் நடந்திருக்கும்.
3. இரண்டாம் முறை விண்மீன்:
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின்
அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன்
இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி
செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம்
கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும்
நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண்.
பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள்
அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே
அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம்
இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?
இறுதியாக,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில்
மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர்
(காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப்
பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும்
பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும்.
திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
=======================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
====================================================================
================================================================
"கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின்
அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்" (மத்தேயு 2:2)
கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு
நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை
இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும்
கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற
இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத்
தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில்
தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச்
செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக
அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.
மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள்.
அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது.
எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர்.
சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு.
ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய
பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித
உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான்
உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று
போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம்.
ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து
மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய
தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை.
கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை
நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை
நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய
கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப்
பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற
சாட்சிகளாக மாறிடுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
==============================================================
இறைமக்களின் மன்றாட்டுகள்
==============================================================
1. மண்ணில் தோன்றிய விண்மீனே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவைப் பணியாளர்கள்,
உம்மைச் சந்திக்க வழிகாட்டிய விண்மீன் போல இறைப் பாதையை எங்களுக்கு
காட்டும் கருவியாக செயல்படவும், இறைப் பாதையில் மக்களை வழிநடத்தி,
சமூக பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட வரம் அருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், மக்களை அடிமைப்படுத்தாமலும்,
மக்களுக்கு எதிரான சட்டங்களையும், வரிகளையும் திரும்பப் பெறவும்,
மக்களுக்கு சேவை செய்யும் மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. உம்மைத் தேடி வந்த ஞானிகளுக்கு தம்மை வெளிப்படுத்தியவரே எம்
இறைவா!
நாங்களும் இறை அனுபவம் பெற தடையாக உள்ள சோம்பல், பாவம், கவனச்சிதறல்.
முயற்சியின்மை ஆகியவற்றை விடுத்து, உம்மை நாடித் தேடவும், உம்
மீட்பைக் கண்டடைய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. விண்ணகக் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
பயிர்கள் வளர போதிய இயற்கை காலச் சூழ்நிலையைத் தந்து, வேளாண்மை
ஏற்றம் பெறவும், பொருளாதாரம் பெருகவும், குடும்பங்களில் அமைதி,
மகிழ்ச்சி பெருகவும், படிக்கும் மாணவர்கள் சிறந்த ஞானம் பெற்று
திகழவும், வேலைவாய்ப்பு அருட்சாதனம்
, குழந்தை வரம் வேண்டுவோர்
உமதருளால் பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டுமென்று உம்மை கெஞ்சி
மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா!
உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம்
வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும்
இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில்
நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும்
வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம்
இறைவா!
நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில்
வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை
எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும்
நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயர்த்தவும்
நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!
வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத்
தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின்
வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின்
தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை
உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நல்லாயனே இறைவா!
நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த
தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை
போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒளியான எம் இறைவா!
இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக்
காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப்
பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில்
தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும்
இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின்
அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய
எம் இறைவா!
எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை,
நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட,
எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு
பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாதுகாப்பின் நாயகனே!
எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு
எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க
அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
|
|